Wednesday, February 26, 2014

கபாலி கான்

எங்கள் வீட்டு வாசலில் எனக்காக எப்போதும் காத்திருக்கும் கபாலி கான் டெல்லி முனிசிபாலிடி ஆட்களால் நேற்று மாலை பிடித்துச் செல்லப்பட்டது என்ற தகவலை கார் துடைக்கும் பையன் காலையில் சொன்ன போது மனதுக்குக் கொஞ்சம் கனமாக இருந்தது.

பொதுவாக நாய்களுக்கு ஆங்கிலப் பெயர்களை வைப்பதை எப்போதும் எதிர்ப்பவன் நான். சில ஆண்டுகளுக்கு முன்பு என் வீட்டுக்கு தெருவில் இருந்து என் மகள் எடுத்து வந்து இப்போது எங்கள் வீட்டில் கம்பீரமாக வளர்ந்து வரும் ரஸ்டிக்கு அப்படி ஒரு பெயரை வைக்கும் சுதந்திரம் இல்லை எனக்கு. அந்த சுதந்திரத்தை மகள்கள் எடுத்துக் கொண்டார்கள். 

என் வீட்டு ரஸ்டி சில நாள் குட்டியாக இருந்தபோது அதற்கு முனியாண்டி என்று பெயர் வைத்தேன். என் அம்மாவின் அப்பா குப்புராவ் பெயர் வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் கிருஷ்ணகிரியில் என்னுடன் பிறந்தவர்கள் என்னைத் தொலைத்து விடுவார்கள். அதனால் பொதுவாக எங்கள் வீட்டுக் காவல் தெய்வமாக முனியாண்டி என்று இருக்கட்டுமே என்று யோசித்தேன். சில நாட்கள் கழித்து அது காலைத்தூக்காமல் அகட்டி சிறுநீர் கழித்ததும் தான் தெரிந்தது. அதற்கு முனியாண்டி என்று பெயர் வைக்க முடியாது என்று. முனியம்மா என்ற பெயர் நன்றாக இருக்காது. காமாட்சி, விசாலட்சி என்று நல்ல அம்மன் பெயர் சூட்டலாம் என்று நினைத்தேன். ஆனால் அதுபோன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையில் முடிவெடுக்கும் சுதந்திரம் எங்கள் வீட்டில் பொதுவாக எனக்குத் தருவதில்லை. அதனால் என் மகள் ரஸ்டி என்று அதற்கு பெயர் வைத்தபோது நான் ஆட்சேபிக்கவில்லை. ஆட்சேபித்து இருந்தாலும் அது ரஸ்டியாகத்தான் இருந்திருக்கும். இப்போதும் இருக்கிறது.

சரி. புதிதாக வந்து சேர்ந்திருக்கும் இதனை எப்படிப் பெயர் இல்லாமல் கூட வைத்துக் கொள்வது? வீட்டுக்கு வெளியில் இருந்தாலும் ஒரு பெயர் வேண்டுமே. எந்த வகையிலும் அதற்கோ என் மகள்களுக்கோ மனைவிக்கோ இந்தப் பெயரில் ஆட்சேபம் இருக்காது என்ற தைரியத்தில் வீட்டுக்கு வெளியில் இருந்த இதற்கு கபாலி கான் என்று பெயர் வைத்தேன். எங்கள் வீட்டின் பெங்காலி வேலைக்காரி உட்பட அனைவரும் அதனை கபாலி கான் என்றே அழைக்கத் துவங்கினார்கள். அதுகூட நாங்கள் கபாலி கான் என்று கூப்பிட்டால் திரும்பிப் பார்க்கத் துவங்கியது.