Showing posts with label சனிமூலை கட்டுரைகள். Show all posts
Showing posts with label சனிமூலை கட்டுரைகள். Show all posts

Wednesday, February 26, 2014

கபாலி கான்

எங்கள் வீட்டு வாசலில் எனக்காக எப்போதும் காத்திருக்கும் கபாலி கான் டெல்லி முனிசிபாலிடி ஆட்களால் நேற்று மாலை பிடித்துச் செல்லப்பட்டது என்ற தகவலை கார் துடைக்கும் பையன் காலையில் சொன்ன போது மனதுக்குக் கொஞ்சம் கனமாக இருந்தது.

பொதுவாக நாய்களுக்கு ஆங்கிலப் பெயர்களை வைப்பதை எப்போதும் எதிர்ப்பவன் நான். சில ஆண்டுகளுக்கு முன்பு என் வீட்டுக்கு தெருவில் இருந்து என் மகள் எடுத்து வந்து இப்போது எங்கள் வீட்டில் கம்பீரமாக வளர்ந்து வரும் ரஸ்டிக்கு அப்படி ஒரு பெயரை வைக்கும் சுதந்திரம் இல்லை எனக்கு. அந்த சுதந்திரத்தை மகள்கள் எடுத்துக் கொண்டார்கள். 

என் வீட்டு ரஸ்டி சில நாள் குட்டியாக இருந்தபோது அதற்கு முனியாண்டி என்று பெயர் வைத்தேன். என் அம்மாவின் அப்பா குப்புராவ் பெயர் வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் கிருஷ்ணகிரியில் என்னுடன் பிறந்தவர்கள் என்னைத் தொலைத்து விடுவார்கள். அதனால் பொதுவாக எங்கள் வீட்டுக் காவல் தெய்வமாக முனியாண்டி என்று இருக்கட்டுமே என்று யோசித்தேன். சில நாட்கள் கழித்து அது காலைத்தூக்காமல் அகட்டி சிறுநீர் கழித்ததும் தான் தெரிந்தது. அதற்கு முனியாண்டி என்று பெயர் வைக்க முடியாது என்று. முனியம்மா என்ற பெயர் நன்றாக இருக்காது. காமாட்சி, விசாலட்சி என்று நல்ல அம்மன் பெயர் சூட்டலாம் என்று நினைத்தேன். ஆனால் அதுபோன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையில் முடிவெடுக்கும் சுதந்திரம் எங்கள் வீட்டில் பொதுவாக எனக்குத் தருவதில்லை. அதனால் என் மகள் ரஸ்டி என்று அதற்கு பெயர் வைத்தபோது நான் ஆட்சேபிக்கவில்லை. ஆட்சேபித்து இருந்தாலும் அது ரஸ்டியாகத்தான் இருந்திருக்கும். இப்போதும் இருக்கிறது.

சரி. புதிதாக வந்து சேர்ந்திருக்கும் இதனை எப்படிப் பெயர் இல்லாமல் கூட வைத்துக் கொள்வது? வீட்டுக்கு வெளியில் இருந்தாலும் ஒரு பெயர் வேண்டுமே. எந்த வகையிலும் அதற்கோ என் மகள்களுக்கோ மனைவிக்கோ இந்தப் பெயரில் ஆட்சேபம் இருக்காது என்ற தைரியத்தில் வீட்டுக்கு வெளியில் இருந்த இதற்கு கபாலி கான் என்று பெயர் வைத்தேன். எங்கள் வீட்டின் பெங்காலி வேலைக்காரி உட்பட அனைவரும் அதனை கபாலி கான் என்றே அழைக்கத் துவங்கினார்கள். அதுகூட நாங்கள் கபாலி கான் என்று கூப்பிட்டால் திரும்பிப் பார்க்கத் துவங்கியது.

Monday, March 9, 2009

நாடக மேடையேற்ற அனுபவங்கள்

என்னுடைய முதல் மேடை நாடக அனுபவம் பற்றி சில மாதங்கள் தொடர்ச்சியாக வடக்கு வாசல் இதழின் சனிமூலை பகுதியில் வெளிவந்த கட்டுரைகளை சில நாட்களாக தொடர்ச்சியாக பதிவேற்றம் செய்து வந்தேன். நல்ல வேளையாக இன்றுடன் இந்தத் தொந்தரவு உங்களுக்கு ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது.

சனிமூலையில் இந்தக் கட்டுரைகளைப் படிக்காதவர்களுக்காக இந்தத் தண்டனை. இனி நாளையிலிருந்து சமர்த்தாக அரசியல் நிகழ்வுகள் பற்றியும் நூல் மதிப்புரைகளையும் எழுதலாம் என்று இருக்கிறேன்.

உங்கள் அனைவரின் அன்புக்கு நன்றி.

நீங்கள் எப்போதும் அளித்து வரும் ஆதரவுக்கும் ஊக்கத்துக்கும் ரொம்ப நன்றி.
எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் சகிப்புத் தன்மைக்கும் பொறுமைக்கு மிக்க நன்றி.


ராகவன் தம்பி

கஜானன் மாதவ் முக்திபோத் என்னும் இந்திக் கவிஞனின் இந்திக் கவிதையை என்னுடைய முதல் மேடை நாடகமாக தலைநகரில் மேடையேற்றிய அனுபவங்களை சில மாதங்களாக உங்களுடன் இங்கே பகிர்ந்து வருகிறேன்.

இந்த இதழுடன் அந்தப் பதிவுகளை ஒருவழியாக முடித்துக் கொள்கிறேன். இந்த மகிழ்ச்சியான செய்தி கண்டு உடனே அவசரப்பட்டு ஏதும் சந்தோஷம் அடைய வேண்டாம். இக்கட்டுரையின் இறுதியில் உங்களுக்கு அதிர்ச்சியான ஒரு செய்தியையும் வைத்திருக்கிறேன்.

சென்ற இதழில் நாடக மேடையேற்றத்துக்கு சில நாட்களே இருந்த நிலையில் அப்பாவின் மரணச் செய்தி கேட்டு நாடகத்தைத் தள்ளி வைத்து ஊருக்குக் கிளம்பிப் போனதுடன் நிறுத்தியிருந்தேன். கிருஷ்ணகிரியில் அப்பாவின் இறுதிச் சடங்குகள் நடந்தன. மொத்தம் பதின்மூன்று நாட்கள் நடைபெற்றன சடங்குகள். ஒருபுறம் அப்பாவின் இழப்பு, இன்னொருபுறம் தில்லியில் அறைகுறையாக விட்டு வந்த நாடகம் என மனது எதிலும் நிலையாது சித்திரவதைப் பட்ட நாட்கள் அவை. அப்பாவின் தினசரி திவச காரியங்களை முடித்து தலைதெறிக்க தில்லி நோக்கி ஓடிப்போனேன். அப்பாவின் அஸ்தியை தில்லியில் யமுனையிலும் ஹரித்வார் சென்று கங்கையிலும் கரைத்து விட்டு மீண்டும் நாடக ஒத்திகைகளில் கவனம் செலுத்தினேன். மீண்டும் அனைவரும் ஒன்று சேர்ந்தோம். சவுத் இந்தியா கிளப் சத்தியமூர்த்தி அரங்கில் ஒத்திகைகள் தொடர்ந்தன.
குளிர் மிகுந்த டிசம்பர் மாத இரவுகள் மற்றும் பிற்பகல் நேரங்களில் ஒத்திகைகள் நடைபெற்றன. ஊரிலிருந்து திரும்பி வந்ததும் வெறும் 8 நாட்களே இருந்தன. மிகுந்த பரபரப்பில் ஒத்திகைகள் தொடர்ந்தன. மேடை நாடகத்தில் எவ்வித அனுபவமும் எனக்குக் கிடையாது. இதற்காகப் பலரின் உதவியை நாடினேன். தேடித்தேடி அரங்கப் பொருட்களை சேர்த்தோம். ஒப்பனைப் பொருட்கள் மற்றும் உடைகளை நச்சு கவனித்துக் கொண்டான். முக்திபோத் கவிதையில் சுவரொட்டிகள் இரவு நேரங்களில் சுவர்களில் இருந்து பிய்த்துக் கொண்டு வெளியே வந்து நடனமிடும். தங்களுக்கான உரிமைகளை முழக்கமிடும். இதற்காகப் பெரிய பெரிய சுவரொட்டிகளை நச்சுவே வரைந்தான். வெங்கட்டும் இளஞ்சேரனும் ஓடி ஓடி ஒப்பனைப் பொருள்களைச் சேர்த்தார்கள்.ஒலி, ஒளி ஒத்திகைகளைப் பார்க்க எங்களுக்கு நேரம் இல்லை. வசதியும் இல்லை. சொல்லப் போனால் நாங்கள் பார்த்த முதல் ஒலி, ஒளி ஒத்திகை என்பது நாடக அரங்கேற்றத்தின் போது மேடையில் பார்த்ததுதான். அந்த நாடக மேடையேற்றத்தைத் தான் நாங்கள் பின்னாளில் அந்த நாடகத்தின் இறுதி ஒத்திகை என்று கேலியுடன் பேசிக்கொள்வோம். (சொல்லப் போனால் நான் இயக்கிய ஒவ்வொரு நாடக மேடையேற்றமும் அந்த நாடகத்தின் இறுதி ஒத்திகை மட்டுமே என்று நேர்மையுடன் நம்புகிறேன். முழுமை என்பது முடிவில்லாதது இல்லையா-?
1988ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி தில்லி பாராகம்பா சாலையில் உள்ள சப்ரூ ஹவுஸ் கலையரங்கில் யதார்த்தா நாடக இயக்கத்தின் முதல் மேடை நாடகமான "சாந்த் கா மூ டேடா ஹை'' வெற்றிகரமாக மேடையேறியது. சப்ரூ ஹவுஸ் அரங்கில் தமிழர்களும் வட இந்தியர்களும் அடங்கிய கூட்டம் நிரம்பி வழிந்தது.
ஒவ்வொருவரும் மிகவும் சிரமம் எடுத்துக் கொண்டு உயிரைவிட்டு நடித்தார்கள். கிடைத்த மிகக் குறைந்த ஒளியமைப்பு வசதியில் ரவீந்திரனும் மாயத்தை நிகழ்த்தியிருந்தார். என்னுடைய இயக்கத்தின் குறைபாடுகளை ரவீந்திரன் அமைத்த ஒளியமைப்பின் அழகியல் நேர்செய்து தொடர்ந்தது. சக்கூர்பூரின் முத்துசாமி, கந்தசாமி மற்றும் சிவாஜி அன்று மிகவும் அருமையாக வாசித்தார்கள். அன்று சரியில்லாத ஒரே விஷயம் என்னுடைய இயக்கமாகத்தான் இருந்திருக்க முடியும்.
இந்த நாடகத்தை இன்னொரு முறை இயக்கும் வாய்ப்புக் கிடைத்தால் இன்னும் சற்று நன்றாகவே செய்ய முயற்சிப்பேன் என்று நினைக்கிறேன். சொல்லப் போனால் ஒவ்வொரு நாடகம் முடிவடையும் போதும் இந்த ரகசியக் குறை எனக்குள்ளே குடைந்து கொண்டே இருக்கும். சாகித்ய கலா பரிஷத் எற்பாடு செய்த விழா என்பதால் விமர்சகர்கள் குவிந்திருந்தனர். பல ஆங்கில நாளிதழ்களிலும் இந்தி நாளிதழ்களிலும் பல விமர்சனங்கள் வெளியாகின. ரேவதி சரண் சர்மா, திவான் சிங் பஜேலி போன்ற அந்தக் கால நாடக விமர்சன ஜாம்பவான்கள் விமர்சனம் எழுதினார்கள். அனைவரும் ஒரு தமிழனாக இருந்து கொண்டு இந்த இந்திக் கவிதையை மேடையேற்றிய என்னுடைய (அசட்டுத்) துணிச்சலைப் பாராட்டி இருந்தார்கள். கூடவே அந்த நாடகத்தில் துருத்திக் கொண்டிருந்த பல குறைகளையும் மிகவும் அழகாகச் சுட்டிக் காட்டி இருந்தார்கள். தேசிய நடகப் பள்ளியில் இயக்குநராக இருந்த அங்கூர் அப்போது இந்தி நாளிதழ்களில் நாடக விமர்சனங்கள் எழுதி வந்தார். ஒரு இந்தி நாளிதழில் அவர் என்னுடைய இந்த நாடக மேடையேற்றத்தைக் கிழிகிழியென்று நார்நாராகக் கிழித்து எறிந்திருந்தார். நாடகத்தில் என்னுடைய ஞானத்தைப் பற்றியும் இந்தி அறிவு பற்றியும் உண்டு இல்லை என்று கிழித்திருந்தார். மொத்தத்தில் சாகித்ய கலா பரிஷத் எனக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்ததே தவறு என்கிற அளவில் எழுதியிருந்தார்.
அந்த நிலையில் இப்போது வடக்கு வாசல் இதழின் சட்ட ஆலோசகராக இருக்கும் ஆர்.வெங்கட்ராமன் தி பேட்ரியாட் நாளிதழில் எனக்கு மிகவும் ஆதரவாக ஒரு கட்டுரை எழுதினார். இந்த நாடகத்தின் வழியாக தமிழில் ஒரு நாடக இயக்குநர் தோன்றியிருக்கிறார் என்று எழுதினார். வெங்கட்சாமிநாதன் லிங்க் இதழில் ஆங்கிலத்தில் மிகப்பெரிய கட்டுரை ஒன்றை எழுதினார். அதில் நாடகத்தில் உள்ள எல்லாக் குறைகளையும் பட்டியலிட்டு இத்தனை குறைகள் இருந்தாலும் ஒன்றை புதிதாகச் செய்ய முன்வந்திருக்கின்ற இவனைப் பாராட்டியே ஆக வேண்டும் என்று உற்சாகப்படுத்தியிருந்தார். என்னுடைய வெளிமுற்ற நாடகங்கள் பற்றியும் அந்தக் கட்டுரையில் எழுதியிருந்தார். "தன்னுடைய தவறுகள் வழியாக நாடகங்களைக் கற்றுக் கொண்டு வருகிறார் பென்னேஸ்வரன்'' என்று அந்தக் கட்டுரையில் எழுதினார் வெங்கட்சாமிநாதன். எத்தனை சத்தியமான வார்த்தைகள் அவை-? பல தவறுகள் வழியாகக் கற்றுக் கொள்ளும் என்னுடைய முயற்சிகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவை நாடகங்களாகட்டும், நான் முயற்சித்த ஆவணப் படங்களாகட்டும் அல்லது இப்போது நடத்தி வரும் இதழாகட்டும். எல்லாவற்றிலும் பலவகையான தவறுகளை இழைத்து அந்தப் பலவகையான தவறுகளின் வழியாகவே பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள முயற்சித்து வருகிறேன்.
அண்ணாமலையின் கணையாழி நேர்காணல் மற்றும் ஷாஜஹான் தில்லியில் நடத்தி வந்த தலைநகரத் தமிழோசை இதழிலும் வெளிவந்த என்னுடைய நேர்காணல் ஒன்றிலும் நாடகம் உங்களுக்கு என்ன கொடுத்திருக்கிறது என்ற ஒரு கேள்விக்கு நாடகம் எனக்கு எனக்கான ஒரு முகத்தைக் கொடுத்திருக்கிறது. யதார்த்தா என்னும் அற்புதமான ஒரு குடும்பத்தைக் கொடுத்திருக்கிறது. பல நல்ல நண்பர்களைக் கொடுத்திருக்கிறது என்று பெருமையுடன் சொல்லியிருக்கிறேன். அதைத் தீவிரமாக நம்புகிறேன்.
ஒரு சிலரின் ஓரிரு சிறு அளவிலான துரோகங்களும் நன்றி மறத்தல்களும் மிகச் சிறிய காலத்துக்கு மனதைச் சற்று வருத்தியிருந்தாலும் இந்த முதல் நாடக மேடையேற்றம் போலவே யதார்த்தாவின் ஒவ்வொரு நாடக மேடையேற்ற நினைவும் நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் நினைத்துப் பார்க்கும் அந்தக் கணங்களை மிகவும் இனிமையாக மாற்றுபவை. மனதுக்குப் பரவசம் ஊட்டுபவை. வாழ்ந்த வாழ்க்கைக்கு சிறிதளவிலாவது அர்த்தம் கொடுத்த பரவசக் கணங்கள் அவை. அந்தக் கணங்களை, அந்த அனுபவத்தை மீண்டும் ஒரு நொடியேனும் வாழ்ந்து பார்க்கத் தூண்டுபவை. அந்தக் கணங்களின் வலிகள், துன்பங்கள் மற்றும் துயரங்கள் எல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கும்போது வேறு ஏதோ ஒரு உலகில் வாழ்ந்து வெளியே வந்தது போன்ற ஒரு தோற்றத்தைத் தருகின்றன. வலிகளை மறக்கும் மாயத்தை நாடக மேடை நிகழ்த்தியது. மேடை எனக்கு உயிர்ப்பை அளித்தது. என்னுடைய நாடக அனுபவங்களில் இறைவன் எனக்கு வரமாக அருளிய பல நல்ல உள்ளங்களைப் பற்றிய பாசம் கலந்த நெகிழ்வுடன் கூடிய நினைவுகளை இறுதி மூச்சு உள்ள வரை நினைத்து நினைத்து மீண்டும் மீண்டும் என் ஆன்மாவுக்கு உயிர்ப்பு ஊட்டிக் கொள்வேன். அந்தக் கணங்களின் மகிழ்வே அலாதியானது தான். அதற்கு எந்த விலையும் கிடையாது.
முதல் மேடை நாடகமேடையேற்றம் பற்றிய என்னுடைய பதிவுகளை சில மாதங்களாக சகித்துக் கொண்டதற்கும் இது குறித்து கடிதங்கள் எழுதி தங்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் என்னுடைய நன்றி.
அதெல்லாம் இருக்கட்டும். இந்தக் கட்டுரையின் முதல் பத்தியில் சொன்ன விஷயத்துக்கு மீண்டும் வருகிறேன். வடக்கு வாசல் தொடங்கிய பின் நாடக மேடைப் பக்கம் எட்டிப் பார்க்க நேரம் கிடைக்காமல் இருந்தது. ஒவ்வொரு மாதமும் ஒரு இதழைக் கொண்டு வருவது ஒரு பெரிய போராட்டம் என்னும் போது நாடகத்துக்கு எங்கே நேரம் ஒதுக்குவது-? நான் உயிரோடு இருக்கும் வரை கடன் தொல்லைகள் என்னை விடப்போவது இல்லை. இப்போது எல்லாம் பழகிவிட்டன. மீண்டும் நாடகத்தின் பக்கம் எட்டிப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. விரைவில் நானே ஒரு நாடகம் எழுதி இயக்கி மேடையேற்றலாம் என்று இருக்கிறேன். அதற்காக திட்டமிட்டு வருகிறேன்.
பாவம் தலைநகர் தமிழர்கள்.

Friday, March 6, 2009

நாடக மேடையேற்ற அனுபவங்கள் -

அப்பா
அமரர் பி.எஸ்கிருஷ்ணராவ்

கஜானன் மாதவ் முக்திபோத் என்னும் இந்திக் கவிஞனின் ஒரு இந்திக் கவிதையை என்னுடைய முதல் மேடை நாடகமாக தலைநகரில் மேடையேற்றிய அனுபவங்களை உங்களுடன் இங்கே பகிர்ந்து வருகிறேன்.

சாகித்ய கலா பரிஷத் அமைப்பினர் எங்கள் நாடகத்தைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள். அந்த மகிழ்ச்சியான செய்தியை மனைவியுடன் பகிர்ந்து கொள்ள வந்த போது என் தந்தையார் உடல்நிலை மிகவும் கவலைக் கிடமாக உள்ளதாகக் கிடைத்த தந்தியை மனைவி என்னிடம் நீட்டினாள்.

என்னுடைய தந்தையார் தொண்டையில் புற்றுநோய் காரணமாக சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நோய் முற்றி இனி தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியாது என்று மருத்துவமனையில் கைவிரித்ததால் கிருஷ்ணகிரியில் எங்கள் வீட்டில் இருந்தார். நான் ஏற்கனவே அவரைப் போய் பார்த்து விட்டு வந்தேன். மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது சென்னையில் மூத்த சகோதரர் வீட்டில் தங்கி மருத்துவ மனைக்குப் போய் வந்து கொண்டிருந்தேன். மேற்கிந்திய நாட்டில் கண் மருத்துவராகப் பணிபுரியும் என்னுடைய சகோதரரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையைப் பார்க்க வந்திருந்தார். புற்றுநோய் மருத்துவமனையில் மனதை நெகிழ வைத்த பல சம்பவங்களை பல மனிதர்களை பல காட்சிகளை வேறு எங்காவது இன்னொரு சந்தர்ப்பத்தில் பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.

மருத்துவர்கள் என் தந்தையை வீட்டுக்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டதும் என்னை சென்னையில் தங்கவிடவில்லை அவர். உடனடியாக தில்லிக்குப் போகச் சொல்லி எழுதிக்காட்டினர். சுந்தரியும் குழந்தையும் தனியாக இருக்கிறார்கள். உடனடியாக ஊருக்குப் போ என்று முகத்தை மிகவும் கடுமையாக வைத்துக் கொண்டு எழுதினர். நான் தில்லிக்குக் கிளம்புவதற்கு முன்பும் அவர் மருத்துவமனையில் தான் இருந்தார். சொல்லிக் கொண்டு கிளம்பலாம் என்று மருத்துவமனை போனேன். மீண்டும் ஒரு தாளில் எழுதிக் காட்டினார்.

"நாடகம் போடுவது போன்ற விரயமான காரியங்களை நிறுத்து. மனைவியையும் குழந்தையையும் கவனமாகப் பார்த்துக் கொள். இது நன்றி கெட்ட சமூகம். இறுதியில் தெருவில் தான் நிற்கவேண்டும். நீ அவதிப்படும் போது யாரும் உடன் வரமாட்டார்கள். தூரமாக விலகி நின்று சிரிப்பார்கள். சிகரெட் குடிக்காதே. என்னைப் பார். எந்தத் தீய வழக்கமும் இல்லாமல் இருந்த எனக்கு இந்தக் கதி. உன்னை ராகவேந்திரர் காப்பாற்றட்டும்''.

நான் உடைந்து போனேன். அவர் முன்பு அழக்கூடாது என்று மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறி வாசலில் நின்று ஒரு அரைமணி நேரம் கரைந்து கரைந்து அழுதேன். புகைவண்டியில் தில்லி திரும்பும்போது நடு இரவில் தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்து அழுதேன். தில்லி வந்ததும் நாடக வேலைகள் துவங்கின. பகல்கள் நாடக வேலைகளில் கரைந்தன. இரவுகளைக் குடித்துக் கரைத்தேன்.

இந்த விஷயத்தில் யாரை, எங்கே, எப்படி ஏமாற்ற முடியும்? ஒரு வழியாக இப்போது இதோ வந்து விட்டேன் என்று என் தந்தைக்குக் காலன் விடுக்கும் அழைப்பு குறித்த செய்தி இறுமாப்புடன் என் எதிரே வந்து நின்றது.

நாடக மேடையேற்றத்துக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. சாகித்ய கலா பரிஷத் இயக்குநரின் பெயரில்தான் இந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறது. குழுவின் பெயரில் அல்ல. எனவே என்னுடைய தேவை இங்கே மிக அதிகம். ஊருக்குப் போனல் எல்லாம் கெட்டுப்போகும். நாடகம் அரைகுறையாகத் தான் தயாராகி உள்ளது. மனதைக் கல்லாக்கிக் கொண்டேன். தந்தி வந்த விஷயம் என்னையும் என் மனைவியுயம் தவிர என்னுடன் இருந்த ஏஞ்செல்சுக்கு மட்டும்தான் தெரியும். குணசேகரனும் எங்களுடனே வீட்டில் தங்கி இருந்தான். அவனுக்குச் சொல்லவில்லை. அன்று வெங்கட், நச்சு, மகேந்திரன் ரவீந்திரன், சுரேஷ் போன்றவர்களும் வீட்டுக்கு வந்திருந்தார்கள். விஷயத்தை யாருக்கும் சொல்லவில்லை. அன்று இரவு மிகவும் அதிகமாகக் குடித்தேன். எல்லோரிடமும் மிகவும் அதிகமாக சண்டை போட்டேன். அதிகமாக அழுதேன்.

மறுநாளில் இருந்து மீண்டும் நாடக ஒத்திகைகளில் கலந்து கொண்டேன். அப்போது எனக்கு இறை நம்பிக்கை என்பது சுத்தமாக இருந்ததில்லை. எனவே வேண்டுதல்கள் என்பது அறவே இல்லை. அப்போது நான் நம்பிய ஒரே கடவுள் என்னுடைய மதுக்குப்பிகள்தான். அவைதான் என்னை உடைந்து போகாமல் பார்த்துக் கொண்டன. அந்த நாட்களின் இரவுகளில் என்னுடைய உளறல்களையும் புலம்பல்களையும் சகித்துக் கொண்டு என்னுடன் வாழத் துணிந்ததற்கு என் மனைவிக்கும் என் மகள் பாரதிக்கும் நான் ஏழேழு ஜென்மங்களுக்கும் பணிவிடைகள் செய்து நன்றிக் கடனைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். நாடக வேலைகள் நாளுக்கு நாள் மெருகேறி வந்தன. முக்தி போத் கவிதை வரிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் புதுப்புது விளக்கங்களுடன் மேடை வடிவம் பெற்று வந்தன.

புதுதில்லி பாராகம்பா சாலையில் உள்ள சப்ரூ ஹவுஸ் அரங்கில் சாகித்ய கலா பரிஷத் அமைப்பின் யுவ கலா மஹோத்சவ் கொண்டாட்டங்களுக்கான அறிவிப்பு தினசரிகளில் வெளிவந்தன. சுமார் ஒரு மாத கொண்டாட்டம் அது. டிசம்பர் 12, 1987 அன்று எங்களின் சாந்த் கா மூ டேடா ஹை. என் புகைப்படம் மற்றும் என்னைப் பற்றிய குறிப்பும் அவர்கள் வெளியிட்ட வண்ணக் கையேட்டில் வந்தது. தினசரிகளில் வெளியிட்ட விளம்பரங்களில் நாடகம் மற்றும் இயக்குநர்களின் பெயர்களுக்கு முன்னல் அவர்களின் சிறிய புகைப்படத்தையும் வெளியிட்டார்கள். நான் மிகவும் பெருமையாக அப்பாவுக்கு எல்லாவற்றையும் அனுப்பி வைத்தேன்.

நாடக மேடையேற்றத்துக்கான நாட்கள் நெருங்கிக் கொண்டே வந்தன. இன்னொரு பக்கம் காலனும் என் தந்தையை மிகவும் இறுக்கமாக நெருங்கிக் கொண்டிருந்தான். அன்று இப்போது இருப்பதைப் போன்ற தொலைபேசி வசதிகள் கிடையாது. கிருஷ்ணகிரிக்கு நேரடியான தொலைதூரத் தொலைபேசி வசதி கிடையாது. இரவில் எண்ணைப் பதிவு செய்து காத்திருந்து பேசவேண்டும். அலுவலகத்தில் வேலையில் இருந்தவன் ஏதோ திடீரென்று ஞாபகம் வந்தது போல, திருவனந்தபுரத்தில் இருந்த என் அக்கா மகனுக்கு நேரடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அப்பாவின் உடல்நலம் பற்றி அவனிடம் விசாரிக்க முயன்றேன். அவனுடன் பணியில் இருப்பவர் தொலைபேசியை எடுத்தார். "பத்மநாபனுடைய தாத்தா இறந்து விட்டாராம். அவர் கிருஷ்ணகிரி போயிருக்கிறார்'' என்று சொல்லி தொலைபேசியை துண்டித்தார். அது 8 டிசம்பர் 1987.

இடையில் கிருஷ்ணகிரியில் இருந்தும் என் சகோதரர்கள் என்னைத் தொடர்பு கொள்ள முயற்சித்து இருக்கிறார்கள். அவர்களால் முடியவில்லை. அப்போது அமரர் வாழப்பாடி ராமமூர்த்தி எங்கள் கிருஷ்ணகிரி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர். என்னுடைய சகோதரரின் நண்பர் அவரைத் தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லியிருக்கிறார். 12 டிசம்பர் நாடகம் இருக்கிறது. எப்படி ஊருக்குப் போவது? சரி. போகவேண்டாம். இங்கேயே இருந்துவிடலாம் என்றுகூட நினைத்தேன். விஷயம் கேள்விப்பட்டு யதார்த்தாவில் ஒவ்வொருவராக என் வீட்டுக்கு வந்து விட்டார்கள். நான் போகவில்லை என்றதும் வெங்கட் என்னை அடிக்கவே வந்து விட்டான். அனைவரும் என்னைத் திட்ட ஆரம்பித்தார்கள். அப்போது வெங்கட் ஒன்று சொன்னன். யுவ மகோத்சவ் ஒரு மாதம் நடக்கும் விழா. எங்கள் நாடகத்தை ஐந்தாவது நாளில் திட்டமிட்டு இருந்தார்கள். இன்னும் 25 நாட்கள் மீதமிருக்கின்றன. நான் ஊருக்குப் போய் காரியம் எல்லாம் முடித்து 15 நாட்களில் திரும்பிவிடலாம் என்றும் சாகித்ய கலாபரிஷத்தின் செயலரை அணுகி இதுகுறித்து அனுமதி கேட்டு வருகிறோம் என்று வெங்கட்டும் நச்சுவும் போய் அனுமதியும் வாங்கி வந்தார்கள். டிசம்பர் 28ம் தேதிக்கு எங்கள் நாடகத்தை ஒத்தி வைக்க சம்மதித்தார் அந்த அதிகாரி.

அப்பா இறந்த அன்று தில்லியில் எங்கள் யதார்த்தா குடும்பம் எனக்குக் கொடுத்த மனோதைரியத்தையும் அமரர் வாழப்பாடி ராமமூர்த்தி மற்றும் இப்போது வடக்கு வாசல் இதழின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர்- பத்திரிகையாளர் ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் எனக்கு நல்கிய உதவிகளையும் உயிர் உள்ளவரை என்னல் மறக்க முடியாது. வானூர்தியில் பயணித்து சென்னையில் இறங்கி அங்கிருந்து ஒரு சிற்றூர்தியைப் பிடித்து கிருஷ்ணகிரி சேர நள்ளிரவு ஒருமணி ஆகிவிட்டது. அப்பாவின் இறுதிச் சடங்குகள் முடிந்து போயிருந்தன. அவருடைய இறுதி தரிசனம் எனக்குக் கிட்டவில்லை.

இது அவர் தீர்மானித்ததாகத்தான் இருக்கவேண்டும். தான் வாழ்ந்த இறுதி மூச்சு வரை தன்னுடைய பேச்சை எந்த வகையிலும் கேட்காத தன் மகனை ஒரு தந்தை இதைவிட வேறு எந்த வகையில் தண்டிக்க முடியும்?

தொடர முடியவில்லை. அடுத்து முடித்து விடுகிறேன்.



Wednesday, March 4, 2009

முதல் நாடக மேடை அனுபவங்கள் -7


கஜானன் மாதவ் முக்தி போத் என்னும் இந்தி கவிஞனின் ஒரு இந்திக் கவிதையை என்னுடைய முதல் மேடை நாடகமாக தலைநகரில் மேடையேற்றிய அனுபவங்கள் தொடர்பான பதிவுகளை இங்கே எழுதி வருகிறேன். ஒரு நேர்க்கோட்டில் செல்லாது கிராமத்துச் சாலையில் காளை மாடு பெய்து செல்லும் மூத்திரக்கோடுகள் போல வளைந்தும் நெளிந்தும் ஒழுங்கின்றிப் பதிந்து வருகின்றன. ஆனலும் அந்த நினைவுகளை மல்லுக்கட்டி இழுத்துப் பதிந்து வைக்கும் அந்தக் கணங்கள் மனதுக்கு நெகிழ்வு தரும் அனுபவங்களாக அமைகின்றன. அந்த அற்புதக் கணங்களை மீண்டும் ஒருமுறை வாழ்ந்து பார்க்கின்றது போன்ற லாகிரியை மனப்பரப்பில் கிளர்த்திச் செல்கின்றன. ரயில் பயணத்தின் போது சீறி ஓடும் ரயிலின் வேகத்தில் ஒரு நொடியின் பின்னத்தில் பார்வைக்குத் தவறவிட்ட ஏதாவது ஒரு அற்புதக் காட்சியை ஒரு நொடி ஒருமுறை மீண்டும் காணும் தவிப்பு விளைவதைப் போன்ற ஒரு தவிப்பில் விளைந்த பதிவுகள் இவை.

சாகித்ய கலா பரிஷத் அமைப்பின் யுவ மகோத்சவத்துக்கான நாடகத் தேர்வுக்கு எங்களின் நாடகத்தில் ஒரு காட்சியின் வடிவமைப்பை நடுவர்கள் எதிரில் நிகழ்த்திக் காட்டுவதற்காக நேஷனல் காலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட் கட்டிடத்தில் பதட்டத்துடன் நின்ற கோலத்துடன் சென்ற இதழில் நிறுத்தி இருந்தேன்.

ஏற்கனவே சொன்னது போல, எங்கள் குழுவில் என்னைத் தவிர எல்லோரும் ஏதோ ஒருவகையான மகிழ்ச்சியை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு சிரித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். நான் ஒருவன் மட்டுமே எங்கோ ஆப்பு வைக்கப்பட்ட குரங்கைப் போல முகத்தை வைத்துக் கொண்டு தொடர்ச்சியாக சிகரெட் புகைத்துக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தேன்.

என்னுடைய பதட்டத்துக்கு இன்னும் சற்று தீ வைப்பதைப் போல பறைவாசிக்கும் கந்தசாமியும் உறுமி வாசிக்கும் முத்துசாமியும் வாத்தியங்களைக் காய்ச்சிக் கொள்ள நெருப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆரம்பித்தார்கள். அந்த அழகான கட்டிடத்தின் வெளியிலோ அல்லது விரிந்து பரந்த புல்வெளியிலோ எதையாவது கொளுத்தினல் அவர்கள் நம்மைக் கொளுத்தி அங்கேயே புதைத்து விடுவார்கள். இன்னொன்று நேரம் எங்கே இருக்கிறது? நடுவர்கள் குரல் கொடுத்தால் ஓடிப்போய் குரங்காட்டம் ஆடிக்காண்பிக்க வேண்டும். பதட்டம் இன்னும் அநியாயத்துக்குக் கூடியது.

தமிழ், கன்னடம், தெலுங்கு இந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் அந்த நேரத்தில் எனக்குக் கிடைத்த அத்தனை கெட்ட வார்த்தைகளிலும் எங்கள் கோஷ்டியினர் எல்லோரையும் பார்த்து சத்தம் போட ஆரம்பித்தேன். ஏதோ ஒரு இந்திப் பெண்மணியிடம் தங்கள் அன்பையும் நட்பையும் தமிழிசையையும் வளர்க்க முயற்சித்துக் கொண்டிருந்த சங்கரும் ஏஞ்செல்சும் சத்தம் கேட்டு ஓடிவந்தார்கள். ஏஞ்செல்ஸ் என்னிடம், "மாமா, அதுக்கு எதுக்கு இப்படி சத்தம் போடறீங்க? இங்கேயே எந்த அறையிலாவது ராட் ஹீட்டர் இருந்தால் அதில் காய்ச்சிக் கொள்ளலாமே'' என்று ஒரு வழியைக் கொடுத்தான். கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. ஆனல், கந்தசாமியும் முத்துசாமியும் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. வாத்தியங்களை விறகு நெருப்பில் காய்ச்சினல்தான் சுருதி சரியாக சேரும் என்று பிடிவாதம் பிடித்தார்கள். குறைந்தது குப்பைக் காகிதங்களிலாவது நெருப்பைக் கொளுத்திக் காய்ச்சினல்தான் தங்கள் வாத்தியங்களில் சரியாக சுருதி சேரும் என்று பிடிவாதம் பிடித்தார்கள்.

சங்கர், ஏஞ்செல்ஸ், வெங்கட், குணசேகரன், நச்சு, வீரமணிகண்டன், வீரராகவன், மோகன், ராமசாமி என்று ஒரு பெரிய படையே அந்த வளாகத்தில் குப்பை காகிதங்களை சேகரிக்க அலைந்தார்கள். வேண்டிய அளவு குப்பைக் காகிதங்களை சேர்த்தாகிவிட்டது. அந்த வளாகத்தினுள் எங்கே தீ மூட்டி வாத்தியங்களைக் காய்ச்சிக் கொள்வது? கட்டிடத்தின் காவலரைக் கேட்டபோது அவர் தன்னுடைய சுட்டுவிரலும் ஆகாயமும் கிட்டத்தட்ட சேரும் ஒரு இடத்தைக் காண்பித்து அங்கே காய்ச்சிக் கொண்டால் ஒரு பிரச்னையும் இருக்காது என்றார். அந்த தூரத்தில் காய்ச்சிக் கொண்டு உள்ளே வரும் வேளைக்கு அந்தக் குளிரில் மீண்டும் சுருதி இறங்கி விடும் என்று முத்துசாமி ஆட்சேபித்தார். அது நவம்பர் மாதம். அப்போதெல்லாம் தில்லியில் நவம்பர் மாதங்கள் குளிர் நிறைந்த மாதங்களாக இருந்தன. அவர் சொன்னதிலும் நியாயம் இருந்தது. இன்னொன்று சுருதி கலைந்த வாத்தியங்களை வைத்துக் கொண்டு ஏதாவது செய்தால் அசிங்கமாகிவிடும். உள்ளே நடுவர்களாக இருந்த ஓரிரண்டு முசுடுக் கிழங்கள் நல்ல சங்கீதம் ஞானம் உள்ளவை. சுருதி கெட்ட வாத்தியத்தை வாசித்தால் மானம் போய்விடும். எனவே, யார் யாரையோ கெஞ்சிக் கூத்தாடி, ஏதேதோ வகையில் தாஜா செய்து அந்தக் கட்டிடத்தின் பின்புறம் வாத்தியங்களைக் காய்ச்சுவதற்கு ஏற்பாடு செய்தார்கள் நச்சுவும் வெங்கட்டும்.

இதற்கிடையில் வேறு குழுக்களின் தேர்வுக்கான காட்சிகள் தீவிரமாக நடுவர்கள் முன்னிலையில் அரங்கேறிக் கொண்டிருந்தன. எங்களை நடுவர்கள் கூப்பிடும்போது உள்ளே போகலாம் என்று தயக்கத்துடன் நின்றிருந்தேன். ஒரு பக்கம் தயக்கம் என்றால் இன்னொரு பக்கம் அச்சம். மற்ற குழுக்கள் ஒருவேளை சரியாக செய்யவில்லை என்றால் நடுவர்கள் அங்கேயே எதையாவது சொல்லி மானத்தை வாங்கினர்கள் என்றால் நம்முடைய கதி என்ன ஆகும் என்று நினைத்துப் பார்க்கவே சற்று குலை நடுங்கியது. ஏதாவது குழு ரொம்பவுமே நன்றாக செய்து விட்டால் நம்முடைய வாய்ப்பு தள்ளிப் போவதற்கான வாய்ப்பு அதிகரித்து விடுமே என்றும் அச்சம்.

எனவே மரியாதையாக வெளியிலேயே நின்று கொண்டு கூப்பிடும்போது சென்று நம்முடைய காட்சியை அரங்கேற்றி விட்டு ஒடிவந்து விடலாம் என்று நின்றிருந்தேன். பதட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தைரியம் சொல்வது போல ரவீந்திரன் அருகில் வந்து கை கொடுத்தார். அந்த நேரத்தில் எனக்குக் கிட்டிய அவருடைய பாசம் மிக்க அந்தக் கரங்களின் அழுத்தம் தந்த ஆறுதல் மற்றும் தைரியத்தின் வீரியத்தை இப்போதைக்கு என்னல் எந்த வார்த்தையிலும் மிகச்சரியாக விவரிக்க முடியாது. ஆனல் ஒன்றை நன்றியுடன் சொல்லலாம் என்று தோன்றுகிறது. ரவீந்திரன் பாசத்துடனும் நம்பிக்கையுடனும் அன்று என் கரங்களில் பதித்த அழுத்தம் எனக்குப் பின்னளில் ஏறத்தாழ முப்பது நாடகங்களை இயக்கும் மனவலிமையைக் கொடுத்தது.

ஒருவழியாக எங்கள் முறை வந்தது. மேடை எல்லாம் கிடையாது. ஒரு பெரிய கூடம். மற்ற நாடகக் குழுக்களின் கலைஞர்கள் சுற்றி அமர வைக்கப்பட்டிருந்தார்கள். நடுவர்கள் தனியாக ஒரு மூலையில் நாற்காலிகளில் அமரவைக்கப் பட்டிருந்தார்கள். நாங்கள் நடித்துக் காட்டிய காட்சியில் வசனங்கள் ஏதும் இல்லை. கிராமத்து இரவில் நடக்கும் ஒரு சிறுதெய்வ வழிபாட்டு ஊர்வலம். தலையில் கரகம் போல அலங்கரித்த ஒரு பீடத்தில் சிறுதெய்வத்தை (நாங்கள் பெயர் எல்லாம் வைக்கவில்லை) அமர்த்தி தலையில் வைத்து ராமச்சந்திரன் ஆடி வருவான். நச்சு பூசாரி. குணசேகரனுக்கும் இளஞ்சேரனுக்கும் சாமி வந்து விடும். மிகவும் வலிமையான அடவுகளுடன் ஆட்டம் அமைந்திருந்தது. சிவாஜி, முத்துசாமி மற்றும் கந்தசாமி குழுவினர் மிகவும் அற்புதமாக வாசித்தார்கள். ஆட்டம் உச்சகட்டத்துக்குப் போகும். திடீரென்று ஓரிடத்தில் தகராறு முளைக்கும். அனைவரும் திக்குக்கு ஒருவராக சிதறி ஓடிப்போய் ஒருவர் மற்றவரைத் தாக்கிக் கொள்வார்கள். கெட்ட வார்த்தைகளில் திட்டிக் கொள்வார்கள். (சொல்லப் போனால் இந்தக் காட்சியில் பேசப்பட்ட உச்சபட்ச வசனங்களே அந்த இந்தி கெட்ட வார்த்தை வசவுகள் தான் இந்தச் சேரி சண்டை ஓயும்போது இன்னொரு பக்கத்தில் அதே மேடையில், ஒரு மிகப்பெரிய செல்வந்தரின் வீட்டு விருந்து ஒன்று மிகவும் பொய்மையுடனும் அனைத்து படாடோபங்களுடனும் நடக்கும். இது தான் நாங்கள் நடித்துக் காட்டிய காட்சி. பிறகு சுவரொட்டிகள் கிளர்ந்து எழுந்து தங்கள் உரிமையை பிரகடனம் செய்யும் இன்னொரு காட்சி. இரண்டையும் முடித்து விட்டு பதட்டத்துடன் அரங்கத்தை விட்டு வெளியேறினர்கள் நடிகர்கள். இப்போது என்னிடமிருந்த பதட்டம் அவர்களிடம் இடம் மாறியது.

நாங்கள்தான் இறுதியாக வந்த குழு. அதற்குப் பிறகு நடுவர்களின் தீர்ப்புதான்.

நீண்ட நேர அமைதிக்குப் பிறகு எங்களை தேர்ந்தெடுத்து இருப்பதாக சாகித்ய கலா பரிஷத் செயலர் சுரேந்திர மாதூர் தெரிவித்தார். ஆனல் அந்த ஆட்டத்தின் இறுதியில் வரும் சண்டையின் போது பரிமாறிக்கொள்ளப்படும் கெட்ட வார்த்தைகளை கண்டிப்பாக நீக்க வேண்டும் என்றார். அது திட்டமிட்டு வந்தது அல்ல என்றும் எங்கள் நடிகர்கள் கொஞ்சம் அதிகமாகவே தத்ரூபமாக இருக்க முயற்சித்தார்கள் என்றும் சொல்லி பலமுறை விழுந்து வணங்கி நன்றிசொல்லி வெளியே வந்தோம். ரவீந்திரன் ஓடிவந்து என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு மிக அழுத்தமாகக் கை கொடுத்தார். வீட்டுக்குத் திரும்பும் போதே இரவு பலமான விருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி விட்டுப்போனேன்.

அப்போது வீட்டில் தொலைபேசி கிடையாது. மனைவி கதவைத் திறந்ததும் மிகவும் சந்தோஷத்துடன் கத்திச்சொன்னேன்...

"நாங்க ஜெயிச்சிட்டோம்''.

வழக்கத்துக்கு விரோதமாக ஒன்றும் சொல்லாமல் ஒரு காகிதத்தை என்னிடம் கொடுத்தாள் மனைவி.

அது ஊரிலிருந்து என்னுடைய மூத்த சகோதரர் அனுப்பியிருந்த தந்தி.

"அப்பாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கு இடமாக இருக்கிறது. உடனே கிளம்பி வா''.



Tuesday, March 3, 2009

பாழடைந்து நிற்கும் சத்தியமூர்த்தி கலையரங்கம்


பாழடைந்து நிற்கும் சத்தியமூர்த்தி கலையரங்கம்

கஜானன் மாதவ் முக்திபோத் என்னும் இந்திக் கவிஞனின் சாந்த் கா மூஹ் டேடா ஹை (சந்திரனின் முகம் கோணியது) என்கிற கவிதையை யதார்த்தாவின் முதல் மேடை நாடகமாக மேடையேற்றிய அனுபவம் குறித்து எழுதத் துவங்கி எங்கெங்கோ அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன். உருப்படியாகச் செய்த ஒரு காரியம் என்னவென்றால் அந்த நாடகத்தில் பங்கேற்ற நண்பர்களைப் பற்றிக் குறிப்புக்கள் தந்து இருந்தேன். எழுதும் போதே ஏதோ பழைய நாட்களில் பயணித்து வந்ததைப் போன்ற ஒரு நெகிழ்வு இருந்தது.

சரி. விஷயத்துக்கு வருவோம். மந்திர் மார்க்கில் உள்ள சவுத் இந்தியா கிளப்பின் சத்தியமூர்த்தி ஹால் அரங்கில் எங்கள் ஒத்திகைகள் துவங்கின. நாடகத்தில் பங்கு கொண்ட எல்லோரையும் பற்றிச் சொன்ன போது எங்களுக்கு ஒத்திகைகள் நடத்தக் கிடைத்த இடத்தைப் பற்றியும் கொஞ்சம் சொல்வது தவறில்லை என்று நினைக்கிறேன். இது போன்ற பதிவு இங்கே மிகவும் அவசியமானது என்றும் நினைக்கிறேன்.

இப்போது முழுக்கவும் பாழடைந்து போன இந்த சத்தியமூர்த்தி கலையரங்கம் என்னும் அற்புதமான கட்டிடத்தில் யாரும் தற்போது பிரவேசிக்கவும் வசிக்கவும் ஆபத்தான கட்டிடமாக அறிவித்து ஒரு அறிவிப்பு வைத்துள்ளது தில்லி மாநகராட்சி.. அந்த இடத்தைக் கடக்கும் போது உண்மையிலேயே மனது கனத்துப் போகிறது. தலைநகரில் தமிழர்களாகிய நாங்கள் பாழாக்கிய பல நல்ல விஷயங்களில் இந்தக் கட்டிடமும் ஒன்று. முன்பு பல கலை நிகழ்ச்சிகள் இந்தக் கட்டிடத்தில் நடந்துள்ளன. பல நல்ல இசை நிகழ்ச்சிகள். பல நாடகங்கள், பல கருத்தரங்கங்கள் இங்கே நடைபெற்றுள்ளன.

எனக்கு நினைவு தெரிந்து கி.ராஜநாராயணன் சாகித்ய அகாதமி விருது பெற்றபோது பல தமிழ் அமைப்புக்கள் இணைந்து அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினோம். அது இந்த சத்தியமூர்த்தி கலையரங்கில் நடைபெற்றது. அப்போதே அந்தக் கட்டிடத்தில் ஒரு மாதிரியான நாற்றம் கிளம்ப ஆரம்பித்திருந்தது. மேடையின் விங்ஸ் என்று சொல்லப்படும் துணிப்படுதாக்கள் எல்லாம் கிழிந்து மேடையின் பெரும்பகுதி சிதிலமாகிப்போகத் துவங்கியிருந்தது. கலையரங்கின் மேலே மாடியில் இருப்பது சவுத் இந்தியன் கிளப். அங்கு ஒரு காலத்தில் மைய அரசில் பணிபுரியும் தமிழ் அதிகாரிகளின் மனைவிமார்கள் டேபிள் டென்னிஸ் விளையாடுவார்கள். பாட்டுப் போட்டி, நாடகப் போட்டி போன்ற சுவாரசியமான விஷயங்கள் நடைபெறும். இரவு பகலாக ஒரு கும்பல் கேரம் போர்டு விளையாடும். மாநில அளவில், தேசிய அளவில் கேரம் போட்டிகள் அங்கு நடைபெற்றிருக்கின்றன. திருமண வரவேற்பு விழாக்கள் நடைபெறும். தமிழகத்திலிருந்து குழுவாக யாராவது வந்தால் தற்காலிகமாகத் தங்கிக் கொள்ள அங்கு இடம் கிடைக்கும்.

இந்தக் கட்டிடத்தில் கலையரங்கம், சீட்டாட்டக் கிளப் மட்டும் அல்லாமல் ஒரு உணவகமும் நடைபெற்று வந்தது. ச்சத்தர் சிங் மெஸ் என்ற அழைப்பார்கள். பெருந்தலைவர் காமராஜரிடம் பணியாளராக ச்சத்தர் சிங் என்னும் பெரியவர் ஒருவர் இருந்தார். பெருந் தலைவர் பாராளுமன்ற உறுப்பினருக்கான பதவிக் காலம் முடிந்து தில்லி வீட்டைக் காலி செய்து போகும் போது தன்னிடம் பணிபுரிந்த ச்சத்தர் சிங்குக்கு ஏதாவது வழிகாட்ட வேண்டும் என்று சத்தியமூர்த்தி கலையரங்கில் அமைந்திருந்த இந்த உணவகத்தின் குத்தகையை நிரந்தரமாக அவருக்கு ஏற்பாடு செய்துவிட்டுச் சென்றார் பெருந்தலைவர். ச்சத்தர் சிங் தான் நேரில் கண்ட ஒரே தெய்வம் காமராஜ்தான் என்று சொல்வார். எண்பத்து ஒன்றாம் ஆண்டு தில்லிக்கு வந்து இறங்கிய முதல் நாளில் நான் உணவு அருந்திய முதல் உணவகம் இதுதான். அன்றிலிருந்து சுமார் நான்கு ஆண்டுகள் மூன்று நேரமும் எனக்குச்சோறு போட்ட இடம் இதுதான். அப்போது மாதம் ரூ.75 செலுத்தி விட்டு மூன்று நேரமும் இங்கே சாப்பிடலாம். தென்னக உணவு பரிமாறுவார்கள். மிகச்சிறிய கண்களுடன் மங்கோலிய முகங்களுடன் கர்வாலி சிறுவர்கள் உணவு பறிமாறுவார்கள்.

இப்படி இந்தக் கட்டிடத்தில் எல்லாவற்றுக்கும் இடம் இருந்தது. எல்லாம் கிடைத்தன. தமிழகத்தில் இருந்து தலைநகருக்கு பணியில் சேர வந்தவர்களுக்கு சொந்த ஊரின் சில எச்சங்களைக் காட்டியபடி அந்தக் கட்டிடம் திகழ்ந்தது.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அந்த அற்புதமான இடம் முழுநேர சீட்டாடும் கிளப்பாக மாறத் துவங்கியது. தங்களைத் தமிழர்கள் என்று அடையாளம் காட்டிக் கொள்வதில் அவமானப்படும் தமிழர்கள், தமிழில் பேசிக்கொண்டு வருபவர்களை ஏதோ தொத்து வியாதி பிடித்தவர்களைக் கண்டது போன்று மிரண்ட தமிழர்கள், மனைவிக்கு பயந்து வெளியிடத்தில் போதையேற்றிக் கொள்ளும் தமிழர்கள் சத்தியமூர்த்தி கலையரங்குக்கு வந்து சீட்டாடத் துவங்கினர்கள். வெள்ளிக்கிழமை மாலை அலுவலகத்தில் இருந்து நேரே வந்து சீடடாட்டம் துவங்கி வீட்டுக்கே போகாமல் திங்கட்கிழமை காலை நேராக அலுவலத்துக்குச் சென்ற தமிழர்களை நான் அங்கே பார்த்து இருக்கிறேன். அப்படி வீட்டை மறந்து சீட்டாட்டத்தில் மூழ்கிய கணவர்களுக்கு அன்புப்பரிசாக துடைப்பக் கட்டையைக் கையிலேந்தி வெளியே ரிக்ஷாக்களில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்த வீரப் பெண்டிர்களையும் பார்த்து இருக்கிறேன். சில சமயங்களில் கிளப்புக்கு உள்ளே கணவர்களுக்கு செருப்படி கிடைத்த வீர வரலாறுகளும் உண்டு. அங்கு கோபால் என்று இமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்து ஒரு சேவகன் எல்லோருக்கும் மதுக்குப்பிகளை வாங்கிவருவது மற்றும் வேறு பல குற்றேவல்களை செய்வது போன்ற தொண்டில் ஈடுபட்டு வந்தான். அவனுக்குத் தமிழில் உள்ள அனைத்துக் கெட்ட வார்த்தைகளும் அத்துபடி. உறவுமுறைகளை வைத்துத் திட்டும் அனைத்துக் கெட்ட வார்த்தைகள் மற்றும் மாவட்ட வாரியான கெட்ட வார்த்தைகள் அனைத்திலும் அபாரமான பாண்டித்யம் பெற்றிருந்தான்.

நாளாக நாளாக இந்த அமைப்பின் பதவியில் மற்றும் அதிகாரத்தில் இருந்த தமிழர்கள் தங்களைத் தமிழர்கள் என்று சொல்லச் சற்று அவமானப்பட்டதால் மெல்ல மெல்ல தமிழர்கள் அல்லாத மற்றமொழி சார்ந்த குடிகாரர்களும் சூதாடிகளும் இங்கே அதிமாக வரத் துவங்கினர்கள். கோலோச்சத் துவங்கினர்கள். நீண்ட ஆண்டுகளாக மற்றயாரும் அங்கே உறுப்பினர் ஆக்கப்படவில்லை.

அந்தக் கலையரங்கத்தை சீரமைக்க வேண்டும் என்று அந்த அமைப்பைச் சேர்ந்த நண்பர்களிடம் பலமுறை சொல்லிப் பார்த்தேன். அவர்கள் ஏதோ நான் அந்தக் கட்டடத்தை ஆக்கிரமிக்க வந்திருக்கிறேன் என்பதைப் போல என்னை விரோதிக்கத் துவங்கினர்கள். ஓரிருவர் என்னுடன் சண்டைக்கும் வந்தார்கள். பிறகு பலமுறை திரும்பத் திரும்ப நான்கைந்து பேர் சேர்ந்து பேசி ஏதாவது முடிவெடுக்கலாம் என்று அழைத்தார்கள். ஆனல் பலமுறை சென்று காத்திருந்தும் யாரும் வரமாட்டார்கள். அது அப்படியே விட்டுப் போயிற்று. பிறகு பலகாலம் தமிழர்கள் அல்லாதவர்களே அங்கு கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். யாரும் தங்களை உறுப்பினர் என்று உரிமை கொண்டாடக் கூட அங்கே எந்த ஆவணங்களையும் யாரும் விட்டுவைக்கவில்லை. எல்லாம் அழிந்தது. அல்லது வேண்டு மென்றே அழிக்கப்பட்டு இருக்கலாம். தலைமைப் பொறுப்பில் இருந்த யாரும் அந்தக் கட்டிடத்தின் மீதோ அந்த அமைப்பின் மீதோ எவ்வித அக்கறையும் காட்டவில்லை. இப்படியே நாம் இந்த அற்புதமான விஷயத்தை இழந்தோம்.

தலைநகரில் தமிழர்களுக்குச் சொந்தமான ஒரு கட்டிடமும் கலையரங்கமும் நகரின் மிக மையமான சாலையான மந்திர்மார்க்கில், மிகவும் பரிதாபமாக ஒரு பேய் மாளிகையைப் போன்று பல சோகக் கதைகளைச் சுமந்து நின்று கொண்டிருக்கிறது. இதற்கு என்றாவது ஏதாவது விடிவுகாலம் பிறக்குமா என்று தெரியவில்லை.

சரி. விஷயத்துக்கு வருவோம். இந்த அந்த சத்தியமூர்த்தி கலையரங்கில் எங்கள் ஒத்திகைகள் துவங்கின. நாங்கள் ஒத்திகையைத் துவங்கிய போதே அந்தக் கட்டிடம் க்ஷீணமடையத் துவங்கியிருந்தது. பறவைகளின் எச்சங்களும் வவ்வால் நாற்றமும் குடலைப் புரட்டும். நாங்களே அந்த இடத்தை சுமார் மூன்று நாட்களுக்கு மேல் செலவிட்டு நாற்றங்கள் போகும் வகையில் சுத்தம் செய்தோம். பிறகு ஒத்திகைகளைத் துவங்கினோம். பிணம் தூக்கிச் சென்று இறுதிச் சடங்குகள் செய்யும் காட்சி. இரவு நேரத்தில் செல்வந்தர் வீட்டில் நடைபெறும் ஒரு தடபுடலான விருந்துக் காட்சி. இன்னொருபுறம் சேரியில் ஒரு சிறுதெய்வ வழிபாட்டு முறைகள். அதை முடித்ததும் குடிகாரர்கள் ஒரு சர்ச்சையைத் துவங்கி பெரும் கலவரமாக முடியும் காட்சி, இரவு நேரங்களில் சுவரொட்டிகள் தங்கள் உரிமையைக் கோரிப் போரிடும் வண்ணம் நடன அமைப்புக்கள், நகர வாழ்க்கையின் சில காட்சிகள், கிராம வாழ்க்கையின் சில சாட்சிகள் எனத் துண்டு துண்டுகளாக முக்திபோத் கவிதையின் பல படிமங்களையும் காட்சிப்படுத்தப் போராடிக் கொண்டிருந்தேன்.

இளஞ்சேரன் அப்போது மிகவும் பிரபலமாக இருந்த டிஸ்கோ நடனத்தை ஆடினன். நன்றாகத் தான் இருந்தது. ஒரு இந்தி நாளேட்டில் "முக்திபோத்தின் கவிதையில் டிஸ்கோ'' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில் என்னை நார் நாராகக் கிழித்து என்னுடைய நாடக இயக்கத்தை மிகவும் கடுமையாக விமர்சித்து என் மானத்தை வாங்கி இருந்தார்கள்.

கவிதையின் வரிகளை மிகவும் அற்புதமாகப் பின்னணியில் வாசித்தான் நச்சு என்கிற நரசிம்மன். ஏஞ்செல்ஸ் மற்றும் சங்கர் அருமையாக இசையமைப்பு செய்திருந்தார்கள். சங்கர் வடிவமைத்துக் கொடுத்த நாட்டுப்புற இசைவடிவங்களை நாட்டுப்புற இசைக்கலைஞர்களான சிவாஜி, முத்துசாமி மற்றும் கந்தசாமி ஆகியோர் மிகவும் அற்புதமாக வாசித்தார்கள். உற்சாகத்தில் கொஞ்சம் அதிகமாக போதை ஏற்றிக் கொண்ட நாயனம் வாசிக்கும் சிவாஜி மட்டும் தில்லான மோகனம்பாள் சிவாஜி மாதிரி நாடகத்தில் நடன அமைப்பின் வீரியம் போதாது என்றும் தன்னுடைய நாயனத்தின் முன்பு இவர்களின் கால்கள் பேசவில்லை என்ற ரீதியில் வாசிப்பதை நிறுத்தி நிறுத்தி சண்டை போட்டுக் கொண்டிருந்தார். அவர் சமாதானம் அடைந்து ஒரு மாதிரியாக வாசிக்கத் துவங்கும் நேரத்தில் மகேந்திரன் ஏதாவது புதுச் சண்டை துவங்குவான். அல்லது ராமச்சந்திரன் அந்த வாசிப்பில் வீரியம் இல்லை என்று சண்டைக்கு வருவான்.
தில்லான மோகனம்பாளில் வரும் எஸ்.வி.நாகையா போல ரவீந்திரன் நடுவில் வந்து ஏதாவது சமாதானம் சொல்லிப் போவார். இது தினமும் தொடர்ந்தது. ஒத்திகைகளின் நடுவில் ஏற்கனவே சொன்னது போல சாகித்ய கலா பரிஷத் அமைப்பு நாடக விழாவில் கலந்து கொள்ளும் இயக்குநர்கள் தாங்கள் வடிவமைத்த ஏதேனும் ஒரு காட்சியை சில நடுவர்கள் முன்பு நடித்துக் காட்ட வேண்டும். பிறகே அந்த நாடகம் விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவது பற்றி முடிவெடுக்கப்படும் என்றநிபந்தனையை விதித்திருந்தார்கள்.

அந்த நிபந்தனையின் படி நடுவர்கள் முன்னிலையில் காட்சியை நடித்துக் காட்டும் நாளும் வந்தது. நேஷனல் காலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட் கட்டிடத்தில் அந்தத் தேர்வினை வைத்து இருந்தார்கள். திவான் சிங் பஜேலி, மோகன் மகரிஷி, டி.என்.ஷர்மா போன்ற தலைநகரின் இந்தி நாடக ஜாம்பவான்களும் விமர்சகர்களும் நடுவர்களாக அழைக்ககப்பட்டிருந்தனர்.

தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்த இயக்குநர்களில் பலபேர் தேசிய நாடகப் பள்ளியில் படித்து பட்டம் பெற்றவர்கள். தில்லியில் இந்தி மற்றும் உருது நாடகக் குழுக்களில் பெரும் பங்காற்றியவர்கள். அனுபவம் மிக்கவர்கள். பல பெரிய மேடைத் தயாரிப்புக்களில் கலந்து கொண்டு பெயரும் புகழும் பெற்றவர்கள். இவை எல்லாவற்றும் எதிரிடையாக இருந்தவன் நான் ஒருவன் மட்டுமே. நாடகம் குறித்த படிப்பு கிடையாது. மேடை நாடகம் குறித்த அனுபவம் எதுவும் கிடையாது. நாடகங்களில் நடித்த அனுபவம் கிடையாது. வாய் திறந்து இந்தி பேசினல் இந்தி மொழியை நேசிக்கும் யாருக்குமே கடுங்கோபத்தை வரவழைக்க வாய்ப்பிருக்கும் ஒரு மோசமான இந்தி உச்சரிப்பு. இத்தனை பலவீனங்களையும் வைத்துக் கொண்டு அந்த அரங்கத்தில் தேர்வுக்காக மிகவும் பதட்டத்துடன் காத்துக் கொண்டிருந்தேன். என் குழுவைச் சேர்ந்த மற்ற எல்லோரும் அங்கங்கே நின்று கொண்டு சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தது.

Sunday, March 1, 2009

நாடக மேடைஅனுபவங்கள்-5


வெங்கட்சாமிநாதன்

கஜானன் மாதவ் முக்திபோத் என்னும் இந்திக் கவிஞனின் "சாந்த் கா மூ டேடா ஹை'' (சந்திரனின் முகம் கோணியது) என்னும் நெடுங்கவிதைக்கு நாடக வடிவம் கொடுக்க முயற்சித்த என்னுடைய முதல் மேடை நாடகத் தயாரிப்பு அனுபவத்தைப் பற்றி எழுதி வருகிறேன். அந்த மேடை நாடகத் தயாரிப்பின் ஒத்திகைகளைப் பற்றி எழுதத் துவங்கியபோது அதில் ஈடுபட்டிருந்த நண்பர்களைப் பற்றி எழுதிச் செல்ல மனமும் கையும் என்னை இழுத்துச் சென்றது.
ஏற்கனவே ஒரு இதழில் கோடிட்டுக் காட்டியது போல, இந்த நாடகம் மட்டுமன்றி என்னுடைய நாடக செயல்பாடுகளின் பெரும்பகுதி ரவீந்திரன் எனக்குக் காட்டிய பாதையில் அமைத்துக் கொண்ட பயணங்களே எனச் சொல்லலாம்.

எண்பதுகளின் துவக்கத்தில் உடன் பணிபுரிந்த நண்பன் சுரேஷ் சுப்பிரமணியனும் நானும் ஊரிலிருந்து வாங்கி வரும் தமிழ் நூல்களைப் பரிமாறிக் கொள்வோம். நார்த் பிளாக் கட்டிடத்தில் உள்ள காபி போர்டு உணவகத்தில் அமர்ந்து நவீன இலக்கியம் பற்றிய உரையாடலுடன் நாளின் பெரும்பகுதியைக் கரைத்தவர்கள் நாங்கள். கோ.விஜயராகவன் என்கிற நண்பரும் உடன் இருப்பார். (வடக்கு வாசல் முதல் இதழில் விஜயராகவன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்) அப்போது வெங்கட்சாமிநாதனின் ஓர் எதிர்ப்புக் குரல், பாலையும் வாழையும் போன்ற கட்டுரைத் தொகுப்புக்களைப் படித்து நாங்கள் ஒருவகையில் ஞானஸ்நானம் பெற்றிருந்தோம். ஜேஜே சில குறிப்புக்கள் எங்களைப் பைத்தியம் பிடிக்க வைத்திருந்தது. க்ரியா பதிப்பகம் வெளியிட்ட ராம் மொழிபெயர்ப்பில் ஆல்பர் காம்யுவின் அந்நியன் எங்களைத் திக்குமுக்காட வைத்துக் கொண்டிருந்தது. தி.ஜானகிராமனின் மோகமுள், அம்மா வந்தாள், கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானிடம் போன்ற புதினங்களை எத்தனையாவது முறையாகவோ விடுப்புக்கள் எடுத்துப் படித்து வந்தோம். எங்களைப் பெரிதும் திரும்பிப் பார்க்க வைத்த வெங்கட்சாமிநாதன், க.நா.சுப்பிரமணியம் ஆகியோர் தில்லியில்தான் இருக்கிறார்கள் என்று கிடைத்த செய்தி எங்களுக்கு அதீதமான மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவர்களை சந்திக்க வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டோம். நாகவேணுகோபாலன் என்று ஒரு நண்பர். அவர் யாத்ரா, இலக்கியவட்டம் போன்ற இதழ்களில் சில கட்டுரைகள் எழுதியவர். பல முன்னணி (!) எழுத்தாளர்களுக்கு நண்பர். நாகவேணுகோபாலனும் நானும் லோதி காலனியில் இருந்து செயலகம் செல்லும் பேருந்தில் மேலே உள்ள குறுக்குப் பட்டையைப் பிடித்துத் தொங்கிக்கொண்டே பல நாட்கள் இலக்கியம் வளர்த்து வந்தோம். நாகவேணுகோபாலனிடம் ஒரு நாள் சொன்னேன். "வெங்கட்சாமிநாதனை சந்திக்க வேண்டும்'' என்று. அந்த நேரத்தில் எனக்கும் சுரேஷுக்கும் வெங்கட் சாமிநாதனைப் பற்றிக் கிடைத்த தகவல்கள் திகில் மூட்டுவனவாக இருந்தன. ஏறத்தாழ அவர் கையில் ஒரு பெரிய சாட்டை அல்லது கருப்பசாமியின் கையில் இருப்பதைப் போன்ற ஒரு அரிவாளை ஏந்திக் கொண்டு தன்னிடம் இலக்கிய ரீதியாக உடன்படாதவர்களை வதம் செய்து விடுவார் என்கிற ரீதியில் அவரைப் பற்றிய செவிவழிக் கதைகள் தில்லியிலும் தமிழ்நாட்டிலும் உலவி வந்தன. நவீன இலக்கியம் பற்றி அதிகம் தெரியாதவர்களிடம் அவர் பேசமாட்டார் என்றும் குறைந்த ஞானத்துடன் அவரை அணுகினல் நார்நாராகக் கிழித்து எறிந்து விடுவார் என்றும் படுபயங்கரமான வதந்திகள் உலவின. பொதுவாக சுரேஷ், சாப்பிடுவது, குடிப்பது போன்றவிஷயங்களுக்கு மட்டுமே வாயைத் திறக்க வேண்டும் என்ற கொள்கையைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பவன். நான் கொஞ்சம் ஓட்டை வாய். குறைந்த ஞானம் கொண்டதால் பேச்சு அதிகம் இருந்தது என்னிடம். (இருந்தது என்ன?) எனவே இணைந்திருந்தால் ஒன்று மற்றொன்றைசரி செய்து விடலாம் என்று நம்பினோம். வெங்கட்சாமிநாதனை சந்திக்கலாம் என்று தீர்மானித்தோம். நாகவேணுகோபாலனிடம் சொன்னோம் உங்களுக்குத்தான் அவரைத் தெரியுமே. எங்களை அவரிடம் அழைத்துப் போங்களேன் என்று. அவர், "சேஷாத்திரி என்று ஒரு நண்பர். ராமகிருஷ்ணபுரத்தில் வெங்கட்சாமிநாதன் வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருக்கிறார். அவர் உங்களை சாமிநாதனிடம் அழைத்துச் செல்வார்'' என்று சொன்னது மட்டுமின்றி சேஷாத்திரி அவர்களுடன் எங்களைத் தொடர்பு கொள்ள வைத்தார்.

சேஷாத்திரி மிகவும் அற்புதமான மனிதராக இருந்தார். கவிதைகள் எழுதுவார். நிறைய கவிதைகள். அவருடைய கவிதைகள் எப்படியோ இருக்கட்டும். தன்னுடைய வாழ்க்கையை மிகவும் அற்புதமான பொருள் பொதிந்த கவிதையாக மாற்றிக் கொண்டவர் அவர். இறப்புக்குப் பின் சடங்குகளை மறுத்துத் தன் உடலை மருத்துவ ஆய்வுக்குத் தானமாக வழங்கிய பெருமனம் கொண்டவர் சேஷாத்ரி அவர்கள். வாழும் காலத்திலும் வெளியில் தெரியாமல் பலருக்குப் பலவகைகளில் பெருத்த உதவிகளைச் செய்த நல்ல மனம் படைத்தவர். சேஷாத்திரி என்னையும் சுரேஷையும் வெங்கட்சாமிநாதன் வீட்டுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினர்.

வெங்கட்சாமிநாதனின் கையில் சாட்டை இல்லை. கருப்பசாமியின் வெட்டரிவாள் இல்லை. ரொம்பவும் சாதாரணமாகப் பழகினர். மிகவும் எளிமையாகப் பேசிக்கொண்டிருந்தார். சுரேஷுக்கு மட்டும் உள்ளூர உதைத்துக் கொண்டிருந்தது என்னைப் பற்றி. நான் ஏதாவது எக்குத் தப்பாகப் பேசி அல்லது கேள்விகள் கேட்டு சாமிநாதனிடம் வாங்கிக் கட்டிக் கொள்வேனோ என்று. ஒவ்வொரு இரண்டு நிமிடமும் பதட்டத்துடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். நல்ல வேளை அப்படி ஏதும் நடக்க வில்லை. என்றும் இல்லாதவாறு அன்று நான் எல்லாவற்றையும் மூடிக்கொண்டு அடுத்தவர் பேசுவதைக் கேட்கும் மனநிலையில் இருந்தேன்.

வெங்கட்சாமிநாதன், கொஞ்ச நேரம் எங்களைப் பற்றிக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தவர், "ரவீந்திரன் என்று ஒரு நண்பர் இருக்கிறார். அடுத்து வரும் சனிக்கிழமை அன்று கரோல்பாக்கில் அவருடைய வீட்டில் சந்திக்கலாம்'' என்று முகவரி கொடுத்தார்.

செ.ரவீந்திரன்

சனிக்கிழமை ரவீந்திரன் வீட்டுக்குப் போனோம். சிரித்த முகத்துடன் எங்களை வரவேற்றார் ரவீந்திரன். அவருடைய கரோல்பாக் வீட்டில் அன்று துவங்கிய எங்கள் சனிக்கிழமை விஜயம் ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்தது. அவர் தில்லி பல்கலைக்கழக வளாகத்துக்கு வீடு மாற்றிய பின்னரும் எங்கள் சனிக்கிழமை விஜயங்கள் தொடர்ந்தன. அவருடைய வீட்டை நாங்கள் செல்லமாக மடம் என்று அழைத்தோம். வீடெங்கும் புத்தகங்கள் எல்லா இடங்களிலும் இறைந்து கிடக்கும். உலகத் திரைப்பட விழாக்களில் வழங்கப்படும் கையேடுகளும் விவரணப் பட்டியல்களும் இறைந்திருக்கும். சனிக்கிழமைகளில் எப்போதும் நண்பர்கள் கூட்டம். மடத்தில் மது அருந்தாத நவீன இலக்கிய வாதிகளும் நவீன நாடகக் காரர்களும் அநேகமாக யாருமே இருக்க முடியாது. பல நாடக நண்பர்கள் அங்குதான் அறிமுகமானர்கள். உலக நாடகங்கள் பற்றிய நூல்களை, நாடகக் கோட்டுபாடுகள் குறித்த நூல்களை, நாடகங்களின் தொழில் நுணுக்கங்கள் குறித்த நூல்களை, நாடகப் படிகளை, பல நாடக அறிஞர்களின் நாடகங்களை ரவீந்திரன் புண்ணியத்தில் படித்தோம். நாடகங்கள் பற்றி, உலக சினிமா பற்றி வெங்கட்சாமிநாதனும் ரவீந்திரனும் எங்களுக்குத் திறந்து வைத்த சாளரங்கள் ஏராளம்.

ரவீந்திரன் அப்போது சென்னையில் கூத்துப்பட்டறையுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார். தன்னுடைய வாழ்நாளின் பெரும்பாலான பகுதிகளை அந்தக்குழுவின் நாடகங்களுக்கு ஒளியமைப்பதற்காகச் சென்ற ரயில் பயணங்களில் கழித்திருக்கிறார். கூத்துப்பட்டறை மட்டுமல்லாது தமிழகத்தில் நிகழ்ந்த அனைத்து நவீன நாடக விழாக்களிலும் ரவீந்திரன் பல இயக்குநர்களுடன் பணி புரிந்திருக்கிறார். இந்திய நகரங்கள் மட்டுமல்லாது உலகின் பல நாடுகளிலும் சென்று நாடகங்களுக்கு ஒளியமைத்து வருகிறார். அந்நிய நாட்டுத் திரைப்படங்களைத் தேர்வு செய்யும் குழுவில் இருந்திருக்கிறார் ரவீந்திரன். தில்லிப் பல்கலைக் கழகத்தில் இந்திய மொழித்துறையின் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்று இப்போது புதுவை பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா மாணவர்களுக்கு வகுப்புக்கள் எடுத்து வருகிறார். என்னுடைய இப்போதைக்குக் கடைசி நாடகமான சாம்பசிவா வரை ரவீந்திரன் ஒளியைமத்துக் கொடுத்தார். என்னுடைய ஒவ்வொரு நாடகத்திலும் ஏதேனும் பொலிவு இருந்தது என்றால் அது ரவீந்திரன் அமைத்துக் கொடுத்த ஒளியமைப்பில்தான் என்று நேர்மையுடன் நம்புகிறேன்.

நான் வடக்கு வாசல் துவங்கியதும் ரவீந்திரன் புதுவைக்கு இடம் பெயர்ந்ததும் ஏறத்தாழ ஒரே நேரத்தில் நிகழ்ந்தவை என்று சொல்லலாம். ஒருவேளை ரவீந்திரன் தில்லியில் இருந்திருந்தால் என்னை ஏதாவது நாடகம் மேடையேற்றத் தூண்டிக் கொண்டு இருந்திருப்பார். தெருக்கூத்துக் கலைஞர் புரிசை கண்ணப்பத்தம்பிரான் பற்றிய என்னுடைய ஆவணப் படத்திலும் சி.சு.செல்லப்பா பற்றி நான் தயாரித்த முடிவுறாத ஒரு ஆவணப்படத்திலும் அவர் பெரும் பங்காற்றினர். தமிழின் நவீன நாடக மேடைகளில் ஒளியமைப்புக்கு ஒரு சிம்மாசனத்தைப் பெற்றுத் தந்தவர் ரவீந்திரன் என்று சொன்னல் அது மிகையாகாது. யாத்ராவில் "பின்னோக்கிய மறுபார்வையில்'' என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைகள் மிகவும் தரமானவை. தமிழ் சமூகத்தின் முன்பு பல கேள்விகளை மிகவும் அநாயாசமாக எழுப்பி நிற்பவை. தெருக்கூத்து, யட்சகானம் பாகவதமேளா மற்றும் ரிச்சர்ட் ஷெக்னர் பற்றி அவர் எழுதிய கட்டுரை ஆகியவற்றை ஒவ்வொரு நாடகக் காரனும் அவசியம் படிக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து தில்லிக்கு நாடக விழாக்களில் கலந்து கொள்ள வரும் நவீன நாடகங்களுக்கும் ஒளியமைப்பார் ரவீந்திரன்.

ராம் கலாச்சார மையத்தில் நாடகம் குறித்த ஒரு பகுதிநேர பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டு சுய ஆர்வத்தினல் ஒளியமைப்பின் பல பரிமாணங்களைக் கற்று தமிழ் நாடக மேடைகளைப் பரிமளிக்க வைத்துக் கொண்டிருப்பவர் ரவீந்திரன்.
அவரிடம் உள்ள ஒரே ஒரு குறையாக நான் காண்பது எதையும் முன்னே நின்று செய்ய மாட்டார். பின்னணியில் செயல்வடுவதில் ஆர்வம் காட்டுவார். புரிசை கண்ணப்பத் தம்பிரான் பற்றிய படம் துவங்கிய போது ரவீந்திரனை மனதில் வைத்துத்தான் செயல்பட்டேன். கேமரா, நல்ல கேமராமேன், படம் தயாரிக்கும் செலவுக்கான பணம் அத்தனையும் இருக்கிறது. இந்தப் படத்தை நீங்களே செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். வழக்கப்படி சிரித்துக் கொண்டே எல்லோரும் சேர்ந்து செய்யலாம் என்று பதுங்கினர். ஆனல் அந்தப் பணிகளில் தீவிர ஈடுபாட்டுடன் இயங்கினர். அதே போல செல்லப்பா பற்றிய படத்திலும் அதீதமான ஆர்வம் காட்டினர்.

தமிழ்ச் சமூகம் பற்றிய ஆழ்ந்த அக்கறை உள்ளவர் ரவீந்திரன். அவருடைய கட்டுரைகளில் சமூக அவலங்களை மிகவும் கடுமையாக சாடியிருக்கிறார். தமிழ்ப் பேராசிரியராக இருந்தும் தமிழ்ப் பேராசிரியப் பெருமக்களைப் பல இடங்களில் துவைத்து அலசிக் காயப்போட்டவர். அதனல் பொதுவாக பலருக்கு அவ்வளவாகப் பிடிக்காமல் போனவர். என்னுடைய அனைத்து செயல்பாடுகளின் பின்னணியிலும் வெங்கட்சாமிநாதன் மற்றும் ரவீந்திரன் ஆகியோர் அந்நாளில் காட்டிய வெளிச்சங்கள் எப்போதும் வழித்துணைக்கு வந்து கொண்டிருப்பதாக உறுதியுடன் நம்புகிறேன்.

யதார்த்தாவின் அனைத்து நாடகங்களிலும் ரவீந்திரனுக்கு உதவியிருக்கிறான் சுரேஷ் சுப்பிரமணியம். தலைநகரில் கலை இலக்கிய நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டியவன். படிப்பதில் அதீத ஆர்வம் காட்டுபவன். அதிகமாகப் படிப்பவர்களுக்கு இயற்கையில் அமையும் செயல்பாடுகளில் ஆர்வமில்லாமை அவனையும் தாக்கியதால் அதிகமாக வெளியில் வராதவன். யதார்த்தா மற்றும் வடக்கு வாசல் இதழின் துவக்க நாட்களில் பெரும் பணியாற்றியவன் சுரேஷ்.

இனி ஒத்திகைகள் மற்றும் மேடையேற்றத்தைப் பற்றி எழுதி முடித்து விடலாம் என்று இருக்கிறேன்.

Saturday, February 28, 2009

முதல் மேடை நாடக அனுபவம்-4

கஜானன் மாதவ் முக்திபோத் என்னும் இந்திக் கவிஞனின் "சாந்த் கா மூ டேடா ஹை'' (சந்திரனின் முகம் கோணியது) என்கிற கவிதையை என்னுடைய முதல் மேடை நாடகமாகத் தயாரித்த அனுபவத்தைக் கடந்த மூன்று இதழ்களாக எழுதி வருகிறேன். ஓரிரு இதழ்களில் எழுதி முடித்துவிட வேண்டும் எனத் திட்டமிட்டு, மாடு பற்றிய கட்டுரை எழுதிய மாணவன் போல, எங்கெங்கோ அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன்.

ஒத்திகைகளைப் பற்றி எழுதத் துவங்கி, எங்கெங்கோ சுற்றியலைந்து அந்த நாடகத்தில் என்னுடன் பணிபுரிந்த நண்பர்களைப் பற்றிய சிறு குறிப்புக்கள் எழுதினேன். அது இன்னும் முடியவில்லை. கொஞ்சம் மீதமிருக்கிறது.

வெளியில் எதை எதையோ எழுதினலும் உள்ளுக்குள் மனது நெகிழ்ந்து கரைந்து கொண்டிருப்பது ஒரு நல்ல கவிதையை வரைவதற்கான களம். ஆனல் அந்தப் பாழாய்ப் போன கவிதை மட்டும் எனக்குக் கைகூடாமல் தமிழினத்தை நலமாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

சரி. இன்னும் வெகு சிலரைப் பற்றி மட்டும் சொல்லி விட்டு மீதியைத் தொடர்கிறேன்.

நச்சு என்று எங்களால் அழைக்கப் படும் நரசிம்மனுடைய சொந்த ஊர் திருவையாறு. நான் குப்பை கொட்டிய அதே அலுவலகத்தில் இன்னும் அழகாகக் குப்பை கொட்ட வந்தவன். அந்த அலுவலகத்தில் குப்பை கொட்டி முடித்து இப்போது கனரா வங்கியில் மேலாளராக இருக்கிறான். தற்போது புதிதாக பெங்களூர் வாசம். சங்கீதத்தில் அபாரமான ரசனை. மேல் ஸ்தாயியில் அநாயாசமாகப் பாடுவான். நாகூர் அனீபாவின் பாடல்களை அதே குரலில் பாடுவான். மசூதியில் பாங்கு ஓதுவதை மிக அநாயாசமாகச் செய்து காட்டுவான். திடீரென்று மூடைக் கெடுத்துக் கொண்டு மிகவும் நிஷ்டூர்யமான குரலுடன் சண்டை போடுவான். சந்திரசேகர கம்பார் எழுதிய கன்னட நாடகமான "ஜோ குமாரசாமி'' நாடகத்தை நேரடியாகக் கன்னடத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தான். இதை நானும் என்னுடைய நண்பன் சுரேஷூம் அலுவலகத்தில் கடன் வாங்கி அந்த நூலைப் பதிப்பித்தோம். தில்லான மோகனம்பாள் படத்தில் நாகேஷ் பார்ப்பவர்களிடம் எல்லாம் ஒரு எலுமிச்சம் பழத்தைக் கொடுப்பார். அது போல நாங்கள் பலருக்கும் இந்த நூலைப் பல காலம் கொடுத்து வந்தோம். இப்போது என்னிடமோ சுரேஷிடமோ ஜோ குமாரசாமியின் ஒரு பிரதி கூட இல்லை. என்னுடைய இயக்கத்தில் ந.முத்துசாமியின் நாற்காலிக்காரர் நாடகத்தில் நச்சுவின் நடிப்பு இப்போதும் என் கண்களிலும் மனத்திரையிலும். ஒரு கைத்துண்டைக் கூட வைத்து பாவனை மாற்றங்கள் செய்ய முடியும் என்று அந்த நாடகத்தில் நிரூபித்தவன் நச்சு.

ராம்ஸ் என்று நாங்கள் அழைக்கும் ராமச்சந்திரன் இந்திய வான்படையில் பணிபுரிந்து வந்தான். பயங்கர கட்டுமஸ்தான தேகம். வான்படை வீரர்கள் வளாகத்தில் அடிக்கடி எங்களுக்கு மது அருந்த ஏற்பாடு செய்த புண்ணியவான். எல்லாவற்றையும் முடித்து உணவு அருந்தச் செல்லும்போது எதிரில் வரும் எல்லா ஆஜானுபாவர்களையும் வம்புக்கு இழுத்து அடித்து விட்டுச் செல்வான். செய்யாறு பக்கம் ஊர் என்பதால் தெருக்-கூத்து போன்ற கலைகளில் மிகவும் ஆர்வம் உடையவன். நாடகத்தில் நான் அமைத்த மேடைச் சலனங்களை, கூத்து அடவுகளை மிகவும் அற்புதமாகச் செய்து காட்டியவன். வான்படை வீரர்களுக்காக பாதல் சர்க்கார் எழுதிய வங்க நாடகம் பிறகொரு இந்திரஜித் ("ஏபங் இந்திரஜித்'' மொழியாக்கம் கோ.ராஜாராம்). அந்த நாடகத்தில் மிகவும் அமைதியான கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தான். ராம்ஸ் இப்போது புனேவில் இருக்கிறான் என்று இளஞ்சேரன் சொன்னன்.

இப்போது நாடகத்தின் பின்புலத்தில் பணிசெய்தவர்கள் பற்றிக் கொஞ்சம் சொல்லலாம் என்று இருக்கிறேன்.

முகவீணை வாசித்த சிவாஜி, உறுமி வாசித்த முத்துசாமி, பலகை வாசித்த கந்தசாமி பற்றி ஏற்கனவே நிறைய எழுதி விட்டேன். இவர்களை அடுத்த நாடகங்களிலும் ஏற்பாடு செய்ய நேராதது நான் செய்த துரதிருஷ்டம்.
அப்போது என்னுடைய நண்பர் பாலரமணி தில்லி அகில இந்திய வானொலியில் பணிபுரிந்தார். இப்போதும் எனக்கு மிக நல்ல நண்பர். அவருடைய காலத்தில் அவர் கொடுத்த வானொலி வாய்ப்புக்களால். விளம்பரங்களுக்குக் கண்றாவியான மொழிபெயர்ப்பில், போலியான பாவனைகள் மிகுந்த குரலில் பேசித் தமிழ்த் தொண்டு புரியும் தொழில்முறை விற்பன்னர்கள் பலரை உருவாக்கினர் பாலரமணி. அபாரமான நகைச்சுவை உணர்வு கொண்டவர். யாரிடமாவது யாரைப் பற்றியாவது பேசும்போது பேசப்படும் நபரைப் போன்ற அதே தொனியில் சடாரென்று அதே பாவனைக்கு மாற்றிப் பேசும் திறன் கொண்டவர்.

அகில இந்திய வானொலியின் சில விசித்திரமான நிபந்தனைகளால் அந்தப் பக்கம் பொதுவாகவே எட்டிப் பார்க்காமல் இருந்தேன். இன்னொன்று, என்னைப்போல, அடர்த்தியாக தாடிவிட்டுக் கொண்டு நிமிடத்துக்கு ஒரு சிகரெட் பிடித்துக் கொண்டு, ஜோல்னப் புயடன் அலைந்து கொண்டிருந்த அறிவுஜீவிகளுக்கு அகில இந்திய வானொலி ஒத்துவராது என்கிற ஒரு உள்ளார்ந்த கர்வமும் அப்போது எனக்கு இருந்தது. அதனல் பாலரமணி நட்புடன் விடுத்த பல அழைப்புக்களையும் தட்டிக் கழித்திருக்கிறேன்.

இந்த நாடகம் முடிந்ததும் நானே பாலரமணியை சந்திக்க அவருடைய அறைக்குச் சென்று நாட்டுப்புற வாத்தியங்களை வாசிக்கும் கலைஞர்களுக்கு அகில இந்திய வானொலியில் வாய்ப்புத் தருமாறு கேட்டுக் கொண்டேன். பாலரமணி அடுத்த நாள் காலை என்னுடைய வீட்டுக்குக் கான்ட்ராக்ட் அனுப்பி விட்டார். அந்தக் காண்ட்ராக்ட் என்னுடைய பெயருக்குப் போடப்பட்டு இருந்தது. அவரிடம் சென்று அது என் பெயரில் வேண்டாம் என்றும் வாத்தியம் வாசிக்கும் அந்தக் கலைஞர்கள் பெயரில் அனுப்புங்கள் என்றும் கேட்டேன். அவர்களுடைய நிபந்தனைகளின் படி அப்படித்தான் அனுப்ப முடியும் என்றும்,

ஒருங்கிணைப்பாளராக என்னுடைய பெயரில்தான் அந்தக் கான்டிராக்ட் இருக்க முடியும் என்றும் சொன்னர். வாய்ப்புக் கிடைத்து அவர்கள் வானொலியில் வாசித்தால் போதும் என்று நினைத்தேன். முகவீணையும், உறுமியும் பறையும் தில்லி வானொலி நிலையத்தில் வாசிக்கப்போகிறார்கள் என்கிற நினைப்பே எனக்கு அளவில்லாத பெருமையை அளித்தது.

அப்போதெல்லாம் இதுபோன்ற தொலைபேசி சாதனங்கள் இல்லாத நேரம். சக்கூர்பூருக்கு என்னுடைய ஓட்டை ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு முத்துசாமிக்கும் கந்தசாமிக்கும் நேரில் அந்த செய்தியைச் சொல்ல ஓடினேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

தொலைபேசி வசதி இல்லாது போனலும் கெடுதி நினைப்பவர்களுக்கு எங்கிருந்து எப்படி எந்தத் தொடர்பு சாதனம் கிடைத்தது என்று தெரியாது. யாரோ ஒரு புண்ணியவான், கந்தசாமியிடம், "நாடகம் போடுகிறேன் என்று சொல்லி இவன் உங்களை வைத்து ஏற்கனவே லட்சக்கணக்கில் சம்பாதித்து விட்டான். இப்போது ரேடியோவில் யாரோ ஒரு ஆபீசருடன் சேர்ந்து உங்களை வைத்து நிகழ்ச்சி செய்து இன்னும் பல லட்சக்கணக்கில் அடிக்கப் போகிறான்'' என்ற நற்செய்தியை அவர்களுக்குப் புகட்டியிருந்தார்கள். சாந்த் கா மூ டேடா ஹை நாடக மேடையேற்றத்துக்கு சாகித்ய கலா பரிஷத் அமைப்பு கொடுத்த உதவித்தொகை அப்போது ஐந்தாயிரம் ரூபாய். அந்த நாடகம் மேடையேற்றியதனல் நான் நண்பர்களிடமும் அலுவலகத்திலும் வாங்கித் திரும்பக்கட்டிய கடன் -ஏறத்தாழ முப்பதாயிரம் ரூபாய். அப்போது நானும் என் மனைவியும் வாங்கிய மிகக் குறைந்த சம்பளத்தில் பல மாதங்கள் நண்பர்களை இழுத்தடித்து கடனை அடைத்தேன். அதே போல, அகில இந்திய வானொலி காண்டிராக்டில் குறிப்பிட்டிருந்த தொகை ரூ.300/-_ இதில் எங்கிருந்து இவர் லட்சக்கணக்கில் சம்பாதித்து இருக்க முடியும் என்று அவர்களிடம் நச்சு வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்துக் கேட்டான். அவர்கள் எதையும் கேட்கிற மனநிலையில் இல்லை. வானொலி நிலையத்துக்கு வந்து வாசிக்க மறுத்து விட்டார்கள்.

மிகவும் வருத்தத்துடன் வீடு திரும்பி வந்தேன். கொஞ்சம் சுரணையிருந்து அன்றிலிருந்து நாடகம் போடுவது போன்ற துர்க்காரியங்களை விட்டு என்னுடைய பிழைப்பை மட்டும் கவனித்து இருந்தால் பெருத்த தொகையை என்னல் வாழ்க்கையில் சேமித்து இருக்க முடியும். அதற்குப் பிறகும் தொடர்ந்து பல செருப்படிகளை வாங்கினேன். இன்னும் வாங்கிக் கொண்டிருக்கிறேன்.

அந்த சம்பவத்துக்குப் பிறகு அவர்களுடன் தொடர்பு முற்றாக அற்றுப்போனது. அவர்களை எங்கும் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டவில்லை. அது குறித்த பெருத்த வருத்தம் எப்போதுமே எனக்கு உண்டு.

இந்த நாடகத்துக்கு இசைவடிவம் கொடுத்தவர்கள் ஏஞ்செல்ஸ் மற்றும் சங்கர். ஏஞ்ஜெல்ஸ் இப்போது பல ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் கித்தார் வாசிக்கும் ஐந்து நட்சத்திர வாத்தியக்காரன். தில்லியில் தமிழர்கள் அனைவருக்கும் பரிச்சயமான மிகவும் பிரபலமான இசைக் கலைஞன். அவன் தில்லி வந்த புதிதில் நான் கல்யாணத்துக்கு முன்பு குடியிருந்த வீட்டுக்குக் கீழே ஒரு அறையில் தங்க வந்தவன். அந்த அறை நண்பர்கள் வழியாக அறிமுகமாகி என்னுடைய அறைக்கு வந்து என்னுடன் பேசிக்கொண்டு இருப்பான். பேசிக்கொண்டே அங்கேயே தங்கிவிடுவான். என்னுடனே சாப்பிட வருவான். எங்கள் அறையிலேயே தூங்குவான். எங்கள் அறையிலேயே குளித்துவிட்டு அங்கிருந்தே அலுவலகம் செல்வான். என் மீது அளப்பரிய பாசத்தைப் பொழிந்தவன். அங்கே தனியாக எதுக்கு வாடகை கொடுத்து இங்கே தங்கியிருக்கே - இங்கேயே வந்துடேன் என்று ஒருநாள் சொன்னேன். அதற்காகவே காத்திருந்தவன் போல மூட்டை முடிச்சு கட்டிக்கொண்டு என்னுடைய அறைக்கே வந்து விட்டான். அப்போது நானும் குணசேகரனும் முத்துராமலிங்கமும் ஒரு அறையில் இருந்தோம். நான் ஒருவன் மட்டுமே தங்க வேண்டும் என்று நான் ஒரு வீடு எடுத்து சாமியார் பூனை வளர்த்த கதையாக நாங்கள் நால்வர் ஆகிப்போனோம்.

என்னுடைய திருமணத்துக்குப் பிறகும் எங்கள் வீட்டிலேயே எங்களுடன் தங்கியிருந்து அவனுக்குத் திருமணம் ஆனதும்தான் எங்களை விட்டுப் பிரிந்தான். என் வீட்டில் தங்கியிருந்தபோது என்னுடைய மகள் பாரதியை எப்போதும் தோளில் சுமந்து அலைந்து இரவுகளில் அவளைத் தூங்க வைத்தவன் அவன். கல்யாணத்துக்குப் பிறகு எதற்கும் எட்டிக்கூடப் பார்ப்பது இல்லை என்றாலும் இப்போதும் எங்கள் வீட்டுப் பையன் அவன் என்றுதான் என் மனைவி அவனை எப்போதும் சொல்வாள். அவன் அந்த நாடகத்துக்கு சங்கருடன் சேர்ந்து இசை வடிவம் கொடுத்தான்.

சங்கர் தலைநகரில் இப்போது தமிழர்களிடையே மிகவும் பிரபலமான இசையமைப்பாளர். இசைக்கலைஞர். அந்த நாடகத்தில் முத்துசாமி, கந்தசாமி, சிவாஜி போன்ற வாத்தியக் கலைஞர்களுக்கான இசை வடிவங்களை அமைத்து, மிகவும் அற்புதமாக இசையமைத்து இருந்தார். நாடகத்தின் இரவுக் காட்சிகளில் அவர் அமைத்துக் கொடுத்த ஒலி வடிவங்கள் நாடகத்துக்கு மிகப் பெரிய பொலிவு அளித்தன. நான் இயக்கிய ந.முத்துசாமியின் "இங்கிலாந்து'' என்னும் நாடகத்துக்கு சங்கர் மிகவும் அற்புதமாக இசையமைத்து இருந்தார். அவருடைய இசையில் அந்த நாடகக் காட்சிகளுக்குத் தனி அர்த்தம் கிடைத்தன என்று சொல்ல வேண்டும்.

அடுத்த இதழில் அந்த நாடகத்துக்கு ஒளி வடிவமைத்த நண்பர் செ.ரவீந்திரன் பற்றி எழுதி முடித்துவிட்டு ஒத்திகைகளைப் பற்றித் தொடருகிறேன். இந்தக் கட்டுரை இழுத்துக்கொண்டே போகிறது. எதையோ பிடிக்கப்போய் எதிலோ முடிந்த கதையாகப் போய்க்கொண்டிருக்கிறது. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.

அந்த நாடகம் பற்றிய பதிவுகள் முழுமையாக இருக்க வேண்டும் என்கிற முனைப்பில் கட்டுரை சற்று நீண்டு விட்டது.

Thursday, February 26, 2009

முதல் மேடை நாடக அனுபவம் - 3

தில்லி சாகித்ய பரிஷத் அமைப்புக்காக கஜானன் மாதவ் முக்திபோத் என்னும் இந்திக் கவிஞரின் சாந்த் கா மூ டேடா ஹை (சந்திரனின் முகம் கோணியது) கவிதையை மேடை நாடகமாக்க முயற்சித்தது பற்றிக் கடந்த இரண்டு நாட்களாக பதிவேற்றம் செய்து வருகிறேன்.

இந்த இதழில் எங்கள் ஒத்திகைகளைப் பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன். சற்று வெளிப்படையாக இருந்தாலும் இந்தப் பதிவுகள் தேவை என்று நினைக்கிறேன். இந்த இதழில் சற்றுத் தூக்கலாக சொந்தக் கதை இருக்கும். இந்த நாடகத்தைப் பற்றிப் பதிவுசெய்யும் போது கண்டிப்பாக இவற்றை விலக்கி எழுத முடியாது என்ற நினைக்கிறேன்.

நாளை யாராவது நாடகம் செய்ய வருபவர்கள் இவற்றைப் படித்துவிட்டு நிறைய தவறுகளில் இருந்து தங்களை விலக்கி வைத்துக் கொள்ள இது உதவி புரிந்தால் நான் பிறவி அடைந்ததன் பயனை அடைவேன் என்று நினைக்கிறேன்.
சிவாஜி, முத்துசாமி, கந்தசாமி போன்ற வாத்தியக் கலைஞர்களின் உதவியுடன் ஒத்திகைகள் துவங்கியது பற்றி சென்ற இதழில் எழுதியிருந்தேன்.

இந்த மூவரும் சக்கூர்புரில் இருந்து ஆட்டோ பிடித்து வருவார்கள். ஒத்திகையில் வாசித்து முடித்த கையோடு அவர்களுக்கு மதுவைத் தயாராக வைக்க வேண்டும். வெறும் ஒரு துண்டு ஊறுகாய் அல்லது ஒரு சிறிய தயிர்சாத பாக்கெட்டின் உதவியுடன் ஒரு முழு பாட்டில் விஸ்கி அல்லது ரம்மை ஒரு மடக்கில் காலி செய்யும் வல்லமை படைத்திருந்தார்கள் அவர்கள்.

எங்களுக்குள் ஒரு ஒழுங்கினை நாங்கள் எப்போதும் கடைப்பிடித்தோம். அதாவது ஒத்திகை நடக்கும் பரப்பில் அல்லது கூடத்தில் யாரும் புகை பிடிக்க மாட்டோம். குடித்து விட்டு வந்தவர்கள் யாரும் என்னுடைய ஒத்திகைகளில் எப்போதும் கலந்து கொள்ள முடியாது. அதே போல நாங்கள் ஒத்திகை நடத்தும் இடங்களில் யாரும் குடிக்க முடியாது. குடிப்பவர்கள் என் வீட்டுக்கு வந்து குடிக்கலாம். அல்லது வேறு யாராவது நண்பர்களின் அறைகளில் குடிக்கலாம். நாங்கள் ஒத்திகைகள் நடத்திய தமிழ்ப்பள்ளி வளாகங்களில் எப்போதும் யாரையும் புகை பிடிக்கவோ மது அருந்தவோ நான் என்றும் அனுமதித்தது இல்லை. நானும் என்றும் இக்காரியங்களை செய்தது இல்லை.

ஒத்திகைகளை முடித்து விட்டு மதுவில் குளிக்கலாம். ஆனல் ஒரு துளிகூட மது அருந்திவிட்டு என்னுடைய ஒத்திகைகளில் கலந்து கொள்ள முடியாது. விஷயம் தெரியாதவர்கள் அப்படிக் குடித்து விட்டு வந்தபோது முக்கியமான ஒத்திகைகளைக் கூட ரத்து செய்து அவர்களைத் திருப்பி அனுப்பி இருக்கிறேன். என் அன்னையின் அருள் மற்றும் சத்குருநாதன் திருவடியின் கருணையால் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நான் புகைப்பழக்கம் மற்றும் மது அருந்துவதை திடீரென்று நிறுத்திய போது முன்னர் நானே விதித்துக் கொண்ட இவை போன்ற கட்டுப்பாடுகள் தான் என்னை இந்த இரண்டு சாபக்கேடுகளின் பக்கமும் மீண்டும் திரும்பாமல் இருக்கப் பெருமளவில் உதவியது என்று நினைக்கிறேன். (தடம் மாறிப் போகிறேன். என்னைத் திருத்த முடியாது).

சரி. விஷயத்துக்கு வருவோம். வாத்தியக் கலைஞர்களுக்கு ஒத்திகையின் இறுதியில் மது உண்டு என்று உறுதிப்படுத்தி விட்டு எங்களுக்கும் உண்டு என்று உறுதிப்படுத்திக்கொண்டு நேரம் செல்வது தெரியாமல் ஒத்திகைகளில் ஈடுபட்டு இருப்போம். மற்றவைகளுக்கு எல்லாம் செலவு அதிகமாகிப்போனதால் சாப்பாட்டுச் செலவுக்குப் பணம் இருக்காது. சுமார் இருபத்து ஐந்து பேர்களுக்கு தினமும் என் மனைவி வீட்டில் இருந்து சமைத்து அனுப்புவாள். சில நாட்களில் வெங்கட், மகேந்திரன், குணசேகரன், ஏஞ்செல்ஸ் போன்றோர் என் வீட்டின் சமையலைத் தீர்மானிக்கும் முக்கிய சக்திகளாக விளங்கினர். மளிகைக் கடையில் கடன்கள் ஏறி அந்தத் திசைப் பக்கம் செல்லாமல் பல நாட்கள் இரண்டு நிமிடங்களில் கடக்க வேண்டிய தூரத்தை சுற்றியடித்து ஒரு மணிநேரம் நடந்து சென்ற நாட்களும் பின்னளில் வந்தன.

இரவு சத்தியமூர்த்தி அரங்கில் நெடுநேரம் ஒத்திகைகள் நடத்தி விட்டு கும்பலாக என் வீட்டுக்கு வந்து குடித்துவிட்டு உரக்கப் பேசி, வாதாடி, சண்டைகள் போட்டு, அடுத்த நாள் செய்ய வேண்டிய ஒத்திகைகளை ஏழுகட்டைக் குரலில் விவாதித்து நாங்கள் செய்துவந்த ரகளையால் என்னுடைய இரண்டு வயது மகள் பாரதியின் தூங்கும் பழக்கம் சீர்கெட்டு அவள் படிக்கும் வயதிலும் அந்தப் பிரச்னை தொடர்ந்து வந்தது. இரவு இரண்டு மணிவரை விழித்து வாதாடி ஓய்ந்து தூங்கச் செல்லுவோம் எல்லோரும். வீட்டின் முன்னறையில் குறைந்தது பதினைந்து பேராவது தூங்குவார்கள். காலையில் எல்லோரும் தலைதெறிக்க அலுவலகங்களுக்கு ஓடிப்போவோம். காலையில் சீக்கிரம் போனல்தான் மாலையில் ஏதாவது அல்வா கொடுத்துவிட்டு ஒத்திகைகளில் கலந்து கொள்ள முடியும்.

சரி. மீண்டும் ஒத்திகைகளுக்கு செல்வோம். இந்தக் கட்டுரையை எழுதும்போது என்னுடன் பணிபுரிந்த அனைத்துக் கலைஞர்களின் நினைவுகளும் கண்முன் நின்று விழியோரம் சற்று ஈரத்தை எட்டிப் பார்க்க வைக்கிறது. அவர்களைப் பற்றியும் இங்கே சற்றுப் பதியலாம் என்று இருக்கிறேன். இந்தக் கட்டுரையில் நிறைய இடங்களில் அவர்களுடைய பெயர்களைச் சொல்லிச் செல்கிறேன். எனவே அவர்கள் குறித்த சிறிய குறிப்பினை இங்கு பதிந்து வைத்தால் உங்களுக்கும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். என்னிடம் உள்ள பல ஒழுங்கீனங்களில் முறையான ஆவணங்களைச் சேமித்து வைக்காத பழக்கமும் ஒன்று. இந்தக் கட்டுரையில் பேசப்படும் நாடகத்தின் புகைப்படமோ அல்லது என் உடன் பணிபுரிந்த கலைஞர்களின் புகைப்படங்களோ உடனடி என் கைவசம் கிட்டவில்லை. இந்தக் கட்டுரைகள் நூலாக வடிவம் பெறும் போதாவது அந்தப் புகைப்படங்களைத் தேடி வைக்க வேண்டும். எனவே ஒரு சிறிய அளவில் என்னுடன் பணிபுரிந்த கலைஞர்களைப் பற்றிய பதிவினை இங்கே செய்து வைக்கலாம் என்று தோன்றியது. உங்களுக்குத்தான் பாவம்.

முதல் காட்சியாக கொள்ளி வைக்கும் சடங்கினை ஒத்திகையாகத் துவங்கினோம் என்று எழுதியிருந்தேன். நான்கு பேர் பிணம் தூக்கும் பாவனையில் கைகளைத் தூக்கிச் செல்வார்கள். பின்னணியில் கந்தசாமியின் உறுமி ஒற்றைக்கொட்டும் ஒற்றை இழுப்புமாக அமானுஷ்யமான ஒலி எழுப்பும். சங்கர் சிந்தசைஸரில் இரவு நேர ஒலிகளை எழுப்புவார். மணிகண்டன் ஒத்திகையிலேயே மீசையை மழித்துவிட்டு மிகவும் தத்ரூபமான சோகத்துடன் தீச்சட்டி தூக்கி வருவது போன்ற பாவனையில் வருவான். என்னுடன் உள்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்த மணிகண்டன் எங்கள் அலுவலகத்திலும் அதேபோன்ற முகபாவனையுடன் உலவிவந்தான். சரி. ஒருவேளை நாடகத்தில் தத்ரூபமாக வரவேண்டும் என்று பகலிலும் ஒத்திகைகளைத் தொடர்கிறான் போலிருக்கிறது என்று நானும் சுரேஷூம் சிரித்துக் கொள்வோம். செய்யும் எந்தக் காரியத்திலும் ஒரு நேர்த்தியுயம் தீவிரத்தையும் வலியுறுத்துகிறவன் மணிகண்டன். நிரபராதிகளின் காலம் என்னும் நாடகத்தில் சுமார் இரண்டு பக்க வசனங்களை ஒத்திகை நடந்த இரண்டு மாத காலங்களிலும் எவ்வித மாற்றமும் இன்றி தினமும் ஒரே மாதிரி பேசிக்காட்டியவன் அவன்.

அதே போல வெங்கட் நரசிம்மன். இவனை போன்லெஸ் ஒன்டர் என்று வெங்கட்சாமிநாதன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார். அவனும் அளவுக்கு அதிகமான பிரயாசைகள் எடுத்துக் கொள்வான். உடல் அவன் சொன்னபடிக்குக் கேட்கும் மாயவித்தையைத் தன்வசம் வைத்திருந்தான். நம்முடைய வயோதிக நடிகர்கள் சண்டைக் காட்சிகளில் கயிறு கட்டிகொண்டு செய்யும் காமெடியை கயிறு இல்லாமலேயே செய்து காண்பிக்கும் வல்லமை படைத்தவன்.

இயற்கையிலேயே அற்புத நடிப்புத் திறன் கொண்டவன் குணசேகரன். யாரைப் பார்த்தாலும் அவர்களுடைய பாவனையிலேயே பேசுவான். அவர்களின் உடல்மொழியை உடனே தனதாக்கிக் கொள்ளும் திறன் படைத்தவன். சொந்தப் பிரச்னைகள் அவனை இளமைப் பருவத்தில் சூழ்ந்ததால் அவனல் பிரகாசிக்க முடியாது போனது. இல்லையென்றால் தமிழ்த் திரையுலகம் இந்நேரம் தேசிய அளவில் பெருமையுடன் பேசப்படும் ஒரு நடிகனைத் தன்வசம் வைத்திருக்கும். தன் சொந்தப் பிரச்னைகளால் எல்லா உறவுகளையும் சீராகப் பராமரிக்க முடியாமல் போனவன். இப்போது பெங்களூருவில் இருக்கிறான் என்று என்னிடம் அவனை நினைவுபடுத்தும் பழைய நண்பர்கள் யாராவது சொல்வது உண்டு.

இடதுசாரி சிந்தனைகள் கொண்ட மகேந்திரன் எல்லாவற்றையும் உரக்க விவாதிப்பான். அவன் போடும் கூச்சலில் குறைந்தது ஐம்பது பேராவது அக்கம்பக்கத்தில் தூக்கம் இழப்பார்கள். நவீன இலக்கியத்தில் ஆழ்ந்த படிப்பும் அக்கறையும் உள்ளவன் மகேந்திரன். ஒத்திகையின்போது ஒவ்வொரு காட்சியின் லாஜிக்கை உறுதி செய்து கொண்டுதான் அடுத்த அடிக்கு நகருவான். அவனை சமாளித்து காட்சிக்குள் அனுப்புவதற்குள் உயிரேபோய்விடும். இப்போது ஈரோடு பக்கம் வருமான வரித்துறையில் அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறான். இப்போதும் அதே இடதுசாரி சிந்தனைகளுடன் யாருடனவது சண்டை போட்டுக்கொண்டு இருப்பான என்று தெரியாது.

இன்று திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரியும் இளஞ்சேரன் இயற்கையிலேயே அற்புதத் திறமைகள் கொண்டவன். பராசக்தி வழக்காடு மன்றக் காட்சியை ஒரே மூச்சில் சொல்லி நிறுத்துவான். மிக அரிய நகைச்சுவை உணர்வு உள்ளவன் அவன். எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பான். முரண்டு பிடிப்பதைக் கூட சிரித்துக் கொண்டே செய்வான். அவனுடைய குரல் வளம் இன்று திரையில் முன்னணியில் இருக்கும் பல பெண்மைச் சாயல் கொண்ட கதாநாயகர்களிடம் காணாத ஒன்று. சொல்லிக் கொடுப்பதை விட அதிகம் காட்டி நெகிழ வைப்பவன். இங்கிலாந்து என்னும் நாடகத்தில் அவன் கட்டைக்கால் கட்டிக்கொண்டு காந்தியாக வந்து பேசிய வசனங்கள் இன்னும் பல இரவுகளில் என் கனவுகளில் வரும்.

நாங்கள் அன்புடன் வீரு என்று அழைக்கும் வீரராகவன். மெத்தப்படித்த வீரு அப்போதே மிகவும் உயரிய பதவியில் இருந்தாள். ஆனல் அவனுடைய பதவியோ நாங்கள் இன்னும் ஏழு ஜென்மம் எடுத்தாலும் எட்ட முடியாத ஊதியத்தை அப்போதே வாங்கிக் கொண்டிருந்த வீரு, வெற்றியும் பதவியும் தன் தலைக்கேறாது பார்த்துக் கொண்டவன். நவீன இலக்கியத்திலும் நாடகத்திலும் மிகவும் தீவிரமாக ஈடுபட்டவன்.

இன்னும் சிலருடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு விஷயத்தைத் தொடர்வேன். என்றாவது முடித்துதானே ஆகவேண்டும்?

Wednesday, February 25, 2009

முதல் மேடை நாடக அனுபவம் - 2


ஒரு இந்தி நாடக மேடையேற்றத்துக்காக விண்ணப்பித்ததையும் அது தொடர்பாக தில்லி சாகித்ய கலா பரிஷத் அமைப்பின் செயலர் என்னை அழைத்துக் குடைந்து கொண்டிருந்ததையும் அவருக்கு நான் அல்வா கிண்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது பற்றியும் சொல்லி சென்ற இதழில் நிறுத்தி இருந்தேன்.

பல இடங்களில் நீங்களும் உணர்ந்து இருப்பீர்கள். வழக்கமாக சிலருக்குத் தங்களுடைய நாடக மேடையேற்றம் குறித்து பிற்காலத்தில் எழுதும்போது ஒரு அதீதமான வசதி கிடைத்து விடுகிறது. அந்த நாடக மேடையேற்றம் என்ன கண்றாவியாக இருந்தாலும், பார்வையாளர்களைக் குற்றுயிரும் கொலை உயிருமாக வதைத்து அவர்களைக் கதறக் கதற ஓடவிட்டு இருந்தாலும் பின்னாளில் அதைப் பற்றி எழுதும்போது வசதியாக பல அல்பமான டுபாக்கூர்களை விட்டுக் கொள்ளலாம். நாடகத்தின் அடிப்படை இலக்கணம் கூடத் தெரியாதவர்கள், மேடையில் நடிக்கும்போது தானே எப்படி நிற்க வேண்டும், எப்படிப் பேச வேண்டும், அடுத்தவர்களை எப்படி நிறுத்தி வைக்க வேண்டும், அவர்களை எப்படிப் பேசவைக்க வேண்டும் என்று கூடத் தெரியாதவர்கள் அல்லது சில அரசியல் காரணங்களால் அல்லது தங்களின் பதவியின் அதிகாரம் வழி கிட்டும் சில வசதிகளால் நாடகம் தயாரிக்க மேடைக்கு வரும் பலர் நிகழ்காலத்திலேயே இப்படிப் பேசியும் எழுதியும் வருவதை நிறைய பார்த்து இருப்பீர்கள்.

எனவே ஒரு நாடகத்தின் மேடையேற்றம் குறித்துப் பின்னர் எழுதும்போது இவை போன்ற விபத்துக்கள் நேரக்கூடாது என்று மிகவும் கவனம் எடுத்து எழுத வேண்டியிருக்கிறது. கூடிய வரையில் நேர்மையான பதிவாக அமைய வேண்டும் என்று முயற்சிக்கிறேன். என்னுடன் மேடையில் இருந்தவர்களின் முகங்களை மீண்டும் தைரியத்துடன் பார்க்கவும் என்னுடைய முகத்தையே கண்ணாடியில் தைரியமாகப் பார்த்துக் கொள்ளவும் வேண்டியிருக்கிறது இல்லையா?

சரி. விஷயத்துக்கு வருவோம்.

சாகித்ய கலா பரிஷத் செயலர் முக்திபோத் கவிதையை வைத்துக்கொண்டு என்ன செய்வாய்? அது நாடக ரூபத்தில் இல்லையே என்று கேட்டார்.

அந்த நேரத்தில் மேடை நாடகத்தின் சூட்சுமங்கள் அதிகம் கைவசப்படாத நிலை. நாடக சம்பவங்களைக் காட்சிப்படுத்துதல் குறித்த பயிற்சி எதுவும் பெறாத நிலை. நான்கைந்து ஆண்டுகள் தலைநகரில் பார்த்த (தமிழல்லாத) வேற்றுமொழி நல்ல நாடகங்கள், படித்து அரைகுறையாகப் புரிந்து கொண்ட நாடகக் கோட்பாடுகள். செ.ரவீந்திரன், வெங்கட்சாமிநாதன் ஆகிய நண்பர்கள் உடன் இருந்த பலம். எல்லாவற்றுக்கும் மேலாக வெட்கத்தைத் துறந்த நிலை. இதுவே ஒரு மேடை நாடகத்தை அதுவும் இந்தி மேடை நாடகத்தை மேடையேற்றும் அசட்டுத் துணிச்சலை எனக்குத் தந்திருக்கிறது என்று இப்போதும் அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.

சரி. செயலர் கேட்ட கேள்விக்கு கவிதைப் படிமங்களைக் காட்சிப் படிமங்களாக மாற்றி மேடையேற்றுவேன் என்று பதிலளித்து விட்டேன். அவரும் ஒரு மாதிரி என்னைப் பார்த்துவிட்டு சரி. முயற்சி செய். ஆனால் நாடகத்தில் ஏதாவது ஒரு காட்சியை எங்களுடைய ஆலோசகர்களின் முன்னிலையில் நடித்துக் காட்ட வேண்டும். அதன் பின்னர்தான் நாடகத்தைத் தேர்வு செய்வோம் என்றார். உடனே சரி என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன். உடன் வெங்கட்டும் குணசேகரனும் இருந்தார்கள். குணசேகரனுக்கு கைகால்கள் உதறத் துவங்கி இருந்தன. ""என்னண்ணா இப்படி ஒரு நிபந்தனையைப் போட்டுட்டானே'' என்று பினாத்திக் கொண்டே வந்தான். வெங்கட் அதிக நம்பிக்கையுடன் இருந்தான். ""பாத்துக்கலாம்டா'' என்று குணசேகரனுக்கு சொல்வது போல தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொண்டு வந்தான்.

அடுத்து என்ன செய்வது என்ற திட்டம் தீட்ட உட்கார்ந்தோம். வழக்கமாக இதுபோன்ற திட்டமிடல்கள் அந்த நாட்களில் மதுக்கிண்ணங்களில் துவங்கி, உளறல்களில் தொடர்ந்து, போதை வலு சேர்க்கும் உதார்களில் முடிந்து போகும். திட்டமிடல் ஏதுமில்லாது போதையில் கரையத் துவங்கின என்னுடைய இரவுகள். என்ன செய்யப்போகிறோம் என்கிற பய உணர்ச்சி போதை நாடுதலை அதிகப்படுத்தியது. லேசான தாடி, கையில் எப்போதும் புகையும் சிகரெட் மற்றும் மாலை வேளைகளின் போதையை மட்டுமே ஒரு இயக்குநருக்கான லட்சணமாக எடுத்துக் கொண்டேன். திறமையை வளர்த்துக் கொள்ளவோ மேலும் நாடகம் குறித்துப் படிக்கவோ முயற்சிக்க வில்லை. என் எதிரே நின்று கொண்டு ஒரு பெரிய சவால் என்னை மிரட்டிக் கொண்டிருந்தது. அதன் மிரட்டல் தாளாது இன்னும் அதிகம் குடித்தேன்.

போதை இல்லாத நேரங்களில் கிட்டிய தெளிவின் வீச்சில் சிறு கீற்றுப்போல ஒரு திட்டம் பிறந்தது. இந்திக் கவிதையின் பின்னணி. மேடையில் பின்னணியில் முக்திபோத்தின் இந்திக் கவிதைகள் படிக்கப்படும் போது அரங்க அமைப்பு, ஒப்பனைகள் போன்றவை ஏன் தமிழ்நாட்டுப் பின்னணியில் இருக்கக் கூடாது என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஒன்றும் இல்லாததற்கு எதையாவது வித்தியாசமாக செய்தாக வேண்டுமே?

இது நன்றாக இருக்கும்போல இருக்கிறது முயற்சிக்கலாமே என்றார்கள் வீருவும் மகேந்திரனும். வீரமணிகண்டனுக்கு அதில் உடன்பாடு இல்லை. அவன் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் நீங்கள் என்ன செய்தாலும் ஒத்துழைப்பேன் என்றான். நச்சு (நரசிம்மன்) அவன் பங்குக்குக் கத்தினான். ராமசாமிக்கு இந்தத் திட்டம் பிடித்து விட்டது. (ராமசாமி இப்போது அமெரிக்காவில் குழந்தைகளுக்கான நாடகங்கள் குறித்துத் தன் ஆய்வுகளை முடித்து பல்கலைக் கழகம் ஒன்றில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். பாலஸ்தீனப் பெண்மணி ஒருவரை மணந்து கொண்டிருக்கிறார். அவரும் நாடக ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறவர்). மோகன் என்று ஒரு நண்பர் இருந்தார். அவர் மேடையில் பங்கேற்கவில்லை என்றாலும் நாடகத் தயாரிப்புக்களில் அதிகப் பங்கேற்றார். அந்நாட்களில் எங்களுக்கான மதுச்செலவை அதிக அளவில் பார்த்துக் கொண்டு நாடகத் தொண்டு ஆற்றியவர் மோகன். அவருக்கு என் திட்டம் பிடித்திருந்தது. ரவீந்திரனுக்கும் பிடித்தது. சாரு நிவேதிதா எங்கள் ஒத்திகைகளுக்கும் கலந்துரையாடல்களுக்கும் வருவார்.

சரி. தமிழ் நாட்டின் பின்னணி. இந்தி வரிகளுக்கு தமிழக கிராமியப் பின்னணி. நம்முடைய மரபு இசைக்கருவிகள். நாட்டுப்புற இசை என்று திட்டங்கள் வகுத்துக் கொண்டேன். இதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அப்போது சங்கீத் நாடக் அகாதமி போன்ற அரசு அமைப்புக்கள் மரபுசார் கலைகளுக்கு முக்கியத்துவம் அளித்துக் கொண்டிருந்தார்கள். இந்திய நாடக வல்லுநர்களும் அளவுக்கு அதிகமாக எவ்விதத் தொடர்பும் இல்லாது மரபுக் கலைகளை நாடக மேடைகளில் கொண்டு வந்து பார்வையாளர்களை இம்சித்துக் கொண்டிருந்தார்கள். அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட மரபாக நிறுவப்பட்டது. அதைத் தவிர்த்த முயற்சிகளை நாடகங்கள் என்று கூறத் தயாராக இல்லாத ஜோல்னாப் பைக் கூட்டம் ஒன்று மந்தை மந்தையாக இந்தியா முழுக்க அலைந்து கொண்டிருந்தது. எனவே அந்த மரபை அப்படியே பின்பற்ற வேண்டும் என்கிற போலியான பாவனையில் நாங்களும் ஜோல்னாப் பை மாட்டிக் கொண்டு மரபு இசைக் கலைஞர்களைத் தேட ஆரம்பித்தோம்.

ஊரில் இருந்து கலைஞர்களை அழைத்துக் கொண்டு வரவேண்டும் என்றால், கடுமையாக உழைத்து ஏதாவது சொத்து சேர்த்துக் கொண்டு பிறகு அதை விற்றுத்தான் அவர்களை தில்லிக்குக் கொண்டு வரவேண்டும். அதற்கு அப்போது போதிய நேரம் இல்லை. எனவே உள்ளூரிலேயே யாராவது கிடைப்பார்களா என்று தேடல் துவங்கியது.

என்னுடைய தேடல் முடிந்த இடம் சக்கூர்பூர். தில்லியின் மேற்குப் பகுதியில் பஞ்சாபி பாக் அருகில் உள்ள இடம். சேலம், நாமக்கல், திருச்செங்கோடு போன்ற ஊர்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் இடம். அங்கு மாரியம்மன் கோயில் திருவிழாக்களிலும் இறப்புக்களிலும் மேளம் வாசிப்பவர்கள் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டோம். நானும் ராமசாமியும் அங்கு சென்று பலரை விசாரித்தோம். இறுதியில் எங்களுக்குக் கிடைத்தவர்கள் முத்துசாமியும் கந்தசாமியும். முத்துசாமி வயதானவர். பறை வாசிக்கிறவர். கந்தசாமி உறுமி வாசிப்பவர். இருவரும் முதலில் எங்களை நம்பவில்லை. நீ எதுக்கு எங்களைக் கூப்பிட்டு நாடகம் போடணும்? என்று கேட்டார்கள்.

எனக்குக் கிடைத்த இன்னொரு கலாச்சார அதிர்ச்சி என்னவென்றால், என்னை அவர்களிடம் கூட்டிச்சென்ற நண்பர் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்தவர். முத்துசாமியும் கந்தசாமியும் இருந்த தெரு வந்ததும் அவர் வீதிமுனையில் நின்று கொண்டு நீங்க போய்ப் பார்த்துட்டு வாங்க. அப்புறம் சந்திக்கலாம் என்றார். நானும் ராமசாமியும் அவரை அழுத்திக் கூப்பிட்டோம். அவர் தயக்கத்துடன், இது அவங்க இருக்கிற வீதி. நீங்க போயிட்டு வாங்க'' என்று அனுப்பி வைத்தார். நண்பரின் மறுப்பு பெரும் அதிர்ச்சி அளித்தது. நாங்கள் முத்துசாமி வீட்டுக்கு போனோம்.

எங்களுடைய தொடர்ந்த இரண்டு மூன்று சந்திப்புக்களில் எங்களுக்கு நல்ல நண்பர்கள் ஆனார்கள் முத்துசாமியும் கந்தசாமியும். மூன்றாவது நாளில் என்னைத் தேடிக்கொண்டு என் வீட்டுக்கு வந்தார் முத்துசாமி. இராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள ராஜ் காலனியில் சிவாஜி என்று ஒருவர் இருப்பதாகவும் அவர் முகவீணை (நாயனம்) வாசிப்பதாகவும் சொன்னார். எங்களுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. உடனே அங்கு சென்று சிவாஜியை சந்தித்தோம். மாலை வேளையில் போனதால் அவருடன் சரியாகப் பேச முடியவில்லை. மறுநாள் காலையில் முத்துசாமி, கந்தசாமி மற்றும் சிவாஜி என்னுடைய வீட்டுக்கு வந்தார்கள். தங்களுடைய வாத்தியங்களைக் கொண்டு வந்தார்கள். இரண்டு அறைகள் கொண்ட அரசுக் குடியிருப்பு வீடு அது. அவர்கள் குழுவாகக் கிடைத்த சந்தோஷத்தில் கொஞ்சம் வாசித்துக் காண்பிக்கச் சொன்னேன். என்னுடைய வீட்டின் சிறிய முன்னறையில் மூவரும் வாசிக்கத் துவங்கினார்கள். உற்சாகம் கரைபொங்கியது எனக்கு. ராமசாமி அப்போதெல்லாம் எப்போதும் என் உடனே இருப்பார். குணசேகரன் என் வீட்டிலேயே தங்கி இருந்தான். இப்போது தலைநகர் மேடைகளில் மெல்லிசை முழங்கும் ஏஞ்ஜெல்ஸ் என்னுடனேயே வீட்டில் இருந்தான். சங்கர் என்னும் நண்பரும் இருந்தார். அவர் இசைக்குழுத் தலைவர். என்னுடைய உற்சாகம் எல்லோரையும் தொற்றிக் கொண்டது. பாதி நாடகம் முடிந்து போனது போல இருந்தது எங்களுக்கு.

சிவாஜி, முத்துசாமி, கந்தசாமி ஆகியோர் வாசிக்கத் துவங்கியதும் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்த எனக்கு நாடகத்தில் என்ன செய்யலாம் என்று ஒரு காட்சியாக என்முன் விரிந்தது போலத் தோன்றியது. சிவாஜி குழுவினர் உற்சாகமாக வாசித்துக் கொண்டே இருந்தார்கள். இந்தக் குடியிருப்பில் அதிகம் வாசித்தால் பூமாலை ஊதுவத்திக் கட்டுக்களுடன் அதிகம் பேர் வீட்டுக்கு வரக்கூடிய வாய்ப்பு இருந்ததாலும் ஏற்கனவே சிலர் சோகமான சந்தேகத்துடன் என் வீட்டை எட்டிப் பார்க்கத் துவங்கியதாலும் அப்போதைக்கு வாசிப்பை நிறுத்திவிட்டு மந்திர் மார்கில் உள்ள சத்தியமூர்த்தி கலையரங்கில் ஒத்திகைகளைத் துவங்கலாம் என்று திட்டமிட்டோம்.

சௌத் இந்தியா கிளப் என்னும் சூதாட்ட விடுதியாக மாறிப்போன ஒரு நல்ல அமைப்பின் பொறுப்பில் இருந்த ஹரிஹரன் என்ற நண்பரின் உதவியால் சத்தியமூர்த்தி கலையரங்கில் ஒத்திகைக்கு இடம் பிடித்தோம். நாடகம் மேடையேறி முடிந்த பிறகுதான் பணம் கிடைக்கும். ஆனால் செலவு தினமும் கரைபுரண்டு கொண்டு இருந்தது. மோகன் உதவினார். ரவவீந்திரன் உதவினார். அலுவலகத்தில் கடனுக்கு விண்ணப்பம் செய்தேன். ஒத்திகைகளில் நன்றாக சாப்பிட்டோம். ஒத்திகைகள் முடிந்ததும் நன்றாகக் குடித்தோம். வாத்தியம் வாசிப்பவர்கள் வரும்போதெல்லாம் அவர்களுக்குப் பணம் தரவேண்டியிருந்தது.

சரி. சாகித்ய கலா பரிஷத் அமைப்பின் ஆலோசகர்களுக்கு ஒரிரு காட்சிகளை நடித்துக் காட்ட வேண்டுமே? கவிதையின் முதல் வரி, இரவின் அமைதியில் இருந்தும் ஆந்தைகள் ஊளையில் இருந்தும், சுடுகாட்டில் உள்ள அரசமரத்தில் பொதிந்திருக்கும் அமைதி மற்றும் உழைப்பாளர்களின் சேரியில் முழங்கும் கொண்டாட்டங்களைப் பற்றியும் துவங்கும். இரவின் கனத்தைக் கூட்ட என்ன செய்வது? சோகத்தைக் கூட்ட என்ன செய்வது?
ஒரு பிணத்துக்கு ஈமச் சடங்குகள் செய்வதைப் போன்ற காட்சியுடன் துவங்கலாம் என்று தோன்றியது. கந்தசாமியின் உறுமியில் ஒற்றைத்தாள ஓசையை ஒலிக்கச் செய்தேன். அது சோகத்தின் பரிமாணத்தைக் கூட்டியது போல இருந்தது. மணிகண்டன் கொள்ளிவைப்பவன். வெங்கட்நரசிம்மன், குணசேகரன், நரசிம்மன், வீரராகவன் ஆகியோர் பிணந்தூக்கிகள்.

எனவே அந்த நாடகத்தின் முதல் காட்சியாக ஒரு பிணத்தைத் தூக்கி வந்து கொள்ளி வைப்பதுடன் ஒத்திகையைத் துவங்கினேன். நிறைய நண்பர்கள் ஆட்சேபம் தெரிவித்தார்கள். என்னுடைய முதல் மேடை நாடகப் பிரவேசத்தின் முதல் ஒத்திகையே இப்படிப் பட்ட காட்சியுடன் துவங்க வேண்டுமா என்று என் மனைவி கூடக் கேட்டாள். ஆனால் அதையே தொடர்ந்தோம்.

ஒத்திகை துவங்கிய இருபது நாட்கள் கழித்து, என்னுடைய மேடை நாடகப் பிரவேசமாக நான் வடிவமைத்து நாங்கள் ஒத்திகை பார்த்த முதல் காட்சி கிருஷ்ணகிரியில் என் குடும்பதில் நிஜத்தில் அரங்கேறியது. அதைப் பிறகு சொல்கிறேன். அதற்கு இடையில் நடந்தவற்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அது நாளை...

Tuesday, February 24, 2009

முதல் மேடை நாடக அனுபவம்...


நாடகத் தயாரிப்புக்களில் ஈடுபாடு ஏற்பட்டு, விதியின் வினையால் இயக்குநர் ஆனது எல்லாம் விளையாட்டுப் போல இப்போது தோன்றுகிறது. ரொம்பவும் அவசரமாக இருபத்து மூன்று ஆண்டுகள் பின்னோக்கி நழுவி ஓடிவிட்டன. கடந்த மூன்றாண்டுகளாக வடக்கு வாசல் என்னும் புலிவாலைப் பிடித்த பின் என்னுடைய நாடக ஈடுபாடு மற்றும் தயாரிப்புக்கள் ஒரு மந்த நிலைக்கு வந்து நின்ற மாதிரியான ஒரு தோற்றம் மனதுக்கு வேதனையளிக்கிறது. ஒரு காலத்தில் விளையாட்டுக்குச் சொல்வேன். நாடகம் போடறதை திடீர்னு நிறுத்தினாலும் ஏண்டா நாயே நாடகம் போடலைன்னு யாரும் கேட்கப் போறதில்லை… என்று. ஆனால் இன்று எதிர்ப்படும் யாரும் என்னிடம் கேட்கும் முதல் கேள்வி - ஏன் நாடகங்களை நிறுத்தி விட்டீர்கள் என்பது தான். சுந்தர ராமசாமி கவிதையில் வருவது போல, என்னுடைய நாடக ஈடுபாட்டில் ஏற்பட்டு இருக்கும் தற்போதைய சுணக்கம் என்பது நான் மேற்கொண்ட உறக்கம் அல்ல - தியானம். பின் வாங்கல் அல்ல பதுங்கல்.

மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு, வடக்கு வாசல் சற்றுத் நிற்கத் துவங்கியிருக்கிறது. இந்த நிலைக்கு வடக்கு வாசலைக் கொண்டு வர நான் மேற்கொண்ட எத்தனங்களும் இழப்புக்களும் பட்ட அவமானங்களும் ஏழு ஜென்மங்களுக்குப் போதும். எப்படியோ இனி வடக்கு வாசல் பிழைத்துக் கொள்ளும் என்னும் நம்பிக்கை துளிர்விட துவங்கி இருக்கிறது. அதற்கு நல்ல மனம் கொண்ட பல நண்பர்கள் அங்கங்கு தோள் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். இனி வடக்கு வாசலுக்கு ஒரு திறமையான ஒருங்கிணைப்பாளர் அல்லது வடக்கு வாசலைப் பார்த்துக் கொள்ள எனக்கான ஒரு நல்ல உதவியாளர் கிடைத்தால் மீண்டும் நாடகத்தின் பக்கம் செல்லும் ஆசை உண்டு. விளையாட்டுக்கோ அல்லது பந்தாவுக்காகவோ சொல்ல வில்லை. என்னுடைய இறுதி மூச்சு நாடக மேடையிலோ அல்லது ஒத்திகையிலோ நின்றுபோக வேண்டும் என்று நேர்மையாக ஆசைப்படுகிறேன். என்னுடைய ஆன்மாவின் இறுதி இயக்கம் வரை நான் நாடகத்துடன் தொடர்பு வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என்னை நானே பார்த்துக் கொள்ளவும் என்னைப் பலர் பார்க்கவும் வைத்தது நாடகங்கள் தான். எனவே, என்னுடைய ரத்தத்தில், என்னுடைய நினைவில், கனவில் என என்னுள் எல்லாமாக வியாபித்து நிற்பது நாடகமே. இப்போதும் நாடகம் தயாரிக்க இயலாத நிலையில் பல நாடகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். நாடகக் கோட்பாடுகள் குறித்த கட்டுரைகளைத் தொடர்ச்சியாகப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

இந்த நேரத்தில் பல நேரங்களில், யதார்த்தாவில் நாங்கள் மேடையேற்றிய ஒரே இந்தி நாடகம், அதன் ஒத்திகைகள், மேடையேற்றம் என அத்தனையும் எப்போதாவது மனம் சோர்வு அடைகின்ற போது நினைத்துப் பார்த்து இதழ்க் கடையோரம் கீற்றாய்த் தோன்றி மறையும் ஒரு சிறு முறுவலும் சில நேரங்களில் விழியோரம் துளிர்க்கும் கண்ணீர்த் துளிகளுடன் நெஞ்சம் விம்மல் கொள்ளும் சில அற்புதமான அனுபவங்கள் இன்னும் என்னுடன் நனவோடையில் நிழலாகத் தொடர்கின்றன.

வெங்கட் நரசிம்மன், மகேந்திரன், குணசேகரன், நரசிம்மன், ராமசாமி, மணிகண்டன், சந்திரசேகரன், வீரராகவன் இன்னும் பலர். இந்த நாடகத்தின் வழியாக என்னுடைய மேடை நாடகப் பயணைத்தைத் துவக்கி வைத்த அற்புதமான நண்பர்கள். தமிழ் நாடகத்துக்காகத் தன்னைக் கரைத்துக் கொள்ள முன்வந்த கலைஞர்கள். பல நாடகங்களில் என்னுடன் உழைத்து என்னை ஒரு நாடககக்காரனாக உருமாற்றியவர்கள். இப்போது எல்லோரும் அவரவர் வழிப் பயணத்தில் தங்கள் வாழ்க்கையைத் துரத்தி அவரவர் வழியில். அவரவர்களின் கூடுகளில். தொடர்பு அதிகமாக இல்லையே ஒழிய எப்போது இவர்களின் நினைவுகள் நெஞ்சில் நிழலாடினாலும் அந்த நாளின் நினைவுகள் தரும் ஏக்கம் இந்த வயதிலும் விழியோரம் துளிநீரை நிறுத்தி வைக்கும்.

நான் ஈடுபட்டு இருந்ததெல்லாம் வெளிமுற்ற நாடகங்கள்தான். அவற்றை வீதி நாடகங்கள் என்றும் சொல்ல முடியாது. ஆனால் ஒரு அர்த்த வசதிக்காக வீதி நாடகம் என்று எங்களுக்கு நாங்களே குறிப்பிட்டு வந்தோம். நாங்கள் ஈடுபட்டிருந்த வெளிமுற்ற நாடகங்களில் வீதி நாடகங்களுக்கான கூறுகள் எவற்றையும் கண்டுபிடிக்க முடியாது. வெளிமுற்றம் அது இது என்று சொன்னால் குழம்பிப்போவர்கள் என்பதால் சுலபமான வார்த்தையாக இருந்த வீதி நாடகம் என்ற வார்த்தையை உபயோகித்தோம். தொடர்ந்து எங்களுடைய நாடகங்களை வீதி நாடகங்கள் என்று அறியாமல் சொல்லி சந்தோஷப் பட்டுக்கொண்டிருந்தோம். கரோல்பாக்கில் உள்ள ஒரு பூங்காவில், தமிழ்ப்பள்ளிகளின் விளையாட்டு மைதானங்களில், ஏதாவது ஒரு சதுரக்கூடத்தில், சில நண்பர்களின் வீட்டு மொட்டை மாடிகளில், லோதி மற்றும் தால்கத்தோரா பூங்காக்களின் புல்வெளிகளில் என யதார்த்தாவின் வெளிமுற்ற நாடகங்கள் தொடர்ந்து வந்தன. எல்லா நாடக மேடையேற்றங்களும் ஒரு திட்டமிடலுடன் வெளிமுற்றங்களில் தொடர்ந்து வந்தன. திட்டமிடல் என்றால், முன்கூட்டியே நோட்டீசுகள், அல்லது கையால் எழுதப்பட்ட சுவரொட்டிகள் என விளம்பர சௌகர்யத்துடன் இந்த நாடகங்கள் நடந்தேறின.

இந்த நேரத்தில் ஏதாவது ஒரு மேடை நாடகத்தை உடனடியாகத் தயாரிக்கலாமே என்னும் யோசனையை ஒரு சனிக்கிழமையின் பின் மதியத்தில் ரவீந்திரன் ஒரு நாள் அறிவித்தார். அந்த அவரச ஓட்டத்தில் ரவீந்திரன் சொன்னது முழுக்க மண்டையில் ஏறவில்லை. ஆனால் வீடு போய் சேர்ந்ததும் ரவீந்திரன் சொன்ன அந்த மேடை நாடக விஷயம் மீண்டும் மீண்டும் கனவில் நிழலாடுவது போல இருந்தது.

காலையில் தூங்கி எழுந்ததும் மீண்டும் ரவீந்திரன் வீட்டுக்குப் போனேன். ராத்திரி இருந்த அதே தெளிவுடன் உட்கார்ந்து கொண்டிருந்தார் ரவீந்திரன். ராத்திரி ஏதோ சொல்லிக்கிட்டு இருந்தீங்க? என்று தயக்கத்துடன் கேட்டேன். ஆமாம். நாம ஒரு மேடை நாடகத்தைத் தயாரிக்கலாம் என்றார். ஸ்கிரிப்ட் ஏதாவது யோசித்து வைத்திருக்கீங்களா என்று கேட்டேன். யோசிக்கிறது என்ன? இந்தியிலே ஒரு நாடகம் போடலாம் என்றார். போங்க சார். விளையாடறீங்க என்று சிரித்துக் கொண்டே எழுந்து கொண்டேன். இல்லைங்க. தாராளமா போடலாம். சாகித்ய கலா பரிஷத்லே ஒரு விளம்பரம் வெளியிட்டு இருக்காங்க பாருங்க. 35 வயசுக்குள்ளே இருக்கிற இளைஞர்களுக்கு இளைய இயக்குநர்கள் திட்டம்னு போட்டு வாய்ப்புக் குடுக்கறாங்க. இந்தி அல்லது உருதுவிலே நாடகம் தயாரிக்கப் பண உதவியும் தராங்க. செலக்ட் ஆனா, இளைய இயக்குநர் விருதும் தராங்க. நீங்க விண்ணப்பம் அனுப்புங்க என்றார்.

எனக்கு உண்மையாகவே போதை சுத்தமாக இறங்கிவிட்டது. இந்த மனிதர் ஏதோ நம்மைக் கிண்டல் செய்கிறார் என்று தோன்றியது. மேடை நாடகம் எனக்கு சுத்தமாகத் தெரியாதது. அதிலும் இந்தியில் ஒரு மேடை நாடகம் என்றால்? என்னுடைய இந்தி ஞானம் பற்றியும் எனக்கு நன்றாகத் தெரியும். தமிழின் சாயலில், தமிழின் வாடையுடன், தமிழில் நினைத்து, உடனடியாக உள்ளுக்குள்ளே அபத்தமான நேரடி மொழிபெயர்ப்பு செய்து நான் இந்தி பேசினால், அந்த மொழியை உண்மையாக நேசிப்பவர்கள் என்னைத் துரத்தித் துரத்தி அடிப்பது நிச்சயம். இந்த லட்சணத்தில் ஒரு இந்தி நாடகத்தை எப்படி இயக்குவது? அதுவும் என்னைப் போலவே இந்திப் புலமையுள்ள ஒரு கூட்டத்தை வைத்து எப்படி அது சாத்தியமாகும்?

அதற்கும் விடை வைத்திருந்தார் ரவீந்திரன். கஜானன் மாதவ் முக்திபோத் என்று ஒரு இந்திக் கவிஞன். அவன் பெரிய பொதுவுடமைவாதி. அவனுடைய கவிதைகள் எல்லாம் சிகப்புச் சிந்தனையை ஏந்தியிருக்கும். அவனுடைய ஏதாவது ஒரு கவிதையை எடுத்து நாம் நாடகமாக்கலாம் என்றார். எனக்கு இன்னும் கிழிய ஆரம்பித்து விட்டது. நாடகப் படி என்றாலும் ஏதாவது பேச்சு வழக்கில் உள்ள இந்தியில் இருக்கும். யாரையாவது படிக்க வைத்து, பேசவைத்து சமாளிக்கலாம். ஆனால் இந்த மனிதர் கவிதையை இழுத்து விடுகிறாரே என்று உதறலாக இருந்தது. என்னுடைய தயக்கம் விட்டபாடில்லை. நல்லா பண்ணுவீங்க. முக்திபோத் கவிதைலே சாந்த் கா மூஹ் டேடா ஹை (சந்திரனின் கோணிய முகம்) என்ற ஒரு கவிதை நல்லா இருக்கும். அதிலே நிறைய படிமங்கள் இருக்கு. அதை முயற்சி பண்ணுங்க என்றார். அந்தக் கவிதையிலே இருக்கிற படிமங்களைக் காட்சிகளாக மாற்றி நாடகம் பண்ணலாம். பண்ணுங்க என்றார்.

ஆனாலும் என்னுடைய தயக்கம் என்னைத் தொடர்ந்து கொண்டே இருந்தது. சாகித்ய அகாதமி நூலகத்துக்குப் போய் கஜானன் மாதவ் முக்தி போத் கவிதைத் தொகுப்பை எடுத்து எழுத்துக் கூட்டிப் படித்துப் பார்த்தேன். ஒன்றும் மண்டையில் ஏறவில்லை. உடன் பணிபுரியும் ஒருவரிடம் கொடுத்து படிக்கச் சொன்னேன். மிகவும் சரளமான உரையாடல் நடையில் அமைந்திருந்தது கவிதை. அடுத்தவர் படித்துக் காட்டும்போது கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது. பர்கத் கா பேட் (அரசமரம்) போன்ற விஷயங்களைக் கேட்டுத் தெளிவு படுத்திக் கொண்டேன்.
மறுநாள் ரவீந்திரன் வீட்டுக்குப் போனேன். சாகித்ய அகாடமி வெளியிடும் இதழான இந்தியன் லிட்டரேச்சரில், சாந்த் கா மூஹ் டேடா ஹை கவிதையின் ஆங்கில மொழியாக்கத்தை வெளியிட்டிருக்கிறார்கள் என்று சொல்லி ஒரு பழைய இதழை எனக்குக் கொடுத்தார். ரவீந்திரன் மீது எப்போதும் எனக்கு ஒரு ஆச்சரியம் உண்டு. இப்படி ஏதாவது ஒரு பெரிய விஷயத்தை சர்வ சாதராணமாக தூக்கி வந்து கையில் கொடுப்பார். ரவீந்திரன் கொடுத்த ஆங்கில மொழி பெயர்ப்புப் பக்கங்களை உடனே நகல் எடுத்து வந்தேன். ஆங்கில மொழி பெயர்ப்பு சற்று புரிகிறது மாதிரி இருந்தது. ஆனால் அந்தக் கவிதையின் முழுமையான வீச்சைப் புரிந்து கொண்டேனா என்பது இன்று வரை சந்தேகமான விஷயம்தான் என்று சொல்லவேண்டும்.

ஆங்கில மொழி பெயர்ப்பைப் படித்துக் கொஞ்சம் தைரியம் வந்தமாதிரி இருந்தது. உடனே நண்பர்களுடன் கலந்து ஆலோசித்தேன். முதலில் தயங்கினாலும் நரசிம்மன் (நச்சு) வீரராகவன் (வீரு) மகே (மகேந்திரன்) மணிகண்டன் போன்ற நண்பர்கள் அதி தைரியம் அளித்தார்கள். உடனே சாகித்ய கலா பரிஷத்துக்கு ஒரு விண்ணப்பம் தயார் செய்தேன். இயக்குநரின் நாடக அனுபவங்களைப் பற்றிய கேள்விக்கு வெளிமுற்ற நாடகங்களை மட்டுமே இயக்கியிருப்பதாகவும் இது மேடையில் என்னுடைய முதல் முயற்சி என்றும் குறிப்பிட்டேன். இந்த ஒரு விஷயத்துக்கே என்னைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்ற ஆறுதல் எனக்கு இருந்தது. நாடகம் இந்தியில் இருந்தாலும் அதனைத் தமிழ்ப் பின்னணியில், அதாவது தமிழ் நாட்டின் சாயலுள்ள அரங்கப் பொருட்கள், தமிழர்களின் உடை, ஒப்பனைகள் போன்றவற்றைக் கையாளுவேன் என்று எழுதியிருந்தேன். தெருக்கூத்தில் எனக்கு இருக்கும் ஆர்வத்தையும் எழுதினேன். அனுபவம் என்று பார்க்கும் போது சொல்லிக் கொள்ள ஒன்றும் கிடைக்காத விண்ணப்பம் என்னுடையது. அந்த விழாவுக்கு தேசிய நாடகப் பள்ளியில் நாடகத்துறையில் பட்டம் பெற்றவர்கள், பல இந்தி முன்னணி நாடக இயக்குநர்களுடன் பணி புரிந்தவர்கள் எனப் பலரும் சாகித்ய கலா பரிஷத் அலுவலகத்தில் இருந்து நாடகங்கள் மேடையேற்ற விண்ணப்பங்கள் வாங்கிச் சென்று கொண்டிருந்தார்கள். சரி. இவர்கள் முன்னால் நம்மை யாரும் சீந்தப் போவதில்லை என்ற தயக்கம் எனக்குள் இருந்தது. அந்தத் தயக்கம் ஒருவகையில் மறைமுகமான ஒரு மகிழ்ச்சிûயுயம் அளித்துக் கொண்டிருந்தது. தேர்வு பெறாவிட்டால் ஒரு மிக நல்ல இந்திக் கவிதையைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி ஒரு மோசமான நாடகமாக மஹாமோசமாகத் தயாரிக்கும் சண்டாளத் தனத்தில் இருந்து தப்பிக்கலாம் என்ற சந்தோஷமும் எனக்குள் ஒளிந்து கொண்டிருந்தது.

சரி. தேர்வுக்கு அனுப்பி இருந்த என் விண்ணப்பம் என்ன ஆனது என்ற தகவல் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு காலையில் கடிதம் ஒன்று வந்தது. அனுப்பிய விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்டதா என்று ஏதும் குறிப்பிடாமல் சாகித்ய கலா பரிஷத் அமைப்பின் செயலரை அவருடைய அலுவலகத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் வந்து சந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. கொஞ்சம் உதறலாக இருந்தது. ஆனால் தேர்ந்தெடுக்கப்படா விட்டால் அது எனக்கு நடக்கும் நல்லதாக இருக்கட்டுமே என்று நினைத்து செயலரை சந்திக்கப் போனேன்.

முக்திபோத் கவிதைகள் மிகவும் கடினமானவை. எங்களுக்கே பல இடங்கள் புரியாது. நீ என்ன செய்யப்போகிறாய்? அதுவும் இந்திக் கவிதையை வைத்து நீ என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டார்.

கவிதையில் உள்ள படிமங்களை எடுத்துக் காட்டிப் படிமங்களாக மாற்ற முயற்சி செய்வேன் என்று சொன்னபோது நானே ஏதோ சுமாராகப் பேசுவது போல எனக்குத் தோன்றியது. ஆனால் எனக்கு நானே சொல்லிக் கொண்ட தைரியம் அது என்று பல நாட்கள் கழித்து எனக்குப் புரிந்தது.
அடுத்த இதழில்…

Friday, June 6, 2008

நம் தாய்மொழியும் நமது குழந்தைகளும்...

நம்முடைய தமிழ் திரைப்படங்களில் நமக்கு அதிகம் காணக்கிடைக்கும் காட்சி இது. கதாநாயக வேடம் புனையும் முதியவர் வழக்கமாகக் கடும் உழைப்பாளி. காலத்தின் கொடுமையால் அவர் சுமார் 20 வயதுள்ள தமிழ் பேசத்தெரியாத ஏதாவது ஒரு சேட்டுப் பெண், தெலுங்கு கன்னடம் அல்லது மலையாளப் பெண் நடிக்கும் கதாநாயகிப் பாத்திரத்தின் வீட்டில் வேலைக்காரராக இருப்பார். இரவல் குரலின் கருணையால் செயற்கையாகத் தமிழ் பேசும் அந்தக் கதாநாயகிப் பெண் நம்முடைய கதாநாயகப் பெரியவரை ஏகத்துக்கும் கேவலப்படுத்திக் கொண்டு இருப்பாள். தோழியருடன் பந்து விளையாடும் போது பந்தைப் பொறுக்கிப் போடச் சொல்வாள். சாணி பொறுக்கச் சொல்வாள். தரையை மெழுகச் சொல்வாள். விறகு பிளக்கச் செய்வாள். வண்டியைத் துடைக்கச் சொல்வாள். தன்னுடைய தோழிகள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் அவரை மிகவும் கேவலமாக நடத்துவாள். நம்முடைய கதாநாயக வேடம் அணிந்த பெரியவர் எல்லாவற்றையும் இன்முகத்துடன் பொறுத்துக்கொள்வார். அவள் காலால் இட்ட பணிகளைத் தலையால் செய்வார். பொறுத்துப் பொறுத்து, ஒரு கட்டத்தில் அவமானம் தாங்காது சுனாமி அலையின் சீற்றத்துடன் பொங்கி எழுவார். Look Madam!! What do you think o yourself? You know who I am? I am B.A., Economics from Krishnagiri Government Arts College you know? First of all, you learn how to give respect and take respect. Understand? You better understand... என்கிற ரகத்தில் கைகால்களை ஆட்டி எழுச்சிமிகு வசனங்களைப் பேசுவார். அரங்கில் விசில் சத்தமும் கரவொலியும் வானை முட்டும். நம்முடைய கதாநாயகப் பெரியவரின் ஆங்கில வசனத்தைக் கேட்டு திக்கு முக்காடிப் போவாள் அந்தக் கதாநாயகிப் பெண். அவளுடைய போக்கு உடனடியாகத் தலைகீழாக மாறிப் போய்விடும். அவளுடைய மனதில் சொல்லொணா வண்ணம் காதல் கரைபுரண்டு ஓடும். உடனடியாக வரும் அடுத்த காட்சியில், இருவரும் நைல் நதி அல்லது தேம்ஸ் நதிக்கரையோரத்தில் கைகோர்த்துக் கொள்வார்கள். அல்லது கதாநாயகப் பெரியவர் தலைமுதல் கால்வரை போர்த்திய ஆடையுடனும் கதாநாயகி அந்தக் குளிரில் அரைக்கால் மீட்டர் துணியை உடுத்திக் கொண்டு, ஆல்ப்ஸ் மலைச் சிகரத்தில் புரியாத தமிழில் ஏகப்பட்ட வாத்திய இரைச்சல்களுடன் பாடி ஆடுவார்கள். அங்கே இருமனங்களும் செம்புலப் பெயல் நீர் கலந்தாற்போல் கலந்து விடும்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்தக் கதாநாயகியின் மனமாற்றத்துக்கு மூலகாரணமாக அமைவது நம்முடைய கதாநாயகப் பெரியவர் பொரிந்து தள்ளிய ஆங்கிலம்தான். அவர் பேசிய ஆங்கிலம் தான் அந்த அம்மணியின் மனத்தில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். இந்த அளவு ஆங்கிலம் தெரிந்த இவர் கண்டிப்பாக நல்லவராகவும் வல்லவராகவும் இருந்துதான் ஆகவேண்டும். இந்த அளவு ஆங்கிலம் பேசும் இவருக்குத் தெரியாதது ஒன்றும் இருக்க முடியாது என்றமுடிவுக்குக் கதாநாயகிப் பெண் தள்ளப்பட்டு விடுவாள்.


நம்முடைய குழந்தைகளின் அறிவுத் திறனை அளப்பதற்கும் நாம் இந்தத் தமிழ்த் திரைப்படத்தின் கதாநாயகிப் பெண் மேற்கொள்ளும் இது போன்ற அளவு கோலைத்தான் அதிகமாகப் பயன் படுத்துகிறோம். குழந்தைகள் புத்திசாலிகள் ஆகத்திகழ வேண்டும் என்றால் அவர்கள் வலுக்கட்டாயமாக ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்களை அநியாயமாக வற்புறுத்துகிறோம். அதற்காக சைக்கிளையோ, ஸ்கூட்டரையோ காரையோ வீட்டையோ விற்றாவது அந்தக் குழந்தை ஆங்கிலம் படிக்க வேண்டும். நல்ல ஆங்கிலத்தில் பேசியே ஆகவேண்டும் என்று அவர்கள் மீது திணிக்கிறோம். இந்த வன்முறையின் கொடுமையான விளைவாக நம்முடைய குழந்தைகளுக்கு நம் தாய்மொழியின் அருமை, அதன் இனிமை, அதன் வளமை, அதன் பெருமை பிடிபடாமல் போய்விடுகிறது. பல குடும்பங்களில் குழந்தைகளிடம் வலுக்கட்டாயமாக ஆங்கிலத்தில் பேசுவதை ஒரு குடும்ப வழக்கமாகக் கடைப்பிடிக்கிறார்கள். குழந்தைகள் ஆங்கிலத்தில் தான் பேசவேண்டும் என்று அவர்கள் மீது ஒருவகையான வன்முறையைப் பிரயோகிக்கிறார்கள். அந்தக் குழந்தைகளுக்கு எந்தவகையான இன்பத்தை மறுக்கிறோம் என்பதனை உணர்ந்து கொள்ளாமல் அவர்களை ஆங்கிலம் ஒப்பிக்கும் கிளிகளாக மாற்ற முயற்சிக்கிறோம்.


உலகில் உள்ள எத்தனையோ ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான மொழிகளில் ஆங்கிலமும் ஒன்று. இன்னொரு மொழியைக் கற்றுக் கொள்வது அல்லது அதில் பாண்டித்தியம் பெறுவது என்பது ஒன்றும் தவறான காரியம் அல்ல. கண்டிப்பாகத் தாய்மொழியைத் தவிர இன்னும் பிறமொழிகளைக் கற்றுக்கொள்வது மனநல ரீதியில் மிகவும் அற்புதமான விஷயம்தான். ஆனால் தாய்மொழியை முற்றாகப் புறக்கணிக்க வைத்து ஒரு மேட்டிமை பாவனைக்காக ஆங்கிலத்தை அவர்கள் மீது திணிப்பது என்பது நம்முடைய குழந்தைகளுக்கு எதிராக நாம் கருத்து ரீதியாகத் திணிக்கும் ஒருவகையான வன்முறைதான் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.


மற்ற ஊர்களில் எப்படி என்று தெரியாது. இங்கே தில்லியில் அந்தக் கொடுமை சற்று அதிகம்தான் என்று நினைக்கிறேன். தாங்கள் தமிழர்கள் அல்லது தமிழ் தெரிந்தவர்கள் என்று வெளியில் காட்டிக்கொள்வதை ஒரு அவமானமாக நினைக்கும் ஒரு மனப்பாங்கை குழந்தைகளிடத்தில் இங்குள்ள தலைநகர்த் தமிழர்கள் வளர்த்து வருகிறோம். இது குறித்து ஏற்கனவே ஒரு சனிமூலை கட்டுரையில் விரிவாக எழுதியிருக்கிறேன். தன்னைத் தமிழர்களாகக் காட்டிக் கொள்ள விரும்பாத நல்லவர்களின் மனப்பாங்கு மற்றும் போக்கு குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அதனை மீண்டும் இங்கு விவரிக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். இங்கு நான் சொல்ல விரும்புவது நம்முடைய குழந்தைகளை, நம்முடைய மொழியில் இருந்து விலக்கி வைக்கும் மனப்பாங்கைப் பற்றித்தான். தலைநகரில் வளரும் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ் என்பது அவர்கள் வீட்டில் எப்போதாவது பேசிக்கொள்ளும் ஒரு காட்டுமிராண்டி பாஷை. தொலைக் காட்சிகளில் பெற்றோர்கள் பார்க்கும் அசட்டுத்தனமான தொடர்களில் ஒருவரை ஒருவர் கன்னத்தில் அறைந்து கொண்டும் எப்போதும் அழுது கொண்டும் பேசப்படும் ஒரு மொழி. அவ்வளவுதான். தமிழுக்கு அதற்கு மேல் அங்கே வேலையும் பயன்பாடும் இல்லை.

அதிலும் சில தமிழ்ப் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் எதிரில் மிகவும் கவனமாகத் தமிழ் பேசுவதைத் தவிர்த்துத் தனியறையில் காதல் செய்யும் போதும் சண்டை போடும் போது மட்டுமே தமிழ் பேசிக்கொள்கிறார்கள். சில வீடுகளில் தமிழ்த் திரைப்படங்களைக் கூடக் குழந்தைகள் எங்காவது வெளியில் விளையாடப் போகும்போதுதான் தொலைக்காட்சிப் பெட்டியில் போட்டுப் பார்க்கிறார்கள். (ஆனால் இது ஒருவகையில் இது அந்தக் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்குத் துணை செய்யும் காரியம்தான். அதனால், இதனை சற்று சகித்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது). சில வீடுகளில் சிறுகுழந்தைகளிடம் தமிழ் பேசினால் அந்தக் குழந்தை பேயைக் கண்டது போல மிரண்டு போகிறது என்று பெருமையுடன் விருந்தாளிகளிடம் சொல்பவர்களும் உண்டு.


எதையும் சிந்திக்கும்போது நமக்குப் பழக்கமான, நமக்குள் ஊறிப்போன ஒரு மொழியில் சிந்திக்கும்போது சற்று உருப்படியாகச் சிந்திக்கலாம் என்று மொழியியல் அறிஞர்கள் அடிக்கடி வலியுறுத்துகிறார்கள். சிந்தனை அளவில் நமக்குப் பரிச்சயமான மொழியின் தளத்தில் இயங்கும்போது அதன் ஓட்டம் சீராக அமையும் என்பதும் இயற்கை. எனவே அடிப்படை மொழியான தாய்மொழியை மனத்தளவில் சிந்தனை அளிவல் வலுப்படுத்தினாலே பல பெரிய காரியங்களை சாதிக்கலாம். ஆனால் இங்கு நடப்பது என்னவென்றால், சிந்தனை ஓட்டத்தில் நமக்குச் சரளமான தாய்மொழியை ஒதுக்கி வைத்து, அந்நிய மொழிகளையும் அறைகுறையாகக் கற்றுக்கொடுத்து, சிந்தனை ஓட்டத்தைத் தடைபடச் செய்கிறோமோ என்றும் தோன்றுகிறது. இதனை என்னால் சரியாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. மொழியியல் அறிஞர்களும், மனவியல் அறிஞர்களும் இதைப்பற்றி இன்னும் சற்று விரிவாகவும் சொல்லலாம். என்னுடைய சிற்றறிவுக்கு எட்டுவது என்ன என்றால், குழந்தைகளின் மீதான இந்த அறைகுறை மொழித் திணிப்பு என்பது அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் அவர்கள் சொல்ல வருவதை சரியான முறையில் எடுத்துச் சொல்ல முடியாத ஒரு அசௌகர்ய நிலைக்குத் தள்ளப் படுகிறார்களோ என்றும் தோன்றுகிறது. இங்கு தலைநகரில் இந்தியில் சிந்தித்து அதனை மனத்தளவில் உடடினயாக மொழிமாற்றம் செய்து வார்த்தைக் கோர்வைகளைத் தவறாக முன்வைக்கும் பலரைக் காணமுடிகிறது. இதற்கான உடனடி உதாரணமாக என்னுடைய இருமகள்களின் தமிழைச் சொல்லலாம். எங்கள் வீட்டில் வலுக்கட்டாயமாகத் தமிழில் பேசி, அவர்களைத் தமிழ் படிக்க வைத்தே இந்த நிலை என்றால், தமிழை முற்றாக ஒதுக்கி வைத்து ஆங்கிலம் மற்றும் இந்தியிலேயே பேசவைத்து, வளர்க்கப்படும் குழந்தைகளின் நிலை என்ன என்று நினைத்துப் பாருங்கள். தமிழ் புழங்கும் சூழல் அவர்கள் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று. அப்படி இருக்கும்போது ஆங்கிலத்தை மட்டுமே அவர்கள் மீது திணித்து வளர்ப்பது என்பது எந்தக் கொடுமையில் சேர்ப்பது என்று சொல்லத் தெரியவில்லை. இதன் விளைவு என்னவென்றால் அந்தக் குழந்தைகளுக்கு எந்த மொழியின் பாலும் பற்றும் பாண்டித்யமும் ஆழமும் ஞானமும் இல்லாமல் போய்விடும். எல்லாமே அறைகுறையாகத் தான் இருக்கும்.


இந்த நிலையில் தலைநகரில் மரபிசை கற்றுக் கொள்ளவும் மரபுசார் நடனவகைகளைக் கற்றுக்கொள்ளவும் திருப்புகழ், பாசுரங்கள், திருவருட்பா போன்றவற்றைக் கற்றுக்கொள்ளவும் தங்கள் குழந்தைகளுக்கு ஊக்கம் அளிக்கும் பெற்றோர்களைத் தலைவணங்கத் தோன்றுகிறது. இவை நம்முடைய குழந்தைகளை நம்முடைய மரபுடன் ஒத்திசைய வைக்கும் காரியத்தை ஆற்றுபவவை. ஒரு சிறிய அளவிலாவது நம்முடைய மொழியின் வளமையை, பெருமையை, அவர்கள் வளர்ந்த பிறகாவது உணர்ந்து கொள்ள வழிவகை செய்பவவை.


நம்முடைய குழந்தைகளுக்கு நம்முடைய மொழியுடன் நாம் செய்து வைக்கும் பரிச்சயம் குறித்தும், அவர்களுடைய அறிவுத் திறனை ஆங்கிலம் வழி அளப்பதையும் குறித்து நான் சற்று மிகைப்படுத்திச் சொல்வது போலக்கூடச் சில சமயம் தோன்றும். இந்த விஷயத்தை எனக்கே உரிய மிகச் சிறிய அளவிலான ஞானத்தின் விளைவால் சற்றுப் பகிடி செய்வது போலத் தோன்றினாலும் இதன் அடிநாதமாக மிக ஆழமான வேதனை தொக்கி நிற்பதை எப்படி சரியாக விளக்கிச் சொல்வது என்று தெரியவில்லை.

ஏப்ரல் 2008 வடக்கு வாசல் இதழில் வெளியான கட்டுரை.