Monday, August 13, 2007

மனக்கவலை அளிக்கும் ஒரு அறிக்கை

சமீபத்தில் யுனெஸ்கோ நிறுவனத்தின் கீழ் இயங்கும் சர்வதேசக் கல்வி மற்றும் திட்ட மையம் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியிருக்கிறது. அந்தக் கருத்தாய்வின் முடிவுகள் அவ்வளவு மகிழ்ச்சி தருவதாக இல்லை. அந்தக் கருத்தாய்வின் படி இந்தியக் கல்வி முறை ஊழல் சகதியில் சிக்கித் தவிக்கிறது என்றும் இதற்கான முக்கியக் காரணங்களாக ஆசிரியர்களின் திறமைக் குறைபாடும், ஊழல் மனப்பான்மையுமே என்று இந்தக் கருத்தாய்வு தெரிவிக்கிறது.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இதற்கான பதிலை அல்லது சமாதானத்தைப் பாராளுமன்றத்தில் ஒரு அறிக்கையாக இன்று (திங்கள்) சமர்ப்பிக்கப் போகிறது.

ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தராமையில் உலகிலேயே முதலிடம் வகிக்கிறது இந்தியா என்கிறது யுனெஸ்கோவின் அறிக்கை. இந்த விஷயத்தில் ஒப்பிடத் தகுதியுள்ள நாடு உகாண்டா மட்டுமே என்கிறது. உகாண்டாவில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தராமை 25 சதவிகிதம் என்றால் இந்தியாவில் அது 20 சதவிகிதம். அவ்வளவுதான். இந்த விஷயத்தில் உலகில் இரண்டாவது இடத்தை வகிக்கும் பெருமையை இந்தியா அடைகிறது.





பீகாரில் ஐந்துக்கு இரண்டு ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில்லை. உத்தர பிரதேசத்தில் இது மூன்றில் ஒன்று. இது போன்ற ஆசிரியர்களின் வருகை தராமை, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடு கல்விக்காக செலவழிக்கும் தொகையில் 22.5 சதவிகிதத்தை வீணடிக்கிறது.

ஆசிரியர்கள் இப்படிப் பள்ளிக்கு ஒழுங்காக வருகை தராமைக்கு சில காரணங்களை முன்வைக்கிறது இந்த ஆய்வு. ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஒரு சீரான முறையைக் கடைப்பிடிக்காமை, ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்கும் நெறிமுறைகளில் ஒரு சீரான தன்மையைக் கடைப்பிடிக்காமை போன்றவை ஆசிரியர்கள் பள்ளிக்கு ஒழுங்காக வராமைக்கு அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் நிறைய ஆசிரியர்கள் பள்ளிக்கு ஒழுங்காக செல்வதில்லை. அவர்கள் தனிப்பட்ட வகையிலான டியூஷன் வகுப்புக்களை எடுப்பதில் அதிகமான நேரங்களை செலவிடுகிறார்கள். இது போன்ற தனியார் டியூஷன் மையங்களும் அவற்றில் ஆசிரியர்களின் ஈடுபாடும் இந்தியாவின் கல்வித் திட்டத்தில் ஊழலைப் பெருமளவில் பெருகச் செய்கிறது;

கல்வித் தரம் குறைவதில் மிக முக்கியமான பங்கு வகிப்பது தேர்வுகளில் ஏமாற்றுவேலைகளை செய்தல்;

இந்தியப் பல்கலைக் கழகங்களில் தேர்வுகளின் போது நடைபெறும் ஏமாற்றுவேலைகள் பெருகி வருகின்றன என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. தேர்வுகளில் கேள்வித்தாள்களைப் பெறவும் விடைகளை ஏமாற்றுமுறையில் ஏற்பாடு செய்யுவம் ரூ.8000 லிருந்து மூன்று லட்சம் ரூபாய்கள் வரை செலவிடப்படுகின்றன. இந்த ஊழல் கணிணி விஞ்ஞானம், மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில் அதிகம் காணப்படுகிறது என்று இந்த அறிக்கை கூறுகிறது.

இதற்கான என்ன விடை வைத்திருக்கிறது நம்முடைய அரசு என்று பார்க்க வேண்டும். என்னதான் இதற்கு விடையாக இருந்தாலும் இந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் மிகவும் கவலையும் வேதனையும் அளிப்பவையாக உள்ளன. நம்முடைய வேத காலங்களிலும் சங்க இலக்கியங்களிலும் ஆசிரியர்களுக்கு நம்முடைய சமூகம் அளித்து வரும் இடம் என்பது தெய்வத்துக்குச் சற்று அருகாமையில் வரும் இடம்.

நம்முடைய இந்தியக் கல்வி முறை மற்றும் அரசுப் பணிச் சட்டங்களின் கீழ் பல இடங்களில், பல தனியார் கல்வி மையங்களில், அரசு உதவி பெற்று சில தனிநபர்களின் மேலாண்மையில் நடைபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் நிலை என்பது அவ்வளவு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இல்லை.

யுனெஸ்கோவின் இந்த அறிக்கை வெளிவந்த நேரம் நம்முடைய அரசின் சிந்தனையும் செயல்முறைகளும் இந்த விஷயத்தில் இன்னும் விரிவடைய வேண்டும். அந்த அறிக்கையில் சொல்லப்பட்டு இருப்பதைப் போல ஆசிரியர்களின் நியமனம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற விஷயங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சீரின்மையை சமன்படுத்த முயற்சிக்க வேண்டும் அரசு.

நம்முடைய ஆசிரியர்கள் என்றும் வணக்கத்துக்கு உரியவர்கள். ஒரு மெழுகுவர்த்தியாக இருந்து மாணாக்கர்களுக்குக் கல்வி ஒளியேற்றும் எத்தனையோ ஆசிரியப் பெருமக்களை இன்னும் நாம் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். இந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் குறித்து ஆசிரியர் சமூகமும் ஒரு பின்னோக்கிய மறுபார்வையை முன்வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

Saturday, August 11, 2007

அடிப்படைவாதத்தின் கோரமுகம் - தஸ்லிமா மீதான தாக்குதல்

ராகவன் தம்பி


ஹைதராபாத் பிரஸ் கிளப் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கூட்டத்தில் வங்கப் படைப்பாளி தஸ்லிமா நஸ்ரின் மதவாதிகளால் தாக்கப்பட்டுள்ளார்.

அவருடைய "ஷோத்' (வஞ்சம்) என்னும் நூலின் தெலுங்கு மொழிபெயர்ப்பினை வெளியிடுவதற்காக ஹைதராபாத் வந்த அவருக்கு இந்த மாபெரும் ஜனநாயக ரீதியிலான வரவேற்பு கிட்டியுள்ளது.

தஸ்லிமாவைத் தாக்கியவர்கள் யாரும் குண்டர்களோ அடியாட்படைகளோ அல்ல. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களால். மஜ்லிஸ்-இ-இல்தேஹதுல் முஸ்லிமின் அமைப்பின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இத்தாக்குதலுக்குத் தலைமை ஏற்றிருக்கிறார்கள்.






ஊடகங்களில் இந்த சம்பவம் படமாக்கப்பட்ட காட்சி நறுக்குகளில் தாக்கியவர்களின் ஆவேசமும் தஸ்லிமைக் காப்பாற்ற முயன்ற தோழர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதுமான காட்சிகள் நம்மைப் பதற வைக்கின்றன. பத்திரிகையாளர் தோழர் இன்னையா தஸ்லிமாவைக் காப்பாற்றும் முயற்சியில் கடுமையாக அடி வாங்கியிருக்கிறார்.

இசுலாமிய அடிப்படைவாதத்துக்கு எதிரான தஸ்லிமாவின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் அவரை மிகவும் கடுமையான வார்த்தைகளால் தூஷணம் செய்த கைக்குக் கிடைத்ததை அவர் மீது எறிந்து தாக்க முயற்சித்து இருக்கிறார்கள்.

பங்களாதேஷில் இசுலாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராகவும் அங்குள்ள மதவாதிகள் தூண்டிவிடும் வன்முறைவாதத்துக்கு எதிராகவும் தன்னுடைய எழுத்துக்களை ஆயுதமாக வைத்துப் போராடிவருகிறார் தஸ்லிமா. அங்குள்ள மதவாதிகளின் அச்சுறுத்தல் அவரைக் கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக பங்களாதேஷை விட்டு வெளியே வாழக் கட்டாயப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தஞ்சம் புகுந்த தஸ்லிமாவை இங்கிருக்கும் மதவாதிகள் வதைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கடந்த ஓராண்டாகக் கொல்கத்தாவில் வசிக்கும் தஸ்லிமாவுக்கு அங்கும் பிரச்னைகள் தலைதூக்க ஆரம்பித்தன. ஜøன் மாதம் ஒரு வங்காள தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் அங்குள்ள திப்பு சுல்தான் மசூதியின் இமாம் நூருல் ரஹ்மான் பர்காதி என்பவர், தஸ்லிமாவுக்கு எதிராக அவர் ஒரு ஃபத்வா வெளியிட்டிருப்பதாகவும் அதன் படி தஸ்லிமாவின் முகத்தைக் கரியால் பூசி அவமானப்படுத்துபவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்கள் வெகுமதியாக அளிக்கப்படும் என்றும் அறிவித்தார். தஸ்லிமாவை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் அந்த இமாம்.

சமீபத்தில் நடந்த இத்தத் தாக்குதலைத் தொடர்ந்து தஸ்லிமாவுக்கான பாதுகாப்பை மறுபரிசீலனை செய்யவும் மேலும் பலப்படுத்தவும் மேற்கு வங்க அரசு முயற்சிகள் எடுக்கும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

ஜாவேத் அக்தர் போன்ற அறிவுஜீவிகள் இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்து இருக்கிறார்கள். தில்லி சிறுபான்மையினர் வாரியத்தின் தலைவர் கமல் ஃபரூக்கி இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்த கையோடு இசுலாமியர்களின் மத உணர்வையோ நம்பிக்கையினையோ புண்படுத்தும் வண்ணம் எழுதுவதை தஸ்ரிமா உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்திய அரசு உடனடியாக அவருக்கான கடவினை ரத்து செய்து அவரை பங்களாதேஷøக்கோ பாகிஸ்தானுக்கோ அனுப்பி வைக்க வேண்டும் என்றும் மிகவும் ஜாக்கிரதையாக அறிக்கை விடுத்துள்ளார்.

பெண்ணிய உரிமைகளுக்காகவும் மதரீதியிலான அடிப்படைவாதங்களுக்கு எதிராகவும் தன்னுடைய போர் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்றும் இவை போன்ற தாக்குதல்களால் தன்னுடைய குரலை நசுக்க முடியாது என்றும் ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ளார் தஸ்ரிமா.

இது தஸ்லிமாவின் இணையப்பக்கத்தில் காணப்படும் ஒரு நல்ல மேற்கோள்.

பெண்கள் கிழக்கில், மேற்கில், வடக்கில் தெற்கில் ஒடுக்கப்படுகிறார்கள். அவர்கள் உள்ளேயும் வெளியேயும் ஒடுக்கப்படுகிறார்கள். ஒரு பெண் மத நம்பிக்கையுள்ளகவோ நம்பிக்கையற்றவளாகவோ இருந்தாலும் ஒடுக்கப்படுகிறாள். அழகாக இருந்தாலும், குரூரமாக இருந்தாலும் ஒடுக்கப்படுகிறாள். ஊனமுற்றோ அல்லது இல்லாமலிருந்தோ, ஏழையாகவோ படித்திருந்தாலும் படிக்காவிட்டாலும் ஒடுக்கப்படுகிறாள் அவள். முழுக்கப் போர்த்திக் கொண்டிருந்தாலும் நிர்வாணமாக இருந்தாலும் அவள் ஒடுக்கப்படுகிறாள். ஊமையாக, கோழையாக அல்லது மிகுந்த தைரியசாலியாக இருந்தாலும் ஒரு பெண் எப்போதும் ஒடுக்கப்படுகிறாள்.


www.taslimanasrin.com

என்னும் தளத்தில் தஸ்லிமா நஸ்ரினின் அனைத்துப் படைப்புக்களையும் நீங்கள் காணலாம்.

Tuesday, August 7, 2007

சஞ்சய் தத் என்னும் தியாகச் செம்மல்...

ராகவன் தம்பி

சஞ்சய் தத் என்றொரு நடிகர்.

இவர் இந்தியாவில் கலாச்சாரப் புரட்சி ஏற்பட வேண்டும் என்னும் புனிதமான நோக்கில் வணிகநோக்கில்லாது பல திரைப்படங்களில் நடித்தார்.

இவர் நடித்த படங்கள் உலக அளவில் இந்தியத் திரைத் துறையினருக்கு நற்பெயரை ஏற்படுத்திக் கொடுத்தன. நடிப்பினால் இவருக்குக் கிடைத்த மாபெரும் தனத்தை ஏழை எளியவர்களுக்கு இடையே வாரி வழங்கினார். அன்னசத்திரங்கள் கட்டினார். பாடசாலைகள் ஏற்படுத்தினார். சாலைகளில் மரங்கள் நட்டார். ஏழைப் பெண்களுக்கு திருமணங்கள் செய்து வைத்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கார்கில் எல்லையில் நடந்த போரில் போர்க்களம் புகுந்து ஒற்றைக் கையாலும் இரட்டைக் கால்களாலும் எதிரிகளைப் பந்தாடி நம் எல்லையைக் காத்தார்.







தன் வீர தீர பராக்கிரம செயல்களைத் தக்க வைத்துக் கொள்ள அவருக்கு ஆயுதங்கள் தேவைப்பட்டன. எனவே வெள்ளை மனதுடன், தேச நலனை மனதில் கொண்டு சில ஆயுதங்களை தேசபக்தர்களிடம் சிலரிடம் இருந்து வாங்கித் தன்னுடைய வீட்டில் வைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு ஆயுதங்களைக் கையளித்தவர்கள் அவரை விட மிகப்பெரிய தேசபக்தர்கள். இந்தியாவின் இறையாண்மையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு சமாதானமே வாழ்வென்று திகழ்கின்ற மாமணிகள். அந்தத் தியாகச் சுடர்களிடம் இருந்து சஞ்சய் தத் என்னும் தியாகப் பெருஞ்சுடர் ஆயுதங்களை வாங்கி வீட்டில் வைத்திருந்தார்.

இது பொறுக்காத இந்திய அரசும் காவல்துறையும் அவரைக் கைது செய்து கைகளில் விலங்கு பூட்டி மும்பையின் வீதிகள் வழியாக இழுத்துச் சென்று கொடுமைப் படுத்தினார்கள். அரசு அவர் மேல் தொடுத்திருந்த வழக்கு பல மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு ஒரு வழியாக தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பில் தீவிர தேசபக்தராகிய திரு சஞ்சய் தத் அவர்களுக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் சிறை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி கேட்டு நாட்டு மக்கள் அனைவரும் அலறித்துடித்து அழுதும், கண்ணீர் விட்டுக் கதறியும் தெருக்களில் அலைந்து வீதிகளில் போராட்டங்களை மேற்கொண்டனர்.

இது சமூகப் பொறுப்பு மிகவும் அதிகம் உள்ள ஊடகங்களை மிகவும் வருத்தியது. எனவே ஒரு நாளின் இருபத்தி நான்கு மணி நேரத்தின் இருபத்தி நான்கு மணி நேரத்திலும் தியாகச்சடர் சஞ்சய் தத் அவர்களைப் பற்றியே மீண்டும் மீண்டும் காட்சிகளைக் காட்டின.

ஒரு காவல்காரர் அவரை சோதனை செய்வதும் அவருடைய குடும்பத்தினரும் நண்பர்களும் கட்டியணைத்துக் கொள்வதையும் மீண்டும் மீண்டும் காண்பித்து நாட்டு மக்களின் நாட்டுப் பற்றை இன்னும் தீவிரமாக்கினர். திண்ணைகளில் பார்வையாளர்களை அமரவைத்து தியாகச் செம்மல் சஞ்சய் தத் அவர்களுக்கு எதிரான தீர்ப்பு குறித்து கருத்துக் கணிப்புக்களும் விவாத மேடைகளையும் படமாக்கினர். சிறையில் அவருக்கு அளிக்கப்பட்ட சௌகரியம் மற்றும் அசௌகரியங்கள் சாங்கோபாங்கமாக அலசப்பட்டன.

இந்தத் திண்ணைப் பேச்சுக்களில் அரசல் புரசலாக சில விஷயங்களும் வெளியில் வந்தன.

சஞ்சய் தத் விஷயத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட அதே தினம் அசந்தர்ப்பவசமாக இந்த வழக்கில் ஏதோ வகையில் மாட்டிக் கொண்ட சில அப்பாவிகள் குறித்தும் பேசப்பட்டன.
எங்களைப்போன்ற தேச நலன் மேல் அக்கறை கொண்டவர்களுக்கு அவைகளைக் கேட்க அக்கறை இல்லை. எங்களுக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சி? சும்மா விளையாட்டுக்காக வீரதீர பராக்கிரமத்துடன் தொடர்புடைய விளையாட்டுச் சாமான்களை வாங்கி வைத்ததற்காக ஒரு மாபெரும் கலைஞனுக்குக் கிடைத்த தண்டனைதான் எங்களை மிகவும் வாட்டுகிறது.
ஊடகங்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் எவ்வளவு அற்புதமான ஒரு விஷயம் கிடைத்திருக்கிறது?

இதை எப்படி நாங்கள் விட்டு வைப்போம்?

எங்கு மனித உரிமைகள் மிதிக்கப்பட்டால் எங்களுக்கு என்ன?

எங்கு யார் நாசமாகப் போனால் எங்களுக்கு என்ன?

Wednesday, August 1, 2007

நான் உயிர்ப்புடன் நடித்த படம்...

சனிமூலை




ராகவன் தம்பி

சில ஆண்டுகளுக்கு முன்பு தில்லியில் பல்ஸ் மீடியா என்னும் விளம்பர நிறுவனம் ஏசிசி சிமெண்ட் நிறுவனத்துக்காக எடுத்த ஒரு விளம்பரப் படத்தின் வசனங்களை இந்தியிலிருந்து மொழி பெயர்த்து அந்த நீண்ட விளம்பரப் படத்தை தமிழில் இயக்கும் வேலையையும் எனக்குக் கொடுத்தார்கள். அது ஒரு விளம்பரப் படமாக மட்டும் அல்லாது, வீடு கட்டுவதைப் பற்றிய செயல்விளக்கப் படமாகவும் இருந்தது என்றும் சொல்லலாம். புதிதாக வீடு கட்ட முன்வரும் ஒருவர் கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து வழிமுறைகளையும் þ நிலம் வாங்குவதிலிருந்து, அதன் பத்திரங்களை சரி பார்த்துக் கொள்ளுதல், வீடு கட்ட திட்டமிடுதல், அடித்தளமிடுதல், தரமான சிமெண்ட் வாங்குதல், காங்கிரீட் கலவை தயாரித்தல் போன்றவைகள் தொடங்கி கிருகப் பிரவேசம் செய்து வைக்க ஒரு களையான சாஸ்திரிகளைத் தேடுவது வரை சாங்கோபாங்கமாக எல்லாவற்றையும் சொல்லிப் புரிய வைக்க முயற்சி செய்த படம் அது. யதார்த்தாவில் இருந்து தயாளன், பெரியசாமி, அறிவழகன், முத்துராமலிங்கம், ஜாநி சுரேஷ் ஆகியவர்கள் நடித்தார்கள். வீடு கட்டும் நடுத்தர வர்க்கத்து மனிதனாக தயாளன் மிகவும் அற்புதமாக நடித்தான். முறுக்கிய மீசையும் அகலக்கரை வேட்டியும் கக்கத்தில் சொருகிய பையுமாக முத்துராமலிங்கம் அச்சு அசலாக ஒரு நில புரோக்கராகவே உருமாறியிருந்தார். ஒரே டேக்கில் மிக அநாயாசமாக நடித்து முடித்து விட்டு தமிழ்ச் சங்கத்தில் ஏதோ ஒரு பட்டிமன்றத்தில் பேசுவதற்காக வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு தலைதெறிக்க ஓடிப்போனார்.

கட்டிடம் கட்டும் மேஸ்திரிகளின் தொழில்முறை சார்ந்த வார்த்தைப் பிரயோகங்களை பாண்டிச்சேரிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கட்டிடப் பொறியாளரான என் தமக்கையின் கணவர் சத்தியநாராயணனைக் கேட்டு எழுதினேன்.

ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்து ஆசைப்பட்டு, கனவு கண்டு, அந்த ஆசையும் கனவுகளும் தந்த மயக்கங்களால் சரியாகப் படிப்பில் கவனம் செலுத்தாது, ஊழ்வினையின் பயனாக உள்துறை அமைச்சகத்தின் குமாஸ்தாவாகி, யதார்த்தா துவங்கி, நாடகங்களை இயக்கி, ஓரிரு ஆவணப்படங்களும் எடுத்து செருப்படி பட்டு பின்னர் திரைப்படங்களும் வேண்டாம் எந்த அதுவும் வேண்டாம் என்னும் நல்ல புத்திக்கு திரும்பியபின் கிடைத்த வாய்ப்பு இது. அதுவும் நான் ஆசைப்பட்ட மாதிரியான ஒரு நல்ல இலக்கியப் படைப்பை திரைப்படமாக்கும் வாய்ப்பாக அல்லாது ஏதோ சில்லறைக்காக, கடனுக்கு சங்கு ஊதியது போன்ற காரியம் அது. (அதிலும் பேசிய தொகையை அவர்கள் இன்று வரை முழுதாகக் கொடுக்கவில்லை. அது என் ஜென்ம ராசி. அது வேறு விஷயம்).

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நான் எதிர்பார்த்தது போல் சுலபமாக அமையவில்லை. ஊருக்கு வெளியில் ஒரு பண்ணை வீட்டில் ஓய்வேயில்லாமல் படப்பிடிப்பு. விடிகாலை மூன்று மணிக்கு பேக்அப் சொல்லி நான்கு மணிக்கு வீட்டில் விடுவார்கள். ஆறு மணிக்கு மீண்டும் கீழே கார் நிற்கும். தூக்கக் கலக்கத்தில் சென்று மறுநாள் காலை மூன்று மணி வரை மீண்டும் படப்பிடிப்பு. இது அந்தப் பண்ணை வீட்டில் தயாளனுடன் மட்டுமே, அவனையும் அவன் மனைவியாக நடித்த பெண்மணியையும் அவன் மகன் ஆஞ்சநேய் ஆகியவர்கள தனியாக வைத்து எடுக்கப் பட்ட காட்சிகள். பிறகு பெரியசாமி, ஜாநி சுரேஷ், அறிவழகன், முத்துராமலிங்கம் நடித்த காட்சிகளுக்குத் தனியாக வெளிப்புறப் படப்பிடிப்பு. இப்படியாக கண்கள் எல்லாம் செருகிப்போய் கிட்டத்தட்ட ஒரு நடைப்பிணம் போல முகத்தை வைத்துக் கொண்டு ஓரிரு வாரங்கள் அலைய வேண்டியிருந்தது.

பண்ணை வீட்டில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரம். ஒரு காட்சி. கதைப்படி தயாளன் தனக்கான சொந்த வீடு கட்ட முனைபவன். அவன் கனவுகள் நனவாகத் துவங்கும் நேரம். தகப்பனாரின் படத்துக்கு முன்னால் நின்று கொண்டு கண்ணீர் மல்க, அந்தக் காலத்தில் அவர் அவனுக்கு உபதேசித்து அருளிய உபதேச மொழிகள் வீடு கட்டுவது பற்றி, நல்ல நிலம் வாங்குவது பற்றி, ஏசிசி சிமெண்ட் போன்ற நல்ல சிமெண்ட் வாங்குவது பற்றி அவனுடைய சிறுவயதில் அவனுடைய தந்தையார் அருளிய அறிவுரைகளை நெகிழ்ச்சியுடன் நினைவு கூருவது போல ஒரு காட்சி.

உருக்கமான அந்தக் காட்சிக்கு ஒரு புகைப்படம் þ ஒரு தென்னிந்தியரின் படம் வயதானவர் படம் வேண்டியிருந்தது. தயாரிப்பு உதவியாளன் கணேஷ் என்னை, வீட்டில் இருந்து என் அப்பாவின் புகைப்படத்தை எடுத்து வரச் சொன்னான். எடுத்துப் போனேன். படத்தில் அப்பா மாத்வ பிராமணர்கள் அணியும் திருச்சின்னமான கரிக்கோட்டு நாமம் தரித்திருப்பார். அது கணேஷ÷க்கு ஒத்துவரவில்லை. மதச்சின்னம் ஏதும் தரிக்காத ஒரு படமாக வேண்டும். பொதுவான ஒரு தென்னிந்திய முகம் வேண்டும் என்றான். சரி. மறுநாளைக்கு ஏதாவது ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னேன்.

அந்தப் படத்துக்கு கலை இயக்கம் செய்த கொஞ்சம் அதிக வயதுடைய வங்காளிப் பெண் கொஞ்ச நேரம் என்னையே சுற்றிச் சுற்றி வந்தது. சிறிய கண்களை இடுக்கி மனதைக் கொள்ளை கொள்ளும் புன்னகையுடன் என்னையே அடிக்கடி உற்றுப்பார்த்தது. சட்டென்று பார்த்தால் எதையோ உடனடியாகச் சொல்ல வேண்டும் என்பதைப் போல அந்தப் பெண்ணின் உதடுகள் எப்போதும் குவிந்து கொண்டே இருப்பது எல்லோரையும் அவளை அடிக்கடி திரும்பப் பார்க்க வைக்கும் என்று நினைத்துக் கொண்டேன். நானும் அடிக்கடி திரும்பிப் பார்த்தேன். அந்தப் பெண்ணும் அடிக்கடி என்னைத் திரும்பிப் பார்த்தது எனக்கும் உள்ளுக்குள் கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.

இப்படியே ஒரு பகல் பொழுது கழிந்தது. பகல் உணவு வேளை வந்தது. அங்கங்கு கொத்துக் கொத்தாக நின்றும் பேசிக்கொண்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். கொஞ்சம் தள்ளி தயாளனின் மனைவி ஜெயா, அவனை ஏதோ மிரட்டிக் கொண்டிருந்தாள்.

அந்த வங்காளிப் பெண் சாப்பாட்டுத் தட்டைத் தூக்கிக் கொண்டு என்னை நோக்கி வந்தது. அந்தப் பெண்ணின் கவனத்தைக் கவர, வங்க நாடக ஆசிரியர் பாதல் சர்க்காரின் நாடகம் ஒன்றைத் தமிழில் இயக்கியிருப்பதாக சொன்னேன். என் துரதிருஷ்டம், அந்தப் பெண்ணுக்கு பாதல் சர்க்கார் யாரென்று தெரியவில்லை. வங்காளத்தின் ரித்விக் கட்டக் இயக்கிய ""மேகே டாக தாரா போன்ற படங்கள் பற்றிப் பேசினேன். அதைப் பற்றியெல்லாம் எவ்விதத்திலும் சட்டையும் செய்யாது சிரித்துக் கொண்டே, ""உங்களை ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும். கொஞ்சம் நேரம் கழித்து வைத்துக் கொள்ளலாமா?'' என்று கொஞ்சம் உரிமையுடன் கேட்டுக் கொண்டது.

புரிந்தது. நான் வேறு மாதிரி பார்த்திருக்கிறேன். அந்தப் பெண்ணும் வேறுமாதிரி பார்த்து இருக்கிறது. பார்வைக்குப் பார்வை எப்போதும் வித்தியாசப்படும் இல்லையா?

தோட்டத்தில் நிறுத்தி, ஒப்பனையாளரை அழைத்து ஒப்பனைகள் செய்து, தயாளனின் செத்துப்போன அப்பாவாக நடிக்க வேண்டிய புகைப்படமாக என்னைப் படம் பிடித்தார்கள். அடுத்த நாள் அந்தப் படத்தைப் பெரிதாக்கி லாமினேட் செய்து எடுத்து வந்தார்கள். அதைப் பிரிக்கும்போது கணேஷின் உதவியாளன் முகத்தில் கொஞ்சம் நக்கலான சிரிப்பு இருந்ததைப் போல எனக்குத் தேவையில்லாமல் தோன்றியது.

"சும்மா சொல்லக்கூடாது. உங்கள் முகத்தில் ஒரு பொறுப்பான அப்பாவுக்கான களை மிகவும் அற்புதமாக இருக்கிறது'' என்று கணேஷ் சிரித்துக் கொண்டே சொன்னான். அவன் சொல்ல வரும் களை என்னவென்று நன்றாகவே புரிந்தது. ஐந்து நாட்களுக்கும் மேல் தொடர்ச்சியாக இழந்த தூக்கம் புகைப்படத்தின் கண்களில் நிழலாடியது. இதுவே அந்தப் புகைப்படத்துக்கு ஒரு விசேஷமான களையைக் கொடுத்திருக்க வேண்டும். மேலும் என் முகத்தின் லட்சணம் எனக்குத் தெரியாதா என்ன? நாற்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேனே!

எது எப்படியோ தயாளன் கண்ணீர் மல்க நின்று வசனம் பேச பின்னணியில் ஒரு புகைப்படம் தயார். அந்தக் கலை இயக்குநர் பெண் என்னைக் கடக்கும் போதெல்லாம் மிகவும் குறும்பான பார்வை ஒன்றை வீசிவிட்டுச் சென்றது. இப்போது அந்தப் பெண்ணை அதிகமாகப் பார்ப்பதைத் தவிர்க்க முயற்சி செய்தேன்.
அந்தக் காட்சி படமாக்கும்போது, கணேஷ் என்னைக் கூப்பிட்டு, "தென்னிந்தியாவில் இறந்து போனவர்களின் படத்தை எப்படி அலங்கரிப்பார்கள்?'' என்று கேட்டான். படத்துக்கு மிகவும் அழகாக சந்தனம் வைத்து நெற்றியில் பொட்டு இட்டேன். மலை மந்திரில் துரை கடையிலிருந்து ஒரு நல்ல மாலையாக வாங்கி வரச் சொல்லி படத்துக்கு சார்த்தினேன். எல்லோரும் மிகவும் தத்ரூபமாக அமைந்து இருக்கிறது என்று ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கிக் கொண்டார்கள். எனக்கும் ஓரிருவர் கை கொடுத்தார்கள்.

தயளாளன் படத்துக்கு முன்னால் நின்று மிகவும் உருக்கமாக, தன்னுடைய தகப்பனார் வீடு கட்டுவது குறித்து என்னென்ன அறிவுரைகள் வழங்கினார் என்று உலகத்துக்குச் சொல்லியதைப் படமாக்கினோம்.

படப்பிடிப்பு முடிந்ததும் கணேஷிடம் அந்தப் படத்தை எனக்குக் கொடுக்க முடியுமா என்று கேட்டேன். ""உங்களுக்கு எதற்கு? எங்களிடம் இருந்தால் இன்னும் வேறு சில தென்னிந்திய மொழிகளில் இது போன்ற படங்கள் தயாராகும்போது உபயோகித்துக் கொள்வோமே'' என்று சிரித்துக் கொண்டே சொன்னான். அவன் சொல்வதிலும் ஒரு நியாயம் இருப்பதாகப் பட்டது. எனவே நானும் அதிகம் அழுத்திக் கேட்கவில்லை.

இன்னும் எத்தனை மொழிகளில் நடித்து இருப்பேன் என்று எனக்குத் தெரியாது. கணேஷையோ அல்லது எதையோ சொல்ல வருவது போல எப்போதும் வாயைக் குவித்து வைத்திருக்கும் அந்த வங்காளிப் பெண்ணையோ என்றாவது, எங்காவது மீண்டும் சந்திக்கும்போது கண்டிப்பாகக் கேட்க வேண்டும்.