Showing posts with label சொற்பொழிவுகள். Show all posts
Showing posts with label சொற்பொழிவுகள். Show all posts

Tuesday, September 26, 2017

ஏ.கே.செட்டியார் - அண்ணல் காந்தியடிகள் பற்றிய முதல் ஆவணப்படம்

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்


                அனைவருக்கும் வணக்கம்.

வேறு எந்த சமூகத்திலும் காணாத அளவுக்கு நம் தமிழ் சமூகத்தில் விசித்திரங்களும் வேடிக்கைகளும் வினோதங்களும் எக்கச்சக்கமாகக் கொட்டிக் கிடக்கின்றனஇரு வேறுபட்ட முனைகளில், ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத இருநிலைகளில் எதிரும் புதிருமான தளங்களில் சமூகக் கலாச்சார நிகழ்வுகள் நம்முன் பல சமயங்களில் காணக் கிடைக்கின்றனவெற்று ஆரவாரங்களாலும் கோஷங்களாலும் உருவாக்கப்பட்டு  எதிலும் ஒரு பூரணத்தையும் ஒழுங்கையும் வேண்டி நிற்காது  ஒரு சிறு அளவிலேனும் பகுத்தறிவின் பிரயோகத்தையும் வேண்டி நிற்காத விஷயங்கள் பிராபல்யம் அடைந்து நிறுவப்பட்ட வெற்றிகளின்  சூத்திரங்கள் ஆகின்றன

அதே நேரம் நாம் மற்ற சமூகங்களின் முன், மற்ற மொழி மற்றும் கலாச்சாரக் குழுமங்களின் பெருமையுடன் முன் வைக்கத் தகுதியும் ஆகிருதியும் கொண்ட பல உன்னதங்கள் எவ்வித ஆரவாரமும் இன்றி ஒரு அர்த்தம் பொதிந்த மௌனத்துடன் இச்சமூகத்தின் மூளைச் செயல்பாட்டினை நிராகரித்த புறக்கணிப்பினை எதிர்கொண்டு கால ஓட்டத்தில் பயணித்து வருகின்றன.  

அப்படிப்பட்ட பல உன்னத நிகழ்வுகளில் ஒன்றுதான் .கே.செட்டியார்.   ஒன்றும் இல்லாத வெற்றுக் கலாச்சார நிகழ்வுகள் பொய்யான ஒரு சரித்திரத்தினை உருவாக்கி தமக்கான தகுதியில்லாத இடங்களை ஸ்தாபித்துக் கொண்டு பதவி பட்டங்களுடன் பிரம்மாண்டமாக இயங்கும் இந்த சூழலில்  எவ்வித ஆரவாரமும் இன்றி தன்னைப் பற்றிய எவ்விதமான பதிவுகளையும் வருங்காலத்துக்காக முன்வைக்காமல் சென்றிருக்கிற ஒரு உன்னத நிகழ்வு .கே.செட்டியார்.

Friday, November 9, 2007

தலித் எழுச்சியின் முதல் தடம் - அயோத்திதாச பண்டிதர்

தொண்டை மண்டல வல்ல காளத்தி தெய்வப்புலமை. வைத்திய சிம்ஹம். சங்கை கவிராஜ பண்டிட் க.அயோத்தி தாஸ தம்ம நாயகர் - ஸ்ரீலஸ்ரீ அயோத்தி தாச பண்டிதர் வாழ்ந்த காலம் 1845 லிருந்து 1914 வரை.

நீலகிரியை சோந்த அயோத்தி தாசர் பிறப்பால் ஆதி திராவிட வகுப்பை சேர்ந்தவர். தமிழகத்தின் அரசியல் அரசியல் சரித்திரத்தில் மிக நீண்ட காலம், அதாவது சுமார் எண்பது ஆண்டுகளுக்கு மேலாக இருட்டடிப்பு செய்யப்பட்ட ஒரு மாபெரும் மனிதர் அயோத்திதாசர் என்று சொன்னால் அது மிகையான வார்த்தையாக இருக்காது.

தமிழ்ச் சூழலில் இவை போன்ற காரியஙகள் துரதிருஷ்டவசமாக அதிர்ச்சி தரும் காரியமாக அமைவதில்லை. சமத்துவம். பகுத்தறிவு. நவீனத்துவம் முதலான கொள்கைப் போக்குகளில் தமிழக அளவில் பெரியாருக்கும் தேசிய அளவில் அம்பேத்கருக்கும் முன்னோடியாக விளங்கியவர் அயோத்தி தாசர். இலக்கிய சமூக சமய வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் புதிய சமுதாயம் படைக்கும் பணியில் தம்மை முழுதுமாக அர்ப்பணித்துச் செயல்பட்டவர். ஆதி திராவிடர்களை அரசியல் பேசவைத்தவர்.

ஏற்கனவே சொன்னதுபோல, சுமார் ஒரு எண்பது ண்டு காலம் பகுத்தறிவுச் செம்மல்கள், சமூகநீதிப் போராளிகளான திராவிட இயக்க மாமன்னர்களின் பார்வையில் கூட அவர்கள் தங்களுடையதாக எடுத்தாளும் பல கருத்தாக்கங்களின் முன்னோடியான அயோத்தி தாசர் அகப்படும் பாக்கியம் செய்திருக்கவில்லை என்பது மிகவும் துரதிருஷ்டவசமான விஷயம். இதற்கான காரணங்களை வரலாறு என்றாவது ஒரு நாள் இவர்களுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் முன் எடுத்து வைக்கும்.

சமூக நீரோட்டத்தில் கவிதை, கதை, கட்டுரைகள், நாடகங்கள் போன்றவற்றில் ஆதி திராவிடர்கள் அக்காலத்தில் மிக அருமையானதொரு பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். ஆனால் மிகவும் துரதிருஷ்டவசமாக 1860லிருந்து 1910 வரை சுமார் 50 ண்டுகள் ஆதி திராவிடர்களால் படைக்கப்பட்ட இந்த கவிதை, கதை, கட்டுரைகள், நாடகங்கள் எங்கும் கிடைக்காமல் போனதால் அவர்களது வரலாற்றையும் அயோத்தி தாசர் போன்ற ஆகிருதிகளின் வரலாற்றையும் விரிவாகத் தெரிந்து கொள்ள அரிதாகிப்போனது. அயோத்தி தாசர் பரவலாக தலித்துகள் இடையிலும் பேசப்படாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

ஆதி திராவிடன். மகாவிகடதூதன். பூலோக வியாசன். பறையன். ஆதி திராவிட மித்திரன் போன்ற பத்திரிகைகள் அக்காலகட்டத்திய தலித்துகளால் கொண்டுவரப்பட்டவை. இந்தப் பத்திரிகைகள் எதுவும் பின்னாளில் ஆய்வாளர்களுக்குக் கிடைக்கவில்லை. இவை கிடைத்திருந்தால் அக்காலத்திய ஆதி திராவிடர்களின் போராட்டங்கள் மற்றும் அயோத்தி தாசரைப் பற்றிய முழு விபரங்கள் கிடைத்திருக்கும்.

இந்நிலையில் அயோத்திதாசரை இருபதாம் நு஡ற்றாண்டின் இறுதியில் கண்டெடுத்த பெருமை - இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தின் தலித்துக்கள் இடையே அயோத்தி தாசரை மறுபிறப்பு எடுக்க வைத்த பெருமை ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ய்வு மாணவராக இருந்த தோழர் ஞான.அலாய்சியஸை சேரவேண்டும். அயோத்திதாசரின் எழுத்துப் பணிகளுக்கு சாகாவரம் அளித்து இருக்கிறார் அலாய்சியஸ் என்று சொன்னால் மிகையாகாது.

அயோத்தி தாசரைப் பற்றி நமக்கு மிக அதிக அளவில் கிடைக்கும் பதிவுகள் என்பவை அவர் 1907 லிருந்து 1914 அதாவது அவருடைய இறப்பு வரை சிரியராக இருந்து வெளியிட்ட ஓரணாத் தமிழன் என்னும் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளின் வாயிலாகத்தான். அயோத்தி தாசரின் இறப்புக்குப் பிறகு அவருடைய மகன் க.அ.பட்டாபிராமன் 1922 வரை தமிழன் இதழ்களை நடத்தியிருக்கிறார்.

மிகுந்த சிரமத்தின் பேரில் இக்கட்டுரைகளை ஓரிடத்தில் தொகுத்து அயோத்தி தாசர் சிந்தனைகள் என்னும் தலைப்பில் இரு தொகுதிகளாக வெளியிட்ட அரும்பணியை செய்தவர் ஞான அலாய்சியஸ். இவருடைய இந்த அற்புதப் பணிக்கு ஊக்கமளித்து பெரும் செலவில் அயோத்தி தாசர் சிந்தனையின் இரு தொகுதிகளையும் வெளியிட்டவர்கள் நாட்டார் வழக்காற்றியல் மையம், தூய சவேரியார் கல்லு஡ரி, பாளையங்கோட்டை. பின்னர் தலித் சாகித்ய அகாடமியால் அயோத்தி தாசர் சிந்தனைகள் மூன்றாம் பகுதி வெளியிடப்பட்டது.
ஞான அலாய்சியசுக்கும் பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் மையத்துக்கும் தமிழ்ச் சமூகம் மிகப்பெரிய அளவில் கடமைப்பட்டுள்ளது.
ஞான அலாய்சியசுக்கு தமிழன் இதழ்களை தந்து உதவியவர் தோழர் அன்பு பொன்னோவியம். அவர் தன்னுடைய முன்னுரையில் குறிப்பிடுகிறார் -
தமிழகத்தின் புதைக்கப்பட்ட களஞ்சியமாகக் கிடந்த இது, நான் எண்ணிப் பார்க்க முடியாத அளவில் பல நு஡று பக்கங்களைக் கொண்ட இரு தொகுதிகளாக வெளியாவதை தமிழன் பத்திரிகையின் மறு பிறப்பாக எண்ணி மகிழ்கிறேன். இது தமிழினத்திற்கே கூட அதிர்ச்சியுடன் வியப்பூட்டும் நிகழ்வாகத் தெரியக்கூடும் என்று கருதுகிறேன்...

என்று கூறுகிறார். இருந்தும் இந்த இரு தொகுதிகளிலும் கூட எங்கும் அயோத்தி தாசரின் இளமைப் பருவம். கல்வி குறித்த பதிவுகள் எங்கும் கிடைக்கவில்லை. சமூகம். தாழ்த்தப்பட்டோருக்கான உரிமைகள் குறித்த சிந்தனைப் பதிவுகள். பெளத்த மதப் பிரச்சாரம் போன்றவற்றுக்கே வாழ்க்கையை அதிகமாக அர்ப்பணித்த அயோத்தி தாசர் தன்னைப் பற்றிய குறிப்பைக்கூட எங்கும் பதிவு செய்யவில்லை. ஓரிடத்தில் அவருடைய முன்னோர்களைப் பற்றி வருகிறது. இதுவும் நம் தமிழ் இலக்கிய சரித்திரம் குறித்த ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக இருக்கிறது.

பிரான்சிஸ் வைட் எல்லிஸ் என்னும் துரை 1796ல் சென்னை வருகிறார். இவர் திருக்குறள் மீது ஆங்கிலத்தில் உரையும் விமர்சனக் கட்டுரையும் எழுதியிருக்கிறார். தமிழ் இலக்கியச் சுவடிகளை சேகரிப்பதில் தன் வாழ்நாளை அதிகம் செலவழித்தவர் இந்த எல்லிஸ் துரை. இவரைப்பற்றி மீனாட்சி சுந்தரம்பிள்ளை தன்னுடைய கட்டுரை ஒன்றில் மிகவும் சிலாக்கியமாக சொல்லியிருப்பார். இந்த எல்லிஸ் துரையின் நண்பர் ரிங்டன் துரையிடம் பட்லராக வேலை பார்த்தவர் கந்தப்பன். இவர் அயோத்தி தாசரின் பாட்டனார். இந்தக் கந்தப்பன், திருக்குறள், நாலடி நானு஡று போன்ற சில ஓலைச் சுவடிகளை எல்லிஸ் துரை வசம் ஒப்படைத்திருக்கிறார். அப்போது சில பிராமணர்கள் துரையிடம் சென்று கந்தப்பன் தீண்டத்தகாத வகுப்பில் பிறந்தவன் என்றும் அவன் கூறுவதையும் அவன் கொடுப்பதைப் பற்றி அதிகம் பொருட்படுத்தத் தேவையில்லை என்றும் அறிவுரை கூறியிருக்கின்றனர். அவற்றைப் பொருட்படுத்தாத எல்லிஸ் துரை திருக்குறளையும் நாலடி நானு஡றையும் நு஡லாக அச்சிட்டு வெளியிட்டார்.
இத்தகவலை அயோத்திதாசர் தன்னுடைய தமிழன் இதழில்.
''எனது பாட்டனார் ஜார்ஜ் ரிங்டியன் துரை பட்லர் கந்தப்பன் என்பவர் ஓலைப்பிரிதியாயிருந்த திருக்குறளையும். நாலடி நானு஡றையும் ஈஸ்ட் இன்டியா கம்பெனியார் காலத்தில் தமிழ்ச் சங்கம் கூட்டி வைத்த கனம் எல்லீஸ் துரை அவர்களிடம் கொடுத்து அச்சுக்கு வந்திருக்கிறது"...
இதுவழியாக அந்தக் காலத்தில் ஆதி திராவிடர்கள் தமிழின் மிக அரிய நு஡ல்களைப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள் என்பது இங்கு தெளிவாகப் பதிவாகிற விஷயம்.


மேலே குறிப்பிட்டது போல அயோத்தி தாசரின் காலகட்டம் 1845லிருந்து 1914 வரை. அரசியல், சமயம், இலக்கியம் போன்றவற்றில் அவர் தீவிர ஈடுபாட்டுடன் செயலாற்றிய காலகட்டம் சுமார் 1865ல் துவங்குகிறது. அந்தக் காலகட்டத்திய தலித் வாழ்வு நிலை மற்றும் தீண்டாமைக் கொடுமைகள் பற்றி இங்கு எதுவும் சொல்லித் தெரிய வேண்டிய காரியமில்லை. இனி இங்கு சொல்லப்போகும் தாசரின் சிந்தனைகளும் இலட்சியங்களும் சாதி மதமற்ற அற வாழ்க்கையும், கருணையும் அன்பும் மிக்க மேம்பட்ட மனித உறவுகளைப் பற்றியிருப்பதால் அவை அனைத்தும் மானிட இனத்துக்கே சொந்தமானவை என்று உறுதி பட எடுத்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. ஏனெனில் தாசரின் சிந்தனைகளும் லட்சியங்களும் உலகுக்கு ஒளியாக உதித்த கெளதம புத்தனின் அகிம்சையில் இருந்து உருவானவை. சனாதனம், இன-நிறவாதம், ஆணாதிக்கம், மதவாதம், பயங்கரவாதம் ஆகிய சகலவிதமான வன்முறைகளுக்கும் எதிரானவை.

சாதி இழிவை அகற்றுவதை மட்டுமே தன்னுடைய முழுக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கி இருக்கிறார் தாசர். தீண்டாமை வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் திணிக்கப்பட்டதே ஒழிய அது ஆதிகாலம் தொட்டே இருந்தது கிடையாது என்பது அயோத்தி தாச பண்டிதரின் கருத்து. இதன் அடிப்படையிலேயே அவர் சாதி எதிர்ப்புக் கருத்துக்களையும் செயல்பாடுகளையும் அமைத்துக் கொண்டார். இது போன்ற கருத்தாங்கங்களையே பின்னாளில் பாபா சாகிப் அம்பேத்கர் போன்ற ஆய்வாளர்கள் கையாண்டார்கள் என்பது மிகவும் குறிப்பிடத் தகுந்தது. தீண்டப்படாத மக்களின் அன்றைய இழிவான வாழ்வுக்கு அவர்களையே குறை சொல்லும் கருத்துக்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்ததோடு தீண்டாமை நிலவுவதால் பலன் பெறும் சக்திகளாலேயே இக்கருத்து திணிக்கப் பட்டது என்னும் முடிவை தாசர் எட்டுகிறார்.

அக்காலத்திய தீண்டாமைக் கொடுமை மற்றும் சாதிய இழிவுகளுக்கு சரியான சவுக்கடி ஆதி திராவிடர்கள் ஒவ்வொரும் கல்வி மற்றும் தொழில் துறைகளில் மேன்மையான இடங்களைப் பெறுவது என்ற முடிவுக்கு வருகிறார் தாசர். அக்காலத்தில் பிரபலமாக விளங்கிய சித்த வைத்தியத் துறையைத் தனதாக்கிக் கொள்கிறார் அவர். உள்ளுக்குள் உறைந்து கிடந்த அரசியல் விழிப்புணர்வு அவரை தீவிரமாக செயல்பட வைத்திருக்கிறது.

நல்லவை. பயனுள்ளவை. சுகாதாரமானவை. பொருளாதார தாயமும் ஆதிக்கமும் தரக்கூடியவை ஆகியற்றிலிருந்து மிகவும் திட்டமிட்டுத் தலித்துக்கள் சாதி அடிப்படையில் இந்து சாஸ்திரங்களின் சார அடிப்படையில் விலக்கி வைக்கப்பட்டதை எடுத்துக் காட்டினார். உதாரணமாக, பிரிட்டிஷ் ராணுவத்திலும். மருத்துவத்துறையிலும், கிறிஸ்துவ மிஷனரிகளின் பள்ளிக்கூடங்களிலும், கிறிஸ்துவ மதத்திலும் ரம்பகாலத்தில் உயர்சாதியார்கள் சாதி, மத சாரம் பார்த்து சேர மறுத்து வந்தார்கள். இப்படி தலித்துக்கள் சாதி, மத சாரம் பார்க்க அவசியமில்லாததாலும் சாரக் கேடான விஷயங்கள் அவர்களுக்கு உரியவை என்று பிறர் கருதியதாலும், தலித்துக்கள் அந்தத் துறைகளில் சேர்ந்து நவீன வாழ்க்கையில் முன்னேற்றமடைந்து வந்தார்கள். ஆனால் தலித்துக்களின் புதிய வாழ்க்கை முன்னேற்றத்தைக் கண்ட மேல் சாதி இந்துக்கள் சாரக்கேடெல்லாம் பார்க்காமல் அந்த நவீனத் துறைகளிலும், கிறித்துவ மதத்திலும் சேர்ந்து தலித்துகளைப் பழைய சாதி சாரம் காட்டி வெளியே துரத்திய சம்பவத்தை தாசர் வேதனையோடு குறிப்பிட்டார். (1908)

"இத்தனைக்கும் சாதி மத சாரம் பார்த்த அந்தப் பெரிய சாதியோர் என்போர். காலங்காலமாக 'மதவித்தைகளையும் விருத்தி செய்கிறார்களேயன்றி, பூமியை உழும் நவீனக் கலப்பையையோ, விரைவாக நீர் பாய்ச்சும் ஏற்றத்தையோ, நெல்லையும் அரிசியையும் பிரிக்கின்ற எந்திரத்தையோ, போட்டோ கிராப், டெலிகிராப், போனோ கிராப், மோனோ கிராப், ஸ்டீம் ரயில்வே, டிராட்மவே போன்ற நவீன அறிவியல் சாதனங்களையோ கண்டுபிடிக்கவில்லை. னால் அவர்கள் பராமரித்து வரும் பழைய சாதி மத திக்க நிலையால் மட்டுமே இப்புதிய வசதி வாய்ப்புக்களை அபகரிக்க முடிகிறது" என்று வேதனைப்படுகிறார்.

இந்து சமுதாயத்தில் நல்ல இந்து கெட்ட இந்து என்பதை விட உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஏறுவரிசைதான் முக்கியம் என்று அம்பேத்கார் குறிப்பிடுவார். இது போன்ற வரிசைகள் இல்லாத காரணத்தால் அன்று கிறிஸ்துவ மதத்துக்கு ஏராளமான தலித்துக்கள் மாறினார்கள். ஆனால் கிறிஸ்துவத்தின் ஆர்.சி.பிரிவும், புராடஸ்டென்டு பிரிவும் இந்து மதம் போலவே சாதி பேதங்களை ஏற்றுக்கொண்டதால் அதற்கு இந்தியக் கிறிஸ்துவ மிஷனரிகளே காரணமாகிப் போனதால் அயோத்தி தாசர் அதையும் நிராகரித்தார். கிறிஸ்துவ மதம் மாறிய ஆதி திராவிடர்கள் சாதி அடையாளத்தோடு வாழ நேர்ந்ததோடு, பாதிரியார்கள், ஞானஸ்நானம், வாரக்காணிக்கை, அர்ச்சிஷ்டவர்களின் உற்சவம், புதுநன்மை, விசுவாசம், புதைக்கக்குழி தோண்டுதல், மணியடித்தல், து஡ம்பா, குருசு, தேன், மெழுகுவர்த்தி ஆகியவற்றுக்கு விதித்த தொகைகளைக் கொடுத்து ஓட்டாண்டிகள் ஆகிறார்கள் இந்த ஆதி திராவிடர்கள் என்று தாசர் எழுதினார். புராட்டஸ்டண்டு மார்க்கத்தில் சேர்ந்து படித்துப் பதவிகள் வகித்த தலித்துக்களை சாதி இந்துக்கள் அடித்துத் துரத்தித் தாங்களே கிறிஸ்தவம் மாறினார்கள். பழைய கிறிஸ்துர்களைப் பறைக்கிறிஸ்துவர்களாக்கினார்கள். பாதிரிமார்களும் இதற்கு இடம் கொடுத்தார்கள் என்று தாசர் குறிப்பிட்டார்.

இந்தியச் சூழலில் நடைமுறையில் சாதியில் இந்துவாகவும் மதத்தில் கிறிஸ்தவனாகவும் ஏககாலத்தில் பார்ப்பனனையும், கிறிஸ்துநாதரையும் ஏற்றுக்கொள்பவன் அரைக்கிறிஸ்துவன், அரை இந்து என்றார் தாசர்.
தலித்துகளிடம் இருந்து வந்த பாரம்பரியமாக இருந்து வந்த குலதெய்வ மற்றும் கிராம தேவதை வழிபாட்டையும் கூட தாசர் ஏற்கவில்லை. தலித்துகளுக்கு மாற்று மதமாக அவர் முன்மொழிந்தது பெளத்த தன்மமே. புத்த தன்மத்தை தலித்துக்களின் தன்மமாக உலகுக்கு முன்மொழிந்த முதல் தலித் அறிஞர் அயோத்தி தாசரே.

இந்த வகையில் அவர் டாக்டர் அம்பேத்கருக்கு முன்னோடியாகத் திகழ்கிறார். தாசருக்குப்பின் சுமார் அறுபது ண்டுகள் கழித்தே அம்பேத்கர் தலித்துகளுக்கான மதமாக நவயான பெளத்த இயக்கத்தை முன் மொழிந்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

போதி சத்துவத்தின் புதிய நவீன வளர்ச்சியை, இந்தியத் துணைக்கண்டத்தின் சரித்திரத்தை புத்தமத தத்துவத்தின் அடிப்படையில் விளக்கம் தந்தார் தாசர்.

1896-98 ம் ண்டுகளில் சென்னையில் ல்காட் துரையுடன் தாசருக்குத் தொடர்பு ஏற்பட்டது. தாசரும் கிருஷ்ண சாமியார் என்னும் அவருடைய நண்பரும் ல்காட்டுடன் இலங்கை சென்று மலிகண்ட விகாரையில் சுமங்கல மஹாநாயக என்னும் பெளத்தத் துறவியிடம் பஞ்சசீலம் பெற்று பெளத்தர்கள் ஆனார்கள்.

பிறகு ல்காட் துரையின் ஒத்துழைப்புடன் சென்னை ராயப்பேட்டையில் பெளத்த விகாரையையும் பெளத்த சங்கத்தையும் நிறுவினார். சமூக வரலாற்றினை மறுவாசிப்பு செய்தல், சமய அடையாளங்களைக் கட்டி எழுப்பல் என இந்த பெளத்த சங்கங்கள் செயல்பட்டன.

1899ல் புத்தர் என்னும் இரவு பகலற்ற ஒளி என்னும் நு஡லை எழுதினார்.
1907லிருந்து 1914 வரை தாம் சிரியராக செயல்பட்டு நடத்திய ஓரணாத் தமிழன் வார இதழில் தொடர்ச்சியாக புத்த சமயம், அரசியல், சமூகம், இலக்கியம் குறித்த கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதி வந்தார். தமிழனில் சி.எம்.இ.குருமூர்த்தி, சுவப்னேஸ்வரி அம்மாள் (இவர் Tamil Woman, தமிழ்ப் பெண் போன்ற இதழ்களை வெளியிட்டவர்), டி.சி.நாராயணபிள்ளை, ஏ.பி.பெரியசாமி புலவர் போன்றோர் தொடர்ச்சியாக எழுதி வந்தனர். அந்தக் காலத்திலேயே தமிழன் இதழ்களில் வெளியான கேள்வி பதில் பகுதி வழியாக அதற்கான வாசகர்கள் பரவலாக இருந்தமையை அறியமுடிகிறது.

தாசர் மற்றும் அவருடைய நண்பர்களின் முயற்சியால் பெளத்த மத செயல்பாடுகளை சென்னை, செங்கற்பட்டு, வட ற்காடு போன்ற தமிழகத்தின் வடபகுதிகளிலம் கர்நாடகத்தில் ஆதி திராவிடர்கள் பரவியிருந்த கோலார் தங்கவயல், பெங்களூர், ஹூப்ளி மற்றம் பர்மா தென்னாப்பிரிக்கா போன்ற இடங்களில் வசித்த தமிழர்கள் இடையேயும் பரவியது.

ஆங்கிலேயர் காலத்தில் கோலார் தங்கவயல் பணிகளுக்கு வட ஆற்காடு மாவட்டத்தை சேர்ந்த தலித் மக்களே அதிகம் பணியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு சுயமரியாதை மிக்க வாழ்வு அங்கு கிடைத்தது. அவர்கள் பெளத்த செயல்பாடுகளை அங்கு சாத்தியமாக்கினர். தங்கள் நம்பிக்கையை இவர்கள் வட ற்காடு மாவட்டத்தின் கிராமங்களில் பரப்பினார்கள்.

அயோத்தி தாசரோடு இணைந்து செயல்பட்ட க.அப்பாதுரையார், நகுலப்பிள்ளை, சின்னப்புட்டு சாமியார், கே.சி.கிருஷ்ணசாமி, டி.எஸ்.சுந்தரம், முத்து மேஸ்திரி கியோர் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பெளத்த மதப் பணிகளை மேற்கொண்டனர். தாசருக்குப் பின்னாலும் இவர்கள் சாக்கைய பெளத்த சங்க செயல்பாடுகளை உயிரோட்டத்தோடு எடுத்துச் சென்றவர்கள்.

சென்னை ராயப்பேட்டை பெளத்த சங்கத்தில் அயோத்தி தாசர் பேசும் போது துவக்க காலத்தில் தமிழ்ப் பெரியார் திரு.வி.கல்யாண சுந்தரனார் தன் இளமைப் பருவத்தில் கற்கள் கொண்டு எறிந்து எதிர்ப்பினைத் தெரிவித்தார். பின்னாளில் அவர் காலில் ஏற்பட்ட கட்டி ஒன்றினை சித்த வைத்திய முறையில் அயோத்தி தாசர் குணமாக்கி இருக்கிறார். அயோத்தி தாசர் மறைவுக்கு மிக அற்புதமான இரங்கற்பாவினை எழுதியிருக்கிறார் திரு.வி.க. 1906ம் ண்டு வட ற்காடு மாவட்டம் திருப்பத்தூர் பெரிய பறைச்சேரி எனப்பட்ட தலித்துக்கள் வாழ்ந்த பகுதியின் பெயர் கெளதம புத்தர் வழி வந்தோர் வாழும் ஊர் என்னும் பொருளில் கெளதமாப்பேட்டை என்று மாற்றப்பட்டது. திருப்பத்தூரை சேர்ந்த ஏ.பி.பெரியசாமிப் புலவர், அனுமந்த உபாசகர் கியோர் பெளத்த சங்க செயல்பாடுகளை முடுக்கி விட்டார்கள். கெளதமாப்பேட்டையில் 1904ம் ண்டில் திட்டமிடப்பட்டு 1906 சாக்கைய பெளத்த லயம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த ண்டு அந்த லயத்துக்கு நூறு ண்டுகள் முடிவடைகின்றன. பர்மாவில் கொண்டுவரப்பட்ட ஐம்பொன்னால் ஆன புத்தர் சிலை அங்கு நிறுவப்பட்டது. அயோத்தி தாசரின் வழிகாட்டுதலுடன் அந்தப்பேட்டையில் 87 ஆதி திராவிடர்கள், முடிவெட்டுபவர்கள், சலவைத் தொழிலாளிகளின் குடும்பங்கள் பெளத்த மதத்துக்கு மாறினார்கள்.

இந்து மதத்தின் பல கூறுகளை பெளத்த மதத்தில் இருந்து தோன்றியவை என்பதைத் தீவிரமாக பிரசாரம் செய்து வந்தார் தாசர். புத்தர் இறந்த நாளை புத்தர் பலி விழாவாக போதிப்பண்டிகை என்று பூர்வ பெளத்தர்கள் கொண்டாடி வந்தார்கள். பிராமணர்கள் இதனை போகிப்பண்டிகை என்று திரித்து விட்டார்கள் என்றார் தாசர். அதேபோல திருக்குறளை திரிக்குறள் என்றும் தமிழின் பல பண்டை நூல்களை பெளத்த மத நூல்கள் என்றும் விவாதித்து வந்தார்.

வள்ளுவரை பெளத்தர் என்றும் வள்ளுவர் சொன்ன ஆதி பகவன் ஆதி பகலவன் என்றும் அது கெளதம புத்தர்தான் என்றும் இதேபோல பல குறள்களையும் பெளத்த வழியில் மறுவாசிப்பு செய்து பொருள்கூறினார்.
அயோத்தி தாசரின் முனைப்பால் உயிர்க்கொலை மறுப்புக்காக மாடு அறுக்கும் பழக்கம் பல ஊர்களின் சேரிகளை விட்டு வெளியேற்றப்பட்டது. சேரிக்கு வெளியே மாடு அறுக்கும் தொட்டி என அவை மாறின. ஊரிலும் சேரியிலும் இல்லாத பல தொட்டிகளை சேலம் மாவட்டத்திலும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வட ஆற்காடு மாவட்டங்களிலும் பார்க்க முடியும்.

பெரியாரால் நடத்தப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் தொடக்க காலக் கருத்தியல் மற்றும் பிரச்சார நடவடிக்கைகள் பின் வந்த பெளத்த செயல்பாட்டாளர்களோடுதான் அமைந்திருந்தன என்பதை இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.

இந்தி மொழி, இந்துச் சாதி மதத்தோடு தொடர்பு உடையது கையால் அதற்கு இந்தியாவின் பொதுமொழியாகும் தகுதி கிடையாது. ஆங்கிலமே அதற்குத் தகுதி கொண்டது என்று தாசர் பெரியாருக்கு முன்பே எழுதினார். (1911) ( ஆங்கில மொழியைத் தாய்மொழியாக்க வேண்டும் என்று கூடச் சொன்னார். அதன் தாத்பர்யத்தை இன்றைய சூழலை வைத்துப் பார்க்கக்கூடாது).

அயோத்தி தாசரின் முனைப்பினாலும் முயற்சியாலும் சென்னையில் பல பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. ஏழைகளுக்கு இலவசக் கல்வி வழங்குவதில் முன்னோடியாக இருந்தார் தாசர். இப்போது நான் சொல்லும் விஷயம் உண்மையிலேயே உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். மதிய உணவுத் திட்டத்தினை 1894ம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தியவர் தாசர். சென்னை மற்றும் வட ற்காடு மாவட்டங்களில் நடந்த பள்ளிகளில் பகல் உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் அயோத்தி தாசர். இதை நான் சொல்லும்போது இந்த முன்னோட்டமான காரியம் நடந்த ஆண்டினையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் அயோத்தியா தாசரின் வாழ்வும் செயல்பாடுகளும் தமிழக வரலாற்றில் ஒரு முக்கியமான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இருந்திருந்திருக்கிறது.

தலித்துக்களுக்கு பிராம்மணரல்லாத திராவிட அடையாளத்தை நிலை நிறுத்தியதில் முதன்மையானவர் தாசர்.

ஏற்கனவே சொன்ன ஆச்சரியத்தைப் போல இன்னும் சில ஆச்சரியங்களும் உண்டு தாசர் சரித்திரத்தில். 1895 முதல் 1907 வரை தலித்துகளுக்காக இந்திய சரித்திரத்தில் முதன்முறையாக அரசு வேலை வாய்ப்புக்களில் இட ஒதுக்கீட்டினை வற்புறுத்தினார் தாசர். இதற்காக பல ஆங்கில துரைமார்களை சந்தித்து மனுக்களை அளித்து, பல இடங்களில் பேசியும், அதிகாரிகளையும் கவர்னர்களையும் சந்தித்து தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்கினார். இந்திய அளவில் இந்த விஷயத்தில் முன்னோடி நம் தமிழகத்தின் அயோத்தி தாச பண்டிதர்தான் என்று நாம் பெருமையுடன் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் யாரும் சொல்லவில்லை. அது வேறு விஷயம்.

அயோத்தி தாசரின் இந்த இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை அவருக்குப் பிறகு பல மாநிலங்களில் தொடர்ந்தது. மராட்டிய சிங்கம் சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றலான சத்ரபதி சாஹூ மஹராஜ் 1902 தன்னுடைய அரசாங்கத்தில் தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார்.

அவர் வாழ்ந்த காலத்தைப் பார்க்கும் போது அயோத்தியா தாசர் சிந்தனைத் தொகுப்பில் உள்ள பல விஷயங்கள் பல நிலைகளில் முன்னோடியானவை. இக்கால தாத்பரியத்துடன் பார்க்கும்போது சில விஷயங்கள் விவாதத்துக்கு உரியன. உதாரணத்துக்கு பண்டைய தமிழ்நூல்கள் பற்றிய அவருடைய கணிப்பு, மொழி பற்றிய கருத்துக்கள், விஞ்ஞான அடிப்படையில் அமையாத மதங்கள் பற்றிய அவருடைய கருத்துக்கள், பிரிட்டிஷ் அரசு மீது அவர் கொண்டிருந்த தேவதா விசுவாசம் போன்றவை பெரிதும் விவாதத்துக்கு உரியவை. னால் பல விஷயங்களில் அவர் வாழ்ந்த காலத்தைத் தாண்டிய பெரும்பாய்ச்சலைத் தன் சிந்தனைத் தளங்களில் நிகழ்த்தியிருக்கிறார்.

1914ம் ண்டு மே மாதம் 5ம் நாள் பண்டிதர் மறைந்தார்.

பண்டிதரின் இறுதி நாட்களைப் பற்றிய குறிப்பினை அவருடைய குமாரர் பட்டாபிராமன் அவர்களுடைய வார்த்தைகளிலேயே முடிக்கிறேன்.

அவர் வியாதியைப் பற்றிக் கொஞ்சமேனும் கவலைப்படவில்லை. தாமே கைதேர்ந்த வைத்திய பண்டித சிகாமணியாயிருந்ததினாலும் தமக்கே தம்மாயுளைக் குறித்து உணர்ச்சி இருந்ததினாலும் வைத்தியரொருவருடைய உதவியையும் அவர் கோரவில்லை. மே மாதம் 3ம் தேதி திவாரம் காலை 5 மணிக்கு பண்டிதரவர்கள் எல்லோரையும் பார்த்து இந்த தேகம் விழப்போகிறது என்றனர். அவருக்கு நெருங்கின பந்துக்களும் நண்பர்களும் அவர்களுடைய கதியைப் பற்றி அவரிடம் வினாவிய போது அவர், தருமமும் கருமமுமே உங்களைக் காக்கும் என்று திருவாய் மலர்ந்தருளினர். அடியேன் பத்திரிகையைக் குறித்து விண்ணப்பித்தபோது, அவர், திரிக்குறள் உரை இதுவரையிலும் நாம் எழுதியதோடு மாத்திரம் நிற்கவேண்டியிருக்கிறதே என்பதுதான் குறை. இந்தப் பொய்ச் சடலம் கூடியிருந்தவரையில் அவ்வளவுதான் செய்யமுடிந்தது. தமிழன் ஆகிய குழந்தையை உன் கையில் ஒப்பித்து விடுகிறேன். உன்னால் வளர்க்க முடியுமல்லவா என்றனர்.
................
பஞ்சஸ்கந்த பிரிவினை அடைந்த பிறகு அவரது திருமுக விலாசத்தை யாவரே வருணிக்கத்தக்கவர். அன்று பகலெல்லாம் அவரது உறவினரும் நண்பர்களும் சீடர்களும் நூற்றுக்கணக்காக வந்து பார்த்துவிட்டுப் போய்க்கொண்டிருந்தனர். பகல் 3 மணிக்கு அவருக்குப் பரிசளித்திருந்த 3 மெடல்களையும் அணிந்து அலங்கரித்து அவரைத் தரிசித்தோம். மாலை 5.30 மணிக்கு புஷ்பமாரி பெய்தாப்போல தூறி நிலத்தைக் குளிரச் செய்தது மனோகரமாயிருந்தது.
..........
மாலை 6 மணிக்கு சர்வாலங்கதிருதங்களோடு அவரை வெள்ளைப் பெட்டியில் வைத்து புஷ்பங்களால் அலங்கரித்திருந்த விமானத்தில் இருக்கச் செய்து பெளத்தன்ம சின்னங்களுடன் முன்னால் புத்தருடைய திவேதத்திலிருந்து உருக்கமான பாடல்களைப் பாடிக் கொண்டு வர கோலம் புறப்பட்டது. அநேக பர்மிய பெளத்த பிட்சுக்களும், இந்திய பெளத்தர்களும், பர்மிய பெளத்தர்களும் ஆயிரங்கணக்கான ஜனங்களும் கோலத்துடன் வந்தனர். பண்டித பெருமான் அவர்களே காருண்யம் பொருந்திய பிரிட்டிஷ் கவர்ன்மெண்டிலிருந்து பெளத்தர்களுக்காக வாங்கிய மயானத்திற்கு தேவ விமானம் கொண்டுபோகப் பட்டது. விமானத்தை இறக்கினதும் சென்ற 1500 வருடங்களாக நடந்திராத பெளத்த சடங்குகள் வெகு சிரத்தையுடன் நடத்தப்பட்டன....

ஏறத்தாழ எண்பது ண்டுகளுக்கும் மேலாக சரித்திரத்தில் முழுதும் மறக்கப்பட்ட ஒரு மாமனிதரை இந்த உலகுக்கு மீண்டும் உயிர்ப்பித்துக்கொடுத்த ஞான அலாய்சியஸ் அவர்களையும் பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் மையத்தையும் மீண்டும் ஒருமுறை நன்றியுடன் நினைத்துக்கொண்டு என் உரையை முடிக்கிறேன். அயோத்தி தாசரை தில்லித் தமிழ்ச் சங்கத்தில் அறிமுகப்படுத்தும் வாய்ப்பினை எனக்கு சாத்தியப்படுத்தியவர்கள் இவர்களே.

நன்றி. வணக்கம்.


18 நவம்பர் 2006 அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் தடம் பதித்த தமிழர்கள் தொடர் சொற்பொழிவுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம்.


அயோத்தி தாசரின் எழுத்துப்பணிகள் :


1. புத்தரது திவேதம் (1912)

2. Buddhist Doctrines - Questions and Answers (1912)

3. இந்திரர் தேச சரித்திரம் (1931)

4. விவாக விளக்கம் (1926)

5. ஹரிச்சந்திரனின் பொய்கள் (1931)

தமிழன் பத்திரிகை சென்னையில் 14 வருடங்களாக வெளிவந்தது. 1907 முதல் 1914 வரை அவரது ஆசிரியத்துவத்திலும், அவருக்குப்பின் அவரது புதல்வர் பட்டாபிராமன் அவர்களை சிரியராகக் கொண்டு 1919 வரையிலும் பின்னர் 1919லிருந்து 1922 வரை யார் நடத்தினார்கள் என்று தெரியவில்லை. பின்னர் 1922ல் அப்பாதுரையை ஆசிரியராகக் கொண்டு 1926லிருந்து 1935 வரை வெளிவந்ததாகவும் குறிப்புக்கள் உள்ளன.


இந்தக் கட்டுரையை எழுத எனக்குக் கிடைத்த ஆதாரங்கள்:


1. அயோத்தி தாசர் சிந்தனைகள் - தொகுப்பு 1 மற்றும் இரண்டு - ஞான அலாய்சியஸ், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம். (2003ல் ஞான அலாய்சியஸ் தொகுத்த 3வது தொகுப்பும் வெளிவந்துள்ளது. இது தில்லியில் எனக்குப் படிக்கக் கிடைக்கவில்லை)

2. தலித்திய விமர்சனக் கட்டுரைகள் - ராஜ் கெளதமன் (காலச்சுவடு வெளியீடு)

3. க.அயோத்திதாசர் ஆய்வுகள் (ராஜ் கெளதமன் - காலச்சுவடு வெளியீடு)

4. அயோத்திதாச பண்டிதர் வழியில் வாழும் தமிழ்ப் பெளத்தம் - ஸ்டாலின் ராஜாங்கம் - காலச்சுவடு மாத இதழ்

Tuesday, July 3, 2007

காந்திய நெறியில் ஒரு தடம் - கோவை அய்யாமுத்து

ராகவன் தம்பி
அனைவருக்கும் வணக்கம்.

பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தத் தடம் பதித்த தமிழர்கள் தொடர் உயிர்பெற்றுள்ளது, உயிர் கொடுத்த தில்லித் தமிழ்ச் சங்கத்தின் புதிய செயற்குழுவுக்கு நன்றி.

கோவை அய்யாமுத்துவைப் பற்றிப் பேசுவதாக இதுவரை மூன்று தடவை முயற்சித்து ஏதோ காரணங்களால் தடைபட்டுக் கொண்டே போனது. இன்றும் தலைமை தாங்க வருவதாக இருந்த திரு.கார்த்திகேயன் அவர்கள் பணி நெருக்கடியால் வர இயலாமல் போனதை எனக்கான துரதிருஷ்டமாக எண்ணி வருந்துகிறேன். செய்யும் எதையும் திருந்தச் செய்ய வேண்டும் என்னும் திடம் உள்ளவர் அவர், அவருக்கு நேரத்தில் என்னால் அய்யாமுத்து குறித்த குறிப்புக்களையும் புத்தகத்தையும் அனுப்ப முடியாமல் போனது. அதற்கான முழுத்தவறும் என்னுடையதே. அத்தவறுக்குப் பொறுப்பேற்று திரு.கார்த்திகேயன் அவர்களிடமும், தில்லித் தமிழ்ச் சங்கத்திடமும் பார்வையாளர்களாகிய உங்களிடமும் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக்கோருகிறேன்.

வழக்கமாக தமிழுக்கே உரிய சாபக்கேடாக அய்யாமுத்து பற்றிய குறிப்புக்களும் நூல்களும் தமிழில் அதிகம் வரவில்லை. அவர் வாழும் காலத்திலும் மறைந்த பின்னரும் நன்றி மிகுந்த தமிழர்களாலும் அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் இயக்கத்தினராலும் வெகுவாகப் புறக்கணிக்கப்பட்டார். அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் மட்டுமே தனியொருவராக அய்யாமுத்து அவர்களின் நினைவினைப் போற்றி வருகிறார், அவருடைய நிறுவனத்தின் ஆதரவில் வெளிவரும் ஓம்சக்தி இதழ் பலமுறை அய்யாமுத்துவைப் பற்றிய நினைவுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. பொள்ளாச்சியில் அருட்செல்வர் கட்டியுள்ள திருமண மண்டபத்தில் அய்யாமுத்து மற்றும் அவருடைய துணைவியார் கோவிந்தம்மாள் ஆகியோரின் உருவப்படங்கள் அவர்கள் உயிருடன் இருந்த போதே திறந்து வைக்கப்பட்டன.

இதைத் தவிர அந்த மாபெரும் மனிதர் மற்றும் அவருடைய ஒப்பற்ற துணைவியார் பற்றிய நினைவுகள் தமிழர்களின் நினைவுத் தடத்திலிருந்து முற்றாக அழிந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

பல வருடங்களுக்கு முன் வானதி பதிப்பகம் வெளியிட்ட கோவை அய்யாமுத்துவின் எனது நினைவுகள் என்னும் அருமையான புத்தகம் பற்றி என்னுடைய நண்பன் சுரேஷ் சுப்பிரமணியன் மிகவும் சிலாகித்துப் பேசினான். அந்தப் புத்தகத்தில் அய்யாமுத்து நேர்மையாகப் பதிவு செய்திருக்கும் பல விஷயங்கள் பற்றியும் அவன் அடிக்கடி சொல்லவே சாகித்ய அகாடமியின் நூலகத்தில் அந்தப் புத்தகத்தை எடுத்து வாசித்தேன். அந்த வாசிப்பிலிருந்து என்னை மிகவும் ஈர்த்த மனிதர் ஆனார் அய்யாமுத்து. அவரைப் பற்றித் தகவல்கள் சேர்க்க முயற்சித்தேன். அவருடைய தலைமுறை மனிதர்களிடம் பேசிய போதும் அவரைப் பற்றி அதிகம் பேருக்குத் தெரிந்திருக்கவில்லை. தெரிந்த ஒரு சிலர் மிகவும் அலட்சியமான ஒரு கருத்தினை அவர் குறித்து வைத்திருந்தனர். எழுத்து வழித் தகவல்கள் அதிகம் கிடைக்கவில்லை. அய்யாமுத்துவைப் பற்றிப் பேச ஒப்புக் கொண்டதும் சாகித்ய அகாடமி நூலகத்தில் இருந்த நூல் எங்கோ ஒüõந்து கொண்டது, பலமுறை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் பொள்ளாச்சியில் இருந்து நூலைத் தேடிப் பிடித்து எனக்காக வரவழைத்த தோழர் சக்தி பெருமாள் அவர்களுக்கு என் நன்றி என்றும் உரியது. அதேபோல அய்யாமுத்து இந்திய சுதந்திர தின வெள்ளிவிழாவில் கலந்து கொள்வதற்கு 1972ல் செய்த தில்லி விஜயத்துடன் அந்த நூல் முடிவடையும். அவருடைய அந்திம நாட்களைப் பற்றிய குறிப்பு ஓம் சக்தி இதழின் ஆசிரியர் திரு.சிதம்பரநாதன் அவர்கள் தொலைநகலில் அனுப்பி வைத்தார். அவருக்கும் என் நன்றி என்றும் உரியது.

இனி அய்யாமுத்து....கோவை மாவட்டம் காங்கயத்தை அடுத்த பரஞ்சேர்வழி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அங்கண்ணன் மாரம்மாள் தம்பதியருக்குக் கடைசிப் புதல்வராகக் கோவையில் 1898 டிசம்பரில் பிறந்தவர் அய்யாமுத்து. கொங்கு வேளாளர் சமூகத்தில் பயிரன் கூட்டத்தை சேர்ந்த மிக எளிய விவசாயக் குடும்பம் அது. மிகச் சிறிய வயதிலேயே அய்யாமுத்துவுக்கு நாடகம், இசை போன்ற கலைவடிவங்களுடன் தொடர்பு இருந்திருக்கிறது. அவருடைய மூத்த சகோதரர் நஞ்சப்பன். 1903ம் ஆண்டில் ஐந்து வயதுப்பையனாக இருந்தபோது கோயமுத்தூர் ஆதம்சா மக்கான் கொட்டகையில் நடைபெற்ற நாடகத்தில் வேடமிட அவருடைய சகோதரர் இவரை அழைத்துச் சென்றது தொடங்கி பதிவுகள் இருக்கும். அவர் நடித்தது நல்லதங்காள் நாடகம். நல்லதங்காளின் ஏழு பிள்ளைகளில் ஒருவர் இவர். நல்லதங்காள் ஒவ்வொரு பிள்ளையாகக் கிணற்றில் தள்ளும் காட்சியில் இவர் முறை வந்தபோது அதனை நிஜக் கிணறு என்று நம்பி அழுது ஊரைக் கூட்டி மேடையை விட்டு இறங்கி ஓடியதும் "இந்த சனியனை எங்கிருந்து பிடித்து வந்தாய்' என்று நல்லதங்காள் கூச்சலிட்டதையும் நடிகர் கேட்டதும் மிக அழகாகப்பதிவு செய்திருப்பார் அய்யாமுத்து.இவர் படிக்கும் காலத்தில் வ.உ.சியையும் சுப்பிரமணிய சிவாவையும் கோவை மத்திய சிறையில் அடைக்க போலீசார் விலங்கு பூட்டிக் கோவைத் தெருக்கள் வழியே இழுத்துச் சென்றதைப் பதிவு செய்திருக்கிறார். அன்றிரவு வேறு சில பையன்களுடன் சேர்ந்து வெள்ளை வெளேரென்றிருந்த சுவர்களில் வந்தேமாதரம் என்று அடுப்புக் கரித்துண்டால் கொட்டை கொட்டையாக எழுதினோம் என்று எழுதியிருக்கிறார். கோவை சுவர்களில் கரிக்கட்டையில் அன்று எழுதிய வந்தேமாதரம் அவருடைய மனதில் பதிந்து பின்னாளில் சுதந்திரப் போராளியாகவும் காங்கிரஸ் பேரியக்கத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ளவும் வழிவகை செய்திருக்க வேண்டும்.

பள்ளிப் படிக்கும் காலத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் தீவிர ஆர்வம் கொண்டு இருமொழிகளையும் பேசவும் எழுதவும் தன்முனைப்புடன் கற்றிருக்கிறார். இளமையில் வெள்ளைக்காரப் பிள்ளைகளுடன் விளையாட்டு மற்றும் குத்துசண்டை முதலியன போட்டியிருக்கிறார். இளமையிலேயே அவருக்குக் கிடைத்த இந்த அனுபவங்கள் பிற்காலத்தில் அவரை மகாதுணிச்சல்காரராக மாற்றியிருக்கிறது. 1918ல் முதல் உலகப்போரின் போது ஐரோப்பியப் படையில் சேர்ந்து பஸ்ரா, மெஸபடோமியா போன்ற நாடுகளில் பணியாற்றியிருக்கிறார். போர் முடிந்து ஊர் திரும்பி வந்து 1921ல் கிணத்துக்கடவைச் சேர்ந்த கோவிந்தம்மாளை மணம் செய்து கொண்டார். 1921ல் கோவைக்கு வருகை தந்த காந்தியின் உரை இத்தம்பதியரை மிகவும் பாதித்துவிட இருவரும் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து கொண்டனர். சுதந்திரப் போராட்டத்தில் தம்பதி சமேதராகப் பங்கு கொள்கின்றனர்.1923ல் கோவையில் குடியேறிய அய்யாமுத்து þ கோவிந்தம்மாள் தம்பதியினர் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு ஊர் ஊராக கதர் விற்பனையில் ஈடுபட்டனர். இக்காலத்தில் தான் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்த ஈ.வெ.ராவின் தொடர்பு அய்யாமுத்துவுக்குக் கிட்டுகிறது. கோவையில் அகில பாரத சர்க்கா சங்கத்தின் கதர் உற்பத்திசாலையை நிறுவி பணியாற்றி வருகிறார். அப்போது (1931) போலீஸ் குடியிருப்பில் அக்குடியிருப்பின் கிணற்றில் தண்ணீர் எடுக்க ஒரு தலித் போலீஸ் காவலரை மற்ற ஜாதிகளை சேர்ந்த போலீசார் அனுமதி மறுத்தனர். இதைக் கேள்விப்பட்ட அய்யாமுத்து தன் மனைவியுடன் அங்கு சென்று அந்தத் கிணற்றுக்கு அழைத்துச் சென்று அந்தப் பொதுக்கிணற்றில் தண்ணீர் இறைக்கின்றனர். ஊர்மக்கள் எல்லோருக்கும் கோபம் பொங்குகிறது. அய்யாமுத்துவை அடித்துக் கொல்ல ஒரு கூட்டம் வருவதாக செய்தி கிடைக்கிறது. அய்யாமுத்துவின் மனைவி தங்கள் கதர்க் கடைக்கு முன் ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு அய்யாமுத்துவை உட்கார வைக்கிறார். வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தைப் பார்த்து அவர் தன்னுடைய கணவர் இறந்ததும் மாரடித்து அழுவதற்கு பின்னர் வருமாறு அழைக்கிறார். இத்தம்பதியினரின் மன உறுதியினைப் பார்த்து கோவை நகரமே வாய்பிளந்திருக்கிறது அன்று.

1924ல் பெரியாரின் அழைப்பின் பேரில் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். வைக்கம் போராட்டத்தின் போது பாரதியாரின் பாடல்களை உரத்த குரலில் பாடிக்கொண்டு நகர்ப்பிரவேசம் செய்திருக்கிறார் அய்யாமுத்து. பின்னாளில் தமிழகத்தில் சுதந்திரப் போரின்போது பாரதியார் பாடல்களை பாடிச் செல்வதற்கு ஒரு முன்னோடியாக செயல்பட்டிருக்கிறார் அவர். இப்போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு பலமாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார்.சுசீந்திரம் ஆலயப்பிரவேசப் போராட்டத்திலும் தீவிரப் பங்கேற்றார். 1926ல் பாரத சர்க்கா சங்கத்தின் தமிழ்நாட்டு செயலாளர் எஸ்.இராமநாதன் வேண்டுகோளை ஏற்று எர்ணாகுளம் வஸ்திராலயத்தை வழிநடத்தினார்.1931ம் வருடம் திருநெல்வேலியில் முதலாவது விவசாயிகள், தொழிலாளர்கள் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டின் திறப்பாளராக அழைக்கப்ட்டார் அய்யாமுத்து. சர்தார் வேதரத்தினம் பிள்ளை தலைமை. திறப்புரையை பல நாட்களுக்கு முன்னரே எழுதி அனுப்பினார் அய்யாமுத்து. அதை அச்சிட்டுக் கொடுக்க பல அச்சகத்தினர் மறுத்துவிடுகின்றனர். அந்த அளவு அந்நியர் ஆட்சியை எதிர்த்துக் காட்டமாக எழுதப்பட்டிருந்தது அந்தத் திறப்புரை. அந்தக் கூட்டத்தில் வேதரத்தினம்பிள்ளை காந்தியை அரிச்சந்திரனுடன் ஒப்பிட்டுப் பேச, அய்யாமுத்து அரிச்சந்திரன் ஏற்கனவே நாடு நகரத்தை விசுவாமித்திரன் பெயருக்கு எழுதிவிட்டான். அதில் பொன்னும் பொருளும் அடக்கம். ஆனால் அவனுக்குத் தரவேண்டிய பொன்னுக்காக தானும், மனைவி மகனுடன் அடிமையான அரிச்சந்திரன் அடிமுட்டாள் என்றும் காந்தியார் அப்படிப்பட்ட முட்டாள் அல்ல என்றும் பேசியிருக்கிறார். என்ன காரணத்தால் இவரை கைது செய்யலாம் என்று பார்த்த ஆங்கிலேய அரசு அரிச்சந்திரனைப் பழித்துப் பேசியதால் இந்துக்களின் மனதைப் புண்படுத்தியதாக அவருக்கு ஆறுமாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்குப் பிறகு இவரும் இவருடைய துணைவியாரும் எண்ணிலடங்கா முறை சிறைவாசம் அனுபவித்திருக்கின்றனர்.அயர்வறியாத உழைப்பாளி என்று காந்தியாரால் பாராட்டப்பெற்ற அய்யாமுத்து 1933ல் திருப்பூர் கதர் வஸ்திராலயத் தலைவரானார். 1936ல் தமிழ்நாடு சர்க்கா சங்கத் தலைவரானார். பம்பரம் போல் சுழன்று பணியாற்றி இழப்பில் இருந்த அந்த சங்கத்தை லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றினார். 1940 வரை கதர் இயக்கத்தின் தீவிர வெற்றிக்குக் காரணமாக இருந்தனர்.

1932ல் காந்தியடிகள் சிறைப்பிடிக்கப்பட்டதை எதிர்த்துப் போராடியதால் ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை பெற்றார் அவருடைய துணைவியார். அதேபோல அய்யாமுத்துவும் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை அடைத்திருக்கும் கண்டம்டு செல்லில் கால்களில் இரும்பு வளையங்கள் பூட்டி அடைக்கப்பட்டார். 1934ல் திருப்பூரில் அகில பாரத சர்க்கா சங்கக் காதிவஸ்திராலய முதல்வராகப் பணியில் இருந்தபோது அவருடைய தாயார் இறந்த செய்தி வருகிறது. அந்த நேரம் அய்யாமுத்துவின் துணைவியார் கோவிந்தம்மாள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கோவையில் அவருடைய சொந்தங்கள் மற்றும் ஜாதியினரின் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் தலித் மாணவர்களுக்குப் பாடசாலை நடத்தினார். உண்மை நாடுவோர் சங்கம் ஒன்றை நிறுவி கிராம வாலிபர் பலர் அதில் பங்கு கொண்டு பல விஷயங்களைப் பற்றி விவாதிக்கச் செய்தார். இந்த நேரத்தில் பஞ்சமாபாதகங்கள் என்னும் ஒரு நூலை எழுதிகிறார் அய்யாமுத்து. இந்நூலைப் பற்றி பெரியார் குடியரசுவில் மிகவும் பாராட்டி தலையங்கம் எழுதியிருக்கிறார். இந்நிலையில் ஒரு நாள் பெரியார் இவரைத் தேடிக்கொண்டு இவர் இருந்த புளியம்பட்டிக்கே வந்திருக்கிறார். ஈரோட்டிலிருந்து வெளிவரும் குடியரசு வாரப்பத்திரிகையில் எழுதச் சொல்லிக் கேட்டுக் கொள்ளவே பல கட்டுரைகளை குடியரசில் எழுதியுள்ளார். சில சமயம் தான் எழுதாதவைகளையும் பெரியார் பிரசுரித்ததாக ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். பின்னர் பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க சென்னைக்குக் குடிபெயர்ந்த குடியரசு பத்திரிகையின் நிர்வாகப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார் அய்யாமுத்து. நட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த குடியரசு சென்னைக்கு வந்ததும் அய்யாமுத்துவின் நிர்வாகத்தில் செழிக்கத் துவங்கியது. நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் முன்னர் அய்யாமுத்துவின் அனைத்து நிபந்தனைகளையும் பெரியார் ஏற்றார். ஒரு நாள் பகல் குடியரசு அலுவலகத்தில் கண்ணப்பரும் பெரியாரும் சாப்பிட உட்கார்ந்திருக்கிறார்கள். பெரியார் வந்ததைத் தெரிந்து கொண்ட அய்யாமுத்துவின் துணைவியார் எப்போதையும் விசேஷமாகவும் அதிகமாகவும் சாப்பாடு அனுப்பியிருக்கிறார். ""அய்யாமுத்து தனது யோக்கியதைக்கு மீறிய சாப்பாடு சாப்பிடுகிறார்'' என்று கண்ணப்பனிடம் பெரியார் சொன்னது இவர் காதில் விழுந்திருக்கிறது. உடனே மேஜை மேல் இருந்த சாவியை எடுத்து பெரியாரின் முகத்தில் விட்டெறிந்து நில்லாமல் சொல்லாமல் வீடு போய் சேர்ந்திருக்கிறார். வீட்டுக்கும் ரயில் நிலையத்துக்கும் தேடி வந்த பெரியாரால் இவரை சமாதானப்படுத்த முடியவில்லை. ஆனால் இந்த சம்பவம் பெரியாருடன் அய்யாமுத்து வைத்திருந்த நட்பினை முறித்துவிட வில்லை. வேறு பல சந்தர்பங்களில் சுயமரியாதை மாநாடுகளின்போதும் பொதுக்கூட்டங்களின்போதும் இருவரும் இணைந்து பணியாற்றியிருக்கின்றனர். பல மாநாடுகளின் தீர்மானங்களின்போது பெரியாரை மிகவும் பலமாக ஆதரித்து இருக்கிறார் அய்யாமுத்து. அதேபோல பெரியாரும் அய்யாமுத்துவைப் பற்றி பல இடங்களில் மிகவும் அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார். ம.பொ.சிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அஞ்சா நெஞ்சன் என்ற பெயருக்கு மிகவும் தகுதி வாய்ந்தவர் அய்யாமுத்து என்று பதிவு செய்திருக்கிறார்.

அதே போல அய்யாமுத்து மகாத்மா காத்தியையும் விட்டுவைக்கவில்லை. காதி வஸ்திராலயம் தொடர்பான ஒரு விஷயத்தில் நியாயத்துக்காக மிகவும் வலுவாகப் போராடினார். இவருடைய வாதத்தில் இருந்த உண்மையைக் காந்தி இவரிடம் மன்னிப்புக் கேட்டு மன்னிப்புக் கடிதம் ஒன்றினை எழுதியிருக்கிறார்.ஒரு கட்டத்தில் காந்தியுடனான இவருடைய தகராறு முற்றி காந்தியடிகள் இவரிடம் ஒரு கடிதம் கொடுத்தார். அதில்

My dear ayyamuthu

I do hereby resign my President ship of the All India Chakra Sangh.

Yours truly,

Bapu.
என்று எழுதப்பட்டிருந்தது. அதற்கு அய்யாமுத்து காந்தியிடம்,

Why to me? Give it to your creator
என்று சொல்லி அந்தக் கடிதத்தை காந்தியிடமே திருப்பிக் கொடுத்தார்.
Oh, you want me to send my resignation to my Creator and you submit yours to me. That won't do. Now I tear both. Get back to Tirupur and carry on as usual as a good boy
என்று அய்யாமுத்துவை கஸ்தூரிபாய் அவர்களிடம் அனுப்பி சாப்பிட்டு விட்டு போகச் சொல்லியிருக்கிறார் காந்தியடிகள்.இவர் ராஜாஜியை தந்தையென்று அழைப்பார். ராஜாஜி என் தந்தை என்னும் தலைப்பில் ஒரு நூலே எழுதியுள்ளார். பிற்காலத்தில் 1960லிருந்து 1967 வரை அதாவது திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ராஜாஜி உறவு கொண்டது வரை சுதந்திராக் கட்சியில் இருந்தவர் அய்யாமுத்து. ராஜாஜியுடன் அவர் தனித்து உரையாடிக் கொண்டிருந்தபோது ஒருமுறை கோவையில் சுதந்திராக் கட்சிக்கு தனித்த அலுவலம் வேண்டும் என்றிருக்கிறார். எதற்கு சீட்டாடவா என்று கேட்டாராம் ராஜாஜி. பத்திரிகை வேண்டும் என்று கேட்டதற்கு சுயவிளம்பரம் தேடிக்கொள்ளவா என்றாராம் ராஜாஜி. அதற்கு அய்யாமுத்து, உங்கள் கட்சி உருப்படாது என்றும் இப்போதுள்ள நிலையில் இன்னும் ஆயிரம் வருஷத்துக்கு முயன்றாலும் உங்கள் கட்சி ஜெயிக்காது என்று ராஜாஜியின் முகத்தில் அடித்துச் சொல்லியிருக்கிறார்.நாற்பதுகளில் கதர் இயக்கத்துக்காகக் குடிநூல் என்னும் இதழை நடத்தி வந்தார். 1950ல் நாசிக் காங்கிரஸ் மாநாட்டுக்குப் பின் தீவிர அரசியலை விட்டு ஒதுங்கினார். 1951ல் கோவை þ பொள்ளாச்சி சாலையில் கோதைவாடி என்னும் ஊருக்கு அருகில் 23 ஏக்கர் நிலம் வாங்கி காந்தி பண்ணை என்று பெயரிட்டு வேளாண்மை செய்து வந்தார். தம் இல்லத்துக்கு ராஜாஜி இல்லம் என்று பெயர் சூட்டினார்.
மூன்று முறை இதயநோயால் தாக்கப்பட்டு நலிவுற்ற அய்யாமுத்து 21-12-1975ல் காலமானார். இவர் காலமான அடுத்த வாரமே 27-12-1975ல் இவருடைய துணைவியார் கோவிந்தம்மாளும் காலமானார்.

தங்கள் மறைவுக்கு முன் தங்கள் நிலத்தை நாட்டுப் பணிக்குப் பயன்படுத்தும்படி அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களுக்கு ஒப்படைத்தனர் இந்த ஆதர்சத் தம்பதியினர். இப்போது அந்நிலம் சர்வோதய சங்கத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.அய்யாமுத்துவின் என் நினைவுகள் என்ற நூலின் தனிச்சிறப்பு என்று சொல்வதற்கு அதில் செய்யப்பட்டுள்ள மிக நேர்மையான பதிவுகள். அதேபோல காலம் மிக அற்புதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல அரசியல் ஜாம்பவான்களால் எழுதப்பட்ட சுயதம்பட்டங்களும் சொந்தக் கதைகளும் விஷயமங்களும், பொய்யும் புனைசுருட்டுக்களும் மிகுந்த சுயவாழ்க்கை வரலாற்றுக் குப்பைகளைப் படித்துச் சலித்துப்போன தமிழனுக்கு ஒரு வாழ்க்கை வரலாற்றினை எத்தனை நேர்மையாக எழுதமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது இவருடைய எனது நினைவுகள் .அரசியல் மட்டுமல்லாது பல துறைகளில் ஆர்வம் கொண்டு விளங்கியிருக்கிறார். அந்தக் கால நாடகங்கள் பற்றிய அவருடைய பதிவுகள் நாடகங்களில் ஆய்வு செய்பவர்களுக்கு கிடைத்த மிக அற்புதமான பொக்கிஷம். திரையை விலக்கியதிலிருந்து கட்டியக்காரன் பிரவேசம், ராஜபார்ட், ஸ்திரீபார்ட் பிரவேசத்திலிருந்து நாடகப் பாடல்முறைகள், இசைவகைகள் போன்றவற்றை மிகவும் விரிவாக எழுதியிருப்பார். அவரே எழுதிய இன்பசாகரன் என்னும் நாடகம் அந்தக்காலத்தில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட ஒன்று. ராஜபக்தி என்னும் அரசியல் நாடகம் பல சர்ச்சைகளைக் கிளப்பியது. இந்த நாடகம் எழுதியதற்காகவும் கைது செய்யப்பட்டிருக்கிறார். பின்னாளில் நவாப் டி.எஸ்.ராஜமாணிக்கம் பிள்ளையுடன் ஆழ்ந்த நட்பு பூண்டிருக்கிறார் அய்யாமுத்து. நவாப் ராஜமாணிக்கத்துக்கு மிகவும் ஆதரவாக இருந்து அவருக்குத் திருமணம் செய்வித்ததல்லாது அவருடைய மகனுடைய திருமணத்தையும் நடத்தி வைத்தார் அய்யாமுத்து. தொழுநோயால் பாதிக்கப்பட்ட கோவிந்தன் என்னும் தொழில்முறை நடிகருக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததோடு மட்டுமல்லாது அவருக்குப் பலவகைகளிலும் உதவியர்கள் அய்யாமுத்து தம்பதியினர். ராஜமாணிக்கம் பிள்ளையை திரைப்படங்களிலும் அறிமுகப்படுத்தினார். அய்யாமுத்துவே மோலியரின் கஞ்சன் என்னும் நாடகத்தைத் தழுவி திரைப்படமாக எடுத்தருக்கிறார். இது அக்காலத்தில் மிகவும் வெற்றிகரமாக ஓடிய திரைப்படம். பாரதிதாசனுக்கு மிகநெருக்கமான நண்பராக இருந்திருக்கிறார் அய்யாமுத்து. பாரதிதாசனின் கவிதா மண்டலத்தில் அய்யாமுத்துவின் பல கவிதைகள் பிரசுரமாகியிருக்கின்றன. இவருடைய தேய்ந்த லாபம் என்னும் கவிதைத் தொகுப்பு பாரதிதாசனால் வெளியிடப்பட்டது.அய்யாமுத்து எழுதிய நூல்கள் þ தேசத்தொண்டனும் கிராமவாசியும், பஞ்சமா பாதகங்கள், மேயோ கூற்று மெய்யா பொய்யா (இதை பெரியார் பதிப்பித்தார்) இராமசாமியும் கதரும், நச்சுப்பொய்கை, இராஜபக்தி, மேவாரின் வீழ்ச்சி, பிச்சைக்காரி, அக்காளும் தங்கையும், நாட்டுப்புறம், சோசலிசம், சுதந்திரா கட்சி ஏன், எங்கே செல்கிறோம், சுதந்திரனுக்கு முன்னும் பின்னும், சென்னை சர்க்காரின் கதர்த்திட்டம், திருவிழா போன்றவை. இந்த நூல்கள் எவையும் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் நூலகத்தில் இல்லை.நான் ஏற்கனவே சொன்னதுபோல இவருடைய பதிவுகள் மிகவும் அற்புதமானவை. நேர்மையானவை. அவற்றில் ஒன்றிரண்டைப் படித்து என் உரையை முடிக்கிறேன்.அக்கால நாடகங்கள் பற்றி எழுதியிருப்பார் þசாம்பிராணிப்புகை காட்டுவார்கள். முன்திரை தூக்கப்படும். பபூன் என்னும் கோமாளி ஆடிப்பாடி மேடையில் காட்சியளிப்பான். அவனைத் தொடர்ந்து சூத்திரதார் வருவார். புல்லாகிப் பூடாகிப் புழுவாகி... எல்லாப் பிறப்பிலும் மானிட ஜன்மமே சிறந்ததென ஒரு சிற்றுரை ஆற்றி சரஸ்வதியை ஸ்தோத்திரம் செய்வார்.சரஸ்வதி வேடம் தாங்க ஆள் இருந்தால், சரஸ்வதி பிரத்யட்சமாவாள். இல்லையேல் திரையின் பின்னாலிருந்து சரஸ்வதியின் குரல் மட்டுமே கேட்கும்.தாயே இன்று இன்ன நாடகம் நடத்த உத்தேசித்திருக்கிறோம். அது நன்கு நிறைவேற அருள்புரிய வேண்டுமென சூத்திரதாரர் சரஸ்வதியிடம் வரம் கேட்பார்.அப்படியே ஆகட்டும் என சரஸ்வதி அருள்புரிவாள்.தட்டுவாணி நமஸ்கரிக்கிறேன். என்பான் கோமாளி.தூஷித்த நீ ஊமையாகக் கடவது என்று சபிப்பாள் சரஸ்வதி. கோமாளி ஊமையாகித் ததாபுதா என்பான்.தாயே தட்டு என்றால் கமலம். வாணியென்றால் சரஸ்வதி. தங்களை கமல சரஸ்வதி என்றுதானே விளித்தான் அவன். அதற்காகத் தாங்கள் கோபம் அடையலாமா என்று சூத்திரதாரர் பரிவுடன் சரஸ்வதியுடன் மன்றாடுவார். அவனது விகடத்தை மெச்சினேன். அவன் வாய்திறந்து பேசுவானாக என்று சரஸ்வதி கூறவும் விதூஷகன் வாய்திறந்து வணக்கம் தானே என்பான்.இப்படிப்போகும் பதிவுகள்.அதே போல கோவை மாநகரம் பற்றியும் அதன் தொழிலாளர்கள் பற்றியும் நாதஸ்வர வித்வான் அங்கண்ணன் பற்றியும் கோவையில் பிளேக் நோய் பரவியது பற்றியும் அவருடைய பதிவுகள் மிகவும் சுவாரசியமானவை.படிக்கப் படிக்க சுவாரஸ்யம் ஊட்டும் பதிவுகள் அவை. இதை நான் மேலும் படிப்பதை விட திரு.பெருமாள் அவர்கள் இந்தக் கட்டுரைக்காக எனக்குக் கொடுத்த அய்யாமுத்துவின் எனது நினைவுகள் நூலை அவருடைய அனுமதியுடன் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் நூலகத்துக்கு அளிக்கிறேன். என்னுடைய இந்தக் கட்டுரையால் உந்தப்பட்டு அய்யாமுத்துவை யாரேனும் ஒருவராவது அதைப் படிப்பார்கள் என்றால் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவேன்.நன்றி.

வணக்கம்.

Friday, June 22, 2007

கொடுமுடி தந்த கோகிலம் - கே.பி.சுந்தராம்பாள்

ராகவன் தம்பி

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் தடம் பதித்த தமிழர்கள் தொடர் சொற்பொழிவுக் கூட்டத்தில் ஆற்றிய உரை

அனைவருக்கும் வணக்கம்.

உலக அரங்கில் பொதுவாக ஒரு குற்றச்சாட்டு மிகவும் வலுவாக நிலவி வருகிறது. அது இந்தியர்களுக்கு வரலாற்றுணர்வு மிகவும் குறைவு என்பது. அதிலும் தமிழர்களுக்கு எல்லோருக்கும் உரியதற்கு மேல் மிகப் பெரும் உண்டு. தமிழர்களுக்கு மிகப்பெரிய அளவிலான ஞாபகசக்திக் குறைச்சலும் தனிக்குணமாக அமைந்தது. அதன் நேரடி நிரூபணம் தேர்தல் நேரங்களில் நிகழும் அதிரடியான உட்டாலங்கடி அணிமாற்றங்கள். தானைத்தலைவர் வேறு ஏதாவதாக ஆகிவிடுவார். அன்பு சகோதரி ராவணணின் சகோதரியாக மாறிவிடுவார். சுருக்கமாக நேற்றைய சரித்திரம் பற்றிய பிரக்ஞை இன்று நமக்கு இருப்பதில்லை.

விமரிசகர் வெங்கட்சாமிநாதன் சொல்வது போல, பிராபல்யத்தின் முன், அதிகாரத்தின் முன், வாழ்க்கை மதிப்புக்களை நாம் அறவே மறந்து விடுகிறோம். ஏதோ ஒரு திறமையின் மூலம் (அத்திறமை அத்துறை சார்ந்ததாக இல்லாமலேயே இருக்கலாம்) ஒரு துறையில் ஒருவர் பிராபல்யமும் பணபலமும் பெற்று விட்டால் அவர் அத்துறைக்கு “சேவை செய்தவராகக் கொண்டாடப் படுகிறார். அவர் சமூகத்துக்கு அத்துறைக்கு கொடுத்ததுதான் என்ன என்று நாம் யோசிப்பதில்லை. இன்றைய சினிமா மற்றும் அரசியல் துறைகளில் பெரும் சக்திகளாகக் காணப்படுபவர்கள் பெரும்பாலோர் நாம் மதிக்கத் தேவையில்லாதவர்கள். வெறும் பிராபல்யமும் ரசிகக் கூட்டமும் ஒருவருடைய கலை மேதைமையை நிர்ணயிப்பதில்லை என்கிற உண்மையை நாம் பல வருடங்களாக ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதம் பிடித்து வருகிறோம்.

என்னுடைய நேரடிப் பார்வையில் நிகழ்ந்த ஒரு நகைச்சுவைக் காட்சியை இங்கு குறிப்பிட்டால் தவறாகாது என்று நினைக்கிறேன். திரைப்படங்களில் ஆபாசமான, இரட்டை அர்த்தம் தொனிக்கும் வரிகளைப் பாடி திரைப்படங்களில் பிராபல்யம் அடைந்த ஒரு பாடகியை ஒரு நிகழ்ச்சியில் அந்தப் பெண் தான் படித்த பள்ளிக்குப் பெருமை சேர்த்திருப்பதாக மேடையில் மிகவும் பெருமிதத்துடன் அறிவிப்பு செய்தார்கள் சில பள்ளி ஆசிரியைகள். இது மிகவும் வேதனை கலந்த நகைச்சுவையாக அன்று எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது.

எனவே தமிழ்ச் சமூகத்தில், பிராபல்யம் - அதைத் தொடர்ந்த பலத்தின் முன்னால் மேடையேற்றும் நகைச்சுவைக்காட்சிகள் மிகவும் அதிகம். இத்தனை கதையையும் ஏன் சொல்கிறேன் என்றால் தமிழின் அரசியல் மற்றும் திரையுலகின் பிரபலங்களில் பெரும்பாலோர் நாம் மதிக்கத் தேவையில்லாதவர்கள். அவர்கள் தம்மை வளர்த்துக் கொண்டவர்கள். இதற்கு நேர் எதிரான குணம் கொண்ட சிலர் நேற்றைய வரலாற்றில் இருந்தார்கள். அவர்களுடைய திறன் அவர்கள் கலையின் மீதும், மொழியின் மீதும், தேசத்தின் மீதும் கொண்டிருந்த அப்பழுக்கில்லாத பற்று அவர்கள் வாழ்ந்த துறைக்கு வளம் தந்தது. அவர்கள் பதித்த தடங்கள் என்றும் நம் நினைவில் நீங்காமல் நிற்க வேண்டியவை. இந்தத் தடங்கள் நம் வரும் தலைமுறைக்கு நாம் சேமித்து வைக்கும் ஒரு நிதியாகப் பாவிக்க வேண்டியவை.

நேற்றைய வரலாற்றில் செவ்வனே வாழ்ந்து தன்னுடைய தனிப்பட்ட திறனாலும், தேசப்பற்றினாலும் கலையின் மீது கொண்ட காதலினாலும் மிகவும் தனித்த தடங்களைப் பதித்தவர் கே.பி.சுந்தராம்பாள் அம்மையார். கொங்குநாடு தமிழுக்குப் பல தங்கங்களைத் தந்துள்ளது. சி.விஜயராகவாச்சாரியார், பி.சுப்பராயன், டி.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார் (இவர் பெண் கல்வியை முதன்மைப் படுத்தியவர்), நாமக்கல் கவிஞர், பெரியார் ஈ.வெ.ரா, அய்யாமுத்து கவுண்டர், கொடுமுடி கே.பி.சுந்தராம்பாள் போன்ற பல தங்கங்களை நமக்குக் கொங்கு தந்துள்ளது. கரூருக்கு அருகில் உள்ள பாண்டி கொடுமுடியில் ஒரு சிறு குடிலில் அக்டோபர் 11, 1908 ல் பிறந்தவர் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள். நாவுக்கரசராலும், ஞானசம்பந்தராலும் பாடல் பெற்ற ஸ்தலம் கொடுமுடி. சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு ஒரு திருப்பதிகம் அருளியிருக்கிறார். இவருடைய தந்தையாரைப் பற்றிய குறிப்புக்கள் எங்கும் கிடைக்கவில்லை. மிகவும் ஏழைக்குடும்பம். ஐந்து வயது சுந்தராம்பாளை அழைத்துக் கொண்டு அவருடைய தாயர் பாலாம்பாள் கரூரில் குடியேறினார். குரலும், சங்கீத ஞானமும் சுந்தராம்பாளுக்கு இயற்கை அளித்த கொடை. முறையான பாடாந்திரங்கள் ஏதுமின்றி, கேள்வி ஞானத்திலேயே பாட்டுத்திறனை பாங்கு படுத்திக் கொண்டார். ஏற்கனவே சொன்னது போல மிக வறிய குடும்பம். உடல் நலம் குறைந்த தாயார். எட்டு வயதுச்சிறுமியான சுந்தராம்பாள், தன் தாயாருக்கும் பணிவிடைகள் செய்து, கரூரைக் கடந்து செல்லும் ரயில் வண்டிகளில் ஏறி தன் இனிய குரலால் பாடல்கள் பாடி பயணிகள் பாராட்டி அளிக்கும் தொகையினைக் கொண்டு அந்தக் குடும்பம் வாழ்ந்திருக்கிறது. பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில், பேசும்படம் பத்திரிகைக்கு எழுபதுகளில் அளித்த ஒரு பேட்டியில், ரயில் பயணத்துடன் என் இசைப்பயணம் தொடர்ந்திருக்கிறது. மிகக்கடுமையாக இரைச்சலிடும் ரயில் வண்டியில் பல நாட்கள், மாதங்கள், வருடங்கள் பாடியதால் அந்த இரைச்சலுக்கு சவால் விட்டு என் குரல் வளர்ந்திருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அதேபோல, எந்த குருவிடமும் சென்று பாட்டு கற்றுக்கொள்ளும் அளவு வசதியில்லாத நிலை. எனவே கொடுமுடியை சுற்றி நடக்கும் நாடகங்களும் அவற்றில் பாடி நடித்த நடிகைகளும், நடிகர்களும் அவருக்கு மானசீக குருவாக அமைந்திருக்கின்றனர்.

எந்தப் பாடலைக் கேட்டாலும் அது எந்த சுருதியில் அமைந்திருந்தாலும் ராகமும் சுருதியும் வழுவாது அப்படியே பாடிக் காட்டும் வல்லமை பெற்று இருந்திருக்கிறார் கேபிஎஸ் அவர்கள். அவருடைய இசைவாழ்க்கை துவங்கிய காலத்தில் பாட்டுத்தான் நாடகம். பாடடை வைத்துக் கொண்டு என் பெயர் கொடுத்தாலுலிó பாட்டு ஒன்றுதான் எஞ்சி நிற்கும். நாடக மேடையை இசை வல்லுநர்கள்தான் ஆக்கிரமித்து இருந்திருக்கின்றனர். எனவே நாடகப் பார்வையாளர்களுக்குப் பாட்டுத்தான் நாடகமே. பின்னாளில் திரைப்படங்களிலும் இது தொடர்ந்திருக்கிறது.

மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், முசிரி சுப்பிரமணிய அய்யர், ஜி.என்.பாலசுப்பிரமணியம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, என்.சி.வசந்தகோகிலம், எம்.கே.தியாகராஜபாகவதர், சின்னப்பா, ஹொன்னப்பா பாகவதர், கொத்தமங்கலம் சீனு போன்ற சிறந்த பாடகர்கள் திரைப்படங்களிலும் ஜொலித்தார்கள். 10 வயது சுந்தராம்பாள் ரயிலில் வழக்கம் போல பாடிச் சென்று கொண்டிருக்கிறார். அந்த ரயில் வண்டியில் அன்று சுந்தராம்பாளின் விதியும் சேர்ந்து பயணித்திருக்கிறது. அந்தக்கால நாடக நடிகரும், தயாரிப்பாளருமான நடேச அய்யர் அந்த வண்டியின் ஒரு பெட்டியில் பயணித்திருக்கிறார். மிகவும் அற்புதமாகப் பாடிச் செல்லும் ஒரு பெண். நிரவல்களை அநாயாசமாக அள்ளி வீசுகிறாள். கமகங்கள் அவள் காலடியில் சேவகம் செய்யக் காத்து உடன் பயணித்து வருகிறது. பாடிச் செல்லும் சுந்தராம்பாளைப் பின் தொடர்ந்து சென்று கேட்கிறார் அய்யர்,

"நான் உனக்கு வழி காட்டுகிறேன். என்னுடன் வருவாயா?''

எவ்விதத் தயக்கமுமின்றி அந்தச் சிறுபெண் தலையாட்டுகிறது. தமிழிசை வரலாற்றில் ஒரு புதிய தடம் அந்த ஓடும் புகை வண்டியில் பிறக்கிறது. தன்னுடைய தாயாருடன் மீண்டும் நடேச அய்யரை சந்திக்கிறாள் அப்பெண். நடேச அய்யர் அந்தப் பெண்ணையும் அவள் தாயார் பாலாம்பாளையும் கரூரில் மூத்த போலீஸ் அதிகாரியாக இருந்த கிருஷ்ணசாமி அய்யரிடம் அழைத்துப் போகிறார். கிருஷ்ணசாமி அய்யர் மிகவும் வித்தியாசமான ஒரு போலீஸ் அதிகாரி. கலைகளை நேசித்தவர். நாடகங்களை ஆதரித்தவர். இசையை சுவாசித்தவர். அவரும் அந்தப் பாடச் சொல்லிக் கேட்கிறார். அந்தப் பெண்ணிடம் ஒளிந்துள்ள திறமை அவரை வியப்படைய வைக்கிறது. உடனே கரூரில் முகாமிட்டிருந்த பி.எஸ்.வேலு நாயரின் நாடகக் குழுவில் கே.பி.சுந்தராம்பாளை சேர்த்துவிடுகிறார்.

இப்படியாக சுந்தராம்பாளின் நாடக மேடைப்பிரவேசம் 1917ல் வேலு நாயரின் குழுவினர் நடத்தி வந்த நல்லதங்காள் நாடகத்தில் ஏழு பிள்ளைகளில் ஏழாவது குழந்தையாக வேடமேற்றுத் தொடங்கியது. அதன் பிறகு அவருடைய கலைப்பயணம் பல சிகரங்களைத் தொட்டுச் சென்றது. இவருடைய பாடல்களைக் கேட்டு ஆண்டிப்பட்டி ஜமீந்தார் 9 பவுன் சங்கிலியைப் பரிசளித்தார். இவர் மேலும் இசையை மெருகேற்றிக்கொள்ள பொருளுதவியும் வழங்க இசைந்தார்.மிக அநாயசமான மேல் ஸ்தாயி சஞ்சாரம். பாசாங்குகள் இல்லாது வெளிப்படும் உணர்ச்சிகள். மிகத் தெளிவான உச்சரிப்பு. இசைத்தமிழை அழகுப் பதுமைகள் சிங்காரித்த சிங்காதனத்தில் ஏற்றி அழகு பார்த்தார் கே.பி.எஸ். கே.பி.எஸ்ஸின் இசை ஜாலம் நாடக மேடையைத் தன் வசம் வைத்து பல ரசிர்களை வசீகரித்து வந்தது. ஏற்கனவே ஓரிடத்தில் குறிப்பிடப் பட்டிருப்பதுபோல இசைக்கலைஞர்கள் நாடகமேடைகளை ஆண்ட நேரமது. கன்னையா கம்பெனியின் எஸ்.ஜி.கிட்டப்பா, எஸ்.ஜி.சுப்பையா பாகவதர், தேவுடு அய்யர், காதர் பாட்சா, ரத்னாபாய், அனந்தநாராயணன், செல்லப்பா, பாஸ்கரதாஸ், ராவ் பகதூர் ராமானுஜாச்சாரியார், டாக்டர் நடேசன், டாக்டர் ஸ்ரீனிவாசராகவன், சுந்தரராஜன், ஆச்சார்யா, கிருஷ்ணசாமி அய்யங்கார் போன்றோர் தமிழ் நாடக மேடையின் சக்ரவர்த்திகளாகவும் முடிசூடா மன்னர்களாகவும் பட்டத்து அரசிகளாகவும் உலா வந்த நேரம். சுந்தராம்பாளின் புகழ் பல மேடைகளில் பல நகரங்களில் கிராமங்களில் பரவியது. கடல் கடந்தும் அவருடைய நாடகங்கள் பேசப்பட்டன.

அதே நேரத்தில் நாடக மேடைகளின் முடிசூடா மன்னராக எஸ்.ஜி.கிட்டப்பா தன்னுடைய அற்புதமான குரல் வளமையினாலும் இனிமையினாலும் அனைவரையும் கிறங்கடித்துக் கொண்டிருந்தார். அவரும் காதர் பாட்சா என்னும் ஆர்மோனியக் கலைஞரும் சேர்ந்து வாசித்துப் பாடும் இனிமையைக் கேட்க பல கிராமங்களில் இருந்து வண்டிகளைக் கட்டிக்கொண்டு ரசிகர்கள் வருவார்களாம். எஸ்.ஜி.கிட்டப்பாவுக்கு சுந்தராம்பாளின் குரல் வளமையைப் பற்றிய செய்தி செல்கிறது. அவரை சந்திக்க மிகவும் ஆவல் கொள்கிறார் கிட்டப்பா. அந்த நேரத்தில் இலங்கையிலுள்ள கொழும்புவில் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார் சுந்தராம்பாள். அவருடைய நடிப்பையும் பாடலையும் கேட்க கொழும்பு விரைகிறார் கிட்டப்பா. அந்த சந்திப்பு காதலாக மலர்கிறது. இரு காந்தர்வர்களும் மணவாழ்வில் இணைந்தனர்.

கிட்டப்பாþசுந்தராம்பாள் நாடகங்களுக்கு மவுசு இன்னும் அதிகமாகக் கூடியது. நல்லதங்காள், கண்டிராஜா, செüந்தரி போன்ற ஸ்பெஷல் நாடகங்கள் சக்கைப் போடு போட்டன. கே.பி.எஸ்.தாணு அம்மாள் குழுவிலும் இருவரும் இணைந்து ஸ்பெஷல் நாடகங்கள் மேடையேற்றினர். கிட்டப்பாþசுந்தராம்பாள் இருவரும் ராகமாலிகையில் வல்லவர்கள்.

ஸ்ரீ வள்ளி திருமணத்தில் அவர்களுடைய ராகமாலிகையில் அமைந்த தர்க்கப்பாடல்கள் மிகவும் பிரசித்தம். (கிட்டத்தட்ட உருது கவாலி போல இருக்கும். இப்போதைக்கு வழக்கத்தில் இல்லை) (கோடையிலே இளைப்பாறி...) 

சுந்தராம்பாளைப் பற்றிப் பேசும் இந்த மேடையில் கிட்டப்பாவைப் பற்றி சொல்லாமல் போவது மிகப்பெரிய பாவமாகும் என்று நினைக்கிறேன்.

நான் ஒன்றும் சொல்லவில்லை. அக்ரகாரத்தின் அதிசயம் என்று அண்ணாவால் புகழப்பட்ட வ.ரா. என்று அழைக்கப்படும் வ.ராமசாமியின் வார்த்தைகளிலேயே சொல்கிறேன். ""நூறு ரூபாய் கொடுத்து குழந்தைகளுக்கு சங்கீதம் பயிற்றுவித்தாலும் முழுசாக ஒரு கீர்த்தனையாவது உருப்படியாக அவர்களுக்குப் பாடவமாவதில்லை. ஆனால் பத்து மைல் நடந்து இரண்டணா டிக்கெட் வாங்கி தரையில் உட்கார்ந்து கிட்டப்பாவின் நாடகம் பார்த்த மாட்டுக்காரப் பையன்கள் அழகாகப் பாடத் துவங்கிய விந்தையைக் கண்டு நான் ஆனந்தப்பட்டிருக்கிறேன்.(கலையும் வாழ்க்கையும்)கிட்டப்பா தோன்றும் வரையில் பாமரர்களுக்கு சங்கீதம் தேவையில்லை என்பது போல வித்வான்கள் நடந்து வந்தார்கள். ஆனால் பாமரனுக்கும் ரசிகத் தன்மை உண்டு என்று நிரந்தர உண்மையை நிலைநாட்டிய பெருமை கிட்டப்பாவை சேரும்.இதுவும் வ.ரா.கிட்டப்பா பிறந்தது 1906. சொல்லப்போனால் இந்த ஆண்டு அவருக்கான நூற்றாண்டு. இதை தமிழ் அமைப்புக்கள் எத்தனை விமர்சையாககக் கொண்டாடி வருகிறார்கள் என்பதை நாம் பார்த்து வருகிறோம் இல்லையா.


இப்போது என்னுடைய இந்த உரையின் துவக்கப் பத்திகளைப் பற்றி உங்கள் நினைவுகளை பின்னோக்கிக் கொண்டு வாருங்கள். கிட்டப்பா சுந்தராம்பாள் ஜோடி மிகவும் பிரசித்தம் கிட்டப்பா ஏற்கனவே மணம் முடித்தவர். ஆயினும் அவருக்கு உற்ற மனைவியாக சுந்தராம்பாள் அவருடைய மற்றொரு குடும்பத்தையும் உயிராக நேசித்தார். இடையறாத குடிப்பழக்கம் கிட்டப்பாவின் உடல்நிலையை பாதித்துக் கொண்டிருந்தது. சில நேரங்களில் சுந்தராம்பாள் மேல் காட்டிய ஆதிக்கபூர்வமான உறவு இருவருக்கும் இடையில் சில விரிசல்களை அடிக்கடி ஏற்படுத்தியது. சுந்தராம்பாள் அம்மையார் கிட்டப்பாவுடன் அடிக்கடி பிணக்கு ஏற்பட்டு கரூர் சென்று விடுவார். நாங்கள் கோவை செல்லும் வழியில் அம்மையாரை அவருடைய கரூர் வீட்டில் சந்தித்து வருவோம்.. எனக்கு அவர் ஒரு தாயின் பரிவுன்புடன் பல தனிப்பாடல்களை கற்றுத் தந்திருக்கிறார், என்று அவ்வை தி.க.சண்முகம் தன்னுடைய மேடை நாடக நினைவுகள் நூலில் குறிப்பிட்டு இருக்கிறார்.


கிட்டப்பா சுந்தராம்பாள் மணவாழ்வு சில வருடங்களே நீடித்தது. 1932ல் கிட்டப்பா நோய்வாய்ப்பட்டு மிகச் சிறிய வயதிலேயே இறந்தார். கிட்டப்பா இறந்த செய்தி கேள்விப்பட்டவுடன் தன்னுடைய அன்புக்கணவர் கடனாளியாகப் போகக்கூடாது என்று உடனடியாக 18000 ரூபாய் எடுத்துச் சென்று அவருடைய வீட்டுக்கு ஓடியவர் கே.பி.எஸ். கிட்டப்பா மறைந்தபோது சுந்தராம்பாளுக்கு வயது 27. .அன்றிலிருந்து வெண்ணிற ஆடை உடுத்தி, வெண்ணீறு அணிந்து இளமையைத் துறந்து முதுமையைப் பூண்ட இன்னொரு காரைக்காலம்மையாரை இருபதாம் நூற்றாண்டு கண்டது. கிட்டப்பா ஒரு பிராமணர். அவரை சுட்டெரித்தார்கள். அவருக்கென நினைவாலயம் இல்லை. ஆனால் தன்னையும் தன்னுடைய வெண்கலக் குரலையும் கிட்டப்பாவுக்கு எழுப்பப்பட்ட நடமாடும் நினைவாலயமாக மாற்றிக்கொண்டார் சுந்தராம்பாள். அந்த நினைவாலயத்தின் ஆலய மணியாகத் தன் குரலை மாற்றினார். இறைப்பணி மற்றும் தேசப்பணிக்கு மட்டுமே அக்குரலை அர்ப்பணம் செய்தார். வெண்கலக்குரலின் மகிமையில் நாடகம் மற்றும் திரையிசை பக்தி இசையாக மலர்ந்தது. கிட்டப்பாவின் மறைவுக்குப் பின் எந்த நாடகத்திலும் பங்கேற்காமல் ஒரு துறவு நிலையைப் பூண்டார் சுந்தராம்பாள். ஆனால் அவருக்குள் ஒரு தேசிய உணர்ச்சி எப்போதும் பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருந்தது. மகாத்மா காந்தியும் எஸ்.சத்தியமூர்த்தியும் அவருக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக விளங்கினார்கள்.


அந்நாளில் தமிழ்நாடகங்கள் தேசிய உணர்வைக் கொழுந்து விட்டெரியச் செய்யும் களங்களாக விளங்கின. கலைஞர்கள் அன்று சமூகத்தினரால் மிகவும் மோசமான நிலையில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர். நகரின் முக்கியப்பகுதிகளில் அவர்களுக்கு வீடு கிடைக்காது. திருமணம் செய்து கொள்ள பெண்கள் கொடுக்க மாட்டார்கள். ஆனால் அவர்களின் அரசியல் ஈடுபாடு அவர்களுக்கு மிகப்பெரிய அந்தஸ்தை வழங்கியது. எனவே கலை மேடைகள் எல்லாம் அரசியல் மேடைகளாக வேஷம் கட்டிக்கொள்ளத் துவங்கின. சத்தியமூர்ததி போன்ற தலைவர்கள் கலைஞர்களை அரசியல் வழியில் நெறிப்படுத்தி வந்தனர். சதாவதானி கிருஷ்ணசாமிப் பாவலர், விசுவநாததாஸ், மதுரை பாஸ்கரதாஸ், எம்.ஆர்.கமலவேணி, கே.பி.ஜானகி அம்மாள், எம்.எஸ்.விஜயாள், எம்.என்.ராசம்மா, எம்.சாரதாம்பாள் போன்ற கலைஞர்கள் நேரிடையாக சுதந்திரப் பிரச்சாரத்துக்கு மேடைகளைப் பயன்படுத்திக் கொண்டனர். 1931ல் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் காளிதாஸ். இது புராணப்படமாக இருந்தாலும் பல இடங்களில் காந்தியக் கொள்கை மற்றும் ராட்டை பற்றி தெளிவாக பேசியது. சுந்தராம்பாள் நடித்த மணிமேகலை நாடகத்தில், கதைப்படி ஒரு கட்டத்தில் சோழ மன்னனைக் கைது செய்யப்படும் மணிமேகலை சிறையில் அடைக்கப்படுகிறான். தேசபக்தர்கள் சிறை வைக்கப்பட்ட நேரம். சுந்தராம்பாள் பாடினார்


சிறைச்சாலை இதென்ன செய்யும்
சரீராபிமானம் இலா
ஞான தீரரை
சிறைச்சாலை என்ன செய்யும்?


இந்தச் சூழலில், சத்தியமூர்த்தியின் வற்புறுத்தலின் பேரில் சுதந்திரப் போரில் கலந்து கொண்டார் கே.பி.எஸ். தமிழ் நாடகங்கள் அவருடைய சுதந்திரப் போர்க்களங்களாக மாறின. 1937ம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தன் பிரச்சாரத்தைத் துவக்கினார் கே.பி.எஸ்.
1934ல் திருநெல்வேலியில் நடந்த டிஸ்ட்ரிக்ட் போர்டு தேர்தலில் கோதைநாயகியம்மாள் என்னும் வேட்பாளருக்கு ஆதரவாக அவர் மிக நீண்ட உரையாற்றியது பல இடங்கில் பதிவாகியுள்ளது. அந்தத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி மாபெரும் தோல்வியத் தழுவியது. கிட்டப்பா மறைவுக்குப் பின் வேறு எந்த ஆண் நடிகருடன் நடிப்பதில்லை என்னும் கொள்கையில் மிகவும் தீவிரமாக இருந்த சுந்தராம்பாளை சத்தியமூர்த்தி மனது மாற வைத்தார். ஜெமினி நிறுவனத்துக்காக 1935ல் நந்தனார் திரைப்படம் எம்.எல்.டான்டன் இயக்கத்தில் தயாரிக்க முடிவு செய்தது. தன்னைத் திரைப்படத்தில் நடிக்க வைக்க யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்று தன்னுடைய சம்பளத்தை ஒரு லட்சமாக உயர்த்தினார் அவர். அந்தக் காலத்தில் யாராலும் கற்பனை செய்து கூடப்பார்க்க முடியாத சம்பளம் அது. அதையும் தர வைத்து சுந்தராம்பாளை நடிக்க சம்மதிக்க வைத்தார். இதுபற்றி ஓரிடத்தில் சுந்தராம்பாள், ""நந்தனார் திரைப்படத்தில் ஜோடியாக நடிக்க ஆண் நடிகர் தேவைப்படாததாலும், காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி சிபாரிசு செய்ததாலும் தீண்டாமை எதிர்ப்பு பிரச்சாரத்துக்குப் பயன்படும் என்பதாலும் நந்தனார் படத்தில் நடிக்க சம்மதித்தேன்'' என்று கூறியிருக்கிறார். 1935ல் வெளியான அந்தப்படத்தில் மகாராஜபுரம் விசுவநாத அய்யர் வேதியராக நடித்தார். 

அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பல கிராமபோன் ரிகார்டுகளை வழங்கினார் கே.பி.எஸ். கட்சிக்கும் எக்கச்சக்கமான தொகையை நிதியாக வழங்கினார். ஒரு முறை சத்தியமூர்த்தி அவர்கள் காந்தியுடன் காரில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். கரூர் அருகில் அவர்கள் பயணித்த கார் பழுதடைந்தது. மகாத்மாவை அழைத்துக் கொண்டு சுந்தராம்பாள் வீட்டுக்கு வருகிறார் சத்தியமூர்த்தி. அம்மையார் காந்தியாருக்கு தங்கத்தட்டில் உணவு பறிமானார். காந்தியார் விளையாட்டாக வெறும் சாப்பாடு மட்டும்தானா? கட்சிக்கு ஒன்றும் நிதி கிடையாதா? என்று சிரித்துக்கொண்டே கேட்க, அந்த தங்கத்தட்டை உடனடியாக ஏலம் விட்டு கிடைத்த பணத்தை காந்தியார் வசம் நிதியாக ஒப்படைத்தார் அம்மையார். ஓரிடத்தில் மகாத்மா இவரை அன்புள்ள சகோதரி என்று விளித்து கடிதம் எழுதியிருக்கிறார். அந்தப் பெருமை கிடைக்கப்பெற்ற தமிழகத்தின் ஒரே பெண்மணி சுந்தராம்பாள் அம்மையார்தான்.



கலைஞரை மகனே என்று அழைத்தது. பிறகு தொடர்ச்சியாக ஊர் ஊராக காங்கிரஸ் மற்றும் கதர்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அம்மையார். கதராடையைத் தனக்கு நிரந்தரமாக்கிக்கொண்டார். தானே நூற்று நெய்த துணியை விற்பனை செய்தார். ஊர் ஊராக தேசபக்திப் பாடல்களை முழங்கினார். 1951ல் தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அம்மையார். இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு கலைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற மேலவைக்கு உறுப்பினராவது அதுவே முதல் முறையாகும். இந்தியாவிலேயே எந்தக் கலைஞருக்கும் கிட்டாத ஒரு முதல் பெருமை அம்மையாருக்குக் கிட்டியது.


1940ல் மணிமேகலை. 1953ல் ஜெமினியின் அவ்வையார் படத்தில் நடித்தார். சுமார் ஏழு ஆண்டுகள் தயாரிப்பில் இருந்த படம் அது. அதில் இருபது பாடல்களைப் பாடி நடித்தார். பிறகு பூம்புகார்.  பிறகு அவர் நடித்த திருவிளையாடல், கந்தன் கருணை, மகாகவி காளிதாஸ், உயிர்மேல் ஆசை, துணைவன், சக்தி லீலை, காரைக்கால் அம்மையார், திருமலை தெய்வம் போன்ற படங்கள். இப்படங்களில் அவர் பாடிய எல்லாப் பாடல்களுமே முத்துக்கள்தான். ஆனால் குறிப்பிட்ட ஒரு பாடலை இங்கு சொல்லியே ஆகவேண்டும் என்று நினைக்கிறேன். திருவிளையாடல் (1965) படத்தில் அவர் பாடிய பழம் நீ அப்பா என்ற பாடலை ஒலிப்பதிவு செய்த ஒலிப்பதிவு மேதை ரங்கசாமி அவர்கள் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் þ அம்மையார் மேல் ஸ்தாயியில் பாடும்போது அதை சரியான வகையில் அதிர்வுகள் இல்லாமல் ஒலிப்பதிவு செய்ய நம்மால் இயலாது. அதற்கான கருவிகள் இன்னும் வரவில்லை. ஆனால் ஏதோ செய்கிறோம்'' என்று சொல்லியிருப்பது அம்மையாரின் குரல் வளத்துக்கு தொழில் நுணுக்கக் கலைஞர்கள் தந்த கட்டியம். தனித்த வாழ்க்கையிலும் நிறை வாழ்வு வாழ்ந்தவர் அம்மையார். எத்தனையோ லட்சங்கள் ஈட்டினாலும் தன் வீட்டில் தானே சமைத்துப்போட்டு உறவினர்கள் குழந்தைகளைத் தன் குழந்தைகளாகப் பாவித்து அவ்ர்களை வளர்த்தெடுத்து இறை பக்தியில் எஞ்சிய நாட்களைக் கழித்தார்.

1964ல் தமிழிசை சங்கம் அவருக்கு தமிழ் இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கி கெüரவித்தது. அதைத் தொடர்ந்து 1969ல் ஒரே நேரத்தில் சிறந்த பாடகருக்கான மாநில விருது மற்றும் மைய அரசின் விருது அவருக்குக் கிடைத்தது. இதுவும் முதன் முறையாக நடந்தது. 1970ல் மைய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து சிறப்பித்தது.

இறுதி நாட்களில் வெறும் திருநீற்றை மட்டும் அவர் உண்டு வாழ்ந்ததாக சில இடங்களில் குறிப்புக்கள் இருக்கின்றன. இது எந்த அளவில் உண்மை என்று தெரியவில்லை. 1980ல் அம்மையார் காலமானார். இசையையும் தமிழையும் இறையுணர்வையும் தேசியத்தையும் தன் மூச்சாகக் கொண்ட அந்தக் கோகிலம் தன் இசையால் காற்றுடன் கலந்தது. தமிழ் நாடக மேடைகளில் இணைந்து ரீங்கரித்த கந்தர்வனைத் தேடிப்பறந்து சென்றது. மொழியும் அந்நியம், இசை அமைப்பும் வேறானது என்பதையெல்லாம் கடந்து லதா மங்கேஷ்கர் போன்ற வேற்று மொழி இசைக்கலைஞர்களையும் தன் இசையால் கவர்ந்தவர் சுந்தராம்பாள்.

தன் தனிப்பட்ட திறமையால், தன்னுடைய ஆளுமையை தன்னுடைய துறை மீது, சமூகத்தின் மீது, வாழ்ந்த காலத்தின் மீது பதித்தவர் அவர். வெறும் பாடகி மட்டும் அல்ல அவர். சமூகத்தோடு மக்களோடு தன்னைக் கரைத்துக் கொண்டு காலத்தின் குணத்தை மாற்றியவர் அந்தக் கோகிலம்.

நன்றி.
வணக்கம்.

Tuesday, June 19, 2007

க.நா.சு. என்றொரு பிரம்மராக்ஷஸ்...

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்
தில்லித் தமிழ்ச்சங்கத்தில் தடம் பதித்த தமிழர்கள் தொடர் சொற்பொழிவுக் கூட்டத்தில் ஆற்றிய உரை.

70களின் இறுதியில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் இது

மிகவும் புகழ்பெற்ற இந்தி கவிஞர் அமரர் ஹர்வன்ஷ் ராய் பச்சனின் டெல்லி வீட்டுக்கு ஒரு தமிழ் எழுத்தாளர் அழைக்கப்பட்டிருக்கிறார். தேநீர் முடித்து உரையாடல்கள் தொடர்கின்றன. அப்போது வீட்டுக்குள்ளிருக்கும் மாடிப்படிகள் வழியாக ஒரு உயரமான இளைஞன் இறங்கி வருகிறான். தங்களைக் கடந்த தன் மகனை அழைத்து அந்தத் தமிழ் எழுத்தாளருக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் ஹர்வன்ஷ் ராய் பச்சன்.

''இவன் என் மகன் அமிதாப். . இவனை நீ அடிக்கடி எங்காவது பார்த்திருக்கலாம்.""
''அப்படியா? ரொம்ப சந்தோஷம். நான் இதுவரை பார்த்ததில்லையே! ரொம்ப நல்லது. உன்னை சந்தித்தில் மிகவும் மகிழ்ச்சி. என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ?""
ஐயா, நான் இந்தி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்""
''அப்படியா? ரொம்ப நல்ல விஷயம். அது சரி, பிழைப்புக்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்?""
அமிதாப் பச்சனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. தன் எதிரில் நிற்பது என்ன மாதிரி மனிதர் என்று அவருக்குப் புரியவில்லை அவருக்கு.
ஷோலே போன்ற மெகா திரைப்படங்களில் நடித்துக் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த நேரம் அது. நாட்டின் அனைத்துத் தயாரிப்பாளர்களும் கோடிக்கணக்கில் காலடியில் கொட்டி அவருடைய கால்ஷீட்டுக்காக தவமிருந்த நேரம். இப்படிப்பட்ட கேள்வியை அவர் யாரிடமிருந்தும் எதிர்பார்க்கவில்லை. ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு,
''ஐயா, பிழைப்புக்கு ஒன்றும் பிரச்னை இல்லை. இன்று இந்தியாவில் திரைப்படங்களில் நடிக்க கோடிக்கணக்கில் தொகை வாங்கும் ஒரே நடிகன் நான்தான்"" என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அதை சரியாகக் காதில் போட்டுக்கொள்ளாமல் ஹரிவன்ஷ் ராயிடம் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தன்னுடைய உரையாடலைத் தொடங்கினார்
அந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற கேள்வியைக் கேட்ட முதியவர்.
அவர்தான் க.நா.சு.

அவருக்கு இலக்கியம் மட்டுமேதான் தெரியும். அது ஒன்று மட்டுமேதான் அவருக்குக் குறி. அது ஒன்று மட்டுமேதான் அவருடைய மூச்சு. அதைப்பற்றியேதான் எப்போதும் பேச்சு. முப்பதுகளின் துவக்கத்தில் தொடங்கிய இலக்கிய வாழ்வின் மீதான அவருடைய பிடிப்பு 80களின் இறுதியில் இதே போன்ற ஒரு டிசம்பர் மாதத்துக் குளிர்கால இரவில் இறுதி மூச்சு அடங்கும் வரை எவ்வித ஓய்வும் இல்லாது தொடர்ந்தது.
(அவருக்கு எல்லாம் தெரியும். அது வெறும் தஞ்சாவூர் குசும்பு என்று சொல்லும் அவருடைய நண்பர்களும் உண்டு. அதுவும் க.நா.சு.தான்.)
க.நா.சு. என்று அறியப்படும் கந்தாடை நாராயணசாமி அய்யர் சுப்பிரமணியன் என்கிற தஞ்சை மாவட்டத்தின் திருவாலங்காடு கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட அந்த இலக்கிய இயக்கம் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் தமிழில் ஒரு தரமான இலக்கியத்தை மட்டுமே குறியாகக் கொண்டு தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தினை மிகவும் கடுமையான ஒரு தடத்தில் அமைத்துக் கொண்டது. வெங்கட்சாமிநாதன் சொன்னதுபோல இலக்கியத்தைக் காக்க எழுந்த ஒரு பூதமாக அது எழுந்தது.
அந்த பிரம்மரா~ஸ் தரமில்iலாதவைகளை எவ்விதத் தயக்கமும் இன்றி அடித்துத் துவம்சம் செய்கிற ஒரு பரம்பரையை, ஒரு எழுத்து முறையை, உருவாக்கிச் சென்றது. தரம் குறைந்தவைகளைப் பற்றி எவ்விதத் தயக்கமும் இன்றி எடுத்துச் சொல்லலாம் என்னும் தைரியத்தை உருவாக்கித் தந்து விட்டுச் சென்றது.பிறந்ததிலிருந்தே வசதியான வாழ்க்கை முறை. படித்துக் கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்தால் மட்டும் போதும். மற்றவைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற தைரியத்தையும் வசதிகளையும் கொடுத்த ஒரு அதிசயமான தகப்பன்.
அந்த அற்புதமான குடும்பச்சூழலின் விளைவினால் கிடைக்கப்பெற்ற உலக இலக்கியங்கள் படிப்பதற்கான வசதிகள். உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ஆங்கில எழுத்தாளனாகத் தன் மகன் வரவேண்டும் என்று ஆசைப்பட்டு அரணாக நின்று உலக இலக்கியங்களைப் படிப்பதற்கான வசதிகளை மனமுவந்து செய்து கொடுத்த தந்தை.
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போதே பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்கேன்டினேவியன், ஸ்வீடிஷ்; போன்ற மொழிகளைக் கற்றுக்கொண்ட ஆர்வம். மாணவப்பருவத்திலேயே West Wind, Argossy Bloomed Horn போன்ற பத்திரிகைகளில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்த இலக்கிய ஆர்வம்.

இவைகள் அனைத்தையும் மீறி பாரதியை தன்னுடைய முன்னோடியாகக் கொண்டு, அவருடைய எழுத்துக்களை ஆதர்சமாகக் கொண்டு, திருப்புவனம் வ.ராமசாமி மற்றும் பி.எஸ்.ராமையா போன்ற அக்கால தமிழ் இலக்கியவாதிகளால் உற்சாகம் ஊட்டப்பெற்றதனால் தன் மகனை ஆங்கில எழுத்தாளனாக்கப் போகிறேன் என்ற கனவில் மிதந்த தகப்பனின் ஆசைகளை புறமொதுக்கி தமிழில் எழுதப்போகிறேன் என்று கிளம்பும் தைரியம் அந்த பிரம்ம ரா~ஸ_க்கு இருந்தது.

எழுதப்போகிறேன். அந்த எழுத்தை மட்டுமே நம்பி வாழப்போகிறேன் என்று கையில் ஒரு டைப்ரைட்டர், கத்தை கத்தையாகக் காகிதங்கள், தான் செய்து வைத்த மொழிபெயர்ப்புக்கள் போன்றவற்றைக் கையில் எடுத்துக்கொண்டு தன்னுடைய இளம் மனைவியை ஊரில் விட்டுவிட்டு சென்னைக்கு ரயில் ஏறியது அந்த பிரம்மரா~ஸ். அன்றைக்குத் தொடங்கிய அந்தப்பயணம், அந்தத் தேடல் எண்பதுகளின் இறுதியில் டெல்லியின் ஒரு குளிர்கால இரவில்தான் முடிவடைந்தது.
பொதுவாகவே எதிலுமே தரத்தினை மதிக்காது தரமற்ற இழவுகளைத் தலையில் வைத்துக் கொண்டாடி மழுங்கிப்; பழகிப்போன இந்தத் தமிழ்ச் சூழலுக்கு அந்த பிரம்மரா~ஸ் அளித்த தன்னலமற்ற பங்களிப்பு இன்று எந்த அளவுக்கு நினைக்கப்படுகிறது என்பது மிகவும் வேதனை தரும் விஷயமாகும். தமிழர்கள் தன்னிடமுள்ள தரமான உன்னதங்களை அறிந்து கொள்ளாது, அதைப்போற்றி மதிக்காது தரமற்றவைகளின் சாரத்தில் ஊறித்திளைப்பது மிகவும் சோகமான விஷயம் என்று அடிக்கடி கநாசு சொல்லி வந்ததை அவருடைய விஷயத்திலேயே நிரூபித்து நன்றிக்கு ஒரு எடுத்துக் காட்டாக விளங்கி வருகிறது தமிழ்ச் சமூகம்.

தமிழில் இதுவரையில் யாருமே எட்டுவதற்கு முயற்சிக்காத பன்முகப் பரிமாணங்களுடன் இயங்கி வந்தது அந்த பிரம்மரா~ஸ். தமிழ்ச்சிறுகதை வரலாறு எழுதும் யாரும் தள்ளிவைத்து முன்னே செல்லமுடியாத வண்ணம் தடங்களைப் பதித்த சிறுகதைகள், தமிழின் நாவல் வரலாறு எழுதும் யாரும் தங்களுடைய பட்டியலில் கட்டாயமாகச் சேர்த்தே ஆகவேண்டிய பொய்த்தேவு, சர்மாவின் உயில் போன்ற பல அற்புத நாவல்கள், தமிழின் நவீன கவிதையின் துவக்க நிலையில் பிரதானப்படுத்தக்கூடிய அழகியல் கவிதைகள், உலக இலக்கியங்களைத் தமிழிலும் தமிழின் உன்னதங்களை மற்ற மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்த காலம் வேண்டி நின்ற, காலத்தைத் தாண்டிய படைப்புக்கள், இலக்கியத்தில் தரத்தினை மட்டுமே இலக்காக வற்புறுத்தி நிற்கும் பிடிவாதத்துடன் தன்னுடைய விமர்சனங்களை இலக்கியத்துக்கு ஒரு இயக்கமாகக் கொண்டு இயங்கியது அந்த பிரம்மரா~ஸ்.

படைப்பாளியாக மிகப்பெரிய வெற்றிகளைக் குவித்திருக்க வேண்டிய க.நா.சு. ஒரு விமரிசகராக தன்னை மாற்றிக்கொண்டதால் மிகப்பெரிய தியாகத்தையே செய்திருக்கிறார் என்று வருத்தப்படுகிறார்கள் அவருடைய இயங்குதளத்தை விமரிசித்த பலரும். இது உண்மையும் ஆகும்.
என் நாவல்களின் மூலம் என் வாழ்க்கை முழுவதையும், என் சிறுகதைகள் மூலம் என் வாழ்க்கையின் குறிப்பிட்ட சிறு பரப்பையும் என் கவிதைகள் மூலம் என் அகவடிவமைப்பையும் காண முயலுகிறேன் என்று எனக்குத் தோன்றுகிறது என்று ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார் க.நா.சு. அவர் அறிந்த சாத்தனூர் கிராமமும் அதன் ரத்தமும் சதையுமான மனிதர்களும் அவருடைய படைப்புக்களில் பல இடங்களில் வரும். அவருடைய நாவல் மற்றும் சிறுகதைகளில் வரும் நான் க.நா.சு.தான். அந்த நான் தான் கதையை நடத்திச் செல்லும். பொய்த்தேவு நாவல் அவருடைய ஊரில் இருந்த ஒரு செல்வந்தர் குறித்துத்தான் என்றும் நாவலை எழுதி முடித்து அந்த மனிதரிடமே காண்பித்ததாகவும் க.நா.சு. சொல்வார். அதைப்படித்து விட்டு அந்த செல்வந்தர் 'நான் சாமியாராக எல்லாம் போக மாட்டேன்"" சிரித்துக்கொண்டே சொல்வாராம். க.நா.சு வின் கதை மாந்தர்கள் எல்லாம் அவர் பார்த்த அவருடன் வாழ்ந்த ரத்தமும் சதையுமான மனிதர்களே என்று சொல்லலாம்.
ஒரு நாளைக்குக் குறைந்தது 10 பக்கங்கள் தமிழில் நேரடியான படைப்பு. 15 பக்கங்கள் மொழிபெயர்ப்பு. 10 பக்கங்களுக்குக் குறையாமல் ஆங்கிலத்தில் எழுதுவது என்பதை தன்னுடைய தினசரி வாடிக்கையாக இருந்தே ஆகவேண்டும் என்கிற குறிக்கோளுடன் ஒழுங்குடன் இயங்கி வந்திருக்கிறார் க.நா.சு என்று சொல்வார்கள். இதனை பின்னாளில் அவரை விமர்சித்தவர்கள் அவரைப் பற்றி நிலவி வந்த பல டுநபநனெயசல வயடமள களில் இதுவும் ஒன்று சொல்வார்கள். ஆனால் அவர் விட்டுச் சென்ற இன்றும் பெட்டி பெட்டியாய் குவிந்து கிடக்கும் இன்னும் அச்சேறப்படாமல் இருக்கும் கையெழுத்துப் பிரதிகள் அதில் உள்ள நிஜத்தைச் சொல்லும். எழுதுவதில் இருந்த ஈடுபாட்டை அந்த எழுத்துக்கள் அச்சேறுவதில் க.நா.சு என்றும் காண்பித்ததில்லை. கணக்கில் பார்க்கப்போனால் புதுமைப்பித்தனை விட அதிகமான அளவில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார் க.நா.சு. என்று தஞ்சை பிரகாஷ் சொல்கிறார். சுந்தரராமசாமியும் தன்னுடைய க.நா.சு. நினைவோடையில் க.நா.சு. கவிதைகளை மிகவும் அழகாக நோட்டுப் புத்தகங்களில் எழுதி வைப்பார் என்றும் தான் பார்த்தே சுமார் 25 நோட்டு புத்தகங்கள் இருக்கும் என்றும் சொல்கிறார். நானும் பார்த்த அளவில் உறங்கச் செல்லும் முன் அவர் எழுதாமல் உறங்கியதில்லை. உறக்கத்தில் உயிர் பிரிந்த அந்த இரவிலும் கூட வெகுநேரம் எழுதிவிட்டுத்தான் உறங்கச் சென்றிருக்கிறார்.
க.நா.சு. பற்றி இன்னொரு சுவாரசியமான சம்பவமும் சொல்வது உண்டு. விகடன் பதிப்பாளர் எஸ்.எஸ் வாசனிடம் ஒருமுறை பேசிக்கொண்டு இருந்தபோது மற்றவர்களின் எழுத்துக்களைப்பற்றி பேச்சு வந்ததாம். அப்போது க.நா.சு., வாசனிடம் இவர்கள் எல்லாம் என்ன எழுதுகிறார்கள். இதோ பாருங்கள் என்று பன்னிரெண்டு விறுவிறுப்பான சம்பவங்களை ஒரு மணி நேரத்தில் எழுதிக் கொடுத்தாராம். அவைகளைப் படித்து வியந்து போன வாசன் ''இப்போதே 200 ரூபாய் சம்பளத்தில் விகடனில் ஒரு வேலையை உடனடியாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னதை மறுத்து வெளியேறினாராம் க.நா.சு.
விகடனில் வேலையை மறுத்த க.நா.சு. விருப்பத்துடன் பணிபுரிந்த பத்திரிகைகள் -

கு.ப.ராஜகோபலனின் கிராம ஊழியன்
சாலிவாஹனின் கலாமோகினி
கு.அழகிரிசாமியின் மலர்கள்
கோவிந்தனின் சக்தி
எம்.வி.வெங்கட்ராமின் தேனீ
திருலோக சீதாராமின் சிவாஜி
வ.ரா.வின் மணிக்கொடி
பின்னர் தானே நடத்திய சந்திரோதயம், சூறாவளி, இலக்கிய வட்டம் போன்ற பத்திரிகைகள்.
தீவிர படைப்பாளியாக இருந்த க.நா.சு. விமரிசகராக தன்னை அடையாளம் காட்டிக்கொண்டது சி.சு.செல்லப்பாவின் எழுத்து பத்திரிகையில்தான். தன்னுடைய 'எழுத்தும்" விமர்சனமும் என்னும் கட்டுரையில் முனைவர் செ.ரவீந்திரன் சொல்லியிருப்பதுபோல எழுத்துவின் தோற்றத்தை ஒட்டி தமிழ் விமர்சன உலகில் காலடி எடுத்து வைத்த ஒரு புதிய இளைய தலைமுறையினர்கள் எல்லோரும் க.நா.சு.வுக்குக் கடமைப்பட்டவர்கள். க.நா.சு. என்னும் இலக்கிய சக்தியின் பாதிப்பில் உருவானவர்களே. மதிப்பீடுகள் பற்றிக் கவலை கொள்ளாத தமிழ் சமூகத்தில் விமர்சனம் பற்றி க.நா.சு. சொல்லி வந்தவைகள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்தும் எவ்விதத் தயக்கமோ பின்வாங்கலோ இல்லாது அந்த பிரம்மரா~ஸ் தரத்தினை வேண்டி நின்ற இயக்கமாக இலக்கிய விமரிசனத்தை மாற்ற உழைத்தது. க.நா.சு.வினால் பாதிக்கப்பட்டு இலக்கிய விமர்சனத்தில் நுழைந்ததாக செல்லப்பாவும் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார்.
விமர்சனத்தில் நுழைய நேர்ந்ததைப் பற்றிக் க.நா.சு.வே ஒரு இடத்தில் ''ஒரு மௌனியையோ புதுமைப்பித்தனையோ உணர்ந்து கொள்ளாமல் தமிழர்களில் பெரும்பாலோரும் கல்கியையும், குமுதம் கதைகளையும் பாராட்டத் தொடங்கி விடுகிறார்களே, ஒரு ஷண்முகசுந்தரத்தை அறிந்து கொள்ளாமல் ஒரு அகிலனைப் பாராட்டத் தொடங்கி விடுகிறார்களே என்றுதான் நான் விமர்சனத்துறையில் ஈடுபட ஆரம்பித்தேன்"" என்று சொல்கிறார்.
பத்திரிகைகளில் வரும் எழுத்துக்களெல்லாம் இலக்கியம் ஆகிவிடாது. லட்சம் பேர் படித்தாலும் இலக்கிய அந்தஸ்து பெறாத அவை வெறும் குப்பைகள்தான் என்று அடித்துப்பேசியும் எழுதியும் வந்தார் க.நா.சு. அதே நேரம் பண்டிதத்தின் மேல் எவ்வித மரியாதையையும் காட்டவில்லை அவர். மாறாக அவர்களைக் கடுமையாக விமர்சித்தார்.
தற்காலத் தமிழ் இலக்கியம் குறித்த விமர்சனங்களை தமிழ் பத்திரிகைகள் மட்டுமல்லாது Illustrated Weekly of India, Mirror, Blitz, Debonair, Indian Literature, Thought, Quest போன்ற ஆங்கிலப்பத்திரிகைகளிலும் The Statesman, Hindustan Times, Hindu போன்ற நாளிதழ்களிலும் தன்னுடைய விமர்சனங்களை எழுதி வந்தார். முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் கிஸான் டிரஸ்ட் என்னும் அமைப்பு நடத்தி வந்த ரியல் இன்டியா என்னும் வாரப்பத்திரிகைக்கும் ஆசிரியராக இருந்திருக்கிறார். ஒரு பதினைந்து வருடங்கள் அமெரிக்கத் தூரதரகத்துக்காக மொழிபெயர்ப்புப் பணிகளை செய்திருக்கறார் அவர். இது அவர் வயிற்றுப்பாட்டுவிமர்சனத்துக்கு வெகுவாக உதவியிருக்கிறது என்று தில்லித் தமிழ் எழுத்;தாளர் சங்க செயலர் ராஜாமணி அடிக்கடி சொல்வார். லிபி என்கிற ஆங்கிலப்பத்திரிகையையும் தொடங்கி சில காலம் நடத்தியிருக்கிறார் க.நா.சு. அவருடைய கருத்துக்களைச் சொல்லும் களமாக இலக்கிய வட்டம் என்னும் பத்திரிகையையும் நடத்தியிருக்கிறார் க.நா.சு.
க.நா.சுவின் இந்த விமர்சனங்கள் கடும் எதிர்ப்புக்களைத்தான் அவருக்குத் தேடித்தந்தன. ஒருபுறம் காங்கிரஸ்காரர்கள் - தூய இலக்கியவாதிகள் - திராவிட இயக்க எழுத்தாளர்கள் - பொதுவுடமை எழுத்தாளர்கள் போன்றவர்கள் அவரை மிகவும் கடுமையாகத் தாக்க ஆரம்பித்தார்கள். அமெரிக்க அடிவருடி என்றும் பார்ப்பன துரோகி என்றும் பல பத்திரிகைகளில் மிகவும் அன்புடன் வருணிக்கப்பட்டார் க.நா.சு.

1969ல் சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது.
ஆங்கிலத்தில் எழுதும் தமிழ் விமர்சகர்கள் தமிழ் எழுத்தாளர்களை மிகவும் துச்சமாகக் குறிப்பிடுகிறார்கள். தமிழ் மொழியையே அவமானப்படுத்தி விடுகிறார்கள். அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவர்களை மறுத்து அவர்கள் தரும் விமர்சனத்துக்கு நேர்மாறான விமர்சனத்தை நாம் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் - என்பது அந்தத் தீர்மானம். இது யாரைக்குறித்த தீர்மானம் என்பதை சொல்லத் தேவையில்லை.
இவருடைய விமர்சனக்கலை என்ற புத்தகத்தைப் பற்றி ஓரிடத்தில் ''அது ஒரு தொந்தரவான புத்தகம்"" என்று ராஜாஜி குறிப்பிட்டிருக்கிறார். க.நா.சு. சரஸ்வதி பத்திரிகையில் எழுதி வந்த விமர்சனங்கள் திமுகவுக்காக எழுதிப்பிழைத்தவர்களால் மிகவும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானது. அப்போது திமுக தலைவராக இருந்த சி.என்.அண்ணாத்துரை, க.நா.சு.வின் விமர்சனங்கள் பற்றி ''மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று தம்பி நீ உணர வேண்டும்"" என்று அக்கட்சியின் தொண்டரப்பொடிகளிடையே இன்றும் கூட மிகவும் பரவலாக புழங்கப்படும் உரையை ஆற்றினார்.
துரதிருஷ்டவசமாக அத்தொண்டரடிப்பொடிகள் எந்த மாற்றான் மல்லிகையையும் நுகரும் மனநிலையில் எப்போதும் இருந்ததில்லை. அவரைப் பார்ப்பன துரோகி என்று சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் வசைபாடி தமிழ்ப்பண்பாட்டைக் காப்பாற்றினார்கள்.
அதேபோல க.நா.சுவின் அடியொற்றி வந்த பிற்கால விமர்சகர்கள் அவருடைய விமரிசன முறையை கடுமையாக எதிர்த்தார்கள். அவருடைய பட்டியல் விமரிசன முறை பலபேர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டது. அடிக்கடி அவர் பட்டியல்கள் மாறிக்கொண்டிருப்பது நேர்மையற்ற செயல் என்று விமர்சனம் வைத்தார்கள்.
இவைபற்றியெல்லாம் க.நா.சு. எவ்வித எதிர்வினையையும் காண்பித்துக் கொண்டதில்லை. தூற்றல்களால் துளியும் பாதிக்கப்படாது தொடர்ந்து முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஒருவரால் தமிழில் நிலைத்து நிற்க முடியும் என்பது க.நா.சு வால் மட்டுமே முடிந்த காரியம் என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது.
''நானே ஒரு கடுமையான விமர்சகன் என்று பெயர் வாங்கிக் கொண்டவன். எனக்குப்பின் வந்த விமர்சகர்கள் இன்னும் கடுமையான விமர்சகர்கள் ஆகியுள்ளது பற்றியும், அவர்கள் என்னையே கடுமையாக விமர்சிப்பது குறித்தும் என்னளவில் திருப்திதான்"" என்று அவர் தன்னுடைய முன்னுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
இப்படியும் ஒருவர் தன்னைப்பற்றிய எதிர்மறையான விமரிசனங்களால் பாதிக்கப்படாமல் இருக்கமுடியுமா என்று பல சமயங்களில் வியந்திருக்கிறேன். இந்த நேரத்தில் நகுலன் எழுதிய ஒரு வசன கவிதை நினைவுக்கு வருகிறது.
--கநாசு ஒரு மோசமானவிமரிசகர்,
அவருக்குவிமரிசனம் எழுதத் தெரியாது.
கநாசுவுக்கு நாவல்எழுதத் தெரியாது
கநாசுவுக்குக் கட்டுரைஎழுத வராது.
அவர் யாரைப் பற்றியும்
உருப்படியாகப் பாராட்டியதில்லை.
கநாசுவுக்குக் கவிதை தெரியாது
கநாசுவுக்கு சுயசரிதை எழுதத் தெரியாது
எழுதித்தோற்றார்.
கநாசுவுக்கு விரிசனம்சரியாக வராது.
அது சரி,
என்னுடைய அந்தக் கவிதைபற்றி
கநாசு என்னசொல்லியிருக்கிறார்?
கொஞ்சம் சொல்லுங்களேன் -
இக்கவிதை முற்றிலும் நிஜமே. கநாசுவைக் கடுமையாக சாடிய பல இலக்கிய ஜாம்பவான்களும் அவர் தூக்கி எறியும் பாராட்டுக்களுக்காக யாசகம் கேட்டு நின்றனர். பாராட்டு கிடைக்காத போது தூற்றித் திரிந்தனர். எனக்குத் தெரிந்தே ஒரு இலக்கிய மாமேதை எந்த ஜென்மத்திலோ தான் செய்த நற்பயன் விளைவாக ஒரே ஒரு கதையை நன்றாக எழுதியதை கநாசு எங்கோ பாராட்டியிருந்தார். உடனே ''அனைவரையும் விமர்சிக்கும் கநாசுவே என் கதையை அங்கீகரித்து விட்டார். இனி எவனும் என் கதையைப் பற்றி ஒன்றும் சொல்லமுடியாது"" என்று பலரிடம் பெருமிதப்பட்டுக் கொண்டார். அதுநாள் வரை பாப்பாரப் பயலாக இருந்த கநாசு ஒரே இரவில் விமரிசக வித்தகராக மோட்சம் பெற்றார். இப்படி பல நிகழ்ச்சிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
ஞானரதம் என்று நினைக்கிறேன். அதில் தமிழ் இலக்கிய சூழல் பற்றிய ஒரு கட்டுரையில் வெங்கட்சாமிநாதன் பற்றி 'சினிமாவைப் பற்றி அதிகமாக எழுதி விமர்சகர்களாகப் பிராபல்யம் அடைந்த வெங்கட்சாமிநாதன் போன்றவர்கள்... என்ற ஒரு வரியை எழுதியிருந்தார். (இது சரியான வரியல்ல. ஏறக்குறைய இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.) வெங்கட்சாமிநாதன் கையெழுத்துப்பிரதியில் சுமார் 65 பக்கங்கள் கொண்ட மீண்டும் பிராபல்யம் தேடி என்கிற கட்டுரையை அதற்கு பதிலாக எழுதி, அதனை ஞானரதத்தில் வெளியிட வேண்டும் என்று க.நா.சுவைக் கேட்டுக் கொண்டு ஒரு கடிதமும் கொடுத்தார். . இதை நானும் என் நண்பன் சுரேஷ் சுப்பிரமணியமும் சென்னைக்கு விடுமுறையில் சென்றபோது க.நா.சுவிடம் சேர்ப்பித்தோம். நாங்கள் அங்கு உட்கார்ந்து இருந்தபோதே அந்த 65 பக்கங்களையும் கண்களை இடுக்கிக் கொண்டு படித்து முடித்தார் க.நா.சு. பிறகு ஒரு நக்கலான புன்சிரிப்புடன், ''நான் ஒரு வரி எழுதினேன். என்னை 65 பக்கத்துக்கு கிழிச்சிருக்கான் சாமிநாதன்"" என்று அதை எங்களிடம் திருப்பிக் கொடுத்தார். எந்த வன்மமும் இல்லை. எவ்விதக் கொதிப்பும் இல்லை. அதற்கு அடுத்து என் வீட்டில் நேர்ந்த ஒரு சந்திப்பில் வெங்கட்சாமிநாதனுடன் மிகவும் சௌஜன்யமாக உரையாடிக்கொண்டிருந்தார் க.நா.சு. வெங்கட்சாமிநாதனும் மிகவும் பெருமதிப்பு காண்பித்து அவருடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது எங்கள் வயதுக்கு எனக்கும் சுரேஷ_க்கும் அது மிகவும் ஆச்சரியம் தரும் விஷயமாக இருந்தது.
இப்போதும் நான் எதிர்கொள்ளும் சில எதிர்மறையான விமரிசனங்களைத் தாங்கமுடியாமல் முகத்தை அஷ்டகோணலாக்கிக் கொண்டு குரங்காட்டம் போடும் பல சந்தர்ப்பங்களில் நான் க.நா.சு போன்ற நிறைகுடங்களை நினைவில் வைத்துக் கொள்ளத் தவறிவிடுகிறேன் என்பதை உணர்கிறேன். அது எல்லோருக்கும் கைகூடும் வரமல்ல என்றும் நேர்மையுடன் நம்புகிறேன்.
நானறிந்த வரையில் க.நா.சு.விடம் என்னையும் என் சமகால நண்பர்களையும் மிகவும் ஆகர்ஷித்தது படிப்பது குறித்த அவருடைய பார்வையும் அதைத் தொடர்ந்த அவருடைய அயராத உழைப்பும்தான் என்று நினைக்கிறேன். எழுதுவதற்கு ஒரு பயிற்சி என்பது போல படிப்பதற்கும் ஒரு பயிற்சி கண்டிப்பாகத் தேவை என்று வற்புறுத்தி வந்தார் கநாசு. புத்தகங்கள் படிக்க அலைந்தார். புத்தகங்கள் பற்றிப்பேச ஆள்தேடி அலைந்தார். கட்டுக்கட்டாக நூலகங்களிலிருந்து நூல்களை சுமந்து கொண்டு திரிவார். சென்னையிலோ அல்லது டெல்லியிலோ சாலையில் அவரை சந்தித்த எவரும் அவர் ஏதாவது ஒரு நூலகம் நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையிலோ அல்லது நல்ல காப்பியைத் தேடிச் செல்லும் வேளையிலோ அவரைக் குறுக்கிட்டு இருப்பார்கள். இந்தத் தமிழ்ச்சங்கத்தின் நூலகத்தில் எந்தெந்தப் புத்தகங்கள் எந்தெந்த மூலையில் கிடைக்கும் என்பது அவருக்கு மிகவும் அத்துபடியாக இருந்தது. புத்தகங்களுக்கு விமர்சனம் எழுத ஒன்றும் கிடைக்காவிட்டால் பதிப்பாளர்களைத் தேடியலைந்து நூல்களைத் தேடி வாங்கி விமர்சனம் எழுதியிருக்கிறார். ஒரு நூலுக்கு மதிப்புரை எழுதும் முன் 3 முறை அதனைப் படிப்பதாக அவரே சொல்வார்.
ஒரு முறை கௌதம சித்தார்த்தனின் மற்றும் பன்னீர் செல்வன் போன்ற இரு இளைஞர்கள் எழுதிய சிறுகதைத் தொகுப்பினை இரவோடு இரவாகப் படித்துவிட்டு அவைகளின் மதிப்புரையையும் எழுதி விடிவதற்காகக் காத்திருந்து தன் மாப்பிள்ளை மணியை அழைத்துக் கொண்டுவந்து லோதி காலனியில் இருந்த என் வீட்டுக்கு வந்து அதைக் கொடுத்து உடனடியாக அந்தக் கட்டுரையை ஹிந்துஸ்தான் டைம்ஸ் அலுவலகத்தில் சேர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த மதிப்புரை வெளியானதும் அதன் நறுக்கினை தனக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்ட தீவிரம் நினைவில் வரும் பல சந்தர்ப்பங்களில் கண்களின் ஓரத்தில் நீரினை வரவழைக்கும்.
படித்துக் கொண்டே இருந்தார். ஒரு கண் முழுக்கப் போய்விட்டது. இன்னொன்றும் முக்கால் போய்விட்டது. அப்போதும் படித்துக் கொண்டிருந்தார். இனியாவது ஆபரேஷன் செய்து கொள்ளுங்கள் என்று எல்லோரும் அவரை வற்புறுத்தினார்கள். அவர் படிப்பதை நிறுத்தவில்லை. ஆபரேஷனை தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தார். பிறகு அதற்குத் தேவையே இல்லாமல் போய்விட்டது.
அதேபோல அவர் மேற்கொண்ட பயணங்கள். இந்தியாவில் அவர் சுற்றிப்பார்க்காத ஊரே இல்லை என்று சொல்லலாம். எந்த ஊரில் எந்தக் கடையில் காப்பி நன்றாக இருக்கும் என்றும் சொல்வார். நிறைய வெளிநாடுகளிலும் பயணம் செய்திருக்கிறார். உலக அளவில் இலக்கிய ஆர்வலர்கள் அவருக்கு நண்பர்களாக இருந்தனர். ஆலட்ஸ் ஹக்ஸ்லி, ஸ்டீபன் ஸ்பெண்டர், ஆல்பர் காம்யூ, ழான் பால் சார்த்தர் போன்றவர்கள் அவருடைய நண்பர்களாக இருந்தனர். சார்த்தரை சந்தித்த பாதிப்பில் கொஞ்ச நாட்கள் பைப் புகைத்துக் கொண்டிருந்தார்.
இறப்பதற்குக் கொஞ்ச காலம் முன்னர் கூட நண்பர்ளை சந்திக்கும்; பொருட்டு உடல் நலத்தையும் கண்பார்வைக் குறைவினையும் பொருட்படுத்தாது ஊர்ஊராக பயணங்கள் மேற்கொண்டார். அவருடைய அந்திம காலத்தில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வருகை தரு பேராசிரியாக அவரை நியமித்திருந்தனர். அந்த சந்தர்ப்பத்தை பல நண்பர்களை சந்திக்கவும் நிறைய எழுதவும், படிக்கவும் உபயோகித்துக்கொண்டார். சாகித்ய அகாடமி அலுவலகத்துக்கு மிகவும் பிரயாசைப்பட்டு அலைந்து புதுமைப்பித்தனைப் பற்றிய ஒரு தேசியக் கருத்தரங்கினை ஏற்பாடு செய்தார். அக்கருத்தரங்குக்குத் தலைமை தாங்கினார்.
அவர் நட்பினை மதித்தவிதமும் அவரை அறிந்த எல்லோரிடமும் பிரபலமான விஷயம். தன்னுடைய குடும்பத்தையும் மிகவும் ஆழமாக நேசித்தார். தன்னுடைய மகள் ஜமுனா மீதும் மாப்பிள்ளை மணி மீதும் பேத்திகளின் மீதும் அளப்பரிய பாசம் கொண்டிருந்தார்.
இறப்பதற்கு முன் சென்னையில் தங்கியிருந்து குங்குமம், தாய், துக்ளக் போன்ற பல வெகுஜன இதழ்களில் இலக்கியத்திறனாய்வு பற்றியும், படைப்பாளிகள் குறித்தும் பல கட்டுரைகளை எழுதி வெகுஜன அளவில் ஷண்முகசுந்தரம், சிதம்பரசுப்பிரமணியம், திருலோகசீதாராம் போன்ற அரிய படைப்பாளிகளை அறிமுகப்படுத்தினார். அவருடைய அந்திம காலத்தில் அவருக்கு சாகித்ய அகாடமி விருது அளிக்கப்பட்டது. அது குறித்தும் நண்பர்களிடம் சொல்லும்போது கேடயத்தை அவர்களே வைத்துக் கொள்ளட்டும். அந்தப்பணம் வந்தால் எனக்குக் கொஞ்சம் உபயோகமாக இருக்கும் என்று சொல்லி வருவார். அவர் சொன்னது போலவே இலக்கியத்தில் ஆர்வமும் சாகித்ய அகாடமி மேல் பெருமதிப்பும் உள்ள திருடன் ஒருவன் இரவு கநாசுவின் மாப்பிள்ளை மணியின் காரில் மறந்து வைத்துவிட்டுப் போயிருந்த சாகித்ய அகாடமி நினைவுப் பரிசை விருது அளிக்கப்பட்ட அன்று இரவே திருடிக் கொண்டு போய்விட்டான்.
கநாசு என்கிற பிரம்மரா~ஸ் பற்றி எவ்வளவு சொன்னாலும் ஒரு நிறைவு இருக்காது என்று நினைக்கிறேன். ஒரு முழு அளவிலான நூலையே எழுத வேண்டியிருக்கும். சுந்தரராமசாமி தன்னுடைய நினைவோடையில் செய்தது போல. தஞ்சை பிரகாஷ் சாகித்ய அகாடமிக்காக இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் எழுதியது போல.
இதுபோன்ற கூட்டத்தில் கொஞ்சமாக எடுத்து வைப்பது அவருடைய நினைவுக்கு செய்யும் முழுமையான அஞ்சலியாக இருக்காது என்று நம்புகிறேன்.
அவருடைய நண்பன் ஒருவன் தன்னுடைய முட்டாள்தனமான ஆர்வமிகுதியில் அவரிடமே ஒருமுறை சொன்னான் -
நீங்கள் செத்துப்போனால் என்னுடைய இரங்கல் உரையை "Death of a Raja Rishi" என தலைப்பிட்டு எழுதுவேன் என்று..

அதற்கும் சிரித்துக் கொண்டே ''death of a Rakshas" என்று எழுதினாலும் யாருக்கும் ஒன்றும் தெரியப்போவதில்லை என்று சொன்னது அந்த பிரம்மரா~ஸ்.

அந்த பிரம்மரா~ஸின் இடம் இன்று வரை பலரின் நெஞ்சங்களில் வேறு யாராலும் இன்னும் நிரப்பப்படாமலே உள்ளது.
நன்றி. வணக்கம்.