Monday, November 10, 2008

அமரர் கே.வி.வெங்கடாசலம் அவர்கள் நினைவில்...





அமரர் கே.வி.வெங்கடாசலம் அவர்கள் தில்லிக் கல்விக் கழகம் மற்றும்தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு அரும்பணிகள் ஆற்றியவர். தில்லித் தமிழ்க் கல்விக்கழகத்தின் ஒவ்வொரு பள்ளியின் சுவர்களும் அவருடைய தன்னலம் கருதாத தொண்டினைத் தனக்குள் காவியங்களாய் சுமந்து நிற்கின்றன. ஜøன் மாதம் அவருடைய நூற்றாண்டு துவங்கியது.

தலைநகரில் தமிழ் அமைப்புக்களுக்குத் தன்னலமற்ற வகையில் பணியாற்றித் தடங்கள் பதித்த அமரர் கே.வி.வெங்கடாசலம் அவர்களின் நினைவினைப் போற்றும் வகையில் வடக்கு வாசல் நவம்பர் மாத இதழில் சில கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறோம்.


தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் தில்லித் தமிழ்க் கல்விக்கழகம் போன்ற அமைப்புக்களுக்கு இவர் ஆற்றிய அருந்தொண்டு தலைநகர் தமிழர்கள் என்றும் மனதில் நன்றியுடன் வைத்துப் போற்ற வேண்டும். தான் ஏற்றுக்கொண்ட பணிகளை தனக்கு வழங்கப்பட்ட அதிகாரமாக எடுத்துக் கொள்ளாது தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பாக நினைத்துச் செயல்பட்ட கடமைவீரர் திரு.வெங்கடாசலம் அவர்கள். தன்னை எங்கும் எதிலும் முன்னிறுத்தாது தான் சார்ந்த அமைப்பின் காரியத்தை மட்டுமே முன்னிறுத்திச் செயல்பட்ட மாமனிதர். தான் பொறுப்பேற்று செயல்பட்ட அமைப்பினைத் தனக்கான சுயவிளம்பரப் பலகையாகவும் வணிக நோக்குள்ள செயல்பாடுகளுக்காகவும் பயன்படுத்தாது தன் செல்வாக்கை அமைப்பின் மேம்பாட்டுக்காகவும் வளர்ச்சிககாகவும் பயன்படுத்திய பெருமனது அவருடையது. எவ்வித முனைப்பும் எடுக்காது அடுத்தவர்களின் உழைப்பில் நிகழ்ந்த காரியங்களில் எவ்விதக் கூச்சமும் இல்லாது தங்களின் பெயர்களை அவசரமாகக் கல்வெட்டில் பொறித்துக் கொள்ளும் அற்பத்தனங்கள் இல்லாமல் வாழ்ந்த தலைமுறை அவருடையது. ஜனநாயக மாண்புகளை மறுத்து சட்டத்துக்குப் புறம்பான வகையில் தங்களைப் பதவியில் நீட்டித்துக் கொள்ள விழையும் சிறுமைகள் அற்ற பெருமனம் கொண்டு வாழ்ந்த தலைமுறை அவருடையது. அவரைப் போலவே அவருடைய குடும்பத்தினரும் எவ்வித விளம்பரங்களையும் மறுக்கும் பெருமனம் கொண்டவர்களாகத் திகழ்கிறார்கள். அமரர் வெங்கடாசலம் அவர்களுடைய புதல்வரையும் புதல்வியையும் நேரில் சந்தித்து அவர் குறித்த வாழ்க்கைக் குறிப்பினையும் நிழற்படங்களையும் கேட்டபோது, தங்கள் தந்தையார் தலைநகர் அமைப்புக்களுக்கு ஆற்றிய பணியே அவர் தொடர்பான அனைத்துக் குறிப்புக்களையும் தந்து விடும் என்றும் தங்களைக் குறித்து எந்தக் குறிப்பும் விளம்பரமும் வேண்டாம் என்றும் முகமலர்ச்சியுடன் வேண்டுகோள் விடுத்தார்கள். தகுதிகள் ஏதுமின்றி விளம்பரங்கள் தேடும் இந்தக் காலத்தில் தங்களின் மேலான தகுதிகளை மறைத்து வைத்து தங்களின் தந்தையார் ஆற்றிய தொண்டினை மட்டுமே முன்னிறுத்த விழையும் இவர்களின் பெருமனத்துக்கு எங்கள் தலைதாழ்ந்த வணக்கம்.


அமரர் கே.வி.வெங்கடாசலம் அவர்களுடன் தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தில் இணைந்து பணியாற்றிய பெருந் தகையாளர்கள் புலவர் ஆர்.விசுவநாதன், எஸ்.இராமாமிருதம், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பி.ஆர்.வெங்கடகிரி, தில்லித் தமிழ்க் கல்விக்கழகப் பள்ளியின் மேனாள் முதல்வர் எஸ்.நடராஜன், தில்லி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலர் ஏ.ஆர்.ராஜாமணி ஆகியோர் தங்கள் நினைவுகளை வடக்கு வாசல் நவம்பர் மாத இதழில் பதிவு செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றி.

தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் தில்லிக் கல்விக் கழகத்துக்கும் இந்த இதழ் தயாரிப்புக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இது முழுக்க முழுக்க வடக்கு வாசல் இதழின் முயற்சியாகும்.


கடந்த மூன்று மாதங்களாக வடக்கு வாசல் இதழ் வழியாக தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வந்தோம். நேரிலும் தொலைபேசியிலும் பலரைத் தொடர்பு கொண்டு அமரர் வெங்கடாசலம் குறித்த தகவல்களையும் நிழற் படங்களையும் அளித்து உதவுமாறு கேட்டுக் கொண்டோம். இது விஷயமாக யாரும் எவ்வித அக்கறையும் காட்டவில்லை என்பதை இங்கே மிகவும் மனவருத்தத்துடன் பதிவு செய்கிறோம். கிடைத்த ஒரு சில விஷயங்களுடன் வரும் இந்த இதழை முழுமையான நினைவு மலராக அறிவிக்க எங்களுக்கு மனம் வரவில்லை. தலைநகரில் தமிழ் பண்பாட்டுக்கும் கல்விக்கும் அருந்தொண்டாற்றிய ஒரு மாமனிதரைப் பற்றிய சில நினைவுகளைப் பதிவு செய்ய எங்களுக்குக் கிடைத்த இந்த வாய்ப்பினை பெரும்பேறாகக் கருதுகிறோம்.


தலைநகர் தமிழர்களின் நன்றியுணர்வும் வரலாற்று உணர்வும் என்றாவது ஒருநாள் மேம்படும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இன்னும் இருக்கிறது.

3 comments:

  1. congratulations for giving 7 articles , even after not getting much news about Mr Venkatachalam
    jayanthy

    ReplyDelete
  2. குமுகாயத்தின் பங்களிப்பு குடத்திலிட்ட விளக்காய் போய்விடாமலிருக்க இது போன்ற பதிவுகள் தேவை,அவசியமும் கூட. ஆல்பர்ட்,விஸ்கான்சின்,அமெரிக்கா.

    ReplyDelete
  3. தகவல்களுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete