Sunday, August 30, 2015

டெல்லி தமிழ் சங்க உறுப்பினர்கள் சந்திப்பு

நேற்று 30 ஆகஸ்டு 2015 டெல்லி தமிழ் சங்க உறுப்பினர்கள் சிலர் ஒன்று கூடி டெல்லி தமிழ் சங்கத்தை சார்ந்த சில பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

முதன்முறையாக இதுபோன்று ஒரு கூட்டம் தமிழ் சங்கம் குறித்து நடைபெற்றது குறிப்பிடத் தகுந்த விஷயம்.

இதில் விசேஷம் என்னவென்றால், சங்க செயற்குழுவின் தேர்தல் முஸ்தீபுகள் போன்ற எந்தவிதமான நோக்கமும் இன்றி சங்கத்தின் நலன் கருதி ஒருசிலர் கூடி இதுபோன்ற ஒரு கூட்டத்தை கூட்டியிருப்பது அநேகமாக சங்க வரலாற்றில் இதுதான் முதன்முறை என்று நினைக்கிறேன்.

Wednesday, August 26, 2015

ஸ்டெப் கட்டிங்

டெல்லியில் காலடி எடுத்து வைத்த 1981-ல் இருந்து என்னதான் தலை போகின்ற வேலையாக இருந்தாலும் எங்கிருந்தாலும் முடிவெட்டிக் கொள்வது என்பது கோல் மார்க்கெட்டில் உள்ள ஆசாத் சலூனில்தான்.


காதை மறைக்கும் ஸ்டெப் கட்டிங், காலுக்குக் கீழ் பாதத்தை மறைக்கும் வகையில் பெரிய சூப்பர் சைஸ் பெல் பாட்டம் பேண்ட், பாபி காலர் (யானைக் காது காலர்) சட்டையுடன் கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை வந்து அங்கிருந்து டெல்லிக்கு ரயில் ஏறியபோது மற்ற எல்லா கவலையை விட என் ஸ்டெப் கட்டிங்கை பராமரிக்கின்ற கவலைதான் அதிகமாக இருந்தது.

பல ஆண்டுகளாக என் காதுகளை நானே கண்ணாடியில் பார்த்துக்கொள்ள முடியாத நிலை இருந்த காலமும் இருந்தது.

Tuesday, August 25, 2015

என்ன வெங்காய எழவோ...

டெல்லியில் சமீபத்தில் கண்களில் நீரை வரவழைக்கும் வெங்காய விலை ஏற்றத்தில் ஒரு புதிய டகால்டி -

டெல்லியின் அனைத்து மதர் டைரி  காய்கறி விற்பனை மையங்களில் வெங்காயம் கட்டுப்பாட்டு விலையில் 30 ரூபாய்க்கு கிடைக்கிறது.

காலை 7.00 மணியில் இருந்து 1 மணி நேரத்துக்கு விற்பனை செய்கிறார்கள்.

அந்த நேரத்தில் வியாபாரிகள் கூட்டமாக வந்து நிறைய வெங்காயத்தை அள்ளிச் சென்று கடைகளில் அதே வெங்காயத்தை 70 ரூபாய்க்கு கூசாமல் விற்கிறார்கள்.

இது அரசாங்கத்தின் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் நன்றாக தெரியும். ஆனால் அவர்கள் எந்த கேள்வியும் கேட்பது இல்லை.  எந்த நடவடிக்கையும் எடுக்க துணிவது இல்லை.

உணவு பொருட்களை பதுக்குகிறவர்கள் மற்றும் கள்ள சந்தையில் விற்பனை செய்கிறவர்களுக்கு எதிராக பல சட்டங்களும் அந்த சட்டங்களை நிறைவேற்ற அரசுத் துறையும் இருக்கிறது.

ஆனால் யாரும் எதையும் கண்டுகொள்வது இல்லை.

ஆனால் எவனாவது ஏழை தெருவோர வியாபாரி எங்காவது மாட்டினால் இந்த துறை அதிகாரிகள் ஏறத்தாழ ஷெர்லக் ஹோம்ஸ் ரேஞ்சுக்கு வேட்டையாடி அவர்களை உண்டு இல்லை என்று செய்து விடுவார்கள்.

வெங்காயம் சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜக ஆட்சி டெல்லியில் பறிபோனது ஏனோ நினைவுக்கு வருகிறது.

இந்த வெங்காய விலையேற்றத்தை பழிவாங்க மொத்தமாக வெங்காயத்தை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துவோம் என்று மூக்கு புடைக்க வாட்ஸ் அப் குழுக்களில் செய்திகளை அனுப்பி அதனை ஷேர் செய்யச் சொல்லி நடுராத்திரியில் பயமுறுத்தி வருகிறார்கள்.

இதற்கு வெங்காய விலையேற்றமே தேவலை என்று சமயத்தில் தோன்றுகிறது.