Monday, April 23, 2012

செம்மை - சிறுகதைகளுக்கான காலாண்டிதழ்

இன்று உலகப் புத்தக தினத்தில் செம்மை காலாண்டிதழ்  கூரியர் வழியாகக் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  தமிழில் சிறுகதைகளுக்கு என்றே ஒரு இதழ் என்ற விஷயம் அதை விட மகிழ்ச்சி அளித்தது. 

சில நாட்களுக்கு முன்பு  தூறல் சிற்றிதழில் செம்மை இதழின் விளம்பரம் காணநேர்ந்தது.  ஆசிரியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு இதழை என் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டினேன். 

இதழை அனுப்பி வைத்த ஆசிரியர் நஞ்சுண்டனுக்கு என்னுடைய  அன்பான நன்றி.

அதைவிட முதலில் என்னுடைய மனமார்ந்த வாழ்த்து அவருக்கு.  சிறுகதைகளுக்கு மட்டுமே என்று ஒரு இதழை துவங்குவதற்கு மிகப் பெரிய தைரியம் வேண்டும்.  சிறுகதைகளை கொஞ்சம் கொஞ்சமாக நாம் உதாசீனப்படுத்தத் துவங்கியிருக்கும் நேரம் இது.  பல பிரபல பத்திரிகைகளில் சிறுகதைகள் இப்போது காணப்படுவது இல்லை.  அவற்றில் வந்தவை பெரும்பாலும் சிறுகதைகள் என்ற ஒரு வரையறைக்குள் அடங்காவிட்டாலும்.  பெரும்பத்திரிகைகளில் சிறுகதைகளின் இடங்களை இப்போது வேறு ஏதேதோ பிடித்துக் கொள்ளத் துவங்கியிருக்கின்றன.

Tuesday, April 17, 2012

தூறல் - சிறிய வடிவில் பெரிய வேலை

இன்று வட இந்திய தொலைக்காட்சி ஊடகத்தில் மம்தா பானர்ஜியின் அமைச்சரவையை சேர்ந்த ஒரு அமைச்சர் தங்கள் கட்சியினருக்கு விடுத்த ஒரு ஆணை அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ் கட்சியின் தொண்டர்களையும் தலைவர்களையும் சமூக ரீதியாக ஒதுக்கி வைக்கவேண்டும் என்று ஒரு கூட்டத்தில் தன்னுடைய கட்சியனருக்கு ஆணை விடுத்திருக்கிறார் அந்த அமைச்சர்.  மார்க்கிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினரின் வீடுகளில் திருமண உறவுகளை தொடராதீர்கள் - அவர்களை எங்காவது தேனீர்க் கடைகளில் பார்த்தால் கூடப் பேசாதீர்கள் என்பது போன்ற சில ஆலோசனைகளையும் கொடுத்திருக்கிறார்.  இப்படி ஆளுக்கு ஆள் கிளம்பினால் தொடர்ச்சியாகக் காமெடிக் காட்சிகள் அரசியல் அரங்கில் மேடையேறும் வாய்ப்புக்கள் அதிகமாகும்.

இது ஒருபுறம் இருக்கட்டும்.  இன்னொரு சம்பவம்.  நான் நேரில் பார்த்தது.

Thursday, April 5, 2012

புன்னகை - இருமாத இதழ்


ஏற்கனவே பல இடங்களில் சொல்லி இருப்பது போல, எழுதுவதை விட படித்துக் கொண்டு இருப்பது ரொம்பவும் பிடித்து இருக்கிறது. எதையாவது எழுதலாம் என்று உட்கார்ந்தால் உண்மையாகவே நெட்டி முறிக்கிறது. எழுதுவதற்கு என்று உட்காருவதே பிரம்மப் பிரயத்தனமாக இருக்கிறது.

கணிணியில் உட்கார்ந்தால் மின்னஞ்சல்களை மீண்டும் திருப்பித் திருப்பிப் பார்த்து ஏதாவது காமாசோமா என்று பதில் எழுதி, கண்ணுக்கும் கவனத்துக்கும் தென்படும் சில இணையதளங்களைப் படிப்பதில் நேரம் கழிகிறது. புத்தகங்களை விற்கும் இணையதளங்களுக்கு சென்று சொத்தை அழிக்கின்ற காரியம் இப்போதெல்லாம் அடிக்கடி நடக்கின்றன. நான்தான் கிறுக்கு என்று நினைத்தேன். நான் சந்தித்த அநேக நண்பர்கள் flipkart போன்ற தளங்களுக்கு அடிமை ஆகியிருக்கிறார்கள்.

இணையப் புத்தக சந்தையில் அலைவது, இசை கேட்பது போன்ற வேலைகளுக்கு இடையில் சில எழுத்தாளர்களின் பிரத்தியேக தளங்கள் நல்ல பொழுது போக்குத் தளங்களாக அமைகின்றன.

அது சரி. பைத்தியங்களை வேடிக்கை பார்க்க யாருக்குத்தான் சுவாரசியம் இருக்காது?