Tuesday, February 28, 2012

கோடிட்ட இடங்களை நிரப்புதல் - சுமதி ராம்

வடக்கு வாசல் இதழ் துவக்கிய நேரத்தில்  இதழுக்குப் படைப்புக்கள் வரத் துவங்கி இருந்தன.  கவிதையும் கட்டுரைகளும் சிறுகதைகளும் வரத் துவங்கிய நேரம் அது. அநேகமாக 2005 இறுதி மாதங்களில் ஒன்றாக இருக்கலாம்,

வடக்கு வாசல் அலுவலகத்துக்கு வந்த கவிதைகளில் ஒன்று தனியாகக் கவனத்தை ஈர்த்தது. ஒற்றைக் கவிதை அது.

தன்னைப் பற்றிய அறிமுகம் ஏதும் இல்லை.  நேரடியாக ஒரு கவிதை. வெறும் பெயரும் முகவரியும் தாங்கிய ஒற்றைத்தாளில் வந்த படைப்பு.
கவிதை எழுதியவர் பெயர் சுமதி ராமசுப்பிரமணியம் என்று இருந்தது. இது போன்ற நேரடிப் பெயருடன் கவிதை அல்லது கவிதை எழுதுபவர்கள் அதிலும் பெண் படைப்பாளிகளை அதிகம் காண நேருவதில்லை. இந்த நேரடிப் பெயர் எனக்கு சற்று ஆச்சரியம் அளித்தது.

Monday, February 20, 2012

தூரிகையும் நிறங்களின் கடவுளும்...

வாசகனை அச்சம் கொள்ள வைக்கும் டாம்பீகமான வார்த்தைகளுடன், எவ்வகையான ஒழுங்கமைவும் இன்றி, தன்னை மட்டுமே முதன்மைப் படுத்திக் கொள்ளும் தமிழின் நவீன கவிதைச் சுழல்,  (இது எழுத்துப் பிழையல்ல) கவிதைப் பக்கம் ஒதுங்க நினைக்கும் வாசகனை சில காலங்களாகப் படுத்தி எடுத்து வருகிறது.  

வாசக மனத்தை  எந்த வகையிலும் பொருட்டுக்கு எடுத்துக் கொள்ளாது, தானிழுக்கும் போக்குக்கு எல்லாவற்றையும் இழுத்து வைத்து அல்லல்படுத்தி வருகின்றது.   இந்தச் சூழலில், சமீப காலங்களாக    எவ்வகையான பாசாங்குகளும் அற்று தனக்குள் ஒடுங்கிய கவிதைகளும்,  நல்ல தரமான ஓசை நயம் கொண்டு, இந்த மண்ணின் மணம் சுமந்த படிமங்களை சுமந்த கவிதைகளும் நேரடித்தன்மை கொண்ட கவிதைகளும்  இப்போது அங்கங்கு   வெளிவரத் துவங்கியுள்ள போக்கு சற்று ஆறுதலும் தைரியமும் அளிக்கிறது.   லேசாக நம்பிக்கையும் தருகிறது. 

அந்த வகையில் பூ.அ.ரவீந்திரன் சற்று தாராளமாகவே இந்த  நம்பிக்கையை நமக்கு அளிக்கிறார். கோவை கீதா பதிப்பகத்தின் வெளியீட்டில் வந்துள்ள அவருடைய  தூரிகையும் நிறங்களின் கடவுளும் என்னும் தொகுப்பு ஆர்ப்பாட்டங்கள் அதிகம் இல்லாத ஒரு கவிதை அனுபவத்தை நமக்கு வழங்குகிறது.