Thursday, October 16, 2008

புக்கர் விருது பெற்ற வெள்ளைப்புலி


ஸல்மான் ரஷ்டி (1981), அருந்ததி ராய் (1997) கிரண் தேசாய் (2006) ஆகிய இந்தியப் படைப்பாளிகளுக்குப் பிறகு இந்த ஆண்டு புக்கர் பரிசுக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார் மும்பையில் வசிக்கும் அரவிந்த் அடிகா. அவருடைய வெள்ளைப்புலி (வைட் டைகர்) என்னும் புதினம் இந்த ஆண்டின் புக்கர் பரிசுக்குத் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளது.

தில்லிவசிக்கும் ஒரு ஹல்வாய் (இனிப்புக் கடைக்காரன் அல்லது இனிப்புப் பலகாரம் செய்யும் சமையல்கார்) வாழ்வில் நடக்கும் சம்பவங்களைப் பற்றி விவரித்துச் செல்லும் நாவல் இது என்று பத்திரிகைகளில் போட்டிருக்கிறார்கள். மும்பையில் வசித்தாலும் இந்த நாவலை தில்லிவாசிகளுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் அடிகா.

இவருடைய பெயருடன் போட்டிக்கு இருந்து பின்தங்கிய ஜாம்பவான்கள் - அமிதவ் கோஷ் (இந்தியா), ஸ்டீவ் டோல்ட்ஸ் (ஆஸ்திரேலியா), செபாஸ்டியன் பாரி (அயர்லாந்து), லிண்டா கிராண்ட் (பிரிட்டன்), பிலிப் ஹென்ஷர் (பிரித்தான்).

அடிகாவுக்கு வாழ்த்துக்கள் அனுப்பாத வட இந்தியத் தலைவர்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம். அடிகாவுக்குக் கிடைத்த இலக்கிய அங்கீகாரத்தைத் தான் கொண்டாடுவதாக பிரதமர் அவருக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார்.



சென்னையில் பிறந்து மங்களூரில் வளர்ந்து சிட்னிக்குப் புலம் பெயர்ந்த அடிகா ஆங்கில இலக்கியம் படித்தது நியூயார்க்கில் உள்ள கொலம்பியா மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகங்களில். டைம், ஃபைனான்சியல் டைம்ஸ், இன்டிபெண்டெண்ட் மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற பத்திரிகைகளில் பல கட்டுரைகள் எழுதியவர் அரவிந்த் அடிகா.


புக்கர் பரிசுக்கான தொகை ரூ.42 லட்சம். இது தவிர இப்போது இந்த வெள்ளைப் புலியை மூலை முடுக்கெல்லாம் துரத்தித் துரத்தி வாங்கிப் படிப்பார்கள். பல மொழிகளில் மொழிபெயர்ப்பு வரும். அநேகமாக உலகில் பேசி, எழுதப் படும் எல்லா மொழிகளிலும் அரவிந்த் அடிகாவைப் பற்றிக் கட்டுரைகள் வெளிவரும். கண்களை இடுக்கிக் கொண்டு அவர் சிரிக்கும் புகைப்படங்கள் எல்லா நாளிதழ்களிலும், வார, மாத இதழ்களிலும் வரும்.

தமிழில் மட்டும் யாராவது ஒரு தமிழ் பேசத் தெரியாத சேட்டுப் பெண் எப்போதாவது அடிகா ஊருக்கு வரும்போது அவரை ஊடகங்களில் பேட்டி காண வாய்ப்பு இருக்கிறது. பிரபல தமிழ்ப் பத்திரிகைகளில் யாராவது ஒரு தமிழ் பேசத் தெரியாத சேட்டுப்பெண் நடிகை இவரைப் புளகாங்கிதத்துடன் பேட்டி கண்டு உலக இலக்கியம் வளர்க்க வாய்ப்பு இருக்கிறது. உடனடியாக தீபாவளி வருவதால் இந்த வாய்ப்புக்கள் சற்று அதிகமாகவே இருக்கலாம். தமிழின் சில பின்நவீனத்துவ மாமேதைகள் இந்த நாவலைக் கிழி கிழி என்று கிழித்துத் தோரணம் கட்டவோ அல்லது சத்தமில்லாமல் இந்த நாவலில் இருந்து சில உருவகங்களை ராவோடு ராவாக சுட்டு தன் சிறுகதைகளிலோ அல்லது வேறு படைப்புக்களிலோ இடைசெருக வாய்ப்புக்கள் உள்ளன. அதே போல, அகில உலகமும் படிக்கத் தகுதியுள்ள தன் எழுத்துக்கள் தமிழில் வருவதால் மட்டுமே அதிகம் கண்டுகொள்ளப்படுவதில்லை என்று காதுவழியாக புகையை வெளியே அனுப்ப வும் வாய்ப்புக்கள் உள்ளன.

புத்தகத்தை விரைவில் படிக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுகிறேன். அதே நேரத்தில் ஒரு காலத்தில் இதே போல புக்கர் பரிசு பெற்று ஏக ரகளையாக ஊதிப் பெருக்கப்பட்ட அருந்ததி ராய் நாவல் போல இது ஏமாற்றமாக அமையக்கூடாது என்று குலதெய்வத்திடம் ஒரு பிரார்த்தனையும் வைத்திருக்கிறேன்.

புத்தகத்தை விலைக்கு வாங்கி அல்லது யாராவது நல்லவர்களிடம் இரவல் வாங்கிப்படித்துத் திருப்பிக் கொடுத்து விட்டு வெள்ளைப் புலி நூலைப் பற்றி எழுதுவது தர்மமான காரியம் என்று நினைக்கிறேன்.

விரைவில் அந்தத் தலைவலியும் உங்களுக்கு உண்டு.



Wednesday, October 15, 2008

வடக்கு வாசல் இணையதளம்


ஜெயமோகன் தன்னுடைய இணையதளத்தில் இந்த சனிமூலை வலைப்பக்கங்கள் பற்றி அறிமுகம் செய்திருக்கிறார். 1991ல் அவர் தில்லி வந்தபோது தில்லியில் நான் செய்து கொண்டிருந்த பாவ, புண்ணிய காரியங்களைப் பற்றியும் வெங்கட்சாமிநாதன், மற்றும் என் நண்பன் சுரேஷ், அச்சுதன் அடுக்கா பற்றியும் தன்னுடைய கட்டுரையில் மிகவும் சுவையாக சொல்லியிருக்கிறார். வடக்கு வாசல் இதழ் பற்றியும் ஓரிரு வார்த்தைகள் சொல்லியிருக்கிறார். அவரை எழுதச் சொல்லி ரொம்ப நாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். மனிதர் மசியவில்லை. மடி ஆசாரங்களை விட்டு எழுதுங்களேன் என்று கேட்டேன். அப்படியெல்லாம் ஏதுமில்லை. திரைக்கதை நாவல்கள் போன்றவற்றில் அதிகம் நேரம் கழிவதால் மற்ற யாருக்கும் எழுத நேரம் இல்லாமல் போய் விட்டது என்று சொல்கிறார். சரி காத்திருப்போம். வடக்கு வாசல் இணைய தளத்தைப் பற்றி அவர் எழுதி அறிமுகப்படுத்தி இருக்கலாமே என்று தோன்றியது.


வடக்கு வாசல் இலக்கிய சிறப்பு மலர் 2008 வெளியிடப்பட்டது

என்னுடைய இந்தப் பக்கங்களிலேயே இது வரை
வடக்கு வாசல் இணைய தளம் பற்றி எதுவும் சொல்ல வில்லை. பிறகு அவரைக் கேட்பது என்ன நியாயம் என்று தோன்றியது.

இன்னொன்று, என்னைத் தெரிந்த எல்லோருக்கும் வடக்கு வாசல் இதழ் இணையத்தில் வருவது பற்றி கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். எனவே அதிகம் கூச்சல் போட வேண்டாம் என்று நினைத்தேன். இருந்தாலும் கொஞ்சமாக அறிமுகப்படுத்தி விடுகிறேனே. யாராவது புதிதாக இந்தப் பக்கம் வந்தால் அவர்கள் தெரிந்து கொள்ளட்டுமே.
செப்டம்பர் 14ம் தேதி புது தில்லி இராமகிருஷ்ணபுரத்தில் உள்ள திருவள்ளுவர் கலையரங்கில் வடக்கு வாசல் இதழின் நான்காம் ஆண்டுத் துவக்க விழாவும் இணைய தளத் துவக்கமும் நடைபெற்றது. வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008 வெளியிடப்பட்டது. அந்த மலரில் அசோகமித்திரன், இந்திராபார்த்தசாரதி, வாஸந்தி, பி.ஏ.கிருஷ்ணன், கி.ராஜநாராயணன், மேலாண்மைபொன்னுசாமி போன்ற ஜாம்பவான்களும் இன்னும் பல குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகளும் பங்களித்திருக்கின்றனர். இந்த மலரை வெளியிட்டு வடக்கு வாசல் இணையதளத்தைத் துவக்கி வடக்கு வாசல் இதழைப் பெருமைப்படுத்தினர் முன்னள் குடியரசுத்தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்கள். கவிஞர் ய.சு.ராஜன், நாவலாசிரியர் பி.ஏ.கிருஷ்ணன், ஒரியண்டல் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் எம்.ராம்தாஸ், உச்சநீதி மன்ற வழக்கறிஞர் எம்.என்.கிருஷ்ணமணி, சக்தி பெருமாள் ஆகியோர் மேடையில்.

இணைய தளத்தை வடிவமைத்தவர் சென்னை பர்ப்பிள் ரெயின் நிறுவனத்தைச் சேர்ந்த பிரபாகர் மற்றும் அவருடைய நண்பர்கள். எனக்கு மிகவும் திருப்தி. மிகவும் அற்புதமாக வடிவமைத்திருப்பதாக என்னுடைய நண்பர்கள் அவரைப் பாராட்டினர்கள். டாக்டர் கலாம் பிரபாகரை மேடையில் சிறப்பித்தார்.

பி.ஏ.கிருஷ்ணன் மற்றும் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்

வடக்கு வாசல் இதழுக்கு விளம்பர மேலாண்மை செய்யும் சென்னை ஆட்மார்க் உரிமையாளர் அருள்வேல் வந்திருந்தார். புதுவையில் இருந்து சுகுமாரன் வந்திருந்தார்.
விழாவின் முந்தைய நாள் அதாவது 13 செப்டம்பர் அன்று தில்லியில் வெடித்த தொடர் வெடிகுண்டு வெடிப்புக்குப் பிறகும் அடுத்த நாள் நடந்த இந்த விழாவில் சுமார் 800க்கும் மேற்பட்ட தலைநகர் தமிழர்கள் கலந்து கொண்டார்கள்.
விழா குறித்து தீபா எழுதிய கட்டுரையை வடக்கு வாசல் இணைய இதழில் வெளியிட்டுள்ளோம். வடக்கு வாசல் இணைய இதழ் குறித்த விமர்சனத்தை திருநாவுக்கரசு எழுதி இருக்கிறார். அதுவும் இணைய இதழில்.

ய.சு.ராஜன், டாக்டர் அப்துல் கலாம் மற்றும் ஓரியண்டல் இன்்ஸ்யூரன்ஸ் தலைவர் எம்.ராமதாஸ்

இனி ஒவ்வொரு மாதமும் வடக்கு வாசல் மாத இதழ் அந்த மாதத்தின் 20ம் தேதிக்குப் பிறகு வலையேற்றப்படும்.
தலைநகர் தமிழர்களுக்கு என்றே, தலைநகர் பற்றிய பல தகவல்கள், நேர்காணல்கள், கட்டுரைகள், கதைகள் ஆகியவை வடக்கு வாசல் இணையத்தில் தலைவாசல் என்னும் இணைய இதழ் வாராவாரம் திறக்கப்போகிறது. அதற்கான காரியங்களை பிரபாகர் தீவிரமாக செய்து வருகிறார். ஒரு நல்ல சுவை உள்ள இணைய வார இதழ் உங்களுக்காக தலைநகரில் இருந்து வெளிவரக் காத்திருக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக வடக்கு வாசல் அச்சு இதழ் இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு ஒவ்வொரு மாதமும் திறந்து வைக்கப்பட்டு வருகிறது. வடக்கு வாசல் இதழ் இணையத்தில் ஒவ்வொரு மாதமும் 20 தேதி திறக்கும்.
மிக விரைவில் உலகத் தமிழர்களுக்கு இந்தியத் தலைநகரின் செய்திகள் இணையம் வழி ஒவ்வொரு வாரமும் திறக்கப் போகிறது.


இணைய தளத்தை சிறப்புற வடிவமைத்த பிரபாகர் சிறப்பிக்கப்படுகிறார்
உங்கள் அன்பும் ஆதரவும் வழி நடத்துதலும் என்றும் எங்களைத் தொடரவேண்டும்.