Tuesday, June 26, 2007

குழந்தைகளுக்கான நாடகம் - 1



ராகவன் தம்பி


வருடம் 1999 மாதத்திய இளவேனில் காலத்தின் ஒரு மதியம். அப்போதைய தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் செயலர் எஸ்.நடராஜனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ""முடிந்தால் இன்று மாலை ஜனக்புரி தமிழ்ப் பள்ளிக்கு வாருங்கள். ஒரு நண்பரை அறிமுகப் படுத்துகிறேன். பள்ளியில் கிரீன் சர்க்கிள் என்ற ஒரு அமைப்பை அறிமுகப்படுத்துகிறோம். அந்த அமைப்புக்காக சுற்றுச் சூழல் விழிப்புணர்வு குறித்து பள்ளியில் நாடகம் ஒன்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்கிறார்கள். நான் உங்கள் பெயரைச் சொன்னேன். நீங்கள் மாலை வந்து அந்த நண்பருடன் பேச வேண்டும்'' என்றார்.



மாலை ஜனக்புரி பள்ளியில் ஆறுமுகம், கணேசன், தினகர் ராஜ், தமிழாசிரியர் ஸ்ரீனிவாசன் என்று ஒரு பட்டாளமே திரண்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் வி.செல்வராஜன் அறிமுகமானார். தான் சுற்றுச்சூழல் குறித்து நிறைய வேலைகள் செய்திருப்பதாகவும், தமிழ்நாட்டில் இருந்தபோது சுற்றுச்சூழல் பற்றி மாணவர்களுக்கான பயிற்சி முகாம்களை நடத்தியிருப்பதாகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். சிண்டிகேட் வங்கியில் அதிகாரியாக பணிமாற்றத்தில் தில்லிக்கு வந்தவர். தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பல அமைப்புக்களுடன் இதே வேலையாக அலைந்திருக்கிறார். அவருடைய ஒவ்வொரு அசைவிலும் தீவிரம் தெரிந்தது. தான் விரும்பும் ஒரு துறையை எந்த அளவுக்கு ஆழமாக நேசிக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிந்தது. அவருடைய தீவிரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பற்றியே எப்போதும் பேசிக் கொண்டிருந்தார். டீ குடிக்கும்போதும், நடக்கும்போதும், ஓய்வாக எங்காவது உட்காரும் போதும், ஸ்கூட்டரை உதைத்துக் கிளப்பும் சில நொடி அவகாசத்திலும் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்குப் போனதும் தொலைபேசியில் அழைத்து அதையே தொடர்ந்து கொண்டிருந்தார்.



செல்வராஜன், பள்ளி மாணவர்களுக்காக என்னை ஒரு நாடகம் எழுதச் சொன்னார். திறந்த வெளி அரங்குக்கான நாடகமாக இருக்க வேண்டும் என்றும் பள்ளி மாணவர்களுக்காக ஒரு நாடகப் பயிற்சிப் பட்டறை நடத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மாணவர்களுக்கான நாடகப் பயிற்சிப் பட்டறை என்றதும் அளவு கடந்த உற்சாகம் பிறந்தது.



ஏற்கனவே ஒரு முறை þ எண்பதுகளின் இறுதியில் லட்சுமிபாய் நகர் தமிழ்ப் பள்ளியில் நானும் யதார்த்தா சார்பில் வெங்கட் நரசிம்மன், இளஞ்சேரன், குணசேகரன், நரசிம்மன் (நச்சு) இன்னும் பலரும் சில வார இறுதிகளில் சென்று கொஞ்ச நாட்கள் மாணவர்களுக்கு நாடகம் பயிற்றுவித்த இனிய நினைவுகள் இன்னும் பசுமையாக நெஞ்சில். அந்தப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக இருந்தவர் யதார்த்தாவின் தலைவராக இருந்த ஜி.எஸ்.சவுந்தர் ராஜன். தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சென்ற செயற்குழுவில் தலைவராக இருந்தவர். அப்போதைய தில்லிக் கல்விக் கழகத்தின் நிர்வாக உறுப்பினர்கள் என்னையும் யதார்த்தா நண்பர்களையும் ஏதோ படையெடுத்து வரும் அயல்நாட்டு மன்னர்களையும் தளபதிகளையும் பார்ப்பது போன்ற சினேகமான பாவனையுடன் எதிர்கொண்டபோது எங்களை அரவணைத்து பல வகைகளிலும் உதவிகள் செய்து உற்சாகப்படுத்தியவர் சௌந்தர் ராஜன்.



எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. மோதிபாக் பள்ளியில் ஒருமுறை ஒத்திகை நடத்திக் கொண்டிருந்தபோது எங்களைக் கடந்து சென்றார் ஒரு பள்ளி நிர்வாகி. அவருக்கு நாங்கள் வணக்கம் சொல்லவில்லை என்பது திடீரென்று நினைவுக்கு வந்தது போல ரிவர்ஸ் கியரில் திரும்பி வந்து யாருடைய அனுமதியின் பேரில் நாங்கள் இங்கு ஒத்திகை நடத்துகிறோம் என்று தனக்குத் தெரியாது என்றும், நாடக ஒத்திகை பள்ளி வளாகத்தில் திடீரென்று நடப்பதால் தலைநகரில் சட்டம் ஒழுங்கு பரவலாகக் கெட்டுப்போகக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், அதற்காக காவல் துறையின் துணையைத் தான் நாடவேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவித்தார். அதைத்தவிர, நடிக்க வந்திருக்கும் ஒவ்வொருவரும் நடிக்கும் பாவனையில் பள்ளிக்குள் குடிக்கும் நோக்குடனே வந்திருப்பதாகவும் உடன் ஒரு பெண்ணும் ஒத்திகையில் ஈடுபட்டிருப்பதால் அங்கு இந்தியப் பண்பாடு பெருமளவில் சீர்கெட்டுப் போக வாய்ப்புக்கள் இருப்பதாகவும் தன்னுடைய அச்சத்தைத் தெரிவித்தார். இவை போன்ற அச்சங்களின் அடிப்படையில் உடனடியாக ஒத்திகையை நிறுத்துமாறும் அப்படி நிறுத்த வில்லையென்றால் உடனடியாகக் காவல் துறையை அழைத்து ஒவ்வொருவரையும் கைது செய்ய வைக்க முடியும் என்றும் தான் பணிபுரியும் துறையால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்றும் அன்பாக எச்சரிக்கை விடுத்தார்.



போகும்போது தான் அந்தக் காலத்தில் நிறைய நாடகங்களில் நடித்திருப்பதாகவும் அவர்கள் செய்ததை விட நாடகத்துறையில் தலைநகரில் வேறு யாரும் வந்து இனி ஒன்றும் செய்து விடமுடியாது என்னும் உபரித் தகவலையும் தந்து விட்டுச் சென்றார். எனக்குக் கொஞ்சம் புரிந்தது போல இருந்தது.



இதனை எதற்குச் சொல்கிறேன் என்றால், அப்போது நாங்கள் எதிர்கொண்டவை இந்த சம்பவத்துக்கு ஒப்பீட்டு அளவில் சற்றும் குறையாத பல சம்பவங்கள். தலைநகரில் நாடகம் போடுவதால் ரசிகர்களிடையே கோடிக்கணக்கில் பணம் வசூலித்து வருவாய்த்துறையை ஏமாற்றி, கீழாங்கரை, நீலாங்கரை போன்ற இடங்களõல் மர்ம மாளிகைகளை நான் வாங்கிப் போடுவது போலவும், தமிழ் நாடகம் வழியாக நான் ஈட்டும் கோடிக்கணக்கான வருமான வரி கட்டாத கறுப்புப்பணத்தின் ஒரு பகுதியை தமிழ்ப்பள்ளிகள் நடத்துவதற்கு தந்து உதவக் கடமைப்பட்டிருக்கிறோம் என்ற பாவனையிலும் நாங்கள் அப்போது நடத்தப்பட்டோம். இதுபோன்ற கடுமையான சூழலில் ஒத்திகைகளுக்குப் பள்ளி வளாகங்களை தைரியமாக வாதாடி எங்களுக்காக கட்டணம் ஏதுமின்றி ஏற்பாடு செய்தவர் சௌந்தர் ராஜன். அவர் ஒருநாள் திடீரென்று லட்சுமிபாய் நகர் பள்ளியில் மாணவர்களுக்கு நாடகப்பயிற்சிப் பட்டறை நடத்த வேண்டும் என்று என்னைக் கேட்டுக்கொண்டார். ஒரேயடியாக அங்கு ஒன்றும் செய்து விட முடியாது என்றும் வேண்டுமானால் வாரம் ஒரு மணி நேரம் ஒதுக்கித் தருவதாகவும் அந்த வாரம் ஒரு மணி நேரத்தில் குழந்தைகளுடன் செலவழித்து எப்போது முடியுமோ அப்போது ஒரு நாடகம் தயார் செய்ய வேண்டும் என்றும் பணித்தார். ஒன்றாம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளையும் ஒரு வகுப்பறையும் ஒதுக்கித் தந்தார்கள். சனிக்கிழமைகளின் மதியங்கள்.



சில வாரங்கள் நாங்கள் சொர்க்கத்தில் இருந்த தேவர்களாக இருந்தோம். ஆசிரியர்கள் யாரும் அந்தப் பக்கம் வரக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்தோம். குழந்தைகளுடன் விளையாடினோம். நாடகப் பயிற்சி விளையாட்டுக்களை சொல்லிக் கொடுத்தோம். நாங்கள் நாடகம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் இல்லையென்றும் அவர்களுடைய நண்பர்கள் என்றும் எல்லோரும் சேர்ந்து ஒரு நாடகம் தயாரிக்கப் போகிறோம் என்றும் குழந்தைகளுக்குப் புரியவைக்க ஓரிரு வாரங்கள் ஆனது. எங்கள் யாரையும் சார் என்று கூப்பிட வேண்டாம் என்றும் ஒரு தோழனை அழைப்பது போல பெயர் சொல்லி அழைத்தால் போதும் என்றும் சொல்லிக் கொடுத்தோம். சரோஜினி நகர் மார்க்கெட்டில் ஏதாவது வாங்குவதற்கு அலைந்து கொண்டிருக்கும்போது திடீரென்று கீச்சென்ற குரலில் ""கே...... பி...... என்று குரல் கேட்கும். பிள்ளை பிடிப்பவனிடமிருந்து மீட்பது போன்ற பெருமுயற்சியுடன் பெற்றோர் அந்தக் குழந்தையின் முதுகில் அறைந்து இழுத்துப் போவார்கள். பள்ளிக்கு வேறு ஏதாவது வேலைக்குப் போகும்போதும் ஏதாவது ஒரு வாண்டு அருகில் வந்து ""என்ன கேபி சௌக்யமா?'' என்று குசலம் விசாரித்துப் போகும்.



கொஞ்ச நாட்களுக்கு என் சகல பாவங்களையும் மன்னித்து இந்த மண்ணில் ஆண்டவன் எனக்காக ஏற்படுத்திக் கொடுத்த சொர்க்க நாட்கள் அவை. இப்போதும் சில நேரங்களில் நினைத்துப் பார்க்கும்போது நெகிழ்ச்சியில் விழியோரங்கள் ஈரமாகும். எதுவும் தொடர்ச்சியாக நிலைக்கும் ராசி இல்லை எனக்கு. ஒரு சில வாரங்கள் சௌந்தர் ராஜனுக்காக மரியாதையாக ஒதுங்கி இருந்த ஆசிரியப் பெருமக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைப்பட்டுக் கொள்ள ஆரம்பித்தார்கள். மாணவர்களின் வகுப்புக்கள் கெடுகின்றன þ படிப்புக் கெட்டுப் போகின்றன என்றும் இப்படி ஒத்திகைகள் எதுவும் துவங்காமல் நாடகப் படி எதுவும் இல்லாமல் நாடகம் போடுகிறேன் என்பதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்தார்கள் .மாணவர்களை அனுப்புவதைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்த ஆரம்பித்தனர். இது அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று உணர எங்களுக்கு சில வாரங்கள் பிடித்தன. ஆசிரியர்களும் அவர்கள் இடத்தில் நியாயமாகத்தான் இருந்தார்கள். அவர்களுக்கு இது போன்ற பயிற்சிப் பட்டறைகள் பழக்கமில்லை. குழந்தைகளின் படிப்பு என்பது அவர்களுக்கு மிகவும் முக்கியமாக இருந்தது. எனவே அந்தப் பள்ளியில் குழந்தைகளுக்கான நாடக முயற்சி ஒருவழியாக முடிவுக்கு வந்தது. மனதுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. சௌந்தர் ராஜன் என்னைக் குறைபட்டுக் கொண்டார். கொடுக்கும் வேலை எதையும் நான் உருப்படியாக முடிப்பதில்லை என்று. அப்போது நாங்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் அவருக்குப் புரியவில்லை. அதிகாரத்தில் இருந்தார். அதிகாரத்தின் நிழலில் நாடகம் போடுவது சாத்தியமில்லை என்பது எங்களுக்கு மட்டுமே புரிந்தது.



செல்வராஜனை எங்கோ நிற்க வைத்துவிட்டு இங்கே வந்து விட்டேன். இப்படித்தான். சொல்ல வந்ததை விட்டு ஊரெல்லாம் சுற்றிக் கொண்டிருப்பேன். என்னை நன்றாகத் தெரிந்தவர்கள் பல நேரங்களில் என் தலையைக் கண்டதும் பேயைக் கண்டது போல தலைதெறிக்க ஓடுவதற்கு இதுபோன்ற என் நல்ல குணமும் ஒரு காரணம். சரி. இப்போதைக்கு இங்கு இடமில்லை. பள்ளி மாணவர்களுக்கு அளித்த நாடகப் பயிற்சி பற்றியும் அதன் அரங்கேற்றம் குறித்தும் கிடைத்த அனுபவங்கள் குறித்தும் அடுத்த இதழில் சொல்கிறேன்.

குழந்தைகளுக்கான வீதிநாடகம் -2



ராகவன் தம்பி

சென்ற இதழில் பள்ளி மாணவர்களுக்கான நாடகம் ஒன்றினைத் தயாரித்து மேடையேற்றுவதில் கிடைத்த அனுபவம் குறித்து எழுத ஆரம்பித்து எங்கெங்கோ பயணித்தாயிற்று. செல்வராஜனை ஜனக்புரி பள்ளி வளாகத்தில் தனியாக நிறுத்தி வைத்து விட்டேன். இப்போது மீண்டும் அவரிடம் செல்கிறேன்.


பள்ளி மாணவர்களுக்கான நாடகம். அதுவும் சுற்றுச்சூழல் குறித்த நாடகம். மேடையேற்றப்போவது திறந்த வெளிகளில். எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. துணைக்கு யதார்த்தாவில் என்னுடன் நாடகங்களில் நடித்த பெரியசாமி. பள்ளி நிர்வாகத்திடமும், ஆசிரியர்களிடமும் நான் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். பள்ளிகளில் நாடகம் அல்லது கலைநிகழ்ச்சிகள் என்றால் ஆசிரியர்கள் (கல்யாணமாலை மோகன் குரலில் இதைப் படிக்கலாம்) நன்றாகப் படிக்கும், துறுதுறுப்பான, அதிக மதிப்பெண்களை எடுக்கும், பதவிசான, பண்பான, ஆசாரமான மாணவர்களைத் தான் பொதுவாகத் தேர்வு செய்வார்கள். பாடுவதற்கு, நடிப்பதற்கு, பள்ளிகளில் மேற்பார்வைகள் நடந்தால் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு, பிற மாணவர்கள் மேல் கோள் மூட்டிவிடுவதற்கு, அடுத்த ஆசிரிய þ ஆசிரியைகளைப் பற்றிய வதந்திகளைப் பரப்புவதற்கு எப்போதும் சுறுசுறுப்பான நன்றாகப் படித்து நிறைய மதிப்பெண்களைக் கொண்டு வரும் மாணவ மாணவியரைத்தான் ஆசிரியப் பெருமக்கள் தேர்ந்தெடுப்பார்கள். இது உலகமெல்லாம் நீக்கமற நிறைந்துள்ள வழக்கு. இதற்கு மாறாக எனக்கு சுமாரான மாணவ மாணவியரைக் கொடுக்க வேண்டும் என்று ஸ்ரீனிவாசனைக் கேட்டுக்கொண்டேன். அதிகம் மதிப்பெண்கள் எடுக்காத மாணவர்களாய், இதுவரை பள்ளி நிகழ்ச்சிகள் எவற்றிலும் கலந்து கொள்ளாத புதுமுகங்களாக எனக்கு வேண்டும் என்று கேட்டேன்.


எனக்குக் கிடைத்த மாணவர்கள் மிகவும் அற்புதமானவர்கள். மிகவும் நல்ல மனதும் பணிவும் புதியவைகளைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமும் கொண்ட மாணவர்கள். எதற்கும் எவ்விதப் பதட்டமும் அடையாது சிரித்த முகத்துடன் ஒருவரை ஒருவர் கேலியும் கிண்டலும் செய்து கொண்டு விளையாட்டுத்தனமாக எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் மாணவர்கள். இவர்களுடன் எங்கள் நாடகப் பயிற்சிப் பட்டறை துவங்கியது.முதல் மூன்று நாட்கள் அறிமுகங்கள். வீதி நாடகம் பற்றிய அறிமுக சொற்பொழிவு. செல்வராஜனின் அறிமுகவுரை என்று கழிந்தன.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றி ஒரு நிகழ்ச்சிக்காக ஒரு நாடகம் எழுத வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டிருந்தார் செல்வராஜன். வழக்கமாக நான் அடுத்த நாடக ஆசிரியர்களின் நாடகங்களை இயக்கித்தான் பழக்கம். நாடகங்கள் சொந்தமாக எழுதவில்லை. எழுதிய ஓரிரண்டு சிறிய நாடகங்களும் நல்ல நாடகங்கள் என்று நாடகம் தெரிந்த யாரும் ஒப்புக்கொள்ளாத சிறுமுயற்சிகள். இன்னொன்று பொதுவாக நாடக இயக்கம் ஒன்றே போதும் என்று நினைத்தவன் நான். சொந்தமாக நாடகமும் எழுதி மற்றவர்களை வதைக்கும் திட்டம் ஏதும் அப்போதைக்கு இருந்தது இல்லை. எனவே நாடகம் எழுது என்று செல்வராஜன் என்னைக் கேட்டுக் கொண்டபோது மிகவும் தயக்கமாகவும் கூச்சமாகவும் இருந்தது. இன்னொன்று அந்த அவசரத்துக்கு எழுதினால் மிகவும் மட்டமான ஏதாவது ஒன்றுதான் என்னிடம் இருந்து வரும் என்பது எனக்கு உறுதியாகத் தெரிந்த விஷயம். எனவே, அந்தப் பள்ளிக்காக நாடகம் எழுதுவதை தள்ளிப்போட்டேன்.

அதுவும் ஒருவகைக்கு நல்லதாகத்தான் போனது என்று பிறகு நிரூபணம் ஆனது. எப்படியென்றால் அந்தப் பயிற்சிப் பட்டறையின் போது மாணவர்களையே கூட்டாகக் கலந்து ஆலோசித்து ஒரு நல்ல கதையை யோசிக்கச் சொன்னேன். இரண்டு நிபந்தனைகள். ஒன்று அந்தக் கதை முழுக்க சுற்றுச் சூழல் பற்றி இருக்க வேண்டும். இரண்டு - யாரையும் புண்படுத்தாது நகைச்சுவையும் கிண்டலும் கலந்து சொல்லவேண்டும். பட்டறையில் கலந்து கொண்ட இருபது மாணவ மாணவியரும் சுமார் நாற்பது கதைக் கருக்களை சொல்லியிருப்பார்கள். நாற்பதும் ஒன்றையொன்று மிஞ்சுவது போல இருந்தது.

இறுதியில் இரு கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. மிக அழுத்தமாக சொல்ல வேண்டியதை மிக அழகாகவும் நகைச் சுவையுணர்வுடனும் நாடக வடிவத்தில் சொல்ல வாய்ப்பு அதிகம் அளித்த கதைகள் அவை. ஒரு உதாரணம் வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். மூர்க்க ராஜா ஒருவன். அடிக்கடி வேட்டைக்குப் போகிறவன். விலங்குகளைத் துரத்தித் துரத்தி வேட்டையாடுகிறான். அந்த வேட்டை அமர்க்களத்தில் ஒரு நரி. அது அரசாங்கத்தில் வேலை பார்க்கும் நரியாம். ராஜா கையில் வேட்டைக்கு சிக்குவதில்லை. ராஜாவுக்கு அவமானமாகிப் போகிறது. தன்னால் வேட்டையாட முடியாத ஒரு விலங்கா? அவன் வருத்தத்தைப் போக்க ஒரு மந்திரி முன் வருகிறான். அவன் சொல்கிறான். ராஜா அது உங்கள் அரசில் வேலை பார்க்கும் நரி. எதற்கும் அதனிடம் நான் பேசிப்பார்க்கிறேன். நரியிடம் சென்று காதில் குசுகுசுக்கிறான். பிறகு ராஜாவிடம் பேசி ஒரு நூறு ரூபாய் வாங்கி அந்த நரியிடம் கொடுக்கிறான். நரி ஒப்புக்கொள்கிறது. ஓடுவதை நிறுத்துகிறது. அமைதியாக ராஜாவுக்குப் பின்புறத்தைக் காண்பித்து அம்பினை வாங்கி செத்துப்போகிறது. ராஜாவும் நரியை வேட்டையாடிய சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்கிறான். இப்படியாகப் போகிறது வேட்டை அமர்க்களங்கள்.

இந்த வேட்டை மும்முரத்தில் அரண்மனையில் சும்மாவே எதற்கெடுத்தாலும் தடுக்கித் தடுக்கி விழும் அந்த ராஜா காட்டில் மரங்களின் வேர்களில் தடுக்கி அடிக்கடி விழுகிறான். ஒரு மரம் தடுக்கியதும் அவனுக்கு விபரீதக் கோபம் வருகிறது. வெறியில் அந்தக் காட்டிலும் நகரத்திலும் ஒரு மரம் கூட இருக்கக்கூடாது என்று எல்லா மரங்களையும் வெட்ட உத்தரவிடுகிறான். எல்லா மரங்களும் வெட்டப்படுகின்றன. காடும் நகரமும் சூன்யமாகிறது. பின்னர் அந்த நாட்டையும் நகரத்தையும் நோய்கள் தாக்க ஆரம்பிக்கின்றன. ஒவ்வொருவராக வந்து ஒவ்வொரு வியாதியை சொல்லி அழுகின்றனர். எல்லா நோய்களுக்கும் காரணம் அந்த நாட்டில் ஒரு மரத்தைக் கூட விட்டு வைக்காது, ராஜாவின் உத்தரவால் எல்லாவற்றையும் மொட்டையாக்கி வைத்ததுதான் காரணம் என்று உணர்கிறார்கள். ராஜாவுக்கும் அது உறைக்கிறது. நாடெங்கும் மீண்டும் மரங்கள் நடுவதற்கு உத்தரவிடுகிறான்.

சத்தியமாக நம்புங்கள். இது எல்லாம் அந்த மாணவர்கள் சொந்தமாக ஆலோசித்துத் தீர்மானித்த கதை. இதில் வசனம் எல்லாம் இந்தியில்தான். இதை ஒரு நாடகப்படியாக எழுதி வைத்துக்கொள்ளாமல் ஒத்திகைகளில் அவ்வப்போது மனதுக்குத் தோன்றிய வசனங்களை பேசினார்கள். ஒவ்வொரு முறையும் வசனங்கள் மெருகேறின. நகைச்சுவை மிளிர்ந்தன. ஒவ்வொருவரும் அனுபவித்தோம்.

தில்லித் தமிழ்க் கல்விக் கழக நிர்வாகமோ அல்லது ஆசிரியர்களோ எந்த வகையிலும் குறுக்கிடவில்லை. தங்கள் அதிகாரத்தைக் காண்பிக்க வில்லை. மிகவும் அற்புதமாக ஒத்துழைத்தார்கள். எனவே மிகவும் அற்புதமாக அமைந்தது இந்த நாடகம்.

நாடகம் தயாரானதும் சுமார் முப்பது சைக்கிள்களில் மாணவர்களுடன் கிளம்பினோம். ஜனக்புரியில் பல தெருமுனைகளில் þ ராஜ் காலனி போன்ற இடங்களில் þ வட தில்லி எல்லைப் பகுதியில் சில கிராமங்களில் என சைக்கிள் பயணம் நாடகத்துடன் தொடர்ந்தது. செல்வராஜனும் நண்பர்களும் மிகவும் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். செல்வராஜன் யாரோ ஒரு நண்பரைப் பிடித்து எல்லா மாணவர்களுக்கும் "கிரீன் சர்க்கிள்' பெயர் பொறித்த பச்சை நிற சட்டைகளை ஏற்பாடு செய்தார். பள்ளி நிர்வாகிகள் ஆறுமுகமும் நடராஜனும் யாரையோ பிடித்து எல்லோருக்கும் சாப்பாடும், அழகிய முறையில் அச்சிட்ட நற்சான்றிதழ்களையும் வழங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். மாணவர்களுடன் செல்வதற்கு மற்றவர்களுக்கு வாகனங்களும் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஏதோ ஒரு நகைச்சுவை சித்திரத்தைப் பார்ப்பது போல அந்தக் கிராமத்து மக்கள் நாடகத்தை ரசித்தார்கள்.

எல்லா இடங்களிலும் முடித்தாயிற்று. ஆறுமுகம் திடீரென்று ""நாம் இந்த நாடகத்தை திஹார் சிறைச்சாலைக்குக் கொண்டு போகலாமா என்ற கேட்டு உடனே யாரையோ தொலைபேசியில் தொடர்பு கொண்டார். உடனே அனுமதி கிடைத்தது. பட்டாளம் எல்லாம் திஹார் நோக்கித் திரும்பியது. அங்கு பணியில் இருந்த தமிழ்நாடு தனிப்பிரிவு போலீசார் இன்முகத்துடன் எங்களை வரவேற்று சிறைச்சாலைக்குள் அழைத்துப் போனார்கள். அங்கு திறந்த வெளியில் மாணவர்கள் நாடகத்தை நிகழ்த்தினார்கள். சில கைதிகளும் காவலர்களும் எங்கள் பார்வையாளர்கள். புதிதாக ஒரு பார்வையாளன் நாடகம் ஆரம்பித்த ஓரிரு நிமிடங்களில் வந்து சேர்ந்தான். அவன் தொழிலில் மும்முரமாக இருந்தபோது பிடிபட்ட பிக்பாக்கெட் ஆசாமி. காவலர் ஒருவர் நாடகம் நடக்கும் இடத்தில் தரையில் அவனை குந்தவைத்து இந்தியில், ""பார். சின்னப்பிள்ளைகள் எல்லாம் எவ்வளவு புத்தியாய் இருக்காங்க'' என்று சொல்லி பளாரென்று அவன் காது மேல் ஓங்கி அறைந்தார். அவன் அழுகை, சிரிப்பு ஏதுமின்றி ஆர்வத்துடன் நாடகம் பார்ப்பதைத் தொடர்ந்தான். பிறகு இன்னொரு போலீஸ் þ இன்னொரு காதில் அறை என்று தொடர்ந்து கொண்டே இருந்தது. நாடகமும் தொடர்ந்து கொண்டே இருந்தது. அந்த நாடகத்தில் நடித்த மாணவர்கள் இப்போது தொடர்பில் இல்லை. ஆனால் இந்நேரம் படிப்பை முடித்து எல்லோரும் எங்காவது யாரையாவது எதற்காகவாவது கண்டிப்பாகப் புன்னகைக்க வைத்துக் கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.

Saturday, June 23, 2007

முரண் - மொழிபெயர்ப்பு சிறுகதை




வங்காள மூலம் - சுனில் கங்கோபாத்யாய்

ஆங்கிலம் வழி தமிழில் - ராகவன் தம்பி


ஓவியங்கள் - வெ.சந்திரமோகன்

வெ.சந்திரமோகன் - கவிஞர் - ஓவியர். வடக்கு வாசல் இதழ்களில் இவருடைய கவிதைகளும் ஓவியங்களும் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன.





சுனில் கங்கோபாத்யாய் சாகித்ய அகாடமி விருது பெற்ற வங்க எழுத்தாளர் - கவிஞர். வங்காள இலக்கியத்தில் பல ஆண்டுகளாக மிகுந்த தாக்கம் செலுத்தி வருபவர்.

எவ்வித பயமும், மரியாதையும் இன்றி கதவை நெட்டித் தள்ளி தடாலென்று உள்ளே பிரவேசித்தான் தபன். மேனேஜருடைய அறையின் கதவருகில் ஸ்டூல் போட்டு அமர்ந்திருக்கும் காவலாளியால் அவனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. மேனேஜர் சற்று பதட்டத்துடனும் கடுஞ்சீற்றத்துடனும் சட்டென இவனை நிமிர்ந்து பார்த்தான். தபன் அதைச் சட்டை செய்யாமல் நாற்காலியை இழுத்துப் போட்டு அதன் மேல் ஒரு காலை ஊன்றிக் கொண்டு மிகவும் காட்டமாக வெடித்தான்.


நேராகவே விஷயத்துக்கு வருவோம். என்ன சொல்லணும் உனக்கு?"


மேனேஜர் அவனை மிகவும் நிஷ்டூரியமாகப் பார்த்தான்.""எனக்குச் சொல்ல என்ன இருக்கு? கடிதாசியை குடுத்திருப்பாங்களே...





தட்டச்சு செய்யப் பட்ட காகிதத்தை சட்டைப் பையிலிருந்து உருவி எடுத்த தபன், அதைக் கசக்கிப் பந்தாகச் சுருட்டி மேனேஜரின் மூக்கைக் குறி பார்த்து அவன் முகத்தின் மீது எறிந்தான். அது ஒரு அங்குலம் குறி தவறி மேனேஜரின் காதை உரசிச் சென்றது. மிகுந்த திகைப்புடன் அவனை முறைத்துப் பார்த்தான் மேனேஜர்.""என்னய்யா இது? ஏன்யா என்னதான் நினைச்சிக்கிட்டு இருக்கே நீ?""""என்ன பண்றேன்னு உனக்குத் தெரியலையா? நீ என்ன வேணும்னாலும் கிறுக்கி அனுப்பினா அடுத்தவன் உனக்குப் பயந்து மூடிக்கிட்டு இருப்பான்னு நினைப்பா உனக்கு?'' ""தோ பார் தபன் பாபு, ஆபீசுக்குன்னு சில ஒழுங்கு முறைகள் இருக்கு. என்னைக் கேட்காம இப்படி திடுதிப்புனு என் ரூமுக்குள்ளே நாய் நுழையற மாதிரி நுழையறது கொஞ்சம் கூட நல்லாயில்லே''.""தேவடியா மகனே. இந்த ஆபீஸ் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்துன்னு உனக்கு நினைப்பா? இங்கே நீயும் என்னை மாதிரி ஒரு வேலைக்காரன் தான். உன் அதிகாரத்தை யெல்லாம் யார் கிட்டே காண்பிக்கிறே நீ?மேனேஜர் மேஜை மேல் இருந்த மணியை அடித்தான். தபன் சடாரென்று மேஜையை சுற்றி வந்து பக்கத்தில் நின்று கொண்டான்.""என்னை என்ன பயமுறுத்தலாம்னு பார்க்கிறியா? இந்த சலசலப்புக்கெல்லாம் அசரமாட்டேன். உன் தடியன்களை கூப்பிடேன். நான் ஏற்கனவே உன் வேலையைக் காறித் துப்பி தொடச்சி எறிஞ்சாச்சு தெரியுமா உனக்கு?""தயவு செய்து வெளியே போறியா? நான் இப்போ வேலையா இருக்கேன்''.""சரிப்பா. நான் போறேன். என் மூஞ்சை திரும்பப் பார்க்கற சங்கடமெல்லாம் உனக்கு வேணாம். இப்போவே போயி கங்கையிலே ஒரு முழுக்குப் போட்டுத்தான் வீட்டுக்குப் போவேன். வாழ்க்கை பூரா சனியன் பிடிச்ச இந்த வேலையிலே எழவெடுத்தாச்சு. தினம் ஏதோ சாக்கடையிலே முங்கி முங்கி எழுந்த மாதிரி அருவெருப்பா இருக்கு. எல்லாம் கள்ளச் சந்தை வியாபாரம்... பொய்... பித்தலாட்டம்...மேனேஜரால் இனியும்
கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை.



""இப்போவே இந்த இடத்தை விட்டுப் போறியா இல்லையா?'' என உரத்த குரலில் கத்தினான்.தபன் மேஜை மேலிருந்த கனமான பேப்பர் வெயிட்டைக் கையில் எடுத்துக் கொண்டு ருத்ராகாரமாக சிவந்த விழிகளை உருட்டிக்கொண்டு நின்றான்.





"வாயை மூடு. இப்படிக் கோபத்தைக் காண்பிக்கிற வேலையெல்லாம் என்கிட்டே வேண்டாம். அடிச்சிக் கூழாக்கிடுவேன் தெரிஞ்சுக்கோ.''என்ன? இப்படியா? இல்லை. இப்படியெல்லாம் இல்லை. தபனால் இப்படியெல்லாம் செய்யமுடியவில்லை.""எங்கே போகணும் சார்? ராம்சந்த் அவனைக் கேட்டான்.''""ஜெனரல் மேனேஜர் ஐயாவைப் பார்க்கணும்'' தபன் மிகவும் பவ்யமாக பதிலளித்தான்.






ராம்சந்த் ஏதோ சொல்ல வாயெடுக்கும் முன் அவனை அலட்சியப்படுத்தி விட்டு மேனேஜரின் அறைக்குள் நுழைந்தான் தபன்.மேனேஜர் ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் வேலையில் ஆழ்ந்தான்.



"சொல்லு''



"சார்... உங்க லெட்டர் கெடச்சுது.



"அப்படியா? நீ என்ன சொல்லணுமோ சொல்லு. ஆனா ஒண்ணு மட்டும் மனசுலே வெச்சுக்கோ. நீ சொல்ல நினைக்கிற எல்லாத்தையும் எழுதித்தான் குடுக்கணும். உன் மேலே ரொம்ப கடுமையான புகார்கள் இருக்கு.''தபனுக்கு இந்த ஆளை கண்ணோடு கண் பார்த்துப் பேசும் தைரியம் என்றும் இருந்ததில்லை. ஆனால் இன்று அவனுள் எவ்வித பயமும் இல்லை.



மிகச்சாதாரணமான குரலில் "சார்... ஒரே வார்த்தைதான் என் பதில். எனக்கு இந்த வேலையை விட்டுத் தொலைக்கணும்.''



ஜெனரல் மேனேஜர் அவ்வளவு சுலபத்தில் ஆச்சரியப்பட்டுப் போகிறவன் இல்லை. ஆனால் இதில் அவன் கூட ஆடிப்போய் விட்டான் என்றுதான் சொல்லவேண்டும். ஏதோ ஒரு சுண்டெலி, தடித்த ஒரு கடுவன் பூனையைத் தாக்கத் துரத்தி வருவதுபோல உணர்ந்தான் அவன்.



"உனக்கென்ன இந்த வேலையை உடணும். அவ்வளவுதானே? நல்லது. ரொம்ப நல்லது. உன்னை வேறே எங்கேயாவது வேலைக்குக் கூப்பிட்டு இருக்காங்களான்னு நான் தெரிஞ்சுக்கலாமா?



"இல்லை''



"அப்புறம்?'



"நான் போறேன். அவ்வளவுதான்.'' சரிதான். உனக்கு ஏத்தம் ரொம்பத்தான் கூடிப்போச்சு.'



"இது ஏத்தம் கிடையாது சார். மனசாட்சிப்படி நடந்துக்கிறேன் அவ்வளவுதான். என் பிழைப்புக்கு இந்த வேலை தேவையாயிருந்தது உண்மைதான். ஆனால் ஒவ்வொரு மாசமும் என் சம்பள செக் வாங்குறப்போ எல்லாம் எனக்குக் குமட்டிக்கிட்டு வந்தது தெரியுமா?'



"ஓஹோ. நான் இப்போ கொஞ்சம் வேலையா இருக்கேன் தபன் பாபு.''



"அது பரவாயில்லே சார். ஆனால் நான் சொல்றதை நீங்க கொஞ்சம் கேட்டுத்தான் ஆகணும். இந்த வேலையை விட்டுத் தொலைக்கறது பத்தி எத்தனையோ மாசங்களா நான் யோசிச்சதுதான். ஒரு வழியா இப்போ ஒரு முடிவெடுத்துட்டேன். எனக்கு மகா சந்தோஷமாயிருக்கு. இந்தத் தீர்மானத்துக்கு வர்றதுக்கு முந்தி ஒரு மாதிரி சுத்திச் சுத்தி அடிச்சது. போயும் போயும் என்ன மாதிரி ஆபீஸ் இது? இங்கே என்ன பண்ணாலும் மனசாட்சியைக் கொன்னுட்டுத்தான் பண்ண வேண்டியிருந்தது. எல்லாம் அக்கிரமமான காரியங்கள். கோடிக் கணக்குலே அரசாங்கத்தை ஏமாத்தறதுக்கு ரெண்டு வகையான அக்கவுண்ட் புத்தகங்களை வச்சிக்கிட்டிருக்கீங்க. சொல்லப்போனா இந்த தேசத்துக்கு மிகப்பெரிய துரோகத்தைப் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.'



"தபன் பாபு, உன்னோட சொற்பொழிவை இங்கே ஏன் குடுத்துக்கிட்டு இருக்கே? எனக்கு வேலை எக்கச்சக்கமா இருக்குப்பா.''



"குறுக்குலே பேசக் கூடாது. நான் சொல்ல வந்ததை சொல்லியே ஆகணும். அந்தக் குழந்தை பால் பவுடரை வெலை ஏத்தறதுக்காக, ஒரு ரெண்டு வாரத்துக்கு மார்க்கெட்லேயே இல்லாம போக்கடிச்சீங்க இல்லே?''



"அப்படியெல்லாம் ஒண்ணுமில்லேப்பா. அதெல்லாம் கொஞ்சம் சிக்கலான காரியம்...''



"ஓஹோ. எனக்கு எல்லாம் தெரியும். ஆனால் நான் சொல்லப்போற ஒரு விஷயத்தை நீங்க மனசுலே எடுத்துக்கணும். நீங்களும் இங்கே என்னைப் போல ஒரு வேலைக்காரர்தானே. உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வருது? ஒரு ரெண்டாயிரம்? ரெண்டாயிரத்து ஐந்நூறு? இதுக்காக. உங்க ஊழல் புடிச்ச முதலாளிகளுக்கு சேவகம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. அவனுங்களுக்கு சேவகம் பண்றதாலே இந்த தேசத்தைக் குட்டிச்சுவராக்கறீங்க. எத்தனையோ ஆயிரக்கணக்கான அறியாக் குழந்தைகளைப் பட்டினி போட்டு வதைச்சிக்கீங்க...''இந்த இடத்தில் மேனேஜர் அழைப்பு மணியை ஓங்கி அடித்தான். தன்னுடைய முழு உடம்பும் முறுக்கேறுவதையும், விழிப்புடனும், உயிர்ப்புடனும் நரம்புகள் துடிப்பதையும் உணர்ந்தான் தபன். எந்த விதமான அவமதிப்பையும் இகழ்ச்சியையும் அவன் சகித்துக் கொள்ளப்போகும் நாள் இதுவல்ல. ராம்சந்தர் அறைக்குள் பிரவேசித்து மானேஜரின் ஆணைக்காகக் காத்திருந்தான். மேனேஜர் தபனை முறைத்து விட்டுப் பிறகு தன்னுடைய பார்வையை ராம்சந்தர் மீது செலுத்தினான். எரிச்சலான குரலில்,



"போய் குடிக்கத் தண்ணீர் கொண்டு வா''. ராம்சந்தர் அறையை விட்டு வெளியேறியதும், மேனேஜர் தபனிடம்,



"உன்னுடைய டிஸ்சார்ஜ் ஆர்டர் நாளை உனக்குக் கிடைக்கும். அடுத்த வாரம் வந்து நீ உன்னுடைய சம்பள பாக்கியை கேஷியரிடம் வாங்கிச் செல்லலாம். ஆனா இப்போ நீ போகலாம்''.



"எனக்குச் சொல்ல வேண்டியது இன்னும் இருக்கு.''



"இருக்கலாம். ஆனா கேக்கறதுக்கு எனக்கு நேரம் கிடையாது. பியூனைக் கூப்பிட்டு உன்னை வெளியே தூக்கிப் போடற மாதிரி வச்சுக்காதே.'



"என்கிட்டே அப்படிப் பேசற வேலையெல்லாம் வெச்சிக்க வேணாம் தெரியுதா? நான் ஒண்ணும் உங்க அடிமை கிடையாது.''இப்போது காட்சி ரொம்பவுமே வேறு மாதிரி.தபன் மானேஜரின் அறைக்கு முன்னே குறுக்கும் நெடுக்குமாக உலாத்திக் கொண்டிருந்தான். ராம்சந்த் வாயில் வழியும் புகையிலைச் சாற்றுடன் தன்னுடைய ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டு தூங்கி வழிந்து கொண்டிருந்தான். தபன் ஓரிருமுறை அவனை நோக்கி மெல்ல அடிவைத்து நெருங்கிச் சென்று பிறகு பின்வாங்கினான். இறுதியாக அவனுக்கு மிக அருகில் வந்து, மிகவும் மெதுவாக...



"ராம்சந்தர்...''ராம்சந்தர், கண்ணைக்கூடத் திறந்து பார்க்காமல் அலட்சியத்துடன் "அவரை நீ இப்போ பார்க்க முடியாது.''



"பரவாயில்லே. நான் உனக்கு கொஞ்சம் நல்ல சேதி வச்சிருக்கேன். உன்னுடைய யூனிபாரம் அலவன்ஸ் சாங்ஷன் ஆயிடிச்சி.''



"ஆயிடிச்சா?'' ராம்சந்தர் கண்ணைத் திறந்தவாறு கேட்டான்."



"ஆமாம். ஒவ்வொரு வருஷமும் உனக்கு ஒரு காக்கி சட்டை வாங்க ஐம்பத்து நாலு ரூபாயும் பித்தளை பக்கிள்சோட பெல்டும், ஒரு ஜோடி ஷøவும் உனக்கு சாங்ஷன் ஆயிருக்கு.''இந்த முக்கியமான விஷயத்தை ராம்சந்தருடன் விவாதித்தவாறு இன்னும் கொஞ்சம் நேரம் கழிந்தது. பிறகு தபன் அவனை மிகவும் பொருள் பொதிந்த பார்வையோடு உற்று நோக்கி.""பாஸ் உள்ளே இருக்காரா?''""இருக்காரு. ஆனா ரொம்ப பிஸியா இருக்கார். இப்போ அவரைத் தொந்தரவு பண்ண முடியாது.''



"என்னப்பா ராம்சந்தர். உனக்குத் தெரியும். நான் மேனேஜர் சார் கிட்டே ஒண்ணு அல்லது ரெண்டு நிமிஷம் மட்டுமே பேசணுமப்பா. உனக்குத் தெரியாததா?''ஆனால் அந்த ஓரிரு நிமிடங்களும் தபன் வெறுமனே அமைதியாக மட்டுமே கழிக்க முடிந்தது. மேனேஜர் ஏதோ கோப்பினைப் படிப்பதில் தீவிரமாக மூழ்கி இருந்தார். தபன் உள்ளே வந்ததையே அவர் உணர்ந்தது போலத் தெரியவில்லை.தபன் பளுவைத் தன்னுடைய ஒரு காலில் இருந்து இன்னொரு காலுக்கு மாற்றியவாறு கால் மாற்றி நின்றான். பிறகு மிக மெல்லிய குரலில் பேசத்துணிந்தான்."



"சார்''



"ஏம்பா இப்படி நின்னுக்கிட்டிருக்கே? உட்காரு.'' அவன் உட்கார முயற்சித்தபோது, மேனேஜர் தன்னுடைய சுருட்டை மீண்டும் பற்றடித்துக் கொண்டு புகை மூட்டத்தை வெளியில் தள்ளியவாறு



"இப்போ சொல்லு. உனக்கு என்ன வேணும்?'



'தபன் அந்த மேஜையை இன்னும் சற்று நேரம் தொடர்ந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு முகத்தை நிமிர்த்தி, முன்புறம் சாய்ந்தவாறு."



"சார், இந்தத் தடவை என்னை மன்னிக்காவிட்டால்...''



"என்ன எழவுய்யா? உன்னை எதுக்கு மன்னிச்சித் தொலைக்கணும்?''



"சார், எனக்கு அந்தக் கடுதாசி முந்தாநாள் கிடைச்சது.''



"ஓ... இப்போ ஞாபகத்துக்கு வந்தது. உனக்கு ஒரு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பி இருந்தோம். இன்னும் அதுக்கு பதிலை நீ ஏன் குடுக்கலை? நாற்பத்தியெட்டு மணிநேரத்துக்குள்ளே அதுக்கு பதிலைக் குடுத்திருக்கணுமே...''



"ஆனா அதுக்குத்தான் உங்களை இப்போ பார்க்க வந்ததே சார். என்ன எழுதணும்னு உங்ககிட்டே அட்வைஸ் கேட்டுக் கலாமேன்னுதான்...''



"இங்கே அட்வைஸ் பண்றதுக்கெல்லாம் இடம் கிடையாது. இந்தத் தடவை உன் வேலையை நீ தக்க வைச்சக்க முடியவே முடியாதுப்பா. உனக்கு நிறைய பண்ணியாச்சு. ஆனா உன்னுடைய வேலையிலே அடிக்கடி தவறு நேர்ந்து, முக்கியமான பேப்பர்களை எல்லாம் அங்கங்கே போக்கிட்டு, எந்த ஒரு தகவலும் இல்லாமே ஒரு வாரம் ரெண்டு வாரம்னு காணாமப் போறது... சரி, ஒரு கம்பெனி எத்தனைதான் பொறுத்துக்கும்?''



"சார்... எனக்கு உடம்பு முடியாம இருந்தது. அதுக்குத்தான் என்னாலே வேலைக்கு வர முடியாம போச்சு சார்...



"ஒரு மாசத்துலே நீ எட்டு நாள் பத்து நாள்னு சீக்கா இருந்தேன்னா இந்த வேலையை விட்டுட்டு முழுசா ஒரு மெடிக்கல் செக்கப் செய்துக்கோன்னுதான் என்னாலே சொல்லமுடியும்...''



"ஆனா இந்த வேலையை விட்டா நான் எப்படி பிழைப்பேன் சார்? என்னை நம்பி ஒரு பெரிய குடும்பம் இருக்கு. என்னோட தகப்பனாரும் ரிடையராயிட்டார்''



"சரி. அதுக்காக நீ ஆபீஸ்லே செய்ய வேண்டிய வேலையையும் செய்யாம காலம் தள்ளிடலாம்னு பாத்தியா? ஆபீûஸ என்ன மடம்னு நினைச்சிட்டியா? வேலை கிடைக்காமெ அலையற சின்னப் பசங்களை பாரு. வேணாம். தபன் பாபு வேணாம். நீ இனிமேல இங்க இருக்க முடியாது. வேறே எங்கேயாவது ஒரு வேலையைத் தேடிக்கோ.''



"ஐயோ சார்... தயவு செய்து... தயவு செய்து என்னுடைய நிலைமையை மனசுலே வச்சிக்குங்க சார். இப்போ எனக்கு வேலை போச்சின்னா நாங்க எல்லோருமே பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான். எனக்குக் கல்யாணமாகி ஒரு வருஷம்தான் சார் ஆகுது''""தம்பி... அப்படின்னா நீ இன்னும் முனைஞ்சி வேலை செய்திருக்க அதுவே காரணமா இருந்திருக்கணும். ஆனா நீ ஒரு வருஷமா தேனிலவு மட்டுமே கொண்டாடிக்கிட்டு இருக்கே. எல்லாம் உனக்கு கம்பெனி செய்து குடுக்கணும்னு எதிர்பார்க்கிறியா? அது ஒருக்காலும் நடக்காது தெரிஞ்சக்கோ.''""சார்...என் பொண்டாட்டி சீக்காளி...''



"யோவ்... நீ ஒரு உருப் படாத பித்தலாட்டக்காரன். வாயைத் தொறந்தா பொய்தான். போன மாசம்தான் உன்னை உன் பொண்டாட்டியோட மெட்ரோ சினிமா தியேட்டர் வாசல்லே பார்த்தேன். அவளை நீ எனக்கு அறிமுகம் கூட செய்து வெச்சே. அவ நல்லாத்தானே இருந்தா? அழகா... வாட்டசாட்டமா... இப்போ அவளை சீக்காளி ஆக்கிட்டியா?''""சார்... அவளோட வியாதியை நீங்க மேலோட்டமா வெளியிலிருந்து பார்க்க முடியாது சார்...''



"எனக்குப் புரியுது. உங்க யூனியன் லீடர் கூட உன்னை முழுக்க ஒரு பிரயோசனமேயில்லாத ஆளுன்னு ஏன் ஒத்துக்கிறான்னு இப்பத்தான் புரியுது.''



"அவங்க அப்படித்தான் சார் சொல்வாங்க. ஏன்னா நான் அவங்க மீட்டிங் எதுக்கும் போனதில்லே.''



"அது கிடக்கட்டும். நீ போனியா இல்லையான்றது எனக்குத் தேவையில்லே. ஆனா தபன்பாபு... என்னை மன்னிச்சிக்கோ. என்னாலே எதுவும் செய்ய முடியாது. உன்னுடைய டிஸ்மிஸ் லெட்டரை ஏற்கனவே டைப் செய்தாச்சு.''



தபன் நடுங்கியவாறு நின்று கொண்டிருந்தான். அவன் முகம் இரத்தமிழந்து வெளுப்படையத் துவங்கியது.சடாரென்று அவன் மேஜையின் இந்தப்புறமாக வந்து நின்று மேனேஜரின் இரு கரங்களையும் இறுகப்பற்றிக் கொண்டான்."



"சார். உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன். என்னை அழிச்சிடாதீங்க. எனக்கு இன்னும் ஒரே ஒரு வாய்ப்புக் குடுங்க.''



"அடக்கடவுளே, என்னய்யா பண்றே? தயவு செய்து இதெல்லாம் வேணாம். நானும் உன்னை மாதிரி ஒரு வேலைக்காரன்தான் இங்கே. தன்னுடைய வேலைகளைப் பார்த்துக்கறதுக்காக கம்பெனி எனக்கு சம்பளம் குடுக்குது அவ்வளவுதான்.''



"சார் எல்லோருக்கும் தெரியும். நீங்க எவ்வளவு நல்லவர்னு. என்னை இப்படி நாசமாக்கிடாதீங்க சார். இப்போ இருக்கிற சூழ்நிலையிலே என்னாலே இன்னொரு வேலையைத் தேடிக்க முடியாது சார். நாங்க பட்டினி கிடந்து சாகறதுதான் ஒரே வழி சார். எனக்கு இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு தயவு செய்து குடுங்க சார். இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு சார்...''



"என்ன? நான் உனக்கு வாய்ப்புக் குடுக்கணுமா? அப்படி வாய்ப்புக் குடுத்தா நீ திருந்திடுவியா?''""முயற்சி பண்ணிப் பாருங்க சார். இன்னொரு தடவை மறந்து கூட தப்பு செய்யமாட்டேன் சார். எப்பவுமே இனி தப்பு செய்யமாட்டேன் சார்.'' "



"தோ பாரு. நான் யாரையும் இப்படி வேலையை விட்டு தூக்கிறதுலே எனக்கு ஒண்ணும் சந்தோஷமோ பெருமையோ இல்லே. ஆனா தான தருமத்தின் அடிப்படையிலே ஒரு கம்பெனியை நடத்த முடியாது. சரி. அந்த மெமோவை நான் ஒரு நிமிஷம் பார்க்கிறேன்.''



தபன் தன்னுடைய பாக்கெட்டிலிருந்து அதனை எடுத்து மேனேஜரிடம் கொடுக்க அவன் அதை வாங்கி சிகப்புப் பேனாவினால் பரபரப்புடன் எதையோ எழுதினான். அதனை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த தபனின் முகம், சந்தோஷத்தாலும் நிம்மதியாலும் பிரகாசித்தது. உணர்ச்சியில் அவனுடைய குரல் கனத்தது."



"சார், சத்தியமா உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலே சார்.''



"உன்னுடைய நன்றியை உன்கிட்டேயே வச்சுக்கோ. போய் வேலையை ஒழுங்கா பார்க்கிற வழியைப் பாரு.''



"அந்த அறையை விட்டு வெளியேறும்போது கூட தன்னுடைய உடல் மிகவும் கடுமையாக நடுங்குவதைக் கவனித்தான் தபன். ஏதோ சாவின் கோரப்பிடியில் இருந்து தப்பித்து வந்ததைப் போல உணர்ந்தான். ஒரு அபரிமிதமான கிளர்ச்சி பலரையும் டாய்லெட்டை நோக்கி உந்தித் தள்ளும். தபனுக்கும் அதே உணர்வும் தேவையும் இருந்தது. அவன் ஆண்கள் கழிப்பறையை நோக்கி எட்டி நடைபோட்டுக் கொண்டிருந்தான். பிறகு வழியெல்லாம் மீண்டும் மீண்டும் எச்சில் துப்புவதற்குத் தூண்டப்பட்டுக் கொண்டிந்தான். அவனுடைய வாயிலிருந்து ஏதோ ஒரு முடிவேயில்லாத வற்றாத ஜீவ ஊற்று கிளம்பியதைப்போல எச்சில் ஊறிக்கொண்ட இருந்தது. எவ்வளவு துப்பினாலும் அது தன்னை விட்டு நீங்கியதைப் போல அவனால் உணரமுடியவில்லை.கழிப்பறையில் சுமாரான அளவில் ஒரு பெரிய நிலைக்கண்ணாடி இருந்தது. அது நட்ட நடுவில் விரிசல் விட்டிருந்தது. ஆனால் அதை மாற்றும் அக்கறை யாருக்கும் இருக்கவில்லை. தபன் விரிசல் பட்ட தன்னுடைய முகத்தை மிகக் கூர்மையாக உற்று நோக்கி கொண்டிருந்தான். இறுதியாக அவன் வாயில் வற்றாது ஊறிக்கொண்டிருந்த எச்சிலை ஓங்கரித்து அவனுடைய விரிசல் பட்ட முகத்தின் மீது மிகுந்த ஓசையுடன் காறித் துப்பினான்.



***************************************************************************



கோமல் என்னும் மாமனிதர் பாகம் 4


கோமல் என்னும் மாமனிதர் பாகம் 4

ராகவன் தம்பி

கோமலின் இறுதி நாட்களில் அவரைப் பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை என்று எழுதியிருந்தேன்.

இப்போது தேசிய நாடகப் பள்ளியில் பேராசிரியராக இருக்கும் கே.எஸ்.ராஜேந்திரன் ஒரு நாள், '"விஷயம் கேள்விப் பட்டீர்களா? கோமலுக்குப் பாவம் உடம்பு ரொம்பவும் முடியவில்லையாம். புற்றுநோய் இருப்பதாகக் கண்டுபிடித்து இருக்கிறார்களாம். வீட்டுக்குப் போயிருந்தேன். மனிதரைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. ரொம்பவும் சிரமப் படுகிறார்'' என்று சொன்னார்.

மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது எனக்கு. அன்று இரவு நிறையக் குடித்தேன்.

ரொம்ப வேண்டியவர்களுக்கு இதுபோல ஏதாவது என்றால் இப்போதும் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. சொல்லப்போனால் ஆறு மாதங்களுக்கு முன்னால் அந்த மனிதரை மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிப் பார்த்து இருக்கிறேன். இப்படி அவர் ஒரேயடியாக முடங்கிப் போனது மனதுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

புற்றுநோயின் தன்மை என்னவென்றால் கண்டுபிடிக்கப் படாமல் இருக்கும் வரை ஒன்றும் தெரியாதது போல அது ரொம்பவும் சமர்த்தாக உடலுக்குள் எங்காவது பதுங்கி இருக்கிறது. அமைதியாக இருக்கிறது. நோண்டிக் கண்டுபிடித்த அடுத்த நொடி ஆளை விழுங்கத் துவங்குகிறது. ஆளை உருமாற்றுகிறது. பெரும்போரைத் தொடுத்து ஆளை சின்னாபின்னமாக்கத் துவங்குகிறது. கோமலுக்குப் புற்றுநோய் என்றதும் நான் மிகவும் ஆடிப்போனதற்கு எனக்கான சொந்தக் காரணங்களும் இருந்தன.

என்னுடைய தந்தையாருக்குப் புற்றுநோய் நிகழ்த்திய அத்தனை கொடுமைகளையும் பார்த்தவன் நான். என் திருமணம் தொடர்பான சிறு மனத்தாங்கலில் கொஞ்ச நாட்களுக்கு என்னுடன் முற்றாகத் தொடர்பை அறுத்திருந்த அவர் என் மகள் பாரதிக்குக் குலதெய்வத்தின் கோயிலில் முடியிறக்க வேண்டும் என்றதும், எல்லாவற்றையும் மறந்து பேத்தியை ஆசையுடன் மடியில் அமர்த்தி அழகு பார்த்தார். அதற்கு மறுநாள் சேலத்தில் இருந்து வந்த மருத்துவப் பரிசோதனை முடிவுகள் இடியினை இறக்கியது þ அப்பாவுக்குப் புற்றுநோய் இருக்கிறது என்று. என் மனைவியை அருகில் அமர்த்தி மிகுந்த மன வேதனையுடன் அறிவுரைகள் சொல்லிக் கொண்டிருந்தார். '"என் நிலைமையைப் பார்க்கிறாய் அல்லவா? இவன் சிகரெட் எல்லாம் பிடிக்கிறான். அவனை நினைத்தால் எனக்குக் கவலையாக இருக்கிறது. அதேபோல உத்தியோக உயர்வுக்காகப் படிக்காமல் நாடகம் நாடகம் என்று அலைந்து கொண்டிருக்கிறான். எல்லோரும் கைதட்டிவிட்டுப் போய்விடுவார்கள். என்றாவது ஒருநாள் வாழ்க்கையில் எவ்வளவு விஷயங்களை இழந்திருக்கிறோம் என்று அவன் தெரிந்து கொள்ளும்போது காலம் மிகவும் கடந்திருக்கும். (எத்தனை தீர்க்கதரிசனம் அவருக்கு!) நீதான் அவனுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். நான் என் அடுத்த பயணத்துக்காகக் காத்து இருக்கிறவன். என்னால் இதைத்தான் சொல்ல முடியும்'' என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார் þ தூர நின்று கொண்டிருந்த என் காதுகளிலும் படுவதுபோல. மறுநாள் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துச்செல்லப் பயணமானார்.

எப்போதும் அப்பாவுக்கும் எனக்கும் எட்டாம் பொருத்தம். நான் எண்பதுகளின் இடையாண்டுகளில் நாடகச் செயல்பாடுகளில் தீவிரமாக இருந்த நேரம். தில்லியின் பல ஆங்கில தினசரிகளில் என்னைப் பற்றிய கட்டுரைகளும் என் நாடகங்களைப் பற்றிய விமர்சனங்களும் வெளிவந்துகொண்டிருந்தன. கல்கி, தினமணி, குமுதம் போன்ற இதழ்களும் பல கட்டுரைகளை வெளியிட்டன. ஒரு மாதிரியான மிதப்பில் அவை என்னை அலைக்கழித்துக்கொண்டிருந்தன. கட்டுரைகள் வெளிவந்த இதழ்களின் நறுக்குகளை அப்பாவுக்குப் பெருமையாக அனுப்பி வைப்பேன். பதிலுக்கு அவர் நீண்ட கடிதம் எழுதுவார். நாடகம் போன்ற விஷயங்களால் வெறும் பண விரயம்தான் மிஞ்சும் என்றும் முடிந்தால் உத்தியோக விஷயமாக முன்னேற ஏதாவது வழிசெய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருப்பார். அக்கடிதங்கள் மிகவும் எரிச்சல் மூட்டின அப்போது. ஊருக்குப் போகும்போதும் நாடகம் குறித்தோ அல்லது மற்ற சிறுபத்திரிகை நண்பர்களைப் பற்றியோ ஏதாவது சொன்னால் ரசிக்கமாட்டார். முகத்தை மிகவும் வேதனையாக வைத்துக்கொள்வார்.

அப்பா அடையாறு புற்றுநோய் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதும் நான் சிறிது நாட்கள் சென்னையில் தங்கினேன். வேளச்சேரியில் இருந்த சகோதரர் வீட்டில் இருந்து காலையில் மருத்துவமனைக்குப் போய்விடுவேன். அப்பாவுக்குப் புற்றுநோய் தொண்டைப் பகுதிக்கு மேலும் பரவி பேச முடியாத நிலையில் இருந்தார். வெஸ்ட் இன்டீஸ் நாட்டில் மருத்துவராகப் பணிபுரிந்துகொண்டிருக்கும் என்னுடைய சகோதரரும் அப்போது வந்திருந்தார். ஒரு நாள் நான் மட்டுமே அப்பாவுடன் தனியாக அறையில் இருந்தேன். செவிலியர்கள் வந்து அப்பாவை ஏதோ பரிசோதனைக்காக ஒரு தள்ளுப்படுக்கையில் வைத்து அழைத்துப்போனார்கள். நான் அவர் அறையில் தனித்திருந்தேன். படுக்கை விரிப்புக்களை மாற்றுவதற்காகக் கொண்டு வந்திருந்தார்கள். அவற்றை மாற்றுவதற்காகத் தலையணையை நகர்த்தியபோது.... தலையணையின் அடியில் நான் முன்னர் அனுப்பி வைத்திருந்த அத்தனை பத்திரிகை நறுக்குகளும் புகைப்படங்களும் கட்டுக்கட்டாக அங்கு இருந்தன. ஆடிப்போனேன். அந்த அறையைக் கவனித்துக்கொள்ளும் செவிலி, '"பெரியவர் எப்போதும் இதையே எடுத்து எடுத்துப் பார்த்துக் கொண்டிருப்பார். பார்க்கும் போதெல்லாம் கண்களில் நீர் வழிந்து கொண்டேயிருக்கும். இப்படியெல்லாம் செய்து உடம்பைக் கùலிடுத்துக் கொள்ளக் கூடாது என்று நான் கூட சில சமயம் அவரை அதட்டியிருக்கிறேன்'' என்று சொன்னபோது உடைந்து போனேன். என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கரைந்து கரைந்து அழுதேன். இப்போதும் பல நேரங்களில் அக்கணத்தினை நினைவுக்குக் கொண்டு வரும்போதெல்லாம் கட்டுப்படுத்தமுடியாமல் எனக்கு அழுகை வரும்.

எனவே கோமலுக்குப் புற்றுநோய் என்னும் செய்தி என்னை மிகவும் பலமாகத் தாக்கியது. நிலைகுலைய வைத்தது. அவர் உடல்நிலை சரியில்லாத நேரம், சி.சு.செல்லப்பாவுக்கு விளக்கு விருது கொடுத்தார்கள். அந்த விழாவில் நான் இயக்கிய, செல்லப்பாவின் "முறைப்பெண்' நாடகம் மேடையேற வேண்டும் என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந்தார் கோமல். அவரைப் பார்க்கச் செல்கிறவர்கள் எல்லாம் உங்களைப் பற்றித்தான் சொல்லிக்கொண்டிருந்தார் என்று சொல்லும்போதெல்லாம் நெகிழ்ந்து போய்விடுவேன். வெங்கட்சாமிநாதனும் தன்னுடைய கட்டுரை ஒன்றில் இது குறித்து எழுதியிருப்பார். தாளாத உடல்வேதனையிலும் முறைப்பெண் நாடகம் பற்றிய தன் அக்கறையை அனைவரிடமும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பார் கோமல். ஒன்று சி.சு.செல்லப்பா மீது அவர் கொண்டிருந்த அதீதமான மரியாதை. இன்னொன்று என் மீது அவர் வைத்த நம்பிக்கை. அன்பு. சென்னைக்கு வேறு வேலையாகப் போனேன். தனியாகப் போயிருந்தேன். கோமலைப் பார்த்து விட்டு வரவேண்டும் என்று மனது துடித்தது. தில்லியில் எல்லோரிடமும் சொல்லி வைத்திருந்தேன். சென்னை சென்று கோமலைப் பார்த்து விட்டு வரவேண்டும் என்று. சென்னையில் திலீப்குமாரையும் மற்ற நண்பர்களையும் சந்தித்தேன். நண்பர்கள் அனைவரும் கோமலின் மிகவும் சீர்குலைந்து போயிருந்த உடல்நலம் பற்றிச் சொன்னார்கள். கோமலைப் பார்க்க எனக்கு தைரியம் இருக்குமா என்று தெரியாமல் இருந்தது. அவருடைய வீடு இருக்கும் தெரு செல்லும் வரை சென்றேன். மனதுக்கு மிகவும் கிலேசமாக இருந்தது. நிற்க முடியாமல், உட்கார முடியாமல், படுகóக முடியாமல் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் அவரை எப்படிப் பார்க்கப்போகிறேன்?

கொஞ்சமாகக் குடித்து விட்டுச் சென்றால் கொஞ்சம் தைரியம் வரும் என்று தோன்றியது. கோமல் குடியிருந்த தெருவின் முனையில் இருந்த மதுக்கடைக்குச் சென்று கொஞ்சம் குடித்தேன். கொஞ்சம் குடித்ததும் அச்சமும் அதைரியமும் இன்னும் அதிகமானதுபோல இருந்தது. சரி. இன்னும் சற்றுக் குடிக்கலாம் என்று தொடர்ந்தேன். குடி என் தைரியத்தை முற்றாக இழக்க வைத்துக்கொண்டிருந்தது. அப்பாவின் ஞாபகம் அதிகரித்தது. இன்னும் குடித்தேன்.

குடிபோதை வழிந்த முகத்தை வைத்துக் கொண்டு அவர் வீட்டுக்குப் போக முடியாது. நாகரிகமாகவும் இருக்காது. போகாமலிருக்க எனக்கு சாக்குக் கிடைத்து விட்டது. ஐந்து வீடுகள் தள்ளியிருந்த கோமல் வீட்டுக்குப் போவதைத் தவிர்த்து மேற்கு மாம்பலத்திலிருந்து தாம்பரம் சென்று நண்பனின் அறையில் அந்த இரவைக் கழித்தேன்.

மறுநாளும் ஏறத்தாழ இதே கதைதான். அவரை சந்திக்கும் தைரியம் ஏனோ எனக்கு முற்றாக வரவில்லை. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மேற்கு மாம்பலம் வரை சென்று மீண்டும் அதே மதுக்கடையில் அதே போல குடித்துவிட்டு மீண்டும் தாம்பரத்தில் அதே நண்பனின் அறையில் இரவைக் கழித்து விட்டுக் காலையில் வேளச்சேரி அண்ணன் வீட்டுக்குப் போனேன்.

கோமலை சந்திக்காமலேயே மறுநாள் தில்லிக்கு ரயில் ஏறினேன். '"அவர் வீட்டுக்குப் போயிருந்தீர்களா?'' என்று என் மனைவி கேட்டதற்கு, '"நான் போன நேரம் அவரை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துப் போயிருந்தார்கள். அதனால் அவரை இந்தத் தடவை பார்க்க முடியாமல் போனது'' என்று அவள் கண்களை நேருக்கு நேர் சந்திக்காது பொய் சொல்லிவிட்டு இடத்தை விட்டு நகர்ந்தேன். எஸ்.கே.எஸ்.மணியும் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார். ""என்னடா, சென்னையிலே அவரைப் பார்த்தியா? எப்படி இருக்கார்? உன்கிட்டே எதுனா பேசினாரா?'' என்று அடுக்கிக் கொண்டே போவார். அவருக்கும் அதே பொய்கள்.நான் தில்லி வந்த சில நாட்களில் கோமல் இறந்து போனார். யதார்த்தாவின் சார்பில் ஒரு இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்தோம், பல நண்பர்கள் உருக்கமாகப் பேசினார்கள். தில்லியில் கோமலுக்குப் பல நண்பர்கள் உண்டு. அனைவரும் கோமலுடன் எங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்துப் பேசிக்கொண்டோம்.

கோமலுக்குப் பிறகு அவருடைய சுபமங்களா நின்ற போனது. அவருக்குப் பிறகு நாடக விழாக்கள் எதுவும் தமிழகத்தில் நடக்கவில்லை என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியாது. ஒன்றிரண்டு விழாக்களை யாராவது நடத்தியும் இருக்கலாம்.தமிழ்ப்படைப்புலகம் மிகவும் துரதிருஷ்டம் பிடித்த ஒன்று. அதனால் மேன்மைகளை அதிக நாட்கள் தக்க வைத்துக் கொள்ள முடியாது. பல உதாரணங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

தகப்பனின் திவசம் அமர்க்களமாக நடக்கும்போது, தகப்பன் இருந்திருந்தால் ரொம்பவும் சந்தோஷப்பட்டிருப்பானே என்று அசட்டுத் தனமாக அழும் மகனின் நிலையில் நான் இன்று இருக்கிறேன்.

கோமல் தமிழுக்கு நிறைய செய்தார். நாடகத்துக்கு நிறைய செய்தார். அவர் இருந்திருந்தால் பல மாயங்களை நிகழ்த்தியிருப்பார். நாடக மூலவர்களும் உற்சவர்களும் இருக்கும் இடம் தெரியாமல் வியப்புடன் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். பல போலிகளின் நிஜமான சாயம் வெளுத்திருக்கும்.

எல்லாவற்றையும் விட, நமக்கு வேண்டிய நாடகம், நமக்கு வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதைத் நமக்குத் தெளிவாக எடுத்து வைத்திருப்பார்.

மனம் நெகிழ்ந்த நினைவுகளுடன் கோமல் பற்றிய என் நினைவலைகளைத் தற்போது நிறுத்திக் கொள்கிறேன் அவரைப் பற்றிய நினைவுகளை என்றும் மனதில் சுமந்து...

கோமல் என்னும் மாமனிதர் பாகம் 3


யதார்த்தாவின் எப்போ வருவாரோ நாடகத்திலிருந்து ஒரு காட்சி

ராகவன் தம்பி

கோவை சுபமங்களா நாடகவிழாவில் கலந்து கொள்ள நாங்கள் சென்றபோது எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கான ஏற்பாடுகள் பற்றிய தகவல்களுடன் சென்ற இதழில் முடித்திருந்தேன். பொதுவாக நான் கலந்து கொண்ட இரண்டு நவீன நாடக விழாக்களில் (மதுரை மற்றும் கோவை) நவீன நாடகப்புரவலர்களும் நாடக வேந்தர்களும் ஆடிய ஆட்டங்களையும் பந்தாக்களையும் காட்டிய படங்களைப் பற்றியே சுமார் பத்து இதழ்களில் தனியாக எழுதலாம். அவற்றில் காதல், வீரம், சோகம், மர்மம் போன்ற எல்லாம் கலந்து ஒரு மூன்றாந்தரத் தமிழ் சூப்பர் ஹிட் படத்துக்கு ஈடான சுவாரசியத்துடன் விஷயங்கள் வரலாம். அவை இப்போதைக்கு வேண்டாம். விஷயத்துக்கு வருகிறேன்.

நண்பரின் ஏற்பாட்டில் ஆறு தனித்தனி அறைகளை எங்களுக்காக ஒதுக்கிக் கொண்டோம். நாங்கள் தங்கியிருந்த விடுதி வளாகத்திலேயே உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்த விழாவுக்காக அங்கு தங்கியிருந்த எல்லாரையும் விட்டு மிகவும் முக்கியமான விருந்தினர் ஒருவருடன் தினமும் காலையிலும் நண்பகலிலும் உணவருந்த அந்த விடுதிக்கு வருவார் கோமல். அது என்னுடைய மகள் பாரதி. அப்போது அவளுக்கு சுமார் எட்டு வயதிருக்கும். எப்போ வருவாரோ நாடகத்தில் தீபாவுடன் கூடையை சுமந்து வரும் சிறுமியாக நடித்தாள். அந்த நாடகத்தின் முழு வசனங்களும் அவளுக்கு மனப்பாடமாக இருந்தது. ""பாரதி எங்கே?'' என்று தேடிவந்து அழைத்துப்போவார். அவளை முறைப்பெண் மற்றும் எப்போ வருவாரோ நாடகங்களின் வசனங்களை சொல்லச் சொல்லி முகத்தில் பெருமையும் பூரிப்பும் ததும்ப உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருப்பார். ஏதோ சர்க்கஸ் காட்டுவது போல எல்லோரையும் கூப்பிட்டுக் காட்டுவார். பாரதியை மீண்டும் மீண்டும் வசனங்கள் சொல்லச் சொல்லிக் கேட்டு ரசிப்பார். விழாவில் மாலை நாடகம் முடிந்ததும் இரவில் தவறாது நடக்கும் சோமபான விருந்துகளின் போது எங்கள் பக்கம் எட்டிக்கூடப் பார்க்க மாட்டார்.

துஷ்டர்களைக் கண்டு தூர இருப்பதுபோல விலகி இருந்து ஏதாவது முக்கிய வேலைகள் இருந்தால் மட்டும் யாரிடமாவது எனக்கு விஷயத்தை சொல்லி அனுப்புவார். அரைகுறை நினைவில் இருக்கும் யாராவது ஒரு புண்ணியவான் அதை மிகவும் விஸ்தாரமாகக் கவனத்தில் வைத்துக் கொண்டு இரண்டு நாட்கள் கழித்து என்னிடம் சொல்வான். நாங்கள் கோவை சென்ற மூன்றாவது நாள் எங்கள் நாடகம். புதிதாகத் திருமணம் முடித்து குடுகுடுப்பைக்காரன் வேடத்தில் நடிக்க எங்களுடன் வந்திருந்த ஜாநி சுரேஷ் நாடகத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன் அதீதக் காய்ச்சலுடன் குளிர் நடுக்கத்துடன் படுத்திருக்கிறான். நள்ளிரவில் ஜøரம் ஏகமாக ஏறியிருக்கிறது. அவன் மனைவி தீபா மிகவும் பயந்து விட்டாள். வெளியில் நின்று அழுது கொண்டிருக்கிறாள். எங்களைத் தொந்தரவு செய்ய அவள் விரும்பவில்லை. அப்படி தொந்தரவு செய்திருந்தாலும் எங்களால் என்ன செய்ய முடிந்திருக்கும் என்று தெரியவில்லை. எங்களில் பலரை யாராவது நிதானமான ஒருவர் கழிப்பறை வரை அழைத்துச் சென்று மீண்டும் படுக்கைக்குக் கொண்டுவந்து விடும் ஆரோக்கியமான நிலை. நள்ளிரவில் கோமலுக்கு யார் மூலமாகவோ தகவல் தெரிந்திருக்கிறது. சுமார் ஒரு மணியிருக்கும். பரபரப்பாக வேட்டியை மடித்துக் கட்டி அண்ணாமலையை உடன் அழைத்துக்கொண்டு விடுதிக்கு ஓடி வந்திருக்கிறார். உடனடியாக சுரேஷை அருகில் இருந்த மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரிடம் காட்டி மருந்து வாங்கிக் கொடுத்து அவனுக்குச் சற்று ஆசுவாசமானதும் அறையில் கொண்டு வந்து விட்டிருக்கிறார். அப்போது நள்ளிரவு சுமார் இரண்டரை மணியிருக்கும். நாங்கள் பக்கத்து அறையில்தான் கூத்தடித்துக் கொண்டிருந்தோம். எங்கள் அறைப்பக்கம் கூட அவர் வரவில்லை. இந்த விஷயமும் இருநாட்கள் கழித்துத்தான் எனக்குத் தெரிந்தது. இப்போதும் இதைப்பற்றி என்றாவது நினைத்துக் கொள்ளும்போதோ அல்லது யாரிடமாவது சொல்லும்போதோ சுரேஷ் மற்றும் தீபாவின் கண்கள் தளும்பிப் போவதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.கோவை நாடகவிழா முடிந்தது. சென்னைக்குக் கிளம்ப வேண்டும். நானும் பாரதியும் நண்பர்களுடன் விடுதியில் தங்கியிருக்க என் மனைவியும் இளைய மகள் அபிநயாவும் என் சகோதரர் வீட்டில் தங்கியிருந்தார்கள். சகோதரரிடம் சொல்லிக் கொண்டு கிளம்பவும் மனைவியையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு போகவும் அவர் வீட்டுக்குப் போனேன்.

அப்போது நாங்கள் தங்கியிருந்த அறைகளுக்கு வாடகையை செலுத்த என் நண்பர் தன்னுடைய உதவியாளரை விடுதிக்கு பணத்துடன் அனுப்பியிருந்தார். அந்த உதவியாளர் பணம் செலுத்த விடுதிக்கு சென்றபோது அவருக்கு முன்னால் கோமல் அங்கு போய் அவர் பணம் செலுத்துவதைத் தடுத்து ""அவங்க எங்க விருந்தாளிங்க. நீங்க எதுக்கு பணம் கட்டணும்?'' என்று உரிமையுடன் சண்டை போட்டு எங்கள் ஆறு அறைகளுக்குமான பணத்தை செலுத்தியிருக்கிறார். இது நாங்கள் சென்னைக்கு ரயிலில் செல்லும்போது குணசேகரனோ பெரியசாமியோ எனக்கு சொன்னது. அதற்கு முன் நான் என் நண்பர்தான் எங்களுக்காக பணம் செலுத்தியிருக்கிறார் என்று எல்லோரிடமும் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தேன். நாங்கள் தங்கிய அந்த ஆறு அறைகளும் விழாக்குழுவினர் ஏற்பாடு செய்தவை அல்ல.

நாங்கள் எங்களுக்காக ஏற்பாடு செய்து கொண்டவை.கோமல் அந்த விடுதியில் எங்களுக்காக செலுத்தியது விழாக்குழுவினரின் பணமா அல்லது அவருடைய சொந்தப் பணமா என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. அநேகமாக கோமலின் சொந்தப் பணமாகத் தான் இருந்திருக்கும்.நாங்கள் தில்லியிலிருந்து கிளம்பும்போது கோமல் ஒன்றும் சொல்லவில்லை. கோவையில் எப்போ வருவாரோ நாடகம் முடிந்ததும் சென்னையில் கிருஷ்ணகான சபாவில் ஒரு மேடையேற்றத்தை ஏற்பாடு செய்திருப்பதாக சொன்னார். சுபமங்களாவும் பரீக்ஷô ஞாநியின் அமைப்பும் சேர்ந்து இந்த ஏற்பாட்டினை செய்திருப்பதாக சொன்னார். கிருஷ்ணகானசபா நிகழ்ச்சிக்கு முன்தினம் சோழா கலைக் கிராமத்தின் ஓவியர்கள் வளாகத்தில் கூத்துப்பட்டறை ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்திருந்தது. அதற்கும் வந்திருந்தார் கோமல். கிடைத்த மிகச்சிறிய இடைவெளியில் மிகவும் அற்புதமாக ஏற்பாடு செய்திருந்தார்கள் சுபமங்களாவும் பரீக்ஷôவும். நல்ல கூட்டம் வந்தது. சென்னையின் அனைத்து எழுத்தாளர்களும் திரைத்துறை மற்றும் நாடகத்துறையைச் சேர்ந்த பலரையும் நாடகத்துக்கு அழைத்திருந்தார் கோமல். இயக்குநர் பாலச்சந்தர், எழுத்தாளர் சுஜாதா ஆகியோரும் வந்திருந்தனர். கிருஷ்ணகான சபாவில் பாலச்சந்தர் மேடையேறி இந்த நாடகத்தைப் பாராட்ட வேண்டும் என்று மிகவும் பரபரத்தார் கோமல். அது நடக்கவில்லை. சுஜாதா மிகவும் நல்ல ஒரு விமர்சனத்தை குமுதத்தில் எழுதினார். தமிழகத்தின் பல பத்திரிகைகளில் விமர்சனம் வந்தது. இந்திரா பார்த்தசாரதி அள்ண்க்ங் பத்திரிகையில், வடக்கில் இருந்து வந்த இவர்களிடமிருந்து தமிழகத்தின் நவீன நாடகக்காரர்கள் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று எழுதினார். இந்தப் பெருமையெல்லாம் கோமல் என்னும் அற்புதமான நண்பர் வழியாகக் கிடைத்த ஒரு பெரும் வரமாக எப்போதும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

இந்திரா பார்த்தசாரதி சொன்னது போல, யதேஷ்டமாகக் கற்றுக்கொண்டாகி விட்டது என்றோ என்னவோ, அதற்குப்பிறகு தமிழகத்தில் நடந்த எந்த நவீன நாடக விழாவுக்கும் யதார்த்தாவுக்கு அழைப்பு வரவில்லை. சொல்லப்போனால் தமிழ் நாடகம் பற்றி எங்காவது எழுத நேர்ந்த போதெல்லாம் நவீன நாடகப்புலவர்கள் முடிந்தவரை என்னையும் யதார்த்தாவையும் கவனத்துடன் தவிர்த்தார்கள். இன்னும் தவிர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

தொண்ணூறுகளின் துவக்கத்தில் தமிழகத்தின் ஒரு நவீன நாடகப் பத்திரிகை தில்லியில் இருந்து ஒரு தில்லி நாடக சிறப்பிதழை வெளியிட்டது. அந்த தில்லி நாடக சிறப்பிதழில் மறந்து கூட நேர்காணல்களிலோ கட்டுரைகளிலோ யதார்த்தாவைப் பற்றியோ என்னைப்பற்றியோ ஒரு வார்த்தை கூட எங்கும் பதிவு செய்யப்படாமல் மிகவும் ஆழ்ந்த எச்சரிக்கை உணர்வுடனும் நேர்மையுடனும், ஜாக்கிரதை உணர்வுடனும் தயாரிக்கப்பட்டு அந்த இதழ் வெளிவந்தது.

மேலும் ஒரு வேடிக்கை என்னவென்றால் நான் மேடையேற்றிய நாடகங்களின் ஆசிரியரே இரு தொலைக்காட்சி நேர்காணல்களில் அவருடைய குழுவைத்தவிர வேறு யாரெல்லாம் அவருடைய நாடகங்களை மேடையேற்றியிருக்கிறார்கள் என்னும் கேள்விக்கு அயல்நாட்டு இயக்குநர்களையும் தமிழ் தெரியாத சில இயக்குநர்களின் பெயர்களையும் பெருமையுடன் பட்டியல் இட்டார். அவருடைய பல நாடகங்களை கடன் வாங்கி தில்லியில் மேடையேற்றிய நானோ யதார்த்தா நாடகக்குழுவோ அப்போது அவருடைய நினைவில் வரும் பாக்கியத்தைப் பெற்றிருக்கவில்லை.
அதேபோல மைய அரசு நாடகங்களுக்கு அளிக்கும் உதவித் தொகைக்கும் நாடக விழா பங்கேற்புகளுக்கும் என்னுடைய விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு வைக்கப்பட்டபோது தமிழகத்தின் நவீன நாடக வித்தகர்கள் இங்கு வந்து அரங்கேற்றிய உட்டாலங்கடி வேலைகளைப் பற்றி பிற்காலத்தில் அறிந்து கொள்ள நேரóந்தது.

அதே நேரத்தில் நான் பலநேரங்களில் மிகக்கடுமையாக எதிர்த்து சண்டையிட்ட வெங்கட்சாமிநாதன் யதார்த்தாவின் நாடக முயற்சிகளை பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார். வெகு சமீபத்தில் நான் மிகவும் நெகிழ்ந்துபோன விஷயம் என்னவென்றால் அவருடன் என்னுடைய சண்டை உச்சகட்டத்தில் இருந்த ஒரு காலகட்டத்தில் அவருடைய தொகுப்பு ஒன்றில் என்னைப் பற்றி அவர் எழுதிய பல கட்டுரைகளை ஓரிடத்தில் தொகுத்து பதிப்பகத்துக்குக் கொடுத்திருக்கிறார். சென்னையின் தமிழினி பதிப்பகம் அந்த நூலை வெளியிட்டிருக்கிறது. தன்னிடம் கோமல் எப்போதும் என்னைப் பற்றி மிகவும் பெருமையாகத்தான் பேசுவார் என்று அடிக்கடி சொல்வார் வெசா. அதைத் தன்னுடைய எழுத்துக்களிலும் பதிவு செய்திருக்கிறார்.

இதையெல்லாம் சற்றுத் தடம் மாறி இங்கு பதிவு செய்வதன் காரணம் மீண்டும் கோமலின் மேன்மையைப் பற்றிச் சொல்வதற்கே. நான் கேட்காமலே எனக்கு இவ்வளவும் செய்த கோமலுக்கு நான் எதையும் எப்போதும் செய்யவில்லை. அவர் எப்போதும் எதையும் என்னிடம் கேட்டதில்லை. எந்த ஜென்மத்தின் கடனை எனக்கு அவர் அடைக்க வந்தார்? இனி வரும் பல ஜென்மங்களுக்கு எனக்குப் பெரிய கடனை அவர் விட்டுப் போயிருக்கிறாரே?

இதை இங்கு பதிவு செய்யும்போது உண்மையிலேயே என்னால் என் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தக் கண்ணீர்த் துளிகள் மட்டுமே என் மேல் அத்தனை அக்கறையும் அன்பையும் செலுத்திய ஒரு ஆன்மாவின் பாதங்களில் நான் சமர்ப்பிக்கும் எளிய காணிக்கை என்று நேர்மையுடன் நம்புகிறேன்.



அவருடைய இறுதிநாட்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லி முடிக்கவேண்டும். அவருடைய இறுதி நாட்களில் நான் அவரைப் பார்க்க வில்லை. கிடைத்த ஓரிரு சந்தர்ப்பங்களில் அவரைப் பார்க்கும் தைரியமும் எனக்கு வரவில்லை. அவரை அப்படிப் பார்க்க நான் விரும்பவில்லை. அந்த சோக நினைவுகளை இன்னும் ஒரு மாதத்துக்குத் தள்ளிப் போடலாம் என்று இருக்கிறேன்.

கோமல் என்னும் மாமனிதர் - பாகம் 2



யதார்த்தாவின் "முறைப்பெண்" நாடகத்திலிருந்து ஒரு காட்சி
ராகவன் தம்பி





இந்த மாதிரி உதிரியாக சில நினைவுகளை எழுதத் துவங்கும்போது வருடம், மாதம் போன்ற தகவல்களை மிகவும் துல்லியமாக ஞாபகத்தில் வைத்திருப்பது ரொம்பவும் கஷ்டமான காரியம். சில சமயங்களில் குன்ஸôவாக எதையாவது எழுதி விட்டு கொஞ்ச நாட்கள் கழித்து வேர்க்கடலைப் பொட்டலத்தைப் பிரித்துக் கொறித்து விட்டுக் கசக்கிப் போடும் முன் யதேச்சையாக இதைப் படிப்பவர்கள் யாராவது உடனே தவறைச் சுட்டிக் காட்டி மானத்தை வாங்கிவிடுவார்கள். அதனால்தான் இந்தப் பகுதியில் முடிந்த வரை வருடங்களைக் குறிப்பிட்டு எழுதாமல் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது.

சரி. 1991லிருந்து 1994க்குள் ஏதோ ஒரு மாதத்தின் காலை வேளை. அலுவலகத்துக்குப் போகத் தயாராகிக் கொண்டிருந்தேன். தொலைபேசியில் கோமல். ""உங்க பேட்டையிலேதான் இருக்கேன். நேத்து வந்தேன். கொஞ்சம் அவசரமாக அசோகா ஓட்டல் வரை வரமுடியுமா?""ஏதோ அன்றைய தினம் விடுப்பு எடுக்கக் கடவுளே கொடுத்த வரமாக நினைத்து சந்தோஷப்பட்டு அசோகா ஓட்டலுக்கு ஓடினேன். கொஞ்சம் பதட்டமாக இருந்தார் கோமல். அந்த ஆண்டு தேசிய விருதுகளுக்கான திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் அவர் இருந்தார். தேர்வுகளுக்கான திரையிடலில் கலந்து கொள்ள வந்திருந்தார். அரசாங்கத்தின் எத்தனையோ விசித்திரமான போக்குகளில் ஒன்று, இது போன்ற அழைப்பின் பேரில் தில்லிக்கு வரும் கலைஞர்களை அழைத்து அவர்களின் ரத்தக்கொதிப்பை ஏற்றி வைத்து ஊருக்குத் திருப்பி அனுப்புவது. சென்னையிலிருந்து இங்கு வர விமானப் பயணத்துக்கு ஏற்பாடு செய்வார்கள். அசோகா ஓட்டல் மாதிரி பெரிய இடங்களில் தங்க வைப்பார்கள். எல்லா இடங்களுக்கும் அரசு கார் அழைத்துப்போகும். ஆனால் தினப்படி மட்டும் சிரார்த்தம் செய்து வைக்கும் சாஸ்திரிகளுக்குக் கொடுப்பது போல ஏதோ ஒரு தொகையை உறையில் போட்டு ஊர் திரும்பும்போது கொடுப்பார்கள். மற்றதெல்லாம் அந்தக் கலைஞர்களே யாராவது சொந்தக் காரர்கள் வீடுகளில் பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக பணக்காரக் கலைஞர்கள் அல்லது அரசியல் செல்வாக்குள்ள கலைஞர்களே இந்த மாதிரி காரியங்களுக்கு அதிகம் வருவார்கள். அவர்களுக்கு எந்தப்பிரச்னையும் இருக்காது. வந்த இடத்தில் ஒன்றிரண்டு வேலைகளையும் முடித்துவிட்டு சில்லறையோடு ஊர் திரும்புவார்கள். கோமல் மாதிரியானவர்கள் வருவது மிகவும் குறைச்சல். எப்படியோ அந்த வருடம் அவர் தவறி வந்துவிட்டார்.அரசு நிறுவனத்தின் இந்த அற்புத விதிமுறைகளுக்கு அறிமுகமாகாத அவர் அசோகா ஓட்டல் வந்து இறங்கிய உடனே சேவகனை அழைத்து தான் அணிந்திருந்த சகல வகையான காதி வஸ்திரங்களையும் துவைக்கக் கொடுத்து. ஒரு காஃபி மற்றும் காலை உணவைப் பணித்து விட்டு குளிக்கச் சென்றிருக்கிறார். குளிதóது விட்டுத் திரும்பியபோது ஓட்டல் சேவகன் காலை உணவு. காஃபி மற்றும் ஒரு வெடிகுண்டை பில் வடிவில் அறையில் வைத்துவிட்டுத் திரும்பியிருக்கிறான். அதுதான் அவர் என்னைப் பதட்டத்துடன் அழைத்ததன் பின்னணி.

மகாதேவ் சாலையில் அமைந்துள்ள திரையரங்கின் பின்புறத்திலேயே ஒரு சலவைத் தொழிலாளி இருக்கிறார். கோமல் இங்கு தங்கும் வரை அங்கேயே துணிகளைத் துவைக்கக் கொடுக்கலாம். காபி டிபன் போன்றவற்றை என் வீட்டில் வைத்துக்கொள்ளலாம் என்றேன். ""உங்க வீட்டுலே அவங்களும் வேலைக்குப்போறாங்க. தொந்தரவு தர வேண்டாம். வேறு எங்காவது பாருங்கள்'' என்றார். பொதுவாக எப்போதும் கோமலுக்கு மட்டும், அவரை அழைத்துப்போக வரும் அரசு வண்டி மிகவும் தாமதமாக வரும். எனவே அவரை நானே துணி வெளுக்கப்போடவும் சிற்றுண்டி கழிக்கவும் வெளியில் அழைத்துப்போவதாக பரஸ்பரம் ஏற்பாடு செய்து கொண்டோம்.

என்னிடம் ஒரு இளம் பச்சை நிற ஸ்கூட்டர் இருந்தது. மிகப் பழையது. ஓடுவதற்கு பெட்ரோல் ஊற்றிவதைத் தவிர அந்த வண்டிக்கு வேறு எதுவும் நான் செய்ததில்லை. கோல் மார்க்கெட்டில் என் வீட்டில் உதைத்துக் கிளப்பினால் ஒரு ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் எனக்காகக் காத்திருக்கும் யாருக்காவது நான் கிளம்பி விட்டேன் என்பது தெரிந்துவிடும். அந்த அளவுக்கு சத்தம் போடும் அந்த ஸ்கூட்டர். சரியாக சொன்ன நேரத்தில் ஓட்டலில் கீழே எனக்காகக் காத்திருப்பார் அவர். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஏதாவது ஒரு நடிகனை தேசிய விருதுக்குத் தேர்ந்தெடுக்க, வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு அந்த ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து வருவார். வழியில் நார்த் அவென்யூ அல்லது சற்றுத் தள்ளி ஆந்திரா பவனில் கிடைக்கும் கண்றாவியான இட்லியை சாப்பிட்டு விட்டு திரைப்படங்கள் பார்க்கப்போவார். மதியம் நடுவர்களுக்கு அங்கு பலமான விருந்து நடக்கும். ஆனால் எனக்காகக் காத்திருந்து யு.என்.ஐ. கேன்டீனில் தட்டைக் கையில் ஏந்திச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் படம் பார்க்க ஓடிப்போவார். அந்த ஆண்டு தனக்கு முற்றிலும் அறிமுகம் இல்லாத திறமையான கலைஞர்களுக்காகவும் திரைப்படங்களுக்காகவும் தேர்வுக்குழுவில் நிறைய சண்டை போட்டார் கோமல் என்று நடுவர்களில் ஒருவர் அப்புறம் சொன்னார்.

கோமலுக்குத் தேர்வுக்குழு வேலை முடிந்தது. ஊர் கிளம்பவேண்டும். பேரக்குழந்தைகளுக்கு ஏதாவது உடைகள் மற்றும் வீட்டுக்கு ஏதாவது சாமான்கள் வாங்கிப்போகவேண்டும் என்றார். அடிவயிற்றில் புளியைக் கரைத்தது எனக்கு. வழக்கமாக இந்த ஆட்டத்துக்கு நான் போவதில்லை. நம் ஊரிலிருந்து வருபவர்களுக்கு யாராவது பொருளாதார நிபுணர்கள் அங்கேயே சொல்லி அனுப்புவார்கள் þ தில்லியில் எங்கு எந்தப் பொருளை வாங்கினாலும் கடைக்காரன் கேட்பதில் கால் பங்குக்கு பேரம் பேசி வாங்கலாம் என்று. அதை எந்த இடத்தில் அமல்படுத்தலாம் என்னும் விவஸ்தை இல்லாமல் நம் ஆட்களும் ஏதோ உலகச் சந்தையில் ஆயுதங்களை பேரம் பேசி வாங்குவது போன்ற பாவனையில் தயாராக வருவார்கள். அஜ்மல்கான் ரோட்டில் முதல் தாக்குதல் தொடங்கும். கடைக்காரன் சொன்ன விலையைக் கால் விலைக்குக் குறைத்துக் கேட்பார்கள். அந்தக் கடைக்காரன் நம் வீடு, பக்கத்து வீடு, நம்முடைய ஊர் மற்றும் மாநிலத்தில் உள்ள அனைத்துப் பெண்களையும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவான். திராவிடக் கட்சிகளின் பெருங் கருணையால் இந்தி புரிந்து கொள்ள முடியாத நம்ம ஊர் பரப்பிரம்மங்கள் ""கடைக்காரன் என்ன சொல்கிறான்'' என்று தெய்வீகப் புன்னகையுடன் நம்மைக் கேட்பார்கள். இவை போன்ற சங்கடங்களால் யார் கூப்பிட்டாலும் இந்த வியாபாரத்துக்கு மட்டும் நான் போவது கிடையாது. இதுபோன்ற வேலையைத் தவிர்க்கக் கைவசம் நிறையப் பொய்களை வைத்திருக்கிறேன். அவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து விட்டுத் தப்பித்து விடுவேன்.

கோமலிடம் என்னால் அந்தப் பொய்களை சொல்ல முடியவில்லை. இறைவனை வேண்டிக்கொண்டே அவருடன் கடைகளுக்குப் போனேன். எதற்கும் தனியாகப் போகவேண்டாமே என்று தட்சிணபாரத சபை மற்றும் யதார்த்தாவின் பல நாடகங்களில் நடித்த எஸ்.கே.எஸ்.மணியிடம் கேட்டேன். அவரும் கோமலின் மிகச் சிறந்த நண்பர். க.நா.சுவின் மாப்பிள்ளை. இப்போது தமிழ் சினிமாவில் அவர் பாரதி மணி. உடனே கார் எடுத்துக்கொண்டு வந்தார். ஆனால் கோமலிடம் ஒன்று சொல்லி விட்டேன். அவர் தானாக எதுவும் பேரம் பேசக்கூடாது என்றும் எங்களுடைய சாமர்த்தியத்தில் நம்பிக்கை இருந்தால் நாங்கள் பேசும் விலையைக் கொடுத்து பொருட்களை அவர் வாங்கவேண்டியிருக்கும் என்றும் சொன்னேன். சிரித்துக் கொண்டே மணியின் கையைப் பிடித்துக் கொண்டார். முதலில் ஜன்பத் கடைத்தெருவில் நிறைய கடைகள் ஏறி இறங்கினார். ஒன்றும் வாங்க வில்லை. பாரம்பரியக் கலைப்பொருட்கள் விற்கும் கடைகளுக்கும் சென்றார். அவை முகேஷ் அம்பானி, அனில் அம்பானி சகோதரர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மட்டுமே ஏறி விலை கேட்க சாத்தியமாகும் கடைகள். கோமலுடைய கசங்கிப்போன கதர் வேட்டி சட்டை மற்றும் என்னுடைய லக்ஷ்மிகரமான முகத்தைப் பார்த்த கணத்திலேயே கடைக்காரர்கள் எங்களுக்கு விலை சொல்லி எதுவும் பயனில்லை என்ற பாவனையில் வேறு ஏதோ வேலையைப் பார்ப்பதுபோலவும் கடைப்பையன்களை கெட்ட வார்த்தைகளில் திட்டுவதிலும் ஈடுபடத் துவங்கினார்கள். மணி, ஒன்றும் தெரியாதது போல முகத்தை வைத்துக்கொண்டு வெளியில் நின்று பைப் புகைத்துக்கொண்டிருந்தார். ஐந்தாறு கடைகள் ஏறி இறங்கியதும், இது நமக்கான கடைகள் இல்லை போலிருக்கே நாம கரோல்பாக் போகலாமா என்றார் கோமல். போனோம்.

அங்கும் ஐந்தாறு கடைகள் ஏறி எதுவும் வாங்காமல் வெளியில் வந்த கோமலின் கண்களில் பிளாட்பாரத்தில் இருந்த பழைய புத்தகக் கடை ஒன்று கண்ணில் பட்டது. உடனே தரையில் அமர்ந்து புத்தகங்களைத் தேடத் துவங்கினார். மிகப் பழைய ஆங்கில நாவலாசிரியர்களின் நூல்களைக் கண்டதும் ஏதோ திருவிழாவில் காணாமல் போய்க் கிடைத்த குழந்தைகளை அணைக்கும் ஆர்வத்துடன் அந்த நூல்களை அள்ளிக்கொண்டார். இப்படியாக நான்கைந்து பழைய புத்தகக் கடைகளில் ஏறி கை நிறைய புத்தகங்களை அள்ளிக் கொண்டார். ஓரிரண்டு ஆயத்த ஆடைகளை வாங்கிக் கொண்டார். அது அவருடைய நாடகக் குழுவில் உள்ள ஒரு நடிகரின் குழந்தைகளுக்கு என்று சொன்னார்.

தன்னுடைய பேரக்குழந்தைகளுக்கும் வீட்டுக்கும் சென்னையில் ஏதாவது வாங்கிக் கொடுத்திருப்பார்.ஊருக்குக் கிளம்பிப்போனதும் ஒரு நாள் திடீரென்று அவரிடமிருந்து தொலைபேசி வந்தது. சுபமங்களாவும் ஸ்ரீராம் சிட்பண்ட் நிறுவனமும் இணைந்து கோவையில் நாடக விழா நடத்தப்போவதாகவும் ஏதாவது ஒரு நாடகம் கொண்டு வரமுடியுமா என்று கேட்டார். நாங்கள் இறுதியாக மேடையேற்றியது எஸ்.எம்.ஏ.ராமின் ""எப்போ வருவாரோ?''. அதன் முதல் மேடையேற்றத்தில் பங்கேற்ற பலர் இப்போது தில்லியில் இல்லையென்றும் புதிய ஆட்களை வைத்து மீண்டும் தயாரிப்பது சற்றுக் கடினம் என்றும் கூறினேன். அவர் கேட்கத் தயாராக இல்லை. நீங்கள் ஏதாவது செய்து அவசியம் வரவேண்டும் என்றார். ஒவ்வொரு இரவும் ஒன்பது மணியானால் கோமல் தொலைபேசி வரும். என்ன செய்தீங்க? என்று கேட்பார். எஸ்.கே.எஸ்.மணி, குணசேகரன் போன்ற நண்பர்கள் தைரியம் அளித்தார்கள். செய்யலாம் என்று தீர்மானித்தோம். அவசர அவசரமாக ஒத்திகைகளைத் துவங்கினோம். சொல்லப்போனால் எங்கள் ஒத்திகைகள் புகைவண்டியிலும் தொடர்ந்தன.

சுபமங்களாவின் மேலாளரோ அல்லது ஸ்ரீராம் சிட்ஸின் மேலாளரோ, யாரோ ஒருவர் எங்களை கோவை ரயில் நிலையத்திலிருந்து எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள விடுதிக்கு அழைத்துப்போய் நாங்கள் தங்கவேண்டிய அறையைக் காண்பித்தார். அதை அறை என்று சொல்வதை விட குதிரை லாயம் போன்ற எவ்வித வசதிகளும் இல்லாத பெரிய கூடம். முதல் பார்வையிலேயே அது எனக்குப் பிடிக்க வில்லை. அதற்கு ஓரிரண்டு காரணங்களும் இருந்தன. எங்கள் குழுவில் தீபாவும் ஜாநி சுரேஷøம் புதிதாய்த் திருமணமான தம்பதியர்கள். திருமணமாகி ஒரு வாரத்துக்குள் எங்களுடன் நாடகத்தில் பங்கேற்க வந்துவிட்டனர். அவர்களை அதுபோன்ற அறையில் இப்படி மற்றவர்களுடன் தங்கவைப்பது மகாபாவம். அடுத்து டாடாவில் மூத்த அதிகாரியாகப் பணியாற்றிக்கொண்டிருந்த வைத்யநாதன். மிகவும் வயதானவர். அடுத்து மணி. இவர்களைப்போன்ற மூத்தவர்களின் வசதிகளையும் பார்க்கவேண்டும் என்று நினைத்தேன். எல்லாவற்றுக்கும் மேலாக நவீன நாடக அறிஞர்களாகிய எங்களுக்கு விழா நடக்கும் நாட்களின் இரவுகளில் கோஷ்டி சேர்த்துக்கொண்டு மது அருந்தியே ஆகவேண்டும் என்கிற எழுதப்படாத விதியும் அப்போது இருந்தது. அந்தக்காரியத்துக்கான மங்கள லட்சணங்கள் எதுவும் அந்த அறையில் இல்லை. எனவே எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அந்த அறையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அந்த மேலாளரிடம் சொன்னேன். இயக்குநர்களுக்காகத் தனியாக அறைகள் வேறு விடுதியில் ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்றும் நான் போய் அங்கு தங்கிக்கொள்ளலாம் என்றும் மற்ற லௌகீக விஷயங்களை அந்த அறையிலும் வைத்துக்கொள்ளலாமே என்று சொன்னார். எனக்கு எங்களுடைய பட்டாளத்துடன்தான் தங்கவேண்டும். தனி அறை வேறு விடுதியில் வேண்டாம் என்றேன். இந்த விடுதியிலும் தனியறை என்று எனக்காக ஒதுக்கினால் எல்லோருக்கும் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதற்கான உத்தரவு தனக்கு இடப்படவில்லை என்றும் ஏதொன்றும் கோமலிடம் பேசிக்கொள்ளலாம் என்றுமலிó சொன்னார். நான் கோமலைத் தேடினேன். கிடைக்கவில்லை. அதற்குள் மணி என்னிடம், ""நீ கோமல் கிட்டே ஏதாவது துடுக்காப் பேசிடுவேடா. இப்போ பேசவேணாம். வேறு ஏதாவது யோசிக்கலாம்'' என்றார். எனக்கு உடனடியாக கோவையில் என் நண்பர் ஒருவரின் ஞாபகம் வந்தது. மிகவும் செல்வாக்கான மனிதர். பெரிய பணக்காரர். அவரைத் தொடர்பு கொண்டு உடனே பேசினேன். அவர் தொலைபேசியில் விடுதியின் மேலாளரைத் தொலைபேசியில் கூப்பிட்டு நான் எத்தனை அறைகள் கேட்கிறேனோ அவற்றை உடனே ஒதுக்கித் தருமாறு சொல்ல. எங்கள் அனைவருக்கும் சுமார் ஆறு தனி அறைகள் ஒதுக்கப்பட்டன. இப்போது இதுவல்ல விஷயம். எனக்குத் தெரிகிறது. கோமலை விட்டு எங்கோ நழுவுகிறேன். ஆனால் இந்த சம்பவத்தை இங்கு சொல்ல நினைத்தது கோமலின் மேன்மையை நினைத்துக் கொள்ளத்தான். இதையும் சொன்னால்தான் கோமலின் தாராள மனம் புரியும். அதை அடுத்த இதழில் சொல்கிறேன்.

கோமல் என்னும் மாமனிதர் பாகம்-1








ராகவன் தம்பி

கோமல் என்னும் மாமனிதர் பாகம்-1

பழகிய அனைவருக்கும் மிகவும் அற்புதமான ஒரு நண்பராகத் திகழ்ந்தவர் கோமல். நட்புக்கு அற்புதமான ஒரு மரியாதையையும் கௌரவத்தையும் தந்தவர் கோமல். ஏதோ ஒரு காரியத்துக்காக மட்டுமே நட்பினை வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் கொச்சைப் படுத்தாமல் நட்புக்கு ஒரு அழகு சேர்த்தவர் கோமல். இங்கு எழுதுவதற்காகவோ அல்லது வேறு ஏதாவது ஒரு சம்பிரதாயத்தின் பாற்பட்டோ இல்லாது கோமலைப் பற்றிய பல தனிப்பட்ட நினைவுகள் நெகிழ்ச்சியைத் தருவன. பல நேரங்களில் கண்ணீரை வரவழைப்பவை.

தில்லிக்கு வருவதற்கு முன்னர், இடை எழுபதுகளில் ஒரு குளிர்நாளில் கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் நாடகம் கிருஷ்ணகிரி அண்ணா கலையரங்கில் (இப்போது அது வேறு ஏதோ பெயரில் திரையரங்காக மாறி விட்டது). நாடகம் ரொம்பவும் புதுமையாக, என்னவென்று சொல்லத் தெரியாமல் ரொம்பவும் பிடித்துப்போனது. இறுதியில் கோமல் சுவாமிநாதனை மேடையில் அறிமுகப் படுத்தினார்கள். அருகில் சென்று வணக்கம் சொல்லவேண்டும் என்று ஆசையாக இருந்தது. இருவார தாடியுடன் அறிவுஜீவியாக மாற முயற்சித்துக் கொண்டிருந்த நண்பன் ஒருவன், ""அந்த ஆளு கம்யூனிஸ்டு, கிட்டப்போனா ஏதாவது கன்னாபின்னான்னு கேள்வி கேட்டு கடிச்சிடுவான். உனக்கு இதெல்லாம் தேவையா?'' என்று பயமுறுத்தவே எம்.ஜி.ஆர் படம் ஓடிக்கொண்டிருந்த தாரா டாக்கீûஸ நோக்கித் தலைதெறிக்க ஓடிப்போய்விட்டேன். மறுநாள் காலையில் ரவுண்டானாவில் அந்த நாடகத்தில் நடித்த வீராச்சாமி (""எனக்கொரு உம்ம தெரிஞ்சாகணுஞ்சாமி'') மற்றும் சில நடிகர்கள் மாம்பழம் விற்றுக்கொண்டிருந்த கவுண்டச்சியுடன் பேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். வீராச்சாமியிடம் மெல்லப் பேச்சைக் கொடுத்து, என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். கோமலைப் பார்க்க முடியாத என் குறையையும் விலாவரியாக அவரிடம் சொன்னேன். அவர் (பின்னாளில்) முதல் மரியாதை படத்தில் பேசிய அதே தொனியில், அதே குரலில், எந்தப் படுபாவிப்பய சொன்னான் தம்பி. அவரு எவ்வளவு தங்கமான ஆளு தெரியுமா?நீ வேணும்னா அவர் கிட்டே ஒரு தடவை பேசிப்பாரு. ஆயுசு பூரா உன்கிட்டே அவரு உசுரை விடுவாரு. பழகிப்பாரு. அவரைப் பத்தித் தெரியும்'' என்றார்.







வீராச்சாமி சொன்ன ""உம்ம'' யைத் தெரிந்து கொள்ளப் பல வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. தொண்ணூறுகளின் துவக்க வருடங்களில் ஒன்று. தில்லித் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலர் ராஜாமணி, கோமல் தில்லி வந்திருப்பதாகவும் அன்று மாலை கோமல் ஆசிரியராக சேர்ந்துள்ள சுபமங்களா பத்திரிகையின் அறிமுக விழா வித்தல்பாய் பட்டேல் ஹவுசில் இருப்பதாகவும் முடிந்தால் அந்த இதழ் பற்றி ஓரிரு வார்த்தைகள் பேசலாம் என்றும் சொன்னார். கையில் ஓரிரு சுபமங்களா இதழ்களையும் கொடுத்துச் சென்றார். ஒருவித அலட்சியத்துடன் படிக்கத் துவங்கினேன். கையில் எடுத்ததும் ஒரு விஷயம் புரிந்தது. எவ்விதக் குழுமனப்பான்மையும் இல்லாது சகல கோஷ்டிகளுக்கும் இடமளித்திருந்தார் கோமல். அதில் ஒன்றிரண்டு குப்பைகளும் இருந்தன. அவை அப்போது வெகுஜன இதழ்களில் மிகவும் பிரபலமாக இருந்த குப்பைகளின் எச்சங்கள். இது போதாதா? எனக்கு சிறுபத்திரிகைகளின் அறிமுகங்கள் கிடைத்து சில வருடங்கள் ஆகியிருந்த நேரம். சிறுபத்திரிகை எழுத்தாளப் பெருந்தகைகளின் சகவாசத்தால் அருளப்பட்ட ஞானஸ்நானம். நவீன நாடகப் புலவர்களுடன் சகவாசம். அதன் விளைவாகக் கொஞ்சம் பெரிய மனிதனாகக் காட்டிக் கொள்ளப் பிரத்யேகமாக வளர்க்கப்பட்ட தாடி. வாயில் எப்போதும் புகையும் சிகரெட். ஜோல்னாப்பை. பையில் கொஞ்சம் புத்தகங்கள். அறைகுறை ஞானம். கண்களில் எல்லாவற்றின் மீதும் ஒரு அலட்சியம். இவை அனைத்தையும் சுமந்து கொண்டு வித்தல் பாய் பட்டேல் ஹவுஸ் நோக்கிப் படையெடுத்தேன். பேசிய எல்லோரும் கோமலை வாழ்த்தினார்கள். அவருடைய முயற்சியை வாழ்த்தினார்கள். தில்லித் தமிழர்களின் வழக்கப்படித் தங்களைக் கொஞ்ச நேரம் புகழ்ந்து கொண்டு மிச்சம் கிடைத்த நேரத்தில் தங்களைப் போலவே கோமலும் இருப்பதற்கு ஆச்சரியம் தெரிவித்துக் கொண்டு அவரை வாழ்த்தினார்கள். அடுத்து என்முறை வந்தது. கோமலின் முயற்சியை ஏதோ போனால் போகட்டும் என்று பாராட்டி விட்டு சிறுபத்திரிகை வாசக மரபுப்படி கொஞ்சம் அவ நம்பிக்கையினையும் தெரிவித்து, பல நல்ல சிறுபத்திரிகை ஞானவான்கள் எழுத முனைந்திருக்கும் இந்தப் பத்திரிகையில் குப்பைகளையும் தெளிக்க கோமல் முன்வந்திருப்பதை கண்டித்து விட்டு அடுத்த சிகரெட் பிடிக்க வாசல் நோக்கி ஓடிப்போனேன். கோமல் தன் முறை வந்தபோது மிகவும் அற்புதமாக சிரித்துக்கொண்டே என் ஐயப்பாடுகளுக்கும் அச்சத்துக்கும் மிகத் தெளிவாக பதிலளித்தார். இதில் பயப்பட ஒன்றுமில்லையென்றும், தான் ஆசிரியப் பொறுப்பு ஏற்பதற்கு முன்பிருந்தே சில படைப்புக்கள் வந்து கொண்டிருப்பதால் அவற்றை உடனே நிறுத்துவது நாகரிகமாக இருக்காது என்பதால் இன்னும் சில இதழ்களில் அவை வரும் என்றும் உடனடியாக நிறுத்துவது கடினம் என்றும் சொன்னார். அந்தப் பெருந்தன்மையைப் புரிந்துகொள்ள பல வருடங்கள் பிடித்தன எனக்கு என்றுதான் சொல்லவேண்டும். அவர் செய்த காரியத்தின் மாண்பு புரிபட எனக்குப் பல வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.







கூட்டம் முடிந்ததும் அவர் என்னிடம் சற்று மனத்தாங்கலாக இருப்பார் என்று கற்பனை செய்து கொண்டு சற்று பாதுகாப்பான தூரத்தில் நின்று கொண்டு சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தேன். என்னைத் தேடிக்கொண்டு வந்தார் கோமல். கண்களில் எந்தக் குரோதமோ, விரோதமோ இல்லை. மிகவும் நட்புணர்வுடன் கைகளைப் பிடித்துக் கொண்டு ""நாடகம் எல்லாம் போடறீங்கன்னு கேள்விப்பட்டேன். சென்னை வர்றப்போ கண்டிப்பா சந்திக்கணும்'' என்று சொல்லி விட்டுச் சென்றார். அந்த ஆதுரம் மனதுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. கொஞ்சம் புடுங்கித்தனமாகப் பேசியிருக்க வேண்டாமோ என்று தோன்றியது. அந்த சிரிப்பு என் முகத்தின் முன்னே உறைந்து ரொம்ப நாட்களாக என்னைத் தொடர்ந்து கொண்டிருந்தது. சாதிப்பவர்கள் முகங்களில் மலரும் சிரிப்பு அது. சுபமங்களா இதழைத் தொடர்ச்சியாக என் முகவரிக்கு அனுப்ப ஆரம்பித்தார்.







என் இயக்கத்தில் சி.சு.செல்லப்பாவின் ""முறைப்பெண்'' நாடகம் தில்லியில் மேடையேறியது. வெங்கட்சாமிநாதன் எழுதிய விமரிசனத்தை பெரிய படங்களுடன் சுபமங்களாவில் பிரசுரித்திருந்தார் கோமல். சென்னைக்கு வேறு வேலையாக சென்றபோது கோமலையும் மற்ற நண்பர்களையும் பார்க்க சுபமங்களா அலுவலகம் சென்றேன். ""எல்லாரையும் கடுமையாக விமர்சிக்கிற வெங்கட்சாமிநாதனே உங்க நாடகத்தைப் பத்தி நல்லா எழுதியிருக்கார். நீங்க ரொம்ப குடுத்து வச்சவர். அப்போ அதுலே கண்டிப்பா விஷயம் இருக்கணும். மதுரைக்குப் போய் செல்லப்பாவைப் பார்ப்பீர்களா?'' என்று கேட்டார். ""அவர் கோபிச்சுக்குவார். என் நாடகத்தை நீ கண்டிப்பா கெடுத்து இருப்பே என்று ஏற்கனவே என்னிடம் ஒருமுறை சொன்னார். வெங்கட்சாமிநாதனையும் திட்டுகிறவர் அவர். எங்கேயோ போகிற எதையோ எடுத்து எங்கேயோ விட்டுக்கொள்ளும் தைரியம் இப்போதைக்கு எனக்கு இல்லை'' என்று சொன்னேன். ""அதெல்லாம் இல்லை. நீங்க கண்டிப்பா செல்லப்பாவை சந்திக்கணும். நானும் அவரிடம் சொல்றேன். முறைப்பெண் நாடகம் கண்டிப்பாகத் தமிழ்நாட்டுக்கு வரணும்'' என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். சுபமங்களாவில் அவர் தொடர்ச்சியாக எழுதி வந்த ""பறந்து போன பக்கங்கள்'' பகுதியிலும் என்னைப் பற்றியும் முறைப்பெண் நாடகத்தைப் பற்றியும் எழுதினார். தொலைபேசியில் பேசும்போதும் அடிக்கடி ""உங்கள் நாடகத்தை தமிழ்நாட்டுக்கு எப்படியாவது கொண்டு வரணும்'' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.

கோமலின் தீவிரம் மதுரை நிஜ நாடக விழாவில் கலந்து கொள்ள மு.ராமசாமி அனுப்பிய அழைப்பில் தெரிந்தது. மு.ராமசாமியிடமும் பார்க்கும் நண்பர்கள் எல்லோரிடமும் முறைப்பெண் நாடகத்தைப் பற்றியும் என்னைப் பற்றியும் அபாரமான நம்பிக்கையினைத் தெரிவித்திருக்கிறார் கோமல் என்று பின்னாளில் தெரிந்து கொண்டேன்.







அது மட்டுமல்ல. யதார்த்தா நாடகக் குழு மதுரையில் சென்று இறங்கியதுமே, ராஜா அண்ணாமலை மன்றத்தில் எங்களுக்காகக் காத்திருந்தார் கோமல். அவர் என்னைக் கேட்ட முதல் கேள்வி þ செல்லப்பா மதுரையில்தான் இருக்கார். அவரை நாடகத்துக்கு வரச்சொல்லி கடிதம் போட்டீங்களா? என்றார். நான் போடவில்லை என்று சொன்னேன். ""நல்லா இருக்காது. நீங்க அவரைக் கட்டாயம் நாடகத்துக்குக் கூப்பிடணும். அவரும் சந்தோஷப்படுவார்'' என்று வற்புறுத்தினார் கோமல். மு.ராமசாமி, விழாவுக்காக ஓடியாடி உழைத்துக் கொண்டிருந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர் தோழரை அனுப்பி செல்லப்பாவின் முகவரியைக் கொடுத்து மாலையில் நடைபெறும் நாடகத்துக்குக் கலந்து கொள்ள அவரை அதே ஆட்டோவில் அழைத்து வரச்சொன்னார். அந்தத் தோழர் போன வேகத்தில் பேயறைந்தது போலத் திரும்பி வந்தார். ""என்னங்க இது, ஒரு கெட்ட கிழவர் கிட்டே போய் என்னை அனுப்பிச்சீட்டீங்களே. அவர் ஆளை உண்டு இல்லைன்னு பண்ணிட்டார். எனக்கு என்ன வண்டி எல்லாம் அனுப்பி தாஜா பிடிக்கிறானா? அவன் யார் என்னைக் கூப்பிடுவதற்கு? நான் அங்கெல்லாம் வரமாட்டேன் என்று போய்ச் சொல்லு'' என்று கோபித்துக் கொண்டதாகச் சொல்லி வருத்தப்பட்டார். அந்தத் தோழரின் முகத்தில் ""எங்கே போய் என்னை மாட்டிவிட்டாய்?'' என்கிற பாவனை ரொம்ப நேரம் இருந்தது. ""என்ன செல்லப்பா வரலையா?'' என்று கேட்டார் கோமல். இல்லையென்றும், நடந்த கதையையும் சொன்னேன். விருட்டென்று வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு செல்லப்பாவைப் பார்க்கக் கிளம்பினார் கோமல். ஒரு பலியாட்டை பார்ப்பது போல அவரைப் பரிதாபமாகப் பார்த்தோம். அதே ஆட்டோ தோழரை தாஜா பிடித்து தைரியம் சொல்லி அவருடன் கிளம்பினார் கோமல். சிவதாணு போன்ற மூத்த கலைஞர்களும் அவருக்காகக் கொஞ்சம் பரிதாபப்பட்டார்கள். ஆனால் போன வேகத்தில் திரும்பி வந்தார் கோமல். உடன் குழந்தை போல் சிணுங்கிக்கொண்டே செல்லப்பா. செல்லப்பா நேராக என்னிடம் வந்து ""என் நாடகத்தை நீ எப்படிக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி இருக்கேன்னு பார்க்கத்தான் வந்திருக்கேன். கோமல் கூப்பிட்டாருன்னு வரலை'' என்று சொன்னார். (இப்போது கோமலை விட்டு செல்லப்பாவுடன் கதையை நகர்த்திப்போகிற ஆபத்து இருக்கிறது. என் பிறவிக்குணம் இது. ஜாக்கிரதையாகத் தான் இருக்கிறேன். செல்லப்பா கதையை வேறொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்.






Friday, June 22, 2007

கொடுமுடி தந்த கோகிலம் - கே.பி.சுந்தராம்பாள்

ராகவன் தம்பி

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் தடம் பதித்த தமிழர்கள் தொடர் சொற்பொழிவுக் கூட்டத்தில் ஆற்றிய உரை

அனைவருக்கும் வணக்கம்.

உலக அரங்கில் பொதுவாக ஒரு குற்றச்சாட்டு மிகவும் வலுவாக நிலவி வருகிறது. அது இந்தியர்களுக்கு வரலாற்றுணர்வு மிகவும் குறைவு என்பது. அதிலும் தமிழர்களுக்கு எல்லோருக்கும் உரியதற்கு மேல் மிகப் பெரும் உண்டு. தமிழர்களுக்கு மிகப்பெரிய அளவிலான ஞாபகசக்திக் குறைச்சலும் தனிக்குணமாக அமைந்தது. அதன் நேரடி நிரூபணம் தேர்தல் நேரங்களில் நிகழும் அதிரடியான உட்டாலங்கடி அணிமாற்றங்கள். தானைத்தலைவர் வேறு ஏதாவதாக ஆகிவிடுவார். அன்பு சகோதரி ராவணணின் சகோதரியாக மாறிவிடுவார். சுருக்கமாக நேற்றைய சரித்திரம் பற்றிய பிரக்ஞை இன்று நமக்கு இருப்பதில்லை.

விமரிசகர் வெங்கட்சாமிநாதன் சொல்வது போல, பிராபல்யத்தின் முன், அதிகாரத்தின் முன், வாழ்க்கை மதிப்புக்களை நாம் அறவே மறந்து விடுகிறோம். ஏதோ ஒரு திறமையின் மூலம் (அத்திறமை அத்துறை சார்ந்ததாக இல்லாமலேயே இருக்கலாம்) ஒரு துறையில் ஒருவர் பிராபல்யமும் பணபலமும் பெற்று விட்டால் அவர் அத்துறைக்கு “சேவை செய்தவராகக் கொண்டாடப் படுகிறார். அவர் சமூகத்துக்கு அத்துறைக்கு கொடுத்ததுதான் என்ன என்று நாம் யோசிப்பதில்லை. இன்றைய சினிமா மற்றும் அரசியல் துறைகளில் பெரும் சக்திகளாகக் காணப்படுபவர்கள் பெரும்பாலோர் நாம் மதிக்கத் தேவையில்லாதவர்கள். வெறும் பிராபல்யமும் ரசிகக் கூட்டமும் ஒருவருடைய கலை மேதைமையை நிர்ணயிப்பதில்லை என்கிற உண்மையை நாம் பல வருடங்களாக ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதம் பிடித்து வருகிறோம்.

என்னுடைய நேரடிப் பார்வையில் நிகழ்ந்த ஒரு நகைச்சுவைக் காட்சியை இங்கு குறிப்பிட்டால் தவறாகாது என்று நினைக்கிறேன். திரைப்படங்களில் ஆபாசமான, இரட்டை அர்த்தம் தொனிக்கும் வரிகளைப் பாடி திரைப்படங்களில் பிராபல்யம் அடைந்த ஒரு பாடகியை ஒரு நிகழ்ச்சியில் அந்தப் பெண் தான் படித்த பள்ளிக்குப் பெருமை சேர்த்திருப்பதாக மேடையில் மிகவும் பெருமிதத்துடன் அறிவிப்பு செய்தார்கள் சில பள்ளி ஆசிரியைகள். இது மிகவும் வேதனை கலந்த நகைச்சுவையாக அன்று எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது.

எனவே தமிழ்ச் சமூகத்தில், பிராபல்யம் - அதைத் தொடர்ந்த பலத்தின் முன்னால் மேடையேற்றும் நகைச்சுவைக்காட்சிகள் மிகவும் அதிகம். இத்தனை கதையையும் ஏன் சொல்கிறேன் என்றால் தமிழின் அரசியல் மற்றும் திரையுலகின் பிரபலங்களில் பெரும்பாலோர் நாம் மதிக்கத் தேவையில்லாதவர்கள். அவர்கள் தம்மை வளர்த்துக் கொண்டவர்கள். இதற்கு நேர் எதிரான குணம் கொண்ட சிலர் நேற்றைய வரலாற்றில் இருந்தார்கள். அவர்களுடைய திறன் அவர்கள் கலையின் மீதும், மொழியின் மீதும், தேசத்தின் மீதும் கொண்டிருந்த அப்பழுக்கில்லாத பற்று அவர்கள் வாழ்ந்த துறைக்கு வளம் தந்தது. அவர்கள் பதித்த தடங்கள் என்றும் நம் நினைவில் நீங்காமல் நிற்க வேண்டியவை. இந்தத் தடங்கள் நம் வரும் தலைமுறைக்கு நாம் சேமித்து வைக்கும் ஒரு நிதியாகப் பாவிக்க வேண்டியவை.

நேற்றைய வரலாற்றில் செவ்வனே வாழ்ந்து தன்னுடைய தனிப்பட்ட திறனாலும், தேசப்பற்றினாலும் கலையின் மீது கொண்ட காதலினாலும் மிகவும் தனித்த தடங்களைப் பதித்தவர் கே.பி.சுந்தராம்பாள் அம்மையார். கொங்குநாடு தமிழுக்குப் பல தங்கங்களைத் தந்துள்ளது. சி.விஜயராகவாச்சாரியார், பி.சுப்பராயன், டி.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார் (இவர் பெண் கல்வியை முதன்மைப் படுத்தியவர்), நாமக்கல் கவிஞர், பெரியார் ஈ.வெ.ரா, அய்யாமுத்து கவுண்டர், கொடுமுடி கே.பி.சுந்தராம்பாள் போன்ற பல தங்கங்களை நமக்குக் கொங்கு தந்துள்ளது. கரூருக்கு அருகில் உள்ள பாண்டி கொடுமுடியில் ஒரு சிறு குடிலில் அக்டோபர் 11, 1908 ல் பிறந்தவர் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள். நாவுக்கரசராலும், ஞானசம்பந்தராலும் பாடல் பெற்ற ஸ்தலம் கொடுமுடி. சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு ஒரு திருப்பதிகம் அருளியிருக்கிறார். இவருடைய தந்தையாரைப் பற்றிய குறிப்புக்கள் எங்கும் கிடைக்கவில்லை. மிகவும் ஏழைக்குடும்பம். ஐந்து வயது சுந்தராம்பாளை அழைத்துக் கொண்டு அவருடைய தாயர் பாலாம்பாள் கரூரில் குடியேறினார். குரலும், சங்கீத ஞானமும் சுந்தராம்பாளுக்கு இயற்கை அளித்த கொடை. முறையான பாடாந்திரங்கள் ஏதுமின்றி, கேள்வி ஞானத்திலேயே பாட்டுத்திறனை பாங்கு படுத்திக் கொண்டார். ஏற்கனவே சொன்னது போல மிக வறிய குடும்பம். உடல் நலம் குறைந்த தாயார். எட்டு வயதுச்சிறுமியான சுந்தராம்பாள், தன் தாயாருக்கும் பணிவிடைகள் செய்து, கரூரைக் கடந்து செல்லும் ரயில் வண்டிகளில் ஏறி தன் இனிய குரலால் பாடல்கள் பாடி பயணிகள் பாராட்டி அளிக்கும் தொகையினைக் கொண்டு அந்தக் குடும்பம் வாழ்ந்திருக்கிறது. பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில், பேசும்படம் பத்திரிகைக்கு எழுபதுகளில் அளித்த ஒரு பேட்டியில், ரயில் பயணத்துடன் என் இசைப்பயணம் தொடர்ந்திருக்கிறது. மிகக்கடுமையாக இரைச்சலிடும் ரயில் வண்டியில் பல நாட்கள், மாதங்கள், வருடங்கள் பாடியதால் அந்த இரைச்சலுக்கு சவால் விட்டு என் குரல் வளர்ந்திருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அதேபோல, எந்த குருவிடமும் சென்று பாட்டு கற்றுக்கொள்ளும் அளவு வசதியில்லாத நிலை. எனவே கொடுமுடியை சுற்றி நடக்கும் நாடகங்களும் அவற்றில் பாடி நடித்த நடிகைகளும், நடிகர்களும் அவருக்கு மானசீக குருவாக அமைந்திருக்கின்றனர்.

எந்தப் பாடலைக் கேட்டாலும் அது எந்த சுருதியில் அமைந்திருந்தாலும் ராகமும் சுருதியும் வழுவாது அப்படியே பாடிக் காட்டும் வல்லமை பெற்று இருந்திருக்கிறார் கேபிஎஸ் அவர்கள். அவருடைய இசைவாழ்க்கை துவங்கிய காலத்தில் பாட்டுத்தான் நாடகம். பாடடை வைத்துக் கொண்டு என் பெயர் கொடுத்தாலுலிó பாட்டு ஒன்றுதான் எஞ்சி நிற்கும். நாடக மேடையை இசை வல்லுநர்கள்தான் ஆக்கிரமித்து இருந்திருக்கின்றனர். எனவே நாடகப் பார்வையாளர்களுக்குப் பாட்டுத்தான் நாடகமே. பின்னாளில் திரைப்படங்களிலும் இது தொடர்ந்திருக்கிறது.

மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், முசிரி சுப்பிரமணிய அய்யர், ஜி.என்.பாலசுப்பிரமணியம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, என்.சி.வசந்தகோகிலம், எம்.கே.தியாகராஜபாகவதர், சின்னப்பா, ஹொன்னப்பா பாகவதர், கொத்தமங்கலம் சீனு போன்ற சிறந்த பாடகர்கள் திரைப்படங்களிலும் ஜொலித்தார்கள். 10 வயது சுந்தராம்பாள் ரயிலில் வழக்கம் போல பாடிச் சென்று கொண்டிருக்கிறார். அந்த ரயில் வண்டியில் அன்று சுந்தராம்பாளின் விதியும் சேர்ந்து பயணித்திருக்கிறது. அந்தக்கால நாடக நடிகரும், தயாரிப்பாளருமான நடேச அய்யர் அந்த வண்டியின் ஒரு பெட்டியில் பயணித்திருக்கிறார். மிகவும் அற்புதமாகப் பாடிச் செல்லும் ஒரு பெண். நிரவல்களை அநாயாசமாக அள்ளி வீசுகிறாள். கமகங்கள் அவள் காலடியில் சேவகம் செய்யக் காத்து உடன் பயணித்து வருகிறது. பாடிச் செல்லும் சுந்தராம்பாளைப் பின் தொடர்ந்து சென்று கேட்கிறார் அய்யர்,

"நான் உனக்கு வழி காட்டுகிறேன். என்னுடன் வருவாயா?''

எவ்விதத் தயக்கமுமின்றி அந்தச் சிறுபெண் தலையாட்டுகிறது. தமிழிசை வரலாற்றில் ஒரு புதிய தடம் அந்த ஓடும் புகை வண்டியில் பிறக்கிறது. தன்னுடைய தாயாருடன் மீண்டும் நடேச அய்யரை சந்திக்கிறாள் அப்பெண். நடேச அய்யர் அந்தப் பெண்ணையும் அவள் தாயார் பாலாம்பாளையும் கரூரில் மூத்த போலீஸ் அதிகாரியாக இருந்த கிருஷ்ணசாமி அய்யரிடம் அழைத்துப் போகிறார். கிருஷ்ணசாமி அய்யர் மிகவும் வித்தியாசமான ஒரு போலீஸ் அதிகாரி. கலைகளை நேசித்தவர். நாடகங்களை ஆதரித்தவர். இசையை சுவாசித்தவர். அவரும் அந்தப் பாடச் சொல்லிக் கேட்கிறார். அந்தப் பெண்ணிடம் ஒளிந்துள்ள திறமை அவரை வியப்படைய வைக்கிறது. உடனே கரூரில் முகாமிட்டிருந்த பி.எஸ்.வேலு நாயரின் நாடகக் குழுவில் கே.பி.சுந்தராம்பாளை சேர்த்துவிடுகிறார்.

இப்படியாக சுந்தராம்பாளின் நாடக மேடைப்பிரவேசம் 1917ல் வேலு நாயரின் குழுவினர் நடத்தி வந்த நல்லதங்காள் நாடகத்தில் ஏழு பிள்ளைகளில் ஏழாவது குழந்தையாக வேடமேற்றுத் தொடங்கியது. அதன் பிறகு அவருடைய கலைப்பயணம் பல சிகரங்களைத் தொட்டுச் சென்றது. இவருடைய பாடல்களைக் கேட்டு ஆண்டிப்பட்டி ஜமீந்தார் 9 பவுன் சங்கிலியைப் பரிசளித்தார். இவர் மேலும் இசையை மெருகேற்றிக்கொள்ள பொருளுதவியும் வழங்க இசைந்தார்.மிக அநாயசமான மேல் ஸ்தாயி சஞ்சாரம். பாசாங்குகள் இல்லாது வெளிப்படும் உணர்ச்சிகள். மிகத் தெளிவான உச்சரிப்பு. இசைத்தமிழை அழகுப் பதுமைகள் சிங்காரித்த சிங்காதனத்தில் ஏற்றி அழகு பார்த்தார் கே.பி.எஸ். கே.பி.எஸ்ஸின் இசை ஜாலம் நாடக மேடையைத் தன் வசம் வைத்து பல ரசிர்களை வசீகரித்து வந்தது. ஏற்கனவே ஓரிடத்தில் குறிப்பிடப் பட்டிருப்பதுபோல இசைக்கலைஞர்கள் நாடகமேடைகளை ஆண்ட நேரமது. கன்னையா கம்பெனியின் எஸ்.ஜி.கிட்டப்பா, எஸ்.ஜி.சுப்பையா பாகவதர், தேவுடு அய்யர், காதர் பாட்சா, ரத்னாபாய், அனந்தநாராயணன், செல்லப்பா, பாஸ்கரதாஸ், ராவ் பகதூர் ராமானுஜாச்சாரியார், டாக்டர் நடேசன், டாக்டர் ஸ்ரீனிவாசராகவன், சுந்தரராஜன், ஆச்சார்யா, கிருஷ்ணசாமி அய்யங்கார் போன்றோர் தமிழ் நாடக மேடையின் சக்ரவர்த்திகளாகவும் முடிசூடா மன்னர்களாகவும் பட்டத்து அரசிகளாகவும் உலா வந்த நேரம். சுந்தராம்பாளின் புகழ் பல மேடைகளில் பல நகரங்களில் கிராமங்களில் பரவியது. கடல் கடந்தும் அவருடைய நாடகங்கள் பேசப்பட்டன.

அதே நேரத்தில் நாடக மேடைகளின் முடிசூடா மன்னராக எஸ்.ஜி.கிட்டப்பா தன்னுடைய அற்புதமான குரல் வளமையினாலும் இனிமையினாலும் அனைவரையும் கிறங்கடித்துக் கொண்டிருந்தார். அவரும் காதர் பாட்சா என்னும் ஆர்மோனியக் கலைஞரும் சேர்ந்து வாசித்துப் பாடும் இனிமையைக் கேட்க பல கிராமங்களில் இருந்து வண்டிகளைக் கட்டிக்கொண்டு ரசிகர்கள் வருவார்களாம். எஸ்.ஜி.கிட்டப்பாவுக்கு சுந்தராம்பாளின் குரல் வளமையைப் பற்றிய செய்தி செல்கிறது. அவரை சந்திக்க மிகவும் ஆவல் கொள்கிறார் கிட்டப்பா. அந்த நேரத்தில் இலங்கையிலுள்ள கொழும்புவில் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார் சுந்தராம்பாள். அவருடைய நடிப்பையும் பாடலையும் கேட்க கொழும்பு விரைகிறார் கிட்டப்பா. அந்த சந்திப்பு காதலாக மலர்கிறது. இரு காந்தர்வர்களும் மணவாழ்வில் இணைந்தனர்.

கிட்டப்பாþசுந்தராம்பாள் நாடகங்களுக்கு மவுசு இன்னும் அதிகமாகக் கூடியது. நல்லதங்காள், கண்டிராஜா, செüந்தரி போன்ற ஸ்பெஷல் நாடகங்கள் சக்கைப் போடு போட்டன. கே.பி.எஸ்.தாணு அம்மாள் குழுவிலும் இருவரும் இணைந்து ஸ்பெஷல் நாடகங்கள் மேடையேற்றினர். கிட்டப்பாþசுந்தராம்பாள் இருவரும் ராகமாலிகையில் வல்லவர்கள்.

ஸ்ரீ வள்ளி திருமணத்தில் அவர்களுடைய ராகமாலிகையில் அமைந்த தர்க்கப்பாடல்கள் மிகவும் பிரசித்தம். (கிட்டத்தட்ட உருது கவாலி போல இருக்கும். இப்போதைக்கு வழக்கத்தில் இல்லை) (கோடையிலே இளைப்பாறி...) 

சுந்தராம்பாளைப் பற்றிப் பேசும் இந்த மேடையில் கிட்டப்பாவைப் பற்றி சொல்லாமல் போவது மிகப்பெரிய பாவமாகும் என்று நினைக்கிறேன்.

நான் ஒன்றும் சொல்லவில்லை. அக்ரகாரத்தின் அதிசயம் என்று அண்ணாவால் புகழப்பட்ட வ.ரா. என்று அழைக்கப்படும் வ.ராமசாமியின் வார்த்தைகளிலேயே சொல்கிறேன். ""நூறு ரூபாய் கொடுத்து குழந்தைகளுக்கு சங்கீதம் பயிற்றுவித்தாலும் முழுசாக ஒரு கீர்த்தனையாவது உருப்படியாக அவர்களுக்குப் பாடவமாவதில்லை. ஆனால் பத்து மைல் நடந்து இரண்டணா டிக்கெட் வாங்கி தரையில் உட்கார்ந்து கிட்டப்பாவின் நாடகம் பார்த்த மாட்டுக்காரப் பையன்கள் அழகாகப் பாடத் துவங்கிய விந்தையைக் கண்டு நான் ஆனந்தப்பட்டிருக்கிறேன்.(கலையும் வாழ்க்கையும்)கிட்டப்பா தோன்றும் வரையில் பாமரர்களுக்கு சங்கீதம் தேவையில்லை என்பது போல வித்வான்கள் நடந்து வந்தார்கள். ஆனால் பாமரனுக்கும் ரசிகத் தன்மை உண்டு என்று நிரந்தர உண்மையை நிலைநாட்டிய பெருமை கிட்டப்பாவை சேரும்.இதுவும் வ.ரா.கிட்டப்பா பிறந்தது 1906. சொல்லப்போனால் இந்த ஆண்டு அவருக்கான நூற்றாண்டு. இதை தமிழ் அமைப்புக்கள் எத்தனை விமர்சையாககக் கொண்டாடி வருகிறார்கள் என்பதை நாம் பார்த்து வருகிறோம் இல்லையா.


இப்போது என்னுடைய இந்த உரையின் துவக்கப் பத்திகளைப் பற்றி உங்கள் நினைவுகளை பின்னோக்கிக் கொண்டு வாருங்கள். கிட்டப்பா சுந்தராம்பாள் ஜோடி மிகவும் பிரசித்தம் கிட்டப்பா ஏற்கனவே மணம் முடித்தவர். ஆயினும் அவருக்கு உற்ற மனைவியாக சுந்தராம்பாள் அவருடைய மற்றொரு குடும்பத்தையும் உயிராக நேசித்தார். இடையறாத குடிப்பழக்கம் கிட்டப்பாவின் உடல்நிலையை பாதித்துக் கொண்டிருந்தது. சில நேரங்களில் சுந்தராம்பாள் மேல் காட்டிய ஆதிக்கபூர்வமான உறவு இருவருக்கும் இடையில் சில விரிசல்களை அடிக்கடி ஏற்படுத்தியது. சுந்தராம்பாள் அம்மையார் கிட்டப்பாவுடன் அடிக்கடி பிணக்கு ஏற்பட்டு கரூர் சென்று விடுவார். நாங்கள் கோவை செல்லும் வழியில் அம்மையாரை அவருடைய கரூர் வீட்டில் சந்தித்து வருவோம்.. எனக்கு அவர் ஒரு தாயின் பரிவுன்புடன் பல தனிப்பாடல்களை கற்றுத் தந்திருக்கிறார், என்று அவ்வை தி.க.சண்முகம் தன்னுடைய மேடை நாடக நினைவுகள் நூலில் குறிப்பிட்டு இருக்கிறார்.


கிட்டப்பா சுந்தராம்பாள் மணவாழ்வு சில வருடங்களே நீடித்தது. 1932ல் கிட்டப்பா நோய்வாய்ப்பட்டு மிகச் சிறிய வயதிலேயே இறந்தார். கிட்டப்பா இறந்த செய்தி கேள்விப்பட்டவுடன் தன்னுடைய அன்புக்கணவர் கடனாளியாகப் போகக்கூடாது என்று உடனடியாக 18000 ரூபாய் எடுத்துச் சென்று அவருடைய வீட்டுக்கு ஓடியவர் கே.பி.எஸ். கிட்டப்பா மறைந்தபோது சுந்தராம்பாளுக்கு வயது 27. .அன்றிலிருந்து வெண்ணிற ஆடை உடுத்தி, வெண்ணீறு அணிந்து இளமையைத் துறந்து முதுமையைப் பூண்ட இன்னொரு காரைக்காலம்மையாரை இருபதாம் நூற்றாண்டு கண்டது. கிட்டப்பா ஒரு பிராமணர். அவரை சுட்டெரித்தார்கள். அவருக்கென நினைவாலயம் இல்லை. ஆனால் தன்னையும் தன்னுடைய வெண்கலக் குரலையும் கிட்டப்பாவுக்கு எழுப்பப்பட்ட நடமாடும் நினைவாலயமாக மாற்றிக்கொண்டார் சுந்தராம்பாள். அந்த நினைவாலயத்தின் ஆலய மணியாகத் தன் குரலை மாற்றினார். இறைப்பணி மற்றும் தேசப்பணிக்கு மட்டுமே அக்குரலை அர்ப்பணம் செய்தார். வெண்கலக்குரலின் மகிமையில் நாடகம் மற்றும் திரையிசை பக்தி இசையாக மலர்ந்தது. கிட்டப்பாவின் மறைவுக்குப் பின் எந்த நாடகத்திலும் பங்கேற்காமல் ஒரு துறவு நிலையைப் பூண்டார் சுந்தராம்பாள். ஆனால் அவருக்குள் ஒரு தேசிய உணர்ச்சி எப்போதும் பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருந்தது. மகாத்மா காந்தியும் எஸ்.சத்தியமூர்த்தியும் அவருக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக விளங்கினார்கள்.


அந்நாளில் தமிழ்நாடகங்கள் தேசிய உணர்வைக் கொழுந்து விட்டெரியச் செய்யும் களங்களாக விளங்கின. கலைஞர்கள் அன்று சமூகத்தினரால் மிகவும் மோசமான நிலையில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர். நகரின் முக்கியப்பகுதிகளில் அவர்களுக்கு வீடு கிடைக்காது. திருமணம் செய்து கொள்ள பெண்கள் கொடுக்க மாட்டார்கள். ஆனால் அவர்களின் அரசியல் ஈடுபாடு அவர்களுக்கு மிகப்பெரிய அந்தஸ்தை வழங்கியது. எனவே கலை மேடைகள் எல்லாம் அரசியல் மேடைகளாக வேஷம் கட்டிக்கொள்ளத் துவங்கின. சத்தியமூர்ததி போன்ற தலைவர்கள் கலைஞர்களை அரசியல் வழியில் நெறிப்படுத்தி வந்தனர். சதாவதானி கிருஷ்ணசாமிப் பாவலர், விசுவநாததாஸ், மதுரை பாஸ்கரதாஸ், எம்.ஆர்.கமலவேணி, கே.பி.ஜானகி அம்மாள், எம்.எஸ்.விஜயாள், எம்.என்.ராசம்மா, எம்.சாரதாம்பாள் போன்ற கலைஞர்கள் நேரிடையாக சுதந்திரப் பிரச்சாரத்துக்கு மேடைகளைப் பயன்படுத்திக் கொண்டனர். 1931ல் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் காளிதாஸ். இது புராணப்படமாக இருந்தாலும் பல இடங்களில் காந்தியக் கொள்கை மற்றும் ராட்டை பற்றி தெளிவாக பேசியது. சுந்தராம்பாள் நடித்த மணிமேகலை நாடகத்தில், கதைப்படி ஒரு கட்டத்தில் சோழ மன்னனைக் கைது செய்யப்படும் மணிமேகலை சிறையில் அடைக்கப்படுகிறான். தேசபக்தர்கள் சிறை வைக்கப்பட்ட நேரம். சுந்தராம்பாள் பாடினார்


சிறைச்சாலை இதென்ன செய்யும்
சரீராபிமானம் இலா
ஞான தீரரை
சிறைச்சாலை என்ன செய்யும்?


இந்தச் சூழலில், சத்தியமூர்த்தியின் வற்புறுத்தலின் பேரில் சுதந்திரப் போரில் கலந்து கொண்டார் கே.பி.எஸ். தமிழ் நாடகங்கள் அவருடைய சுதந்திரப் போர்க்களங்களாக மாறின. 1937ம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தன் பிரச்சாரத்தைத் துவக்கினார் கே.பி.எஸ்.
1934ல் திருநெல்வேலியில் நடந்த டிஸ்ட்ரிக்ட் போர்டு தேர்தலில் கோதைநாயகியம்மாள் என்னும் வேட்பாளருக்கு ஆதரவாக அவர் மிக நீண்ட உரையாற்றியது பல இடங்கில் பதிவாகியுள்ளது. அந்தத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி மாபெரும் தோல்வியத் தழுவியது. கிட்டப்பா மறைவுக்குப் பின் வேறு எந்த ஆண் நடிகருடன் நடிப்பதில்லை என்னும் கொள்கையில் மிகவும் தீவிரமாக இருந்த சுந்தராம்பாளை சத்தியமூர்த்தி மனது மாற வைத்தார். ஜெமினி நிறுவனத்துக்காக 1935ல் நந்தனார் திரைப்படம் எம்.எல்.டான்டன் இயக்கத்தில் தயாரிக்க முடிவு செய்தது. தன்னைத் திரைப்படத்தில் நடிக்க வைக்க யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்று தன்னுடைய சம்பளத்தை ஒரு லட்சமாக உயர்த்தினார் அவர். அந்தக் காலத்தில் யாராலும் கற்பனை செய்து கூடப்பார்க்க முடியாத சம்பளம் அது. அதையும் தர வைத்து சுந்தராம்பாளை நடிக்க சம்மதிக்க வைத்தார். இதுபற்றி ஓரிடத்தில் சுந்தராம்பாள், ""நந்தனார் திரைப்படத்தில் ஜோடியாக நடிக்க ஆண் நடிகர் தேவைப்படாததாலும், காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி சிபாரிசு செய்ததாலும் தீண்டாமை எதிர்ப்பு பிரச்சாரத்துக்குப் பயன்படும் என்பதாலும் நந்தனார் படத்தில் நடிக்க சம்மதித்தேன்'' என்று கூறியிருக்கிறார். 1935ல் வெளியான அந்தப்படத்தில் மகாராஜபுரம் விசுவநாத அய்யர் வேதியராக நடித்தார். 

அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பல கிராமபோன் ரிகார்டுகளை வழங்கினார் கே.பி.எஸ். கட்சிக்கும் எக்கச்சக்கமான தொகையை நிதியாக வழங்கினார். ஒரு முறை சத்தியமூர்த்தி அவர்கள் காந்தியுடன் காரில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். கரூர் அருகில் அவர்கள் பயணித்த கார் பழுதடைந்தது. மகாத்மாவை அழைத்துக் கொண்டு சுந்தராம்பாள் வீட்டுக்கு வருகிறார் சத்தியமூர்த்தி. அம்மையார் காந்தியாருக்கு தங்கத்தட்டில் உணவு பறிமானார். காந்தியார் விளையாட்டாக வெறும் சாப்பாடு மட்டும்தானா? கட்சிக்கு ஒன்றும் நிதி கிடையாதா? என்று சிரித்துக்கொண்டே கேட்க, அந்த தங்கத்தட்டை உடனடியாக ஏலம் விட்டு கிடைத்த பணத்தை காந்தியார் வசம் நிதியாக ஒப்படைத்தார் அம்மையார். ஓரிடத்தில் மகாத்மா இவரை அன்புள்ள சகோதரி என்று விளித்து கடிதம் எழுதியிருக்கிறார். அந்தப் பெருமை கிடைக்கப்பெற்ற தமிழகத்தின் ஒரே பெண்மணி சுந்தராம்பாள் அம்மையார்தான்.



கலைஞரை மகனே என்று அழைத்தது. பிறகு தொடர்ச்சியாக ஊர் ஊராக காங்கிரஸ் மற்றும் கதர்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அம்மையார். கதராடையைத் தனக்கு நிரந்தரமாக்கிக்கொண்டார். தானே நூற்று நெய்த துணியை விற்பனை செய்தார். ஊர் ஊராக தேசபக்திப் பாடல்களை முழங்கினார். 1951ல் தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அம்மையார். இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு கலைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற மேலவைக்கு உறுப்பினராவது அதுவே முதல் முறையாகும். இந்தியாவிலேயே எந்தக் கலைஞருக்கும் கிட்டாத ஒரு முதல் பெருமை அம்மையாருக்குக் கிட்டியது.


1940ல் மணிமேகலை. 1953ல் ஜெமினியின் அவ்வையார் படத்தில் நடித்தார். சுமார் ஏழு ஆண்டுகள் தயாரிப்பில் இருந்த படம் அது. அதில் இருபது பாடல்களைப் பாடி நடித்தார். பிறகு பூம்புகார்.  பிறகு அவர் நடித்த திருவிளையாடல், கந்தன் கருணை, மகாகவி காளிதாஸ், உயிர்மேல் ஆசை, துணைவன், சக்தி லீலை, காரைக்கால் அம்மையார், திருமலை தெய்வம் போன்ற படங்கள். இப்படங்களில் அவர் பாடிய எல்லாப் பாடல்களுமே முத்துக்கள்தான். ஆனால் குறிப்பிட்ட ஒரு பாடலை இங்கு சொல்லியே ஆகவேண்டும் என்று நினைக்கிறேன். திருவிளையாடல் (1965) படத்தில் அவர் பாடிய பழம் நீ அப்பா என்ற பாடலை ஒலிப்பதிவு செய்த ஒலிப்பதிவு மேதை ரங்கசாமி அவர்கள் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் þ அம்மையார் மேல் ஸ்தாயியில் பாடும்போது அதை சரியான வகையில் அதிர்வுகள் இல்லாமல் ஒலிப்பதிவு செய்ய நம்மால் இயலாது. அதற்கான கருவிகள் இன்னும் வரவில்லை. ஆனால் ஏதோ செய்கிறோம்'' என்று சொல்லியிருப்பது அம்மையாரின் குரல் வளத்துக்கு தொழில் நுணுக்கக் கலைஞர்கள் தந்த கட்டியம். தனித்த வாழ்க்கையிலும் நிறை வாழ்வு வாழ்ந்தவர் அம்மையார். எத்தனையோ லட்சங்கள் ஈட்டினாலும் தன் வீட்டில் தானே சமைத்துப்போட்டு உறவினர்கள் குழந்தைகளைத் தன் குழந்தைகளாகப் பாவித்து அவ்ர்களை வளர்த்தெடுத்து இறை பக்தியில் எஞ்சிய நாட்களைக் கழித்தார்.

1964ல் தமிழிசை சங்கம் அவருக்கு தமிழ் இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கி கெüரவித்தது. அதைத் தொடர்ந்து 1969ல் ஒரே நேரத்தில் சிறந்த பாடகருக்கான மாநில விருது மற்றும் மைய அரசின் விருது அவருக்குக் கிடைத்தது. இதுவும் முதன் முறையாக நடந்தது. 1970ல் மைய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து சிறப்பித்தது.

இறுதி நாட்களில் வெறும் திருநீற்றை மட்டும் அவர் உண்டு வாழ்ந்ததாக சில இடங்களில் குறிப்புக்கள் இருக்கின்றன. இது எந்த அளவில் உண்மை என்று தெரியவில்லை. 1980ல் அம்மையார் காலமானார். இசையையும் தமிழையும் இறையுணர்வையும் தேசியத்தையும் தன் மூச்சாகக் கொண்ட அந்தக் கோகிலம் தன் இசையால் காற்றுடன் கலந்தது. தமிழ் நாடக மேடைகளில் இணைந்து ரீங்கரித்த கந்தர்வனைத் தேடிப்பறந்து சென்றது. மொழியும் அந்நியம், இசை அமைப்பும் வேறானது என்பதையெல்லாம் கடந்து லதா மங்கேஷ்கர் போன்ற வேற்று மொழி இசைக்கலைஞர்களையும் தன் இசையால் கவர்ந்தவர் சுந்தராம்பாள்.

தன் தனிப்பட்ட திறமையால், தன்னுடைய ஆளுமையை தன்னுடைய துறை மீது, சமூகத்தின் மீது, வாழ்ந்த காலத்தின் மீது பதித்தவர் அவர். வெறும் பாடகி மட்டும் அல்ல அவர். சமூகத்தோடு மக்களோடு தன்னைக் கரைத்துக் கொண்டு காலத்தின் குணத்தை மாற்றியவர் அந்தக் கோகிலம்.

நன்றி.
வணக்கம்.