Thursday, October 16, 2008

புக்கர் விருது பெற்ற வெள்ளைப்புலி


ஸல்மான் ரஷ்டி (1981), அருந்ததி ராய் (1997) கிரண் தேசாய் (2006) ஆகிய இந்தியப் படைப்பாளிகளுக்குப் பிறகு இந்த ஆண்டு புக்கர் பரிசுக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார் மும்பையில் வசிக்கும் அரவிந்த் அடிகா. அவருடைய வெள்ளைப்புலி (வைட் டைகர்) என்னும் புதினம் இந்த ஆண்டின் புக்கர் பரிசுக்குத் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளது.

தில்லிவசிக்கும் ஒரு ஹல்வாய் (இனிப்புக் கடைக்காரன் அல்லது இனிப்புப் பலகாரம் செய்யும் சமையல்கார்) வாழ்வில் நடக்கும் சம்பவங்களைப் பற்றி விவரித்துச் செல்லும் நாவல் இது என்று பத்திரிகைகளில் போட்டிருக்கிறார்கள். மும்பையில் வசித்தாலும் இந்த நாவலை தில்லிவாசிகளுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் அடிகா.

இவருடைய பெயருடன் போட்டிக்கு இருந்து பின்தங்கிய ஜாம்பவான்கள் - அமிதவ் கோஷ் (இந்தியா), ஸ்டீவ் டோல்ட்ஸ் (ஆஸ்திரேலியா), செபாஸ்டியன் பாரி (அயர்லாந்து), லிண்டா கிராண்ட் (பிரிட்டன்), பிலிப் ஹென்ஷர் (பிரித்தான்).

அடிகாவுக்கு வாழ்த்துக்கள் அனுப்பாத வட இந்தியத் தலைவர்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம். அடிகாவுக்குக் கிடைத்த இலக்கிய அங்கீகாரத்தைத் தான் கொண்டாடுவதாக பிரதமர் அவருக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார்.



சென்னையில் பிறந்து மங்களூரில் வளர்ந்து சிட்னிக்குப் புலம் பெயர்ந்த அடிகா ஆங்கில இலக்கியம் படித்தது நியூயார்க்கில் உள்ள கொலம்பியா மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகங்களில். டைம், ஃபைனான்சியல் டைம்ஸ், இன்டிபெண்டெண்ட் மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற பத்திரிகைகளில் பல கட்டுரைகள் எழுதியவர் அரவிந்த் அடிகா.


புக்கர் பரிசுக்கான தொகை ரூ.42 லட்சம். இது தவிர இப்போது இந்த வெள்ளைப் புலியை மூலை முடுக்கெல்லாம் துரத்தித் துரத்தி வாங்கிப் படிப்பார்கள். பல மொழிகளில் மொழிபெயர்ப்பு வரும். அநேகமாக உலகில் பேசி, எழுதப் படும் எல்லா மொழிகளிலும் அரவிந்த் அடிகாவைப் பற்றிக் கட்டுரைகள் வெளிவரும். கண்களை இடுக்கிக் கொண்டு அவர் சிரிக்கும் புகைப்படங்கள் எல்லா நாளிதழ்களிலும், வார, மாத இதழ்களிலும் வரும்.

தமிழில் மட்டும் யாராவது ஒரு தமிழ் பேசத் தெரியாத சேட்டுப் பெண் எப்போதாவது அடிகா ஊருக்கு வரும்போது அவரை ஊடகங்களில் பேட்டி காண வாய்ப்பு இருக்கிறது. பிரபல தமிழ்ப் பத்திரிகைகளில் யாராவது ஒரு தமிழ் பேசத் தெரியாத சேட்டுப்பெண் நடிகை இவரைப் புளகாங்கிதத்துடன் பேட்டி கண்டு உலக இலக்கியம் வளர்க்க வாய்ப்பு இருக்கிறது. உடனடியாக தீபாவளி வருவதால் இந்த வாய்ப்புக்கள் சற்று அதிகமாகவே இருக்கலாம். தமிழின் சில பின்நவீனத்துவ மாமேதைகள் இந்த நாவலைக் கிழி கிழி என்று கிழித்துத் தோரணம் கட்டவோ அல்லது சத்தமில்லாமல் இந்த நாவலில் இருந்து சில உருவகங்களை ராவோடு ராவாக சுட்டு தன் சிறுகதைகளிலோ அல்லது வேறு படைப்புக்களிலோ இடைசெருக வாய்ப்புக்கள் உள்ளன. அதே போல, அகில உலகமும் படிக்கத் தகுதியுள்ள தன் எழுத்துக்கள் தமிழில் வருவதால் மட்டுமே அதிகம் கண்டுகொள்ளப்படுவதில்லை என்று காதுவழியாக புகையை வெளியே அனுப்ப வும் வாய்ப்புக்கள் உள்ளன.

புத்தகத்தை விரைவில் படிக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுகிறேன். அதே நேரத்தில் ஒரு காலத்தில் இதே போல புக்கர் பரிசு பெற்று ஏக ரகளையாக ஊதிப் பெருக்கப்பட்ட அருந்ததி ராய் நாவல் போல இது ஏமாற்றமாக அமையக்கூடாது என்று குலதெய்வத்திடம் ஒரு பிரார்த்தனையும் வைத்திருக்கிறேன்.

புத்தகத்தை விலைக்கு வாங்கி அல்லது யாராவது நல்லவர்களிடம் இரவல் வாங்கிப்படித்துத் திருப்பிக் கொடுத்து விட்டு வெள்ளைப் புலி நூலைப் பற்றி எழுதுவது தர்மமான காரியம் என்று நினைக்கிறேன்.

விரைவில் அந்தத் தலைவலியும் உங்களுக்கு உண்டு.



Wednesday, October 15, 2008

வடக்கு வாசல் இணையதளம்


ஜெயமோகன் தன்னுடைய இணையதளத்தில் இந்த சனிமூலை வலைப்பக்கங்கள் பற்றி அறிமுகம் செய்திருக்கிறார். 1991ல் அவர் தில்லி வந்தபோது தில்லியில் நான் செய்து கொண்டிருந்த பாவ, புண்ணிய காரியங்களைப் பற்றியும் வெங்கட்சாமிநாதன், மற்றும் என் நண்பன் சுரேஷ், அச்சுதன் அடுக்கா பற்றியும் தன்னுடைய கட்டுரையில் மிகவும் சுவையாக சொல்லியிருக்கிறார். வடக்கு வாசல் இதழ் பற்றியும் ஓரிரு வார்த்தைகள் சொல்லியிருக்கிறார். அவரை எழுதச் சொல்லி ரொம்ப நாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். மனிதர் மசியவில்லை. மடி ஆசாரங்களை விட்டு எழுதுங்களேன் என்று கேட்டேன். அப்படியெல்லாம் ஏதுமில்லை. திரைக்கதை நாவல்கள் போன்றவற்றில் அதிகம் நேரம் கழிவதால் மற்ற யாருக்கும் எழுத நேரம் இல்லாமல் போய் விட்டது என்று சொல்கிறார். சரி காத்திருப்போம். வடக்கு வாசல் இணைய தளத்தைப் பற்றி அவர் எழுதி அறிமுகப்படுத்தி இருக்கலாமே என்று தோன்றியது.


வடக்கு வாசல் இலக்கிய சிறப்பு மலர் 2008 வெளியிடப்பட்டது

என்னுடைய இந்தப் பக்கங்களிலேயே இது வரை
வடக்கு வாசல் இணைய தளம் பற்றி எதுவும் சொல்ல வில்லை. பிறகு அவரைக் கேட்பது என்ன நியாயம் என்று தோன்றியது.

இன்னொன்று, என்னைத் தெரிந்த எல்லோருக்கும் வடக்கு வாசல் இதழ் இணையத்தில் வருவது பற்றி கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். எனவே அதிகம் கூச்சல் போட வேண்டாம் என்று நினைத்தேன். இருந்தாலும் கொஞ்சமாக அறிமுகப்படுத்தி விடுகிறேனே. யாராவது புதிதாக இந்தப் பக்கம் வந்தால் அவர்கள் தெரிந்து கொள்ளட்டுமே.
செப்டம்பர் 14ம் தேதி புது தில்லி இராமகிருஷ்ணபுரத்தில் உள்ள திருவள்ளுவர் கலையரங்கில் வடக்கு வாசல் இதழின் நான்காம் ஆண்டுத் துவக்க விழாவும் இணைய தளத் துவக்கமும் நடைபெற்றது. வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008 வெளியிடப்பட்டது. அந்த மலரில் அசோகமித்திரன், இந்திராபார்த்தசாரதி, வாஸந்தி, பி.ஏ.கிருஷ்ணன், கி.ராஜநாராயணன், மேலாண்மைபொன்னுசாமி போன்ற ஜாம்பவான்களும் இன்னும் பல குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகளும் பங்களித்திருக்கின்றனர். இந்த மலரை வெளியிட்டு வடக்கு வாசல் இணையதளத்தைத் துவக்கி வடக்கு வாசல் இதழைப் பெருமைப்படுத்தினர் முன்னள் குடியரசுத்தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்கள். கவிஞர் ய.சு.ராஜன், நாவலாசிரியர் பி.ஏ.கிருஷ்ணன், ஒரியண்டல் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் எம்.ராம்தாஸ், உச்சநீதி மன்ற வழக்கறிஞர் எம்.என்.கிருஷ்ணமணி, சக்தி பெருமாள் ஆகியோர் மேடையில்.

இணைய தளத்தை வடிவமைத்தவர் சென்னை பர்ப்பிள் ரெயின் நிறுவனத்தைச் சேர்ந்த பிரபாகர் மற்றும் அவருடைய நண்பர்கள். எனக்கு மிகவும் திருப்தி. மிகவும் அற்புதமாக வடிவமைத்திருப்பதாக என்னுடைய நண்பர்கள் அவரைப் பாராட்டினர்கள். டாக்டர் கலாம் பிரபாகரை மேடையில் சிறப்பித்தார்.

பி.ஏ.கிருஷ்ணன் மற்றும் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்

வடக்கு வாசல் இதழுக்கு விளம்பர மேலாண்மை செய்யும் சென்னை ஆட்மார்க் உரிமையாளர் அருள்வேல் வந்திருந்தார். புதுவையில் இருந்து சுகுமாரன் வந்திருந்தார்.
விழாவின் முந்தைய நாள் அதாவது 13 செப்டம்பர் அன்று தில்லியில் வெடித்த தொடர் வெடிகுண்டு வெடிப்புக்குப் பிறகும் அடுத்த நாள் நடந்த இந்த விழாவில் சுமார் 800க்கும் மேற்பட்ட தலைநகர் தமிழர்கள் கலந்து கொண்டார்கள்.
விழா குறித்து தீபா எழுதிய கட்டுரையை வடக்கு வாசல் இணைய இதழில் வெளியிட்டுள்ளோம். வடக்கு வாசல் இணைய இதழ் குறித்த விமர்சனத்தை திருநாவுக்கரசு எழுதி இருக்கிறார். அதுவும் இணைய இதழில்.

ய.சு.ராஜன், டாக்டர் அப்துல் கலாம் மற்றும் ஓரியண்டல் இன்்ஸ்யூரன்ஸ் தலைவர் எம்.ராமதாஸ்

இனி ஒவ்வொரு மாதமும் வடக்கு வாசல் மாத இதழ் அந்த மாதத்தின் 20ம் தேதிக்குப் பிறகு வலையேற்றப்படும்.
தலைநகர் தமிழர்களுக்கு என்றே, தலைநகர் பற்றிய பல தகவல்கள், நேர்காணல்கள், கட்டுரைகள், கதைகள் ஆகியவை வடக்கு வாசல் இணையத்தில் தலைவாசல் என்னும் இணைய இதழ் வாராவாரம் திறக்கப்போகிறது. அதற்கான காரியங்களை பிரபாகர் தீவிரமாக செய்து வருகிறார். ஒரு நல்ல சுவை உள்ள இணைய வார இதழ் உங்களுக்காக தலைநகரில் இருந்து வெளிவரக் காத்திருக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக வடக்கு வாசல் அச்சு இதழ் இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு ஒவ்வொரு மாதமும் திறந்து வைக்கப்பட்டு வருகிறது. வடக்கு வாசல் இதழ் இணையத்தில் ஒவ்வொரு மாதமும் 20 தேதி திறக்கும்.
மிக விரைவில் உலகத் தமிழர்களுக்கு இந்தியத் தலைநகரின் செய்திகள் இணையம் வழி ஒவ்வொரு வாரமும் திறக்கப் போகிறது.


இணைய தளத்தை சிறப்புற வடிவமைத்த பிரபாகர் சிறப்பிக்கப்படுகிறார்
உங்கள் அன்பும் ஆதரவும் வழி நடத்துதலும் என்றும் எங்களைத் தொடரவேண்டும்.



Friday, October 10, 2008

நீதிபதிகளின் மீதான முறையீடுகளும் தேசிய நீதித்துறை கவுன்சிலும்



ஜனநாயகத்தின் மிகவும் உறுதியான தூண்களில் ஒன்றான நீதித்துறையின் மீது, அதன் பல பின்னடைவுகளையும் மீறி ஒரு ஆழமான நம்பிக்கை நமக்கு முழுக்க வற்றிவிடாமல் தொட்டும் தொடர்ந்தும் வந்து கொண்டிருக்கிறது. நீதிபதிகள் வேற்று கிரகங்களில் இருந்து வந்தவர்கள் அல்ல. நம் எல்லோரையும் போல அவர்களும் மிகவும் சாதாரணர்கள்தான் என்கிற ஒரு உண்மையும் எப்போதுமே தொடர்கிறது. அவர்களில் ஒரு சிலரின் நடவடிக்கைகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையாக அமைவதில்லை என்பதிலும் நமக்கு நேரடி அனுபவங்கள் உண்டு. நீதிபதிகளில் மிகச்சிலரின் அதீத நடவடிக்கைகளால் அந்தத் தூண் மீது வைத்துள்ள நம்பிக்கையும் சில சமயம் ஆட்டம் கண்டுவிடும் அவல நிலை ஏற்பட்டு விடுகிறது. ஒருசில நீதிபதிகளின் செயல்பாடுகள் குறித்து நாம் படிக்க நேர்ந்த செய்திகள் நீதித்துறை குறித்த மாண்பினையும் மதிப்பினையும் கேள்விக்கு உரியதாக்கிவிடுகிறது.

உதாரணத்துக்கு பஞ்சாபில் உயர்நீதிமன்ற நீதிபதியான நிர்மல் யாதவ் என்பவருக்கு அனுப்பிய 15 லட்சரூபாய்கள் அடங்கிய பை ஒன்று நிர்மல்ஜித் கௌர் என்னும் நீதிபதியின் வீட்டுக்குத் தவறுதலாக அனுப்பப்பட்டு விஷயம் அமர்க்களப்பட்டது. வழக்கறிஞராகத் தான் இருந்த ஒரு வழக்கில் அரசுக்குக் கையகப்படுத்த வேண்டிய தொகையை தன்னுடைய சொந்தக் கணக்கில் சேர்த்துக் கொண்டதாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஜஸ்டிஸ் சௌமித்ரா சென் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வரப்போகும் பாராளுமன்றத்தொடரில் இவர் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தாதாக்களுடன் தொடர்பு கொண்ட பதிப்பகம் ஒன்றிடமிருந்து புத்தகம் எழுதுவதற்காக ரூ.70 லட்சம் முன்பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு பதவி விலகினர் மும்பை உயர்நீதிமன்றத்தின் முன்னள் நீதிபதி ஏ.எம்.பட்டாச்சார்யா. தங்கள் உறவினருக்கு சர்வீஸ் கமிஷன் தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்க வழிவகை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பஞ்சாப் ஹரியான உயர்நீதிமன்ற நீதிபதிகள் மெஹ்தால் சிங் கில் மற்றும் அமர்பீர் சிங் ஆகியோர் பதவி விலகினர்கள். உச்ச நிதிமன்றத்தின் தலைமை நீதியரசாக இருந்த ஏ.எஸ்.ஆனந்த் மற்றும் அஹ்மதி ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

விமர்சனத்துக்கு அப்பாற்பட்டும், எவ்விதக் கேள்விகளுக்கு உட்படுத்த முடியாத சக்திகள் என யாரும் இருந்துவிடக்கூடாது என்பது குடியாட்சித் தத்துவத்தின் அடிப்படை. உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்கும் பாங்கினில் எவ்வித வெளிப்படையான அணுகுமுறையும் கிடையாது. அதற்கான தனிப்பட்ட காரணங்கள் கூறப்படுகின்றன. சின்னச்சின்ன நீதிமன்றங்களின் நீதிபதிகள் ஏதேனும் தவறுகள் செய்தால் அவர்களைப் பற்றி விசாரணைகள் நடத்தி அவர்களைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கு உள்ளது. ஆனல் உயர்நீதிமன்ற நீதிபதியோ அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியோ ஏதேனும் தவறு செய்தால் பகவான் பார்த்துப்பார்' என்ற ரீதியில் இருந்துவிடலாம். இல்லையென்றால் இன்னொரு வழி இருந்தது. அதாவது, ஒரு உயர்நீதி மன்றம் அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியின் மீது தொடுக்கப்படும் புகாரின் மீது மூன்று நீதிபதிகள் கொண்ட குழு ஒன்று ஆய்ந்து குற்றம் செய்தவர் என்று தீர்மானிக்க வேண்டும். பிறகு முன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அந்த நீதிபதியை பதவியிறக்கம் செய்ய வேண்டும்.

இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்குக் கூட பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. உயர்மட்டத்தில் உள்ள நீதிபதிகளின் முறைகேடுகள் மீதான புகார்களைக் கவனித்து ஆவன செய்ய தேசிய அளவில் ஒரு கவுன்சில் வேண்டும் என்ற குரல் வலுப்பட்டது. 2003ல் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் சட்ட அமைச்சராக இருந்த ஜன கிருஷ்ணமூர்த்தி ஒரு தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலுயுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதங்கள் அனுப்பினர். அரசியலமைப்புச் சட்டத்தை மறு ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட வெங்கடாசலய்யா கமிஷன், தேசிய நீதித்துறை ஆணையம் அமைத்து தவறிழைக்கும் நீதிபதிகள் மீதான புகார்களை விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

அப்படி ஒரு சட்ட வரைவினை நிறைவேற்றும் வகையில் ஜட்ஜஸ் (இன்க்வரி) அமென்ட்மெண்ட் பில் 2008 என்னும் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய மைய அமைச்சரவையின் கேபினெட் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவின் படி தனிமனிதர்களும் உயர்மட்ட நீதிபதிகளின் மீதான புகார்களை தாக்கல் செய்யலாம். தேசிய நீதித்துறை அமைப்பு ஒன்றையும் நிறுவி நீதிபதிகள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரித்து தண்டனைகள் வழங்குவதற்கும் வழிவகை செய்கிறது இந்த மசோதா. முன்னர் டிசம்பர் 2006ல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இதே போன்ற மசோதாவுயம் வாபஸ் வாங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நம்ம ஊர் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் அமைந்த பாராளுமன்றக் குழுவின் பரிந்துரையின் பேரில் அமைந்த மாற்றங்கள் இந்த மசோதாவில் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ன. முந்தைய மசோதாவின் மீதான சுதர்சன நாச்சியப்பன் எழுப்பிய ஆட்சேபணைகள் மற்றும் கேள்விகளை இன்றைய நாளேடுகளில் சட்டம் குறித்து எழுதும் வல்லமை படைத்த எல்லோரும் வெகுவாக சிலாகித்து இருக்கிறார்கள். அந்த மசோதாவில் சில அடிப்படை மாற்றங்கள் மற்றும் திருத்தங்களுடன் இந்தப் புது மசோதா பாராளுமன்றத்தின் முன் வைக்கப்படுகிறது.

சுதர்சன நாச்சியப்பன்

தேசிய நீதித்துறை கவுன்சில் அமைப்பு, உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர், மற்றும் இரு மூத்த நீதியரசர்கள் மற்றும் இரு உயர்நீதிமன்றங்களின் மிகவும் மூத்த நீதியரசர்களைக் கொண்டு அமைக்கப்படும். ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியின் மீதும் உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதியரசர் மற்றும் நீதிபதிகள் மீதும் ஒரு தனிமனிதர் முறையீடு பதிவு செய்யலாம். முறையீடு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் மீது இருக்கும் பட்சத்தில் அவர் இந்த அமைப்பில் பங்கேற்காமல், கவுன்சிலின் தலைமை குடியரசுத் தலைவரால் அடுத்த மூத்த நிதியரசரிடம் வழக்கு ஒப்படைக்கப்படும். முறையீட்டின் தன்மையை ஆய்ந்து, தக்க விசாரணைகள் செய்து ஒரு நீதிபதியின் மீது குற்றம் நிரூபணம் ஆனல் கவுன்சில் பாராளுமன்றத்துக்குப் பரிந்துரை செய்து அந்த நீதிபதியை பதவி நீக்கம் செய்யலாம். (கொஞ்சம் மூச்சு வாங்கிக்கலாம்),

உயர்மட்ட நீதிபதிகளின் நடவடிக்கைகளைக் கேள்வி கேட்க ஒரு தனிமனிதனுக்கும் அதிகாரம் கிட்டும் அதே நேரத்தில் இன்னொரு ஆபத்து இருப்பதையும் மறுப்பதற்கில்லை. எந்த வழக்கின் தீர்ப்புக்கும் இருபக்கங்கள் உண்டு. ஒன்று வெற்றி. இன்னொன்று தோல்வி. தோல்வியுற்றவர்கள் தங்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக நோக்கங்களைக் கற்பிக்கும் ஆபத்து எப்போதுமே உண்டு. அதனல் ஒரு நீதிபதியின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டினை தேசிய நீதித்துறை குழுமம் தீர ஆராய்ந்து, குற்றம் சாட்டப்பட்ட நீதிபதிக்கும் தன் பக்கத்து வாதத்தை முன்வைக்க வாய்ப்பளித்து பிறகே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

எனவே எல்லாவகையிலும் ஒரு பாதுகாப்பான ஒரு மசோதாவாகத்தான் பாமரப் பார்வைக்குப் படுகிறது.

ஆனல் சட்ட வல்லுனர்கள் இரு தரப்பிலும் போட்டுக் கிழித்துத் தோரணம் கட்டத் தொடங்கும்போது இந்த மசோதாவின் எல்லாப் பக்கங்களும் நம் பார்வைக்குக் கிட்டும்.

எது எப்படியோ தங்கப்பதக்கம் திரைப்படத்தில் சிவாஜி மற்றும் பிரமிளா ஒரு பாடல் காட்சியில் தங்கள் மிகை நடிப்பின் ஊடாக ஒரு கேள்வியைக் கேட்டு பதிலும் கொடுத்துக் கொள்வார்கள். (வார்த்தைகள் அப்படியே இல்லையென்றாலும் பொருள் மாறாமல் கொடுக்க முயற்சிக்கிறேன்)

ஊருலே இருக்கிற சின்னச் சின்ன நதியெல்லாம் அந்த வற்றாத ஜீவநதியைப் பார்த்து ஆறுதல்
அடையும். அந்த நதியே காய்ந்து போன?

பக்தர்கள் தங்கள் குறையை
தெய்வத்துக்கிட்டே முறையிடுவாங்க... அந்தத் தெய்வமே கலங்கி நின்னா?...
இந்த மாதிரியான சினிமாத்தனமான எடர்னல் கேள்விகளுக்கு எல்லாம் கொஞ்சம் விடை கிடைக்கிற மாதிரி அமைந்திருக்கிறது இந்த மசோதா என்று சொல்லலாமா?

இன்னும் ஒன்று.
நாட்டாமை தீர்ப்பை மாத்தி எளுதூ....
என்று யாரும் நீதிபதிகள் அருகில் போவதற்குக் கொஞ்சம் பயப்படுவார்கள் இல்லையா?



Wednesday, October 8, 2008

தூரன் பற்றிய ஒரு நல்ல நூல்

இது பெரியசாமித் தூரனின் நூற்றாண்டு. வழக்கப்படி தமிழ் சமூகத்தால் பெருமளவு எந்தவகையிலும் பேசப்படாது, சரியான வகையில் நினைவுகள் கொண்டாடப்படாது விடப்பட்டவர்களில் தூரனும் ஒருவர். ஒரு நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் ஆண்டிலும் அவரைப் பற்றிய பல தளங்களில் ஆழ்ந்த மௌனம் மட்டுமே கடைப்பிடிக்கப்பட்டது. இதுபோன்ற ஒரு வருத்தமளிக்கும் சூழலில் பாரதிய வித்யா பவன், கோயமுத்தூர் மையம் பதிப்பித்து இருக்கும் "தொண்டில் கனிந்த தூரன்'' என்னும் நூல் பெரியசாமித் தூரன் போன்ற ஒரு அற்புதப் படைப்பாளியின் பன்முகத் தன்மையை மிகவும் அற்புதமாகப் பதிவு செய்திருக்கின்றது.


சிற்பி பாலசுப்பிரமணியம் தொகுப்பாசிரியராகவும் டாக்டர் இராம.இருசுப்பிள்ளை மற்றும் டாக்டர் ஐ.கே.சுப்பிரமணியன் ஆகியோர் இணை ஆசிரியர்களாகவும் இந்த நூலில் அரும் பங்காற்றியிருக்கின்றனர். பாரதிய வித்யா பவன், கோவை மையம் இதுவரை, ராஜாஜி அவர்களின் உரைகள், கட்டுரைகள் அடங்கிய இரு தொகுப்புக்கள், சி.சுப்பிரமணியம் அவர்களைக் குறித்த Passion for Excellence, இசையரசி டி.கே.பட்டம்மாள் பற்றிய, கான சரஸ்வதி ஆகிய நூல்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அந்த நூல்களின் வரிசையில் நூற்றாண்டு காணும் பெரியசாமித் தூரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நூல் வெளியீடு அமைந்துள்ளது. அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களின் அற்புதமான முன்னுரை இந்த நூலுக்கு அணிசேர்க்கிறது.