Wednesday, November 7, 2007

மதராசபட்டிணம்

வியாஸன்

புதினங்கள், சிறுகதைகள் எனப் படைப்புலகில் மிக அற்புதமான தடங்களைப் பதித்து வருகிறவர் நரசய்யா. கற்பனைப் படைப்புக்கள் மட்டும் அல்லாது வரலாறு, தொல்பொருள் ஆய்வு போன்ற துறைகளிலும் தீர்க்கமான ஆர்வம் கொண்டு கடின உழைப்பினை மேற்கொண்டு பல அரிய ஆதாரங்களைத் திரட்டி ஆய்வு நூல்களைப் படைத்து வருகிறார். அந்த வரிசையில் அவருடைய கடல்வழி வணிகம் என்னும் நூல் தமிழில் மிகவும் பயனுள்ள வெளியீடு என்று பல தளங்களிலும் வெகுவாகப் பாராட்டப் பட்ட நூலாகும். பல வடமொழி, தமிழ் இலக்கிய நூல்களில் கிடைத்த குறிப்புக்களின் உதவியுடனும், தொல்பொருள் சான்றுகளின் வலுவுடனும் மிகவும் எளிமையான தமிழ் நடையில் இந்திய கடல் வாணிகம் பற்றிய பல அரிய, பயன்தரும் தகவல்களை உள்ளடக்கி வெளிவந்தது கடல்வழி வணிகம். இந்த நூலை மிகவும் அழகுடன் கட்டமைத்துப் பதிப்பித்து இருந்தார்கள் பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்தினர். இப்போது நரசய்யாவின் இன்னொரு அற்புதமான வரலாற்றுப் பதிவுகள் அடங்கிய ""மதராசபட்டினம்'' என்னும் நூலை பதிப்பித்து இருக்கிறார்கள்.


"கடல்வழி வணிகம் எழுதிக் கொண்டிருக்கையில் கிடைத்த பல விவரங்களும் அந்நூலில் சேர்க்க இயலாதவையாய் இருந்தன. அதே போல நீரும் நிலமும் என்ற நூலை இப்போது நான் எழுத முயற்சித்துக் கொண்டிருக்கும் போதும் பல விவரங்கள் எனக்குக் கிடைத்தன. சுனாமியின் போதும், பிறகும் நான் பல கரையோர இடங்களுக்குச் சென்று பார்வையிட நேர்ந்தது. முக்கியமாக, மாமல்லபுரத்துக் கண்டு பிடிப்புக்கள், சுனாமியின் பின்பு இயற்கையால் வெளிக்கொணரப்பட்டவை மூலமும் இந்த மாநகரின் பல முகங்களையும் காண முடிந்தது. ஆகையால் இந்த நூல் எழுத வேண்டிய அவசியமும் அவசரமும் என்னுள் விசுவரூபமாகப் பரிணமித்தன'' என்று தன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் நரசய்யா.

மதராசப்பட்டினத்தின் தொன்மையால் மிகவும் கவரப்பட்டு இருக்கிறார் நரசய்யா. போர்ச்சுகீசிய நாட்டு அரசிளங்குமரியான இன்பெண்டா கேதரைன் இரண்டாம் சார்லûஸ மணந்தபோது சீதனமாக பம்பாய் கொடுக்கப்பட்டதற்கு முன்னரே, 1630ல் பிறந்த ஜாப் சார்னாக், கிழக்கிந்தியக் கம்பெனியில் ஒரு கீழ்நிலை வணிகனாக கம்பெனியின் காஸிம் பஜார் தொழிலகத்தில் 1658ல் சேர்ந்து கல்கத்தாவை, ஒரு ராஜதானி நகரமாக அமைக்க அஸ்திவாரம் போடுவதற்கு முன்னரே இந்த மதராசபட்டினம் உருவானது. எனவே இந்த மூன்று ராஜதானி பட்டினங்களில் மதராசபட்டினம் காலத்தால் முதன்மையானது என்கிறார் நரசய்யா.

மதராசபட்டினம், 1600-1947 வரையிலான சென்னையின் சரித்திரத்தை மிகவும் தெளிவாகவும் எளிதாகவும் வார்த்தைச் சித்திரங்களால் வரைந்து செல்கிறது. சென்னைப் பட்டினத்தின் துவக்க கால வரலாறு கோரமண்டலக்கரை (சாந்தோமின் பிறப்பும் வளர்ச்சியும்) யில் இருந்து துவங்குகிறது. மதராசபட்டினத்தில் ஆங்கிலேயர் வருகை, கோட்டை சீரமைப்பு, அது தொடர்பான சில சம்பவங்கள், நீதிமுறைகள், துபாஷிகள், போக்குவரத்து, தொலைபேசி, பேருந்து, ரயில் மார்க்கம், ஆகாய விமானம், சென்னைப் பட்டினத்தின் பஞ்சங்கள் போன்றவைகளைத் தொட்டு விரிவாகத் தொடர்கிறது. நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் நரசய்யாவின் கடுமையான உழைப்பு பிரத்யட்சமாகத் தெரிகிறது. மதராஸ் பல்கலைக்கழகம், தமிழில் அச்சுக்கலை தோன்றியது, மதமாற்ற முயற்சிகள், அன்றைய பத்திரிகைகள், முதல் நகராண்மை, சுங்கவரி முறைகள் போன்ற நுணுக்கமான விஷயங்களை மிகவும் எளிமையாக சொல்லி அத்தியாயங்கள் விரிகின்றன.

மொத்தத்தில் ஒரு தெளிவான சரித்திரத்தை, சென்னைப் பட்டினத்தை நேசிப்பவர்களை மிகவும் மகிழ்ச்சியுறச் செய்யும் நூல் இது.

கடல் வணிகம் போலவே மிகவும் நேர்த்தியாக அழகுணர்வுடன் கட்டமைக்கப் பட்டிருக்கும் இந்த நூலில் ஒரே ஒரு சிறிய குறையை, - குறை என்று ஏன் சொல்ல வேண்டும்? ஒரு சிறிய நெருடல் என்று சொல்லிக் கொள்ளலாம். இவ்வளவு அற்புதமான தகவல்களைக் கொண்டு கண்ணுக்கு மிகவும் இதமாக அச்சிடப்பட்டிருக்கும் இந்த நூலின் வடிவம் - படிக்கும் போது மிகவும் அசௌகர்யமாக உணர வைக்கிறது. லகுவாகப் படிக்க ஏதுவாக அது இல்லை. மிகப்பெரிய அளவில் படங்கள் அல்லது ஓவியங்கள் கொண்ட நூல் என்றால் இந்தப் பரந்த அளவு சரிதான். ஆனால், சுவாரசியத்தைக் கூட்டும் அளவுக்கு சரித்திரச் சான்றுகளுடன் படிப்பவர்களின் கைகளைப் பிடித்து இட்டுச் செல்லும் இந்த நூலின் அளவு கையில் ஏந்திப் படிக்க மிகவும் அசௌகர்யமாக உள்ளது. பல பதிப்புக்கள் காண வேண்டிய நூல் இது. அடுத்த பதிப்புக்களில் இந்த அசௌகர்யத்தை பதிப்பாளர்கள் சரி செய்ய வேண்டும்.

ஆனால் கஷ்டப்பட்டாவது இந்த நூலைப் படித்து விடுங்கள். சென்னையைப் பற்றிய மிக அரிதான தகவல்களை உங்கள் விரல் நுனிகளில் வைத்திருப்பீர்கள் நீங்கள்.


பதிப்பாளர் முகவரி:

பழனியப்பா பிரதர்ஸ்"

கோனார் மாளிகை'

25, பீட்டர்ஸ் சாலை, சென்னைþ600 014.விலை: ரூ.275/-

No comments:

Post a Comment