Tuesday, February 28, 2012

கோடிட்ட இடங்களை நிரப்புதல் - சுமதி ராம்

வடக்கு வாசல் இதழ் துவக்கிய நேரத்தில்  இதழுக்குப் படைப்புக்கள் வரத் துவங்கி இருந்தன.  கவிதையும் கட்டுரைகளும் சிறுகதைகளும் வரத் துவங்கிய நேரம் அது. அநேகமாக 2005 இறுதி மாதங்களில் ஒன்றாக இருக்கலாம்,

வடக்கு வாசல் அலுவலகத்துக்கு வந்த கவிதைகளில் ஒன்று தனியாகக் கவனத்தை ஈர்த்தது. ஒற்றைக் கவிதை அது.

தன்னைப் பற்றிய அறிமுகம் ஏதும் இல்லை.  நேரடியாக ஒரு கவிதை. வெறும் பெயரும் முகவரியும் தாங்கிய ஒற்றைத்தாளில் வந்த படைப்பு.
கவிதை எழுதியவர் பெயர் சுமதி ராமசுப்பிரமணியம் என்று இருந்தது. இது போன்ற நேரடிப் பெயருடன் கவிதை அல்லது கவிதை எழுதுபவர்கள் அதிலும் பெண் படைப்பாளிகளை அதிகம் காண நேருவதில்லை. இந்த நேரடிப் பெயர் எனக்கு சற்று ஆச்சரியம் அளித்தது.

Monday, February 20, 2012

தூரிகையும் நிறங்களின் கடவுளும்...

வாசகனை அச்சம் கொள்ள வைக்கும் டாம்பீகமான வார்த்தைகளுடன், எவ்வகையான ஒழுங்கமைவும் இன்றி, தன்னை மட்டுமே முதன்மைப் படுத்திக் கொள்ளும் தமிழின் நவீன கவிதைச் சுழல்,  (இது எழுத்துப் பிழையல்ல) கவிதைப் பக்கம் ஒதுங்க நினைக்கும் வாசகனை சில காலங்களாகப் படுத்தி எடுத்து வருகிறது.  

வாசக மனத்தை  எந்த வகையிலும் பொருட்டுக்கு எடுத்துக் கொள்ளாது, தானிழுக்கும் போக்குக்கு எல்லாவற்றையும் இழுத்து வைத்து அல்லல்படுத்தி வருகின்றது.   இந்தச் சூழலில், சமீப காலங்களாக    எவ்வகையான பாசாங்குகளும் அற்று தனக்குள் ஒடுங்கிய கவிதைகளும்,  நல்ல தரமான ஓசை நயம் கொண்டு, இந்த மண்ணின் மணம் சுமந்த படிமங்களை சுமந்த கவிதைகளும் நேரடித்தன்மை கொண்ட கவிதைகளும்  இப்போது அங்கங்கு   வெளிவரத் துவங்கியுள்ள போக்கு சற்று ஆறுதலும் தைரியமும் அளிக்கிறது.   லேசாக நம்பிக்கையும் தருகிறது. 

அந்த வகையில் பூ.அ.ரவீந்திரன் சற்று தாராளமாகவே இந்த  நம்பிக்கையை நமக்கு அளிக்கிறார். கோவை கீதா பதிப்பகத்தின் வெளியீட்டில் வந்துள்ள அவருடைய  தூரிகையும் நிறங்களின் கடவுளும் என்னும் தொகுப்பு ஆர்ப்பாட்டங்கள் அதிகம் இல்லாத ஒரு கவிதை அனுபவத்தை நமக்கு வழங்குகிறது.

Saturday, February 18, 2012

தேவராஜ் விட்டலனுக்கு நன்றி


இந்த வலைப்பூ ஏறத்தாழ ஒரு ஆண்டுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் சீர்கெட்டுக் கிடந்தது.  அதிகம் எழுதாமலும் கவனிக்காமலும் இருந்தேன்.  சமைக்கத் தெரியாதவன் சமைத்தது போல, கட்டத் தெரியாதவன் வீட்டைக் கட்டியது போல, பாழ்பட்டுக் கிடந்த அறை போல, இசைஞானம் இல்லாதவன் ராகம் தானம் பல்லவியை முயற்சித்தது போல, சரைக்கத் தெரியாதவன் சரைத்தது போல, பல ஆண்டுகள் திறக்கப்படாமலே கிடந்த உக்கிராண அறை போல அது அது அங்கங்கு போட்டது போட்ட படி, பிச்சைக்காரன் வாந்தி எடுத்தது போல சீர் கெட்டுக் கிடந்தது.

கடந்த பத்து நாட்களாக என்னுடய வலைத்தளம்  ஹேக் செய்யப்பட்டுக் கிடந்தது.   

ஏற்கனவே துர்க்குணி, அதிலும் கர்ப்பிணி என்பது போல ஏற்கனவே கடுமையான சோம்பல் வியாதி மற்றும் பல்வேறு மன உளைச்சல்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த  எனக்கு மேலும் எழுதாமல் இருக்க இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததே  என்று சந்தோஷமாக எதையும் எழுதாமல் இருந்தேன்.  இதனால் மற்றவர்களையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தேன்.

இப்போது என்னுடைய இணையதளம் சரியாகி விட்டது.  ஆனாலும் சில பழுதுபார்த்தல்கள் மிஞ்சி இருக்கின்றன என்று என்னுடைய தளத்தின் வடிவமைப்பாளர் செல்வமுரளி சொல்கிறார்.  அதனால் அதற்குள் நுழைய தைரியம் இல்லை.  கொஞ்ச நாள் கழித்து அடியெடுத்து வைக்கலாம் என்றிருக்கிறேன்.

எழுத்தாளர் ராஜாமணிக்கு ஒரு அஞ்சலி எழுதவும் அவருடைய வடக்கு வாசல் நேர்காணலை வெளியிடவும் இந்த வலைப்பூவை இரு நாட்களுக்கு முன்பு மீண்டும் தூசி தட்டித் திறந்தேன்.  

நேற்று யதேச்சையாக எங்கள் அலுவலகத்துக்கு வந்த தேவராஜ் விட்டலன் மிக்க சிரத்தை எடுத்து இந்த வலைப்பூவின் தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி விட்டார்.  இது திட்டமிட்டு நடந்தது அல்ல.  நான் யதேச்சையாக கேட்டுக்கொள்ள அதிதீவிரத்துடன் உடனே இந்த வேலைக்காக உட்கார்ந்து விட்டார் மனிதர்.

வடக்கு வாசல் நூல் வெளியீட்டு விழாவில் டாக்டர் கலாமிடம் நூல் பெறும் தேவராஜ் விட்டலன்
 இப்போது நீங்கள் காணும் இந்த வடிவத்துக்கு முற்றிலும் பொறுப்பானவர் தேவராஜ் விட்டலன்.  நேற்று பகல் முழுதும் அங்கும் இங்கும் நகராது தன் மடிக்கணிணியில் வெகுநேரம் போராடி சீர்குலைந்து போயிருந்த என்னுடைய இந்த வலைப்பூவை ஒரு வழியாக பார்க்கும் படி செய்து விட்டார்.  

திறமையாளர்கள் கையில் கிடைத்தால் மட்டமாக இருக்கும் விஷயங்கள் கூட சிறப்பு பெறும் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.

தேவராஜ் விட்டலனுக்கு என் மனமார்ந்த நன்றி.  

நிறைய நூல்கள் எனக்கு வருகின்றன.   அத்தனையும் வடக்கு வாசல் இதழில் மதிப்புரை போட இடமும் நேரமும் மதிப்புரையாளர்களும் கிடைப்பது இல்லை.  எனவே இந்தத் தளத்தை நூல் மதிப்புரைகளுக்கும் எப்போதாவது உள்ளூர் வம்புகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்.

அதாவது இனி இங்கும் நிறைய எழுத முயற்சி செய்வேன்.  

இதற்காக  யாருக்காவது யாரையாவது  திட்ட வேண்டும் அல்லது சபிக்க வேண்டும் என்று தோன்றினால் இப்போது ஒரு ஆள் கிடைத்து விட்டார்.

Thursday, February 16, 2012

அணையாத சினத்தீ - ஏ.ஆர்.ராஜாமணி


 நவம்பர் 2005 வடக்கு வாசல் இதழில் வெளியான நேர்காணல்.
நேர்காணல் - ராகவன் தம்பி மற்றும் சுரேஷ் சுப்பிரமணியம்


தில்லிக்கு வரும் எந்தத் தமிழ் எழுத்தாளரும் தவறாமல் - மறக்காமல் எப்போதும் விசாரிக்கும் ஒரு பெயர் ஏ.ஆர்.ராஜாமணி.  கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாகத் தலைநகரில் தனியொருவராக, எழுத்தை மட்டுமே நம்பி வாழ்க்கையை நடத்தி வருபவர்.  தீவிரமான படைப்புலகில் ஈடுபடவில்லை என்றாலும், குறிப்பிடத்தகுந்த படைப்பு எதையும்  படைக்கவில்லை என்றாலும் அகில இந்திய வானொலியில் மொழிபெயர்ப்பாளராகவும், பத்திரிகையாளராகவும் பல பத்திரிகைகளில் பத்தியாளராகவும் அவ்வப்போது தேவைக்கேற்ப எழுத்துத் துறைகளில் தன்னுடைய செயல்பாடுகளைத் தொடர்ந்து வருபவர்.  மனதில் பட்டதை  எதிராளியின் எதிர்வினைகளைப் பற்றி எவ்விதக் கவலையும் தயக்கமும் இல்லாது சொல்பவர்.  இந்தப் பேட்டியிலும் இவர் பலரைப் பற்றி மிகவும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். 

அணைந்து போன சினத்தீ - ஏ.ஆர்.ராஜாமணி

மூச்சே நின்று போவது போல மிக அழுத்தமாகக் காற்றை உள்வாங்கி ஒலி எழுப்பிச் சிரிக்கும் ஏ.ஆர்.ராஜாமணியின் சிரிப்பு இப்போது நம்மிடையில் இல்லை.  

திங்கட்கிழமை (13 பிப்ரவரி 2012) அன்று சவக்கிடங்கில் இருந்து  பெற்றுக் கொண்டபோது அந்தச் சிரிப்பு வாய் பிளந்து உறைந்து போயிருந்தது.  அந்தச் சிரிப்போடு பிளந்திருந்த வாயுடன்தான் அந்த மனிதனுக்கு கரோல்பாக் மயானத்தில் சிதை மூட்டினேன்.

மீண்டும் பழைய கூட்டில்...

இந்தப் பக்கங்களில் எழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன.  தனி இணையதளத்துக்குப் புதுக்குடித்தனம் போனதால் இந்த வீடு நீண்ட காலமாகப்  பூட்டிக் கிடந்தது.  

இப்போது அந்த வீட்டை யாரோ சில பங்களாதேஷ் விஷமிகள் அழிச்சாட்டியம் செய்து கொண்டிருக்கிறார்கள்.   திங்கட்கிழமை என்னுடைய வலைத்தளத்தை திறந்தபோது தொடர்பே இல்லாமல் என்னென்னவோ வந்தது.  சில படங்களில் கெட்ட காரியங்களும் இருந்தன-  அடி வயிறு கலங்கி விட்டது.