Saturday, December 14, 2013

இதுவும் என் விருப்பே...

பாலியல் தேர்வில் நான் Straight என்பதை இப்போது தயக்கத்துடன் கூறக்கூடிய காலகட்டத்தில் நிற்கிறோமோ என்கிற சந்தேகம் சற்று எழத்துவங்கியிருக்கிறது. இதுவரை ஓரினச்சேர்க்கை குறித்த அனுபவம் ஏதுமில்லை. 55 வயதுக்குப் பிறகு இதற்கு அவசியமும் இருக்காது என்று நினைக்கிறேன். நினைவு தெரிந்து என் சிறுவயதில் - சுமார் 10 அல்லது 12 வயது இருக்கும். வீட்டுக்கு அருகில் ஒருவன் சர்க்கஸ் நோட்டீஸ் கொடுப்பதாக ஒரு பாழடைந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று என்னுடைய டவுசரைக் கழற்ற முயற்சித்த போது அவனுடைய கால் மீது பெரிய கல் ஒன்றைத் தூக்கிப் போட்டு வீட்டுக்குத் தலைதெறிக்க ஓடிய ஞாபகம் எப்போதாவது இதுகுறித்து பேசும்போது வரும். மற்றபடி ஓரினச்சேர்க்கை என்பது என்னுடைய தேர்வும் இல்லை. விருப்பமும் இல்லை. பெண்களுடனான கலவியில்தான் எனக்கு எப்போதும் பெருவிருப்பம். இதுவும் என்னுடைய சுதந்திரம்தான் என்று உறுதியாக நம்புகிறேன்.

ஓரினச் சேர்க்கை அல்லது வேறெதுவும் தனிமனித விருப்பம் அல்லது தேர்வு சார்ந்தது என்று நினைக்கிறேன். இது முற்றிலும் அந்தரங்கம் சார்ந்தது என்றும் நினைக்கிறேன். போனவாரம் உச்சநீதிமன்றம் பிரிவு 377 குறித்த தீர்ப்பை வழங்கியதும் இத்தனை நாட்கள் அடங்கியிருந்த பேச்சு குபீரென்று மீண்டும் கிளம்பியது. சில தொலைக்காட்சிகளில் (நான் இந்தியை சொல்றேனப்பா) ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் சிறுவர் சிறுமிகளுடன் அவர்களுடைய பெற்றோர்களும் கூட உட்கார்ந்து நாளையில் இருந்து என் பையன் என்ன செய்வான் என்பது போன்ற மிக முக்கியமான கவலையில் ஆழ்ந்ததும் சிங்வி சாஹிப்புக்கு கொடுரமான சாபங்கள் கொடுத்ததும் பார்ப்பதற்கு ஒரு மாதிரி இருந்தது.

இதுபற்றி சாங்கோபாங்கமாக ஏதாவது எழுத முயற்சிக்கலாமா என்றிருந்தேன். ஆனால் நான் எழுதி என்ன ஆகப்போகிறது? சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் போன்ற தேசபக்தர்கள் இதுகுறித்து தங்களின் தெளிவான கருத்தைக் கூறியிருக்கும்போது என்னைப் போன்றவர்கள் எல்லாம் சொல்லி என்ன ஆகப்போகிறது என்று எனக்கு நானே ஆறுதல் கூறிக் கொண்டு அமைதியைக் கடைப்பிடிக்க முயற்சிக்கிறேன்.