அன்புடன்
Saturday, December 12, 2009
அன்புடன்
Thursday, December 10, 2009
செல்வராஜன் கடிதம்
அன்பு நண்பர்களுக்கு
வணக்கம்.
இன்று என்னுடைய நண்பர் செல்வராஜன் தமிழ்ப் பள்ளிகள் குறித்து அக்கறை பொதிந்த ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார். அவருக்கு என் நனறி.
செல்வராஜன் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர். கானுயிர்கள் மீது அளப்பரிய அக்கறை கொண்டவர். தமிழகத்தில் வங்கி அதிகாரியாகப பணியாற்றியபோது நிறைய தொண்டு புரிந்து இருக்கிறார். டெல்லியில் கிரின் சர்க்கிள் என்ற சுற்றுச்சூழல் அமைப்பை ஏற்படுத்தி நிறைய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்திருக்கிறார். அவருடைய அமைப்புக்காக ஜனக்புரி தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு வீதி நாடகப் ப்யிற்சி அளித்தேன். மாணவர்கள் தயாரித்த இரு நாடகங்களை மேற்கு டெல்லி கிராமங்களிலும் திஹார் சிறையிலும் நடத்தினோம். நண்பர்கள் ஒத்துழைப்பு அதிகம் கிடைக்காததால் கிரீன் சர்க்கிள் இப்போது சற்று ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறது.
செல்வராஜன் சொல்லி இருக்கும் பல விஷயங்கள் நம்முடைய கவனிப்பை ஈர்க்கும் தன்மை கொண்டவை. அவருடைய இந்தக் கடிதம் சுமந்திருக்கும் செய்திகள் பல.
தமிழ்ப் பள்ளிகளின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் தீவிரமாக யோசிக்க வேண்டிய விஷயங்களை சர்வ சாதாரணமாக சொல்லியிருக்கிறார் செல்வராஜன். அவருக்கு என்னுடைய நன்றி.
அன்புடன்
ராகவன் தம்பி
செல்வராஜன் கடிதத்தைப் படிக்க...
http://www.vadakkuvaasal.com/
Tuesday, November 3, 2009
டெல்லித் தமிழ்ப் பள்ளிகளின் (பரிதாபக்) கட்டமைப்பு
தில்லித் தமிழ்க் கல்விக் கழகம் நடத்தும் தமிழ்ப் பள்ளிகளின் நிர்வாகக் குழுவுக்கான தேர்தல்களை அறிவிக்க வாய்ப்புக்கள் இருப்பதால் அந்தப் பள்ளிகளின் நிர்வாகம் பற்றி அதிகம் எழுத வேண்டாம் என்று நினைத்து இருந்தேன். அதை என்னுடைய அறிவிப்பிலும் வெளியிட்டு இருந்தேன்.
ஆனால் பலரும் தொலைபேசியிலும் நேரிலும் அப்படி எல்லாம் விட்டு விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். தேர்தலும் விரைவில் வரும் என்று தோன்றவில்லை. தேர்தலைத் தள்ளிப் போடுவதற்கான காரணங்கள் தயாராகி வருகின்றன என்று கேள்விப்பட்டேன்.
இதில் ஆச்சரியப்டுவதற்கு எதுவும் இல்லை. இப்படி எல்லாம் இல்லை என்றால்தான் சற்று அதிர்ச்சியாக இருக்கும்.
மேலும் அந்தப் பள்ளிகள் தொடர்பான பொதுநல வழக்கு ஒன்றை வடக்கு வாசல் இதழின் சார்பில் விரைவில் தொடுப்பதற்கு ஏற்பாடு செய்து வருகிறேன். டெல்லி மாநில அரசின் கல்வித்துறைக்கு எதிராக இந்த வழக்கைத் தொடுக்க ஆயத்தம் செய்து வருகிறேன். அதற்குத் தேவையான தகவல்களையும் திரட்டத் துவங்கி இருக்கிறேன். நிறையத் தகவல்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
அதற்கு நடுவில் ஓரிரண்டு கடிதங்களும் என்னிடம் வந்திருக்கின்றன. அவற்றையும் நேரம் வரும்போது இந்தப் பக்கத்தில் வெளியிடலாம் என்று இருக்கிறேன்.
தேர்தல் நடத்துவதாக இருக்கும் இந்த நேரத்தில் சில பள்ளிகளில் ஆண்டு விழாக்களை நடத்தியிக்கிறார்கள். இந்த ஆண்டு விழாக்கள் கண்டிப்பாகக் குழந்தைகளுக்காகவோ ஆசிரியர்களுக்காகவோ கொண்டாடப் பட்டதாகத் தெரியவில்லை. ஒரு சில அரசியல் லாப நோக்கங்கள் கருதி இந்த ஆண்டு விழாக்கள் கொண்டாடப் பட்டதாகத்தான் இந்தப் பள்ளிகளின் நிர்வாகக் குழுவில் இருக்கும் சில உறுப்பினர்களே சொல்கிறார்கள். இந்தப் பள்ளியின் ஆண்டுவிழாக்களி்ல் இந்தப் பள்ளிகள் திறம்பட நடத்தப்படுகின்றன என்று மேடையில் முழங்கிய செயல்வீரர்கள் தங்கள் குழந்தகளை இந்தப் பள்ளியி்யில் படிக்க வைக்கலாமே.
தங்கள் பிள்ளைகளை வசதி மிகுந்த கான்வெண்ட் பள்ளிகளில் படிக்க வைத்து மற்றவர்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் அரசியல் விளையாட்டுக்கள் விளையாடுவதில் உள்ள சுகமே தனி இல்லையா? சரி. இப்போதைக்கு அவர்களை சற்று மறந்து விடுவோம்.
பள்ளிகளின் முதல்வர்கள் பாவம் அவர்கள் எல்லாவற்றுக்கும் தலையாட்டும் பொம்மைகளாக இருந்து தொலைக்க வேண்டி இருக்கிறது. இல்லையென்றால் இப்போது ஓய்வு பெற்ற சில முதல்வர்கள் நேர்கொள்ளும் சிறுமைகளை இவர்களும் எதிர்கொள்ள நேரிடும் என்பதால் இவர்கள் மேற்கொள்ளும் மௌனத்தை ஒருவகையில் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் சில நேரங்களில் மனது வெறுத்துப் போகிறது.
இதை எப்படி எழுதுவது என்று தவித்துக் கொண்டு இருந்தேன். சரியான வார்த்தைகள் கிடைக்க வில்லை.
இது இப்படி இருக்க நேற்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். டெல்லியின் தமிழ்ப் பள்ளிகளின் தற்போதைய கட்டமைப்பு என்ன என்று உனக்குத் தெரியுமா என்று கேட்டார்.
கட்டமைப்பு என்றால்?
Constitution என்று சொல்லிக் கொள்ளலாமா?
அந்த நண்பர் ஆங்கிலத்தில் சொன்னதை உங்கள் முன்பு அப்படியே சமர்ப்பிக்கிறேன்.
CONSTITUTION OF DTEA
RUTHLESS ADMINISTRATION
SPINELESS PRINCIPALS
HELPLESS TEACHERS
IRRESPONSIBLE PARENTS
PATHETIC CHILDREN
இன்னும் தொடரும்...
இந்தக் கட்டுரைக்கான எதிர்வினைகளை raghavanthambi@gmail.com என்னும் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.
Thursday, October 15, 2009
ஒரு அறிவிப்பு
கடந்த ஓரிரு மாதங்களாக இந்தப் பக்கத்தில் தொடர்ச்சியாக எதையும் நான் எழுதவில்லை.
(அய்யோ... எத்தனை பிரகாசம் மற்றும் மகிழ்ச்சி உங்கள் முகங்களில்!)
இதற்கான முக்கியமான காரணம் ஒன்று இருந்தது.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தலைநகரில் ஏழு தமிழ்ப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அந்தப் பள்ளிகளின் மேலாண்மை மற்றும் செயல்பாடுகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை எற்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் ஒரு அறிவிப்பினை வடக்கு வாசல் இதழிலும் இணையதளத்திலும் வெளியிட்டு இருந்தோம்.
இதற்கான முக்கியமான காரணம் - பொது இடங்களுக்கு ஏதாவது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போதெல்லாம் யாராவது இந்தப் பள்ளிகளின் நிலை பற்றிய தன் கவலைகளையும் வருத்தங்களையும் ஆதங்கங்களையும் சொல்லிப் புலம்புவார்கள்.
சில தனிமனிதர்களின் சுயநலக் கூடாரம் போல இந்தப் பள்ளிகள் இயங்கத் துவங்கிவிட்டன என்று முறையிட்டனர் பலர்.
இந்தப் பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் ஏதோ ஒருவகையில் ஒரு சோகக் கதையை சுமந்து கொண்டிருப்பதாகத் தலைநகரில் பரவலாகப் பேசிக் கொண்டார்கள்.
பலவகைகளில் நேர்கொண்ட சிறுமைகள் தாங்காது விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டு இப்பள்ளிகள் இருக்கும் திசை நோக்கிக் கும்பிடு போட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடிப் போன ஆசிரியர்களின் கதைகள் தலைநகரில் உலவி வருகின்றன.
அதே போல பணியில் இருந்தும் பலவகைகளில் பழிவாங்கப்பட்டு சிறுமைகளைத் தாங்கி பணிபுரிந்து வரும் பல ஆசிரியர்களின் சோகக் கதைகளும் இங்கு உண்டு.தங்கள் பிள்ளைகளை நல்ல வசதியான கான்வெண்ட் பள்ளிகளில் சேர்த்து விட்டு இந்தத் தமிழ்ப் பள்ளிகளின் வழியாக தங்களின் அரசியல் சுயலாபங்களைக் கணக்கிட்டு காய் நகர்த்திக் கொண்டு வரும் செயல்வீரர்கள் பற்றிய விமர்சனமும் தலைநகரில் பரவலாக உள்ளன.
ஆனால் இவை எல்லாமே நடப்பு யதார்த்தத்தின் அடிப்படையில் சீற்றம் ஏதும் கொள்ளாது சிறு முணுமுணுப்புகளாக மட்டுமே தலைநகர் தமிழர்களிடையே உலவி வந்தன. இந்தப் பிரச்னையை ஒரு இதழியல் அறத்தின் வெளிப்பாடாக எடுத்துக் கொண்டு வடக்கு வாசல் இதழிலும் வடக்கு வாசல் இணையதளத்திலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டோம். தமிழ்ப் பள்ளிகளின் மேலாண்மை குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் கருத்துக்களைப் பதிவு செய்ய ஒரு வாய்ப்பு அளித்தோம்.
யாருக்காவது தங்களுடைய பெயர்களை ரகசியமாக வைத்துக் கொள்ள விருப்பம் இருந்தால் அதையும் அனுமதித்தோம். பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படையில் அவர்களுடைய பெயர்கள் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தோம்.
ஆனால் எதிர்வினைகள் அனுப்பிய பலரும் தங்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்களுடன் தங்களுடைய கருத்துக்களை எங்களுக்கு அனுப்பினார்கள்.
ஒரு சிலர் அனுப்பி விட்டு முதலில் தங்கள் பெயர் வெளியிட வேண்டாம் என்றார்கள். நாங்கள் காத்திருந்தோம். ஒரிரு நாட்களுக்குப் பிறகு தங்கள் கடிதத்தை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கு மதிப்பளித்து நாங்கள் அவர்கள் கடிதங்களை வெளியிடவில்லை.
ஒரு சிலர் மிகவும் தைரியமாக கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். அவற்றில் பல குற்றச்சாட்டுக்களை மிகவும் தைரியமாக அடுக்கியிருக்கிறார்கள். மிகவும் உணர்ச்சி வசப்பட்டு நிறைய எழுதியிருக்கிறார்கள். வெளியிட்டு இருந்தால் பெரிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கும். ஆனால் இதழியல் அறத்தின் அடிப்படையில் கடிதம் எழுதியவர்களின் எதிர்கால நலனைக் கருதி அந்தக் கடிதங்களை நாங்கள் வெளியிடவில்லை.
தற்போது தமிழ்ப் பள்ளிகளின் செயற்குழுவின் பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்து விட்டது. தேர்தல் நடத்தச் சொல்லி நீதிமன்றம் அறிவுறுத்தியதாக செய்தி கிட்டியிருக்கிறது. தேர்தலுக்குத் தயாராகி வருகின்றது பள்ளி நிர்வாகம் என்று கேள்விப்பட்டோம்.
இந்நிலையில் தேர்தல் முடிவடையும் வரை தமிழ்ப் பள்ளிகளின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் பற்றி வடக்கு வாசல் இதழிலோ இணைய தளத்திலோ வெளியிடுவது சரியான காரியமாக இருக்காது என்று நினைக்கிறேன்.
பள்ளியின் தற்போதையை நிர்வாகக் குழு பற்றிய என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களும் எதிர்வரும் தேர்தலில் என்னுடைய ஆதரவு யாருக்கு என்பதையும் என்னுடைய தனிப்பட்ட சுதந்திரமாக வைத்துக் கொள்கிறேன்.
பெற்றோர்களே ஒரு சரியான முடிவெடுத்து நேர்மையான மற்றும் செயல்திறனுள்ள ஒரு நிர்வாகத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அரசியல் மற்றும் ஜாதி ரீதியான காரணங்கள் தேர்தலை முடிவு செய்யும் களங்களாக அமையால் பெற்றேர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதற்கான ஜனநாயக ரீதியான செயல்முறைகள் மற்றும் தர்மத்தின் அடிப்படையிலான செயல்பாடுகளை தற்போதைய நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.பள்ளிக்கான தேர்தல் பணிகள் துவங்கி விட்டதாகத் தெரிகிறது.
எனவே தலைநகரில் தமிழ்ப் பள்ளிகள் பற்றிய பதிவுகளை இந்தப் பக்கத்தில் வெளியிடுவதை இத்துடன் தற்போதைக்கு நிறுத்தி வைக்கிறோம்.
பல நண்பர்கள் தனிப்பட்ட வகையில் இந்தப் பக்கங்களில் புதிதாக எதையும் எழுதாதது குறித்து தங்களுடைய ஆதங்கத்தை தொலைபேசியிலும் மின்னஞ்சல்கள் வழியாகவும் பகிர்ந்து கொண்டார்கள்.
பல நூல் மதிப்புரைகளும் திரைப்பட விமர்சனங்களும் எழுத வேண்டி இருக்கிறது.
இன்னும் ஓரிரு நாட்களில் வழக்கமான ராகவன் தம்பி பக்கங்கள் பழையபடி தொடரும்.விதி யாரை விட்டது?
ராகவன் தம்பி
Tuesday, July 28, 2009
தலைநகரில் தமிழ்ப் பள்ளிகள் - ஒரு கலந்துரையாடல்
அறிவிப்பு
வடக்கு வாசல் இசைவிழா குறித்த கட்டுரை
http://vadakkuvaasal.com/thalaivaasal.php
என்னும் இணைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
http://www.vadakkuvaasal.com/
இணைப்பில் வடக்கு வாசல் ஜூலை மாத இதழ் வாசிக்கக் கிடைக்கும்.
ராகவன் தம்பி பக்கங்கள்...
தலைநகரில் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தில்லித் தமிழ்க் கல்விக் கழகம் ஏழு தமிழ்ப் பள்ளிகளை நடத்தி வருகின்றது. தலைநகர் தமிழர்களின் பெருமையைப் பல்லாண்டுகளாகப் பறைசாற்றி வருபவை இப்பள்ளிகள். இப்பள்ளிகள் பல மேதைளையும் கலைஞர்களையும் இந்த சமூகத்துக்கு அளித்துள்ளன.
இந்தத் தமிழ்ப் பள்ளிகளின் மேலாண்மை, செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்தல் குறித்த உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வரவேற்கிறோம். உங்கள் பாராட்டுக்கள், ஆலோசனைகள், முறையீடுகள் போன்றவற்றை எங்களுக்கு கடிதம், தொலைநகல், மின்னஞ்சல் வழியாக அனுப்பலாம்.
சரியான பெயர், முழுமையான முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்ட கடிதங்கள் மற்றும் கட்டுரைகள் மட்டுமே வடக்கு வாசல் இதழிலும் இணையத்திலும் வெளியிடப்படும்.
நம் குழந்தைகளின் கல்வி மற்றும் பள்ளிகளின் மேம்பாட்டில் அக்கறை கொண்ட அனைவரும் இந்த விவாதத்திலும் ஆலோசனையிலும் கலந்து கொள்ளலாம். தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தில் பயின்ற மாணவ மாணவியர் இப்போது உலகின் பல இடங்களிலும் மிக நல்ல பதவிகளில் இருக்கிறார்கள். அவர்களும் இந்த விவாதம் மற்றும் ஆலோசனையில் இணையம் வழியாகவோ நேரிடையாகவோ கலந்து கொள்ளலாம்.
வடக்கு வாசல் இதழ் மற்றும் வடக்கு வாசல் இணையதளத்தில் கடிதங்கள், கட்டுரைகள் மற்றும் ஆலோசனைகளை வெளியிடுவோம். கடிதம் அல்லது கட்டுரை எழுதியவர்கள் விருப்பப்பட்டால் பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படையில் அவர்களுடைய பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளில் வடக்கு வாசல் இதழின் குறுக்கீடு எதுவும் இருக்காது.
உங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கிறோம்.
ஆசிரியர்
வடக்கு வாசல்
5A/11032, Second பலூர்
Gali No.9, Sat நகர்
Karol Bagh, New Delhi-110 005.
தொலைபேசி/தொலைநகல் - 011/ 25815476
எதிர்வினை
Dr. ரகோத்தமன் யனமல்லி (Ph.D)
Iowa, உச
மின்னஞ்சல் - ragothaman@gmail.கம
தலைநகரில் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தில்லித் தமிழ்க் கல்விக் கழகம் ஏழு தமிழ்ப் பள்ளிகளை நடத்தி வருகின்றது என்பது ஒரு பெருமைக்குரிய விஷயம். நான் "DTEA" லோதி எஸ்டேட் பள்ளியில் இரண்டு ஆண்டுகள் படித்தேன். படித்தது என்னவோ இரண்டு ஆண்டுகள் தான், என்றாலும் இன்றும் மறக்கமுடியாத நாட்கள். தமிழ் கலச்சாரத்தை மற்றும் மொழியை பேணி காப்பதே தன் முதற்கண் கடமை என்று தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் நோக்கம் என்னவோ சரி தான், ஆனால் அந்த நோக்கம் சற்றே பாதம் தவறி இருகிறது . 1987ல் பள்ளியில் இடம் கிடைப்பது மிகு கடினம், எனது தந்தை இருநூறு ருபாய் நன்கொடை கொடுத்து லோதி எஸ்டேட் பள்ளியில், என்னையும் , எனது அண்ணனையும் சேர்த்தார். பணம் பெரிதல்ல, படிப்பு பெரிது என்ற நோக்கம் என் தந்தைக்கு. எல்லா தில்லித் தமிழ்க் கல்விக் கழக பள்ளிகளில் படிப்பின் தரம் மிக உயர்ந்ததாக இருந்தது. பிற மாநில பெற்றோர்கள் கூட தங்கள் பிள்ளைகளுக்கு இந்த பள்ளியில் இடம் கிடைக்குமா என்று இருந்த காலம் இப்பொழுது உல்டா ஆகி விட்டது. தில்லித் தமிழ்க் கல்விக் கழகம் பள்ளி மாணவன்/மாணவி என்றாலே கிழ்தரம் ஆகி விட்டது, இன்றைய நிலைமை. இதற்கு யார் காரணம் என்று பார்த்தால் பதில் கிடைக்காது. பத்தாம் வகுப்பு மாணவன்/மாணவி DPS போன்ற பள்ளியில் seat கிடைக்கவில்லை என்றால் தில்லித் தமிழ்க் கல்விக் கழகம் நடத்தும் பள்ளிகளில் seat வாங்க அவமானமாக கருதுகிறார்கள். நான் எல்லா மாணவர்களை தவறாக சொல்லவில்லை. பெற்றோரும் தனது பிள்ளை நல்ல மார்க் வாங்கினால் தான் உண்டு என்று இருக்கும் பட்சதில், தமிழ் கலாசாரம் மற்றும் மொழியை பற்றி யார் கவலைபடப் போகிறார்கள்? இது ஒரு இரவில் மாறவில்லை, மெல்ல மெல்ல standard குறைய பல வருடங்களுக்கு பின் இந்த நிலைமையை பார்க்கிறோம். ஆனாலும் இது ஒன்றும் மோசம் இல்லை. இது நிச்சயமாக மாற்றலாம். தமிழ் பேசும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தில்லித் தமிழ்க் கல்விக் கழகம் பள்ளிகளில் சேர்க்க தயங்கக்கூடாது. என் தந்தை ஒன்று கூறுவார், படிக்குற பையன் எங்கு வேன்டுமானாலும் படிப்பான். இது இக்காலத்து மாணவர்களுக்குப் புரிய வேண்டும். பள்ளியின் பெயர் அவசியம் இல்லை, படிப்பு தான் அவசியம். இதற்கு பெற்றோரின் பங்கும் தேவை. நமது கலாச்சாரத்தை பேணிக் காக்கப் போவது வரும் தலைமுறை தான். ஒரு நல்ல counselling session வடக்கு வாசல் தலைமையில் மாணவர் மற்றும் பெற்றோர்களும் சேர்ந்து நடத்தினால் என்ன?
Dr. ரகோத்தமன் யனமல்லி (Ph.D) 1032, Crop Genome Informatics Laboratory,Department of Genetics, Development and Cell Biology,Iowa State University,Ames,Iowa 50011-3260USA.
Sunday, June 28, 2009
கிழக்கில் உதயமாகும் வன்முறை
ராகவன் தம்பி
9910031958
Monday, June 15, 2009
கருப்பி - கொலைக்குப் பின்தான் நீதியா
இன்று வடக்கு வாசல் இணையதளத்தில் கருப்பி - கொலைக்குப் பின்தான் நீதியா கட்டுரையை எழுதியிருக்கிறேன். சனிமூலை வலைப்பூவில் எழுதி வந்த கட்டுரைகளை இப்போது வடக்கு வாசல் இணையதளத்தில் எழுதத் துவங்கி விட்டேன்.எங்கள் இணையதளத்துக்கு வருகை தந்து என்னுடைய கட்டுரையை வாசித்து raghaavanthambi@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு உங்கள் மேலான கருத்துக்களை எழுதுங்கள்.உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் வேண்டும்.
மிக்க அன்புடன்
ராகவன் தம்பி
புது டெல்லி
9910031958
Saturday, June 13, 2009
சொல்வனம் - தமிழ் இணைய இதழ் உலகில் ஒரு புதிய வரவு
மிக்க அன்புடன்
Sunday, May 31, 2009
பட்டாபிஷேகங்கள் - நம்பிக்கைகள்
இன்று வடக்கு வாசல் இணையதளத்தில் பட்டாபிஷேகங்கள் - நம்பிக்கைகள்
என்னும் கட்டுரையை எழுதியிருக்கிறேன்.
சனிமூலை வலைப்பூவில் எழுதி வந்த கட்டுரைகளை இப்போது வடக்கு வாசல் இணையதளத்தில் எழுதத் துவங்கி விட்டேன்.
எங்கள் இணையதளத்துக்கு வருகை தந்து என்னுடைய கட்டுரையை வாசித்து raghaavanthambi@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு உங்கள் மேலான கருத்துக்களை எழுதுங்கள்.
உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் வேண்டும்.
மிக்க அன்புடன்
ராகவன் தம்பி
புது டெல்லி
9910031958
Saturday, May 23, 2009
ஊடலும் கூடலும்
எங்கள் இணையதளத்துக்கு வருகை தந்து என்னுடைய கட்டுரையை வாசித்து raghaavanthambi@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு உங்கள் மேலான கருத்துக்களை எழுதுங்கள்.
உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் வேண்டும்.
மிக்க அன்புடன்
ராகவன் தம்பி
Friday, May 22, 2009
விடுபடாத மரணப்புதிரும் அப்பாவித் தமிழர்களின் மறுவாழ்வும்
அந்த வரிசையில் நேற்று (21 மே 2009)
விடுபடாத மரணப்புதிரும் அப்பாவித் தமிழர்களின் மறுவாழ்வும்
என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறேன்.
எங்கள் வலைத்தளத்துக்கு உங்கள் மேலான வருகையை எதிர்நோக்குகிறேன்.
மிக்க அன்புடன்
ராகவன் தம்பி
புது டெல்லி
22 மே 2009
raghavanthambi@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியில் என்னை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
என்னுடைய அலைபேசி 09910031958.
Monday, May 11, 2009
ஒரு வேண்டுகோள்
கடந்த இரு வாரங்களாக எங்கள் இணையதளம் http://www.vadakkuvaasal.com/ பக்கங்களில் என்னுடைய பதிவுகளை பதிவேற்றம் செய்யத் தொடங்கி இருக்கிறேன். உங்கள் வருகையை அங்கே ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
பாதுகாபட்டாபிஷேகம் - சில ஆலோசனைகள் என்னும் தலைப்பில் காலணி வீசும் கலாச்சாரம் பற்றிய ஒரு பதிவினை எழுதி இருக்கிறேன்.
தயவு செய்து http://www.vadakkuvaasal.com/ வலைத் தளத்துக்கு வருகை தந்து உங்கள் மேலான கருத்துக்களை www.raghavanthambi@gmail என்னும் மின்மடலுக்கு அனுப்புங்கள்.
உங்கள் ஆதரவும் அன்பும் என்றும் வேண்டும்.
ராகவன் தம்பி
Wednesday, May 6, 2009
ராகவன் தம்பி பக்கங்கள்
கடந்த ஒரு வாரமாக எங்கள் இணைய தளம் http://www.vadakkuvaasal.com பக்கங்களில் என்னுடைய பதிவுகளை பதிவேற்றம் செய்யத் தொடங்கி இருக்கிறேன்.
உங்கள் வருகையை அங்கே ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
நாளை டெல்லியில் நடக்கப் போகும் தேர்தல் பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.
படித்து விட்டு உங்கள் மேலான கருத்துக்களை raghavanthambi@gmail.com என்னும் மின்மடலுக்கு அனுப்புங்கள்.
உங்கள் ஆதரவு என்றும் வேண்டும்
ராகவன் தம்பி
06 மே 2009
Friday, May 1, 2009
வடக்கு வாசல் இணையதளத்தில் இனி ராகவன் தம்பி பக்கங்கள்
வணக்கம்.
இந்த சனிமூலை வலைப்பூவில் இதுவரை நான் பதிவேற்றம் செய்து வந்த கட்டுரைகள் இனி வடக்கு வாசல் இணையதளத்தில் (http://www.vadakkuvaasal.com) மேளதாங்களுடன் இனிதே தொடரும்.
இந்த http://www.sanimoolai.blogspot.com வலைப்பூவில் பல சமயங்களில் மாதக்கணக்கில் நான் மௌனமாக இருந்தது உண்டு. தொடர்ச்சியாக எழுதாததினால் நிறைய வாசகர்களை இழக்க நேரிட்டது. ஆனாலும் எப்போதாவது எதையாவது எழுதும்போது நண்பர்களுக்கு மின்னஞ்சல் வழியாக தகவல் அனுப்பி வதைத்து வந்தேன்.
இனி சனிமூலை வலைப்பூவில் எழுதப் போவதை ஒரு நாள் விட்டு (என்ன நடந்தாலும்) வடக்கு வாசல் இணையதளத்தில் (http://www.vadakkuvaasal.com) தொடர்ச்சியாக எழுதுவது என்று தீர்மானித்து இருக்கிறேன். நிகழ்ச்சிகள், செய்தி விமர்சனங்கள், மதிப்புரைகள் என என்னுடைய மனப்பதிவுகளை வடக்கு வாசல் இணையதளத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள் தொடரும் எண்ணம் இருக்கிறது. பார்ப்போம். எதுவரை போகிறது என்று.
இனி வடக்கு வாசல் இணைய தளத்தில் (http://www.vadakkuvaasal.com) மாத இறுதியில் அந்தந்த மாதத்தின் வடக்கு வாசல் மாத இதழை பதிவேற்றம் செய்வோம். அந்த வலைத்தளத்தில் விட்டு ஒருநாள் நான் எழுதும் பதிவுகள் ராகவன் தம்பி பக்கங்கள் என்ற பெயரில் இனி தொடர்ச்சியாக வெளிவரும்.
இது தவிர தலைவாசல் என்னும் பகுதியில் உலகெங்கும் நடக்கும் கலை நிகழ்ச்சிகள், நூல் வெளியீட்டு விழாக்கள், திரைப்பட விழாக்கள், புத்தக விழாக்கள் போன்ற நிகழ்வுகள் குறித்த பதிவுகளை புகைப்படங்களுடன் எங்களுக்கு அனுப்பி வைத்தால் மிக்க மகிழ்ச்சியுடன் அவற்றை வடக்கு வாசல் இணையதளத்தின் தலைவாசல் பகுதியில் பதிவேற்றம் செய்வோம். ஒவ்வொரு வாரமும் இந்தப் பகுதி புதுப்பிக்கப்படும். இரண்டு மாதங்களுக்கு இவற்றை எங்கள் ஆவணப்பகுதியில் வைத்திருப்பாம்.
எனவே நண்பர்களுக்கு இங்கே இரு வேண்டுகோள்களை சமர்ப்பிக்கின்றேன்.
ஒன்று, வடக்கு வாசல் இணைய தளத்துக்கு நீங்கள் வருகை புரிந்தால் என்னுடைய பதிவுகளை ராகவன் தம்பி பக்கங்கள் என்னும் பெயரில் அங்கே தினமும் வாசிக்கலாம்.
இரண்டு, உங்கள் தொடர்பான நிகழ்வுகள் குறித்த பதிவுகளை புகைப்படங்களுடன் அனுப்பி வைத்தால் நாங்கள் தலைவாசல் பகுதியில் வெளியிட்டு அதனைப் பல நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கிறோம். எனவே உங்கள் தொடர்பான நிகழ்வுகள் குறித்து vadakkuvaasal@gmail.com என்னும் முகவரிக்கு மின்மடல் வழியாகவோ, அஞ்சல் வழியாவோ தொலைநகல் எண் 011/25815476 வழியாகவோ அனுப்பி வையுங்கள்.
இனி நாளை முதல் http://www.vadakkuvaasal.com வலைத்தளத்தில் சந்திப்போம்.
கண்டிப்பாக வாருங்கள்.
ஓரிரு முறை மின்மடல் வழியாகவும் உங்களுக்குத் தகவல் அனுப்புகிறேன். தயவு செய்து கோபப்படாதீர்கள்.
உங்கள் அன்பும் ஆதரவும் ஒத்துழைப்பும் ஊக்கமும் என்றும் எனக்கு வேண்டும்.
மிக்க அன்புடன்
ராகவன்தம்பி
01 மே 2009
Saturday, April 25, 2009
இரு துயரச் சம்பவங்கள் - இரு வேறுபட்ட எதிர்வினைகள்
முதல் சம்பவத்தில் ஷன்னோ காதூன் என்னும் பதினொரு வயதுப்பெண். டெல்லி நகராட்சிப் பள்ளியில் படிக்கும் மாணவி. அவளுடைய தகப்பனார் டெல்லிக்கு வெளிப்புறத்தில் உள்ள பவானா என்னும் இடத்தில் உணவகம் ஒன்றில் பணிபுரிகிறவர். ஷன்னோ வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவள். ஆங்கிலப் பாடத்தை ஒழுங்காக ஒப்பிக்காததினாலும் ஆங்கில எழுத்து ஒன்றை ஒழுங்காக எழுதிக் காட்டாததினாலும் கோபம் கொண்ட அவளுடைய ஆசிரியை வெய்யிலில் அவளை முட்டி போட்டு நிறுத்தி வைத்ததால் வலிப்பு நோய் அதிகமாகி மூன்று நாட்கள் மருத்துவ மனையில் நினைவின்றிக் கிடந்து பரிதாபமாக உயிர் விட்டிருக்கிறாள். அவளை இந்த கதிக்கு ஆளாக்கிய ஆசிரியை தலைமறைவாகி விட்டார். அவரை காவல்துறை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறது.
இன்னொரு சம்பவத்தில் ஆகிரிதி என்கிற17 வயதுப் பெண். 11ம் வகுப்பு மாணவி. டெல்லியின் மேட்டுக்குடி மக்கள் வசிக்கும் வஸந்த் விஹார் என்னும் பணக்காரப் பகுதியில் உள்ள மாடர்ன் பப்ளிக் ஸ்கூல் என்னும் மஹா பணக்காரப் பள்ளியின் மாணவி. கோடீஸ்வரர்களின் பிள்ளைகள் மட்டுமே படிக்கக் கூடிய பள்ளி. ஆகிருதிக்கு ஏற்கனவே ஆஸ்துமா நோய் இருந்திக்கிறது. சம்பவ தினத்தன்று மதியம் பள்ளியில் அந்தப் பெண்ணுக்கு மிகக் கடுமையான ஆஸ்துமா நோய்த் தாக்குதல் ஏற்பட்டு இருக்கிறது. பள்ளி நிர்வாகம் முதலில் மெத்தனமாக இருந்து விட்டு நிலைமை மோசமானதும் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அவளை எடுத்துச் சென்றிருக்கின்றனர். உரிய நேரத்தில் முதலுதவியும் தேவையான சிகிச்சையும் தரப்படாததால் மருத்துவ மனைக்குச் செல்லும் முன்னரே பரிதாபமாக உயிர் பிரிந்திருக்கிறது.
இந்த இரு துயரச்சம்பவங்களுமே இருவகையான எதிர்வினைகளை சந்தித்து இருக்கின்றன. மிகவும் ஏழைக்குடும்பத்தை சேர்ந்த ஷன்னோவின் மரணம், அந்தப் பெண் வசிக்கும் பகுதியில் உள்ள ஏழைத் தொழிலாளர்கள் காட்டிய சிறு எதிர்ப்புக்களோடு நின்று போயிற்று. விசாரணை செய்ய வந்த காவல் அதிகாரிகள் மீது ஒரு சிறு கும்பல் கல்வீ்ச்சு நடத்தியிருக்கிறது. ஆசிரியை தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடுவதாகக் காவல்துறை சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு நாளைக்குக் குறைந்தது 20 மணி நேரம் அந்தப் பெண் மருத்துவனையில் கோமாவில் படுத்திருந்த கோரமான காட்சியை ஒளிபரப்பிய செய்தித் தொலைக்காட்சி நிலையங்கள் மெல்ல மெல்ல அதைப் பற்றிப் பேசுவதையே நிறுத்திக் கொண்டன. பவானாவை சேர்ந்த ஓரிரு குட்டித் தலைவர்கள் அறைகுறை அறிக்கைகளை வெளியிட்டதோடு நிறுத்திக் கொண்டார்கள். ஷன்னோவின் பெற்றோர்கள் மற்றும் அந்தப் பகுதி மக்கள் காட்டிய சிறு எதிர்ப்பையும் அரசியல்வாதிகளின் தூண்டுதலால் அவர்கள் அதில் ஈடுபடுவதாக தில்லி அரசாங்கம் குற்றம் சாட்டியது.
வஸந்த் விஹார் பகுதியைச் சேர்ந்த ஆக்ரிதியின் விஷயத்தில் வேறு வகையான எதிர்வினைகள் கிட்டின. ஆக்ரிதியின் பள்ளியில் உடன் படித்த மாணவிகள் மட்டுமல்லாது நகரத்தின் வேறு பணக்காரப் பள்ளிகளி் இருந்தும் மாணவிகள் மறியலில் கலந்து கொண்டார்கள். பல மாணவிகள் மிகவும் உரத்த குரலில் பள்ளி நிர்வாகத்தைக் குற்றம் சாட்டினார்கள். அவர்கள் குரலில் தர்ம ஆவேசம் இருந்தது. அவர்கள் கதறலில் நியாயத்தின் வலு இருந்தது. மாடர்ன் பப்ளிக் பள்ளியின் முதல்வர் செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது அவரை முற்றுகையிட்டு கூச்சல் போட்டனர். அமைச்சர் ரேணுகா சௌத்ரி ஆக்ரிதியின் பெற்றோர்களை சந்தித்தது தலைநகரில் செய்தியானது. ஆக்ரிதியின் மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்ட டெல்லி அரசு தலைநகரின் பள்ளிகளில் அவசர சிகிச்சை வசதிகளோடு மருத்துவ உதவி அறைகளை கட்டாயமாக்கும் சட்டத்தை அமுல்படுத்த ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
ஆகிரிதி மரணத்துக்குப் பிறகு அரசின் இந்த உடனடி நடவடிக்கையும் ஊடகங்கள் காட்டும் அதிகபட்ச அக்கறையும் கொஞ்சம் சிந்திக்க வைக்கின்றன.
மரணம் ஏழை பணக்காரன் என்று வேறுபாடு காட்டுவதில்லை. துயரம் என்பது பொதுவானது. துயரத்துக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. ஆனால் இரு துயரச் சம்பவங்களிலும் எடுக்கப்படும் நடவடிக்கைகளின் வேகத்தையும் காட்டப்படும் அதிரடியான எதிர்வினைகளையும் பார்க்கும்போது எங்காவது லேசான வேறுபாடு இருக்கலாமோ என்கிற கேள்வி எழாமல் இல்லை. ஒருவேளை ஒரே வாரத்துக்குள் இரண்டு துயரச் சம்பவங்களும் நிகழ்ந்ததால் இரண்டாவது சம்பவம் சற்று முக்கியத்துவம் பெறுகிறது என்று வைத்துக் கொண்டாலும் ஆகிருதி வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்த ரேணுகா சௌத்ரியாலோ அல்லது தில்லி அரசின் அமைச்சர்கள் யாராலோ ஷன்னோ வீட்டுக்குசம் செல்ல வழி தெரியவில்லையா என்னும் கேள்வி எழத்தான் செய்கிறது.
Wednesday, April 22, 2009
கலகக் குரலாய் ஒலித்த இசைக்குயில்
இசை அரசி மட்டுமல்லாது பாகிஸ்தான் நாட்டின் கலகக் கவிஞன் ஃபைஸ் முஹமது ஃபைஸ் கவிதைகளை சர்வாதிகார ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாது நாடெங்கும் கொண்டு சென்ற ஒரு கலகக் குயில் இவர்.
தெற்காசியாவின் கஜல் மற்றும் தும்ரி வடிவங்களின் மீது மையல் கொண்ட பல இசை ரசிகர்களின் மனங்களில் புயல் வீச வைத்தவர் இக்பால் பானோ என்று கூறுவார்கள்.
டெல்லி கரானா எனப்படும் டெல்லி சங்கீதப் பத்ததியில் உஸ்தாத் சாந்த் கான் என்பவரிடம் தந்தையாரின் ஆசியுடன் சாஸ்திரிய சங்கீதத்தில் குருகுலம் மேற்கொண்டார் பானோ. பானோவின் திறனைக் கண்ட உஸ்தாத் சாந்த் கான் அவருக்கு சாஸ்திரிய வடிவங்கள் மட்டுமல்லாது தும்ரி, தாத்ரா போன்ற இசைவடிவங்களையும் சிறப்பாகக் கற்பித்தார். தில்லி வானொலி நிலையத்தில் இவருடைய குருநாதர் இவரை முதன்முதலாகப் பாடவைத்தார்.
1952ல் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜமீன்தார் ஒருவர் பானோவின் இசைத்திறனைக் கண்டு சொக்கிப்போனார். தன்னை மணந்து கொண்டால் பானோவின் இசை ஈடுபாட்டுக்கு எவ்வித இடையூறும் நேராது என்று அவருக்கு உறுதி அளித்தாராம் அந்த ஜமீன்தார்.
இதன் வழியாக நம் டெல்லியின் இசைச் செல்வம் ஒன்று பாகிஸ்தானுக்குக் கவர்ந்து செல்லப்பட்டது. 1980ல் இறந்த பானோவின் கணவர் அவர் தந்த உறுதியை இறக்கும்வரை காப்பாற்றினார். பாகிஸ்தானில் பலரையும் இவருக்கு அறிமுகப்படுத்தி பானோவை பாகிஸ்தானில் மிகவும் பிரபலப்படுத்தினார். 1957ல் லாகூர் ஆர்ட்ஸ் கவுன்சில் அரங்கில் துவங்கிய அவருடைய மற்றொரு பிரவேசம், பாகிஸ்தான் வானொலி, திரைப்பாடல்கள், மேடை நிகழ்ச்சிகள் எனப் புகழின் உச்சியில் அவரைக் கொண்டு சென்றது.
பானோவின் இசை நிகழ்ச்சிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவருடைய பாடல்களுக்காகவே பல பாகிஸ்தானிய திரைப்படங்கள் வசூலைக் குவித்தன. அவருடைய இசைத்தட்டுக்களும் ஒலிப்பேழைகளும் விற்பனையைக் குவித்தன. உருது மட்டுமல்லாது பாரசீக மொழியிலும் கஜல்களைப் பாடினார் பானோ. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் நாடுகளில் ஒரு பெருங்கூட்டம் அவர் மேல் பித்துப் பிடித்து அலைந்தது. இன்னும் அலைகிறது. இவருடைய பாரசீக மொழித்திறமை மற்றும் அந்த மொழியில் இவர் பாடிய கஜல் பாடல்களில் மகிழ்ந்து ஆப்கன் மன்னர் பானோவுக்கு தங்கத்தால் செய்த அழகிய வேலைப்பாடுகள் மிகுந்த பூந்தொட்டி ஒன்றைப் பரிசளித்தாராம். நம்முடைய தில்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் அவருடைய இசைத்தட்டுக்கள் விற்பனையைக் குவித்தன.
தமிழில் : ராகவன் தம்பி
கூரையை முட்டிக்
என் இரவு
உணர்கிறேன்.
குணப்படுத்துகின்றது மற்றொன்;று.
வலித்த பூவுக்கு
யார்
என் மைக்கூட்டையும்
அவர்கள் என் நாவுக்கு
Monday, April 20, 2009
தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு ஒரு "ஓ"
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
குடும்பத்தில் அநேகமாக எல்லோரையும் தன்னுடைய கலையில் ஈடுபடுத்தி இருக்கிறார் சுப்பு ஆறுமுகம். இதுவே எனக்குப் பார்க்க மிகவும் மகிழ்ச்சி அளித்தது. சுப்பு ஆறுமுகத்துடன் அவருடைய மகள் திருமதி பாரதி திருமுகம். ஹார்மோனியம் வாசித்தார். அவருடைய கணவர் முனைவர் எஸ்.திருமகன் கடம். இவர்களுடைய மகன் டி.கலைமகன் வாய்ப்பாட்டு. சுப்பு ஆறுமுகத்தின் மகன் எஸ்.காந்தி உடுக்கை மற்றும் பின்பாட்டு - குடும்பத்துக்கு வெளியே ஒரே ஆளாக மிகவும் அமர்க்களமாக தபேலா வாசித்த பி.கணேஷ் ராவ்.
ஞாயிற்றுக்கிழமை தில்லித் தமிழ்ச் சங்கத்தின் மாலையை ஏக அமர்க்களப்படுத்தி விட்டார்கள் இந்தக் குழுவினர்.
வில்லுப்பாட்டில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி அவர்களின் வந்தனம் பகுதி. இந்த பத்ததியில் அவர்கள் ஆசானுக்கு வைக்கும் வணக்கம் கோடி அட்சரம் பெறும். தன்னுடைய ஆசான்கள் ராம அய்யர் மற்றும் தமிழாசிரியர் நவநீத கிருஷ்ணபிள்ளை ஆகியோருக்கு சுப்பு ஆறுமுகம் முன்வைத்த வணக்கம் ரொம்ப நாட்களுக்கு நினைவில் நிற்கும்.
தனக்கு 82 வயது நடக்கிறது என்று சொன்னார். நடக்கும்போது மட்டும் சற்று லேசான தடுமாற்றறம் தெரிகிறது. மற்றபடி அவர் மேடையில் அமர்ந்தபின் அதை நம்புவது சற்று கடினமாக இருக்கிறது. குரலை என்னமாகப் பதப்படுத்தி வைத்திருக்கிறார் மனிதர்? ஒரு பட்டுத் துணியைக் கையாளுவதுபோல மிகவும் பதமாகக் குரலைக் கையாளுகிறார். அந்தக் குரலில் அநியாயத்துக்கு நெல்லை குசும்பு அள்ளித் தெறிக்கிறது. கதையைத் துவங்குவதற்கு முன்பே நெல்லையின் பெருமை. டி.கே.சி வீட்டு வட்டத் தொட்டியின் பெருமை. அதில் இவர் கலந்து கொண்ட வைபவம் எல்லாவற்றையும் சுவைபடச் சொன்னார். (அந்த தோசை மேட்டர் மட்டும் விட்டு விட்டார். டி.கே.சி வீட்டு தோசை பற்றி எழுதாத பெருசுகள் யாரும் இல்லை என்று சத்தியமடித்துச் சொல்லலாம்). அன்று நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த மைய கண்காணிப்பு ஆணையத்தின் செயலர் ராமசுப்பனையும் தன் கட்சிக்குள் இழுத்துக் கொண்டார். சுப்பு ஆறுமுகம் புதுக்குளம் - ராமசுப்பன் கருங்குளமாம். நெல்லை பற்றி சுப்பு ஆறுமுகம் பெருமை பொங்க விவரித்துக் கொண்டிருந்தபோது அரங்கில் இருந்த சுமார் 99 சதவிகித நெல்லைக் காரர்கள் பெருமையில் பூரித்துத் துள்ளித் துள்ளிக் கரகோஷம் எழுப்பினார்கள். நெல்லைவாசிகளுக்குத் தங்கள் ஊரைப் பற்றி எப்போதும் பெருமை உண்டாம். பாரதிக்கும் அது நிரம்ப இருந்ததாம். புதுமைப்பித்தனுக்கு இல்லாததா? திகசிக்கு இல்லாததா? வண்ணநிலவனுக்கு இல்லாதா?(அது சரி, என் காதிலும் மற்ற துவாரங்களையும் சுற்றி ஏன் இப்படிப் புகை மண்டுகிறது?)
அற்புதமான வித்வத். ஆழ்ந்த இசைஞானம். பரந்த படிப்பு. இவை எல்லாம் இல்லாமல் வில்லுப்பாட்டுப் பக்கம் வருவது சற்றுக் கடினமான காரியம். மிக விசாலமாக விரிந்து விரிந்து படர்கிறது அவருடைய விவரணங்கள். அதில் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கோட்டை விடுகிறார் சுப்பு அண்ணாச்சி. அதுதான் கதை. அந்தக் கதையை மீண்டும் மீண்டும் இழுத்துக் கரை சேர்ப்பதற்கு படாத பாடு படவேண்டி இருக்கிறது அவருக்கு. அந்த வேலையை மிகவும் சாதுரியமாகச மாற்றி மாற்றிச் செய்கிறார்கள் அவருடைய குமாரர் காந்தி அல்லது மருமகன் திருமகன். இடையில் கதையின் இழையை நினைவுபடுத்தி அவர்கள் இழுக்கும் ஒரு சரிகைக்குரல் வெகுநேர்த்தி.
புலவர் விசுவநாதன் அப்புறம் என்னிடம் கொஞ்சம் குறைபட்டுக் கொண்டார். வில்லுப்பாட்டு ரொம்ப நல்லா இருந்தது. அதில் பாரதி மட்டும்தான் இல்லை என்று. அதில் உண்மையும் இருக்கலாம் என்று தோன்றியது.
ஆனால் இது மெத்தப் படித்த, அதிகமாக ஞானம் கொண்ட பல பிரசங்கிகளுக்கும் நேரும் சோகம்தான் இது. நிறைய கதாகாலட்சேபம் செய்பவர்களிடம் இது ரொம்ப வெளிப்படையாகத் தெரியும். அவர்களும் கூடை கூடையாக விஷயங்களை வைத்துக் கொண்டு கதைக்கு வராமல் படுத்தி எடுப்பார்கள். ஒருமுறை இதே மேடையில் கல்யாணபுரம் ஆராவமுதாச்சாருக்கும் இதுதான் நடந்தது. இவருக்கும் அப்படித்தான் நேர்ந்திருக்க வேண்டும்.
ஆனால் இந்த நிகழ்ச்சியின் இடையில் சில அற்புதமான சங்கதிகளை சொன்னார். அவற்றை ஆய்வு பூர்வமாக அணுகி கெடுக்காமல் இருந்தால் அவற்றின் சுவாரசியமே தனி. வில்லுப்பாட்டுக்காரர்கள் சொல்லும் ஆமா வுக்கு ஒரு அற்புதமான விளக்கம் சொன்னார். அது ஆண்டாளையும் மாணிக்க வாசகரையும் குறிப்பது என்றார். அதில் இன்னொரு விசேஷம் ஆண்டாள் தன்னுடைய பாசுரத்தில் மாணிக்கவாசகரைக் குறிப்பது போல "மா"ர்கழித் திங்கள் என்று துவங்கினாள். மாணிக்க வாசகர் தன்னுடைய திருவெம்பாவையில் "ஆ" தியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை" என்று ஆண்டாளைக் குறிப்பிட்டு இருப்பார் என்று சொன்னார்.
இந்த நிகழ்ச்சியின் அழகியலின் உச்சகட்டமாக நான் எடுத்துக்கொண்டது சுப்பு ஆறுமுகத்தின் பேரன் டி.கலைமகன் பாடிய கிட்டப்பாவின் "கோடையிலே இளைப்பாறி..." ராகமாலிகையில் இன்னும் முற்றாத இளசான குரலில் கிட்டப்பாவின் அதே கார்வைகளுடன் அதே சங்கதிகளுடன் பாடினான் பாருங்கள். கண்கள் கலங்கின எனக்கு. அந்தப் பையன் பாடும்போது முழு அரங்கிலும் ஒரு நிசப்தம் பாருங்கள். உண்மையாகவே மகுடிக்குக் கட்டுண்ட நாகங்களாக உட்கார்ந்து கொண்டிருந்தோம் நாங்கள்.
பையன் பாடி முடித்த பிறகு கிட்டப்பாவுடன் ஆர்மோனியம் வாசித்த காதர் பாட்சா பற்றிச் சொன்னார் சுப்பு ஆறுமுகம். காதர் பாட்சாவைத் தூக்கில் போடப்போகிறது ஆங்கிலேய அரசு. இறுதி ஆசையைக் கேட்கிறார்கள். முருகனைப் பற்றிய பாடல்கள் பாடவேண்டும் எனக்கு. ஒரு ஆர்மோனியம் வேண்டும் என்கிறார் காதர் பாட்சா. ஆர்மோனியம் வரவழைக்கப்பட்டது. முருகன் மேல் விடிய விடிய பாடல்களைப் பாடிக்கொண்டே இருக்கிறார் காதர்பாட்சா. எல்லா அதிகாரிகளும் பாடல்களில் மயங்கி இருக்கிறார்கள். மணி விடிகாலை ஐந்தே முக்கால். ஐந்தரைக்கு அவரைத் தூக்கில் போட்டிருக்க வேண்டும். காலம் கடந்து விட்டது. ஆங்கில அரசின் நியதிப்படி அவருடைய தூக்குத் தண்டனை ரத்தாகிவி்ட்டது.
இப்படியான சுவாரசியமான விஷயங்களை சொல்லிப்போனார் பெரியவர்.
அற்புதமான மாலை. வழக்கமாக தமிழ் சங்கத்தில் நிகழ்ச்சி முடிந்து இரவு உணவு இருக்கும். அதைத் தொடர்ந்த சிக்கல்கள் இருக்கும். நிகழ்ச்சியை ஒழுங்காகக் ரசிக்க முடியாது. வேண்டும் என்றே தாமதமாக வருபவர்கள் மற்றவர்களை இம்சித்துக் கொண்டிருப்பார்கள். பசி பொறுக்க முடியாத குழந்தைகள் ஒருவரை ஒருவர் துரத்தித் துரத்தி உதைத்து அரங்கத்துக்குள் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
நல்ல வேளை. அன்று இரவு உணவு ஏற்பாடு செய்யாமல் புண்ணியம் கட்டிக்கொண்டார்கள் செயற்குழுவினர். நல்ல கூட்டம் என்று சொல்லமுடியாவிட்டாலும் தரமான கூட்டமாக அன்று இருந்தது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய மைய அரசு கண்காணிப்பு ஆணையத்தின் செயலர் ராமசுப்பன் மிகவும் அற்புதமாகப் பேசினார். அவருடைய பேச்சிலும் ஊர்ப்பெருமை மிதந்தது. பரவசப்பட்டு இருந்தார் மனிதர். ஏற்கனவே சிரித்த முகம் அவருக்கு. அன்று அவர் சுப்பு ஆறுமுகத்தை மனதாரப் பாராட்டிப் பேசியபோது முகம் எல்லாம் சிரிப்பாக இருந்தது. மைய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு ஆணையத்தின் முன்னாள் தகவல் தொடர்பு அதிகாரி திருமதி பாலா விஸ்வநாதன் (பிரபலமான எழுத்தாளர் என்று அறிமுகப்படுத்தினார்கள்.) அன்று அவருடைய பேச்சும் மிக அற்புதமாக இருந்தது. எண்ணெய் வளங்களைப் பற்றி சுப்பு ஆறுமுகத்திடம் ஒரு வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தச் சொல்லிக் கேட்டுக்கொண்டபோது அவர் மிக அற்புதமாக நடத்திக் கொடுத்தார் என்று பூரித்தார். இன்னொரு கூடுதல் தகவல் என்னவென்றால் தெலுங்கு மொழிக்காரர்கள் முயற்சிக்கக் கூட முடியாமல் ஓடி விட்டார்களாம். உண்மையிலேயே பெருமையாக இருந்தது.
தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு தெண்டனிட்டு ஒரு வேண்டுகோள். பலமுறை இதை நான் காலில் விழுந்து கூட கேட்டு விட்டேன். ரட்சிக்க மாட்டேன் என்கிறார்கள். மேடையில் இவருக்கு இவர் பொன்னாடை போர்த்துவார் என்று அக்கிரமம் செய்கிறார்கள். பொதுவாக எதுக்காவதுதானே போர்த்துவார்கள்? பெரியவர்களுக்கு மரியாதை செய்யும்போது பொன்னாடை அணிவிப்பது அல்லது அலங்கரிப்பது என்று அல்லவா சொல்லவேண்டும். பாலமூர்த்தி கடைசி வரை இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டு அறிவிப்பு செய்து கொண்டு இருந்தார். எதற்கு இந்த இறுக்கம்? பேச்சுப்பட்டறை எல்லாம் வேறு நடத்தப் போகிறார்கள். யாருக்கு யார் பட்டறை நடத்துவது என்று தெரியவில்லை.
இதைவிடப் பெரிய "ஓ" என்னவாக இருக்க முடியும்?
Monday, March 9, 2009
நாடக மேடையேற்ற அனுபவங்கள்
சனிமூலையில் இந்தக் கட்டுரைகளைப் படிக்காதவர்களுக்காக இந்தத் தண்டனை. இனி நாளையிலிருந்து சமர்த்தாக அரசியல் நிகழ்வுகள் பற்றியும் நூல் மதிப்புரைகளையும் எழுதலாம் என்று இருக்கிறேன்.
உங்கள் அனைவரின் அன்புக்கு நன்றி.
நீங்கள் எப்போதும் அளித்து வரும் ஆதரவுக்கும் ஊக்கத்துக்கும் ரொம்ப நன்றி.
எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் சகிப்புத் தன்மைக்கும் பொறுமைக்கு மிக்க நன்றி.
ராகவன் தம்பி
1988ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி தில்லி பாராகம்பா சாலையில் உள்ள சப்ரூ ஹவுஸ் கலையரங்கில் யதார்த்தா நாடக இயக்கத்தின் முதல் மேடை நாடகமான "சாந்த் கா மூ டேடா ஹை'' வெற்றிகரமாக மேடையேறியது. சப்ரூ ஹவுஸ் அரங்கில் தமிழர்களும் வட இந்தியர்களும் அடங்கிய கூட்டம் நிரம்பி வழிந்தது.
அந்த நிலையில் இப்போது வடக்கு வாசல் இதழின் சட்ட ஆலோசகராக இருக்கும் ஆர்.வெங்கட்ராமன் தி பேட்ரியாட் நாளிதழில் எனக்கு மிகவும் ஆதரவாக ஒரு கட்டுரை எழுதினார். இந்த நாடகத்தின் வழியாக தமிழில் ஒரு நாடக இயக்குநர் தோன்றியிருக்கிறார் என்று எழுதினார். வெங்கட்சாமிநாதன் லிங்க் இதழில் ஆங்கிலத்தில் மிகப்பெரிய கட்டுரை ஒன்றை எழுதினார். அதில் நாடகத்தில் உள்ள எல்லாக் குறைகளையும் பட்டியலிட்டு இத்தனை குறைகள் இருந்தாலும் ஒன்றை புதிதாகச் செய்ய முன்வந்திருக்கின்ற இவனைப் பாராட்டியே ஆக வேண்டும் என்று உற்சாகப்படுத்தியிருந்தார். என்னுடைய வெளிமுற்ற நாடகங்கள் பற்றியும் அந்தக் கட்டுரையில் எழுதியிருந்தார். "தன்னுடைய தவறுகள் வழியாக நாடகங்களைக் கற்றுக் கொண்டு வருகிறார் பென்னேஸ்வரன்'' என்று அந்தக் கட்டுரையில் எழுதினார் வெங்கட்சாமிநாதன். எத்தனை சத்தியமான வார்த்தைகள் அவை-? பல தவறுகள் வழியாகக் கற்றுக் கொள்ளும் என்னுடைய முயற்சிகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவை நாடகங்களாகட்டும், நான் முயற்சித்த ஆவணப் படங்களாகட்டும் அல்லது இப்போது நடத்தி வரும் இதழாகட்டும். எல்லாவற்றிலும் பலவகையான தவறுகளை இழைத்து அந்தப் பலவகையான தவறுகளின் வழியாகவே பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள முயற்சித்து வருகிறேன்.
Friday, March 6, 2009
நாடக மேடையேற்ற அனுபவங்கள் -
சாகித்ய கலா பரிஷத் அமைப்பினர் எங்கள் நாடகத்தைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள். அந்த மகிழ்ச்சியான செய்தியை மனைவியுடன் பகிர்ந்து கொள்ள வந்த போது என் தந்தையார் உடல்நிலை மிகவும் கவலைக் கிடமாக உள்ளதாகக் கிடைத்த தந்தியை மனைவி என்னிடம் நீட்டினாள்.
என்னுடைய தந்தையார் தொண்டையில் புற்றுநோய் காரணமாக சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நோய் முற்றி இனி தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியாது என்று மருத்துவமனையில் கைவிரித்ததால் கிருஷ்ணகிரியில் எங்கள் வீட்டில் இருந்தார். நான் ஏற்கனவே அவரைப் போய் பார்த்து விட்டு வந்தேன். மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது சென்னையில் மூத்த சகோதரர் வீட்டில் தங்கி மருத்துவ மனைக்குப் போய் வந்து கொண்டிருந்தேன். மேற்கிந்திய நாட்டில் கண் மருத்துவராகப் பணிபுரியும் என்னுடைய சகோதரரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையைப் பார்க்க வந்திருந்தார். புற்றுநோய் மருத்துவமனையில் மனதை நெகிழ வைத்த பல சம்பவங்களை பல மனிதர்களை பல காட்சிகளை வேறு எங்காவது இன்னொரு சந்தர்ப்பத்தில் பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.
மருத்துவர்கள் என் தந்தையை வீட்டுக்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டதும் என்னை சென்னையில் தங்கவிடவில்லை அவர். உடனடியாக தில்லிக்குப் போகச் சொல்லி எழுதிக்காட்டினர். சுந்தரியும் குழந்தையும் தனியாக இருக்கிறார்கள். உடனடியாக ஊருக்குப் போ என்று முகத்தை மிகவும் கடுமையாக வைத்துக் கொண்டு எழுதினர். நான் தில்லிக்குக் கிளம்புவதற்கு முன்பும் அவர் மருத்துவமனையில் தான் இருந்தார். சொல்லிக் கொண்டு கிளம்பலாம் என்று மருத்துவமனை போனேன். மீண்டும் ஒரு தாளில் எழுதிக் காட்டினார்.
"நாடகம் போடுவது போன்ற விரயமான காரியங்களை நிறுத்து. மனைவியையும் குழந்தையையும் கவனமாகப் பார்த்துக் கொள். இது நன்றி கெட்ட சமூகம். இறுதியில் தெருவில் தான் நிற்கவேண்டும். நீ அவதிப்படும் போது யாரும் உடன் வரமாட்டார்கள். தூரமாக விலகி நின்று சிரிப்பார்கள். சிகரெட் குடிக்காதே. என்னைப் பார். எந்தத் தீய வழக்கமும் இல்லாமல் இருந்த எனக்கு இந்தக் கதி. உன்னை ராகவேந்திரர் காப்பாற்றட்டும்''.
நான் உடைந்து போனேன். அவர் முன்பு அழக்கூடாது என்று மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறி வாசலில் நின்று ஒரு அரைமணி நேரம் கரைந்து கரைந்து அழுதேன். புகைவண்டியில் தில்லி திரும்பும்போது நடு இரவில் தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்து அழுதேன். தில்லி வந்ததும் நாடக வேலைகள் துவங்கின. பகல்கள் நாடக வேலைகளில் கரைந்தன. இரவுகளைக் குடித்துக் கரைத்தேன்.
இந்த விஷயத்தில் யாரை, எங்கே, எப்படி ஏமாற்ற முடியும்? ஒரு வழியாக இப்போது இதோ வந்து விட்டேன் என்று என் தந்தைக்குக் காலன் விடுக்கும் அழைப்பு குறித்த செய்தி இறுமாப்புடன் என் எதிரே வந்து நின்றது.
நாடக மேடையேற்றத்துக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. சாகித்ய கலா பரிஷத் இயக்குநரின் பெயரில்தான் இந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறது. குழுவின் பெயரில் அல்ல. எனவே என்னுடைய தேவை இங்கே மிக அதிகம். ஊருக்குப் போனல் எல்லாம் கெட்டுப்போகும். நாடகம் அரைகுறையாகத் தான் தயாராகி உள்ளது. மனதைக் கல்லாக்கிக் கொண்டேன். தந்தி வந்த விஷயம் என்னையும் என் மனைவியுயம் தவிர என்னுடன் இருந்த ஏஞ்செல்சுக்கு மட்டும்தான் தெரியும். குணசேகரனும் எங்களுடனே வீட்டில் தங்கி இருந்தான். அவனுக்குச் சொல்லவில்லை. அன்று வெங்கட், நச்சு, மகேந்திரன் ரவீந்திரன், சுரேஷ் போன்றவர்களும் வீட்டுக்கு வந்திருந்தார்கள். விஷயத்தை யாருக்கும் சொல்லவில்லை. அன்று இரவு மிகவும் அதிகமாகக் குடித்தேன். எல்லோரிடமும் மிகவும் அதிகமாக சண்டை போட்டேன். அதிகமாக அழுதேன்.
மறுநாளில் இருந்து மீண்டும் நாடக ஒத்திகைகளில் கலந்து கொண்டேன். அப்போது எனக்கு இறை நம்பிக்கை என்பது சுத்தமாக இருந்ததில்லை. எனவே வேண்டுதல்கள் என்பது அறவே இல்லை. அப்போது நான் நம்பிய ஒரே கடவுள் என்னுடைய மதுக்குப்பிகள்தான். அவைதான் என்னை உடைந்து போகாமல் பார்த்துக் கொண்டன. அந்த நாட்களின் இரவுகளில் என்னுடைய உளறல்களையும் புலம்பல்களையும் சகித்துக் கொண்டு என்னுடன் வாழத் துணிந்ததற்கு என் மனைவிக்கும் என் மகள் பாரதிக்கும் நான் ஏழேழு ஜென்மங்களுக்கும் பணிவிடைகள் செய்து நன்றிக் கடனைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். நாடக வேலைகள் நாளுக்கு நாள் மெருகேறி வந்தன. முக்தி போத் கவிதை வரிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் புதுப்புது விளக்கங்களுடன் மேடை வடிவம் பெற்று வந்தன.
புதுதில்லி பாராகம்பா சாலையில் உள்ள சப்ரூ ஹவுஸ் அரங்கில் சாகித்ய கலா பரிஷத் அமைப்பின் யுவ கலா மஹோத்சவ் கொண்டாட்டங்களுக்கான அறிவிப்பு தினசரிகளில் வெளிவந்தன. சுமார் ஒரு மாத கொண்டாட்டம் அது. டிசம்பர் 12, 1987 அன்று எங்களின் சாந்த் கா மூ டேடா ஹை. என் புகைப்படம் மற்றும் என்னைப் பற்றிய குறிப்பும் அவர்கள் வெளியிட்ட வண்ணக் கையேட்டில் வந்தது. தினசரிகளில் வெளியிட்ட விளம்பரங்களில் நாடகம் மற்றும் இயக்குநர்களின் பெயர்களுக்கு முன்னல் அவர்களின் சிறிய புகைப்படத்தையும் வெளியிட்டார்கள். நான் மிகவும் பெருமையாக அப்பாவுக்கு எல்லாவற்றையும் அனுப்பி வைத்தேன்.
நாடக மேடையேற்றத்துக்கான நாட்கள் நெருங்கிக் கொண்டே வந்தன. இன்னொரு பக்கம் காலனும் என் தந்தையை மிகவும் இறுக்கமாக நெருங்கிக் கொண்டிருந்தான். அன்று இப்போது இருப்பதைப் போன்ற தொலைபேசி வசதிகள் கிடையாது. கிருஷ்ணகிரிக்கு நேரடியான தொலைதூரத் தொலைபேசி வசதி கிடையாது. இரவில் எண்ணைப் பதிவு செய்து காத்திருந்து பேசவேண்டும். அலுவலகத்தில் வேலையில் இருந்தவன் ஏதோ திடீரென்று ஞாபகம் வந்தது போல, திருவனந்தபுரத்தில் இருந்த என் அக்கா மகனுக்கு நேரடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அப்பாவின் உடல்நலம் பற்றி அவனிடம் விசாரிக்க முயன்றேன். அவனுடன் பணியில் இருப்பவர் தொலைபேசியை எடுத்தார். "பத்மநாபனுடைய தாத்தா இறந்து விட்டாராம். அவர் கிருஷ்ணகிரி போயிருக்கிறார்'' என்று சொல்லி தொலைபேசியை துண்டித்தார். அது 8 டிசம்பர் 1987.
இடையில் கிருஷ்ணகிரியில் இருந்தும் என் சகோதரர்கள் என்னைத் தொடர்பு கொள்ள முயற்சித்து இருக்கிறார்கள். அவர்களால் முடியவில்லை. அப்போது அமரர் வாழப்பாடி ராமமூர்த்தி எங்கள் கிருஷ்ணகிரி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர். என்னுடைய சகோதரரின் நண்பர் அவரைத் தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லியிருக்கிறார். 12 டிசம்பர் நாடகம் இருக்கிறது. எப்படி ஊருக்குப் போவது? சரி. போகவேண்டாம். இங்கேயே இருந்துவிடலாம் என்றுகூட நினைத்தேன். விஷயம் கேள்விப்பட்டு யதார்த்தாவில் ஒவ்வொருவராக என் வீட்டுக்கு வந்து விட்டார்கள். நான் போகவில்லை என்றதும் வெங்கட் என்னை அடிக்கவே வந்து விட்டான். அனைவரும் என்னைத் திட்ட ஆரம்பித்தார்கள். அப்போது வெங்கட் ஒன்று சொன்னன். யுவ மகோத்சவ் ஒரு மாதம் நடக்கும் விழா. எங்கள் நாடகத்தை ஐந்தாவது நாளில் திட்டமிட்டு இருந்தார்கள். இன்னும் 25 நாட்கள் மீதமிருக்கின்றன. நான் ஊருக்குப் போய் காரியம் எல்லாம் முடித்து 15 நாட்களில் திரும்பிவிடலாம் என்றும் சாகித்ய கலாபரிஷத்தின் செயலரை அணுகி இதுகுறித்து அனுமதி கேட்டு வருகிறோம் என்று வெங்கட்டும் நச்சுவும் போய் அனுமதியும் வாங்கி வந்தார்கள். டிசம்பர் 28ம் தேதிக்கு எங்கள் நாடகத்தை ஒத்தி வைக்க சம்மதித்தார் அந்த அதிகாரி.
அப்பா இறந்த அன்று தில்லியில் எங்கள் யதார்த்தா குடும்பம் எனக்குக் கொடுத்த மனோதைரியத்தையும் அமரர் வாழப்பாடி ராமமூர்த்தி மற்றும் இப்போது வடக்கு வாசல் இதழின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர்- பத்திரிகையாளர் ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் எனக்கு நல்கிய உதவிகளையும் உயிர் உள்ளவரை என்னல் மறக்க முடியாது. வானூர்தியில் பயணித்து சென்னையில் இறங்கி அங்கிருந்து ஒரு சிற்றூர்தியைப் பிடித்து கிருஷ்ணகிரி சேர நள்ளிரவு ஒருமணி ஆகிவிட்டது. அப்பாவின் இறுதிச் சடங்குகள் முடிந்து போயிருந்தன. அவருடைய இறுதி தரிசனம் எனக்குக் கிட்டவில்லை.
இது அவர் தீர்மானித்ததாகத்தான் இருக்கவேண்டும். தான் வாழ்ந்த இறுதி மூச்சு வரை தன்னுடைய பேச்சை எந்த வகையிலும் கேட்காத தன் மகனை ஒரு தந்தை இதைவிட வேறு எந்த வகையில் தண்டிக்க முடியும்?
தொடர முடியவில்லை. அடுத்து முடித்து விடுகிறேன்.
Wednesday, March 4, 2009
முதல் நாடக மேடை அனுபவங்கள் -7
கஜானன் மாதவ் முக்தி போத் என்னும் இந்தி கவிஞனின் ஒரு இந்திக் கவிதையை என்னுடைய முதல் மேடை நாடகமாக தலைநகரில் மேடையேற்றிய அனுபவங்கள் தொடர்பான பதிவுகளை இங்கே எழுதி வருகிறேன். ஒரு நேர்க்கோட்டில் செல்லாது கிராமத்துச் சாலையில் காளை மாடு பெய்து செல்லும் மூத்திரக்கோடுகள் போல வளைந்தும் நெளிந்தும் ஒழுங்கின்றிப் பதிந்து வருகின்றன. ஆனலும் அந்த நினைவுகளை மல்லுக்கட்டி இழுத்துப் பதிந்து வைக்கும் அந்தக் கணங்கள் மனதுக்கு நெகிழ்வு தரும் அனுபவங்களாக அமைகின்றன. அந்த அற்புதக் கணங்களை மீண்டும் ஒருமுறை வாழ்ந்து பார்க்கின்றது போன்ற லாகிரியை மனப்பரப்பில் கிளர்த்திச் செல்கின்றன. ரயில் பயணத்தின் போது சீறி ஓடும் ரயிலின் வேகத்தில் ஒரு நொடியின் பின்னத்தில் பார்வைக்குத் தவறவிட்ட ஏதாவது ஒரு அற்புதக் காட்சியை ஒரு நொடி ஒருமுறை மீண்டும் காணும் தவிப்பு விளைவதைப் போன்ற ஒரு தவிப்பில் விளைந்த பதிவுகள் இவை.
சாகித்ய கலா பரிஷத் அமைப்பின் யுவ மகோத்சவத்துக்கான நாடகத் தேர்வுக்கு எங்களின் நாடகத்தில் ஒரு காட்சியின் வடிவமைப்பை நடுவர்கள் எதிரில் நிகழ்த்திக் காட்டுவதற்காக நேஷனல் காலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட் கட்டிடத்தில் பதட்டத்துடன் நின்ற கோலத்துடன் சென்ற இதழில் நிறுத்தி இருந்தேன்.
ஏற்கனவே சொன்னது போல, எங்கள் குழுவில் என்னைத் தவிர எல்லோரும் ஏதோ ஒருவகையான மகிழ்ச்சியை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு சிரித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். நான் ஒருவன் மட்டுமே எங்கோ ஆப்பு வைக்கப்பட்ட குரங்கைப் போல முகத்தை வைத்துக் கொண்டு தொடர்ச்சியாக சிகரெட் புகைத்துக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தேன்.
என்னுடைய பதட்டத்துக்கு இன்னும் சற்று தீ வைப்பதைப் போல பறைவாசிக்கும் கந்தசாமியும் உறுமி வாசிக்கும் முத்துசாமியும் வாத்தியங்களைக் காய்ச்சிக் கொள்ள நெருப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆரம்பித்தார்கள். அந்த அழகான கட்டிடத்தின் வெளியிலோ அல்லது விரிந்து பரந்த புல்வெளியிலோ எதையாவது கொளுத்தினல் அவர்கள் நம்மைக் கொளுத்தி அங்கேயே புதைத்து விடுவார்கள். இன்னொன்று நேரம் எங்கே இருக்கிறது? நடுவர்கள் குரல் கொடுத்தால் ஓடிப்போய் குரங்காட்டம் ஆடிக்காண்பிக்க வேண்டும். பதட்டம் இன்னும் அநியாயத்துக்குக் கூடியது.
தமிழ், கன்னடம், தெலுங்கு இந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் அந்த நேரத்தில் எனக்குக் கிடைத்த அத்தனை கெட்ட வார்த்தைகளிலும் எங்கள் கோஷ்டியினர் எல்லோரையும் பார்த்து சத்தம் போட ஆரம்பித்தேன். ஏதோ ஒரு இந்திப் பெண்மணியிடம் தங்கள் அன்பையும் நட்பையும் தமிழிசையையும் வளர்க்க முயற்சித்துக் கொண்டிருந்த சங்கரும் ஏஞ்செல்சும் சத்தம் கேட்டு ஓடிவந்தார்கள். ஏஞ்செல்ஸ் என்னிடம், "மாமா, அதுக்கு எதுக்கு இப்படி சத்தம் போடறீங்க? இங்கேயே எந்த அறையிலாவது ராட் ஹீட்டர் இருந்தால் அதில் காய்ச்சிக் கொள்ளலாமே'' என்று ஒரு வழியைக் கொடுத்தான். கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. ஆனல், கந்தசாமியும் முத்துசாமியும் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. வாத்தியங்களை விறகு நெருப்பில் காய்ச்சினல்தான் சுருதி சரியாக சேரும் என்று பிடிவாதம் பிடித்தார்கள். குறைந்தது குப்பைக் காகிதங்களிலாவது நெருப்பைக் கொளுத்திக் காய்ச்சினல்தான் தங்கள் வாத்தியங்களில் சரியாக சுருதி சேரும் என்று பிடிவாதம் பிடித்தார்கள்.
சங்கர், ஏஞ்செல்ஸ், வெங்கட், குணசேகரன், நச்சு, வீரமணிகண்டன், வீரராகவன், மோகன், ராமசாமி என்று ஒரு பெரிய படையே அந்த வளாகத்தில் குப்பை காகிதங்களை சேகரிக்க அலைந்தார்கள். வேண்டிய அளவு குப்பைக் காகிதங்களை சேர்த்தாகிவிட்டது. அந்த வளாகத்தினுள் எங்கே தீ மூட்டி வாத்தியங்களைக் காய்ச்சிக் கொள்வது? கட்டிடத்தின் காவலரைக் கேட்டபோது அவர் தன்னுடைய சுட்டுவிரலும் ஆகாயமும் கிட்டத்தட்ட சேரும் ஒரு இடத்தைக் காண்பித்து அங்கே காய்ச்சிக் கொண்டால் ஒரு பிரச்னையும் இருக்காது என்றார். அந்த தூரத்தில் காய்ச்சிக் கொண்டு உள்ளே வரும் வேளைக்கு அந்தக் குளிரில் மீண்டும் சுருதி இறங்கி விடும் என்று முத்துசாமி ஆட்சேபித்தார். அது நவம்பர் மாதம். அப்போதெல்லாம் தில்லியில் நவம்பர் மாதங்கள் குளிர் நிறைந்த மாதங்களாக இருந்தன. அவர் சொன்னதிலும் நியாயம் இருந்தது. இன்னொன்று சுருதி கலைந்த வாத்தியங்களை வைத்துக் கொண்டு ஏதாவது செய்தால் அசிங்கமாகிவிடும். உள்ளே நடுவர்களாக இருந்த ஓரிரண்டு முசுடுக் கிழங்கள் நல்ல சங்கீதம் ஞானம் உள்ளவை. சுருதி கெட்ட வாத்தியத்தை வாசித்தால் மானம் போய்விடும். எனவே, யார் யாரையோ கெஞ்சிக் கூத்தாடி, ஏதேதோ வகையில் தாஜா செய்து அந்தக் கட்டிடத்தின் பின்புறம் வாத்தியங்களைக் காய்ச்சுவதற்கு ஏற்பாடு செய்தார்கள் நச்சுவும் வெங்கட்டும்.
இதற்கிடையில் வேறு குழுக்களின் தேர்வுக்கான காட்சிகள் தீவிரமாக நடுவர்கள் முன்னிலையில் அரங்கேறிக் கொண்டிருந்தன. எங்களை நடுவர்கள் கூப்பிடும்போது உள்ளே போகலாம் என்று தயக்கத்துடன் நின்றிருந்தேன். ஒரு பக்கம் தயக்கம் என்றால் இன்னொரு பக்கம் அச்சம். மற்ற குழுக்கள் ஒருவேளை சரியாக செய்யவில்லை என்றால் நடுவர்கள் அங்கேயே எதையாவது சொல்லி மானத்தை வாங்கினர்கள் என்றால் நம்முடைய கதி என்ன ஆகும் என்று நினைத்துப் பார்க்கவே சற்று குலை நடுங்கியது. ஏதாவது குழு ரொம்பவுமே நன்றாக செய்து விட்டால் நம்முடைய வாய்ப்பு தள்ளிப் போவதற்கான வாய்ப்பு அதிகரித்து விடுமே என்றும் அச்சம்.
எனவே மரியாதையாக வெளியிலேயே நின்று கொண்டு கூப்பிடும்போது சென்று நம்முடைய காட்சியை அரங்கேற்றி விட்டு ஒடிவந்து விடலாம் என்று நின்றிருந்தேன். பதட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தைரியம் சொல்வது போல ரவீந்திரன் அருகில் வந்து கை கொடுத்தார். அந்த நேரத்தில் எனக்குக் கிட்டிய அவருடைய பாசம் மிக்க அந்தக் கரங்களின் அழுத்தம் தந்த ஆறுதல் மற்றும் தைரியத்தின் வீரியத்தை இப்போதைக்கு என்னல் எந்த வார்த்தையிலும் மிகச்சரியாக விவரிக்க முடியாது. ஆனல் ஒன்றை நன்றியுடன் சொல்லலாம் என்று தோன்றுகிறது. ரவீந்திரன் பாசத்துடனும் நம்பிக்கையுடனும் அன்று என் கரங்களில் பதித்த அழுத்தம் எனக்குப் பின்னளில் ஏறத்தாழ முப்பது நாடகங்களை இயக்கும் மனவலிமையைக் கொடுத்தது.
ஒருவழியாக எங்கள் முறை வந்தது. மேடை எல்லாம் கிடையாது. ஒரு பெரிய கூடம். மற்ற நாடகக் குழுக்களின் கலைஞர்கள் சுற்றி அமர வைக்கப்பட்டிருந்தார்கள். நடுவர்கள் தனியாக ஒரு மூலையில் நாற்காலிகளில் அமரவைக்கப் பட்டிருந்தார்கள். நாங்கள் நடித்துக் காட்டிய காட்சியில் வசனங்கள் ஏதும் இல்லை. கிராமத்து இரவில் நடக்கும் ஒரு சிறுதெய்வ வழிபாட்டு ஊர்வலம். தலையில் கரகம் போல அலங்கரித்த ஒரு பீடத்தில் சிறுதெய்வத்தை (நாங்கள் பெயர் எல்லாம் வைக்கவில்லை) அமர்த்தி தலையில் வைத்து ராமச்சந்திரன் ஆடி வருவான். நச்சு பூசாரி. குணசேகரனுக்கும் இளஞ்சேரனுக்கும் சாமி வந்து விடும். மிகவும் வலிமையான அடவுகளுடன் ஆட்டம் அமைந்திருந்தது. சிவாஜி, முத்துசாமி மற்றும் கந்தசாமி குழுவினர் மிகவும் அற்புதமாக வாசித்தார்கள். ஆட்டம் உச்சகட்டத்துக்குப் போகும். திடீரென்று ஓரிடத்தில் தகராறு முளைக்கும். அனைவரும் திக்குக்கு ஒருவராக சிதறி ஓடிப்போய் ஒருவர் மற்றவரைத் தாக்கிக் கொள்வார்கள். கெட்ட வார்த்தைகளில் திட்டிக் கொள்வார்கள். (சொல்லப் போனால் இந்தக் காட்சியில் பேசப்பட்ட உச்சபட்ச வசனங்களே அந்த இந்தி கெட்ட வார்த்தை வசவுகள் தான் இந்தச் சேரி சண்டை ஓயும்போது இன்னொரு பக்கத்தில் அதே மேடையில், ஒரு மிகப்பெரிய செல்வந்தரின் வீட்டு விருந்து ஒன்று மிகவும் பொய்மையுடனும் அனைத்து படாடோபங்களுடனும் நடக்கும். இது தான் நாங்கள் நடித்துக் காட்டிய காட்சி. பிறகு சுவரொட்டிகள் கிளர்ந்து எழுந்து தங்கள் உரிமையை பிரகடனம் செய்யும் இன்னொரு காட்சி. இரண்டையும் முடித்து விட்டு பதட்டத்துடன் அரங்கத்தை விட்டு வெளியேறினர்கள் நடிகர்கள். இப்போது என்னிடமிருந்த பதட்டம் அவர்களிடம் இடம் மாறியது.
நாங்கள்தான் இறுதியாக வந்த குழு. அதற்குப் பிறகு நடுவர்களின் தீர்ப்புதான்.
நீண்ட நேர அமைதிக்குப் பிறகு எங்களை தேர்ந்தெடுத்து இருப்பதாக சாகித்ய கலா பரிஷத் செயலர் சுரேந்திர மாதூர் தெரிவித்தார். ஆனல் அந்த ஆட்டத்தின் இறுதியில் வரும் சண்டையின் போது பரிமாறிக்கொள்ளப்படும் கெட்ட வார்த்தைகளை கண்டிப்பாக நீக்க வேண்டும் என்றார். அது திட்டமிட்டு வந்தது அல்ல என்றும் எங்கள் நடிகர்கள் கொஞ்சம் அதிகமாகவே தத்ரூபமாக இருக்க முயற்சித்தார்கள் என்றும் சொல்லி பலமுறை விழுந்து வணங்கி நன்றிசொல்லி வெளியே வந்தோம். ரவீந்திரன் ஓடிவந்து என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு மிக அழுத்தமாகக் கை கொடுத்தார். வீட்டுக்குத் திரும்பும் போதே இரவு பலமான விருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி விட்டுப்போனேன்.
அப்போது வீட்டில் தொலைபேசி கிடையாது. மனைவி கதவைத் திறந்ததும் மிகவும் சந்தோஷத்துடன் கத்திச்சொன்னேன்...
"நாங்க ஜெயிச்சிட்டோம்''.
வழக்கத்துக்கு விரோதமாக ஒன்றும் சொல்லாமல் ஒரு காகிதத்தை என்னிடம் கொடுத்தாள் மனைவி.
அது ஊரிலிருந்து என்னுடைய மூத்த சகோதரர் அனுப்பியிருந்த தந்தி.
"அப்பாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கு இடமாக இருக்கிறது. உடனே கிளம்பி வா''.