Showing posts with label கவிதை அறிமுகம். Show all posts
Showing posts with label கவிதை அறிமுகம். Show all posts

Thursday, May 26, 2016

வாழ்தலின் விதி - மனுஷி

கவிதைக்கும் கவிஞர்களுக்கும் மொழியும் இயற்கையும் அளிக்கும் சுதந்திரம் அளவற்றது.
அவர்கள் எதையும் எப்படி வேண்டுமானாலும் உருவகப்படுத்தும் உரிமையும் அந்த உரிமையை கட்டற்ற முறையில் பாவிக்கும் சாதுரியமும் கவிஞர்களுக்கு உள்ளது.
கவியின் பார்வையில் எண்ணம் செல்லப் பறவையாகலாம்.
சிந்தனை செல்லப் பறவையாகலாம்.
உறவு செல்லப் பறவையாகலாம்.
சுதந்திரம் செல்லப் பறவையாகலாம்.
அந்த பறவையுடன் சல்லாபிக்கலாம்.
சண்டையிடலாம்.
வாழ்க்கையின் விந்தைகளை, நொடியின் பின்னத்தில் பளாரென்று ஏதேனும் யதார்த்தத்தை முகத்தில் அறைந்து சிறகடித்து பறக்கலாம்.
வாழ்வென்பது விட்டு விடுதலையாவதுதானே என்று கேள்வி எழுப்புகிறார். ஒரு கட்டத்தில் வாழ்வு அந்த விடுதலையையும் மீறிய ஏதோ ஒன்றுக்கும் கெட்டலையத்தானே செய்கிறது?
எண்ணம், சிந்தை, நட்பு, உறவு பகை அனைத்தையும் செல்லப்பறவையாக பாவித்து கூண்டுக்குள் அடைத்து வைத்து அவற்றுடன் கோபம் கொள்ளலாம். முரண்பாடு கொள்ளலாம் கொள்ளாமல் இருக்கலாம். பேச்சு வார்த்தைகள் அற்று இருக்கலாம். உரையாடல்களுக்கு புதிய பரிமாணம் தரலாம்.
இந்த சுதந்திரம் அனைத்தும் கவிக்கும் கவிதைக்கும் அவை தரும் அனுபவத்துக்கும் உள்ளது.
தளம் இலக்கிய இதழில் (தளம்-3, இதழ் 13, ஜனவரி-மார்ச் 2016) வெளியான மனுஷி கவிதை வழியாக மேற்கண்ட அனுபவத்தை அளிக்கிறார்.

வாழ்தலின் விதி
கீச் கீச்சென குரலெழுப்பும்
செல்லப் பறவைகளுக்கு
என் மீது
எந்தக் கோபமும் இல்லை.
யாதொரு முரண்பாடுகளும் இல்லை.
இருந்தும்
சமீபகாலமாக
நாங்கள் பேச்சுவார்த்தைகள் அற்று இருந்தோம்.
எப்போதாவது சோம்பல் முறித்து
அவை பேசத் துவங்குகையில்
நான் மொழியற்று நின்றேன்.
நான் அருகமர்ந்து பேசுகையில்
வார்த்தைகளைச் சுவைத்தபடி
அதீதக் காதலுடன்
முத்தமிட்டுக் கொண்டிருந்தன.
புது வருடத்தின் இரண்டாம் மாதத்தில்
அவை கூண்டுக்குள்
சிறகு விரிப்பதையும்
வேனிற்காலத்தில் வெப்பத்தை
சுவைக்கும் பேராவலுடன்
பெருவெளிக்குள் பயணிக்கும்
எத்தனிப்புடன் தானியங்களைக்
கொத்தித் தின்றதையும்
நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்.
நாங்கள் பேசிக் கொள்ள
மௌனம் கூட மிச்சமில்லாது போன
ஒரு காலைப் பொழுதில்
நான் வைத்த பெயரைச் சுமந்த படி
என்னிலிருந்து வெளியேறி
பறந்து சென்றன
பறவைகள்.
வாழ்வென்பது
விட்டு விடுதலையாகி
பறத்தல்தானே மாயா.