Tuesday, March 3, 2009

பாழடைந்து நிற்கும் சத்தியமூர்த்தி கலையரங்கம்


பாழடைந்து நிற்கும் சத்தியமூர்த்தி கலையரங்கம்

கஜானன் மாதவ் முக்திபோத் என்னும் இந்திக் கவிஞனின் சாந்த் கா மூஹ் டேடா ஹை (சந்திரனின் முகம் கோணியது) என்கிற கவிதையை யதார்த்தாவின் முதல் மேடை நாடகமாக மேடையேற்றிய அனுபவம் குறித்து எழுதத் துவங்கி எங்கெங்கோ அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன். உருப்படியாகச் செய்த ஒரு காரியம் என்னவென்றால் அந்த நாடகத்தில் பங்கேற்ற நண்பர்களைப் பற்றிக் குறிப்புக்கள் தந்து இருந்தேன். எழுதும் போதே ஏதோ பழைய நாட்களில் பயணித்து வந்ததைப் போன்ற ஒரு நெகிழ்வு இருந்தது.

சரி. விஷயத்துக்கு வருவோம். மந்திர் மார்க்கில் உள்ள சவுத் இந்தியா கிளப்பின் சத்தியமூர்த்தி ஹால் அரங்கில் எங்கள் ஒத்திகைகள் துவங்கின. நாடகத்தில் பங்கு கொண்ட எல்லோரையும் பற்றிச் சொன்ன போது எங்களுக்கு ஒத்திகைகள் நடத்தக் கிடைத்த இடத்தைப் பற்றியும் கொஞ்சம் சொல்வது தவறில்லை என்று நினைக்கிறேன். இது போன்ற பதிவு இங்கே மிகவும் அவசியமானது என்றும் நினைக்கிறேன்.

இப்போது முழுக்கவும் பாழடைந்து போன இந்த சத்தியமூர்த்தி கலையரங்கம் என்னும் அற்புதமான கட்டிடத்தில் யாரும் தற்போது பிரவேசிக்கவும் வசிக்கவும் ஆபத்தான கட்டிடமாக அறிவித்து ஒரு அறிவிப்பு வைத்துள்ளது தில்லி மாநகராட்சி.. அந்த இடத்தைக் கடக்கும் போது உண்மையிலேயே மனது கனத்துப் போகிறது. தலைநகரில் தமிழர்களாகிய நாங்கள் பாழாக்கிய பல நல்ல விஷயங்களில் இந்தக் கட்டிடமும் ஒன்று. முன்பு பல கலை நிகழ்ச்சிகள் இந்தக் கட்டிடத்தில் நடந்துள்ளன. பல நல்ல இசை நிகழ்ச்சிகள். பல நாடகங்கள், பல கருத்தரங்கங்கள் இங்கே நடைபெற்றுள்ளன.

எனக்கு நினைவு தெரிந்து கி.ராஜநாராயணன் சாகித்ய அகாதமி விருது பெற்றபோது பல தமிழ் அமைப்புக்கள் இணைந்து அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினோம். அது இந்த சத்தியமூர்த்தி கலையரங்கில் நடைபெற்றது. அப்போதே அந்தக் கட்டிடத்தில் ஒரு மாதிரியான நாற்றம் கிளம்ப ஆரம்பித்திருந்தது. மேடையின் விங்ஸ் என்று சொல்லப்படும் துணிப்படுதாக்கள் எல்லாம் கிழிந்து மேடையின் பெரும்பகுதி சிதிலமாகிப்போகத் துவங்கியிருந்தது. கலையரங்கின் மேலே மாடியில் இருப்பது சவுத் இந்தியன் கிளப். அங்கு ஒரு காலத்தில் மைய அரசில் பணிபுரியும் தமிழ் அதிகாரிகளின் மனைவிமார்கள் டேபிள் டென்னிஸ் விளையாடுவார்கள். பாட்டுப் போட்டி, நாடகப் போட்டி போன்ற சுவாரசியமான விஷயங்கள் நடைபெறும். இரவு பகலாக ஒரு கும்பல் கேரம் போர்டு விளையாடும். மாநில அளவில், தேசிய அளவில் கேரம் போட்டிகள் அங்கு நடைபெற்றிருக்கின்றன. திருமண வரவேற்பு விழாக்கள் நடைபெறும். தமிழகத்திலிருந்து குழுவாக யாராவது வந்தால் தற்காலிகமாகத் தங்கிக் கொள்ள அங்கு இடம் கிடைக்கும்.

இந்தக் கட்டிடத்தில் கலையரங்கம், சீட்டாட்டக் கிளப் மட்டும் அல்லாமல் ஒரு உணவகமும் நடைபெற்று வந்தது. ச்சத்தர் சிங் மெஸ் என்ற அழைப்பார்கள். பெருந்தலைவர் காமராஜரிடம் பணியாளராக ச்சத்தர் சிங் என்னும் பெரியவர் ஒருவர் இருந்தார். பெருந் தலைவர் பாராளுமன்ற உறுப்பினருக்கான பதவிக் காலம் முடிந்து தில்லி வீட்டைக் காலி செய்து போகும் போது தன்னிடம் பணிபுரிந்த ச்சத்தர் சிங்குக்கு ஏதாவது வழிகாட்ட வேண்டும் என்று சத்தியமூர்த்தி கலையரங்கில் அமைந்திருந்த இந்த உணவகத்தின் குத்தகையை நிரந்தரமாக அவருக்கு ஏற்பாடு செய்துவிட்டுச் சென்றார் பெருந்தலைவர். ச்சத்தர் சிங் தான் நேரில் கண்ட ஒரே தெய்வம் காமராஜ்தான் என்று சொல்வார். எண்பத்து ஒன்றாம் ஆண்டு தில்லிக்கு வந்து இறங்கிய முதல் நாளில் நான் உணவு அருந்திய முதல் உணவகம் இதுதான். அன்றிலிருந்து சுமார் நான்கு ஆண்டுகள் மூன்று நேரமும் எனக்குச்சோறு போட்ட இடம் இதுதான். அப்போது மாதம் ரூ.75 செலுத்தி விட்டு மூன்று நேரமும் இங்கே சாப்பிடலாம். தென்னக உணவு பரிமாறுவார்கள். மிகச்சிறிய கண்களுடன் மங்கோலிய முகங்களுடன் கர்வாலி சிறுவர்கள் உணவு பறிமாறுவார்கள்.

இப்படி இந்தக் கட்டிடத்தில் எல்லாவற்றுக்கும் இடம் இருந்தது. எல்லாம் கிடைத்தன. தமிழகத்தில் இருந்து தலைநகருக்கு பணியில் சேர வந்தவர்களுக்கு சொந்த ஊரின் சில எச்சங்களைக் காட்டியபடி அந்தக் கட்டிடம் திகழ்ந்தது.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அந்த அற்புதமான இடம் முழுநேர சீட்டாடும் கிளப்பாக மாறத் துவங்கியது. தங்களைத் தமிழர்கள் என்று அடையாளம் காட்டிக் கொள்வதில் அவமானப்படும் தமிழர்கள், தமிழில் பேசிக்கொண்டு வருபவர்களை ஏதோ தொத்து வியாதி பிடித்தவர்களைக் கண்டது போன்று மிரண்ட தமிழர்கள், மனைவிக்கு பயந்து வெளியிடத்தில் போதையேற்றிக் கொள்ளும் தமிழர்கள் சத்தியமூர்த்தி கலையரங்குக்கு வந்து சீட்டாடத் துவங்கினர்கள். வெள்ளிக்கிழமை மாலை அலுவலகத்தில் இருந்து நேரே வந்து சீடடாட்டம் துவங்கி வீட்டுக்கே போகாமல் திங்கட்கிழமை காலை நேராக அலுவலத்துக்குச் சென்ற தமிழர்களை நான் அங்கே பார்த்து இருக்கிறேன். அப்படி வீட்டை மறந்து சீட்டாட்டத்தில் மூழ்கிய கணவர்களுக்கு அன்புப்பரிசாக துடைப்பக் கட்டையைக் கையிலேந்தி வெளியே ரிக்ஷாக்களில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்த வீரப் பெண்டிர்களையும் பார்த்து இருக்கிறேன். சில சமயங்களில் கிளப்புக்கு உள்ளே கணவர்களுக்கு செருப்படி கிடைத்த வீர வரலாறுகளும் உண்டு. அங்கு கோபால் என்று இமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்து ஒரு சேவகன் எல்லோருக்கும் மதுக்குப்பிகளை வாங்கிவருவது மற்றும் வேறு பல குற்றேவல்களை செய்வது போன்ற தொண்டில் ஈடுபட்டு வந்தான். அவனுக்குத் தமிழில் உள்ள அனைத்துக் கெட்ட வார்த்தைகளும் அத்துபடி. உறவுமுறைகளை வைத்துத் திட்டும் அனைத்துக் கெட்ட வார்த்தைகள் மற்றும் மாவட்ட வாரியான கெட்ட வார்த்தைகள் அனைத்திலும் அபாரமான பாண்டித்யம் பெற்றிருந்தான்.

நாளாக நாளாக இந்த அமைப்பின் பதவியில் மற்றும் அதிகாரத்தில் இருந்த தமிழர்கள் தங்களைத் தமிழர்கள் என்று சொல்லச் சற்று அவமானப்பட்டதால் மெல்ல மெல்ல தமிழர்கள் அல்லாத மற்றமொழி சார்ந்த குடிகாரர்களும் சூதாடிகளும் இங்கே அதிமாக வரத் துவங்கினர்கள். கோலோச்சத் துவங்கினர்கள். நீண்ட ஆண்டுகளாக மற்றயாரும் அங்கே உறுப்பினர் ஆக்கப்படவில்லை.

அந்தக் கலையரங்கத்தை சீரமைக்க வேண்டும் என்று அந்த அமைப்பைச் சேர்ந்த நண்பர்களிடம் பலமுறை சொல்லிப் பார்த்தேன். அவர்கள் ஏதோ நான் அந்தக் கட்டடத்தை ஆக்கிரமிக்க வந்திருக்கிறேன் என்பதைப் போல என்னை விரோதிக்கத் துவங்கினர்கள். ஓரிருவர் என்னுடன் சண்டைக்கும் வந்தார்கள். பிறகு பலமுறை திரும்பத் திரும்ப நான்கைந்து பேர் சேர்ந்து பேசி ஏதாவது முடிவெடுக்கலாம் என்று அழைத்தார்கள். ஆனல் பலமுறை சென்று காத்திருந்தும் யாரும் வரமாட்டார்கள். அது அப்படியே விட்டுப் போயிற்று. பிறகு பலகாலம் தமிழர்கள் அல்லாதவர்களே அங்கு கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். யாரும் தங்களை உறுப்பினர் என்று உரிமை கொண்டாடக் கூட அங்கே எந்த ஆவணங்களையும் யாரும் விட்டுவைக்கவில்லை. எல்லாம் அழிந்தது. அல்லது வேண்டு மென்றே அழிக்கப்பட்டு இருக்கலாம். தலைமைப் பொறுப்பில் இருந்த யாரும் அந்தக் கட்டிடத்தின் மீதோ அந்த அமைப்பின் மீதோ எவ்வித அக்கறையும் காட்டவில்லை. இப்படியே நாம் இந்த அற்புதமான விஷயத்தை இழந்தோம்.

தலைநகரில் தமிழர்களுக்குச் சொந்தமான ஒரு கட்டிடமும் கலையரங்கமும் நகரின் மிக மையமான சாலையான மந்திர்மார்க்கில், மிகவும் பரிதாபமாக ஒரு பேய் மாளிகையைப் போன்று பல சோகக் கதைகளைச் சுமந்து நின்று கொண்டிருக்கிறது. இதற்கு என்றாவது ஏதாவது விடிவுகாலம் பிறக்குமா என்று தெரியவில்லை.

சரி. விஷயத்துக்கு வருவோம். இந்த அந்த சத்தியமூர்த்தி கலையரங்கில் எங்கள் ஒத்திகைகள் துவங்கின. நாங்கள் ஒத்திகையைத் துவங்கிய போதே அந்தக் கட்டிடம் க்ஷீணமடையத் துவங்கியிருந்தது. பறவைகளின் எச்சங்களும் வவ்வால் நாற்றமும் குடலைப் புரட்டும். நாங்களே அந்த இடத்தை சுமார் மூன்று நாட்களுக்கு மேல் செலவிட்டு நாற்றங்கள் போகும் வகையில் சுத்தம் செய்தோம். பிறகு ஒத்திகைகளைத் துவங்கினோம். பிணம் தூக்கிச் சென்று இறுதிச் சடங்குகள் செய்யும் காட்சி. இரவு நேரத்தில் செல்வந்தர் வீட்டில் நடைபெறும் ஒரு தடபுடலான விருந்துக் காட்சி. இன்னொருபுறம் சேரியில் ஒரு சிறுதெய்வ வழிபாட்டு முறைகள். அதை முடித்ததும் குடிகாரர்கள் ஒரு சர்ச்சையைத் துவங்கி பெரும் கலவரமாக முடியும் காட்சி, இரவு நேரங்களில் சுவரொட்டிகள் தங்கள் உரிமையைக் கோரிப் போரிடும் வண்ணம் நடன அமைப்புக்கள், நகர வாழ்க்கையின் சில காட்சிகள், கிராம வாழ்க்கையின் சில சாட்சிகள் எனத் துண்டு துண்டுகளாக முக்திபோத் கவிதையின் பல படிமங்களையும் காட்சிப்படுத்தப் போராடிக் கொண்டிருந்தேன்.

இளஞ்சேரன் அப்போது மிகவும் பிரபலமாக இருந்த டிஸ்கோ நடனத்தை ஆடினன். நன்றாகத் தான் இருந்தது. ஒரு இந்தி நாளேட்டில் "முக்திபோத்தின் கவிதையில் டிஸ்கோ'' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில் என்னை நார் நாராகக் கிழித்து என்னுடைய நாடக இயக்கத்தை மிகவும் கடுமையாக விமர்சித்து என் மானத்தை வாங்கி இருந்தார்கள்.

கவிதையின் வரிகளை மிகவும் அற்புதமாகப் பின்னணியில் வாசித்தான் நச்சு என்கிற நரசிம்மன். ஏஞ்செல்ஸ் மற்றும் சங்கர் அருமையாக இசையமைப்பு செய்திருந்தார்கள். சங்கர் வடிவமைத்துக் கொடுத்த நாட்டுப்புற இசைவடிவங்களை நாட்டுப்புற இசைக்கலைஞர்களான சிவாஜி, முத்துசாமி மற்றும் கந்தசாமி ஆகியோர் மிகவும் அற்புதமாக வாசித்தார்கள். உற்சாகத்தில் கொஞ்சம் அதிகமாக போதை ஏற்றிக் கொண்ட நாயனம் வாசிக்கும் சிவாஜி மட்டும் தில்லான மோகனம்பாள் சிவாஜி மாதிரி நாடகத்தில் நடன அமைப்பின் வீரியம் போதாது என்றும் தன்னுடைய நாயனத்தின் முன்பு இவர்களின் கால்கள் பேசவில்லை என்ற ரீதியில் வாசிப்பதை நிறுத்தி நிறுத்தி சண்டை போட்டுக் கொண்டிருந்தார். அவர் சமாதானம் அடைந்து ஒரு மாதிரியாக வாசிக்கத் துவங்கும் நேரத்தில் மகேந்திரன் ஏதாவது புதுச் சண்டை துவங்குவான். அல்லது ராமச்சந்திரன் அந்த வாசிப்பில் வீரியம் இல்லை என்று சண்டைக்கு வருவான்.
தில்லான மோகனம்பாளில் வரும் எஸ்.வி.நாகையா போல ரவீந்திரன் நடுவில் வந்து ஏதாவது சமாதானம் சொல்லிப் போவார். இது தினமும் தொடர்ந்தது. ஒத்திகைகளின் நடுவில் ஏற்கனவே சொன்னது போல சாகித்ய கலா பரிஷத் அமைப்பு நாடக விழாவில் கலந்து கொள்ளும் இயக்குநர்கள் தாங்கள் வடிவமைத்த ஏதேனும் ஒரு காட்சியை சில நடுவர்கள் முன்பு நடித்துக் காட்ட வேண்டும். பிறகே அந்த நாடகம் விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவது பற்றி முடிவெடுக்கப்படும் என்றநிபந்தனையை விதித்திருந்தார்கள்.

அந்த நிபந்தனையின் படி நடுவர்கள் முன்னிலையில் காட்சியை நடித்துக் காட்டும் நாளும் வந்தது. நேஷனல் காலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட் கட்டிடத்தில் அந்தத் தேர்வினை வைத்து இருந்தார்கள். திவான் சிங் பஜேலி, மோகன் மகரிஷி, டி.என்.ஷர்மா போன்ற தலைநகரின் இந்தி நாடக ஜாம்பவான்களும் விமர்சகர்களும் நடுவர்களாக அழைக்ககப்பட்டிருந்தனர்.

தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்த இயக்குநர்களில் பலபேர் தேசிய நாடகப் பள்ளியில் படித்து பட்டம் பெற்றவர்கள். தில்லியில் இந்தி மற்றும் உருது நாடகக் குழுக்களில் பெரும் பங்காற்றியவர்கள். அனுபவம் மிக்கவர்கள். பல பெரிய மேடைத் தயாரிப்புக்களில் கலந்து கொண்டு பெயரும் புகழும் பெற்றவர்கள். இவை எல்லாவற்றும் எதிரிடையாக இருந்தவன் நான் ஒருவன் மட்டுமே. நாடகம் குறித்த படிப்பு கிடையாது. மேடை நாடகம் குறித்த அனுபவம் எதுவும் கிடையாது. நாடகங்களில் நடித்த அனுபவம் கிடையாது. வாய் திறந்து இந்தி பேசினல் இந்தி மொழியை நேசிக்கும் யாருக்குமே கடுங்கோபத்தை வரவழைக்க வாய்ப்பிருக்கும் ஒரு மோசமான இந்தி உச்சரிப்பு. இத்தனை பலவீனங்களையும் வைத்துக் கொண்டு அந்த அரங்கத்தில் தேர்வுக்காக மிகவும் பதட்டத்துடன் காத்துக் கொண்டிருந்தேன். என் குழுவைச் சேர்ந்த மற்ற எல்லோரும் அங்கங்கே நின்று கொண்டு சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தது.

Sunday, March 1, 2009

நாடக மேடைஅனுபவங்கள்-5


வெங்கட்சாமிநாதன்

கஜானன் மாதவ் முக்திபோத் என்னும் இந்திக் கவிஞனின் "சாந்த் கா மூ டேடா ஹை'' (சந்திரனின் முகம் கோணியது) என்னும் நெடுங்கவிதைக்கு நாடக வடிவம் கொடுக்க முயற்சித்த என்னுடைய முதல் மேடை நாடகத் தயாரிப்பு அனுபவத்தைப் பற்றி எழுதி வருகிறேன். அந்த மேடை நாடகத் தயாரிப்பின் ஒத்திகைகளைப் பற்றி எழுதத் துவங்கியபோது அதில் ஈடுபட்டிருந்த நண்பர்களைப் பற்றி எழுதிச் செல்ல மனமும் கையும் என்னை இழுத்துச் சென்றது.
ஏற்கனவே ஒரு இதழில் கோடிட்டுக் காட்டியது போல, இந்த நாடகம் மட்டுமன்றி என்னுடைய நாடக செயல்பாடுகளின் பெரும்பகுதி ரவீந்திரன் எனக்குக் காட்டிய பாதையில் அமைத்துக் கொண்ட பயணங்களே எனச் சொல்லலாம்.

எண்பதுகளின் துவக்கத்தில் உடன் பணிபுரிந்த நண்பன் சுரேஷ் சுப்பிரமணியனும் நானும் ஊரிலிருந்து வாங்கி வரும் தமிழ் நூல்களைப் பரிமாறிக் கொள்வோம். நார்த் பிளாக் கட்டிடத்தில் உள்ள காபி போர்டு உணவகத்தில் அமர்ந்து நவீன இலக்கியம் பற்றிய உரையாடலுடன் நாளின் பெரும்பகுதியைக் கரைத்தவர்கள் நாங்கள். கோ.விஜயராகவன் என்கிற நண்பரும் உடன் இருப்பார். (வடக்கு வாசல் முதல் இதழில் விஜயராகவன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்) அப்போது வெங்கட்சாமிநாதனின் ஓர் எதிர்ப்புக் குரல், பாலையும் வாழையும் போன்ற கட்டுரைத் தொகுப்புக்களைப் படித்து நாங்கள் ஒருவகையில் ஞானஸ்நானம் பெற்றிருந்தோம். ஜேஜே சில குறிப்புக்கள் எங்களைப் பைத்தியம் பிடிக்க வைத்திருந்தது. க்ரியா பதிப்பகம் வெளியிட்ட ராம் மொழிபெயர்ப்பில் ஆல்பர் காம்யுவின் அந்நியன் எங்களைத் திக்குமுக்காட வைத்துக் கொண்டிருந்தது. தி.ஜானகிராமனின் மோகமுள், அம்மா வந்தாள், கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானிடம் போன்ற புதினங்களை எத்தனையாவது முறையாகவோ விடுப்புக்கள் எடுத்துப் படித்து வந்தோம். எங்களைப் பெரிதும் திரும்பிப் பார்க்க வைத்த வெங்கட்சாமிநாதன், க.நா.சுப்பிரமணியம் ஆகியோர் தில்லியில்தான் இருக்கிறார்கள் என்று கிடைத்த செய்தி எங்களுக்கு அதீதமான மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவர்களை சந்திக்க வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டோம். நாகவேணுகோபாலன் என்று ஒரு நண்பர். அவர் யாத்ரா, இலக்கியவட்டம் போன்ற இதழ்களில் சில கட்டுரைகள் எழுதியவர். பல முன்னணி (!) எழுத்தாளர்களுக்கு நண்பர். நாகவேணுகோபாலனும் நானும் லோதி காலனியில் இருந்து செயலகம் செல்லும் பேருந்தில் மேலே உள்ள குறுக்குப் பட்டையைப் பிடித்துத் தொங்கிக்கொண்டே பல நாட்கள் இலக்கியம் வளர்த்து வந்தோம். நாகவேணுகோபாலனிடம் ஒரு நாள் சொன்னேன். "வெங்கட்சாமிநாதனை சந்திக்க வேண்டும்'' என்று. அந்த நேரத்தில் எனக்கும் சுரேஷுக்கும் வெங்கட் சாமிநாதனைப் பற்றிக் கிடைத்த தகவல்கள் திகில் மூட்டுவனவாக இருந்தன. ஏறத்தாழ அவர் கையில் ஒரு பெரிய சாட்டை அல்லது கருப்பசாமியின் கையில் இருப்பதைப் போன்ற ஒரு அரிவாளை ஏந்திக் கொண்டு தன்னிடம் இலக்கிய ரீதியாக உடன்படாதவர்களை வதம் செய்து விடுவார் என்கிற ரீதியில் அவரைப் பற்றிய செவிவழிக் கதைகள் தில்லியிலும் தமிழ்நாட்டிலும் உலவி வந்தன. நவீன இலக்கியம் பற்றி அதிகம் தெரியாதவர்களிடம் அவர் பேசமாட்டார் என்றும் குறைந்த ஞானத்துடன் அவரை அணுகினல் நார்நாராகக் கிழித்து எறிந்து விடுவார் என்றும் படுபயங்கரமான வதந்திகள் உலவின. பொதுவாக சுரேஷ், சாப்பிடுவது, குடிப்பது போன்றவிஷயங்களுக்கு மட்டுமே வாயைத் திறக்க வேண்டும் என்ற கொள்கையைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பவன். நான் கொஞ்சம் ஓட்டை வாய். குறைந்த ஞானம் கொண்டதால் பேச்சு அதிகம் இருந்தது என்னிடம். (இருந்தது என்ன?) எனவே இணைந்திருந்தால் ஒன்று மற்றொன்றைசரி செய்து விடலாம் என்று நம்பினோம். வெங்கட்சாமிநாதனை சந்திக்கலாம் என்று தீர்மானித்தோம். நாகவேணுகோபாலனிடம் சொன்னோம் உங்களுக்குத்தான் அவரைத் தெரியுமே. எங்களை அவரிடம் அழைத்துப் போங்களேன் என்று. அவர், "சேஷாத்திரி என்று ஒரு நண்பர். ராமகிருஷ்ணபுரத்தில் வெங்கட்சாமிநாதன் வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருக்கிறார். அவர் உங்களை சாமிநாதனிடம் அழைத்துச் செல்வார்'' என்று சொன்னது மட்டுமின்றி சேஷாத்திரி அவர்களுடன் எங்களைத் தொடர்பு கொள்ள வைத்தார்.

சேஷாத்திரி மிகவும் அற்புதமான மனிதராக இருந்தார். கவிதைகள் எழுதுவார். நிறைய கவிதைகள். அவருடைய கவிதைகள் எப்படியோ இருக்கட்டும். தன்னுடைய வாழ்க்கையை மிகவும் அற்புதமான பொருள் பொதிந்த கவிதையாக மாற்றிக் கொண்டவர் அவர். இறப்புக்குப் பின் சடங்குகளை மறுத்துத் தன் உடலை மருத்துவ ஆய்வுக்குத் தானமாக வழங்கிய பெருமனம் கொண்டவர் சேஷாத்ரி அவர்கள். வாழும் காலத்திலும் வெளியில் தெரியாமல் பலருக்குப் பலவகைகளில் பெருத்த உதவிகளைச் செய்த நல்ல மனம் படைத்தவர். சேஷாத்திரி என்னையும் சுரேஷையும் வெங்கட்சாமிநாதன் வீட்டுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினர்.

வெங்கட்சாமிநாதனின் கையில் சாட்டை இல்லை. கருப்பசாமியின் வெட்டரிவாள் இல்லை. ரொம்பவும் சாதாரணமாகப் பழகினர். மிகவும் எளிமையாகப் பேசிக்கொண்டிருந்தார். சுரேஷுக்கு மட்டும் உள்ளூர உதைத்துக் கொண்டிருந்தது என்னைப் பற்றி. நான் ஏதாவது எக்குத் தப்பாகப் பேசி அல்லது கேள்விகள் கேட்டு சாமிநாதனிடம் வாங்கிக் கட்டிக் கொள்வேனோ என்று. ஒவ்வொரு இரண்டு நிமிடமும் பதட்டத்துடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். நல்ல வேளை அப்படி ஏதும் நடக்க வில்லை. என்றும் இல்லாதவாறு அன்று நான் எல்லாவற்றையும் மூடிக்கொண்டு அடுத்தவர் பேசுவதைக் கேட்கும் மனநிலையில் இருந்தேன்.

வெங்கட்சாமிநாதன், கொஞ்ச நேரம் எங்களைப் பற்றிக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தவர், "ரவீந்திரன் என்று ஒரு நண்பர் இருக்கிறார். அடுத்து வரும் சனிக்கிழமை அன்று கரோல்பாக்கில் அவருடைய வீட்டில் சந்திக்கலாம்'' என்று முகவரி கொடுத்தார்.

செ.ரவீந்திரன்

சனிக்கிழமை ரவீந்திரன் வீட்டுக்குப் போனோம். சிரித்த முகத்துடன் எங்களை வரவேற்றார் ரவீந்திரன். அவருடைய கரோல்பாக் வீட்டில் அன்று துவங்கிய எங்கள் சனிக்கிழமை விஜயம் ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்தது. அவர் தில்லி பல்கலைக்கழக வளாகத்துக்கு வீடு மாற்றிய பின்னரும் எங்கள் சனிக்கிழமை விஜயங்கள் தொடர்ந்தன. அவருடைய வீட்டை நாங்கள் செல்லமாக மடம் என்று அழைத்தோம். வீடெங்கும் புத்தகங்கள் எல்லா இடங்களிலும் இறைந்து கிடக்கும். உலகத் திரைப்பட விழாக்களில் வழங்கப்படும் கையேடுகளும் விவரணப் பட்டியல்களும் இறைந்திருக்கும். சனிக்கிழமைகளில் எப்போதும் நண்பர்கள் கூட்டம். மடத்தில் மது அருந்தாத நவீன இலக்கிய வாதிகளும் நவீன நாடகக் காரர்களும் அநேகமாக யாருமே இருக்க முடியாது. பல நாடக நண்பர்கள் அங்குதான் அறிமுகமானர்கள். உலக நாடகங்கள் பற்றிய நூல்களை, நாடகக் கோட்டுபாடுகள் குறித்த நூல்களை, நாடகங்களின் தொழில் நுணுக்கங்கள் குறித்த நூல்களை, நாடகப் படிகளை, பல நாடக அறிஞர்களின் நாடகங்களை ரவீந்திரன் புண்ணியத்தில் படித்தோம். நாடகங்கள் பற்றி, உலக சினிமா பற்றி வெங்கட்சாமிநாதனும் ரவீந்திரனும் எங்களுக்குத் திறந்து வைத்த சாளரங்கள் ஏராளம்.

ரவீந்திரன் அப்போது சென்னையில் கூத்துப்பட்டறையுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார். தன்னுடைய வாழ்நாளின் பெரும்பாலான பகுதிகளை அந்தக்குழுவின் நாடகங்களுக்கு ஒளியமைப்பதற்காகச் சென்ற ரயில் பயணங்களில் கழித்திருக்கிறார். கூத்துப்பட்டறை மட்டுமல்லாது தமிழகத்தில் நிகழ்ந்த அனைத்து நவீன நாடக விழாக்களிலும் ரவீந்திரன் பல இயக்குநர்களுடன் பணி புரிந்திருக்கிறார். இந்திய நகரங்கள் மட்டுமல்லாது உலகின் பல நாடுகளிலும் சென்று நாடகங்களுக்கு ஒளியமைத்து வருகிறார். அந்நிய நாட்டுத் திரைப்படங்களைத் தேர்வு செய்யும் குழுவில் இருந்திருக்கிறார் ரவீந்திரன். தில்லிப் பல்கலைக் கழகத்தில் இந்திய மொழித்துறையின் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்று இப்போது புதுவை பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா மாணவர்களுக்கு வகுப்புக்கள் எடுத்து வருகிறார். என்னுடைய இப்போதைக்குக் கடைசி நாடகமான சாம்பசிவா வரை ரவீந்திரன் ஒளியைமத்துக் கொடுத்தார். என்னுடைய ஒவ்வொரு நாடகத்திலும் ஏதேனும் பொலிவு இருந்தது என்றால் அது ரவீந்திரன் அமைத்துக் கொடுத்த ஒளியமைப்பில்தான் என்று நேர்மையுடன் நம்புகிறேன்.

நான் வடக்கு வாசல் துவங்கியதும் ரவீந்திரன் புதுவைக்கு இடம் பெயர்ந்ததும் ஏறத்தாழ ஒரே நேரத்தில் நிகழ்ந்தவை என்று சொல்லலாம். ஒருவேளை ரவீந்திரன் தில்லியில் இருந்திருந்தால் என்னை ஏதாவது நாடகம் மேடையேற்றத் தூண்டிக் கொண்டு இருந்திருப்பார். தெருக்கூத்துக் கலைஞர் புரிசை கண்ணப்பத்தம்பிரான் பற்றிய என்னுடைய ஆவணப் படத்திலும் சி.சு.செல்லப்பா பற்றி நான் தயாரித்த முடிவுறாத ஒரு ஆவணப்படத்திலும் அவர் பெரும் பங்காற்றினர். தமிழின் நவீன நாடக மேடைகளில் ஒளியமைப்புக்கு ஒரு சிம்மாசனத்தைப் பெற்றுத் தந்தவர் ரவீந்திரன் என்று சொன்னல் அது மிகையாகாது. யாத்ராவில் "பின்னோக்கிய மறுபார்வையில்'' என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைகள் மிகவும் தரமானவை. தமிழ் சமூகத்தின் முன்பு பல கேள்விகளை மிகவும் அநாயாசமாக எழுப்பி நிற்பவை. தெருக்கூத்து, யட்சகானம் பாகவதமேளா மற்றும் ரிச்சர்ட் ஷெக்னர் பற்றி அவர் எழுதிய கட்டுரை ஆகியவற்றை ஒவ்வொரு நாடகக் காரனும் அவசியம் படிக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து தில்லிக்கு நாடக விழாக்களில் கலந்து கொள்ள வரும் நவீன நாடகங்களுக்கும் ஒளியமைப்பார் ரவீந்திரன்.

ராம் கலாச்சார மையத்தில் நாடகம் குறித்த ஒரு பகுதிநேர பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டு சுய ஆர்வத்தினல் ஒளியமைப்பின் பல பரிமாணங்களைக் கற்று தமிழ் நாடக மேடைகளைப் பரிமளிக்க வைத்துக் கொண்டிருப்பவர் ரவீந்திரன்.
அவரிடம் உள்ள ஒரே ஒரு குறையாக நான் காண்பது எதையும் முன்னே நின்று செய்ய மாட்டார். பின்னணியில் செயல்வடுவதில் ஆர்வம் காட்டுவார். புரிசை கண்ணப்பத் தம்பிரான் பற்றிய படம் துவங்கிய போது ரவீந்திரனை மனதில் வைத்துத்தான் செயல்பட்டேன். கேமரா, நல்ல கேமராமேன், படம் தயாரிக்கும் செலவுக்கான பணம் அத்தனையும் இருக்கிறது. இந்தப் படத்தை நீங்களே செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். வழக்கப்படி சிரித்துக் கொண்டே எல்லோரும் சேர்ந்து செய்யலாம் என்று பதுங்கினர். ஆனல் அந்தப் பணிகளில் தீவிர ஈடுபாட்டுடன் இயங்கினர். அதே போல செல்லப்பா பற்றிய படத்திலும் அதீதமான ஆர்வம் காட்டினர்.

தமிழ்ச் சமூகம் பற்றிய ஆழ்ந்த அக்கறை உள்ளவர் ரவீந்திரன். அவருடைய கட்டுரைகளில் சமூக அவலங்களை மிகவும் கடுமையாக சாடியிருக்கிறார். தமிழ்ப் பேராசிரியராக இருந்தும் தமிழ்ப் பேராசிரியப் பெருமக்களைப் பல இடங்களில் துவைத்து அலசிக் காயப்போட்டவர். அதனல் பொதுவாக பலருக்கு அவ்வளவாகப் பிடிக்காமல் போனவர். என்னுடைய அனைத்து செயல்பாடுகளின் பின்னணியிலும் வெங்கட்சாமிநாதன் மற்றும் ரவீந்திரன் ஆகியோர் அந்நாளில் காட்டிய வெளிச்சங்கள் எப்போதும் வழித்துணைக்கு வந்து கொண்டிருப்பதாக உறுதியுடன் நம்புகிறேன்.

யதார்த்தாவின் அனைத்து நாடகங்களிலும் ரவீந்திரனுக்கு உதவியிருக்கிறான் சுரேஷ் சுப்பிரமணியம். தலைநகரில் கலை இலக்கிய நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டியவன். படிப்பதில் அதீத ஆர்வம் காட்டுபவன். அதிகமாகப் படிப்பவர்களுக்கு இயற்கையில் அமையும் செயல்பாடுகளில் ஆர்வமில்லாமை அவனையும் தாக்கியதால் அதிகமாக வெளியில் வராதவன். யதார்த்தா மற்றும் வடக்கு வாசல் இதழின் துவக்க நாட்களில் பெரும் பணியாற்றியவன் சுரேஷ்.

இனி ஒத்திகைகள் மற்றும் மேடையேற்றத்தைப் பற்றி எழுதி முடித்து விடலாம் என்று இருக்கிறேன்.