ஒரு அமைப்பு. அந்த அமைப்பில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர் தனிநபர் நிறுவனமாக அந்த அமைப்பை நடத்தி வந்தவர். அவரே தலைவரை நியமிப்பார். அவரே எல்லோரையும் நியமிப்பார். தன்னையே ஒவ்வொரு ஆண்டும் முக்கியமான பொறுப்பில் நியமித்துக் கொள்வார்.
அவர் தன்னுடைய அமைப்பிலேயே கலாட்டா செய்வார். அவருடைய வலுக்கட்டாயங்களுக்கு யாரும் ஒத்துப் போகாத சூழ்நிலையில் எப்போதும் சட்டைப் பையிலேயே தயாராக வைத்து இருக்கும் ராஜிநாமா கடிதத்தை எடுத்து சபையில் வீசுவார். அவரைத் தவிர அந்த அமைப்பில் யாருக்கும் ஓடியாட நேரம் இருக்காததால் அந்தக் கடிதத்தைத் திரும்பப் பெறச்சொல்லிக் கேட்டுக் கொண்டு அந்த மனிதர் வற்புறுத்தும் தீர்மானங்களை செயல்படுத்துவார்கள் அந்த அமைப்பில்.
ஒரு முறை அப்படி ஒரு கூட்டத்தில் அவர் முன்வைத்த தீர்மானத்துக்கு தலைவர் ஒத்துக் கொள்ளவில்லை. இவர் சத்தம் போட்டுப் பார்த்தார். அப்போது வேறு தலைவர். அந்தத் தலைவர் அயரவில்லை. நம்மாள் வழக்கமான தன்னுடைய அஸ்திரத்தை சட்டைப் பையில் இருந்து எடுத்து விட்டார். தலைவர் சத்தம் போடாமல் அதை எடுத்து தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு ""சரி. எல்லா ஆவணங்களையும் நாளை ஒப்படைத்து விடுங்கள்'' என்று சொல்லி எழுந்து சென்றுவிட்டார்.
நம்ம ஆளுக்குக் கையும் காலும் பதற ஆரம்பித்தது. ஏறத்தாழ ஒரு வாரத்துக்கு அந்தத் தலைவர் வீ்ட்டுக்கும் அலுவலகத்துக்கும் மாறி மாறி அலைந்து தலைவர் சட்டைப் பையில் போட்டு வீட்டுக்கு எடுத்துச் சென்ற தன்னுடைய ராஜிநாமா கடிதத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு மீண்டும் தன் டார்ச்சரை தொடர்ந்து வந்தார்.
இது நண்பர் ஒருவர் சொன்ன உண்மைக் கதை.
ஏறத்தாழ இதே போன்ற ஒரு காரியத்தை செய்து முழித்துக் கொண்டிருக்கிறார் தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் நிறுவனர் மற்றும் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் அவர்களின் நிலைமையும் சற்றேறக்குறைய இந்த நிலையை ஒட்டியதுதான்.
இத்தனை நாட்கள் அவருடைய தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை மாநில அரசும் மைய அரசும் தான் உதாசீனப் படுத்திக் கொண்டு இருந்தார்கள். இப்போது தெலுங்கானா பிரதேசத்து மக்களே அவரை அநியாயத்துக்குப் போட்டுத் தள்ளி விட்டார்கள். இதுவரை எனக்குத் தெரிந்து எந்தத் தலைவருக்கும் நேராத கொள்கை சார்ந்த சோகம் இது.
சென்ற ஆண்டு 14 சட்டமன்ற உறுப்பினர்களும் 4 பாராளுமன்ற உறுப்பினர்களும் தனி தெலுங்கானா மாநிலத்துக்கான கோரிக்கையை வற்புறுத்தி தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தார்கள். அந்தத் தொகுதிகளில் நடந்த மறுதேர்தலில் மக்கள் காங்கிரசுக்கும் தெலுகு தேசத்துக்கும் ஆதரவு அளித்து சந்திரசேகர ராவுக்கும் அவர் கட்சி வேட்பாளர்களுக்கும் அல்வா கொடுத்தார்கள்.
தெலுங்கு ராஷ்டிர சமிதி உறுப்பினர்கள் ராஜிநாமா செய்த பதினாறு சட்டமன்றத் தொகுதிகளில் அவர்களால் வெறும் ஏழு தொகுதிகளை மட்டும் மீண்டும் பெற முடிந்து இருக்கிறது. பாராளுமன்றத் தொகுதிகளில் நான்கில் இரண்டுதான் அவர்களுக்கு மீண்டும் கிட்டியுள்ளது. தனிப்பட்ட முறையில் சென்ற தேர்தலில் சந்திரசேகரராவ் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று ஒரு சாதனையை நிகழ்த்தினார். இந்த முறை மனிதர் பாவம். பதினைந்து ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே அவரால் வெற்றி காண முடிந்தது. இத்தனைக்கும் கரீம் நகர் தொகுதியில் டிஆர்எஸ் கட்சியினர் வாக்குச் சாவடிகளில் அழிச்சாட்டியம் செய்தார்கள் என்று செய்திகள் வெளியாகின. இதையும் மீறி படு மோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது அந்தக் கட்சி. தெலுங்கானா பகுதியில் டிஆர்எஸ் கட்சியினர் ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள்.
சரி. தெலுங்கானா பிரதேசம் பற்றிய பூகோள விபரங்களை லேசாகப் பார்ப்போம். ஆந்திர மாநிலத்தில் வாரங்கல், அதிலாபாத், கம்மம், மெஹ்பூப்நகர், நல்கொண்டா, ரங்காரெட்டி, கரீம்நகர், நிஜாமாபாத், மேடக் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது தெலுங்கானா பகுதி. இந்தப் பகுதியில் கிருஷ்ணா, கோதாவரி நதிகள் ஓடுகின்றன. ஆனாலும் ஆந்திராவின் பிற்படுத்தப்பட்ட பிரதேசம் அது. ஆந்திராவில் "தெலங்கானா" என்ற ஓசையில்தான் உச்சரிக்கிறார்கள்.
தெலுங்குப் படங்களில் இந்தத் தெலுங்கானா பகுதி மக்களை ஏறத்தாழ முட்டாள்கள் போல சித்தரிப்பார்கள். அந்தப் பகுதி மக்களைப் பற்றிப் பேசும்போதே உதட்டைக் கடித்துக் கொண்டு நக்கல் அடிக்கிற தொனியில்தான் பேசுவார்கள்.
இந்த நிலையில் தெலுங்கானா பகுதியை தனி மாநிலமாக அமைக்கக் கோரி நீண்ட நாட்களாக போராடி வருகிறது தெலுங்கானா ராஷ்டிர சமிதி. கடந்த மக்களவை தேர்தலில் தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க உதவி செய்வதாக உறுதியளித்து இவர்களைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்ட காங்கிரஸ் கட்சி காரியம் முடிந்ததும் வலுவாக அல்வா கொடுத்தது. அந்த மாநிலம் உருவாக்குதற்கான எந்த நடவடிக்கையினையும் முன்னெடுக்கவில்லை மைய அரசு. பலமுறை வற்புறுத்திய டிஆர்எஸ் கட்சியினர் சென்ற ஆண்டு மைய அரசுக்குத் தங்களின் ஆதரவை விலக்கிக் கொண்டார்கள்.
இந்தக் கட்சியின் தலைவர் பற்றி சொல்லவேண்டும் என்றால் தெலுங்கு தேசம் கட்சியில் ரொம்ப நாட்கள் இருந்தவர் சந்திரசேகர ராவ். அந்தக் கட்சி ஆட்சியில் இருந்தபோது சட்டசபையில் துணை சபாநாயகர் பொறுப்பில் இருந்தவர். தன்னை கட்சி மதிக்கவில்லை என்றும் தனக்கு சரியான பொறுப்பு தரவில்லை என்றும் குற்றம் சாட்டி அக்கட்சியை விட்டு விலகினார். பிறகு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை துவக்கினார். (நிறைய தேசிய நாளிதழ்கள் மற்றும் ஆங்கில தமிழ் இதழ்கள் கூட தெலுங்கானா ''ராஷ்டிரிய" என்றுதான் தவறாக எழுதுகிறார்கள்).
அவர் கட்சி துவங்கியதே ஒரு சுயநல நோக்குடன்தான் என்று அவருடைய அரசியல் எதிரிகள் குற்றம் சாட்டுகிறார்கள். மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் இருந்து அமைச்சர்களை விலக்கிக் கொண்டதும் நக்ஸலைட்டுகளின் மிரட்டலினால்தான் ஒழிய தெலுங்கானா மாநிலக் கோரிக்கையின் அடிப்படையில் அல்ல என்றும் சொல்கிறார்கள். டிஆர்எஸ் கட்சியின் தொண்டர்கள் சிலரை நக்ஸலைட்டுகள் தாக்கியும் கொன்றும் இருக்கிறார்கள்.
சோனியா காந்தியிடமும் தில்லியின் பல மூத்த காங்கிரஸ் தலைவர்களுடனும் தனக்கு நெருக்கம் அதிகம் என்று பரவலாக ஆந்திராவில் செய்தியைப் பரப்புவார் சந்திரசேகர ராவ். ஆனால் இவர் ராஜினாமா செய்தபோது இவரை யாரும் கண்டுகொள்ள வில்லை. அதுதான் மாபெரும் சோகம்.
சரி. மீ்ண்டும் ஒருமுறை தெலுங்கானா பிரச்னைக்கு வருவோம். வழக்கமாக மற்ற மாநிலங்களில் அவர்கள் பிராந்தியத்தை சார்ந்த பெருமையால். அதன் வளர்ச்சியினால் தனி மாநிலக் கோரிக்கைகள் எழும். ஆனால் தெலுங்கானாவில் வளர்ச்சி என்பது சுத்தமாக இல்லாது போனதால் தனி மாநிலத்துக்கான குரல்கள் எழுந்தன. இத்தனைக்கும் சென்னா ரெட்டியும் நரசிம்ம ராவும் தெலுங்கானா பகுதியை சேர்ந்தவர்கள். ஆனால் அந்தப் பகுதியின் வளர்ச்சிக்கு இவர்கள் இருவரும் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்கிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் அங்கே இருக்கிறார்கள். எனவே நக்ஸலைட்டுகள் அதிகமாக அங்கே உருவாகிறார்கள். மக்கள் போராட்டங்களுக்கு தளம் கிடைக்கிறது அங்கே.
ஒடுக்குமுறைக்கான எதிர்ப்பு என்பது இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாகத் தொடர்வது. நிஜாம் காலத்தில் இருந்தே ஒடுக்குமுறைகளை எதிர்த்துக் கிளம்பியவர்கள் இப்பகுதி மக்கள். காங்கிரஸ். தெலுங்கு தேசம் போன்ற கட்சிகள் இந்தப் பகுதி மக்களுக்கு இழைத்த துரோகங்கள்தான் அதிகம். அதன் விளைவுதான் சந்திரசேகர ராவ் போன்றவர்கள் அதனை தங்களுடைய அரசியல் பகடையாக பாவிக்க வழி செய்கிறது.
மக்கள் டிஆர்எஸ் கட்சிக்கு அளித்த தோல்வி அந்தக் கட்சியின் தனி மாநிலக் கோரிக்கைக்கு எந்த அளவில் ஆதரவு இருக்கிறது என்பதைத் தெளிவாக்குகிறது. அவருக்கு தெலுங்கானா பகுதி மக்கள் நல்லதொரு பாடத்தை அளித்து இருக்கிறார்கள். இந்தப்பதிவின் துவக்கத்தில் சொன்ன கதைபோலத்தான் சந்திரசேகர ராவுக்கும் நடந்து இருக்கிறது.