Thursday, December 20, 2012

சுருதி நழுவிய சோகம் - நித்யஸ்ரீ மஹாதேவன்

எங்கள் வீட்டுப் பெண் என்று எங்கள் குடும்பத்தில் நாங்கள் எப்போதும் அழைக்கும் நித்ய ஸ்ரீ,

வடக்கு வாசல் இசைவிழாக்கள் அனைத்திலும் கலந்து கொண்டு அற்புதமான தமிழிசை வழங்கி அனைவரையும் நெகிழ வைத்த  நித்யஸ்ரீ,

வடக்கு வாசல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு வந்தபோதெல்லாம் தன்னுடைய சகோதரன் வீட்டுக்கு வருவது போன்ற மகிழ்ச்சி தனக்கு உண்டாவதாக பெருமையுடன் அறிவித்த என் அருமை சகோதரி நித்யஸ்ரீ குடும்பத்தில் நிகழ்ந்த சோகம் மிகவும் வருத்தம் அளிக்கிறது.

அவருடைய சோகத்தில் மிகுந்த துயரத்துடன் பங்கேற்கிறேன்.

இதனை எழுதும்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தொலைக்காட்சி செய்தியில் சொல்கிறார்கள். அப்படி எல்லாம் இல்லை என்று நண்பர்கள் சொல்கிறார்கள்.  இரண்டாவதே உண்மையாக இருக்க வேண்டும் என்று
இறையருளை வேண்டுகிறேன். 
 
எல்லாவற்றையும் தாங்கும் மனத் திடம் இறைவன் அவருக்கு அருள வேண்டும் என்று மனமுருகி பிரார்த்தனை செய்கிறேன்.

நித்யஸ்ரீ மஹாதேவன் தம்பதியருக்கு.அழகான இரு சுட்டிப் பெண் குழந்தைகள்  ஒருமுறை சென்னையில் நடந்த அவருடைய இசை நிகழ்ச்சி ஒன்றில்  நித்யஸ்ரீ பாடிக் கொண்டிருந்தபோது மேடையில் அங்கங்கு  சிதறி இருந்த பூக்களைப் பொறுக்கி அந்தக் குழந்தைகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்த காட்சி இன்னும் மனதில் நிற்கிறது.

ஏதோ அவசரத்தில் எதற்கும் கொடுத்து வைக்காத மனிதனாகி விட்டார் மஹாதேவன்.

மனது மிகவும் கனத்து இருக்கிறது.

Friday, December 7, 2012

மச்சம் - இஸ்மத் சுக்தாய்

“சௌத்ரி... ஓ சௌத்ரி...  கொஞ்சம்  நான் சொல்றதைக் கேளேன்”

கணேஷ்சந்த் சௌத்ரி அமைதியாக இருந்தார்.
“உஷ்... உஷ்”...

“எதுக்கு இப்படி சில்வண்டு மாதிரி தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்கே?”

“எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு”

“மரியாதையா சும்மா உட்காரு.  இல்லேன்னா...”
“இனிமேலும் என்னால உட்கார முடியாது.  இங்கே பாரு.  உக்காந்து உக்காந்து முதுகெல்லாம் பலகை மாதிரி ஆகிப்போச்சு.  ஹே ராம்”­­

“ச்சு... ச்சு...

“எனக்கு  அப்படியே உடம்பெல்லாம் நடுக்கமா இருக்கு”

சௌத்ரி ஒன்றும் சொல்லவில்லை.

Saturday, May 19, 2012

மீண்டும் பாரதமணி

கடந்த இருபத்து நான்கு ஆண்டுகளாக பலத்த பொருளாதார நெருக்கடியிலும் எவ்வித சமரசங்களையும்  செய்து கொள்ளாது விடாப்பிடியாக காந்திய நெறிகளைப் போற்றும் கட்டுரைகள் மற்றும் படைப்புக்களைத் தாங்கி வெளிவரும் பாரதமணி இதழ் தேசிய அளவில் நம்முடைய மொழிக்கும் தமிழ் இனத்துக்கும் பெருமை அளிக்கும் இதழியல் செயல்பாடாகும்.  வெள்ளிவிழா காணும் பாரதமணிக்கும் அதன் ஆசிரியர் பெரியவர் சீனுவாசனுக்கும் எங்கள் தலைவணக்கங்கள்.  பாரதமணி பிப்ரவரி இதழில் ஆசிரியர்  பாரதமணி சீனுவாசன்  அந்த இதழை நிறுத்தப்போவதாக அறிவித்து இருந்தார்.    அந்தச் செய்தி மிகவும் வருத்தம் அளித்தது.  வடக்கு வாசல் இதழில் திரு.சீனுவாசன் அவர்களின் அறிவிப்பு குறித்து பதிவு செய்திருந்தோம்.  காந்தியச் சுவட்டில் வெளிவரும் ஒரு இதழ் நின்றுபோவது பெரும் வருத்தம் அளித்தது.

Monday, April 23, 2012

செம்மை - சிறுகதைகளுக்கான காலாண்டிதழ்

இன்று உலகப் புத்தக தினத்தில் செம்மை காலாண்டிதழ்  கூரியர் வழியாகக் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  தமிழில் சிறுகதைகளுக்கு என்றே ஒரு இதழ் என்ற விஷயம் அதை விட மகிழ்ச்சி அளித்தது. 

சில நாட்களுக்கு முன்பு  தூறல் சிற்றிதழில் செம்மை இதழின் விளம்பரம் காணநேர்ந்தது.  ஆசிரியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு இதழை என் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டினேன். 

இதழை அனுப்பி வைத்த ஆசிரியர் நஞ்சுண்டனுக்கு என்னுடைய  அன்பான நன்றி.

அதைவிட முதலில் என்னுடைய மனமார்ந்த வாழ்த்து அவருக்கு.  சிறுகதைகளுக்கு மட்டுமே என்று ஒரு இதழை துவங்குவதற்கு மிகப் பெரிய தைரியம் வேண்டும்.  சிறுகதைகளை கொஞ்சம் கொஞ்சமாக நாம் உதாசீனப்படுத்தத் துவங்கியிருக்கும் நேரம் இது.  பல பிரபல பத்திரிகைகளில் சிறுகதைகள் இப்போது காணப்படுவது இல்லை.  அவற்றில் வந்தவை பெரும்பாலும் சிறுகதைகள் என்ற ஒரு வரையறைக்குள் அடங்காவிட்டாலும்.  பெரும்பத்திரிகைகளில் சிறுகதைகளின் இடங்களை இப்போது வேறு ஏதேதோ பிடித்துக் கொள்ளத் துவங்கியிருக்கின்றன.

Tuesday, April 17, 2012

தூறல் - சிறிய வடிவில் பெரிய வேலை

இன்று வட இந்திய தொலைக்காட்சி ஊடகத்தில் மம்தா பானர்ஜியின் அமைச்சரவையை சேர்ந்த ஒரு அமைச்சர் தங்கள் கட்சியினருக்கு விடுத்த ஒரு ஆணை அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ் கட்சியின் தொண்டர்களையும் தலைவர்களையும் சமூக ரீதியாக ஒதுக்கி வைக்கவேண்டும் என்று ஒரு கூட்டத்தில் தன்னுடைய கட்சியனருக்கு ஆணை விடுத்திருக்கிறார் அந்த அமைச்சர்.  மார்க்கிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினரின் வீடுகளில் திருமண உறவுகளை தொடராதீர்கள் - அவர்களை எங்காவது தேனீர்க் கடைகளில் பார்த்தால் கூடப் பேசாதீர்கள் என்பது போன்ற சில ஆலோசனைகளையும் கொடுத்திருக்கிறார்.  இப்படி ஆளுக்கு ஆள் கிளம்பினால் தொடர்ச்சியாகக் காமெடிக் காட்சிகள் அரசியல் அரங்கில் மேடையேறும் வாய்ப்புக்கள் அதிகமாகும்.

இது ஒருபுறம் இருக்கட்டும்.  இன்னொரு சம்பவம்.  நான் நேரில் பார்த்தது.

Thursday, April 5, 2012

புன்னகை - இருமாத இதழ்


ஏற்கனவே பல இடங்களில் சொல்லி இருப்பது போல, எழுதுவதை விட படித்துக் கொண்டு இருப்பது ரொம்பவும் பிடித்து இருக்கிறது. எதையாவது எழுதலாம் என்று உட்கார்ந்தால் உண்மையாகவே நெட்டி முறிக்கிறது. எழுதுவதற்கு என்று உட்காருவதே பிரம்மப் பிரயத்தனமாக இருக்கிறது.

கணிணியில் உட்கார்ந்தால் மின்னஞ்சல்களை மீண்டும் திருப்பித் திருப்பிப் பார்த்து ஏதாவது காமாசோமா என்று பதில் எழுதி, கண்ணுக்கும் கவனத்துக்கும் தென்படும் சில இணையதளங்களைப் படிப்பதில் நேரம் கழிகிறது. புத்தகங்களை விற்கும் இணையதளங்களுக்கு சென்று சொத்தை அழிக்கின்ற காரியம் இப்போதெல்லாம் அடிக்கடி நடக்கின்றன. நான்தான் கிறுக்கு என்று நினைத்தேன். நான் சந்தித்த அநேக நண்பர்கள் flipkart போன்ற தளங்களுக்கு அடிமை ஆகியிருக்கிறார்கள்.

இணையப் புத்தக சந்தையில் அலைவது, இசை கேட்பது போன்ற வேலைகளுக்கு இடையில் சில எழுத்தாளர்களின் பிரத்தியேக தளங்கள் நல்ல பொழுது போக்குத் தளங்களாக அமைகின்றன.

அது சரி. பைத்தியங்களை வேடிக்கை பார்க்க யாருக்குத்தான் சுவாரசியம் இருக்காது?

Tuesday, February 28, 2012

கோடிட்ட இடங்களை நிரப்புதல் - சுமதி ராம்

வடக்கு வாசல் இதழ் துவக்கிய நேரத்தில்  இதழுக்குப் படைப்புக்கள் வரத் துவங்கி இருந்தன.  கவிதையும் கட்டுரைகளும் சிறுகதைகளும் வரத் துவங்கிய நேரம் அது. அநேகமாக 2005 இறுதி மாதங்களில் ஒன்றாக இருக்கலாம்,

வடக்கு வாசல் அலுவலகத்துக்கு வந்த கவிதைகளில் ஒன்று தனியாகக் கவனத்தை ஈர்த்தது. ஒற்றைக் கவிதை அது.

தன்னைப் பற்றிய அறிமுகம் ஏதும் இல்லை.  நேரடியாக ஒரு கவிதை. வெறும் பெயரும் முகவரியும் தாங்கிய ஒற்றைத்தாளில் வந்த படைப்பு.
கவிதை எழுதியவர் பெயர் சுமதி ராமசுப்பிரமணியம் என்று இருந்தது. இது போன்ற நேரடிப் பெயருடன் கவிதை அல்லது கவிதை எழுதுபவர்கள் அதிலும் பெண் படைப்பாளிகளை அதிகம் காண நேருவதில்லை. இந்த நேரடிப் பெயர் எனக்கு சற்று ஆச்சரியம் அளித்தது.

Monday, February 20, 2012

தூரிகையும் நிறங்களின் கடவுளும்...

வாசகனை அச்சம் கொள்ள வைக்கும் டாம்பீகமான வார்த்தைகளுடன், எவ்வகையான ஒழுங்கமைவும் இன்றி, தன்னை மட்டுமே முதன்மைப் படுத்திக் கொள்ளும் தமிழின் நவீன கவிதைச் சுழல்,  (இது எழுத்துப் பிழையல்ல) கவிதைப் பக்கம் ஒதுங்க நினைக்கும் வாசகனை சில காலங்களாகப் படுத்தி எடுத்து வருகிறது.  

வாசக மனத்தை  எந்த வகையிலும் பொருட்டுக்கு எடுத்துக் கொள்ளாது, தானிழுக்கும் போக்குக்கு எல்லாவற்றையும் இழுத்து வைத்து அல்லல்படுத்தி வருகின்றது.   இந்தச் சூழலில், சமீப காலங்களாக    எவ்வகையான பாசாங்குகளும் அற்று தனக்குள் ஒடுங்கிய கவிதைகளும்,  நல்ல தரமான ஓசை நயம் கொண்டு, இந்த மண்ணின் மணம் சுமந்த படிமங்களை சுமந்த கவிதைகளும் நேரடித்தன்மை கொண்ட கவிதைகளும்  இப்போது அங்கங்கு   வெளிவரத் துவங்கியுள்ள போக்கு சற்று ஆறுதலும் தைரியமும் அளிக்கிறது.   லேசாக நம்பிக்கையும் தருகிறது. 

அந்த வகையில் பூ.அ.ரவீந்திரன் சற்று தாராளமாகவே இந்த  நம்பிக்கையை நமக்கு அளிக்கிறார். கோவை கீதா பதிப்பகத்தின் வெளியீட்டில் வந்துள்ள அவருடைய  தூரிகையும் நிறங்களின் கடவுளும் என்னும் தொகுப்பு ஆர்ப்பாட்டங்கள் அதிகம் இல்லாத ஒரு கவிதை அனுபவத்தை நமக்கு வழங்குகிறது.

Saturday, February 18, 2012

தேவராஜ் விட்டலனுக்கு நன்றி


இந்த வலைப்பூ ஏறத்தாழ ஒரு ஆண்டுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் சீர்கெட்டுக் கிடந்தது.  அதிகம் எழுதாமலும் கவனிக்காமலும் இருந்தேன்.  சமைக்கத் தெரியாதவன் சமைத்தது போல, கட்டத் தெரியாதவன் வீட்டைக் கட்டியது போல, பாழ்பட்டுக் கிடந்த அறை போல, இசைஞானம் இல்லாதவன் ராகம் தானம் பல்லவியை முயற்சித்தது போல, சரைக்கத் தெரியாதவன் சரைத்தது போல, பல ஆண்டுகள் திறக்கப்படாமலே கிடந்த உக்கிராண அறை போல அது அது அங்கங்கு போட்டது போட்ட படி, பிச்சைக்காரன் வாந்தி எடுத்தது போல சீர் கெட்டுக் கிடந்தது.

கடந்த பத்து நாட்களாக என்னுடய வலைத்தளம்  ஹேக் செய்யப்பட்டுக் கிடந்தது.   

ஏற்கனவே துர்க்குணி, அதிலும் கர்ப்பிணி என்பது போல ஏற்கனவே கடுமையான சோம்பல் வியாதி மற்றும் பல்வேறு மன உளைச்சல்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த  எனக்கு மேலும் எழுதாமல் இருக்க இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததே  என்று சந்தோஷமாக எதையும் எழுதாமல் இருந்தேன்.  இதனால் மற்றவர்களையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தேன்.

இப்போது என்னுடைய இணையதளம் சரியாகி விட்டது.  ஆனாலும் சில பழுதுபார்த்தல்கள் மிஞ்சி இருக்கின்றன என்று என்னுடைய தளத்தின் வடிவமைப்பாளர் செல்வமுரளி சொல்கிறார்.  அதனால் அதற்குள் நுழைய தைரியம் இல்லை.  கொஞ்ச நாள் கழித்து அடியெடுத்து வைக்கலாம் என்றிருக்கிறேன்.

எழுத்தாளர் ராஜாமணிக்கு ஒரு அஞ்சலி எழுதவும் அவருடைய வடக்கு வாசல் நேர்காணலை வெளியிடவும் இந்த வலைப்பூவை இரு நாட்களுக்கு முன்பு மீண்டும் தூசி தட்டித் திறந்தேன்.  

நேற்று யதேச்சையாக எங்கள் அலுவலகத்துக்கு வந்த தேவராஜ் விட்டலன் மிக்க சிரத்தை எடுத்து இந்த வலைப்பூவின் தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி விட்டார்.  இது திட்டமிட்டு நடந்தது அல்ல.  நான் யதேச்சையாக கேட்டுக்கொள்ள அதிதீவிரத்துடன் உடனே இந்த வேலைக்காக உட்கார்ந்து விட்டார் மனிதர்.

வடக்கு வாசல் நூல் வெளியீட்டு விழாவில் டாக்டர் கலாமிடம் நூல் பெறும் தேவராஜ் விட்டலன்
 இப்போது நீங்கள் காணும் இந்த வடிவத்துக்கு முற்றிலும் பொறுப்பானவர் தேவராஜ் விட்டலன்.  நேற்று பகல் முழுதும் அங்கும் இங்கும் நகராது தன் மடிக்கணிணியில் வெகுநேரம் போராடி சீர்குலைந்து போயிருந்த என்னுடைய இந்த வலைப்பூவை ஒரு வழியாக பார்க்கும் படி செய்து விட்டார்.  

திறமையாளர்கள் கையில் கிடைத்தால் மட்டமாக இருக்கும் விஷயங்கள் கூட சிறப்பு பெறும் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.

தேவராஜ் விட்டலனுக்கு என் மனமார்ந்த நன்றி.  

நிறைய நூல்கள் எனக்கு வருகின்றன.   அத்தனையும் வடக்கு வாசல் இதழில் மதிப்புரை போட இடமும் நேரமும் மதிப்புரையாளர்களும் கிடைப்பது இல்லை.  எனவே இந்தத் தளத்தை நூல் மதிப்புரைகளுக்கும் எப்போதாவது உள்ளூர் வம்புகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்.

அதாவது இனி இங்கும் நிறைய எழுத முயற்சி செய்வேன்.  

இதற்காக  யாருக்காவது யாரையாவது  திட்ட வேண்டும் அல்லது சபிக்க வேண்டும் என்று தோன்றினால் இப்போது ஒரு ஆள் கிடைத்து விட்டார்.

Thursday, February 16, 2012

அணையாத சினத்தீ - ஏ.ஆர்.ராஜாமணி


 நவம்பர் 2005 வடக்கு வாசல் இதழில் வெளியான நேர்காணல்.
நேர்காணல் - ராகவன் தம்பி மற்றும் சுரேஷ் சுப்பிரமணியம்


தில்லிக்கு வரும் எந்தத் தமிழ் எழுத்தாளரும் தவறாமல் - மறக்காமல் எப்போதும் விசாரிக்கும் ஒரு பெயர் ஏ.ஆர்.ராஜாமணி.  கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாகத் தலைநகரில் தனியொருவராக, எழுத்தை மட்டுமே நம்பி வாழ்க்கையை நடத்தி வருபவர்.  தீவிரமான படைப்புலகில் ஈடுபடவில்லை என்றாலும், குறிப்பிடத்தகுந்த படைப்பு எதையும்  படைக்கவில்லை என்றாலும் அகில இந்திய வானொலியில் மொழிபெயர்ப்பாளராகவும், பத்திரிகையாளராகவும் பல பத்திரிகைகளில் பத்தியாளராகவும் அவ்வப்போது தேவைக்கேற்ப எழுத்துத் துறைகளில் தன்னுடைய செயல்பாடுகளைத் தொடர்ந்து வருபவர்.  மனதில் பட்டதை  எதிராளியின் எதிர்வினைகளைப் பற்றி எவ்விதக் கவலையும் தயக்கமும் இல்லாது சொல்பவர்.  இந்தப் பேட்டியிலும் இவர் பலரைப் பற்றி மிகவும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். 

அணைந்து போன சினத்தீ - ஏ.ஆர்.ராஜாமணி

மூச்சே நின்று போவது போல மிக அழுத்தமாகக் காற்றை உள்வாங்கி ஒலி எழுப்பிச் சிரிக்கும் ஏ.ஆர்.ராஜாமணியின் சிரிப்பு இப்போது நம்மிடையில் இல்லை.  

திங்கட்கிழமை (13 பிப்ரவரி 2012) அன்று சவக்கிடங்கில் இருந்து  பெற்றுக் கொண்டபோது அந்தச் சிரிப்பு வாய் பிளந்து உறைந்து போயிருந்தது.  அந்தச் சிரிப்போடு பிளந்திருந்த வாயுடன்தான் அந்த மனிதனுக்கு கரோல்பாக் மயானத்தில் சிதை மூட்டினேன்.

மீண்டும் பழைய கூட்டில்...

இந்தப் பக்கங்களில் எழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன.  தனி இணையதளத்துக்குப் புதுக்குடித்தனம் போனதால் இந்த வீடு நீண்ட காலமாகப்  பூட்டிக் கிடந்தது.  

இப்போது அந்த வீட்டை யாரோ சில பங்களாதேஷ் விஷமிகள் அழிச்சாட்டியம் செய்து கொண்டிருக்கிறார்கள்.   திங்கட்கிழமை என்னுடைய வலைத்தளத்தை திறந்தபோது தொடர்பே இல்லாமல் என்னென்னவோ வந்தது.  சில படங்களில் கெட்ட காரியங்களும் இருந்தன-  அடி வயிறு கலங்கி விட்டது.