Monday, August 13, 2007

மனக்கவலை அளிக்கும் ஒரு அறிக்கை

சமீபத்தில் யுனெஸ்கோ நிறுவனத்தின் கீழ் இயங்கும் சர்வதேசக் கல்வி மற்றும் திட்ட மையம் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியிருக்கிறது. அந்தக் கருத்தாய்வின் முடிவுகள் அவ்வளவு மகிழ்ச்சி தருவதாக இல்லை. அந்தக் கருத்தாய்வின் படி இந்தியக் கல்வி முறை ஊழல் சகதியில் சிக்கித் தவிக்கிறது என்றும் இதற்கான முக்கியக் காரணங்களாக ஆசிரியர்களின் திறமைக் குறைபாடும், ஊழல் மனப்பான்மையுமே என்று இந்தக் கருத்தாய்வு தெரிவிக்கிறது.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இதற்கான பதிலை அல்லது சமாதானத்தைப் பாராளுமன்றத்தில் ஒரு அறிக்கையாக இன்று (திங்கள்) சமர்ப்பிக்கப் போகிறது.

ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தராமையில் உலகிலேயே முதலிடம் வகிக்கிறது இந்தியா என்கிறது யுனெஸ்கோவின் அறிக்கை. இந்த விஷயத்தில் ஒப்பிடத் தகுதியுள்ள நாடு உகாண்டா மட்டுமே என்கிறது. உகாண்டாவில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தராமை 25 சதவிகிதம் என்றால் இந்தியாவில் அது 20 சதவிகிதம். அவ்வளவுதான். இந்த விஷயத்தில் உலகில் இரண்டாவது இடத்தை வகிக்கும் பெருமையை இந்தியா அடைகிறது.





பீகாரில் ஐந்துக்கு இரண்டு ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில்லை. உத்தர பிரதேசத்தில் இது மூன்றில் ஒன்று. இது போன்ற ஆசிரியர்களின் வருகை தராமை, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடு கல்விக்காக செலவழிக்கும் தொகையில் 22.5 சதவிகிதத்தை வீணடிக்கிறது.

ஆசிரியர்கள் இப்படிப் பள்ளிக்கு ஒழுங்காக வருகை தராமைக்கு சில காரணங்களை முன்வைக்கிறது இந்த ஆய்வு. ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஒரு சீரான முறையைக் கடைப்பிடிக்காமை, ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்கும் நெறிமுறைகளில் ஒரு சீரான தன்மையைக் கடைப்பிடிக்காமை போன்றவை ஆசிரியர்கள் பள்ளிக்கு ஒழுங்காக வராமைக்கு அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் நிறைய ஆசிரியர்கள் பள்ளிக்கு ஒழுங்காக செல்வதில்லை. அவர்கள் தனிப்பட்ட வகையிலான டியூஷன் வகுப்புக்களை எடுப்பதில் அதிகமான நேரங்களை செலவிடுகிறார்கள். இது போன்ற தனியார் டியூஷன் மையங்களும் அவற்றில் ஆசிரியர்களின் ஈடுபாடும் இந்தியாவின் கல்வித் திட்டத்தில் ஊழலைப் பெருமளவில் பெருகச் செய்கிறது;

கல்வித் தரம் குறைவதில் மிக முக்கியமான பங்கு வகிப்பது தேர்வுகளில் ஏமாற்றுவேலைகளை செய்தல்;

இந்தியப் பல்கலைக் கழகங்களில் தேர்வுகளின் போது நடைபெறும் ஏமாற்றுவேலைகள் பெருகி வருகின்றன என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. தேர்வுகளில் கேள்வித்தாள்களைப் பெறவும் விடைகளை ஏமாற்றுமுறையில் ஏற்பாடு செய்யுவம் ரூ.8000 லிருந்து மூன்று லட்சம் ரூபாய்கள் வரை செலவிடப்படுகின்றன. இந்த ஊழல் கணிணி விஞ்ஞானம், மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில் அதிகம் காணப்படுகிறது என்று இந்த அறிக்கை கூறுகிறது.

இதற்கான என்ன விடை வைத்திருக்கிறது நம்முடைய அரசு என்று பார்க்க வேண்டும். என்னதான் இதற்கு விடையாக இருந்தாலும் இந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் மிகவும் கவலையும் வேதனையும் அளிப்பவையாக உள்ளன. நம்முடைய வேத காலங்களிலும் சங்க இலக்கியங்களிலும் ஆசிரியர்களுக்கு நம்முடைய சமூகம் அளித்து வரும் இடம் என்பது தெய்வத்துக்குச் சற்று அருகாமையில் வரும் இடம்.

நம்முடைய இந்தியக் கல்வி முறை மற்றும் அரசுப் பணிச் சட்டங்களின் கீழ் பல இடங்களில், பல தனியார் கல்வி மையங்களில், அரசு உதவி பெற்று சில தனிநபர்களின் மேலாண்மையில் நடைபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் நிலை என்பது அவ்வளவு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இல்லை.

யுனெஸ்கோவின் இந்த அறிக்கை வெளிவந்த நேரம் நம்முடைய அரசின் சிந்தனையும் செயல்முறைகளும் இந்த விஷயத்தில் இன்னும் விரிவடைய வேண்டும். அந்த அறிக்கையில் சொல்லப்பட்டு இருப்பதைப் போல ஆசிரியர்களின் நியமனம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற விஷயங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சீரின்மையை சமன்படுத்த முயற்சிக்க வேண்டும் அரசு.

நம்முடைய ஆசிரியர்கள் என்றும் வணக்கத்துக்கு உரியவர்கள். ஒரு மெழுகுவர்த்தியாக இருந்து மாணாக்கர்களுக்குக் கல்வி ஒளியேற்றும் எத்தனையோ ஆசிரியப் பெருமக்களை இன்னும் நாம் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். இந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் குறித்து ஆசிரியர் சமூகமும் ஒரு பின்னோக்கிய மறுபார்வையை முன்வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

Saturday, August 11, 2007

அடிப்படைவாதத்தின் கோரமுகம் - தஸ்லிமா மீதான தாக்குதல்

ராகவன் தம்பி


ஹைதராபாத் பிரஸ் கிளப் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கூட்டத்தில் வங்கப் படைப்பாளி தஸ்லிமா நஸ்ரின் மதவாதிகளால் தாக்கப்பட்டுள்ளார்.

அவருடைய "ஷோத்' (வஞ்சம்) என்னும் நூலின் தெலுங்கு மொழிபெயர்ப்பினை வெளியிடுவதற்காக ஹைதராபாத் வந்த அவருக்கு இந்த மாபெரும் ஜனநாயக ரீதியிலான வரவேற்பு கிட்டியுள்ளது.

தஸ்லிமாவைத் தாக்கியவர்கள் யாரும் குண்டர்களோ அடியாட்படைகளோ அல்ல. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களால். மஜ்லிஸ்-இ-இல்தேஹதுல் முஸ்லிமின் அமைப்பின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இத்தாக்குதலுக்குத் தலைமை ஏற்றிருக்கிறார்கள்.






ஊடகங்களில் இந்த சம்பவம் படமாக்கப்பட்ட காட்சி நறுக்குகளில் தாக்கியவர்களின் ஆவேசமும் தஸ்லிமைக் காப்பாற்ற முயன்ற தோழர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதுமான காட்சிகள் நம்மைப் பதற வைக்கின்றன. பத்திரிகையாளர் தோழர் இன்னையா தஸ்லிமாவைக் காப்பாற்றும் முயற்சியில் கடுமையாக அடி வாங்கியிருக்கிறார்.

இசுலாமிய அடிப்படைவாதத்துக்கு எதிரான தஸ்லிமாவின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் அவரை மிகவும் கடுமையான வார்த்தைகளால் தூஷணம் செய்த கைக்குக் கிடைத்ததை அவர் மீது எறிந்து தாக்க முயற்சித்து இருக்கிறார்கள்.

பங்களாதேஷில் இசுலாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராகவும் அங்குள்ள மதவாதிகள் தூண்டிவிடும் வன்முறைவாதத்துக்கு எதிராகவும் தன்னுடைய எழுத்துக்களை ஆயுதமாக வைத்துப் போராடிவருகிறார் தஸ்லிமா. அங்குள்ள மதவாதிகளின் அச்சுறுத்தல் அவரைக் கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக பங்களாதேஷை விட்டு வெளியே வாழக் கட்டாயப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தஞ்சம் புகுந்த தஸ்லிமாவை இங்கிருக்கும் மதவாதிகள் வதைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கடந்த ஓராண்டாகக் கொல்கத்தாவில் வசிக்கும் தஸ்லிமாவுக்கு அங்கும் பிரச்னைகள் தலைதூக்க ஆரம்பித்தன. ஜøன் மாதம் ஒரு வங்காள தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் அங்குள்ள திப்பு சுல்தான் மசூதியின் இமாம் நூருல் ரஹ்மான் பர்காதி என்பவர், தஸ்லிமாவுக்கு எதிராக அவர் ஒரு ஃபத்வா வெளியிட்டிருப்பதாகவும் அதன் படி தஸ்லிமாவின் முகத்தைக் கரியால் பூசி அவமானப்படுத்துபவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்கள் வெகுமதியாக அளிக்கப்படும் என்றும் அறிவித்தார். தஸ்லிமாவை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் அந்த இமாம்.

சமீபத்தில் நடந்த இத்தத் தாக்குதலைத் தொடர்ந்து தஸ்லிமாவுக்கான பாதுகாப்பை மறுபரிசீலனை செய்யவும் மேலும் பலப்படுத்தவும் மேற்கு வங்க அரசு முயற்சிகள் எடுக்கும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

ஜாவேத் அக்தர் போன்ற அறிவுஜீவிகள் இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்து இருக்கிறார்கள். தில்லி சிறுபான்மையினர் வாரியத்தின் தலைவர் கமல் ஃபரூக்கி இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்த கையோடு இசுலாமியர்களின் மத உணர்வையோ நம்பிக்கையினையோ புண்படுத்தும் வண்ணம் எழுதுவதை தஸ்ரிமா உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்திய அரசு உடனடியாக அவருக்கான கடவினை ரத்து செய்து அவரை பங்களாதேஷøக்கோ பாகிஸ்தானுக்கோ அனுப்பி வைக்க வேண்டும் என்றும் மிகவும் ஜாக்கிரதையாக அறிக்கை விடுத்துள்ளார்.

பெண்ணிய உரிமைகளுக்காகவும் மதரீதியிலான அடிப்படைவாதங்களுக்கு எதிராகவும் தன்னுடைய போர் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்றும் இவை போன்ற தாக்குதல்களால் தன்னுடைய குரலை நசுக்க முடியாது என்றும் ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ளார் தஸ்ரிமா.

இது தஸ்லிமாவின் இணையப்பக்கத்தில் காணப்படும் ஒரு நல்ல மேற்கோள்.

பெண்கள் கிழக்கில், மேற்கில், வடக்கில் தெற்கில் ஒடுக்கப்படுகிறார்கள். அவர்கள் உள்ளேயும் வெளியேயும் ஒடுக்கப்படுகிறார்கள். ஒரு பெண் மத நம்பிக்கையுள்ளகவோ நம்பிக்கையற்றவளாகவோ இருந்தாலும் ஒடுக்கப்படுகிறாள். அழகாக இருந்தாலும், குரூரமாக இருந்தாலும் ஒடுக்கப்படுகிறாள். ஊனமுற்றோ அல்லது இல்லாமலிருந்தோ, ஏழையாகவோ படித்திருந்தாலும் படிக்காவிட்டாலும் ஒடுக்கப்படுகிறாள் அவள். முழுக்கப் போர்த்திக் கொண்டிருந்தாலும் நிர்வாணமாக இருந்தாலும் அவள் ஒடுக்கப்படுகிறாள். ஊமையாக, கோழையாக அல்லது மிகுந்த தைரியசாலியாக இருந்தாலும் ஒரு பெண் எப்போதும் ஒடுக்கப்படுகிறாள்.


www.taslimanasrin.com

என்னும் தளத்தில் தஸ்லிமா நஸ்ரினின் அனைத்துப் படைப்புக்களையும் நீங்கள் காணலாம்.