Tuesday, July 31, 2007

சி.சு.செல்லப்பா பற்றிய ஒரு முடிவுறாத ஆவணப்படம் - 2

ராகவன் தம்பி





இதற்கு முன் - சி.சு.செல்லப்பா பற்றிய ஒரு முடிவுறாத ஆவணப்படம் - பகுதி 1ல் முனைவர் செ.ரவீந்திரனுடன் சென்று பார்த்து விட்டு வந்ததைப் பற்றியும் அவரைப் பற்றிய ஒரு ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்று ரவீந்திரனிடம் சொன்னதையும் சொல்லி நிறுத்தி இருந்தேன்.

எழுதிக்கொண்டு போகிற போக்கில் ஒரு விஷயத்தை சுத்தமாக மறந்து விட்டேன். அது என்னவென்றால், வடக்கு வாசல் இதழில் முற்றிலும் வேறு ஒரு தளத்துக்கு படைப்பாளிகள் குறித்த அறிமுகங்கள் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டுத்தான் எல்லாவற்றையும் செய்து வருகிறேன். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் இருந்து சிறுபத்திரிகைகள் வாசித்து வரும் இலக்கிய ஜாம்பவான்களுக்காக மட்டுமே இந்தப் பத்திரிகை கொண்டு வரப்போவதில்லை என்று இந்தப் பத்திரிகை துவங்குவதற்கு முன்பிருந்தே எங்கள் ஊர் முனீஸ்வரர் மேல் சத்தியம் செய்திருந்தேன்.

வடக்கு வாசல் இதழின் பல வாசகர்கள் இந்த இலக்கியப் பரப்புக்கு முற்றிலும் புதியவர்களாக இருக்கிறார்கள். தமிழில் அறுபதுகளுக்குப் பிறகு ஏற்பட்ட கலாச்சாரச் சீரழிவுகளில் மிகவும் முக்கியமானது பல சீரிய இலக்கிய முயற்சிகள் பரந்த அளவில் மக்களுக்கு எடுத்துச் செல்லப்படவில்லை என்பதுதான். தரமற்ற அரசியல், சினிமா போன்ற அசுரத் தாக்குதல்களின் விளைபொருளான வெகுஜனக் கலாச்சாரம் தமிழில் நிகழ்ந்த பல அற்புதங்களைப் பற்றி, தமிழுக்குக் கிடைத்த பல அரிய வரங்களைப் பற்றி வெகுவான அளவில் தெரிந்து கொள்ள இயலாமல் செய்து விட்டன என்பதை மிகவும் வருத்தத்துடன் பலர் எழுதியும், பேசியும், குடித்து விட்டுக் கத்தியும் பைத்தியம் பிடித்து சட்டையைக் கிழித்துக் கொண்டும் ஓய்ந்து போயிருக்கின்றனர்.

என்னைப் போன்ற ஆட்கள் கொஞ்சம் புத்திசாலிகள். இவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிந்து கொண்டு பிரபலங்கள் மற்றும் அரசியல் மற்றும் ஆள் பலம் படைத்தவர்கள் எதையாவது உளறித் தொலைக்கும் போது ஒன்றும் தெரியாதது போல முகத்தை வைத்துக் கொண்டு ஓரிரண்டு வார்த்தைகள் பாராட்டி விட்டுத் தலைதெறிக்க ஓடிவிடுகின்ற சாமர்த்தியத்தை காலம் எங்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. நேரம் கிடைக்கும் போது யாராவது ஏமாந்தவர்கள் கிடைத்தால் அவர்களிடம் மட்டும் நவீன இலக்கியம் பற்றிக் கொஞ்சம் பேசி அல்ப சந்தோஷம் அடைந்து வருகிறோம்.

இந்த சாமர்த்தியங்களும் அற்பத்தனங்களும் எதுவுமே இல்லாது நிஜமான வாழ்க்கையை அதன் முழு அர்த்தத்துடன் வாழ்ந்தவர்கள் சி.சு.செல்லப்பா போன்ற இமயங்கள். வடக்கு வாசல் மற்றும் என்னுடைய வலைப்பூவில் செல்லப்பா பற்றிய கட்டுரை வாசித்த பல நண்பர்களும் பகைவர்களும் ""எல்லாம் சரி. செல்லப்பான்றது யாரு? அது யாரு ரவீந்திரன்?'' என்று கேள்விகளை அடுக்கிய போது சற்று வேதனையாக இருந்தது. தமிழ்ச் சூழலில் செல்லப்பாவுக்கு இன்றும் அறிமுகம் தேவைப்படுகிறது. ஆனால் இது காலத்தின் கட்டாயம். செல்லப்பாவுக்கெல்லாம் அறிமுகம் தேவைப்படுகிறதே என்று புலம்பி விட்டு மேலும் கொஞ்சம் மொட்டை பிளேடுகளைப் போடக் கிளம்பினால் அந்தப் பாவம் நிஜமாகவே என்னைச் சும்மா விடாது. எனவே அவரைப் பற்றிய மிகச்சிறிய சுருக்கமான குறிப்பு இங்கே.

1912ல் மதுரை அருகே சின்னமன்னூரில் பிறந்து வத்தலக்குண்டில் வளர்ந்த சி.சு.செல்லப்பா தமிழின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர். அவருடைய வாடிவாசல் புதினம் மிகவும் சிறப்பான ஒரு படைப்பு. புதுமைப்பித்தன், பி.எஸ்.ராமையா, திருலோக சீதாராம், க.நா.சுப்பிரமணியன் போன்ற தன் சமகால எழுத்தாளர்களின் நண்பராகத் திகழ்ந்தவர் சி.சு.செல்லப்பா. 1959ல் எழுத்து என்னும் இதழை மிகவும் சிரமப்பட்டு வெளிக் கொணர்ந்தார். கிராமத்து வீட்டை விற்று எழுத்து பிரசுரம் என்ற பெயரில் பல தரமான நூல்களைப் பதிப்பித்தார். எழுத்து என்னும் அவருடைய இதழ் தமிழ் நவீன இலக்கிய உலகில் மிகப்பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியது. இன்றைய பல நவீன இலக்கிய முயற்சிகளுக்கு எழுத்து முதல் தடம் அமைத்தது. தமிழில் விமர்சனம், புதுக்கவிதை, நவீன ஓவியங்கள், நவீன நாடகங்கள் போன்ற பல சாளரங்களைத் திறந்து விட்ட மாயத்தை நிகழ்த்தியது சி.சு.செல்லப்பா நடத்திய எழுத்து பத்திரிகை. தன் இறுதி மூச்சு வரை ஒரு உண்மையான காந்தியவாதியாக வாழ்ந்து மறைந்தவர் செல்லப்பா. அவர் எழுதிய ஒரே நாடகமான முறைப்பெண்ணை இயக்கி பலமுறை பல இடங்களில் மேடையேற்றி இருக்கிறேன். செல்லப்பாவுடன் எனக்குக் கிடைத்த அறிமுகம் என்பது அன்னையின் அருளும் சத்குருநாதன் திருவடிகளின் கருணையும் எனக்குக் கொடையாக அருளிய பெரும்பேறு என்று எப்போதும் எண்ணி நெகிழ்கிறவன் நான்.

பேராசிரியர் ரவீந்திரன் தில்லி பல்கலைக் கழகத்தில் இந்திய மொழிகள் மற்றும் இலக்கியத் துறையின் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது புதுவையில் வசிக்கிறார். தமிழ் நாடக மேடைகளில் ஒளியமைப்புக்குத் தனிப் பெருமை பெற்றுத் தந்தவர். உலகின் பல அரங்குகளில் ஒளி நெறியாளுகை செய்து வருகின்றவர். யதார்த்தாவின் அனைத்து நாடகங்களுக்கும் ஒளி நெறியாளுகை செய்தவர். தனிப்பட்ட வகையில் எனக்குப் பல சாளரங்களைத் திறந்து வைத்தவர். உலக சினிமாக்கள் பற்றிய ஆழ்ந்த ஞானம் உடையவர். வட ஆற்காடு மாவட்டத்தின் தெருக்கூத்து பற்றிய இவருடைய கட்டுரைகள் மிக அற்புதமான தகவல்களைத் தருவன. தமிழின் நவீன நாடக வரலாற்றில் யாராலும் தவிர்க்க முடியாத பெயர் இவருடையது. இவரும் நானும் சி.சு.செல்லப்பாவைப் பார்க்கப் போயிருந்தோம். அதைப் பற்றி சென்ற இதழில் எழுதியிருந்தேன்.
செல்லப்பா வீட்டை விட்டு வெளியே வந்ததும் எங்களிடையே நிலவிய மெüனத்தை உடைத்து ""சார் இவரைக் கண்டிப்பா டாகுமெண்டரி எடுக்கணும்'' என்றேன்.

அது எந்த தைரியத்தில் நான் சொன்னது என்று இன்று வரை எனக்குத் தெரியாது. பொதுவாக என்னுடைய நாடக முயற்சிகள் மற்றும் இதற்கு முன்னர் தெருக்கூத்துக் கலைஞர் புரிசை கண்ணப்பத் தம்பிரானைப் பற்றிய ஒரு ஆவணப்படம் எடுத்ததும் மற்றும் சில சில்லரையான முயற்சிகளும் தற்போதைய தற்கொலையான வடக்கு வாசலும் ஏதோ ஒரு தைரியத்தில் விளைந்தவைதான். என்றாவது ஒரு நாள் இந்த முயற்சிகள் வெற்றி பெறும் என்றும் சக தமிழ்க்குடிகளால் என்றாவது ஒருநாள் ஆதரிக்கப்படும் என்ற தைரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் தான் என்று சொல்லலாமோ என்று தோன்றுகிறது. சில சாத்தியம் இல்லாத அசாத்தியங்களை நம்பியும் செய்கிறேனோ என்றும் சில சமயங்களில் தோன்றும்.

சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் நம்முடைய தமிழ் சினிமாக்களில் இருந்துதான் இதற்கான நேரிடையான உதாரணங்களை சொல்ல முடியுமா என்று பார்க்க வேண்டும்.
விஷயம் எப்படி என்றால், நீண்ட நாட்களாக நம் தமிழ் திரைப்படங்களில் எதிரிகள், காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, ராட்சச ஜீப்புகள், ஹெலிகாப்டர்கள், நீரைக்கிழித்து விரையும் போர்க்கப்பல்கள் போன்ற சகல வாகனாதிகளிலும் கதாநாயகனைத் துரத்துவார்கள். கதாநாயக வேடமணிந்த முதியவர் ஒரு சைக்கிளில் காற்றைக் கிழித்துக்கொண்டு செல்வார். அவருடைய லேசான இடது கால் வீச்சில் பல வாகனங்கள் எகிறி சிதைந்து பறக்கும். ஏ.கே 47, ஏ.கே.57, போன்ற நவீனரக துப்பாக்கிகளும் போஃபோர்ஸ் பேரத்தில் வாங்கப்பட்ட பீரங்கிகள் போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆயுதங்களாலும் அந்தக் கதாநாயக வேடமணிந்த முதியவரைத் தாக்குவார்கள். அதில் ஒரு குண்டு கூட தவறிக்கூட அவர் மேல் படாது. ஆனால் கதாநாயக வேடமணிந்த அந்த முதியவர் உண்டி வில் போன்ற அதிபயங்கர ஆயுதத்தை எதிரிகள் மேல் சுண்டி விடுவார். அதில் சுமார் இருபது பேர் பறந்து கீழே விழுவார்கள். ஒரு சிறிய ரப்பர் பந்தால் ஒவ்வொருவராகத் தாக்குவார். குறைந்தது 150 கிலோ எடையுள்ள சுமார் 15 பேர் பறந்து பறந்து கீழே விழுவார்கள்.

அதே போல கதாநாயகனாக வயதைக் குறைத்து ஒப்பனை செய்த ஒருவர் தன் மகள் வயதுடைய பெண் ஒருத்தியின் வீட்டுக்குப் போய் அவள் மேல் ஆசையிருப்பதாகவும் அவளுடன் பழகிப் பார்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுவார். அந்த வீட்டார்கள் மறுத்தால் என்ன? பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு விவஸ்தை கெட்ட கிழவர் தன் வீட்டில் இருந்து இரு பெண்களை அழைத்து வந்து அவர்களுடன் தாராளமாகப் பழகிப் பார்க்கச் சொல்வார். இப்படியாக "தொமிளு' கலாச்சாரம் பேணப்படும்.

இவையெல்லாம் சாத்தியமாகின்ற அசாத்தியங்களில் சேருகின்ற ரகங்கள் இல்லையா? இதற்குச் சற்றும் குறையாத சாத்தியமாகின்ற அசாத்தியங்களை நம்பித்தான் பல காரியங்களை செய்து வந்திருக்கின்றேனோ என்ற ஒரு ஐயம் வயதாகிக் கொண்டு வருகின்ற இப்போதெல்லாம் தோன்ற ஆரம்பித்து இருக்கின்றது.

இந்த ஐயம் உண்மையானால் அந்த சாத்தியம் ஆகின்ற அசாத்தியத்தை நம்பித்தான் செல்லப்பாவைப் பற்றிய ஒரு படத்தை எடுக்க வேண்டும் எனத் துணிந்தேன் என்று சொல்லலாம் என்றும் தோன்றுகிறது.

திருவல்லிக்கேணியில் இருந்து வேளச்சேரியில் உள்ள அண்ணன் வீட்டுக்குச் சென்றதும் மனைவியைத் தனியாக அழைத்து விஷயத்தைச் சொன்னேன். ஊட்டிக்குப் போவதாக வைத்திருக்கும் பணத்தை இப்போதைக்குக் கொடுத்தால் சென்னை வந்திருக்கும் இந்த நேரத்திலேயே படத்தை எடுத்து முடித்து விடலாம் என்றும் அவளிடம் சொன்னேன். அவள் ஒரு மாதிரியாக என்னைப் பார்த்துவிட்டு ""என்ன வேணும்னாலும் பண்ணிக்குங்க'' என்று சொல்லி விட்டு நகர்ந்து போனாள். எத்தனை வருடங்களாகப் பார்த்துக் கொண்டு வருகிறாள்? இரட்டைக் குடுமியுடன் தெருவில் பாண்டி விளையாடிக் கொண்டிருந்த என் பெண்கள் தில்லியிலேயே பிறந்து வளர்ந்ததால் அவர்களுக்கு ஊட்டி போன்ற விஷயங்கள் அவ்வளவாகத் தெரிந்திருக்க வில்லை. எனவே இன்னொரு கண்டத்தையும் தாண்டியாகி விட்டது.

அடுத்து என்ன? செல்லப்பாவைப் பார்த்துக் கேட்க வேண்டும். ஆவணப்படம் எடுக்க அவருடைய அனுமதியைப் பெறவேண்டும். ஆனால் இது போன்ற விஷயங்களுக்கு அவர் கோபித்துக் கொள்வார் என்பது நண்பர்கள் வட்டாரம் நன்கு அறிந்த விஷயம். பல விருதுகளை அவர் வேண்டாம் என்று ஒதுக்கியிருக்கிறார். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் தமிழ்ப் படைப்பாளிகளுக்கான ராஜராஜசோழன் விருது என்ற ஒன்றை அளித்து வந்தார். அந்த விருது வாங்குவதற்காக எம்.ஜி.ஆர். முன்னால் நாக்கைத் தொங்கவிட்டு கொண்டு பல தமிழ் தன்மான சிங்கங்கள் அலைந்து கொண்டிருந்தனர் என்று கேள்வி. செல்லப்பா வீட்டைத் தேடித் தகவல் சென்றது þ அவருக்கு ராஜராஜசோழன் விருது வழங்கப்பட்டிருப்பதாகவும் உடன் மற்ற இருபது எழுத்தாளர்களுடன் (எண்ணிக்கை சரியா என்று சரியாகத் தெரியவில்லை) அந்த விருதினைப் பகிர்ந்து கொள்ளக் குறிப்பிட்ட தேதிக்குக் குறிப்பிட்ட கலையரங்குக்கு வருமாறும் செல்லப்பாவுக்குக் கடிதம் கிடைத்தது. சீறி எழுந்தார் செல்லப்பா. தரமற்ற மற்றவர்களுடன் அந்த விருதினைப் பகிர்ந்து கொள்வதில் தனக்கு எந்த விருப்பமும் இல்லையென்று முதல்வருக்குக் கடிதம் எழுதியதுடன் தன்னைத் தேடி வந்த அரசு அதிகாரிகளையும் கடிந்து கொண்டு திருப்பி அனுப்பி விட்டார்.

கனடாவின் விளக்கு அமைப்பு அவருக்கு விளக்கு விருது வழங்க முன்வந்த போது விருதோடு வழங்கப்படும் தொகை தனக்குத் தேவையில்லை என்றும் அந்தத் தொகைக்குத் தன்னுடைய நூலொன்றை பதிப்பித்துத் தருமாறும் கேட்டுக் கொண்டார் செல்லப்பா. அதன்படி அவருடைய ""என் சிறுகதைப் பாணி'' நூல், விருது வழங்கும் விழாவில் வெளியிடப் பட்டது. சாகித்ய அகாதமி விருதும் அவர் காலமான பிறகே அவருடைய பெயருக்கு வழங்கப்பட்டது.

அதே போல செல்லப்பாவின் முறைப்பெண் நாடகத்தை மதுரையில் நடந்த நிஜநாடக இயக்கத்தின் நாடக விழாவின்போது எடுத்துச் சென்ற போது செல்லப்பா படுத்திய பாட்டினை கோமல் பற்றி முன்னர் எழுதிய சனிமூலை கட்டுரையில் விரிவாக விளக்கியிருக்கிறேன். படிக்காதவர்கள் மின்னஞ்சல், குறுஞ்செய்தி, புறா போன்ற சாதனங்களில் முகவரிகளை அனுப்புங்கள். அந்த இதழை இலவசமாக அனுப்பி வைக்கிறேன். அல்லது என்னுடைய வலைப் பதிவில் ""சனிமூலை கட்டுரைகள்'' என்னும் வகைமையில் பதிந்து வைத்திருக்கிறேன். படித்துப் பாருங்கள்.

சரி. இத்தனை கதையும் எதற்காக என்றால் செல்லப்பாவை அணுகி அவரை ஆவணப்படம் எடுப்பதற்காக அனுமதி கேட்பது யார்? என்னதான் நான்போகும் போதெல்லாம் கையைத் தட்டி ""முறைமைப்பெண் பென்னேஸ்வரன் வந்திருக்கான் பாரு'' என்று மாமியைக் கூப்பிட்டாலும் இது போன்ற விஷயங்களுக்காகப் போகும்போது என்ன சொல்வார் அல்லது என்ன செய்வார் என்று எனக்கு அடிவயிற்றில் பயம் இருந்துகொண்டே இருந்தது. முகத்தில் அடித்தது போல வேண்டாம் என்று அவர் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற கவலை அதிகமானது. செல்லப்பாவுக்கு மிக நெருக்கமான, அவரை மதிக்கின்ற, எழுத்துக்களால் அவரை மிகவும் மேன்மையாகப் பதிவு செய்திருக்கின்ற அவருடைய நண்பர்களை அணுகினேன். ஏதோ பேயைக் கண்டு அரண்டது போல தலை தெறிக்க ஓடினார்கள் அனைவரும். மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. ""உங்களுக்குத் தான் அவரைப் பற்றித் தெரியுமே? எதுக்கு வம்பு? எதுக்கும் நீங்களே கேட்டுப் பாருங்க. உங்களுக்கு மறுக்க மாட்டார்'' என்று என்னைக் கழற்றி விடப் பார்த்தார்கள். ஒருசிலர், "செல்லப்பாவோட பேசறதை நிறுத்தி ரொம்ப நாளாச்சு. இப்போ போய் நின்னா கழுத்தைப் பிடிச்சி வெளியே தள்ளிடுவார்' என்று முதல் படியிலேயே ஒதுங்கிக் கொண்டனர்.

நாள் தள்ளிக் கொண்டே போனது. எனக்குக் கிருஷ்ணகிரிக்கும் உடனடியாகப் போகவேண்டும். சரி. நாமே கேட்டுப் பார்ப்போம் என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டேன். ""போய் செருப்படி பட்டு வாங்க'' என்று வாழ்த்தி அனுப்பினாள் மனைவி. மீண்டும் நானும் ரவீந்திரனும் தொட்டாலே திறந்து கொள்ளக் கூடிய கதவுகளை உடைய அந்தத் திருவல்லிக்கேணி வீட்டு வாசலில் ஒரு நாள் காலை வேளையில் மீண்டும் நின்றோம்.

Sunday, July 22, 2007

அசுத்தப் போர்தூ... யாரூ...

உபதலைப்பு - அசத்திட்டீங்க ஷெகாவத் ஜி...
ராகவன் தம்பி




அசுத்தப் போர்தூ... யாரூ...

இது தமிழர்களின் அடையாளம் என்று சொல்லக்கூடிய சன் தொலைக்காட்சியின் தமில்மாலையில் பிரபலமான ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் ஒரு அம்மணியின் அவலக்குரல்.

சரி. அதற்கென்ன இப்போது?

இந்த வாரம் உண்மையில் நம் எல்லோரையும் ஒருவர் உண்மையிலேயே அசத்தி இருக்கிறார்.
அவர் வேறு யாருமல்ல..

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலை மிகவும் துணிச்சலுடன் எதிர்கொண்டு தோல்வியை மிகவும் கண்ணியத்துடன் ஏற்றுக்கொண்ட பைரோன்சிங் ஷெகாவத் தான் இந்த வாரம் நம் எல்லோரையும் அசத்தியவர்.

இந்திய அரசியலில் "அஜாதசத்ரு' என்ற செல்லப்பெயர் இவருக்கு உண்டு.

எண்பத்து ஐந்து வயதான ஷெகாவத் இளமையில் வறுமையின் கொடுமையை நேரிடையாக அனுபவித்தவர். ஒரு போலீஸ் கான்டபிளாகப் பணியாற்றிய இவர் தன் கடும் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பினால் ராஜஸ்தான் மாநிலத்தின் சட்டசபை உறுப்பினர் ஆனார்.
ராஜஸ்தானில் அந்த்யோதயா, வேலைக்கு உணவு போன்ற திட்டங்களில் தீவிரப் பங்கேற்றவர்.
அப்போதைய உலக வங்கித் தலைவர் இவரை ""இரண்டாம் ராக்ஃபெல்லர்'' என்று அன்புடன் அழைப்பாராம்.

"கழனியின் மண்ணாக இருந்து இப்போது நெற்றியில் இடப்படும் திலகமாக உயர்ந்திருக்கிறீர்கள்'' என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயால் புகழப்பட்டவர்.

1977ல் ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக இவர் பணியாற்றியபோது உலக வங்கியின் துணையுடன் பல்வேறு மக்கள் நலப்பணித்திட்டங்களை மிகவும் வெற்றிகரமாக அமுல்படுத்தியிருக்கிறார். பாராளுமன்ற மேலவைத் தலைவராகப் பணியாற்றி அந்தப் பதவிக்கு கண்ணியத்தை சேர்த்தவர்.

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் 331,306 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்து இருக்கிறார். கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா, மிசோரம் போன்ற மாநிலங்களில் இவருக்கு ஆதரவாக ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.

இவருடைய சொந்த மாநிலமான ராஜஸ்தானில் 134 வாக்குகள் இவருக்கு ஆதரவாகப் பதிவாகி இருக்கின்றன. திருமதி பாட்டீலுக்கு 63 வாக்குகள்.

தன்னுடைய தோல்வி குறித்து நன்றாகத் தெரிந்திருந்தும் குடியரசுத் தலைவர் தேர்தலில் நிற்பதில் அவர் காட்டிய உறுதி அசாத்தியமானது.

இவருடைய விஷயத்தில் தவறாகிப்போன ஒன்றே ஒன்று இவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு கிடைத்தது ஒன்றே.

நடுவில் அதிமுக போன்ற மூன்றாவது அணியினர் கொஞ்சம் டகால்டி வேலைகள் காண்பித்து இருக்கிறார்கள். அவை இவருடைய வெற்றி தோல்வியுடன் தொடர்பு இல்லாதவை.
ஆனால் அவர்களின் உண்மையான அரசியல் ரூபம் பிரத்யட்சமாகி இருக்கிறது. அது வரைக்கும் கொஞ்சம் மகிழ்ச்சி அடையலாம்.

நாம் தகவல் தொடர்புக்கு இன்னும் புறாக்களைத் தான் அனுப்பி வருகிறோம்.
ஓலைச்சுவடிகளில்தான் அரசிகளின் கட்டளைகள் ஏந்திச் செல்லப்படுகின்றன. அதனால்தான் சரியான வகையில் தலைவியின் செய்தி கட்சிக்காரர்களுக்கு சரியான நேரத்தில் சென்றடையவில்லை. எனவே, வாக்குப்பதிவில் இருந்து ஒதுங்கி நின்ற கட்சியின் சில விசுவாசிகள் ரொம்பவும் விசுவாசமாக வாக்களித்திருக்கிறார்கள்.

இந்தக் குடியரசுத் தலைவர் தேர்தல் விஷயத்தில் இரண்டாம் முறையாக அப்துல் கலாமை வேட்பாளர் ஆக்கும் யோசனையை மிகவும் பதட்டமாக நிராகரித்ததில் சோனியாவுக்கும் கருணாநிதிக்கும் உள்ள சொந்தக் காரணங்கள் மற்றும் சில தனிப்பட்ட வருத்தங்கள் எல்லோருக்கும் நிதர்சனமாகத் தெரியும். அதனால் இதில் வருத்தப் படுவதற்கோ அதிர்ச்சி அடைவதற்கோ எதுவும் இல்லை என்றே சொல்லலாம்.

ஆனால் இந்த விஷயத்தில் மிகவும் ஏமாற்றம் தந்தது கம்யூனிஸ்டு கட்சிகளின் நிலைப்பாடு மட்டுமே.

அரசியல் நிலைப்பாடு காரணமாக பைரோன் சிங் ஷெகாவத்தை அவர்களால் ஆதரிக்க முடியாது. ஆனால் அப்துல் கலாமுக்கு மாற்றாக அவர்கள் ஆதரிக்க முன்வந்த வேட்பாளர் எந்த வகையில் அவர்களுடைய கொள்கை மற்றும் நிலைப்பாட்டுக்கு ஏற்றவர் என்று அவர்கள் எப்போதாவது யோசித்துப் பார்க்கும்போது அவர்களுக்கே மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும்.

ஆனால் இதையெல்லாம் பார்த்தால் அரசியல் நடத்த முடியுமா? இன்னும் என்னென்னவெல்லாம் அவர்கள் பார்க்கவேண்டுமோ யாருக்குத் தெரியும்?

ஷெகாவத் வெற்றி பெறவில்லை.
ஆனால் ஒரு விஷயம் - இவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்திருந்தால் ஒரு நல்ல, திறமையான குடியரசுத் தலைவராக நமக்குக் கிடைத்திருப்பார்.

ஒரு பழுத்த அரசியல் அனுபவம் வாய்ந்த ஒரு மனிதர் நமக்குக் குடியரசுத் தலைவராக இருந்திருப்பார்.

இதை எல்லாம் பேசியும் ஒரு பயனும் இல்லை. நிஜம் எப்போதுமே வேறாகத்தான் முன் வந்து நிற்கிறது.

சோனியா காந்தி போன்றவர்களின் பிடிவாதம் வென்றிருக்கிறது.

தோல்வியை முன்கூட்டியே எதிர்பார்த்தும் ஒரு ஜனநாயக மரபைக் காக்க வேண்டி தேர்தலில் நிற்க சம்மதித்ததில், மிகவும் கண்ணியமான வகையில் தேர்தலை எதிர்கொண்டதில், அதைவிடக் கண்ணியமான வகையில் தோல்வியை ஏற்றுக்கொண்டதில் நிஜமாகவே அசத்தி இருக்கிறார் பைரோன் சிங் ஷெகாவத்.

வாழ்த்துக்கள்.

Saturday, July 21, 2007

அன்புமணி ராமதாசுக்கு வாழ்த்துக்கள்...

உப தலைப்பு - நான் ஆணையிட்டால்.... அது நடந்து விட்டால்...

ராகவன் தம்பி






மைய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாசுக்கு நேற்று உலக சுகாதார மையத்தின் ""புகையிலைக் கட்டுப்பாடு-2007'' விருது புது தில்லியில் வழங்கப்பட்டிருக்கிறது.
2003ம் ஆண்டில் Cigarettes and Other Tobacco Products (Prohibition of Advertisement and Regulation of Trade and Commerce, Production, Supply and Distribution) Act 2003 என்னும் சட்டத்தின் வழியாக பொது இடங்களில் புகைபிடிப்பதைத் தடை செய்ய வழிவகை செய்தும் திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் புகைபிடிக்கும் காட்சிகளைத் தடைசெய்ததிலும் மேலதிகப் பங்கு வகித்ததைப் பாராட்டும் விதமாக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது என்று அறிவித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.


புகையிலைக்கு எதிரான நடவடிக்கைககள் மற்றும் மதுவிலக்கு சார்ந்த நடவடிக்கைகள் என அவர் சார்ந்த கட்சி தீவிரமாக இருப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாக இருக்கிறது.
காங்கிரஸ் கட்சிக்குப் பிறகு (நான் சொல்வது காந்தி காலத்து, ராஜாஜி, காமராஜ் காலத்துக் காங்கிரஸ். இப்போதைக்கு உள்ள சோனியா காந்தி கார்ப்பொரேட் லிமிடெட் என்று தவறாகப் பொருள் கொள்ள வேண்டாம்) இந்த விஷயங்களில் ஒரு அரசியல் கட்சி இவ்வளவு தீவிரம் காட்டுவது உண்மையிலேயே மகிழ்ச்சி தரும் விஷயம் தான்.


அன்புமணி ராமதாஸ் அமைச்சரானதும் பொது இடங்களில் புகைபிடிப்பதை தடை செய்தது, சிகரெட் விளம்பரங்களைத் தடை செய்தது, தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் புகைபிடிப்பது போன்ற காட்சிகளுக்குத் தடை விதித்தது போன்ற மிகவும் நல்ல காரியங்கள் நடக்க முன்னோடியாக இருந்து வருகிறார்.


பொதுவாகவே, உலக அரசியல் அரங்கில் இது போன்ற, புகையிலை, மது போன்ற லாகிரி வஸ்துக்களை தடை செய்வது அல்லது அவற்றை மீண்டும் அனுமதிப்பது போன்ற விஷயங்களில் எப்போதும் பணம் விளையாடும் என்று சொல்வார்கள். ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வார்கள்.


இது போன்ற விஷயங்கள் எதுவும் நமக்குத் தெரியாது. நம் கண் முன்னால் தெரிவதெல்லாம் அன்புமணி ராமதாஸ் போன்ற இளையதலைமுறை அமைச்சர்கள் எடுக்கும் நடவடிக்கைகளின் விளைவாக நடக்கும் நல்லவைகள் மட்டுமே.


இந்த விருதுக்கு முற்றிலும் தகுதி பெற்றவர் ஆகிறார் அன்புமணி. விருது பெற்றதும் ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளின்போது அவர் சொன்னவை மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயங்களாக இருக்கின்றன.


இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் உணவகங்கள், விமான நிலையங்கள் போன்ற பணியிடங்களில் புகை பிடிப்பது அறவே தடை செய்யப்படும் என்றும், வீடுகளில் புகைபிடிப்பதைக் கூடத் தடை செய்யும் சட்டங்கள் கொண்டு வரலாம் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீதான தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப்படும் என்றும் சொல்லியிருக்கிறார்.


இந்திய மக்களுக்கு, குறிப்பாக புகையிலை பாவித்ததினால் அகால மரணமடைந்த இளம் தலைமுறையினருக்கு இந்த விருதினை தான் சமர்ப்பணம் செய்வதாக அவர் அறிவித்திருப்பது மிகவும் அற்புதமான விஷயம்.


அன்புமணி ராமதாசுக்கு என்னைப்போன்ற முன்னாள் புகைபோக்கிகளின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


எனக்கு சக்தி இருந்தால், எனக்கு பலம் இருந்தால், எனக்கு யோக்கியதை இருந்தால், என்னிடம் பணம் இருந்தால், என்னிடம் ஆள் பலம் இருந்தால், என்னிடம் அரசாங்கம் இருந்தால் அன்புமணி ராமதாசுக்கும் அவருடைய கட்சித் தலைவருக்கும் நான் தனியாக இன்னும் ஒரு விருது கொடுத்து இருப்பேன்.


அது என்னவென்றால், மாவீரன், தன்மானத் தலைவன், தமிழனப் புயல் ரஜினிகாந்த் போன்ற அதிருகின்ற புயல்களையெல்லாம் சிகரெட்டை உள்ளே சுருட்டி வைக்கச் செய்து வெறும் பப்பிள் கம்மைத் தூக்கிப் போட்டுப் பிடிக்க வைத்த பெருமை அன்புமணிக்கும் அவருடைய கட்சித் தலைவருக்கும் தான் உண்மையிலேயே சேரும்.


இதற்காகவே தமிழர்கள் இவர்களுக்குத் தனியாக ஒரு விருது வழங்க வேண்டும்.


வாழ்த்துக்கள்.

Thursday, July 19, 2007

சி.சு.செல்லப்பா பற்றிய ஒரு முடிவுறாத ஆவணப்படம்-1


சனிமூலை

ராகவன் தம்பி

நாம் எப்போதாவது "அவுச்சித்தாக' எதையாவது உளறித் தொலைக்கும்போது மேலிருக்கும் நமக்கு ரொம்பவும் வேண்டிய சில தேவதைகள் வர்ஜா வர்ஜியமில்லாது ""ததாஸ்து'' என்று சொல்லித் தொலைக்கும் என்று எங்கள் ஊர்ப் பெரியவர்கள் அடிக்கடி சொல்வார்கள்.

சி.சு.செல்லப்பாவைப் பற்றிய ஆவணப்படம் எடுக்க முனைந்தபோது இப்படித்தான் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். இது நடந்தது 1998ல். என்னுடைய நண்பன் ஒருவன் என் மேல் இருக்கும் உண்மையான அக்கறையில் கேட்டான். ""இது போன்ற படங்களை எடுத்து நீ என்ன சாதிக்கப் போறே? தமிழில் எவன் உனக்கு ஆதரவு கொடுக்கப் போகிறான்?'' என்றான்.

என் நாக்கில் சனி இருந்திருக்க வேண்டும். அல்லது என் பிறவிக்குணமான பிடிவாதம் மற்றும் மூர்க்கத்தனம் அப்போது உச்சகட்டத்தை அடைந்திருக்க வேண்டும். செருக்கு நிறைந்த குரலில் சொன்னேன். ""எவனும் ஆதரிக்கலைன்னா பரவாயில்லை. பொழுது போகாதப்போ எல்லாம் வீட்டிலே தனியா போட்டுப் பார்த்துக்குவேன். செல்லப்பா ஞாபகம் வர்றப்போ எல்லாம் தனியா போட்டுப் பார்த்துக்குவேன்''.

எந்த தேவதை மேலிருந்து வன்மத்துடன் ""ததாஸ்து'' சொன்னதோ தெரியாது.

இப்போது அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.

1998ல் குழந்தைகளுக்கான விடுமுறையில் குடும்பத்தோடு சென்னை சென்றோம்.. அந்த விடுமுறையில் குடும்பத்தோடு எல்லோரும் ஊட்டிக்கு செல்வது என்று தீர்மானித்து இருந்தோம். அதற்கான பணத்தினை ஏற்பாடு செய்து எடுத்துச் சென்றோம். கோவையில் ஆடிட்டராக இருக்கும் என் மூத்த சகோதரரிடம் சொல்லி அவர் தன்னுடைய வாடிக்கையாளர் ஒருவர் உதவியால் ஊட்டியில் எங்களுக்கு வசதியான தங்குமிடத்தை ஏற்பாடு செய்திருந்தார். சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி போய் அங்கிருந்து ஊட்டிக்குப் போவதாகத் திட்டம். விதி எங்கேனு மூலையில் காத்திருந்தது.

பேராசிரியர் செ.ரவீந்திரன் அப்போது சென்னைக்கு வந்திருந்தார். கொட்டிவாக்கத்தில் இருந்த கூத்துப்பட்டறையின் அலுவலகத்தில் தங்கியிருந்தார். கிருஷ்ணகிரி கிளம்புவதற்கு முன் அவரைப் பார்க்க ஒரு மாலை சென்றேன். எங்கெங்கோ போன பேச்சு செல்லப்பா பக்கம் வந்தது. செல்லப்பா ரொம்பவும் உடல் நலம் குன்றியிருக்கிறார் என்று கூத்துப்பட்டறை நண்பர்கள் சொன்னார்கள். அவரைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

மறுநாள் நானும் ரவீந்திரனும் செல்லப்பாவைப் பார்க்க திருவல்லிக்கேணி சென்றோம்.

திறந்திருந்த கதவு தொட்டுத் தள்ளியதும் மிகவும் பலவீனமாகத் திறந்து கொண்டது. அறைகள் என்று சொல்ல முடியாத மிகச்சிறிய இரு அறைகள் கொண்ட அந்த வீட்டில், அறை போன்ற பாவனை கொண்டிருந்த உள்ளறையில், செல்லப்பா கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து, ஒரு பக்கம் நைந்து போன நூலால் கட்டப்பட்ட தடித்த கண்ணாடியின் உதவியுடன் எதையோ படித்துக் கொண்டிருந்தார். புத்தக வரிகளில் தடுமாறிய வண்ணம் அவருடைய விரல் நடுக்கத்துடன் பயணித்துக் கொண்டிருந்தது.

அந்த அறை முழுக்க அவர் எழுதிய சுதந்திர தாகம் புதினத்தின் மூன்று பாகங்களும் சிறு சிறு குன்றுகள் போலக் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அவருடைய கட்டிலின் மூன்று பக்கங்களிலும், சுவரோரத்திலும், கதவில்லாத அலமாரியின் வரிசைகளிலும் எதற்காகவோ குவியல் குவியலாகக் காத்திருந்தன.

பழுதாகப் போகின்ற நிலையில் இருந்த ஒரு மின்விசிறி திருவல்லிக்கேணி முழுக்கக் கேட்கும் வண்ணம் மிகவும் அதிகமாக சத்தம் போட்டு, மிகவும் குறைவான அளவு காற்றை அவர் மீது வீசி எறிய முயற்சித்துத் தோல்வி அடைந்து கொண்டிருந்தது. அநேகமாக ராபர்ட் கிளைவ் இந்தியாவைக் காலிசெய்து விட்டுப் போன போது யாருக்கோ அந்த மின்விசிறியைக் கொடுத்திருக்கலாம். அது எங்கெங்கோ சுற்றி செல்லப்பா வீட்டில் இப்போது தயங்கித் தயங்கி சுற்றிக் கொண்டிருக்கலாம் என்று நினைக்க வைக்கும் நிலையில் அது இருந்தது.
தயங்கித் தயங்கி நானும் ரவீந்திரனும் அவர் கட்டிலின் அருகில் போடப் பட்டிருந்த பழைய இரும்பு நாற்காலிகளில் அமர்ந்து கொண்டோம். செல்லப்பா எங்களைக் கவனிக்கவில்லை. அவர் கவனத்தை ஈர்க்க மெல்ல அவர் பாதத்தைத் தொட்டேன். புத்தக வரிகளில் இருந்து மீண்டு பார்வையை எங்கள் பக்கம் திருப்பிய செல்லப்பா புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டுத் தன் பலவீனமான கைகளை வலுவில்லாது தட்டினார்.
ஏஏஏய்ய்ய்ய்.... மீனா... இங்கே பாரேன். முறைமைப்பெண் பென்னேஸ்வரன் வந்திருக்கான். நம்ம ரவீந்திரன் வந்திருக்கார். ஏஏஏஏய்ய்ய்... என்று மீண்டும் மீண்டும் கைகளைத் தட்டி மாமியை அழைத்தார்.
இது அவர்களுக்கான சங்கேதம். அந்த அழைப்பில் இருந்த உற்சாகம் புரிந்தது.

உள்ளேயிருந்து மாமி வந்தார். கேட்கும் திறனும் பார்வையும் வெகுவாக மங்கிப் போயிருந்தன மாமிக்கு. ஒரு விநாடி புரியாதது போலச் சுருங்கிய அந்த முகத்தில் அரை நொடிக்கும் குறைவான கால அவகாசத்தில் பொக்கை வாய் சிரிப்பொன்று மலர்ந்தது. குழந்தையைக் கேட்பது போல செல்லப்பா மீண்டும் மாமியைக் கேட்டார். ""ஆருன்னு சொல்லு பார்ப்போம்''.

மாமியின் நினைவுக்கு வரவில்லை. தடுமாறினார். ""மதுரையிலே நம்ம முறைமைப்பெண் பண்ணானே... பென்னேஸ்வரன்... இது ரவீந்திரன்...என்ன மறந்துட்டியா?''

எங்களைப் பார்த்து மன்னிப்புக்கோரும் பாவனையில் ""அவளுக்குப் பாவம் ரொம்ப வயசாயிடுத்து'' என்றார். ""முறைமைப்பெண் பென்னேஸ்வரன்டீ'' என்றார். குரல் கொஞ்சம் உச்சஸ்தாயிக்குப் போக எத்தனிக்கையில் இரண்டாக உடைந்து கீச்சுக்குரலாகத் தொண்டையில் கீறிப்பிளந்தது.

அவர் முகத்தின் அருகாமையில் இருந்து தன் காதினை விலக்கிய மாமி எங்கள் பக்கம் திரும்பி, ""ஆஆஆஆஆஆஆ.... எப்படி இருக்கேள்? கொழந்தே வரல்லியா?'' என்று கேட்டார். ரவீந்திரனைப் பார்த்து பிரத்யேகமாக ""எப்படி இருக்கீங்க?'' என்று கேட்டார். ""காப்பி சாப்பிடறேளா?... கேட்கறது என்ன? போடறேன். சாப்பிடுங்கோ''... என்று சிரித்துக்கொண்டே உள்ளே போனார் மாமி.

சம்மந்தம் இல்லாதது போல, "சர்ஜ் ஹ க்ஹஹ்ள், ஐ ப்ண்ஸ்ங் ண்ய் ம்ஹ் ல்ஹள்ற்" என்று சிரித்துக்கொண்டே சொன்னார் செல்லப்பா. மனதுக்கு ரொம்பக் கஷ்டமாக இருந்தது. ""இந்த சுதந்திர தாகம் பாருங்கோ. டால்ஸ்டாய் காவியம் போல முயற்சி பண்ணியிருக்கேன். லைப்ரரி ஆர்டர் கிடைச்சிடும். பெரிய அளவில் பேசப்போறாங்க பாருங்கோ'' என்று சொல்லி எங்கள் முகத்தையே பார்த்தார். மனது ரொம்ப வலித்தது. நானும் ரவீந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்."

""ஸ்டூலைப் போட்டுண்டு மேலே ஏறு. ஒரு மூணு மேனுஸ்கிரிப்ட் இருக்கும் பாரு. அதை எடு'' என்றார். ஏறி எடுத்துக் கொடுத்தேன். நடுங்கிய கரங்களில் வாங்கிக் கொண்டு ரவீந்திரனிடம், ஏதோ அப்போது பிறந்த குழந்தையை ஏந்துவது போல அந்தக் கைப்பிரதிகளை ஏந்திக்கொண்டு,
""ராமையாவின் எழுத்துப்பாணி பத்தி ஒரு பெரிய புத்தகமா எழுதியிருக்கேன். இதப் பாருங்கோ. புதுக்கவிதைக்கு ஒரு க்ளோசரி மாதிரி எழுதியிருக்கேன். புதுக்கவிதையிலே புழங்கற எல்லா வார்த்தைகளுக்கும் வியாக்கியானம் மாதிரி எழுதியிருக்கேன். அகாடமிக்கும் சரி. புதுசா கவிதைக்கு வர்ரவாளுக்கும் சரி. இது ரொம்ப பிரயோஜனமா இருக்கும்'' என்றார்.

""என்ன, - இது வர்றப்போ நான் இருப்பேனான்னு தெரியலே'' என்று சொல்லிவிட்டு எங்களைப் பார்த்து சிரித்தார்.

செல்லப்பாவிடம் ஒரு விஷயம் கவனித்து இருக்கிறேன். ஏதாவது ஒரு விஷயத்தை மிகவும் தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்வார். சொல்லி முடித்த பின் நம் கண்களைப் பார்த்து சிரிப்பார்.
இந்த முறை அப்படி அவர் சிரித்த போது ரவீந்திரனும் நானும் ரொம்பவும் அசௌகர்யமாக உணர்ந்தோம். என்ன சொல்வது என்று எங்கள் இருவருக்கும் தெரியவில்லை. ஒரு ஆழ்ந்த மௌனம் அந்த அறையில் நிலவியது.
மின்விசிறியை எங்கள் பக்கம் திருப்பிக் கொள்ளச் சொன்னார் செல்லப்பா. தொட்டால் தூக்கி எறிந்து விடும் ரௌத்ரத்தில் அந்த மின்விசிறி காற்றில்லாமல் ஆரவாரம் செய்துகொண்டிருந்தது. கிட்டே செல்லத் தைரியம் வரவில்லை.
""இந்த நூற்றாண்டுலே மிகப்பெரிய நாவலா சுதந்திர தாகத்தை சொல்லப் போறாங்க''. சுதந்திர தாகம் நாவலின் ஒரு பாகத்தை எடுத்து சில வரிகளை எனக்கும் ரவீந்திரனுக்கும் மிகவும் ஆர்வத்துடன் படித்துக் காட்டினார்.
மிகவும் பலவீனமடைந்து உடைந்து போன அவர் குரலில் வாசிக்கப்பட்ட வரிகள் எதுவும் எங்களுக்குப் புரியவில்லை. கிட்டத்தட்ட கலங்கிப்போன கண்களுடன் சிரிக்க முயற்சி செய்து கொண்டு கேட்டுக் கொண்டிருந்தார் ரவீந்திரன். நான் சிகரெட் பிடிக்க வெளியே போக முயற்சித்தேன்.
""எங்கே போறே? நீயும் கேட்டுக்கோ'' என்றார் செல்லப்பா. வாசிப்பு தொடர்ந்தது.
""நான் வேணும்னா படிக்கட்டுமா?'' என்றேன்.

காதில் விழாதது போல அவர் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தார். மாமி காபி கொண்டு வந்து வைத்துவிட்டுக் காத்திருந்தாள். அவரும் கொஞ்சம் சாப்பிடட்டும் என்பது போல அவருடைய தோளைத் தொட்டாள் மாமி. எதையும் கண்டுக்காதது போல வாசிப்பு தொடர்ந்து கொண்டிருந்தது.
பிறகு ஏதோ நினைவு வந்தது போல மாமியைப் பார்த்து,
""சுப்பிரமணியன் கிட்டே சொல்லி ஏதாவது பலகாரம் கொண்டு வரச்சொல்லு'' என்றார். ""அவர் கடையிலே காராசேவ் ரொம்ப நன்னா இருக்கும். நீங்க அவசியம் சாப்பிடணும்'' என்றார்.

""நீங்க எதுக்குப் போறேள் மாமி. ஒண்ணும் வேண்டாம்'' என்று கையைப் பிடித்துத் தடுத்தேன். மாமி கையை உதறி, ""வேண்டாம்பா. மனுஷன் என்னைக் கொன்னுடுவார். பரவாயில்லே. கிட்டக்கத்தானே?'' என்று கிளம்பினார் மாமி.

ராமையா எழுத்துப்பாணி கையெழுத்துப் பிரதியை மீண்டும் கையில் எடுத்த செல்லப்பா, ""எல்லாம் கம்போஸ் ஆகி பாஸிடிவ் தயார் ஆயிண்டிருக்கு. ரொம்பப் பெரிய இலக்கியவாதி ராமையா'' என்று ரவீந்திரனைப் பார்த்துச் சொன்னார்.

""இன்னும் காராசேவ் வரல்லையா?'' என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.
""நான் வேணும்னா பார்த்துட்டு வர்றேன்'' என்று சொல்லி சிகரெட் பிடிக்க வெளியில் நழுவினேன்.
சிகரெட் முடித்துத் திரும்பி வந்தபோது பழைய எழுத்து இதழில் இருந்து எதையோ ரவீந்திரனுக்குக் காண்பித்துக் கொண்டிருந்தார்.

காராசேவ் வந்து அதை நாங்கள் தின்று தீர்த்ததும்தான் எங்களை அங்கிருந்து கிளம்ப அனுமதித்தார்.
கிளம்புவதற்கு முன் சுதந்திர தாகம் புதினம் மூன்று பகுதிகளிலும் இரண்டை எடுத்துக் கொடுக்கச் சொல்லி எனக்கும் ரவீந்திரனுக்கும் கையெழுத்திட்டுக் கொடுத்தார் செல்லப்பா. ரவீந்திரன் தயங்கிக் கொண்டே பணத்தை எடுத்துக் கொடுத்தார்.

அதுதான் கையெழுத்துப் போட்டுக் குடுத்திட்டேனே. இது எதுக்கு? என்று சொல்லி விட்டு எங்களைப் பார்த்து சிரித்தார்.

நான் உள்ளே போய் மாமிக்கு நமஸ்காரம் சொல்லி விட்டு, கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொடுத்து, இது புத்தகத்துக்குக் காசு மாமி, வாங்கிக்குங்கோ'' என்றேன்.

""மாமா என்னை அடிச்சே கொன்னுடுவார். போயிண்டே இருங்கோ'' என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு அடுத்த அறைக்கு வந்து செல்லப்பாவைக் கைத்தாங்கலாக கழிப்பறைக்கு அழைத்துச் சென்றார் மாமி.
வெளியில் வந்து சாலையில் நடக்க ஆரம்பித்தோம் நானும் ரவீந்திரனும். ரொம்ப நேரம் இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. கொஞ்ச நேரம் அமைதியாக இருப்பது இருவருக்குமே பிடித்தது போலத் தொடர்ந்து கொண்டிருந்தது.

மௌத்தை உடைக்கும் வகையில் ரவீந்திரனிடம் சொன்னேன், ""சார் - இவரைக் கண்டிப்பா டாக்குமெண்டரி எடுக்கணும்''.

தொடரும்...


நன்றி-வடக்கு வாசல்
5A/11032, Second Floor, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005.
e-mail: vadakkuvaasal@gmail.com
Phones: 011-25815476/09968290295

Wednesday, July 18, 2007

கொலையில் முடியும் சாலை வாதங்கள்..


ராகவன் தம்பி

நேற்று இரவு 10.30 மணி அளவில் நடுசாலையில் ஒரு மனிதரை ஐந்து இளைஞர்கள் கட்டையால் தாக்கியும் பாறாங்கல்லை முகத்தில் எறிந்து நசுக்கிக் கொன்று இருக்கிறார்கள்.

தெற்கு தில்லியின் லாடோ சராய் சாலையின் ஒரு போக்குவரத்து நிறுத்தத்தில் ஜிதேந்தர் பவார் என்பவர் ஓட்டி வந்த கார் மீது குறுக்குச்சாலையில் ஒரு மோட்டார் சைக்கிள் மோதியிருக்கிறது. அந்த மோட்டார் சைக்கிளை இரண்டு இளைஞர்கள் ஓட்டி வந்திருக்கிறார்கள். அவர்களிடம் சண்டைக்குப் போயிருக்கிறார் ஜிதேந்தர்.

சண்டையெல்லாம் முடிந்தது. அந்த மனிதரும் காரை ஓட்டித் தன் வழி நோக்கிச் சென்றிருக்கிறார்.

அடுத்த நிறுத்தத்தில் மரணம் அவருக்காகக் காத்திருந்திருக்கிறது.

சண்டை போட்டுப் போன இளைஞர்கள் இன்னும் மூவரை சேர்த்துக் கொண்டு அடுத்த நிறுத்தத்தில் அவருக்காகக் காத்திருந்தனர். சிகப்பு விளக்குக்காக இவருடைய காரை நிறுத்தியபோது ஐந்து இளைஞர்களும் இவரைச் சூழ்ந்து கொண்டு பேஸ்பால் மட்டைகளால் தாக்கியிருக்கிறார்கள்.

இவர் கொஞ்சம் சமாளித்து இருக்கிறார். உடனே அந்த இளைஞர் கும்பல் ஒரு பெரிய கல்லை எடுத்து அவரைத் தாக்கியிருக்கி விட்டு ஓடிப்போயிருக்கிறார்கள்.

நடுச்சாலையில் ரத்த வெள்ளத்தில் மிதந்திருக்கிறார் ஜிதேந்தர்.

அந்தப் பக்கம் பணியில் இருந்த ஒரு காவலர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

பாவம்.

வழியிலேயே அவருடைய உயிர் பிரிந்து விட்டது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களையும் தில்லி போலீஸ் கைது செய்திருக்கிறது. ஐந்தாவது இளைஞன் எங்கோ தலைமறைவாக இருக்கிறான்.

கொல்லப்பட்ட ஜிதேந்தருக்கு மனைவியும் 13 வயதில் ஒரு மகனும் 13 வயதில் மகளும் இருக்கிறார்கள்.

அவர் மறுநாள் காலை தன்னுடைய பாட்டியை உபியில் இருக்கும் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வதற்காக சற்று சீக்கிரமாக வீட்டுக்குப் போகவேண்டும் என்று கிளம்பினாராம்.

என்ன ஆனது தில்லிக்கு?

இது ஏதோ புதிய சம்பவம் கிடையாது. தில்லி சாலைகளில் எங்காவது ஓரிடத்தில் இது போல வாகன ஓட்டிகள் அடுத்தவர்களைத் தாக்குகிறார்கள்.சிறிய வாக்குவாதம் கூட மிகப்பெரிய குற்றத்தில் போய் முடிகிறது. தில்லியில் யாரிடமும் சாலையில் வாக்குவாதம் செய்யவே பயமாக இருக்கிறது.

என்னுடைய போலீஸ் நண்பர் ஒருவர் சொன்னார் - தில்லியில் அநேகமாக எல்லாக் கார்களிலும் இளைஞர்கள் கிரிக்கெட் மட்டை, பேஸ்பால் மட்டை, சைக்கிள் சங்கிலி போன்றவற்றுடன்தான் பயணிக்கிறார்களாம்.

முதல் கட்டத்தில் வாதத்துக்கு வரும் எதிராளிகள் சற்று பயப்படுவார்கள்.

அப்படி அந்த எதிராளியிடமும் ஏதாவது இப்படிப்பட்ட வஸ்து இருக்கும் பட்சத்தில் மோதல் வலுக்கும். வன்முறைக் காட்சிகள் அரங்கேறும். அப்பாவிகள் நடுசாலையில் இப்படிக் கொல்லப்படுவார்கள்.

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு தில்லியில் ஒரு இளைஞர் காரில் செல்பேசியில் பேசிக்கொண்டே வந்திருக்கிறார். ஒரு காவலர் வண்டியை நிறுத்த முயன்றிருக்கிறார். அந்த இளைஞர் நிறுத்தாததால் அந்தக் காவலர் வண்டியைக் குறுக்கில் நின்று நிறுத்த முயற்சித்திருக்கிறார். வண்டியை அந்தக் காவலரின் மீது ஏற்றித் தூக்கி எறிந்து விட்டு விரைந்திருக்கிறார் அந்த இளைஞர்.

சாலையில் வன்முறைச் சம்பவங்கள் இரண்டு காரணங்களால் அதிகமாகின்றன.

ஒன்று பலர் மது அருந்திவிட்டு வண்டியோட்டுவது.

இன்னொன்று நாளுக்கு நாள் குறைந்து வரும் சகிப்புத் தன்மை.

மது அருந்திவிட்டு சாலையில் வன்முறையில் ஈடுபடும் குற்றங்கள் ஒரு மாதத்துக்கு தில்லியில் ஆயிரக்கணக்கில் பதிவாகின்றன.

ஒரு கார் மீது இன்னொரு வண்டி லேசாக உரசிவிட்டாலும் பல ஆயிரங்களை நஷ்ட ஈடாகக் கேட்டு சண்டைக்கு வருவார்கள். பேச்சு வலுக்கும்போது இப்படிப் பட்ட வன்முறைக்காட்சிகள் அரங்கேறும்.

வாக்குவாதங்கள் காவலர் முன்னிலையில் நடந்தால் காவலர்களுக்குக் கொண்டாட்டம்தான். இருபக்கமும் அன்று அவர்களுக்கு வரும்படி கிடைக்கும்.

மாலன் என்னுடைய ஒரு வலைப்பதிவின் பின்னூட்டத்தில் சொல்லியிருப்பதுபோல பொதுவாகவே தில்லி அதிகாரம் படைத்தவர்களுக்கு, அவர்களுக்கு அருகில் இருப்பவர்களுக்குமாக உருவாக்கப்பட்ட நகரம். மற்றவர்கள் எல்லாம் இங்கே வெறும் துரும்பு.

இது முற்றிலும் சத்தியமான நிஜம். உங்களுக்கு யாராவது ஒரு பெரிய புள்ளியைத் தெரியும் என்றால் இங்கு நீங்கள் குறைந்தது ஒரு ஆறு பேரை உங்கள் காரில் நசுக்கிக் கொன்றுவிட்டு வெளிநாட்டில் எங்காவது சொகுசாகத் தங்கிக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

அல்லது நடு இரவில் இன்னும் கொஞ்சம் மது ஊற்றித் தரவில்லை என்பதற்காக அங்கு பணிபுரியும் பெண்ணை சுட்டுக்கொல்லலாம்.

ல்லது உங்களுடன் தகராறு செய்த காதலியை தந்தூரி அடுப்பில் சுட்டு எரிக்கலாம்.

எனவே, சாலைத் தகறாறுகளில் ஈடுபடும் வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு அளவுக்கு அதிகமான தைரியம் கிடைக்கிறது.
அவர்களுடைய அகங்காரமும் பணத்திமிரும் இவைபோன்ற காரியங்களில் ஈடுபட வைக்கின்றன.

இன்னும் ஓரிரு சம்பவங்களை சொன்னால் தில்லியின் இளைஞர்களின் மனவெளியில் ததும்பி வழியும் வன்முறையின் கோரமுகங்கள் உங்களுக்குப் பிடிபடலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, திலக் மார்க் (அல்லது மின்டோ பிரிட்ஜ்) உள்ளூர் ரயில் நிலையத்தில் - இந்த ரயில்கள் ஃபரீதாபாத் அல்லது காஜியாபாத் போன்ற இடங்களுக்குச் சென்று வரும் ஏதோ ஒரு வண்டி அந்த நிறுத்தத்தில் நின்றிருக்கிறது. குறைந்தது மூன்று நிமிடங்களுக்கு அங்கு வண்டி நிற்கும்.

வண்டியில் இருந்து இறங்கிய இரண்டு இளைஞர்களில் ஒருவன் பிளாட்பாரத்தில் இருந்த ஒரு கடையின் வாசலில் பான் சாற்றினைத் துப்பியிருக்கிறான். கடைக்காரர் ஆட்சேபித்து இருக்கிறார். வாதம் வலுத்த அடுத்த நொடியில் ஒரு இளைஞன் சரேலென்று கத்தியை எங்கிருந்தோ எடுத்து அந்தக் கடைக்காரரின் வயிற்றில் பலமுறை மாறிமாறிக் குத்தி விட்டு ஓடும் ரயிலில் ஏறி ஓடிவிட்டான். அவனைப் பிடித்தார்களா என்பது தெரியவில்லை.

அதே போல என்னுடைய இன்னொரு சனிமூலை கட்டுரையில் இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டிருந்தேன். அதைப் படிக்காதவர்களுக்காக மீண்டும் இங்கே...

ஒரு முறை தில்லியின் ஒரு நாற்சந்தியில் சிகப்பு விளக்கு எரிந்ததும் எல்லா வண்டிகளும் நின்றன. ஒரு காரில் சுமார் ஏழு பையன்கள் அடைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அந்த நிறுத்தத்தில் ஸ்கூட்டர் ஓட்டி ஒருவர் இடதுபுற ஓரமாக மெதுவாக ஓட்டிக் கொண்டு வந்தார். அந்தப் பையன்கள் உட்கார்ந்திருந்த காரின் இடது பக்கக் கதவைக் காரணமே இல்லாமல் ஒரு பையன் திறந்து மூடினான். ஸ்கூட்டர்காரர் நிலைதடுமாறிப் போனார். பதறிக்கொண்டே வண்டியைக் கிறீச்சிட்டு நிறுத்தினார். நிறுத்திய வேகத்தில் அந்தப் பையன்களைப் பார்த்துக் கத்தினார், ""உங்களுக்கு அறிவு ஏதாவது இருக்கா?'' உள்ளேயிருந்து ஒரு பையன் ""இவ்வளவு இருந்தா போதுமா பாரு'' என்று சொல்லிக்கொண்டே நீளமாக ஒரு பிச்சுவாக் கத்தியை அவர் முகத்தின் எதிரில் நீட்டினான். ஸ்கூட்டர் ஓட்டி மட்டுமல்ல. நிறுத்தத்துக்காக அங்கங்கு நின்று கொண்டிருந்த நாங்கள் எல்லோருமே பயத்தில் உறைந்து போனோம். அந்த ஸ்கூட்டர் ஓட்டி பதறிக்கொண்டே போய் நாற்சந்தியில் நின்றிருந்த ஒரு காவலரை அழைத்து விஷயத்தை சொன்னார். அவர் சொல்லச்சொல்ல விளக்கு பச்சை நிறத்துக்கு மாறியது. பையன்கள் இருந்த கார் காற்றைக் கிழித்து விரைந்தது. போகும் வேகத்தில் அந்தப் பையன்கள் ஸ்கூட்டர் ஓட்டியின் சகோதரியை மிகவும் பெரிய கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டுப்போனார்கள். அந்தக் காவலர் சிரித்துக்கொண்டே சொன்னார், ""ஏதோ இதுவரைக்கும் தப்பிச்சது நீங்க பண்ண புண்ணியம்னு எடுத்துக்கங்க. இந்நேரம் உங்களைப் போட்டுத் தள்ளியிருந்தா நீங்க எங்கே இருந்திருப்பீங்க? இந்த மாதிரிப் பசங்க கிட்டே எல்லாம் அதிகம் வச்சிக்காதீங்க என்று அன்புடன் தைரியமும் ஆறுதலும் சொல்லி அனுப்பினார்.

சில மாதங்களுக்கு முன்னால் நேற்று நடந்தது போல நடுசாலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒருவரை சில இளைஞர்கள் அடித்துக் கொன்றபோது தில்லி போலீசார் தினசரிகளில் நிறைய புத்திமதிகளை வழங்கினார்கள். அவற்றில் மிகவும் முக்கியமானவை -

உங்கள் வாகனத்தின் மீது யாராவது இடித்துவிட்டால் சண்டைக்குப் போகாதீர்கள்.

முடிந்த வரை நீங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுங்கள்.

எனக்குத் தோன்றுகிறது. இந்த அறிவுரையில் எவ்விதத் தவறும் கிடையாது. விட்டுக்கொடுத்து வந்து விடுவதனால் நமக்குப் பெரிய அளவில் ஒன்றும் நஷ்டம் வந்து விடப்போவதில்லை. இன்னொன்று நாம் எந்தக் கோட்டையிலும் ஏறிக் கொடியேற்றப் போவதில்லை.

தில்லியில் உண்மையாகவே இளைஞர்களுடன் வாதத்தில் ஈடுபட மிகவும் அச்சமாக இருக்கிறது. அவர்கள் மனங்களின் ஓரங்களில் எங்கோ ஒரு மூலையில் வன்முறை அரக்கன் இடம்பிடித்து உட்கார்ந்திருக்கிறான். தன்னுடைய கோரைப்பற்களுடன் அவன் எந்தக் கணத்தில் வெளிப்படுவான் என்று யாராலுமே அனுமானிக்க முடிவதில்லை.

இன்னொன்றும் இருக்கிறது.

இது ரொம்ப முக்கியமான விஷயம்.

வேண்டாம். சொல்ல வேண்டாம்.

இப்படித்தான் ஷீலா தீக்ஷித் போன்ற முதல்வரே வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் எதையோ சொல்லி எக்கச்சக்கமாகத் திண்டாடினார் சில மாதங்களுக்கு முன்பு.

நான் மிகச் சாதாரணன். ஏதாவது யதார்த்தத்தைச் சொல்ல வாயெடுத்தால் என்னைக் கிழித்துத் தோரணம் கட்டி விடுவார்கள். எனக்கு எதற்கு வம்பு?

என் வண்டியை நான் ஜாக்கிரதையாக ஓட்டிக் கொள்கிறேன்.

என்மீது யாராவது வம்படியாக இடித்தாலும் அப்படி இடித்தவர்களிடம் கைகூப்பி மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அங்கிருந்து விலகிவிடுகிறேன்.

ஏதாவது தண்டம் அழவேண்டும் என்றாலும் நான் தயார்.

சாலையில் அடிபட்டு வீணாக ரத்தம் சிந்தவேண்டாமே.

Tuesday, July 17, 2007

பக்கத்து ஊர் அரசியலும் ஒரு கைதும்...


ராகவன் தம்பி

என்னுடைய சிறிய வயதில் ஒரு ஆங்கிலப் புதுவருஷத்தை ஒட்டி வந்த புத்தாண்டு நாள்காட்டிகள் மற்றும் வாழ்த்து அட்டைகளில் இந்திரா காந்தியும் முஜிபுர் ரஹ்மானும் சேர்ந்து இருந்த புகைப்படங்களை நிறைய பார்த்து இருக்கிறேன்.

தற்போது முஜிபுர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹஸீனாவை ஊழல் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது பங்களாதேஷ் அரசு.

எல்லா ஊரிலும் ஒரே கதைதான் போலிருக்கிறது.

ஒரு ஆட்சி போய் வேறொன்று வந்தால் முந்தி இருந்தவர்களின் செருப்புக்களை எண்ணுவார்கள். காலி சூட்கேஸ்களை தொலைக்காட்சி செய்திகளில் காட்டுவார்கள்.இவர்கள் போய் அவர்கள் வந்தால் முந்தி இருந்தவர்களை நடு இரவில் கதறக்கதற இழுத்துச் செல்ல வைப்பார்கள்.

ஏறத்தாழ அதே போன்ற கதைதான் இப்போது அங்கும்.

பங்களாதேஷ் நாட்டின் சற்று முன்னதான சரித்திரத்தைக் கொஞ்சம் புரட்டிப் பார்க்க வேண்டி இருக்கிறது.

1970ம் ஆண்டில் மிகக்கொடூரமான புயல் பாகிஸ்தானின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளை சின்னாபின்னமாக்கியது. அப்போது இருந்த பாகிஸ்தான் அரசு கிழக்குப் பகுதியை அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை. பெங்காலி மொழி பேசும் மக்கள் நிறைந்த அப்பகுதியினர் அரசின் மீது கடும் அதிருப்தி கொண்டனர்.

கிழக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஷேக் முஜிபுர் ரஹ்மான் 1970 தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று வென்று பாராளுமன்றத்தில் பதவியேற்கப் போனபோது அரசினால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இது கிழக்குப் பகுதியில் இருந்து வங்காளி மொழி பேசும் கிழக்குப் பாகிஸ்தானியர்களின் கோபத்தை உச்சிக்கு ஏற்றியது. அப்போதைய பாகிஸ்தான் அதிபர் யாஹ்யா கான் முஜிபுர் ரஹ்மானுடன் ஒரு சமாதான உடன்படிக்கையை செய்து கொண்டார். சமாதான உடன்படிக்கை செய்து கொண்ட கையோடு முஜிபுரை மார்ச் 25, 1971ல் நள்ளிரவில் கைது செய்தார். அதைத்தொடர்ந்து ஆப்பரேஷன் ஸர்ச்லைட் என்னும் பெயரில் ஒரு கொடூரமான தாக்குதலை கிழக்குப் பாகிஸ்தானில் தொடுத்தது பாகிஸ்தான் ராணுவம். அந்தத் தாக்குதல் கிழக்குப் பாகிஸ்தானின் அறிவுஜீவிகள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத மக்களின் மீது மிகவும் வன்மையாகப் பாய்ந்தது. யாஹ்யாகானின் செயல்முறைகள் மிகவும் கொடூரமாக அமைந்தன. கிழக்குப் பாகிஸ்தானில் மிகக் கோரமான வன்முறைகள் அரங்கேறின. எதற்கும் தொடர்பில்லாத பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தெருக்களில் படுகொலை செய்யப்பட்டார்கள். லட்சக்கணக்கில் அகதிகள் இந்தியாவில் குவிந்தனர்.

இங்கு கதையை சற்று நிறுத்துகிறேன்.

நிகழ்காலத்துக்கு வருகிறேன்.

அப்போது அகதிகளாக வந்தவர்கள் இப்போதும் லட்சக்கணக்கில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியிருக்கிறார்கள் என்றும் அவர்களில் பலர் இந்தியாவில் வீடு, மனை, மனைவி, காதலிகள், மக்கள் என்று சகல சௌகர்யத்துடன் வாழ்கிறார்கள் என்று பல கணக்கெடுப்புக்கள் சொல்கின்றன..

தலைநரில் இந்த பங்களாதேஷிகள் இன்னும் பல மையப்பகுதிகளில் குடிசைகள் அமைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். சிலர் மிகப்பெரிய மாளிகைகளை எழுப்பியும் வாழ்கிறார்கள்..

இங்கு ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இந்த அகதிகளாக வந்து இங்கேயே ஒட்டிப்போனவர்கள் ஒட்டு மொத்த ஓட்டு வங்கிகளாக அரசியல் விளையாட்டுக்களுக்கு உதவுகிறார்கள்..
தில்லியின் பல பகுதிகளில் இந்த பங்களாதேஷிகள் ரிக்ஷா ஓட்டுகிறார்கள்..

அவர்களின் மனைவிமார்கள் வீடுகளில் வேலை செய்கிறார்கள்..

பல இடங்களில் பங்களாதேஷிகள் பாக்கெட் சாராயம் விற்கிறார்கள்..

கஞ்சா மற்றும் போதைப் பொருட்களும் இவர்கள் வழியாகக் கடத்தப் படுகிறது என்ற குற்றச்சாட்டு பல தினசரிகளில் அவ்வப்போது காணக்கிடைப்பவை. விபச்சாரக் குற்றச்சாட்டுக்களிலும் இந்த பங்களாதேஷிகள் அடிக்கடி சிக்குவதுண்டு..

ஒவ்வொரு பாராளுமன்றத் தொடரிலும் உள்துறை அமைச்சகம் இவர்களைப் பற்றிய கேள்விகளுக்குத் தவறாமல் தவறான பதில்களை அளிக்கிறது என்று பொருமுகிறார்கள் உள்ளூர் இந்தி பத்திரிகையாளர்கள்..

சரி. மீண்டும் கதைக்குள் போவோம்..

அந்த நேரத்தில் கிழக்குப் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட அப்பாவிகள் 300 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் என்று சொல்கிறார்கள்.முஜிபுர் ரஹ்மானின் அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவர்கள் கொல்கத்தா வந்து அங்கிருந்து அரசாங்கம் நடத்தினார்கள். பாகிஸ்தான் அரசுக்கு எதிரான பங்களாதேஷ் விடுதலைப்போர் ஒன்பது மாதங்களுக்குத் தொடர்ந்து நடைபெற்றது.கொரில்லா இயக்கமான முக்தி பாஹ்னி மற்றும் கலகப்படையைச் சேர்ந்த வங்காளிகள் இந்தியப் படைகளுக்கு இந்தியப் படையின் ஆதரவு கிடைத்தது.லெப்டினென்ட் ஜெனரல் ஜே.எஸ்.அரோராவின் தலைமையில் நடைபெற்ற போரில் டிசம்பர் 16 1971 அன்று பாகிஸ்தான் படைகளுக்கு எதிராக இந்தியப்படைகள் மாபெரும் வெற்றியைக் கண்டது. சுமார் 90,000 பாகிஸ்தானியப் போர்வீரர்கள் போர்க் கைதிகளாக்கப் பட்டனர்..

சுதந்திர பங்களாதேஷில் முஜிபுர் ரஹ்மான் பிரதமர் ஆனார். 1973ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அவருடைய அவாமி லீக் கட்சி மாபெரும் வெற்றியைக் கண்டது.1973 மற்றும் 74ல் பங்களாதேஷில் மிகக்கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. 1975ம் ஆண்டின் துவக்கத்தில் முஜிபுர் ரஹ்மான் பக்ஸல் என்னும் பெயரில் ஒற்றைக் கட்சி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தினார். அவரும் தம்மிடம் கொள்கை வேறுபாடு கொண்டவர்களை யாஹ்யாகான் போல விசேஷமாகக் கவனித்துக் கொண்டார். நிறைய பேர்கள் இரவோடு இரவாகப் போட்டுத் தள்ளப்பட்டார்கள்.ஆகஸ்டு 15, 1975 அன்று நள்ளிரவில் சில ராணுவ அதிகாரிகள் நள்ளிரவில் முஜிபுரையும் அவருடைய குடும்பத்தையும் போட்டுத் தள்ளிவிட்டார்கள். இப்போது கைது செய்யப்பட்டிருக்கும் அவருடைய மகள் ஷேக் ஹஸினா அந்தத் தாக்குதல்களில் இருந்து தப்பி உயிர் பிழைத்தவர்..

அதையடுத்து மூன்று மாதங்கள் வன்முறைகள் தலைவிரித்து ஆடின. ஆட்சியைக் கைப்பற்ற பல உட்டாலங்கடி வேலைகள் மேற்கொள்ளப்பட்டன.ஒருவழியாக பங்களாதேஷ் தேசியக் கட்சியைத் துவக்கிய ஜெனரல் ஜியா வுர் ரஹ்மான் ஆட்சியைக் கைப்பற்றினார். இவர் மீண்டும் பல கட்சி முறையை அங்கு அமல்படுத்தினார். 1981ல் ஜியா வுர் ரஹ்மான் சில ராணுவ அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டார்..

அவருக்குப் பிறகு சொல்லக்கூடிய அளவில் ஜெனரல் உசைன் மொஹமது எர்ஷாத் ஆட்சியைக் கைப்பற்றினார். இவரும் பின்னாளில் பங்களாதேஷøக்கு உதவிகள் செய்து வந்த மேற்கத்திய நாடுகளால் வலுக்கட்டாயமாக ஆட்சியில் இருந்து விலக்கப்பட்டார்..

ஜியாவின் மனைவி கலிதா ஜியா 1991ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான வெற்றியைப் பெற்று அந்த நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆனார்..

1996ன் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்றார் கலிதா. ஆனால் 2001ல் நடைபெற்ற தேர்தலில் முஜிபுர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹஸினா பங்களாதேஷ் தேசியக் கட்சியின் சார்பில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தார். இந்த ஆண்டின் துவக்கத்தில் பங்களாதேஷில் மாபெரும் வன்முறை வெடித்தது. அடுத்த தேர்தலை நடத்த ஒரு இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. 1996 முதல் 2007 வரையிலான ஷேக் ஹஸீனாவின் ஆட்சியில் அவர்மேல் எக்கச்சக்கமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குவிந்துள்ளன..

அரசியல் எதிரிகள் நான்கு பேரைப் படுகொலை செய்ததாகவும் அவர்மேல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது..

இக்குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகிறார் ஹஸீனா..

ஹஸினா மீது பங்களாதேஷ் தொழிலதிபர் ஒருவர் வழக்கு பதிவு செய்திருந்தார். தன்னைக் கொலை செய்வதாக ஹஸீனா மிரட்டியதாகவும் மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டினார் அவர்.இதைத் தொடர்ந்து நேற்று காலை (16 ஜ÷லை 2007) காலை டாக்காவில் உள்ள ஷேக் ஹஸீனாவின் வீட்டில் புகுந்து சோதனை நடத்தயிருக்கின்றனர். பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டிருக்கிறார். சுமார் 50 வழக்கறிஞர்கள் வாதாடி இரண்டு மணிநேர விசாரணைக்குப் பின் ஹஸீனாவை சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது..

ஹஸீனாவின் மகன் சாஜிப் வாஜத் ஜாய் எங்கோ அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு தனது தாய் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் போராட்டங்கள் வெடிக்கும் என்று உதார் விட்டிருக்கிறார்..

ஹஸினா கைதுக்குப் பிறகு அங்கங்கு வன்முறைகள் வெடித்திருக்கின்றன..

ஹஸினாவின் அரசியல் எதிரி காலிதா ஜியாவுக்கும் இடைக்கால அரசு சம்மன் அனுப்பியுள்ளது..

காலிதா எக்கச்சக்கமாக வரி ஏய்ப்பு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். ராணுவத்தின் துணையுடன் அமைக்கப்பட்ட இந்த இடைக்கால அரசு ஏற்கனவே இந்த இரு பெண்மணிகளையும் நாடு கடத்தும் திட்டத்தில் இருந்தது. ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவில் இருந்து ஹஸினாவை பங்களாதேஷ் நுழையத் தடை விதித்திருந்தது இடைக்கால அரசு..

இப்போது இப்படிக் கைதுப் படலங்களைத் துவக்கியுள்ளது.இப்போது பங்களாதேஷில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்று துரத்தித் துரத்தி ஜல்லியடித்துக் கொண்டு வருகிறார்கள்..

ஆகஸ்டு மாதம் கலிதாவுக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் வரவிருக்கிறது. அவரையும் உள்ளே அடைக்க நிறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன..

ஒரு அண்டை நாடாக இந்தியாவும் இதில் அக்கறை செலுத்தி வருவதாகவும் அங்கு ஜனநாயக ரீதியில் சட்டத்தின் அடிப்படையிலான நடவடிக்கைகள் தொடரவேண்டும் என்றும் அறிக்கை விட்டிருக்கிறது இந்தியா..

இந்தியாவுடன் ஒன்றும் அத்தனை நல்ல உறவு அல்லது நன்றியின் அடிப்படையிலான நட்பினை பங்களாதேஷ் என்றும் கடைப்பிடித்தது இல்லை. எங்காவது ஒரு சிறிய சந்தர்ப்பம் கிடைத்தாலும் இந்தியாவுக்கு எதிரான மிகப்பெரிய ஆப்பு ஒன்றை வைப்பதற்குத்தான் பங்களாதேஷின் எந்த அரசும் நேரம் பார்த்து வருகிறது என்று பலரும் சொல்கிறார்கள்..

அந்த நாட்டில் நடந்த ஒவ்வொரு ஆட்சிக்கவிழ்ப்பும் துரோகத்தின் அடிப்படையிலேயே நிகழ்ந்திருக்கின்றன. துரோகம் அந்த நாட்டின் சரித்திரத்துடன் பிறந்து வளர்ந்தது..

எனவே இதுவும் வரப்போகும் தேர்தலையொட்டி பங்களாதேஷின் இடைக்கால அரசு எடுத்திருக்கும் உட்டாலங்கடி வேலைகள்தான் என்கிறார்கள்..

அது சரி..

நம் ஊரில் நாம் பார்க்காத ஊழல் குற்றச்சாட்டுக்களா? இல்லை, அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளான எல்லோருமே மீண்டும் படாடோபமாக ஆட்சிப்பொறுப்பை ஏற்பதில்லையா?.

மாயா ஜாலங்கள் புரிவதில்லையா?

ஜெயஜெய கோஷங்கள் கிளம்புதில்லையா?.

இவர்கள் அனைவரின் மீதும் கருணைப் பார்வையை வாக்காளர்கள் மீண்டும் பொழிவதில்லையா?.

அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா... என்கிறார் என்னுடன் பணிபுரிந்த நண்பர் ஒருவர்.

Monday, July 16, 2007

தமிழ் தேசிய உணவு - அல்வா...

ராகவன் தம்பி
எட்டாவது உலக இந்தி மாநாடு கடந்த வெள்ளிக்கிழமையன்று நியூயார்க்கில் உள்ள ஐ,நா. சபையில் தொடங்கி இன்று முடிவடைகிறது.
இந்த உலக இந்தி மாநாட்டில் உலகம் முழுதும் உள்ள இந்தி அறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இந்தி மொழி ஆசிரியர்கள் என சுமார் 800 பேர் கலந்து கொண்டிருக்கின்றனர். மாநாட்டின் துவக்க விழாவில் ஐக்கிய நாடுகள் சபையின் பல மூத்த அதிகாரிகளும் சுமார் 50க்கு மேற்பட்ட நாடுகளின் தூதர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.ஐ.நா.சபையின் பொதுச்செயலர் பான் கீ மூன் இந்த மாநாட்டை வெள்ளியன்று துவக்கி வைத்து இருக்கிறார்.

பான் கீ மூன் சில ஆண்டுகள் தில்லியில் பணி புரிந்தவர். வழக்கமாக வடக்கத்திய அரசியல்வாதிகள் நம்மூருக்கு வரும்போது தவறாமல் ""வனுக்கம்'' என்று சொல்லிவிட்டுத்தான் நமக்கு அல்வா கொடுக்கத் துவங்குவார்கள். அந்தப் பழக்கம் இப்போது அகில உலக வழக்கமாகி விட்டது. பான் கி மூன் இந்த மாநாட்டின் துவக்க உரையில் இந்தியில் ""வனுக்கம்'' சொல்லி எல்லோரையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். ""என் மகன் இந்தியாவில்தான் பிறந்தான். என்னுடைய மகள் இந்தியர் ஒருவரை மணம் புரிந்திருக்கிறார். இந்தியாவில் இருக்கும்போது இந்தியை ஓரளவு கற்றுக்கொண்டேன். பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோருக்கு இந்தி ஒரு இணைப்பு மொழியாகப் பயன்படுகிறது'' என்று அவருடைய அளவில் அவர் கொஞ்சம் கோதி விட்டிருக்கிறார்.

இது கொஞ்சம் அதிகம் இல்லையா?
பல்வேறு நாடுகளை விடுங்கள். கிருஷ்ணகிரி அருகில் நரிமேட்டில் அல்லது பென்னாகரத்தில் போய் யாரிடமாவது இந்தியில் பேசிக் கன்னம் பழுக்காமல் தில்லிக்கு என்னால் திரும்பி வரமுடியுமா? அல்லது வடகிழக்கு மாநிலங்களில் எந்தப் பெரிய ஊரிலாவது இந்தியில் பேசி எதையாவது இணைக்க முடியுமா? நம்மூரில் மட்டுமல்ல. அகில உலக அளவில் இப்படியான விஷயங்கள் மேடையில் கிண்டி சூடாகப் பரிமாறும் வஸ்துவாக மொழி பலருக்குப் பயன்படுகின்றது போலும்.
வங்கப் படைப்பாளி மஹாஸ்வேதா தேவிக்கு இந்த மாநாட்டில் இந்தி விருதினை அறிவித்தார்கள். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்து விட்டார்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய வெளியுறவு இ,ணையுறவு அமைச்சர் ஆனந்த் சர்மா "இந்தி மொழியை ஐ.நா.சபையின் அதிகாரப் பூர்வமான மொழியாக அறிவிக்கச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இந்த இந்தி மாநாட்டை ஐ.நா.சபையில் ஏன் நடத்த வேண்டும் என்று பலர் கேள்வி எழுப்பினர். இப்போது அவர்களுக்குப் பதில் கிடைத்திருக்கும்'' என்று கூறியிருக்கிறார்.
ஒரு விஷயம். இவர்கள் கண்டிப்பாக செய்தாலும் செய்வார்கள். நம்மைப்போல ஏமாளிகளா என்ன?
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது என்று சொல்லி சொல்லி நம் வாய் கிழிய அல்வாவைத் திணித்தார்கள். இதைப் பற்றி முழுமையான விபரம் தெரியாவிட்டாலும் மேடையில் ஏறியவன் எல்லாம் செம்மொழியாம் நம் தமிழ் என்று சரடாகத் திரித்தார்கள். இதுவரை செம்மொழிக்கான அந்தஸ்து பெறக்கூடிய எந்த நன்மையும் தமிழுக்குக் கிட்டியதாக எதுவும் தெரியவில்லை. உண்மையைப் பேசிய ஓரிருவரையும் வாயை அடைத்து விட்டார்கள்.
இந்த விஷயத்தில் மைய அரசு எப்படிப் பட்ட அல்வாவைக் கிளறிப் பறிமாறியிருக்கிறது என்றால், தமிழைச் செம்மொழியாக்கப்படும் என்ற உறுதிமொழியைத் தந்த அதே நேரத்தில், உடனடியாக ஒரு குழுவை நியமித்தார்கள். அந்தக் குழு எந்தெந்த மொழிக்கெல்லாம் செம்மொழித் தகுதி வேண்டுமோ அவர்கள் எல்லாம் விண்ணப்பிக்கலாம் என்றும் ஒரு மொழி செம்மொழியாக்குவதற்கான அடிப்படைத் தகுதிகள் என்று சில நிபந்தனைகளையும் வெளியிட்டார்கள். தமிழன் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் இருந்தே அல்வா திங்கப் பழகியவன் என்று நான் சொன்னால் பலருக்குக் கோபம் வருகிறது. செம்மொழி நிலைமை பற்றி சரியான விமர்சனம் செய்பவர்கள் மேல் பாய்வதை விட்டு அந்த வேலைக்கான அடுத்த படிக்குச் செல்லும் முயற்சியை மேற்கொண்டால் சரித்திரத்தில் கொஞ்சம் மானம் மரியாதை எல்லாம் தங்கும்.
எல்லாம் சரி. இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும்போது வந்த எங்கள் ஊர்க்காரர் ஒருவருக்கு இதைப் படித்துக் காண்பித்தேன். அவர் யார் மீதோ இருந்த கோபத்தை என் மீது காண்பித்தார். அவர் வெடித்துச் சீறிச் சொன்ன வார்த்தைகள் அப்படியே கீழே...
"செம்மொழித் தகுதி வச்சிக்கிட்டு என்ன வழிச்சித் திங்கறதா? எவனுக்காவது ஏதாவது ஒரு காலணா பிரயோசனம் உண்டா சொல்லுங்க. யாரை ஏமாத்தறானுங்கோ? இதை விடப் பெரிய டகால்டி வேலையெல்லாம் இந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்தில் இருந்தே பார்த்துக்கிட்டுத்தானே வாரோம்? முதல்லே இந்த டிவி சானல்காரங்க கிட்டே இருந்தும் தமிழ் சினிமா காரங்க கிட்டே இருந்தும் இந்த ""தொமிளு கலாச்சாரத்தை'' (நன்றி- சிவாஜி-The Boss) காப்பாத்தச் சொல்லுங்க. அப்புறம் செம்மொழியெல்லாம் பார்த்துக்கலாம்''.

Friday, July 13, 2007

கதிகலங்க வைக்கும் எமவாகனங்கள்


கதிகலங்க வைக்கும் எமவாகனங்கள்

ராகவன் தம்பி

தலைநகரம் வரப்போகும் காமன்வெல்த் விளையாட்டு விழாவுக்காகத் தன்னை சிங்காரித்துக் கொள்ளத் துவங்கி பல மாதங்கள் உருண்டோடி விட்டன. ஆனால் எல்லாம் செய்து ஏதோ கழனிப் பானைக்குள் கையை விட்டது போல அடிக்கடி இந்த ப்ளூலைன் பேருந்துகள் யாரையாவது எங்காவது உருட்டித் தள்ளி நசுக்கிக் கொன்று குறைந்தது ஆறுமாதங்களுக்கு ஒருமுறையாவது பலத்த சர்ச்சைக்கு உள்ளாகி வரும் சாலை எமன்கள். ஒரு நாட்டின் தலைநகரில் இந்த அளவுக்கு ஒழுக்கம் குறைந்த ஒரு பொதுமக்கள் போக்குவரத்து சேவை வேறு எந்த மாநிலத் தலைநகரிலோ அல்லது வேறு எந்த நாட்டின் தலைநகரிலாவது இருக்குமா என்று தெரியவில்லை.

இந்த ப்ளூலைன் பேருந்துகளின் நடத்துனர்களைப் பற்றி ஏற்கனவே ஒரு சனிமூலையில் எழுதியிருக்கிறேன்.

இந்த வாகனங்களை ஓட்டும் ஓட்டுனர்கள் அநேகம் பேர் சரியான முறையான உரிமம் பெற்றவர்களாக இருக்கமாட்டார்கள். அதே போல நடத்துனர்களும் அதிகம் படித்தவர்களாகவோ அல்லது ஒரு அடிப்படை நாகரிகத்துடன் நடந்து கொள்பவர்களாகவோ இருக்கமாட்டார்கள்.

என்னைப்போல பயந்தாளிகளுக்கு அவர்களுடன் பேசாமல் மரியாதைக்கு எவ்வித பங்கமும் இல்லாமல் சேருமிடத்துக்கு சௌக்கியமாய் சேர்ந்தால் போதும் என்ற அளவில்தான் பிரார்த்தனைகளுடன் பயணங்கள் தொடரும்.

தில்லியின் இந்த ப்ளூலைன் பேருந்துகளின் நடத்துனர்கள் மற்றும் ஓட்டுனர்களின் வீரபராக்கிரமங்களை பதிவு செய்யப் பல பக்கங்கள் வேண்டும்.

ஒன்றிரண்டைச் சொன்னால் கூட வெளியூர்க் காரர்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். ஏன் என்றால் உங்கள் ஊரில் இதுபோன்ற பஸ் ஊழியர்களை நீங்கள் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை.

முதல் தாக்குதல் நீங்கள் பஸ் நிறுத்தத்தில் நிற்கும் போதே தொடங்கும். எனக்குத் தெரிந்து ஆதிகாலம் முதலே தில்லியில் பேருந்துகள், அது அரசுப் பேருந்தாகட்டும் அல்லது தனியார் பேருந்தாகட்டும், சுற்றுலாப் பேருந்தாகட்டும் எதுவாக இருந்தாலும் பயணிகள் நிற்கும் இடத்தில் கண்டிப்பாக நிற்காது. அரை பர்லாங் தள்ளித்தான் நிற்கும். காத்திருக்கும் பயணிகள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓட வேண்டும். கண்டிப்பாக ரத்தக் கொதிப்பைக் கொஞ்சமாவது ஏற்றிக் கொண்டுதான் பேருந்தில் தொங்க முடியும். இந்த விதியை ப்ளூலைன் பேருந்துகள் கொஞ்சம் அதிகமாகவே கடைப்பிடிக்கும்.

ஆனால் பேருந்தில் கூட்டம் இல்லை என்றால் நீங்கள் எங்காவது போகும் வழியில் எதையாவது நினைத்துக்கொண்டு கையை நீட்டினாலும் அந்த இடத்தில், அது நடுசாலையாக இருந்தாலும் அப்படியே நிற்கும். பின்னால் வரும் வாகன ஓட்டிகள் பிரேக் மீது ஏறி நின்று கொண்டுதான் தங்கள் வண்டியை நிறுத்த வேண்டியிருக்கும். கட்டுப்பாட்டை மீறி அந்த ப்ளூலைன் பேருந்தின் பின்புறத்தில் மிகச் சுமாராக இடித்து நிறுத்தினாலும் உடனே உள்ளிருந்து உருட்டுக்கட்டைகளோடு ஆட்கள் இறங்கி உங்களுடன் மோதலுக்குத் தயார் ஆவார்கள். அவர்கள் கேட்கும் பணத்தை நீங்கள் அவர்களிடமிருந்து கொடுத்து விட்டுத்தான் காயமின்றித் தப்ப முடியும். அன்று உங்கள் மனைவி ஏதாவது விசேஷமாக சத்தியநாராயண பூஜை போன்ற பிரத்யேகமான பூஜைகள் செய்திருந்தால் உங்களுக்கு ஒன்றும் நடக்காது.

சரி. எப்படியோ பேருந்தைப் பிடித்து ஏறிவிடுகிறீர்கள். அடுத்து பயணச்சீட்டு வாங்கும் படலம். உங்களுக்கு அடுத்த நிறுத்தத்திலேயே இறங்க வேண்டுமென்றாலும் நடத்துனன் இருக்கையில் அமர்ந்திருக்கும் முரட்டுத்தனமான ஆள் உங்களுக்கு அதிகப்படியான பயணச்சீட்டைத்தான் கையளிப்பான். நீங்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் உங்கள் தொனி, உங்கள் இந்தி மற்றும் உங்கள் சரியான உச்சரிப்பின் அடிப்படையில் சரியான பயணச்சீட்டை உங்களுக்குக் கொடுப்பான். பேருந்தில் கூட்டம் நெரித்துத் தள்ளும். ""முன்னால் போ. சில்லறையை அப்புறம் வாங்கிக்கோ''என்று மரியாதையில்லாமல் நெட்டித் தள்ளுவான். இறங்கும் வரை அந்த மீதிச் சில்லறை உங்களுக்குக் கிடைக்காது. நடுவில் நீங்கள் ஞாபகப்படுத்தினால் உங்களைப் பற்றி மிக மட்டமான நகைச்சுவை ஒன்றை அந்த நடத்துனன் உதிர்ப்பான். பேருந்தில் உடன் பயணிக்கும் பயணிகளிடமிருந்து உங்களுக்கு எந்தவிதமான ஆதரவும் கிடைக்காது. அவர்களும் ஏதோ மிகப்பெரிய நகைச்சுவை ஒன்றைக் கேட்டது போல உரக்கச் சிரிப்பார்கள்.

அடுத்து இந்த நடத்துனர்களிடமும் அவர்களின் நண்பர்களிடமும் பெண்களும் சில சமயங்களில் ஆண்களும் படும் பாலியல் சார்ந்த துன்பங்களைப் பற்றித் தனியாக ஒரு அத்தியாயம் எழுதலாம். அதற்காகவே சில எழுத்தாளர்கள் பிறவி எடுத்து இலக்கியத் தொண்டு ஆற்றி வருகிறார்கள். இந்த வேலைகளை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். எனவே நாம் அடுத்த விஷயத்துக்குப் போகலாம்.

இப்போது ஓட்டுநர்களைப் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். நிறைய நேரங்களில் பேருந்து நிலையங்களில் ஏறுவதற்குப் பயணிகள் காத்திருக்காமல் இருந்தால் பல நிறுத்தங்களில் பேருந்தை நிறுத்த மாட்டார்கள். பயணிகள் பெண்களாகவும் வயதாளிகளாவும் இருந்தாலும், அவர்கள் கைகூப்பிக் கெஞ்சினாலும் நிறுத்த மாட்டார்கள். அந்த ஓட்டுனன் மனம் கனிந்து எங்காவது நிறையத் தள்ளி நிறுத்தினால்தான் உண்டு.

அதே நேரத்தில் அந்த ஓட்டுனனுக்குத் தெரிந்த ஆட்களோ அல்லது பேருந்தில் வழக்கமாகப் பயணிக்கும் இளம் பெண்களோ அல்லது பேரிளம் பெண்களையோ எந்த இடத்தில் பார்வைக்குப் பட்டாலும் அவர்கள் நிறுத்தாமலே பேருந்து நிற்கும். நிறுத்தி அவர்களிடம் குசலம் விசாரித்து வண்டியை ஓட்டிக்கொண்டே அந்தப் பெண்களின் உடலில் பல இடங்களிலும் பார்வையை விரசமாகப் படரவிட்டு அவர்களைப் பார்க்காமலே வண்டியை ஓட்டுவார்கள். முன் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் சில பயணிகளுக்கு அளவுக்கு மீறி ரத்தக் கொதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கும்.

அடுத்து இந்த ஓட்டுனர்கள் தங்களுக்கான ஒரு ஜால்ராப் பட்டாளத்தைத் தயார் செய்து கொண்டு கியர்பாக்ஸ் அருகில் உள்ள பானட்டில் அவர்களை உட்காரவைத்துக்கொண்டு அவர்களுடன் பேசிக்கொண்டே வண்டியை ஓட்டுவார்கள். அந்த நேரத்தில் அந்தப் பேருந்தை எந்தவிதமான வாகனங்களும் முந்தக் கூடாது. அப்படி முந்திவிட்டால் அந்த ஓட்டுனர்களுக்கு இழுக்கு ஏற்பட்டு விடும். கூட இருக்கும் ஜால்ராக்கள் வாலை முறுக்கி விடுவார்கள். உசுப்பேற்றுவார்கள். அவ்வளவுதான். வண்டி கட்டுக்கடங்காது பறக்கும். பேருந்தின் மேல் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு பயணிக்கும் வயதான பயணிகள் ஆடிக்காற்றில் அலைக்கழியும் இலைகளைப் போலப் பரிதவிப்பார்கள். அதைப்பற்றியெல்லாம் ஓட்டுநர்களுக்குக் கவலை கிடையாது. மனைவியுடன் பயணிக்கும் ஸ்கூட்டர்காரருக்கு வெகு அருகில் உரசிச் சென்று அவரைப் பதற வைப்பார்கள். உடன் வரும் ஜால்ராக் கூட்டத்துக்கு சிரிப்பாணி அள்ளிப்போகும்.

அடுத்து தில்லி அரசு மிகவும் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது - பேருந்துக்களில் யாரும் புகை பிடிக்கக் கூடாது என்று. இது பயணிகளுக்கு மட்டும் தான். ஓட்டுனர்களுக்கும் அவர்களுடன் பயணிக்கும் ஜால்ராக்களுக்கு அல்ல. ஜால்ராக்களில் ஒருவன் தேர்ந்த புகைபிடிக்கும் வல்லுநனாக இருப்பான். அவன் ஒரே நேரத்தில் விரல் இடுக்குகளில் சுமார் ஆறு பீடிகளைச் செருகிக்கொண்டு அவற்றுக்கு நெருப்புப் பற்ற வைத்து ஒவ்வொருவருக்காக நீட்டுவான். புகை மண்டலம் கிளம்பும். ஆரோக்கியமற்ற காற்றைச் சுமந்து பேருந்து சீறிப்பாயும்.

இந்த ஓட்டுனன், நடத்துனன் அல்லாது அவர்களுக்கு ஒரு உதவியாளன் பேருந்தின் முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டு முன்னால் ஏறுபவர்களுக்கு பயணச்சீட்டுக்களைக் கிழித்துக் கொடுப்பான். இவனுடைய பிரதான வேலை அழகான பெண்கள் ஏறும் போது அவர்களைப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொள்வது. ஓட்டுனனுக்குத் தாகம் எடுக்கும் போது நல்ல வெய்யிலில் பேருந்தை நிற்கவைத்து நிதானமாக தண்ணீர் பிடித்துக்கொண்டு வந்து தருவது. மாலை வேளைகளில் அசௌகர்யமான இடங்களில் பேருந்தை நிற்க வைத்துவிட்டு ஓடிப்போய் மதுக்குப்பிகளை வாங்கி வருவார்கள். அடுத்த பேருந்துக்காரர்களுடன் சண்டை நடக்கும்போது பெரிய இரும்புக் குழாய், சைக்கிள் சங்கிலி போன்ற வலுவான ஆயுதங்களை ஓட்டுனனுக்கும் நடத்துனனுக்கும் கையளிப்பார்கள்.

இன்னொரு விஷயம். இது எல்லோரும் பேசிக்கொள்வதுதான். இதற்கு யாரேனும் ஆதாரம் வைத்திருக்கிறார்களா என்று தெரியாது. தலைநகர்ப் பேருந்துப்பயணிகள் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள். ஜேப்படித் திருடர்களுக்கும் சில தனியார் வண்டிகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு சத்தமில்லாமல் ஒரு ஒப்பந்தம் அல்லது ஒரு உடன்படிக்கை உண்டு என்று. சில குறிப்பிட்ட நிறுத்தங்களில் ஜேப்படித் திருடர்கள் ஏறிக்கொள்வார்களாம். வேகத்தடைகள் வரும் போது தேவைக்கு அதிகமாக பிரேக் அடிப்பார்கள். வண்டி குலுங்கி மலுங்கும் வேகத்தில் ஜேப்படித் திருடர்கள் தங்கள் வேலைகளை முடித்து விடுவார்களாம்.

அடுத்து, பேருந்துகளுக்கு இடையே நிகழும் ஓட்டப்பந்தயங்கள், போட்டா போட்டிகள், குஸ்திச் சண்டைகள், துவந்த யுத்தங்கள்.

ஒரே பாதையில் செல்லும் இரு பேருந்துகள் ஒரே நேரத்தில் நேர்க்கோட்டில் எங்கேனும் சந்திக்க நேர்ந்தால் உள்ளே இருப்பவர்கள் பாடு தீர்ந்தது. ஒருவரை ஒருவர் முந்த ஓடும் ஓட்டத்தில் இதுவரை தலைநகர் சாலைகளில் பல உயிர்கள் பலியாகியுள்ளன. பல சந்தர்ப்பங்களில் ஓட்டுனர்கள் கைதாகி பின்னர் ஜாமீனில் வெளிவந்து அடுத்த நாளே வேறு வண்டியில் வேலைக்கு சேர்ந்துவிடுவார்கள்.

சரி. இத்தனை பிரச்சினைகளுடன் இந்த வண்டிகள் ஓடிக்கொண்டுதான் இருக்குமா? தில்லி அரசு நிர்வாகம் இதற்கான நிவாரண நடவடிக்கைகளை எடுக்கமாட்டார்களா?

சாலையில் ப்ளூலைன் வண்டிகள் தொடர்பான விபத்துக்கள் அதிகரிக்கும்போது இந்தக் கேள்விகளும் சர்ச்சைகளும் எழும். ஊடகங்களில் கழுத்து நரம்புகள் புடைக்க எல்லோரும் கத்துவார்கள். எதிர்க்கட்சிகள் லபோ லபோ என்று அடித்துக்கொள்ளும். நாளிதழ்கள் புகைப்படங்களாக அச்சிட்டுத் தள்ளும். பேட்டிகளாக அடுக்கித் தள்ளும். செய்திகளாக அடுக்கித் தள்ளும்.

கணவனை, மனைவியை, பிள்ளையை இழந்தவர்கள் வடிக்கும் கண்ணீர் நம் மனங்களைப் பிசையும்.

அமைச்சர்களும் அதிகாரிகளும் உத்தரவாதங்கள் கொடுத்துக்கொண்டிருப்பார்கள்.

இவற்றின் இடையில் எம வாகனங்கள் தில்லி சாலைகளில் புழுதியைக் கிளப்பிப் பறந்துகொண்டுதான் இருக்கும்.

Thursday, July 12, 2007

டோபா டேக் சிங்




உருது மூலம் ஸதத் ஹஸன் மண்ட்டோ

ஆங்கிலம் வழித் தமிழில் ராகவன் தம்பி



இந்தியாþபாகிஸ்தான் பிரிவினையின் ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, சிறைக் கைதிகளைப் போல, இருநாடுகளின் பைத்தியக்கார விடுதிகளில் விடப்பட்ட பைத்தியங்களையும் தங்களுக்குள் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என இருநாடுகளும் முடிவெடுத்தன.இந்த முடிவு சரியானதா இல்லையா என்று சொல்வது சற்றுக் கடினமான காரியம்தான். ஆனால் . இந்த முடிவுக்கு வருவதற்கு, இருநாடுகளின் மிக முக்கியமான உயர் அதிகாரிகள் பல ஆலோசனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்து, பலமுறை கூடி மிகக் கடுமையாக ஆலோசித்தும், விவாதித்தும் எடுக்கப்பட்ட முடிவு இது என்பதை மட்டும் தெளிவாகச் சொல்ல முடியும். இந்த முக்கியமான பரிமாற்றம் செயல்படுத்தப்படும் இறுதிநாள் மற்றும் பிற முக்கியமான விபரங்களும் மிகவும் கவனத்துடன் முடிவு செய்யப்பட்டது. இந்தியாவில் வசிக்கும் உறவினர்களைக் கொண்ட முஸ்லிம் பைத்தியங்களை எவ்விதத் தொந்தரவும் இன்றி அங்கேயே வசிக்க விடுவதென்றும், மற்ற பைத்தியங்களை பரிமாற்றத்துக்காக எல்லைக்குக் கொண்டு செல்வதென்றும் இந்திய அதிகாரிகள் முடிவு செய்தனர்.


பாகிஸ்தானிலோ, இந்து மற்றும் சீக்கியர்களின் மக்கள் தொகை முழுக்கவும் ஏற்கனவே இந்தியாவுக்குக் குடிபெயர்ந்து விட்டதனால், நிலைமை சற்று மாறுபட்டு இருந்தது. முஸ்லிம் அல்லாத பைத்தியங்களை பாகிஸ்தானில் வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பது போன்ற சிக்கல் அங்கு எழவில்லை. இரு அரசுகளின் இந்தத் தீர்மானத்துக்கு இந்தியாவில் என்னவிதமான எதிர்வினை இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் லாகூரின் பைத்தியக்கார விடுதிகளில் செய்தி பரவியதுமே அது மிகவும் பரபரப்பினைக் கிளப்பியது.


இத்தீர்மானம் குறித்து லாகூரின் அனைத்துப் பைத்தியக்கார விடுதிகளிலும் பரபரப்பான விவாதங்கள் சூடு கிளம்பின. லாகூரின் தீப்பொறி பறக்கும் "ஜமீன்தார்' தினசரியினை தவறாமல் வாசிக்கும் ஒரு பைத்தியத்திடம் கேட்கப்பட்டது þ ""பாகிஸ்தான்'' என்பது என்ன? அதற்கு அந்தப் பைத்தியம் சொன்ன பதில் þ ""இந்தியாவில், கழுத்தை அறுக்கும் கூர்மையான சவரக்கத்திகளைத் தயாரிக்கும் ஒரு இடத்தின் பெயர்''.இந்த ஆழமான கருத்து பலராலும் மிகவும் வெளிப் படையாக ஒருவகைத் திருப்தியுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒரு சீக்கியப் பைத்தியம் இன்னொரு சீக்கியனைக் கேட்டது þ சர்தார்ஜி! நாம் ஏன் இந்தியாவுக்கு அனுப்பப்படுகிறோம்? அங்கு என்ன பாஷை பேசுகிறார்கள் என்பது கூட நமக்குத் தெரியாதே!'' அதற்கு அந்த இன்னொரு சீக்கியர் புன்சிரிப்புடன் சொன்னது



"எனக்கு ஹிந்துஸ்தானியர்களின் மொழி தெரியும். அந்த ராட்சதர்கள் எப்போதும் தாங்கள்தான் இப்பூவுலகின் அதிபதிகள் என்பது போல எப்போதும் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருப்பார்கள்''.
ரு முஸ்லிம் பைத்தியம் குளித்துக் கொண்டிருக்கும்போது
"பாகிஸ்தான் ஜிந்தாபாத்'' என்று கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு மிகுந்த உற்சாகத்துடன் முழக்கமிட்டது. உணர்ச்சி வேகத்தில் குளியல் அறையிலேயே கால்வழுக்கி விழுந்து பலமணிநேரம் நினைவு தவறிப்போய்க் கிடந்தது. அந்த விடுதியில் இருக்கும் அனைவருமே பைத்தியங்கள் கிடையாது. சிலர் மிகவும் தெளிவாக இருந்தார்கள். தெளிவான அந்தச் சிலரில் பலர் கொலைகாரர்கள். தூக்குமேடைக் கயிற்றுக்குப் பயந்து இப்படிப் பைத்தியங்கள் போல இந்த விடுதிகளில் தங்கியிருந்தார்கள். இதற்காக இந்தக் கொலைகாரர்களின் உறவினர்கள் மேலதிகாரிகளுக்கு நல்ல லஞ்சம் கொடுத்து இவர்களை பைத்தியங்களாக அங்கு தங்கச் செய்திருந்தார்கள். இவர்களுக்கு இந்தியா ஏன் இரண்டாகப் பிரிக்கப் பட்டது என்றும் பாகிஸ்தான் என்றால் என்னவென்றும் சூசகமாகத் தெரிந்திருந்தது. ஆனால் இவர்களுக்கும் அங்கு இருந்த நிலவரத்தைப் பற்றிய முழுமையான விபரங்கள் ஏதும் தெரிந்திருக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.செய்தித் தாள்களும் அத்தனை உதவிகரமாக இல்லை. அந்த விடுதிகளின் காவலர்களும் ஒன்றும் அறியாதவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு அத்தனை படிப்பறிவும் இல்லை. அதனால் இவர்களுடைய பேச்சுக்களை ஒட்டுக் கேட்பதனால் ஒன்றும் எதையும் அதிகமாகத் தெரிந்து கொள்ள முடியாது. முகமது அலி ஜின்னாவோ காய்த்þஏþஆஜம் என்பவேரா யாரோ ஒருத்தர், தனியாக ஒரு நாடு, "பாகிஸ்தான்' என்ற பெயரில் அமைத்திருப்பதாக யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள்.


இந்தப் பாகிஸ்தான் எங்கிருக்கிறது என்று லாகூரின் அந்த விடுதியில் இருக்கும் எந்தப் பைத்தியத்துக்கும் எதுவும் தெரியவில்லை. அதனால் அங்குள்ள முழுப்பைத்தியங்களுக்கும் அரைப் பைத்தியங்களுக்கும் தான் பாகிஸ்தானில் இருக்கிறோமா அல்லது இந்தியாவில் இருக்கிறோமா என்று எதுவும் தெளிவாக விளங்கவில்லை. தாங்கள் இந்தியாவில் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்த இழவு பாகிஸ்தான் எங்கு உள்ளது?



பாகிஸ்தானில் இருப்பதாக இருந்தால் நேற்று வரை அது இந்தியாவாக இருந்தது எப்படி? எந்தப் பைத்தியத்துக்கும் தெளிவாகவோ அரைகுறையாகவோ கூட அது விளங்கவில்லை. ஒரு பைத்தியம், இந்த இந்தியாþபாகிஸ்தான், பாகிஸ்தான்þஇந்தியா என்ற சுற்றி அடிக்கும் பேச்சுக்களால் கொஞ்சம் அதிகமாகப் பாதிப்படைந்து, ஒருநாள், தரையைப் பெருக்கிக் கொண்டிருக்கும் போது தன்னுடைய உடைகளையெல்லாம் களைந்து ஒரு உயரமான மரத்தின் உச்சியில்


மிகவும் வசதியான ஒரு கிளையில் அமர்ந்து கொண்டது.

பாகிஸ்தான்þஇந்தியா பிரிவினை குறித்த அதி நுட்பமான பிரச்னை குறித்து தொடர்ச்சியாக இரண்டு மணிநேரத்துக்கும் அதிகமாக சொற்பொழிவாற்றியது. விடுதியின் காவலர்கள் அந்தப் பைத்தியத்தைக் கீழே இறங்குமாறு கேட்டுக் கொண்டார்கள். அந்தப் பைத்தியம் மரத்தை விட்டுக் கீழே இறங்காமல் இன்னும் உயரமான மற்றொரு கிளையில் ஏறி உட்கார்ந்து கொண்டது. காவலர்களின் மிரட்டல்கள் தண்டனையாக உருமாறியபோது, ""எனக்கு இந்தியாவும் வேண்டாம் þ பாகிஸ்தானிலும் வாழவேண்டாம். இந்த மரக்கிளையிலேயே நான் மிகவும் வசதியாக இருப்பேன்'' என்று அறிவித்தது. ஒருவழியாக கீழே இறக்கப்பட்டதும் தன்னுடைய இந்து மற்றும் சீக்கியத் தோழர்களை கண்ணீர் மல்க ஆரத் தழுவிக் கொண்டது. அவர்கள் தன்னை விட்டுப் போய்த்தான் ஆகவேண்டும் என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டது.



அந்த விடுதியில் எம்.எஸ்.சி பட்டம் பெற்ற ஒரு ரேடியோ இன்ஜினியர், யாருடனும் பேச்சு வார்த்தைகள் வைத்துக் கொள்ளாது. மிக நீளமான ஒரு சாலையில் நடப்பதைப் போன்ற பாவனையில் எப்போதும் விடாது நடந்து கொண்டே இருக்கும். விடுதியில் இடைவிடாது நடந்து கொண்டிருக்கும் இந்தியா பாகிஸ்தான் விவாதங்களால் பாதிப்படைந்து ஒரு நாள் தன்னுடைய உடைகளையெல்லாம் கழற்றி விடுதியின் காவலனிடம் பெரிய பந்தாகச் சுருட்டிக் கொடுத்து விட்டு விடுதியின் தோட்டத்தில் முழுநிர்வாணமாக ஒடிக் கொண்டே இருந்தது.சானியத்திலிருந்து வந்த ஒரு முஸ்லிம் பைத்தியம் அந்த விடுதியில் தங்கியிருந்தது. பைத்தியமாவதற்கு முன் அகில இந்திய முஸ்லீம் லீகின் தீவிரமான தொண்டனாக இருந்திருக்கிறது. ஒரு நாளைக்குக் குறைந்தது பதினாறு முறையாவது குளிக்கும் பழக்கத்துக்கு அடிமையாக இருந்தது. ஒரு நாள் திடீரென்று குளிப்பதையே நிறுத்திவிட்டு தன்னுடைய பெயர் ""முகமது அலி'' என்றும், தான்தான் காய்த்þஏþஆஜம் என்று அழைக்கப்படும் முகமது அலி ஜின்னா என்றும் அறிவித்தது. இதைக் கேட்டதும் விடுதியின் இன்னொரு சீக்கிய பைத்தியம் தன் பெயர் சீக்கியர்களின் தலைவர் ""மாஸ்டர் தாராசிங்'' என்று அறிவித்தது.

இவை போன்ற செயல்களால் அந்த விடுதியில் மிகவும் தீவிரமான மதக்கலவரங்கள் ஏற்படும் சூழல் நிலவுவதை உணர்ந்த விடுதி நிர்வாகம் இவர்கள் இருவரையும் தனித்தனி கொட்டடிகளில் அடைத்து வைத்து அந்த இருவரையும் மிகவும் ஆபத்தானவர்கள் என்று அறிவிப்பு வெளியிட்டது. காதல் தோல்வியினால் பாதிக்கப்பட்டு பைத்தியமான லாகூரைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞனும் அந்த விடுதியில் சேர்க்கப்பட்டிருந்தான். அவனுடைய காதலி அமிருதசரஸில் வசிக்கிறாள். அமிருதசரஸ் இந்தியாவின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது என்று யாரோ சொன்னதும் உடனே அவன் மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளானான். பைத்தியமான போதும், அவன் காதலி அமிருதசரஸில் இருக்கும் விஷயத்தை மட்டும் அவனால் மறக்க இயலவில்லை. அன்று அவன் இந்தியாவை இரண்டாகப் பிளந்து வைத்த அனைத்து இந்து, முஸ்லிம் தலைவர்களையும் வாய்க்கு வந்தபடித் திட்டினான்.

தன் அருமைக் காதலியை இந்தியப் பெண்ணாகவும், தன்னை பாகிஸ்தானியாகவும் பிரித்து வைத்த சண்டாளர்கள் அவர்கள் என்று ஏசினான். இருநாடுகளுக்கு இடையிலான பரிமாற்றத்தைப் பற்றிய செய்தி கிடைத்ததும் விடுதியிலுள்ள தோழர்கள் அவனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள். அவன் தான் நேசிக்கும் இந்தியாவுக்கே அனுப்பப்படுவது குறித்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். ஆனால் அமிருதசரஸில் தன்னுடைய வக்கீல் தொழில் அவ்வளவாகத் தழைக்காது என்பதால் தான் லாகூரை விட்டு வெளியேறப் போவதில்லை என்று அவன் அறிவித்தான். ஐரோப்பியர்களுக்கான வார்டுகளில் இரண்டு ஆங்கிலோ இந்திய பைத்தியங்கள் தங்கி இருந்தார்கள். அவர்களிடம், பிரிட்டிஷார் இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்துவிட்டு இங்கிலாந்துக்குத் திரும்பிச் செல்வதாகத் தெரிவித்ததும் மிகக் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளானார்கள். சுதந்திரத்துக்குப் பிறகு தங்களுக்குக் கிடைக்கப் போகும் அந்தஸ்து குறித்து அவர்கள் கவலைப்பட ஆரம்பித்தார்கள். தொடர்ச்சியாக தங்களுக்குள் இதுகுறித்து மிகுந்த கவலையுடன் கிசுகிசுவென்று ஆலோசித்துக் கொண்டார்கள். இந்த விடுதியில் சுதந்திரத்துக்குப் பின் ஐரோப்பிய வார்டு தொடர்ந்து செயல்படுமா அல்லது கலைக்கப்படுமா? தங்களுக்கான ஐரோப்பிய காலை உணவு பறிமாறப்படுமா அல்லது கேவலமான இந்திய சப்பாத்திகள் பறிமாறப்படுமா என்பது குறித்து அவர்கள் மிகவும் கவலைப் பட்டார்கள். கடந்த பதினைந்து ஆண்டுகளாக இந்த விடுதியில் அடைக்கப்பட்ட இன்னொரு சீக்கிய பைத்தியம் ஒருவன் இருந்தான். அவன் எப்போதும் பேசிக் கொண்டிருப்பான். ஆனால் அவன் பேசும் எந்த வார்த்தையும் யாருக்கும் புரியாது. தொடர்ச்சியாக ஒரே வாக்கியத்தை கடந்த பதினைந்து வருடங்களாகத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான்.



"உப்பேர் தி குர்குர் தி அனெக்ஸி தி பே த்யானா தி மூங் தி தால் ஆஃப் தி லால்டின்''



என்று ஒன்றும் புரியாத உளறலைக் கடந்த பதினைந்து வருடங்களாக அந்த விடுதியின் காவலர்கள் அவன் சொல்லக் கேட்டு வருகின்றனர். அவன் கடந்த பதினைந்து வருடங்களாக ஒரு நொடி கூட இமைகளை மூடித் தூங்கியதில்லை என்று அந்தக் காவலர்கள் கூறுவார்கள்.



எப்போதாவது ஒருமுறை விடுதியின் சுவற்றின் மீது சாய்ந்து கொள்வான். மீதி நேரமெல்லாம் எப்போதுமே நின்றுகொண்டுதான் இருப்பான். தொடர்ச்சியாக நின்று கொண்டே இருந்ததனால் இருகால்களும் நிரந்தரமாக வீங்கியே இருந்தன. இதனால் பாதிக்கப் பட்டதாக அவன் என்றும் காண்பித்துக் கொண்டதில்லை. இப்போதெல்லாம் அவன் இந்தியா பாகிஸ்தான் இருநாடுகளுக்கு இடையே பைத்தியங்களைப் பறிமாற்றம் செய்து கொள்ளும் திட்டத்தைப் பற்றி விடுதியில் யாராவது பேசிக் கொள்ளும்போது தீவிரமாகக் காது கொடுத்துக் கேட்கத் துவங்கினான். அதைப் பற்றி அவனுடைய அபிப்ராயத்தை யாராவது கேட்டபோது மிகவும் பணிவுடனும் பயபக்தியுடனும் சொன்னான்.


"உப்பேர் தி குர்குர் தி அனெக்ஸி தி பே த்யானா தி மூங் தி தால் ஆஃப் தி கவர்ன்மெண்ட் ஆஃப் பாகிஸ்தான்.''எப்படி இருந்தாலும் அவனைப் பொறுத்த அளவில் இப்போது பாகிஸ்தான் அரசு என்பது டோபா டேக் சிங் அரசாக பெயர் மாற்றம் அடைந்திருந்தது.


டோபா டேக் சிங் என்பது பஞ்சாப் மாநிலத்தின் ஒரு சின்னஞ்சிறிய கிராமம். அது அவனுடைய சொந்த ஊர். அவனும் இப்போதெல்லாம் இந்த டோபா டேக் சிங் எந்த நாட்டுடன் சேரும் என்று கேட்கத் துவங்கியிருந்தான். ஆனாலும் அது இந்தியாவில் இருக்கிறதா அல்லது பாகிஸ்தானிலா என்று அந்த விடுதியில் உள்ள யாரும் தெளிவாக அறிந்திருக்கவில்லை. இந்த மர்மத்தை விடுவிக்க முயற்சி செய்த சிலரும் மொத்தமாகக் குழம்பிப் போனார்கள். ஏனென்றால், பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் முன்பு இந்தியாவில் இருந்தது.


அது இப்போது பாகிஸ்தானுக்குப் போய்விட்டது. இது அவர்களை வெகுவாகக் குழப்பியது. இப்போது பாகிஸ்தானில் உள்ள லாகூர் எந்த நேரத்திலும் சரிந்து இந்தியா பக்கம் போய்விட வாய்ப்பு இருக்கலாம் என்று அந்த விடுதியில் இருந்தவர்கள் ஊகிக்கத் தொடங்கினார்கள். முழு இந்தியத் துணைக்கண்டமும் பாகிஸ்தானாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது என்றும் இந்தியாவும் பாகிஸ்தானும் என்றாவது ஒருநாள் உலக வரைபடத்திலிருந்தே காணாமல் போய்விட்டாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை என்றும் பேசிக்கொண்டார்கள்.அந்த சீக்கியக் கிழவனுக்கு முடியெல்லாம் கொட்டிப் போயிருந்தது. இருந்த கொஞ்சமான முடியும் அவனுடைய தாடியின் ஒரு பகுதியாக மாறிப்போனது. இது மிகவும் விநோதமாகவும் சமயத்தில் பார்ப்பவர்களுக்குக் கொஞ்சம் அச்சம் தருவதாகவும் இருந்தது. இருந்தாலும் அவன் மிகச் சாதுவாகவும் யாருடனும் சண்டை போடாதவனுமாக இருந்து வந்தான். அவன் டோபா டேக் சிங் கிராமத்தின் வளமான நிலச்சுவான்தாராக இருந்தவன். திடீரென்று பைத்தியமாகிப் போனான். முன்பெல்லாம் மாதம் ஒருமுறை அவனைப் பார்க்க அவனுடைய உறவினர்கள் சிலர் வந்து கொண்டிருந்தார்கள். பஞ்சாபில் மதக்கலவரங்கள் தீவிரம் அடைந்தபிறகு உறவினர்கள் வருவது திடீரென்று நின்றுபோனது. அவனுடைய நிஜப் பெயர் "பிஷன் சிங்'.



எல்லோரும் அவனை கேலியாக "டோபா டேக் சிங்' என்று அழைத்துக் கொண்டிருந்தார்கள். அவன் தானே உருவாக்கிக் கொண்ட ஒரு அகவுலகில் வாழ்ந்து கொண்டிருந்தான். அந்த விடுதியில் அடைத்ததில் இருந்து தான் இருப்பது எந்த இடம், என்ன தேதி, என்ன நேரம் என்பதைப் பற்றிய எந்த பிரக்ஞையும் அவனுக்கு கிடையாது. ஆனால் அவனுக்குள் ஒரு ஆறாவது அறிவை வளர்த்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்க்க விடுதிக்கு அவனுடைய உறவினர்கள் வருகை தரும் நாட்களில் மட்டும் அவன் மணக்க மணக்க சோப்பு தேய்த்துக் குளிப்பான். தலைக்கு எண்ணெய் வைத்துக்கொள்வான்.



தலைமுடியையும் தாடியையும் படியப் படிய சீவித் தன்னை அலங்கரித்துக் கொள்வான். உறவினர்களின் வருகையின் போது அவர்களை சந்திக்கும் வேளையில் ஒன்றும் அதிகமாகப் பேசமாட்டான். அவனுடைய வழக்கமான ""உப்பர் தெ குர்குர் தெ அனெக்ஸி தெ பே த்யானா தெ மூங் தி தால் ஆஃப் தி லால்டின்'' மட்டும் தொடரும். அவனை இந்த விடுதியில் அடைக்கும்போது ஒரு சிறிய அழகான பெண்குழந்தையை கிராமத்தில் விட்டு வந்திருந்தான். அப்பெண் குழந்தை எப்போதாவது உறவினர்களுடன் இவனைப் பார்க்க வரும். இப்போது அப்பெண்ணுக்கு பதினைந்து வயது. இப்போதும் எப்போதாவது ஒருமுறை வருவாள். வரும்போதெல்லாம் அவன் முன் நெடுநேரம் அமர்ந்து கொண்டு கன்னங்களில் கண்ணீர் வடிய மெüனமான விசும்பல்களுடன் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பாள். அவனுடைய விந்தையான உலகில் அவன் காணும் பல முகங்களில் தன் மகளின் முகமும் ஒன்றாக அவனுக்கு இருந்தது. இந்த இந்தியாþபாகிஸ்தான் பிரிவினை மற்றும் இருநாடுகளுக்கிடையிலான பைத்தியங்களின் பரிமாற்றம் குறித்த பேச்சுக்கள் ஆரம்பித்ததிலிருந்து "டோபா டேக் சிங்' இப்போது எங்கிருக்கிறது என்று விடுதியில் எதிரில் வந்தவர்களிடமெல்லாம் கேட்க ஆரம்பித்தான். யாரிடமிருந்தும் அவனுக்குத் திருப்தியான பதில் கிடைக்கவில்லை. ஏனென்றால் யாருக்கும் அது குறித்து ஒன்றும் தெரியவில்லை. அவனைப் பார்க்க வரும் உறவினர்களின் வருகையும் திடீரென நின்று போனது. நாளடைவில் அவனுடைய பதட்டம் அதிகரித்து வந்தது. அதற்கும் மேலாக அது குறித்து, அவனுடைய ஆர்வம் பிரம்மாண்டமாக வளர்ந்து வந்தது. உறவினர்கள் வருகை நாளன்று அவனை எச்சரிக்கை செய்யும் அவனுடைய ஆறாம் அறிவு சார்ந்த எச்சரிக்கை உணர்வும் மெல்ல மெல்ல பலமிழக்கத் துவங்கியது. குடும்பத்தின் பிரிவு அவனை மெதுவாக வாட்டத் துவங்கியது. வருகைகளின் போது உறவினர்கள் அவனுக்காகக் கொண்டு வந்த பரிசுப் பொருட்களையும், அவர்கள் பேச்சில் கனிந்திருந்த பரிவையும் நினைத்து கொஞ்ச நாட்களாக ஏங்கத் துவங்கியிருந்தான்.அவர்களையாவது கேட்டிருக்கலாம். "டோபா டேக் சிங்' இப்போது இருப்பது இந்தியாவிலா அல்லது பாகிஸ்தானிலா என்று கேட்டிருக்கலாம். இந்த விடுதிக்குக் கொண்டு வருவதற்கு முன்பிருந்த டோபா டேக் சிங் கிராமத்திலிருந்து வருபவர்கள் தான் அவர்கள் என்ற ஒரு ஊகம் அவனுக்குள் மெல்ல உருவாகத் தொடங்கி இருந்தது. அந்த விடுதியில் இருந்த ஒரு பைத்தியம் தான் ஒரு கடவுள் என்று அறிவித்தது. பிஷன் சிங் அவனிடம் ஒருநாள் சென்று அது கடவுளாக இருக்கும் பட்சத்தில் அவனுடைய சொந்த ஊரான டோபா டேக் சிங் தற்போது இருப்பது இந்தியாவிலா அல்லது பாகிஸ்தானிலா என்று மிகவும் பவ்யமாகக் கேட்டான். அதற்கு அந்தப் பைத்தியம்,

"உன் டோபா டேக் சிங் இப்போது இந்தியாவிலும் இல்லை þ பாகிஸ்தானிலும் இல்லை. ஏனென்றால் அதைப்பற்றிய ஆணையை இன்னும் நான் பிறப்பிக்க வில்லை என்று கொக்கரித்தது.

அவனுடைய பிரச்னைக்கு உடனடித் தீர்வாக, தேவையான ஆணையை உடனே பிறப்பிக்குமாறு "கடவுளை' மிகவும் பவ்யத்துடன் வேண்டினான் பிஷன் சிங். ஆனால் அவனுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஏனென்றால் அந்தக் "கடவுள்' கவனம் செலுத்துவதற்கு வேறு பல முக்கியமான பணிகள் இருந்ததால், டோபா டேக் சிங் பற்றிக் கவலைப்பட அதற்கு நேரம் கிடைக்கவில்லை. இறுதியில் பிஷன் சிங் அந்தக் கடவுளிடம் மிகவும் கோபத்துடன் ""உப்பர் தெ குர்குர் தெ மூங் தெ தால் ஆஃப் குருஜி தா கால்ஸô அண்ட் குருஜி கி ஃபதேஹ்... ஜோ போலே úஸô நிஹால்... ஸத் ஸ்ரீ அகால்...'' þ அவன் சொல்ல வந்தது என்னவென்றால், ""என்னுடைய பிரார்த்தனைகளுக்கு நீ பதில் சொல்ல வில்லை. ஏனென்றால் நீ ஒரு முஸ்லிம் கடவுள். நீ ஒரு சீக்கியக் கடவுளாக இருந்திருந்தால் எனக்கு சரியான விடை கிடைத்திருக்கும்''.



இருநாடுகளுக்கிடையயோன பைத்தியங்களைப் பரிமாற்றம் செய்யப் படுவதற்கு ஒரு நாளைக்கு முன் டோபா டேக் சிங் கிராமத்தை சேர்ந்த முஸ்லீம் நண்பர்களில் ஒருவன் இந்தப் பதினைந்து வருடங்களில் முதல் முறையாக பிஷன் சிங்கை சந்திக்க விடுதிக்கு வந்திருந்தான். பிஷன் சிங் அவனைப் பார்த்துவிட்டு சடாரென்று முகத்தைத் திருப்பிக் கொண்டான். விடுதியின் காவலன் அவனைக் கூப்பிட்டு

"வந்திருப்பது உன்னுடைய சிறுவயதுத் தோழன் ஃபஸ÷ல் உத்தீன். அவ்வளவு தூரத்திலிருந்து உன்னைப் பார்க்க வந்திருக்கிறான். அவனைப் பார்த்து இப்படி முகம் திருப்பிக் கொண்டால் எப்படி?''

என்று உரிமையுடன் கடிந்து கொண்டான். பிஷன் சிங், மெல்ல ஃபஸ÷ல் உத்தீன் பக்கமாகத் திரும்பி எதையோ புரியாதவண்ணம் முணுமுணுக்க ஆரம்பித்தான். ஃபஸ÷ல் உத்தீன் அவனிடம், ""உனக்கு இந்த செய்தியைக் கொண்டு வரவேண்டும் என்று ரொம்ப நாட்களாக எண்ணிக் கொண்டு அதற்கான சந்தர்ப்பம் வாய்க்காமலே போனது. உன்னுடைய குடும்பத்தினர் எல்லோரும் நலமாகவும் பாதுகாப்புடனும் இருக்கிறார்கள். அவர்கள் எவ்வித ஆபத்தும் இன்றி இந்தியா திரும்பி விட்டார்கள். ஒரு நண்பனாக உனக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து விட்டேன். உன்னுடைய மகள் ரூப் கவுர் மட்டும்... என்று தயங்கி, ரூப் கவுர் கூட இந்தியாவில் மிகவும் பாதுகாப்பாகத்தான் இருக்கிறாள்'' என்று அவசரமாக முடித்தான். பிஷன் சிங் அமைதியாக இருந்தான். ஃபஸ÷ல் உத்தீன் தொடர்ந்தான்.



"நீ நலமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு உன் குடும்பத்தினர் என்னைக் கேட்டுக் கொண்டார்கள். மிக விரைவில் உன்னையும் இந்தியாவுக்கு அனுப்பி விடுவார்கள். சகோதரன் பல்பீர் சிங், சகோதரன் வதாவா சிங் மற்றும் சகோதரி அம்ரித் கவுருக்கும் இந்த ஏழை சகோதரனை நீ நினைவு படுத்தவேண்டும் என்பதைத் தவிர இப்போதைக்கு உனக்குச் சொல்ல எனக்கு ஒன்றும் இல்லை. அல்லாஹ்வின் அருளால் ஃபஸ÷ல் உத்தீன் நலமாக இருக்கிறான் என்று சகோதரன் பல்பீர் சிங்கிடம் போய் நீ சொல்லவேண்டும். அவர்கள் விட்டுப்போன பழுப்பு நிற எருமைகள் இரண்டும் நன்றாக இருக்கினறன. அவையிரண்டும் கன்றுகளை ஈன்றிருக்கின்றன. துரதிருஷ்டவசமாக அவற்றில் ஒன்று, ஆறு நாட்களுக்குப் பின் இறந்து போனது. அவர்களை நான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன் என்று அவர்களிடம் சொல். இந்த ஏழை சகோதரனின் உதவி எதற்காவது தேவைப்பட்டால் உடனே கடிதம் எழுதச் சொல்'' என்றான்.



"இதோ உனக்காகக் கொஞ்சம் அரிசியும் கொண்டு வந்திருக்கிறேன்'' என்றான். பிஷன் சிங் ஒன்றும் பேசாது ஃபஸ÷ல் உத்தீன் கொண்டு வந்த சிறிய அரிசி மூட்டையை வாங்கி அங்கு நின்றிருந்த காவலனிடம் கொடுத்தான்.



"எல்லாம் சரி இப்போது டோபா டேக் சிங் எங்கே இருக்கிறது?''

என்று கேட்டான்.



"டோபா டேக் சிங்கா? ஏன்? அது அங்கேயேதான் அது எப்போதும் இருந்த இடத்திலேயேதான் இப்போதும் இருக்கிறது!''""இந்தியாவிலா? பாகிஸ்தானிலா?"



இந்தியாவில்... இல்லை... பாகிஸ்தானில்...பிஷன் சிங்,



மறுவார்த்தை எதுவும் பேசாது முகத்தை உடனே திருப்பிக் கொண்டு



""உப்பேர் தெ குர்குர் தெ அனெக்ஸி தெ பி தெ மூங் தெ தால் ஆஃப் தி பாகிஸ்தான் அண்ட் ஹிந்துஸ்தான் துர் ஃபிட்டே''



என்று முணுமுணுத்துக் கொண்டே வேகமாக விடுதிக்குள் ஓடிப்போனான்.அதே நேரத்தில் ஏற்கனவே தீர்மானித்தபடி இருநாடுகளுக்கு இடையிலான பைத்தியங்களைப் பரிமாறிக் கொள்ளும் ஏற்பாடுகளும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்தன. இரு நாடுகளின் பைத்தியக்கார விடுதிகளில் அடைக்கப் பட்டிருக்கும் பைத்தியங்களின் பெயர்ப் பட்டியலும், பரிமாற்றத்துக்கான தேதியும் மற்ற விபரங்களையும் இருநாடுகளும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டன. ஒரு கடுமையான குளிர்காலத்து மாலையில், இந்து பைத்தியங்களையும் மூத்த அரசு அதிகாரிகளையும் நிரப்பிக் கொண்டு பேருந்துகள், ஆயுதங்கள் ஏந்திய போலீஸ் காவலுடன், லாகூர் பைத்தியக்கார விடுதியை விட்டு, இந்தியாþபாகிஸ்தானைப் பிரிக்கும் எல்லைக்கோடான "வாகா' எல்லையை நோக்கிக் கிளம்பின.



இருநாடுகளின் தரப்பிலிருந்தும் மூத்த அதிகாரிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இரு தரப்பிலிருந்தும் அந்தப் பைத்தியங்களை பேருந்து களிலிருந்து இறக்கி, மூத்த அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணி சாதாரணமானதாக இல்லை. அதிகாரிகளுக்கு உயிர் போய் உயிர் வந்தது. சில பைத்தியங்கள் பேருந்தை விட்டு இறங்க மாட்டேன் என அடம் பிடித்தன. மிகவும் பிரயத்தனப் பட்டு இறக்கப்பட்ட பைத்தியங்கள் திசைக்கு ஒன்றாக பிய்த்துக் கொண்டு ஓட்டம் பிடித்தன. சிலர் உடைகளைக் கிழித்து எறிந்து முழு நிர்வாணமாக நின்றனர்.



அவர்களுடைய நிர்வாணத்தை மூட முயன்ற அதிகாரிகளின் முயற்சிகள் பலிக்கவில்லை. சில பைத்தியங்கள் அந்த அதிகாரிகளின் உடைகளையும் கிழித்தெறிந்து அவர்களையும் நிர்வாணப் படுத்தி நிறுத்தினர். சிலர் உரக்கப் பாடிக்கொண்டும் சிலர் மிகவும் உரக்க, மிகவும் கெட்ட கெட்ட வார்த்தைகளில் எல்லோரையும் திட்டிக் கொண்டும் இருந்தனர். சிலர் உரக்க அழுது கொண்டிருந்தனர். மற்ற பைத்தியங்களுடனும் அரசு அதிகாரிகளுடனும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். சுருங்கச் சொன்னால், அங்கு உச்சகட்ட குழப்பம் நிலவியது. பரிமாற்றம் செய்ய அழைத்து வரப்பட்டிருந்த பைத்தியங்களில் பெண்களும் இருந்தனர். அவர்களும் உச்சக்குரலில் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். பற்கள் கிட்டித்துப் போகும் அளவுக்கு இருந்த வெடவெடக்கும் குளிரிலும் யாரும் கூச்சல் போடுவதை நிறுத்த வில்லை. பெரும்பான்மையான பைத்தியங்கள் அந்தப் பரிமாற்றத்தினை மிகவும் கடுமையாக எதிர்த்தனர். இருந்த விடுதிகளிலிருந்து தங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி எதுவும் புரியாத ஒரு புதிய இடத்தில் தங்களை அடைப்பதை அநேகமாக எல்லாப் பைத்தியங்களும் கடுமையாக எதிர்த்தனர்.
அங்கங்கு கோஷங்களும் எழத் தொடங்கின. சில பைத்தியங்கள், பாகிஸ்தான் ஒழிக எனக் கூச்சலிட்டன. சிலர் இந்தியா ஒழிக எனக் கோஷம் போட்டனர். இந்தக் கோஷங்களைத் தொடர்ந்து பைத்தியங்களுக்குள் அங்கங்கு மிகவும் கடுமையான சண்டைகளும் கிளம்பின. பிஷன் சிங் பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்டு அதிகாரிகளிடம் அழைத்து வரப்பட்டான். பேரேட்டில் அவனைக் கையெழுத்திடுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கு அவன் அவர்களிடம் கேட்ட ஒரே கேள்விþ ""டோபா டேக் சிங் எங்கே இருக்கிறது? இந்தியாவிலா? பாகிஸ்தானிலா? அந்த அதிகாரி மிகவும் அருவெருப்பான வகையில் உரக்க சிரித்து ""பாகிஸ்தானில்'' என்றான். பிஷன் சிங் தன்னை விடுவித்துக் கொண்டு மிக வேகமாக ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தான். பாகிஸ்தான் போலீசார் அவனை விரட்டிப் பிடித்து குண்டுக்கட்டாகத் தூக்கி இந்தியாவின் எல்லைக் கோட்டுக்கு அப்பால் தூக்கி எறிய முயற்சித்தனர். பிஷன் சிங் அசைந்து கொடுக்க வில்லை. ""இதுதான் டோபா டேக் சிங்'' என்று கடுமையான பிடிவாதத்துடன் நகர மறுத்துப் போராடினான்.



பிறகு ""உப்பேர் தெ குர்குர் தெ அனெக்ஸி தெ பி தியானா மூங் தெ தால் ஆஃப் டோபா டேக் சிங் அண்ட் பாகிஸ்தான்'' என்று உரக்க அறிவிப்பது போல கூச்சலிட ஆரம்பித்தான். டோபா டேக் சிங் ஏற்கனவே இந்தியாவுக்குப் போய்விட்டது என்று அவனுக்குப் புரிய வைக்க அவர்கள் எடுத்த கடுமையான முயற்சிகள் அனைத்தும் பயனில்லாமல் போனது.

அந்த இடத்தை விட்டு அவனை நகர்த்த முடியவில்லை. இருநாட்டுக்கும் பொதுவான எல்லைக் கோட்டில் தனது வீங்கிய கால்களுடன், பிரம்மாண்டமான ராட்சத சிலையைப் போல அவன் நின்று கொண்டிருந்தான். அப்பாவியான கிழவனாக இருந்ததால் அவனை இந்தியாவின் பக்கம் நெட்டித் தள்ள அந்த அதிகாரிகள் முயற்சிக்க வில்லை. பைத்தியங்களின் பரிமாற்றம் தொடர்ந்து கொண்டிருந்தது. அவன் நின்று கொண்டிருந்த இடத்திலேயே நின்று கொண்டிருக்க அவனை அனுமதித்தனர். இரவு கரைந்து கொண்டிருந்தது.



சூரிய உதயத்துக்குச் சற்று முன், கடந்த பதினைந்து வருடங்களாக எப்போதும் நின்று கொண்டேயிருந்த அந்த மனிதன் பெரும் கூச்சலுடன் அலறினான். அதிகாரிகள் அவனை நோக்கி விரைந்தபோது தரையில் தலைகுப்புற சரிந்து விழுந்தான். தரையில் முகம் புதைந்திருக்க அசைவின்றிக் கிடந்தான். அங்கு, மின்சாரம் பாய்ச்சிய கம்பிகளால் அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலிக்கு அந்தப்பக்கம் இந்தியாவுக்கு அனுப்பப் பட்ட இந்தியாவின் பைத்தியங்கள் நின்று கொண்டிருந்தன. வலுவான மின்சாரம் பாய்ச்சிய கம்பிகளால் பாதுகாக்கப்பட்ட வேலிகளுக்கு வேறுபுறத்தில் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட பாகிஸ்தான் பைத்தியங்களும் நின்று கொண்டிருந்தன. தலை இந்தியாவை நோக்கியும் பாதங்கள் பாகிஸ்தான் அமைந்த திசையிலும் அசையாது கிடந்தான் பிஷன் சிங். மிக வலுவாக அமைக்கப்பட்ட இரண்டு பாதுôப்பு வேலிகளுக்கு இடையில் அவன் முகம் புதைத்துச் சரிந்திருந்த சிறு துண்டு நிலத்துக்கு எந்தப் பெயரும் இல்லை. அது,

="டோபா டேக் சிங்''.

Tuesday, July 3, 2007

காந்திய நெறியில் ஒரு தடம் - கோவை அய்யாமுத்து

ராகவன் தம்பி
அனைவருக்கும் வணக்கம்.

பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தத் தடம் பதித்த தமிழர்கள் தொடர் உயிர்பெற்றுள்ளது, உயிர் கொடுத்த தில்லித் தமிழ்ச் சங்கத்தின் புதிய செயற்குழுவுக்கு நன்றி.

கோவை அய்யாமுத்துவைப் பற்றிப் பேசுவதாக இதுவரை மூன்று தடவை முயற்சித்து ஏதோ காரணங்களால் தடைபட்டுக் கொண்டே போனது. இன்றும் தலைமை தாங்க வருவதாக இருந்த திரு.கார்த்திகேயன் அவர்கள் பணி நெருக்கடியால் வர இயலாமல் போனதை எனக்கான துரதிருஷ்டமாக எண்ணி வருந்துகிறேன். செய்யும் எதையும் திருந்தச் செய்ய வேண்டும் என்னும் திடம் உள்ளவர் அவர், அவருக்கு நேரத்தில் என்னால் அய்யாமுத்து குறித்த குறிப்புக்களையும் புத்தகத்தையும் அனுப்ப முடியாமல் போனது. அதற்கான முழுத்தவறும் என்னுடையதே. அத்தவறுக்குப் பொறுப்பேற்று திரு.கார்த்திகேயன் அவர்களிடமும், தில்லித் தமிழ்ச் சங்கத்திடமும் பார்வையாளர்களாகிய உங்களிடமும் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக்கோருகிறேன்.

வழக்கமாக தமிழுக்கே உரிய சாபக்கேடாக அய்யாமுத்து பற்றிய குறிப்புக்களும் நூல்களும் தமிழில் அதிகம் வரவில்லை. அவர் வாழும் காலத்திலும் மறைந்த பின்னரும் நன்றி மிகுந்த தமிழர்களாலும் அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் இயக்கத்தினராலும் வெகுவாகப் புறக்கணிக்கப்பட்டார். அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் மட்டுமே தனியொருவராக அய்யாமுத்து அவர்களின் நினைவினைப் போற்றி வருகிறார், அவருடைய நிறுவனத்தின் ஆதரவில் வெளிவரும் ஓம்சக்தி இதழ் பலமுறை அய்யாமுத்துவைப் பற்றிய நினைவுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. பொள்ளாச்சியில் அருட்செல்வர் கட்டியுள்ள திருமண மண்டபத்தில் அய்யாமுத்து மற்றும் அவருடைய துணைவியார் கோவிந்தம்மாள் ஆகியோரின் உருவப்படங்கள் அவர்கள் உயிருடன் இருந்த போதே திறந்து வைக்கப்பட்டன.

இதைத் தவிர அந்த மாபெரும் மனிதர் மற்றும் அவருடைய ஒப்பற்ற துணைவியார் பற்றிய நினைவுகள் தமிழர்களின் நினைவுத் தடத்திலிருந்து முற்றாக அழிந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

பல வருடங்களுக்கு முன் வானதி பதிப்பகம் வெளியிட்ட கோவை அய்யாமுத்துவின் எனது நினைவுகள் என்னும் அருமையான புத்தகம் பற்றி என்னுடைய நண்பன் சுரேஷ் சுப்பிரமணியன் மிகவும் சிலாகித்துப் பேசினான். அந்தப் புத்தகத்தில் அய்யாமுத்து நேர்மையாகப் பதிவு செய்திருக்கும் பல விஷயங்கள் பற்றியும் அவன் அடிக்கடி சொல்லவே சாகித்ய அகாடமியின் நூலகத்தில் அந்தப் புத்தகத்தை எடுத்து வாசித்தேன். அந்த வாசிப்பிலிருந்து என்னை மிகவும் ஈர்த்த மனிதர் ஆனார் அய்யாமுத்து. அவரைப் பற்றித் தகவல்கள் சேர்க்க முயற்சித்தேன். அவருடைய தலைமுறை மனிதர்களிடம் பேசிய போதும் அவரைப் பற்றி அதிகம் பேருக்குத் தெரிந்திருக்கவில்லை. தெரிந்த ஒரு சிலர் மிகவும் அலட்சியமான ஒரு கருத்தினை அவர் குறித்து வைத்திருந்தனர். எழுத்து வழித் தகவல்கள் அதிகம் கிடைக்கவில்லை. அய்யாமுத்துவைப் பற்றிப் பேச ஒப்புக் கொண்டதும் சாகித்ய அகாடமி நூலகத்தில் இருந்த நூல் எங்கோ ஒüõந்து கொண்டது, பலமுறை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் பொள்ளாச்சியில் இருந்து நூலைத் தேடிப் பிடித்து எனக்காக வரவழைத்த தோழர் சக்தி பெருமாள் அவர்களுக்கு என் நன்றி என்றும் உரியது. அதேபோல அய்யாமுத்து இந்திய சுதந்திர தின வெள்ளிவிழாவில் கலந்து கொள்வதற்கு 1972ல் செய்த தில்லி விஜயத்துடன் அந்த நூல் முடிவடையும். அவருடைய அந்திம நாட்களைப் பற்றிய குறிப்பு ஓம் சக்தி இதழின் ஆசிரியர் திரு.சிதம்பரநாதன் அவர்கள் தொலைநகலில் அனுப்பி வைத்தார். அவருக்கும் என் நன்றி என்றும் உரியது.

இனி அய்யாமுத்து....கோவை மாவட்டம் காங்கயத்தை அடுத்த பரஞ்சேர்வழி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அங்கண்ணன் மாரம்மாள் தம்பதியருக்குக் கடைசிப் புதல்வராகக் கோவையில் 1898 டிசம்பரில் பிறந்தவர் அய்யாமுத்து. கொங்கு வேளாளர் சமூகத்தில் பயிரன் கூட்டத்தை சேர்ந்த மிக எளிய விவசாயக் குடும்பம் அது. மிகச் சிறிய வயதிலேயே அய்யாமுத்துவுக்கு நாடகம், இசை போன்ற கலைவடிவங்களுடன் தொடர்பு இருந்திருக்கிறது. அவருடைய மூத்த சகோதரர் நஞ்சப்பன். 1903ம் ஆண்டில் ஐந்து வயதுப்பையனாக இருந்தபோது கோயமுத்தூர் ஆதம்சா மக்கான் கொட்டகையில் நடைபெற்ற நாடகத்தில் வேடமிட அவருடைய சகோதரர் இவரை அழைத்துச் சென்றது தொடங்கி பதிவுகள் இருக்கும். அவர் நடித்தது நல்லதங்காள் நாடகம். நல்லதங்காளின் ஏழு பிள்ளைகளில் ஒருவர் இவர். நல்லதங்காள் ஒவ்வொரு பிள்ளையாகக் கிணற்றில் தள்ளும் காட்சியில் இவர் முறை வந்தபோது அதனை நிஜக் கிணறு என்று நம்பி அழுது ஊரைக் கூட்டி மேடையை விட்டு இறங்கி ஓடியதும் "இந்த சனியனை எங்கிருந்து பிடித்து வந்தாய்' என்று நல்லதங்காள் கூச்சலிட்டதையும் நடிகர் கேட்டதும் மிக அழகாகப்பதிவு செய்திருப்பார் அய்யாமுத்து.இவர் படிக்கும் காலத்தில் வ.உ.சியையும் சுப்பிரமணிய சிவாவையும் கோவை மத்திய சிறையில் அடைக்க போலீசார் விலங்கு பூட்டிக் கோவைத் தெருக்கள் வழியே இழுத்துச் சென்றதைப் பதிவு செய்திருக்கிறார். அன்றிரவு வேறு சில பையன்களுடன் சேர்ந்து வெள்ளை வெளேரென்றிருந்த சுவர்களில் வந்தேமாதரம் என்று அடுப்புக் கரித்துண்டால் கொட்டை கொட்டையாக எழுதினோம் என்று எழுதியிருக்கிறார். கோவை சுவர்களில் கரிக்கட்டையில் அன்று எழுதிய வந்தேமாதரம் அவருடைய மனதில் பதிந்து பின்னாளில் சுதந்திரப் போராளியாகவும் காங்கிரஸ் பேரியக்கத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ளவும் வழிவகை செய்திருக்க வேண்டும்.

பள்ளிப் படிக்கும் காலத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் தீவிர ஆர்வம் கொண்டு இருமொழிகளையும் பேசவும் எழுதவும் தன்முனைப்புடன் கற்றிருக்கிறார். இளமையில் வெள்ளைக்காரப் பிள்ளைகளுடன் விளையாட்டு மற்றும் குத்துசண்டை முதலியன போட்டியிருக்கிறார். இளமையிலேயே அவருக்குக் கிடைத்த இந்த அனுபவங்கள் பிற்காலத்தில் அவரை மகாதுணிச்சல்காரராக மாற்றியிருக்கிறது. 1918ல் முதல் உலகப்போரின் போது ஐரோப்பியப் படையில் சேர்ந்து பஸ்ரா, மெஸபடோமியா போன்ற நாடுகளில் பணியாற்றியிருக்கிறார். போர் முடிந்து ஊர் திரும்பி வந்து 1921ல் கிணத்துக்கடவைச் சேர்ந்த கோவிந்தம்மாளை மணம் செய்து கொண்டார். 1921ல் கோவைக்கு வருகை தந்த காந்தியின் உரை இத்தம்பதியரை மிகவும் பாதித்துவிட இருவரும் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து கொண்டனர். சுதந்திரப் போராட்டத்தில் தம்பதி சமேதராகப் பங்கு கொள்கின்றனர்.1923ல் கோவையில் குடியேறிய அய்யாமுத்து þ கோவிந்தம்மாள் தம்பதியினர் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு ஊர் ஊராக கதர் விற்பனையில் ஈடுபட்டனர். இக்காலத்தில் தான் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்த ஈ.வெ.ராவின் தொடர்பு அய்யாமுத்துவுக்குக் கிட்டுகிறது. கோவையில் அகில பாரத சர்க்கா சங்கத்தின் கதர் உற்பத்திசாலையை நிறுவி பணியாற்றி வருகிறார். அப்போது (1931) போலீஸ் குடியிருப்பில் அக்குடியிருப்பின் கிணற்றில் தண்ணீர் எடுக்க ஒரு தலித் போலீஸ் காவலரை மற்ற ஜாதிகளை சேர்ந்த போலீசார் அனுமதி மறுத்தனர். இதைக் கேள்விப்பட்ட அய்யாமுத்து தன் மனைவியுடன் அங்கு சென்று அந்தத் கிணற்றுக்கு அழைத்துச் சென்று அந்தப் பொதுக்கிணற்றில் தண்ணீர் இறைக்கின்றனர். ஊர்மக்கள் எல்லோருக்கும் கோபம் பொங்குகிறது. அய்யாமுத்துவை அடித்துக் கொல்ல ஒரு கூட்டம் வருவதாக செய்தி கிடைக்கிறது. அய்யாமுத்துவின் மனைவி தங்கள் கதர்க் கடைக்கு முன் ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு அய்யாமுத்துவை உட்கார வைக்கிறார். வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தைப் பார்த்து அவர் தன்னுடைய கணவர் இறந்ததும் மாரடித்து அழுவதற்கு பின்னர் வருமாறு அழைக்கிறார். இத்தம்பதியினரின் மன உறுதியினைப் பார்த்து கோவை நகரமே வாய்பிளந்திருக்கிறது அன்று.

1924ல் பெரியாரின் அழைப்பின் பேரில் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். வைக்கம் போராட்டத்தின் போது பாரதியாரின் பாடல்களை உரத்த குரலில் பாடிக்கொண்டு நகர்ப்பிரவேசம் செய்திருக்கிறார் அய்யாமுத்து. பின்னாளில் தமிழகத்தில் சுதந்திரப் போரின்போது பாரதியார் பாடல்களை பாடிச் செல்வதற்கு ஒரு முன்னோடியாக செயல்பட்டிருக்கிறார் அவர். இப்போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு பலமாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார்.சுசீந்திரம் ஆலயப்பிரவேசப் போராட்டத்திலும் தீவிரப் பங்கேற்றார். 1926ல் பாரத சர்க்கா சங்கத்தின் தமிழ்நாட்டு செயலாளர் எஸ்.இராமநாதன் வேண்டுகோளை ஏற்று எர்ணாகுளம் வஸ்திராலயத்தை வழிநடத்தினார்.1931ம் வருடம் திருநெல்வேலியில் முதலாவது விவசாயிகள், தொழிலாளர்கள் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டின் திறப்பாளராக அழைக்கப்ட்டார் அய்யாமுத்து. சர்தார் வேதரத்தினம் பிள்ளை தலைமை. திறப்புரையை பல நாட்களுக்கு முன்னரே எழுதி அனுப்பினார் அய்யாமுத்து. அதை அச்சிட்டுக் கொடுக்க பல அச்சகத்தினர் மறுத்துவிடுகின்றனர். அந்த அளவு அந்நியர் ஆட்சியை எதிர்த்துக் காட்டமாக எழுதப்பட்டிருந்தது அந்தத் திறப்புரை. அந்தக் கூட்டத்தில் வேதரத்தினம்பிள்ளை காந்தியை அரிச்சந்திரனுடன் ஒப்பிட்டுப் பேச, அய்யாமுத்து அரிச்சந்திரன் ஏற்கனவே நாடு நகரத்தை விசுவாமித்திரன் பெயருக்கு எழுதிவிட்டான். அதில் பொன்னும் பொருளும் அடக்கம். ஆனால் அவனுக்குத் தரவேண்டிய பொன்னுக்காக தானும், மனைவி மகனுடன் அடிமையான அரிச்சந்திரன் அடிமுட்டாள் என்றும் காந்தியார் அப்படிப்பட்ட முட்டாள் அல்ல என்றும் பேசியிருக்கிறார். என்ன காரணத்தால் இவரை கைது செய்யலாம் என்று பார்த்த ஆங்கிலேய அரசு அரிச்சந்திரனைப் பழித்துப் பேசியதால் இந்துக்களின் மனதைப் புண்படுத்தியதாக அவருக்கு ஆறுமாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்குப் பிறகு இவரும் இவருடைய துணைவியாரும் எண்ணிலடங்கா முறை சிறைவாசம் அனுபவித்திருக்கின்றனர்.அயர்வறியாத உழைப்பாளி என்று காந்தியாரால் பாராட்டப்பெற்ற அய்யாமுத்து 1933ல் திருப்பூர் கதர் வஸ்திராலயத் தலைவரானார். 1936ல் தமிழ்நாடு சர்க்கா சங்கத் தலைவரானார். பம்பரம் போல் சுழன்று பணியாற்றி இழப்பில் இருந்த அந்த சங்கத்தை லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றினார். 1940 வரை கதர் இயக்கத்தின் தீவிர வெற்றிக்குக் காரணமாக இருந்தனர்.

1932ல் காந்தியடிகள் சிறைப்பிடிக்கப்பட்டதை எதிர்த்துப் போராடியதால் ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை பெற்றார் அவருடைய துணைவியார். அதேபோல அய்யாமுத்துவும் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை அடைத்திருக்கும் கண்டம்டு செல்லில் கால்களில் இரும்பு வளையங்கள் பூட்டி அடைக்கப்பட்டார். 1934ல் திருப்பூரில் அகில பாரத சர்க்கா சங்கக் காதிவஸ்திராலய முதல்வராகப் பணியில் இருந்தபோது அவருடைய தாயார் இறந்த செய்தி வருகிறது. அந்த நேரம் அய்யாமுத்துவின் துணைவியார் கோவிந்தம்மாள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கோவையில் அவருடைய சொந்தங்கள் மற்றும் ஜாதியினரின் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் தலித் மாணவர்களுக்குப் பாடசாலை நடத்தினார். உண்மை நாடுவோர் சங்கம் ஒன்றை நிறுவி கிராம வாலிபர் பலர் அதில் பங்கு கொண்டு பல விஷயங்களைப் பற்றி விவாதிக்கச் செய்தார். இந்த நேரத்தில் பஞ்சமாபாதகங்கள் என்னும் ஒரு நூலை எழுதிகிறார் அய்யாமுத்து. இந்நூலைப் பற்றி பெரியார் குடியரசுவில் மிகவும் பாராட்டி தலையங்கம் எழுதியிருக்கிறார். இந்நிலையில் ஒரு நாள் பெரியார் இவரைத் தேடிக்கொண்டு இவர் இருந்த புளியம்பட்டிக்கே வந்திருக்கிறார். ஈரோட்டிலிருந்து வெளிவரும் குடியரசு வாரப்பத்திரிகையில் எழுதச் சொல்லிக் கேட்டுக் கொள்ளவே பல கட்டுரைகளை குடியரசில் எழுதியுள்ளார். சில சமயம் தான் எழுதாதவைகளையும் பெரியார் பிரசுரித்ததாக ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். பின்னர் பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க சென்னைக்குக் குடிபெயர்ந்த குடியரசு பத்திரிகையின் நிர்வாகப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார் அய்யாமுத்து. நட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த குடியரசு சென்னைக்கு வந்ததும் அய்யாமுத்துவின் நிர்வாகத்தில் செழிக்கத் துவங்கியது. நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் முன்னர் அய்யாமுத்துவின் அனைத்து நிபந்தனைகளையும் பெரியார் ஏற்றார். ஒரு நாள் பகல் குடியரசு அலுவலகத்தில் கண்ணப்பரும் பெரியாரும் சாப்பிட உட்கார்ந்திருக்கிறார்கள். பெரியார் வந்ததைத் தெரிந்து கொண்ட அய்யாமுத்துவின் துணைவியார் எப்போதையும் விசேஷமாகவும் அதிகமாகவும் சாப்பாடு அனுப்பியிருக்கிறார். ""அய்யாமுத்து தனது யோக்கியதைக்கு மீறிய சாப்பாடு சாப்பிடுகிறார்'' என்று கண்ணப்பனிடம் பெரியார் சொன்னது இவர் காதில் விழுந்திருக்கிறது. உடனே மேஜை மேல் இருந்த சாவியை எடுத்து பெரியாரின் முகத்தில் விட்டெறிந்து நில்லாமல் சொல்லாமல் வீடு போய் சேர்ந்திருக்கிறார். வீட்டுக்கும் ரயில் நிலையத்துக்கும் தேடி வந்த பெரியாரால் இவரை சமாதானப்படுத்த முடியவில்லை. ஆனால் இந்த சம்பவம் பெரியாருடன் அய்யாமுத்து வைத்திருந்த நட்பினை முறித்துவிட வில்லை. வேறு பல சந்தர்பங்களில் சுயமரியாதை மாநாடுகளின்போதும் பொதுக்கூட்டங்களின்போதும் இருவரும் இணைந்து பணியாற்றியிருக்கின்றனர். பல மாநாடுகளின் தீர்மானங்களின்போது பெரியாரை மிகவும் பலமாக ஆதரித்து இருக்கிறார் அய்யாமுத்து. அதேபோல பெரியாரும் அய்யாமுத்துவைப் பற்றி பல இடங்களில் மிகவும் அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார். ம.பொ.சிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அஞ்சா நெஞ்சன் என்ற பெயருக்கு மிகவும் தகுதி வாய்ந்தவர் அய்யாமுத்து என்று பதிவு செய்திருக்கிறார்.

அதே போல அய்யாமுத்து மகாத்மா காத்தியையும் விட்டுவைக்கவில்லை. காதி வஸ்திராலயம் தொடர்பான ஒரு விஷயத்தில் நியாயத்துக்காக மிகவும் வலுவாகப் போராடினார். இவருடைய வாதத்தில் இருந்த உண்மையைக் காந்தி இவரிடம் மன்னிப்புக் கேட்டு மன்னிப்புக் கடிதம் ஒன்றினை எழுதியிருக்கிறார்.ஒரு கட்டத்தில் காந்தியுடனான இவருடைய தகராறு முற்றி காந்தியடிகள் இவரிடம் ஒரு கடிதம் கொடுத்தார். அதில்

My dear ayyamuthu

I do hereby resign my President ship of the All India Chakra Sangh.

Yours truly,

Bapu.
என்று எழுதப்பட்டிருந்தது. அதற்கு அய்யாமுத்து காந்தியிடம்,

Why to me? Give it to your creator
என்று சொல்லி அந்தக் கடிதத்தை காந்தியிடமே திருப்பிக் கொடுத்தார்.
Oh, you want me to send my resignation to my Creator and you submit yours to me. That won't do. Now I tear both. Get back to Tirupur and carry on as usual as a good boy
என்று அய்யாமுத்துவை கஸ்தூரிபாய் அவர்களிடம் அனுப்பி சாப்பிட்டு விட்டு போகச் சொல்லியிருக்கிறார் காந்தியடிகள்.இவர் ராஜாஜியை தந்தையென்று அழைப்பார். ராஜாஜி என் தந்தை என்னும் தலைப்பில் ஒரு நூலே எழுதியுள்ளார். பிற்காலத்தில் 1960லிருந்து 1967 வரை அதாவது திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ராஜாஜி உறவு கொண்டது வரை சுதந்திராக் கட்சியில் இருந்தவர் அய்யாமுத்து. ராஜாஜியுடன் அவர் தனித்து உரையாடிக் கொண்டிருந்தபோது ஒருமுறை கோவையில் சுதந்திராக் கட்சிக்கு தனித்த அலுவலம் வேண்டும் என்றிருக்கிறார். எதற்கு சீட்டாடவா என்று கேட்டாராம் ராஜாஜி. பத்திரிகை வேண்டும் என்று கேட்டதற்கு சுயவிளம்பரம் தேடிக்கொள்ளவா என்றாராம் ராஜாஜி. அதற்கு அய்யாமுத்து, உங்கள் கட்சி உருப்படாது என்றும் இப்போதுள்ள நிலையில் இன்னும் ஆயிரம் வருஷத்துக்கு முயன்றாலும் உங்கள் கட்சி ஜெயிக்காது என்று ராஜாஜியின் முகத்தில் அடித்துச் சொல்லியிருக்கிறார்.நாற்பதுகளில் கதர் இயக்கத்துக்காகக் குடிநூல் என்னும் இதழை நடத்தி வந்தார். 1950ல் நாசிக் காங்கிரஸ் மாநாட்டுக்குப் பின் தீவிர அரசியலை விட்டு ஒதுங்கினார். 1951ல் கோவை þ பொள்ளாச்சி சாலையில் கோதைவாடி என்னும் ஊருக்கு அருகில் 23 ஏக்கர் நிலம் வாங்கி காந்தி பண்ணை என்று பெயரிட்டு வேளாண்மை செய்து வந்தார். தம் இல்லத்துக்கு ராஜாஜி இல்லம் என்று பெயர் சூட்டினார்.
மூன்று முறை இதயநோயால் தாக்கப்பட்டு நலிவுற்ற அய்யாமுத்து 21-12-1975ல் காலமானார். இவர் காலமான அடுத்த வாரமே 27-12-1975ல் இவருடைய துணைவியார் கோவிந்தம்மாளும் காலமானார்.

தங்கள் மறைவுக்கு முன் தங்கள் நிலத்தை நாட்டுப் பணிக்குப் பயன்படுத்தும்படி அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களுக்கு ஒப்படைத்தனர் இந்த ஆதர்சத் தம்பதியினர். இப்போது அந்நிலம் சர்வோதய சங்கத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.அய்யாமுத்துவின் என் நினைவுகள் என்ற நூலின் தனிச்சிறப்பு என்று சொல்வதற்கு அதில் செய்யப்பட்டுள்ள மிக நேர்மையான பதிவுகள். அதேபோல காலம் மிக அற்புதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல அரசியல் ஜாம்பவான்களால் எழுதப்பட்ட சுயதம்பட்டங்களும் சொந்தக் கதைகளும் விஷயமங்களும், பொய்யும் புனைசுருட்டுக்களும் மிகுந்த சுயவாழ்க்கை வரலாற்றுக் குப்பைகளைப் படித்துச் சலித்துப்போன தமிழனுக்கு ஒரு வாழ்க்கை வரலாற்றினை எத்தனை நேர்மையாக எழுதமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது இவருடைய எனது நினைவுகள் .அரசியல் மட்டுமல்லாது பல துறைகளில் ஆர்வம் கொண்டு விளங்கியிருக்கிறார். அந்தக் கால நாடகங்கள் பற்றிய அவருடைய பதிவுகள் நாடகங்களில் ஆய்வு செய்பவர்களுக்கு கிடைத்த மிக அற்புதமான பொக்கிஷம். திரையை விலக்கியதிலிருந்து கட்டியக்காரன் பிரவேசம், ராஜபார்ட், ஸ்திரீபார்ட் பிரவேசத்திலிருந்து நாடகப் பாடல்முறைகள், இசைவகைகள் போன்றவற்றை மிகவும் விரிவாக எழுதியிருப்பார். அவரே எழுதிய இன்பசாகரன் என்னும் நாடகம் அந்தக்காலத்தில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட ஒன்று. ராஜபக்தி என்னும் அரசியல் நாடகம் பல சர்ச்சைகளைக் கிளப்பியது. இந்த நாடகம் எழுதியதற்காகவும் கைது செய்யப்பட்டிருக்கிறார். பின்னாளில் நவாப் டி.எஸ்.ராஜமாணிக்கம் பிள்ளையுடன் ஆழ்ந்த நட்பு பூண்டிருக்கிறார் அய்யாமுத்து. நவாப் ராஜமாணிக்கத்துக்கு மிகவும் ஆதரவாக இருந்து அவருக்குத் திருமணம் செய்வித்ததல்லாது அவருடைய மகனுடைய திருமணத்தையும் நடத்தி வைத்தார் அய்யாமுத்து. தொழுநோயால் பாதிக்கப்பட்ட கோவிந்தன் என்னும் தொழில்முறை நடிகருக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததோடு மட்டுமல்லாது அவருக்குப் பலவகைகளிலும் உதவியர்கள் அய்யாமுத்து தம்பதியினர். ராஜமாணிக்கம் பிள்ளையை திரைப்படங்களிலும் அறிமுகப்படுத்தினார். அய்யாமுத்துவே மோலியரின் கஞ்சன் என்னும் நாடகத்தைத் தழுவி திரைப்படமாக எடுத்தருக்கிறார். இது அக்காலத்தில் மிகவும் வெற்றிகரமாக ஓடிய திரைப்படம். பாரதிதாசனுக்கு மிகநெருக்கமான நண்பராக இருந்திருக்கிறார் அய்யாமுத்து. பாரதிதாசனின் கவிதா மண்டலத்தில் அய்யாமுத்துவின் பல கவிதைகள் பிரசுரமாகியிருக்கின்றன. இவருடைய தேய்ந்த லாபம் என்னும் கவிதைத் தொகுப்பு பாரதிதாசனால் வெளியிடப்பட்டது.அய்யாமுத்து எழுதிய நூல்கள் þ தேசத்தொண்டனும் கிராமவாசியும், பஞ்சமா பாதகங்கள், மேயோ கூற்று மெய்யா பொய்யா (இதை பெரியார் பதிப்பித்தார்) இராமசாமியும் கதரும், நச்சுப்பொய்கை, இராஜபக்தி, மேவாரின் வீழ்ச்சி, பிச்சைக்காரி, அக்காளும் தங்கையும், நாட்டுப்புறம், சோசலிசம், சுதந்திரா கட்சி ஏன், எங்கே செல்கிறோம், சுதந்திரனுக்கு முன்னும் பின்னும், சென்னை சர்க்காரின் கதர்த்திட்டம், திருவிழா போன்றவை. இந்த நூல்கள் எவையும் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் நூலகத்தில் இல்லை.நான் ஏற்கனவே சொன்னதுபோல இவருடைய பதிவுகள் மிகவும் அற்புதமானவை. நேர்மையானவை. அவற்றில் ஒன்றிரண்டைப் படித்து என் உரையை முடிக்கிறேன்.அக்கால நாடகங்கள் பற்றி எழுதியிருப்பார் þசாம்பிராணிப்புகை காட்டுவார்கள். முன்திரை தூக்கப்படும். பபூன் என்னும் கோமாளி ஆடிப்பாடி மேடையில் காட்சியளிப்பான். அவனைத் தொடர்ந்து சூத்திரதார் வருவார். புல்லாகிப் பூடாகிப் புழுவாகி... எல்லாப் பிறப்பிலும் மானிட ஜன்மமே சிறந்ததென ஒரு சிற்றுரை ஆற்றி சரஸ்வதியை ஸ்தோத்திரம் செய்வார்.சரஸ்வதி வேடம் தாங்க ஆள் இருந்தால், சரஸ்வதி பிரத்யட்சமாவாள். இல்லையேல் திரையின் பின்னாலிருந்து சரஸ்வதியின் குரல் மட்டுமே கேட்கும்.தாயே இன்று இன்ன நாடகம் நடத்த உத்தேசித்திருக்கிறோம். அது நன்கு நிறைவேற அருள்புரிய வேண்டுமென சூத்திரதாரர் சரஸ்வதியிடம் வரம் கேட்பார்.அப்படியே ஆகட்டும் என சரஸ்வதி அருள்புரிவாள்.தட்டுவாணி நமஸ்கரிக்கிறேன். என்பான் கோமாளி.தூஷித்த நீ ஊமையாகக் கடவது என்று சபிப்பாள் சரஸ்வதி. கோமாளி ஊமையாகித் ததாபுதா என்பான்.தாயே தட்டு என்றால் கமலம். வாணியென்றால் சரஸ்வதி. தங்களை கமல சரஸ்வதி என்றுதானே விளித்தான் அவன். அதற்காகத் தாங்கள் கோபம் அடையலாமா என்று சூத்திரதாரர் பரிவுடன் சரஸ்வதியுடன் மன்றாடுவார். அவனது விகடத்தை மெச்சினேன். அவன் வாய்திறந்து பேசுவானாக என்று சரஸ்வதி கூறவும் விதூஷகன் வாய்திறந்து வணக்கம் தானே என்பான்.இப்படிப்போகும் பதிவுகள்.அதே போல கோவை மாநகரம் பற்றியும் அதன் தொழிலாளர்கள் பற்றியும் நாதஸ்வர வித்வான் அங்கண்ணன் பற்றியும் கோவையில் பிளேக் நோய் பரவியது பற்றியும் அவருடைய பதிவுகள் மிகவும் சுவாரசியமானவை.படிக்கப் படிக்க சுவாரஸ்யம் ஊட்டும் பதிவுகள் அவை. இதை நான் மேலும் படிப்பதை விட திரு.பெருமாள் அவர்கள் இந்தக் கட்டுரைக்காக எனக்குக் கொடுத்த அய்யாமுத்துவின் எனது நினைவுகள் நூலை அவருடைய அனுமதியுடன் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் நூலகத்துக்கு அளிக்கிறேன். என்னுடைய இந்தக் கட்டுரையால் உந்தப்பட்டு அய்யாமுத்துவை யாரேனும் ஒருவராவது அதைப் படிப்பார்கள் என்றால் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவேன்.நன்றி.

வணக்கம்.