யதார்த்தா
கி.பென்னேஸ்வரன்
அனைவருக்கும் வணக்கம்.
வேறு எந்த சமூகத்திலும்
காணாத அளவுக்கு நம் தமிழ் சமூகத்தில்
விசித்திரங்களும் வேடிக்கைகளும் வினோதங்களும் எக்கச்சக்கமாகக் கொட்டிக் கிடக்கின்றன. இரு
வேறுபட்ட முனைகளில், ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத இருநிலைகளில் எதிரும் புதிருமான தளங்களில்
சமூகக் கலாச்சார நிகழ்வுகள் நம்முன் பல சமயங்களில்
காணக் கிடைக்கின்றன. வெற்று
ஆரவாரங்களாலும் கோஷங்களாலும் உருவாக்கப்பட்டு எதிலும்
ஒரு பூரணத்தையும் ஒழுங்கையும் வேண்டி நிற்காது ஒரு சிறு அளவிலேனும்
பகுத்தறிவின் பிரயோகத்தையும் வேண்டி நிற்காத விஷயங்கள்
பிராபல்யம் அடைந்து நிறுவப்பட்ட வெற்றிகளின் சூத்திரங்கள்
ஆகின்றன.
அதே நேரம் நாம் மற்ற
சமூகங்களின் முன், மற்ற மொழி
மற்றும் கலாச்சாரக் குழுமங்களின் பெருமையுடன் முன் வைக்கத் தகுதியும்
ஆகிருதியும் கொண்ட பல உன்னதங்கள்
எவ்வித ஆரவாரமும் இன்றி ஒரு அர்த்தம்
பொதிந்த மௌனத்துடன் இச்சமூகத்தின் மூளைச் செயல்பாட்டினை நிராகரித்த
புறக்கணிப்பினை எதிர்கொண்டு கால ஓட்டத்தில் பயணித்து
வருகின்றன.
அப்படிப்பட்ட
பல உன்னத நிகழ்வுகளில் ஒன்றுதான்
ஏ.கே.செட்டியார். ஒன்றும்
இல்லாத வெற்றுக் கலாச்சார நிகழ்வுகள் பொய்யான ஒரு சரித்திரத்தினை
உருவாக்கி தமக்கான தகுதியில்லாத இடங்களை
ஸ்தாபித்துக் கொண்டு பதவி பட்டங்களுடன்
பிரம்மாண்டமாக இயங்கும் இந்த சூழலில் எவ்வித ஆரவாரமும் இன்றி
தன்னைப் பற்றிய எவ்விதமான பதிவுகளையும்
வருங்காலத்துக்காக முன்வைக்காமல் சென்றிருக்கிற ஒரு உன்னத நிகழ்வு
ஏ.கே.செட்டியார்.
கோட்டையூரில்
4-11-1911ல் பிறந்த செட்டியாரின் இயற்பெயர்
அ.ராம.கருப்பன் செட்டியார் என்பது. சில
இடங்களில் இவர் அ.க.செட்டியார் என்றும் கையொப்பம் இட்டிருப்பதாக
தெரிகிறது என்று வெங்கடாசலபதி குறிப்பிட்டிருக்கிறார். எந்த
வகையிலும் தன்னைப் பற்றி எங்கும்
அதிகம் பேசாமலும் பதிவு செய்யாமலும் வைத்திருக்கிறார்
செட்டியார். எந்த
வகையிலும் விளம்பரம் தேடிக்கொள்ளாததால் அவருடைய புகைப்படம் கிடைப்பது
கூட அரிதான விஷயம் என்று
பதிவு செய்திருக்கிறார் தியோடர் பாஸ்கரன்.
நண்பர்கள்
தம்மைப் புகைப்படம் எடுக்கும்போது அது எந்தப் பத்திரிகைகளுக்கும்
தரக்கூடாது என்ற நிபந்தனையுடன்தான் அதற்கு
சம்மதித்துள்ளார். இதனால்
மிக சமீபத்திய சரித்திரமான அவருடைய வாழ்க்கைக் குறிப்புக்கள்
முழுமையாக யாராலும் தொகுக்கப் படமுடியவில்லை என்பது மிகவும் வருத்தம்
தரும் விஷயமாக இருக்கிறது.
இரண்டரை
ஆண்டுகள் - இருமுறை உலகைச் சுற்றிய
பயணம் - ஒரு லட்சம் மைல்கள்
பயணம் - முப்பது ஆண்டுகளில் சுமார்
நூறு காமிராக்காரர்கள் படம் பிடித்த 50,000 அடி
நீளப் படங்களை அடையாளம் கண்டு
எடுத்து அதை 12,000 அடிகளில் முழு நீள டாகுமெண்டரி
படமாக மாற்றி - இரண்டாம் உலகப் போரின் பரபரப்பான
சூழலில் - ஆங்கிலேய
ஆட்சி நடக்கும் நேரத்திலேயே அதாவது 1940ல் மகாத்மா காந்தி
என்னும் பெயரில் திரையிட்ட அற்புதமான
காரியத்தை சாதித்தவர் செட்டியார். செட்டியாரின் எழுத்துலகப் பிரவேசம் என்று சொல்லவேண்டுமென்றால் 1928ல் ஆனந்தவிகடனில்
கோட்டையூர் ஏ.கே.செட்டியார் என்னும்
பெயரில் அவர் வெளியிட்ட சாரதாம்பாள்
- சிறு தமாஷ் என்னும்
அவர் எழுதிய ஒரே கதை
வெளியாகியிருக்கிறது. விகடனை
விட்டு வெளியேறி கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி
தொடங்கிய கல்கியின் முதல் இதழில் ஒரு
கட்டுரையை செட்டியார் எழுதியிருப்பதாக தன்னுடைய நினைத்துப் பார்க்கிறேன் என்னும் நூலில் விக்கிரமன்
பதிவு செய்திருக்கிறார். 30களின்
துவக்கத்தில் கோட்டையூரிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தனவணிகன் என்னும் மாத இதழிலும்
பின்னர் 1933ன் துவக்கத்தில் பர்மாவின்
நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்கம் நடத்திய தனவணிகன் இதழிலும் ஆசிரியராக இருந்துள்ளார் செட்டியார். 1943ல் இவர் துவக்கிய
குமரி மலர் இதழ் சுமார்
நாற்பது ஆண்டுகள், அவர் காலமான 1983 வரை
நிற்காமல் வெளிவந்துள்ளது. காந்தியின்
மீதும் காந்தியத்தின் மீதும் ஆழ்ந்த பற்று
கொண்டவராக இருந்திருக்கிறார் செட்டியார்.
அவருடைய
அதிகபட்சமான கட்டுரைகள் பயணக்கட்டுரைகள் தவிர்த்து காந்தியத்தின் சிறப்பு குறித்த கட்டுரைகளே
என்றும் சொல்லலாம். பல
சிறந்த இதழாளர்களும் இலக்கியவாணர்களும் தங்களுடைய அரிய பங்களிப்பினை குமரி
மலருக்கு நல்கியுள்ளனர்.
1955ல்
தில்லிக்கு வந்த செட்டியார் தில்லித்
தமிழ்ச்சங்கத்துக்கு வருகை தந்து அவருடைய
பயண அனுபவங்களைப் பற்றிய சொற்பொழிவாற்றியிருக்கிறார். சங்கத்தின்
வருகையாளர் புத்தகத்தில் வாழ்த்துரை நல்கிய செட்டியார் அவருடைய
பயண நூல்களை சங்கத்துக்கு நன்கொடையாக
அளித்திருக்கிறார் என்றும் குமரி மலரின்
பழைய இதழ்களைக் கொடுத்ததோடு அவர் இறக்கும் வரை
தமிழ்ச்சங்கத்துக்கு குமரி மலரை அனுப்பி
வைத்தார் என்றும் நண்பர் ராஜாமணி
குறிப்பிட்டார். செட்டியாரின்
மறைவிற்குப் பிறகு அதாவது 1983க்குப்
பிறகு குமரி மலர் இதழ்கள்
பைண்டிங் செய்யப்பட்டு வருட வாரியாக தொகுக்கப்பட்டதாக
புலவர் விஸ்வநாதன் தெரிவித்தார். ஆனால்
கடுமையான தேடல்களுக்குப்பிறகும் அவை சங்கத்தில் கிட்டவில்லை. இறையருள்
முழுக்க இருந்தால் அந்நூல்கள் நூல்பற்று மிக்க சில தமிழறிஞர்களால் திருடப்படாமலோ
அல்லது தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகிகளாக இருந்த பேரறிஞர்களின் தயவினால்
தள்ளுபடி விலையில் விற்கப்படாமலோ என்றேனும்
ஒரு நாள் என்னைப்போன்ற துரதிருஷ்டம்
வாய்க்கப்பெறாதவர்களுக்குக்
கிடைக்க வாய்ப்பு உண்டு.
பல பத்திரிகைகளில் வெளியான பயணக்கட்டுரைகளாலும், ஜப்பான் : பிரயாண
நினைவுகள், மலேயா முதல் கானடா
வரை, அமெரிக்கா, அமெரிக்க நாட்டில் போன்ற பயண நூல்களை
வெளியிட்டதாலும் உலகம் சுற்றிய தமிழர்
என்ற பெயரைத் தன் அடைமொழியாகக்
கொண்டிருந்தும் செட்டியார்
மேற்கொண்ட உலகச் சுற்றுப்பயணங்களில் மூன்றில்
இரண்டு பங்கு காந்தி படத்தயாரிப்புக்காகவே
செய்யப்பட்டவையாக அமைந்தன. குமரி
மலர் இதழ்களில் காந்தி படம் தயாரிப்பது
குறித்த தன்னுடைய அனுபவங்களை எழுதிய கட்டுரைகளே இன்று
அப்படத்தினைப் பற்றிய பல அரிய
செய்திகளை தெரிந்து கொள்ள உதவுகின்றன.
அண்ணலின் அடிச்சுவட்டில் என்ற பெயரில் செட்டியாரின்
காந்தி திரைப்பட தயாரிப்பு தொடர்பான அனுபவங்கள் குறித்து குமரி மலர் மற்றும்
பல்வேறு இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் பேராசிரியர் ஆ.இரா.வெங்கடாசலபதி
அவர்களால் அவர்களால் தொகுக்கப்பட்டு காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது மிகவும் அற்புதமான விஷயம்
என்று சொல்ல வேண்டும்.
1936-37இல்
டோக்யோ கலைக்கல்லூரியிலும் நியூயார்க் புகைப்பட நிறுவனத்திலும் ஏ.கே.செட்டியார்
புகைப்படம் பிடிப்பதில் பயிற்சி பெற்றிருக்கிறார்.
1937ம் ஆண்டு அக்டோபர்
இரண்டாம் தேதி நியூயார்க்கிலிருந்து டப்ளினுக்கு சம்ரியா
என்னும் கப்பலில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்
செட்டியார். நள்ளிரவு
- நியூயார்க்கில் நண்பர்கள் ஏற்பாடு செய்த காந்தி
ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ளமுடியாமை குறித்து
வருத்தப்பட்டுக் கொண்டிருந்த செட்டியார் கப்பலின் மேல்தளத்திலேயே ஒரு விழாவினை ஏற்பாடு
செய்கிறார்.
அப்போது
அவர் உள்ளத்தில் சிறு பொறியாக, காந்தியின்
வாழ்க்கையை, அவருடைய வாழ்க்கையின் அனுபவங்களை
ஓர் உண்மையான சரித்திரப்படமாக ஏன் தயாரிக்கலாகாது என்கிற
எண்ணம் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. கப்பலில்
அவருடன் பயணித்த ஒரே இந்திய
நண்பரிடம் தன் எண்ணத்தைப் பகிர்ந்து
கொள்கிறார் செட்டியார். அந்த
நண்பர் முதலில் நம்ப முடியாமல்
சிரித்தாலும் செட்டியாரின் தீவிரத்தைக் கண்டு அது குறித்து
விவாதிக்க சம்மதிக்கிறார். அந்த
விவாதத்தின் முடிவில் ஒரு திட்டம் உருவாகிறது. அத்திட்டம்
குறித்து எழுதப்பட்ட அந்த சிறு காகிதம்
தான் காந்தி சரித்திரப்படத்தின் மூலாதாரம்
என்று தன்னுடைய கட்டுரையில் குறிப்பிடுகிறார் செட்டியார்.
ஊருக்கு
வந்ததும் இத்திரைப்படத் திட்டம் குறித்து பேசும்போதெல்லாம்
பல நிலைகளில் நண்பர்கள் அவநம்பிக்கை தெரிவித்தும் செட்டியார் அதில் உறுதியாக இருந்திருக்கிறார். நண்பர்களுக்கு
அவருடைய பதில் - உலக முழுமையும்
இதற்காக அலைவேன். ஒவ்வொரு
செய்திப்படக் கம்பெனிக்கும் செல்வேன். உலகத்தில்
பல்வேறு பாகங்களிலுள்ள படக் குவியல்களில் தேடுவேன். சினிமாப்
பட லைப்ரரிகள் ஒன்று தவறாமல் பார்ப்பேன். எப்படியும்
சேகரிப்பேன். செய்வேன்.
செய்தும்
காட்டினார் செட்டியார். இந்தத்
திட்டத்தினை அவர் செயல்படுத்தத்
துவங்கும் நேரம் இந்தயாவின் தலைசிறந்த
ஸ்டூடியோ ஒன்றில் அவர்கள் ஆரம்பிக்க
இருந்த செய்திப்பட இலாகாவுக்கு நல்ல சம்பளத்தில் அவரை
தலைவராக நியமிக்க அழைப்பு வந்திருக்கிறது.
அந்த அழைப்பினை நிராகரித்துள்ளார் செட்டியார். சென்னையிலுள்ள
பல பட முதலாளிகள் இவரது
திட்டத்தினைப் பார்த்து நகைத்துள்ளனர். வெளிநாட்டிலிருந்து
திரும்பியுள்ளதால் சாத்தியமாகாத சில மனக்கோட்டைகளைக் கட்டிக்
குழம்பிக் கொண்டிருப்பதாக அவரைக் கேலி செய்தவர்களும்
உண்டு. ஆனால்
எடுத்த காரியத்தை விடுவதில்லை என்று சங்கல்பம் செய்து
கொண்ட செட்டியார் தன்னுடைய டாகுமெண்டரி பிலிம்ஸ் லிமிடெட் நிறுவனத்தினை ஸ்தாபித்தார். ஐம்பது
இயக்குநர்களைக் கொண்ட அந்த தனியார்
நிறுவனத்தின் 46 பங்குதாரர்கள் செட்டி நாட்டை சேர்ந்தவர்கள். அவர்களும்
தாங்கள் முதலீடு செய்யும் பணம்
தங்களுடையது இல்லை என்கிற அவநம்பிக்கையில்
தான் முதலீடு செய்தனர் என்று
செட்டியார் சொல்கிறார். அதே
நேரத்தில் இங்கு திரைப்படக் கலையை
வியாபாரப் பண்டமாக உருமாற்றிய ஏ.வி.எம்.செட்டியார்,
எஸ்.எஸ்.வாசன், கே.எஸ்.சுப்பிரமணியன்
போன்ற மகானுபாவர்களின் நினைவும் இங்கு எனக்குத் தேவையில்லாமல்
வருகிறது. திரைப்படங்களின்
கலைத்தன்மையை முற்றிலுமாக ஒழித்து அதனை ஒரு
பிரச்சாரக் கருவியாக மாற்றி தங்களின் அதிகார
நுழைவாயிலைத் திறந்து கொண்டு தமிழகத்தையே
தங்களின் வியாபாரக் களமாக ஆக்கிக் கொண்ட
திராவிடக் கண்மணிகளின் நினைவையும் தவிர்க்க முடியவில்லை. சரி
விஷயத்துக்கு வருவோம்.
1937ல்
கம்பெனி உருவாகி ஒரு வருடம்
ஓடியிருக்கிறது. காந்தி
படத்துக்கான படச்சுருள்களை சேகரிக்க இந்தியாவை சுற்றிப் பல தடவைகள் அலைந்திருக்கிறார். உலகத்தில்
ஏறக்குறைய பாதிக்கு மேல் வேகமான கப்பல்களிலும்
ஆகாய விமானங்களிலும் சுமார் ஐந்து மாதங்கள்
சுற்றியிருக்கிறார். பல
இடங்களில் பழைய படங்களைப் பற்றி
செட்டியார் விசாரித்தபோது அவரை மிகுந்த ஆச்சரியத்துடன்
உற்று நோக்கியிருக்கின்றனர். ஒரு
ஆண்டு முழுதும் அவர் தேடிச்சேர்த்த படச்
சுருள்கள் ஒரு முழு நீளப்படத்துக்கு
தேவையான அளவுக்கு இல்லை என்று கருதிய
செட்டியார் ஐக்கிய அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும்
முப்பதுக்கு மேற்பட்ட செய்திப்படக் கம்பெனிகளுக்கு சென்றிருக்கிறார். கீழ்நாடுகளிலும்
மேல்நாடுகளிலும் காந்திஜியின் வாழ்க்கைக்குத் தொடர்புடைய எல்லாப் படங்களையும் சேகரித்திருக்கிறார். அப்படி
லண்டனுக்கு சென்றபோது மகாத்மா காந்தியின் நண்பர்
போலக் செட்டியாருக்கு ஒரு 200 அடி கொண்ட
மிகப்பழைய படம் ஒன்றின் பாசிடிவ்
பிரதியைக் காண்பித்திருக்கிறார். அது
1913ல் கோபாலகிருஷ்ண கோகலே தென்னாப்பிரிக்காவுக்கு விஜயம் செய்த
போது எடுத்த படம். அதில் காந்தி மேல்நாட்டு
உடையணிந்து குஜராத்தி தலைப்பாகையை அணிந்த அரிய காட்சி
கிடைத்துள்ளது.
செட்டியார்
பின்னர் பிரான்ஸூக்கு பயணித்து மகாத்மாவின் சரித்திரத்தை முதன்முதலாக எழுதி வெளியுலகத்துக்கு அறிவித்த
ரொமெய்ன் ரோலந்தை தொடர்பு கொண்டு
காந்தியார் குறித்த பேட்டியினை பதிவு
செய்து தன்னுடைய படத்தில் சேர்த்திருக்கிறார். இரண்டாவது
உலகப்போர் சமயம் அது. செட்டியார் பல நேரங்களில் வெளிநாடுகளில்
தான் சேகரித்த படச்சுருள்களை ஆகாய விமானங்களில் அனுப்பி
வைத்து தான் கப்பல் பயணங்களை
மேற்கொண்டிருக்கிறார். எப்போதேனும்
அக்கப்பல்கள் போர்க்கப்பல்களால் தாக்கப்படுமோ என்கிற அச்சத்தில் தான்
தாக்கப்பட்டு இறந்தாலும் அப்படச்சுருள்கள் இந்தியா வந்து அடையவேண்டும்
என்கிற எண்ணத்திலேயே அவ்வாறு செய்ததாக பல
இடங்களில பதிவு செய்திருக்கிறார் செட்டியார். அக்காலத்தில்
நிலவிய நிறவெறி காரணமாக செட்டியார்
வெளிநாடுகளில் சந்திக்க நேர்ந்த அவமதிப்புக்கள் ஏராளமாக
இருந்திருக்கின்றன. தென்னாப்பிரிக்காவுக்கு
அவர் பயணித்த விண்ட்சர் காசில்
என்னும் கப்பலில் சாப்பிடுமிடத்தில் ஒரே நேரத்தில் 200 பேர்
சாப்பிடலாம். ஆனால்
அவர் மட்டும் தனியாக உட்கார
வைக்கப்பட்டிருக்கிறார். மீதி
60 பேர்கள் வேறு பாகத்தில் அமர்ந்து
சாப்பிட்டு இருக்கின்றனர். அந்தத்
தனித்த இடம் தனக்கு அளிக்கப்பட்ட
கௌரவம் அல்ல என்றும் அது
ஒரு அவமதிப்பு என்றும் பதிவு செய்திருக்கிறார்
செட்டியார். இந்த
அவமானங்களை மீறி, பொருளாதார இழப்புக்களை
மீறி செட்டியார் பல அரிய காட்சிகள்
அடங்கிய படச்சுருள்களை சேர்த்திருக்கிறார். தன்னுடைய
அனுபவங்ளை எவ்வித ஒளிவு மறைவும் இன்றி மிகவும்
நேர்மையாகப் பதிவும் செய்திருக்கிறார்.
அதே போல இந்தியாவிலும் பல
இடங்களில் அலைந்து அலைந்து காட்சிளைப்
படமாக்கியிருக்கிறார். படமெடுத்துக்
கொண்டிருக்கும்போது, அதாவது 1939ல் ஒரு நாள்
ஹிந்து பத்திரிகையில் சுமார் 200 பெண்கள் கைராட்டை சுற்றும்
அரிய படம் ஒன்றைப் பார்த்திருக்கிறார்
செட்டியார். அப்படத்தை
எடுத்தவர் கோவையைச் சேர்ந்த தேசபக்தர், தமிழ்நாடு
சர்க்கா சங்கத்தின் செயலாளராக இருந்த சி.ஏ.அய்யாமுத்து அவர்கள். செட்டியார்
அய்யாமுத்துவை உடனடியாக சந்தித்து அடுத்த முறை எல்லாப்பெண்களும்
நூல் நூற்கும் போது அதனைப்படம் பிடித்து
காந்தி படத்தில் சேர்க்கலாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இளகிய
மனம் படைத்த அய்யாமுத்து ஒரு
முழுநாள் நீங்கள் அப்பெண்களை படப்பிடிப்பில்
ஈடுபடுத்தினால் அவர்களுக்கு ஒரு நாள் கூலி
போய்விடுமே எனவே ஒவ்வொருவருக்கும் கால்
ரூபாய் கொடுக்கவேண்டும் என்று கூற, செட்டியாரின்
டாகுமெண்டரி பிலிம்ஸ் கம்பெனியும் சர்க்கா சங்கமும் ஆளுக்குப்
பாதியாக பகிர்ந்து கொண்டு படப்பிடிப்பில் கலந்து
கொண்ட இரண்டாயிரம் பெண்களுக்கு ஆளுக்குக் காலணா கூலி கொடுத்து
அந்த இரண்டாயிரம் பெண்களும் ராட்டை சுழற்றும் அரிய
காட்சியினை படம் பிடித்துள்ளனர்.
இந்த அற்புதமான காட்சியினை மார்ட்டின் லூதர் கிங் பற்றிய
ஒரு படத்தினில் தான் கண்டதாக தியோடர்
பாஸ்கரன் ஹிந்துவில் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
அதே போல பம்பாயில் செட்டியாரின்
நண்பர் குறிப்பிட்ட ஒருவரிடம் திலகர் 1920ல் பம்பாயில் காலமான
போது அவருடைய இறுதியாத்திரையின் போது
எடுக்கப்பட்ட ஒரு படச்சுருள் இருப்பதைக்
கண்டறிந்து அந்த நபரைத் தேடியலைந்து
கண்டு பிடித்தார் செட்டியார். இது
திரைப்பட மேதை தாதா சாகேப்
பல்கே அவர்களால் படம் பிடிக்கப்பட்டது.
மகாத்மா காந்தியைப் பற்றிய படத்தில் அக்காட்சிகள்
சேர்க்கப்படுவதற்காக செட்டியார் கேட்கிறார் என்பதை அறிந்த அந்த
மனிதர் தன்னுடைய பெயரைக் குறிப்பிடக்கூடாது என்கிற
நிபந்தனையுடன் முழுக்க இலவசமாகவே அப்படச்சுருளையும்
தந்து உதவியிருக்கிறார். அதேபோல
மகாத்மாவின் தண்டி யாத்திரை குறித்த
படச்சுருள்கள். தண்டியாத்திரை
குறித்து வெளிநாட்டில் கிடைத்த சுமார் 200 அடி
படச்சுருளை படத்தில் சேர்க்க செட்டியார் எண்ணியிருந்த
நேரத்தில் தனிப்பட்ட ஒரு நபரிடம் சுமார்
இரண்டாயிரம் அடி படச்சுருள் தண்டி
யாத்திரை குறித்து பதிவு செய்யப்பட்டிருப்பதை அறிந்து
அவரையும் தேடி கண்டடைகிறார் செட்டியார். தண்டி
யாத்திரையின் போது நிகழ்ந்த தடியடி
போன்றவற்றையும் மிக நேர்த்தியாக படம்
பிடிக்கப்பட்ட அச்சுருள்களை தக்கவிலை கொடுத்து தன் படத்தினில் உபயோகப்படுத்திள்ளார். அதேபோல
1930ல் வேதாரண்யத்தில் ராஜாஜியின் தலைமையின் கீழ் உப்பு சத்தியாக்கிரகம்
நடைபெற்றது. தொண்டர்கள்
திருச்சியிலிருந்து கால்நடையாக வேதாரண்யம் சென்று உப்பு சத்தியாக்கிரகம்
செய்தனர். இந்தப்
புனிதமான யாத்திரையைப் படம் பிடிப்பதற்குத் தமிழ்நாட்டில்
தேசபக்தியும் தைரியமும் உள்ள ஒரு சினிமாத்
தயாரிப்பாளராவது இல்லாமல் போனது மிகவும் துரதிருஷ்டமானது
என்று பதிவு செய்திருக்கிறார் செட்டியார்.
காந்தி
படத்தில் மிகவும்
வயது முதிர்ந்த நிலையில் இருந்த பண்டித மதன்மோகன்
மாளவியா, சேலம் விஜயராகவாச்சாரியார், காந்திஜியின் நண்பர்
ஆண்ட்ரூஸ், மாண்டிசோரி
அம்மையார் விஞ்ஞானி டாக்டர் சர் சி
வி ராமன், டாக்டர் ராதாகிருஷ்ணன்
போன்றவர்களையும் பேட்டி கண்டு படத்தில்
சேர்த்திருக்கிறார் செட்டியார். ராஜாஜியை
படம் பிடிக்க அணுகிய போது
அவர் ''செட்டியார்கள் சினிமா தொழிலில் புகுந்துள்ளீர்கள். மற்ற
படங்களில் லாபமில்லை என்று இப்போது காந்தி
படமெடுக்க ஆரம்பித்திருக்கிறீர்களா?”” என்று மனம் புண்படும்
படியாக அவர் கேட்டதையும் காந்தி
படம் வெளியானதும் அதே ராஜாஜி பாராட்டியதையும்
மிகவும் நேர்மையாகத் தன்னுடைய கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் செட்டியார். நேரு
ராட்டை சுழற்றுவது போன்ற அரிய காட்சிகளும்
இப்படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஒரு வழியாக படச்சுருள்களின் சேகரிப்பு
முடிந்து தலைவர்களின் பேட்டிகளும் படம் பிடிக்கப்பட்டு படத்தொகுப்பு
நிலைக்கு வருகிறது. பம்பாயில்
படத்தொகுப்பை ஏற்பாடு செய்த செட்டியார்
டெக்னிகல் டைரக்டராக டாக்டர் பி.வி.
பதியை நியமிக்கிறார். பதி
செட்டியாருடன் இணைந்து பல பேட்டிகளையும்
படமாக்கியவர். இப்படத்துக்கு
பின்னணி வசனம் அதாவது பின்னணி
வருணனைகளை அக்காலத்தின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் த.நா.குமாரசாமி எழுத
சத்தியமூர்த்தி வை.மு.கோதைநாயகி
அம்மையார், செருகளத்தூர் சாமா, டி.கே.ஜெயராம அய்யர், சா.கணேசன் போன்றோர் தங்களின்
அற்புதமான குரல்களில் பின்னணி வருணனைகளை வழங்கியிருக்கின்றனர். இப்படத்தின்
பின்னணிப்பாடல்கள் குறிப்பாக நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் ஆடுராட்டே போன்ற அற்புதப் பாடலை
டி.கே.பட்டம்மாள் பாடியிருக்கிறார்.
காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்த பாடலான
வைஷ்;ணவ ஜனதோ பாடல்
குஜராத்தி உச்சரிப்பிலேயே இருக்கவேண்டும் என்பதற்காக குஜராத்தி பாடகியான சுந்தரா பாய் என்பவரை
பாட வைத்திருக்கிறார்கள். சினிமாவுக்காக
பட்டம்மாள் முதல் முறையாகப் பாடியது
இந்தப்படத்துக்குத்தானாம். முழுமையாகத்
தொகுக்கப்பட்ட தமிழ்ப்படம் 23 ஆகஸ்ட் 1940 அன்று சென்னை ராக்ஸி
தியேட்டரில் திரையிடப்பட்டது. நன்றாக
கவனிக்க வேண்டும். ஆங்கிலேய
அரசு ஆட்சியிலிருந்த போதே இப்படம் தணிக்கையும்
செய்யப்பட்டு திரையிடப்பட்டுள்ளது. பின்னர்
என்றேனும் பட வெளியீட்டுக்குப் பிறகு
காவல்துறை தொந்தரவு செய்யலாம் என்னும் ஜாக்கிரதை உணர்வில்
இப்படத்தின் பாசிடிவ் மற்றும் நெகடிவ் சுருள்கள்
ஆறு ஊர்களில் கோவில்களிலும் சில மடங்களிலும் பதுக்கி
வைக்கப்பட்டதாம். ஆங்கில
அரசு இப்படத்தை எவ்விதத் தொந்தரவும் இல்லாது திரையிட அனுமதித்த
அதே நேரத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் திவானாக இருந்து ராமஸ்வாமி
அய்யர் இப்படத்தை அங்கு திரையிட அனுமதிக்க
வில்லை. தண்டி
யாத்திரையின் போது காண்பிக்கப்படும் தடியடிக்காட்சிகள்
அவ்வு+ரின் சட்டம் ஒழுங்கைப்
பாதிக்கும் என்று தடை விதித்தாராம்.
இந்தியா
சுதந்திரம் அடைந்தபோது தலைநகரில் இல்லாமல் எங்கோ ஒரு ஆசிரமத்தில்
அமர்ந்து காந்திஜி ராட்டை சுழற்றிக்கொண்டிருந்ததைப் போல ஏ.கே.செட்டியார் சென்னையில்
திரைப்படம் வெளியான போது கோவையில்
தங்கியிருந்தாராம். நண்பர்கள்
பாராட்டும்போது ஏற்படும் கூச்சத்தினைத் தவிர்க்கவே அவ்வாறு வெளியில் தங்கியிருந்ததாக
பதிவு செய்திருக்கிறார் செட்டியார்.
தமிழகத்தின்
பல ஊர்களில் அன்றைய ஜஸ்டிஸ் பார்ட்டியை
சார்ந்த அரசியல் பிரமுகர்கள் நடத்தி
வந்த திரையரங்குகள் நீங்கலாக மற்ற திரையரங்குகளில் இப்படம்
மிகவும் வெற்றிகரமாக திரையிடப்பட்டிருக்கிறது. ஆகஸ்டு
15 1947 அன்று டெல்லியின் ரீகல் திரையரங்கில் இப்படம்
தமிழிலேயே திரையிடப்பட்டிருக்கிறது. அவசரப்பணி
நிமித்தம் நேரு அவர்கள் வர
இயலாத காரணத்தில் தன் மகள் இந்திரா
காந்தியை அனுப்பி வைத்திருக்கிறார்.
பாபு ராஜேந்திர பிரசாத், டாக்டர் ராதாகிருஷ்ணன், மகாத்மாவின்
புதல்வர் தேவதாஸ் காந்தி போன்றவர்கள்
மற்றும் பல மூத்த தலைவர்கள்
இப்படத்தினை தலைநகரில் கண்டு களித்திருக்கின்றனர்.
பின்னர்
1948ல் இந்தியிலும் 1953ல் அமெரிக்கா சென்று
ஆங்கிலத்திலும் இப்படத்தினை தயாரித்துள்ளார் செட்டியார். மகாத்மா
காந்தி ஆங்கிலப்படத்தினை அந்நாளைய அமெரிக்க அதிபர் ஐஸன்ஹோவரும் அவர்
துணைவியாரும் இப்படத்தினைக் கண்டுள்ளனர்.
இனி ஒரு வருத்தமான செய்திக்கு
வருவோம். அரும்பாடுபட்டு
செட்டியார் தயாரித்த இத்திரைப்படத்தின் பிரதி இப்போது எங்கும்
இல்லை. செட்டியார்
இப்படம் தயாரித்தது குறித்து எழுதிய கட்டுரைகளில் இருந்துதான்
இப்படத்தில் என்னென்ன உள்ளது என்பதை நம்மால்
பேச முடிகிறது. கோவை
அய்யாமுத்துவின் குடிநூல் இதழில் வந்த திரை
விமரிசனமும் கல்கி ஆனந்த விகடனில்
எழுதிய விமர்சனம் மூலமாக இப்படத்தில் என்னென்ன
உண்டு என்று தெரிந்து கொள்ளலாம். இப்படத்தின்
மூலப்பிரதியினை பு+னேயின் தேசிய திரைப்பட
ஆவண மையத்துக்கு செட்டியார் கொடுத்ததாகவும் அவர்கள் அதை எங்கோ
தொலைத்து விட்டதாகவும் தியோடர் பாஸ்கரன் தன்
கட்டுரையில் குறிப்பிடுகிறார். தி
ஹிந்துவில் வந்த எஸ்.முத்தையாவின்
கட்டுரையில் டாக்டர்
எஸ்.கோபாலகிருஷ்ணன் என்னும் அவருடைய நண்பர்
நம்பத்தகுந்த வட்டாரங்கள் கொடுத்த தகவல்களின் படி
1947ல் காந்தி திரைப்படத்தின் முழு
பிரதியை செட்டியார் நேருவுக்கு பரிசாக அளித்ததாகவும் அந்தப்பிரதி
நேரு அருங்காட்சியகத்தின் நூலகத்தில் எங்கோ ஒரு மூலையில்
தேடிப்பார்த்தால் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும்
எழுதியிருக்கிறார்.
இணையத்தின்
தேடல் தளங்களில் செட்டியாரின்
காந்தி திரைப்படம் பற்றிய
செய்திகளைத் தேடிய போது அமெரிக்காவின்
சான் பிரான்சிஸ்கோ பல்கலைக் கழகத்தின் திரைப்படப் பிரிவு ஏ.கே.செட்டியார் தொகுத்து க்வென்டின் ரெய்னால்ட்ஸ் என்பவர் வருணனை அளித்த ஆயாயவாஅய
புயனொi - வாந வறநவெநைவா ஊநவெரசல
Pசழிhநவ என்னும் கருப்பு
வௌ;ளை விடியோ கேசட்
45 நிமிடங்களுக்கு கிடைக்கும் என்று விளம்பரம் செய்துள்ளது.
இக்கட்டுரையை
முடிக்கும் முன் ஒரு பணிவான
வேண்டுகோளை சமர்ப்பிக்கிறேன். தற்போது
தலைநகரில் அமைப்பு ரீதியாக மிகவும்
வலுவானது தில்லித் தமிழ்ச்சங்கம். அதே
போல தமிழகத்தை சேர்ந்த ஏழு பேர்
இப்போது இங்கு அமைச்சர்களாக உள்ளனர். தில்லித்
தமிழ்ச்சங்கம் தன்னுடைய சொந்த பலத்தினாலும் இந்த
அமைச்சர்கள் மூலமாகவும் நேரு
அருங்காட்சியகத்தைத் தொடர்பு கொண்டு செட்டியாரின் இந்தப்
படச்சுருளை மீட்டெடுக்க முயற்சிக்க வேண்டும். இது
நம் வருங்காலத் தலைமுறையினருக்கு நாம் செய்யப்போகும் மிகவும்
உருப்படியான காரியம். அதே
போல தாதா சாகேப் பல்கே
பெயரில் திரைப்படங்களுக்கு விருது வழங்குவதைப் போல
ஆவணப்படங்களுக்கும் ஏ.கே. செட்டியார்
பெயரில் ஒரு விருது வழங்க
வேண்டி மைய அரசின் முன்
ஒரு கோரிக்கையை வைக்க வேண்டும். அக்கோரிக்கையில் வெற்றியும் பெற வேண்டும். செட்டியார் தயாரித்த திரைப்படத்தினை மீட்டெடுத்தலும் அவர் பெயரில் ஒரு
விருது வழங்கப்படலும் தமிழுக்கும் தமிழருக்கும் தில்லித் தமிழ்ச்சங்கமும் தமிழகத்தை சேர்ந்த அமைச்சர்களும் செய்யும்
மிகப்பெரும் சேவையாக அமையும். அவர்கள் மனம் வைத்து
செய்ய வேண்டும். செய்வார்களா?
நன்றி. வணக்கம்.
No comments:
Post a Comment