Wednesday, February 11, 2015

தானே வைத்துக் கொண்ட ஆப்பு - டெல்லி தேர்தல் முடிவுகள்

டெல்லியில்  இத்தனை ஆண்டுகளாக வசித்து டெல்லி மக்களின் மனநிலையை எப்படி உன்னால் கணக்கிட முடியாமல் போனது என்று முகநூலில் நண்பர் ஒருவர் கேட்டிருந்தார்.

அவர் கேட்டது சரியான கேள்வி.  டெல்லி சட்டசபை தேர்தல் குறித்த என்னுடைய அனுமானம் முற்றாக தவறிப் போனதை ஏற்றுக் கொள்கிறேன்.   தொங்கு சட்டசபையை டெல்லியில் என்னைப்போலவே  பலரும் எதிர்பார்த்தனர்.  பாஜகவுக்கு 20 இடங்களுக்கு மேல் வரும் என்று எதிர்பார்த்தது.  காங்கிரசுக்கும குறைந்தது 10 இடங்கவளாவது வரும் என்றும் எதிர்பார்த்தது.  ஆனால் நடந்தது முற்றிலும் வேறாகிவிட்டது.

அதற்காக வருத்தம் எதுவும் இல்லை. ஆனால் டெல்லியில் நடக்கப்போகும் அரசியல் விளையாட்டுக்கள்  குறித்து கொஞ்சம் பயம் இருக்கிறது. அதைப் பற்றி இப்போது பேச வேண்டாம் என்று தோன்றுகிறது.  அப்படி  பேசுவதும் நியாயமாகவும் இருக்காது.     


டெல்லி தேர்தல் குறித்த கணிப்பை கூறுவதுபோல 7 பிப்ரவரி 2014 அன்று என்னுடைய பதிவின் இறுதியில்  கீழ்க்கண்டவாறு முடித்திருந்தேன். 
 
என்னுடைய மனக்குறளி மீண்டும் மீண்டும் எனக்கு வலியுறுத்திக் கொண்டே வருவது இதுதான் – டெல்லியில் மீண்டும் தொங்கு சட்டசபை வருவதற்கான அறிகுறிகள் தான் அதிகம் உள்ளன என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
 
நான் டெல்லியின் நீரை  34 வருடங்களாகப் பருகி வருகிறேன்.  டெல்லியின் காற்றை சுவாசித்து இருக்கிறேன்.  டெல்லி எனக்கு 34 ஆண்டுகளாக சோறிட்டு இருக்கிறது.  டெல்லியில் ஜீவசமாதியாக அடக்கமாகியுள்ள மகாபுருஷர்கள்  பலரும் என் மீது தங்கள் அருள் மழையை பொழிந்து உள்ளனர்.
  

எனவே இதனை டெல்லியின்  மீதான என்னுடைய  சாபமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

அப்படி தொங்கு சட்டமன்றமாக வரவில்லை என்றால் உங்களைப் போலவே நானும்  மிகுந்த   மகிழ்ச்சி அடைவேன்.

தற்போது டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெருத்த வெற்றி அபார வெற்றி அல்லது வரலாறு காணாத வெற்றி என்பது வெறும் சம்பிரதாயமான வார்த்தை – 

உண்மையில் டெல்லியின்  வாக்காளர்கள் அதகளம் செய்துள்ளனர்.


இந்த வெற்றியை ஆம் ஆத்மி கட்சியினரே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

வெளியில் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் கண்டிப்பாக பெருத்த அதிர்ச்சிக்கு ஆளாகியிருப்பார்கள்.

டெல்லியில் போட்டியிட்ட பிரதான கட்சிகளின் தலைவர்கள் ஆளாளுக்கு நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று மாறி மாறி அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார்கள்.  இது இயற்கைதான்.  யாரும் செய்யும் காரியம் தான்.
தேர்தலுக்குப் பிறகு ஆம் ஆத்மி ஆதரவு கேட்டால் நாங்கள் தர மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர்களும் நாங்கள் தோற்றாலும் காங்கிரசிடம் ஆதரவு கேட்க மாட்டோம் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கூறும் அளவில் சென்று கொண்டு இருந்ததையும் யாரும் மறக்க முடியாது.



இப்போது எல்லாமே தலைகீழாகி விட்டது.

இன்று காலை பாஜக கட்சியின்   முக்கியமான தலைவர்கள் சிலருடன்  பேசிக் கொண்டிருந்தபோது தங்கள் தோல்விக்கான காரணங்களாக அவர்கள் கூறியவை –

  • பாஜக தலைவர்கள் பலரும்  பதவிக்கு வந்ததும் தாங்கள் ஏதோ வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவர்கள் போல நடந்து கொண்டார்கள்.   தலைவர்களில் பலரும் யாரையும் மதிக்காமல் சிறுமைப்படுத்தி வந்தார்கள்.     இதில் முக்கியமாகக் குறிப்பிடப்படும் பெயர்கள் – அருண் ஜெட்லி, ரவி சங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன், செய்தித் தொடர்பாளராக இருந்து இப்போது பொதுச்செயலாளர்களில் ஒருவராக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீகாந்த் சர்மா ஆகியோர் நடந்து கொள்வது கட்சியிலேயே பலருக்கும் பெருத்த அதிருப்தியும் வெறுப்பும் ஏற்படுத்தியுள்ளது.
  • போதும் போதும் என்று மக்களுக்கு திகட்டும் அளவில் மோடியை கட்சி முன்னிறுத்தியது.

  • டெல்லி பாஜகவில் கடுமையான உழைப்பை நல்கிய பல தலைவர்கள் இருக்கும்போது திடீரென்று கட்சியில் இணைந்த கிரண் பேடியை முதல்வர் வேட்பாளராக்கியதால் மாவட்ட அளவில் கட்சி வேலைகளை பார்த்து வந்த தலைவர்கள் யாரும் துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை.    பாஜக தோற்க வேண்டும் என்று டெல்லி பாஜக தலைவர்களே பிரார்த்தனையில் ஈடுபட்டதாகக் கேள்வி. (அவர்கள் பிரார்த்தனை பலித்ததில் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்களா என்று அவர்களைக் கேட்க வேண்டும்).

  • பொதுவாக டெல்லியில் பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ்.பெரும்பலமாக பின்னணியில் உள்ள அமைப்பு.  அவர்களின் கடுமையான உழைப்பு எப்போதுமே கட்சிக்கு பேருதவியாக இருந்து வருகிறது.  இந்தத் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் தேர்தலில் வேலை செய்யவில்லை.

  • மோடி டெல்லியில் மேற்கொண்ட மிகவும் மலிவான பிரச்சார உத்திகள் – பல இடங்களில் மோடி கெஜ்ரிவாலை மிகவும் கீழ்த்தரமாக தாக்கியிருக்கிறார்.  இது ஒருவகையான எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியது என்கிறார்கள்.

  • காங்கிரசின் வாக்கு வங்கி  அப்படியே மொத்தமாக பாஜக எதிர்ப்பாக ஆம் ஆத்மி கட்சிக்கு சென்றிருக்கிறது.  அந்த ஓட்டுக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு மட்டுமே பெரிதும் உதவியிருக்கிறது.

இப்படி பல காரணங்களை பாஜக நண்பர்கள் கூறி வருகிறார்கள்.

மொத்தத்தில் பாஜகவுக்கு எதிரான டெல்லி மக்களின் கோபம் ஆம் ஆத்மி கட்சியை இந்த அளவுக்கு வெற்றியின் உச்சத்துக்கு கொண்டு செல்ல உதவியிருக்கிறது.

இந்த தேர்தல் முடிவு மிகவும் விசித்திரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.  ஒரு தொலைக்காட்சி  விவாதத்தில் மூத்த பத்திரிகையாளர் சேகர் கூறியதுபோல இந்த முடிவு மூன்று அணியினரையும் அளவற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  இது உண்மையிலேயே விசித்திரமான விஷயம்தான்.  மூன்று தரப்புக்கும் மகிழ்ச்சி எப்படியென்றால்-

  • இத்தனை பெரிய, தாங்களே அதிகம் எதிர்பார்க்காத பிரம்மாண்டமான வெற்றியை அடைந்த ஆம் ஆத்மி கட்சியினர் அடையும் அளவற்ற மகிழ்ச்சி.

  • மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு, மோடி அலை நாடு முழுதும் வீசிவருகிறது என்று மார்தட்டி வந்த பாஜகவுக்கு தலைநகரில் வெறும் 3 இடங்களே கிட்டி முட்டி கிடைத்ததில் காங்கிரஸ் கட்சியினர் அடைந்த ரகசிய குதூகலம்,   

  • மூன்று முறை தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த தேசிய கட்சியான காங்கிரஸ் ஒரு இடம் கூட பெறாமல் – 63 இடங்களில் டெபாசிட் இழந்ததில் பாஜகவினரின் ஆனந்த புளகாங்கிதம்

இப்படி அனைத்து தரப்பினரையும் ஆனந்த சாகரத்தில்  திளைக்க வைத்த தேர்தல் முடிவு இதுவாகத்தான் இருக்கும்.

கெஜ்ரிவால் அரசு எப்படி இருக்கும் என்று இப்போதைக்கு ஹேஷ்யம் எதையும் சொல்வது நன்றாக இருக்காது. இப்போதைக்கு எதையாவது அச்சு பிச்சென்று சொல்லி வைத்தாலும் புரட்சியாளர்கள் பின்னிப் பெடல் எடுத்து விடுவார்கள்.  நிறைய பேர் நேற்றில் இருந்து கொலை வெறியில் அலைகிறார்கள்.  அவர்களிடம் சிக்கினால் கதை கந்தலாகி விடும்.

மோடி மயக்கம் தெளிந்தது போல  மயக்கங்களும்   கொஞ்சம் தெளியட்டும்.

அதனால் இப்போதைக்கு வேடிக்கை மட்டுமே  பார்க்கலாம்.  சும்மா வேறு எங்கோ முழித்துக் கொண்டு நிற்க வேண்டியதுதான் சமர்த்தான காரியம்.

முடிக்கும் முன்பு ஒரு விஷயம் –

இதனை எழுதிக் கொண்டிருக்கும்போதே டிவியில் ஒரு செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது.  


நரேந்திர மோடிக்கு எங்கோ கோயில் கட்டி அவருடைய விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள் என்று பார்த்தேன்.  நிறைய தொண்டரடிப் பொடிகள் அபிவாதயே செய்து கொண்டிருக்கின்றன.

அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு பாஜகவுக்கு இன்னும் பெரிய ஆப்பு தயாராகி வருகிறது என்பதைத்தான் இது காட்டுவதாக எனக்குத் தோன்றுகிறது.



Sunday, February 8, 2015

பால்சந்த்ர நெமடே - ஆங்கிலத்தை விரட்டும் ஆங்கில வாத்தியார்


எடுத்த உடன் ஒரு உண்மையை நேரடியாக ஒப்புக் கொண்டு இந்தப் பதிவை துவங்குவதுதான் உத்தமமான காரியமாக இருக்கும். 

இந்த ஆண்டின் ஞானபீடப் பரிசுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பால்சந்த்ர நெமடே பற்றி இந்த விருது பற்றிய அறிவிப்புக்குப் பிறகுதான் கேள்விப்படுகிறேன்.  இதற்கு முன்பு  இவரைப் பற்றி நான் எங்கும் படித்தது இல்லை,.  கேள்விப்பட்டது  இல்லை,

இவரைப் பற்றிய விபரங்கள் எல்லாம் விருது அறிவிக்கப்பட்ட பிறகுதான் வழக்கமாக  விருது பெற்றவரைப் பற்றி எழுதுவதற்கு அனைவரும் பிரயோகிக்கும் சம்பிரதாயங்களின் அடிப்படையில் அங்கும் இங்கும் நோண்டியும் பிறாண்டியும்   தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.  

அது சரி.   என்னைப் போன்ற ஆட்களுக்கு  தமிழிலேயே இன்னும் நிறைய பேரை படிக்க வேண்டியது பாக்கி இருக்கு.  இங்கே மராத்தி எழுத்தாளரின் படைப்பைப் பற்றி எங்கிருந்து விருது பெறுவதற்கு முன்பே தெரிந்து கொள்வது?

நம்முடைய சிறுபத்திரிகை ஜாம்பவான்கள் மற்றும் பின் நவீனத்துவ மகாமேதைகளிடமிருந்து கற்றுக் கொண்ட மரபின் படி ஸ்பெயின், மொராக்கோ, ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்வாஹிலி, அரபி, லத்தீன், கிரேக்கம், துருக்கி, சீனம் போன்ற உலக மொழிகளில் எழுதும் மகா மகா எழுத்தாளர்களின்  பெயர்களையும் அவர்களின் படைப்புக்களின் பெயர்களையும் யாரையாவது பயமுறுத்துவதற்கு உதிர்க்க முடிகிறது.

ஆனால்   இந்த நாட்டில் மற்றொரு மொழியில் எழுதி வரும் ஒரு  மனிதருக்கு ஏதாவது ஒரு நாள் சடாரென்று இப்படி இம்மாம் பெரிய விருது கிடைக்கும் என்று யார் எதிர்பார்த்திருக்க முடியும்?


சில ஆண்டுகளுக்கு முன்பு நெமடேக்கு மத்திய அரசு பத்மவிருது அளித்துள்ளது.  அப்போதாவது ஏதாவது நோண்டி எடுத்து தெரிந்து வைத்திருக்கலாம்.  அது சரி.  இப்படி திடீரென்று இந்த மனிதருக்கு ஞானபீட விருது அளிப்பார்கள் என்று  யாருக்குத் தெரியும்?

எதிர்பார்த்து இருந்தால் ஏதாவது ஓரிடத்தில்  இந்த மீசைக்காரரின் பெயரை முன்னாலேயே   உச்சரித்து இருந்திருப்பேன்.  

ஆனால் இப்போதைக்கு உடனடியாக என்னால் எந்த உறுதியும் அளிக்க முடியாது.

Saturday, February 7, 2015

67.21 சதவிகிதத்தில் ஒளிந்திருக்கும் நான்…

அர்விந்த் கெஜ்ரிவால் இழைத்த அரசியல் பிழையினால் ஒரு வருடத்துக்குள் டெல்லி மக்களாகிய நாங்கள்  இன்று மீண்டும் ஒருமுறை வாக்களிக்கும் பாக்கியத்தை பெற்றோம்.

நான் வாக்களித்த சாவடி  அர்விந்த் கெஜ்ரிவால் போட்டியிடும் புது டெல்லியின் மையமான சாவடிகளில் ஒன்று.  காலையில் சுமார் 10.00 மணிக்கு நிதானமாக நாஷ்டா முடித்து விட்டு வாக்குச் சாவடிப் பக்கம் எட்டிப் பார்த்தால் சாவடியில் தேர்தல் அதிகாரிகள் சாவகாசமாக பிரெட் பக்கோடா சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.  எந்த வரிசையும் கிடையாது.  நிதானமாக சென்று நானும் என் மகளும் டெல்லியின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் டெல்லியின் வாக்காளர்களாக அதிகாரபூர்வமாக பதிவு பெற்ற  1.19 கோடி மக்களில் இருவரானோம்.

என்னைப் போன்று நாற்காலியில் உட்கார்ந்து கோஷ்டி விளையாட்டுக்களை வேடிக்கை பார்க்கும் மற்ற நாற்காலிக்காரர்கள் ஒவ்வொருவராக இந்த கோஷ்டி விளையாட்டில் பங்கேற்க வந்து கொண்டிருந்தார்கள்.

வாக்குச் சாவடியில் இருந்து வெளியேறும் போது இடது கை ஆட்காட்டி விரலை ஆகாயம் நோக்கிக் காட்டி ஏதோ கெட்ட ஜாடை செய்வது போலவும் டெல்லிக்கு ஆப்பு வைத்து முடித்தாகி விட்டது என்று கூறாமல் கூறுவது போலவும் ஆளாளுக்கு ஃபேஸ்புக்கில் போட்டுக்கொள்ள மேல்நோக்கிய இடது கை ஆட்காட்டி விரலுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதில் மும்முரமாக இருந்தார்கள்.


2013-ம் ஆண்டில் இதே வாக்குச் சாவடியில் நீண்ட நேரம் வரிசையில் நின்று வாக்களித்த நினைவு இருக்கிறது.    என்னைப் போலவே பலரும் நீண்ட வரிசைகளில் தவிப்புடனும் சலிப்புடனும்  அப்போது வரிசையில் நின்றிருந்தனர். 

அந்த தேர்தலில்  இளைய தலைமுறையினர் அதிகமாக இருந்தார்கள்.  உற்சாகமாகக் கலந்து கொண்டார்கள்.  வாக்குச் சாவடிகளுக்கு வெளியில் ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்கள் பெருந்திரளாகக் குழுமியிருந்தார்கள்.  இப்போது அப்படி ஒன்றும் பெரிய கூட்டம் எல்லாம் இல்லை. வாக்காளர்களை விட போலீஸ்காரர்கள் அதிகமாக இருந்தார்கள்.

Friday, February 6, 2015

All are equal and some are More Equal

லாலு பாய் ஒரு வழியாக டெல்லியில் பல ஆண்டுகளாக விடாப்பிடியாக பிடித்து வைத்துக் கொண்டிருந்த அரசு பங்களாவை  சென்ற மாதம் காலி செய்திருக்கிறார் என்று செய்தி வெளியாகி இருக்கிறது.

கடந்த 2004-ம் ஆண்டில்  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ரயில்வே    அமைச்சராகப் பொறுப்பேற்ற போது புது டெல்லியின் 25 துக்ளக் ரோடு என்னும் முகவரியில் உள்ள  இந்த பங்களாவில் அவர்  குடியேறினார்.

கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 
தகுதி இழப்புக்குப் பிறகு விதிமுறைகளின் அடிப்படையில் டெல்லியில் அவர்   அரசு பங்களாவில் தங்க முடியாது     ஆனால் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது இவருடைய வாய்க்கு பயந்து அமைச்சரவைக் கூட்டத்தில் வயிற்றெரிச்சலுடன் தீர்மானம் நிறைவேற்றி  ஒரு ஆண்டு காலத்துக்கு  நீட்டிப்பு வழங்கப்பட்டது.  

இறுதியாக 2014 அக்டோபர் வரை இந்த சலுகை முடிவடைந்ததும் அந்த பங்களாவை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பிக் கொண்டிருந்தது மத்திய அரசு.  தன்னுடைய உடல் நலத்தைக் காரணம் காட்டியும் பேரப்பிள்ளைகளின் படிப்பை காரணம் காட்டியும் மேலும் கால அவகாசம் கோரியிருந்தார் லாலு.

இது தொடர்பாக மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவை நேரில் சந்தித்து லாலு கோரிக்கை விடுத்ததாகவும் அந்த வேண்டுகோளை அமைச்சர் ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.