ராகவன் தம்பி
சி.சு.செல்லப்பாவின் வீட்டில் அவரைப் பற்றிய ஒரு ஆவணப்படம் தயாரிப்பதற்கான படப்பிடிப்பு துவங்கியதைப் பற்றிய குறிப்புக்களோடு சென்ற இதழில் நிறுத்தியிருந்தேன்.
செல்லப்பா பேசிக் கொண்டே இருந்தார். நிறுத்தாமல் பேசிக்கொண்டிருந்தார். பிறந்த ஊரான வத்தலக்குண்டு பற்றிய மகாத்மியத்தை, பள்ளி, கல்லூரி நாட்கள் பற்றி, தகப்பனார் பற்றி, தான் சரசாவின் பொம்மை மூலமாக எழுத்தாளர் ஆனது பற்றி, புதுமைப்பித்தன், மௌனி, பிச்சமூர்த்தி, க.நா.சு., கு.பரா. ஆகியோருடைய நட்பு கிடைத்தது பற்றி, அவர்களுடன் சண்டை போட்டது பற்றி, தினமணி அனுபவம் பற்றி, ஏ.என்.சிவரானுடன் போட்ட சண்டை பற்றி, எழுத்து இதழ் நடத்தியது பற்றி, தன்னுடைய இலக்கியக் கோட்பாடு பற்றி, இன்றைய இலக்கிய முயற்சிகள் பற்றி, சமகால எழுத்தாளர்கள் பற்றி, இலக்கிய விமர்சகர்கள் பற்றி இன்னும் எத்தனையோ விஷயங்களைப் பற்றிப் பேசத்துவங்கினார் செல்லப்பா. ஓரிடத்தில் அவருடைய வீட்டில் 1924ல் ஏற்றப்பட்ட காங்கிரஸ் கொடி, அவருடைய தகப்பனார் நெய்த கதர் வேட்டி, அவருடைய தாயார் நூற்ற கதர் நூல்கள், கராச்சி காங்கிரஸ் மாநாட்டுக்குப்போன அவருடைய சித்தப்பா அணிந்திருந்த கோட் பொத்தான்கள், சுதந்திரப் போராட்டத்தில் செல்லப்பா சிறை சென்றபோது அவருக்கு வழங்கப்பட்டிருந்த கைதிகளுக்கான கைதி எண் பதிக்கப்பட்ட பித்தளைத் தகடு (""எல்லோரும் திருடிட்டு ஜெயிலுக்குப்போவா. நான் ஜெயிலுக்குப் போய் இதைத் திருடிண்டு வந்தேன்''- என்று சொல்வார் செல்லப்பா) இவற்றையெல்லாம் காண்பித்து அவற்றைக் குறித்த விளக்கம் அளித்தார்.
ஏதோ ஒரு புது சக்தி அவருக்குள் நுழைந்து கொண்டதைப் போலத் தோன்றியது எனக்கு. நாங்கள் களைத்துப் போனாலும் அவர் களைக்கவோ சளைக்கவோ இல்லை. அவர் பேசிக் கொண்டு இருக்கிறார் --கேமரா ஓடிக் கொண்டு இருக்கிறது. கிடைக்கிற நேரத்துக்குள் ஒரு புகை போட்டுக் கொண்டு ஓடிவந்து விடலாம் என்றும் செல்லப்பாவுக்குத் தெரியாது என்று நினைத்து மெல்ல நழுவி வெளியே போவேன். திரும்பி வந்ததும் ""நான் இதை சொல்லிக் கொண்டிருந்தேன். நீ சிகரெட் பிடிக்க வெளியே போயிட்டே'' என்று மீண்டும் தான் சொன்னதில் முக்கியமான விஷயங்களை மீண்டும் சொல்லத் துவங்குவார். பதிவு ஆகியிருக்கும் என்று சொன்னாலும் விடமாட்டார். அன்று ஒரு குழந்தையைப் போல எங்களுடன் ஒத்துழைத்தார் செல்லப்பா.
இடையில் மாமியை அழைத்து சுப்பிரமணியன் கடையில் இருந்து பலகாரங்கள் வாங்கி வரச் சொல்லியும் காபி போட்டுக் கொடுக்கச் சொல்லியும் அதட்டுவார். நாங்கள் விருந்தாளிகள் என்றும் எதையும் வெளியில் இருந்து தருவித்துக் கொள்ளக் கூடாது என்றும் மாமியிடம் மிகவும் கண்டிப்பான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து இருந்தார். நானும் ரவீந்திரனும் அவரைக் கெஞ்சிக் கூத்தாடி வெளியில் இருந்து மதிய உணவை வரவழைக்க ஒப்புதல் அளிக்க வைத்தோம்.
மாமியையும் இந்தப் படத்துக்காக சிறிய நேர்காணல் செய்தேன். தொகுக்கப்படாத இந்தப் படத்தின் மிகவும் நெகிழ்வான கணங்கள் அவை. செல்லப்பா பற்றியும் அவருடைய கோபத்தைப் பற்றியும் வெறுமனே ஒரு கோடு காண்பித்தார் மாமி. நான், ""உங்களிடம் அவர் அப்படிக் கோபித்துக் கொண்ட ஓரிரு சம்பவங்களைச் சொல்லுங்கள் என்று கேட்டேன். ""புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும். அதையெல்லாம் உன்கிட்டே சொல்லிண்டிருக்க முடியாது'' என்று சொல்லும் இடம் ஒரு கவிதையைப் போல இருக்கிறது என்று தொகுக்கப்படாத பட நறுக்குகளைப் பார்த்த சுந்தரராமசாமி நெகிழ்ந்து போய் சொன்னார்.
மாலை ஆறு மணிக்குப் படப்பிடிப்பை நிறுத்தினோம். மீண்டும் மாமியின் கையால்தான் எங்களுக்குக் காபி என்பதை வலியுறுத்தினார். எல்லாம் முடிந்தது. நாங்கள் கிளம்ப வேண்டும்.
செல்லப்பாவுக்கு ஒரு தொகையைக் கொடுத்து விட்டு வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். ரவீந்திரனிடம் கேட்டேன். அவர் நாசூக்காக நீங்கள் கொடுத்தால்தான் நன்றாக இருக்கும். நீங்களே அவரிடம் பேசிக் கொடுத்து விடுங்கள் என்று சொல்லிவிட்டுத் காற்று வாங்கப் போகும் சாக்கில் வெளியில் போய் நின்று கொண்டார். எனக்குப் பெரிய உதறல். சமையலறையில் மாமியிடம் சென்று அந்தத் தொகை அடங்கிய உறையை மெல்ல சாமிப் படத்தின் முன் வைத்தேன்.
"இது மாமாவுக்கு...
"மாமாக்குன்னா மாமா கிட்டே குடுத்துக்கோ. இங்கே எதுக்கு வைக்கணும். அதெல்லாம் உங்க விவகாரம். மாமா என்னை வைவார். இங்கே வைக்க வேணாம். அவர் மகா கோபக்காரர். கொன்னுடுவார்'' என்று சொல்லி உறையை எடுத்து என் கையில் திணித்து விட்டார். சரி. சண்டைக்காரரிடமே போகலாம் என்று கொஞ்சம் தைரியம் வரவழைத்துக் கொண்டு செல்லப்பா அருகில் போய் உட்கார்ந்தேன். ஓரிரு விஷயங்கள் ஏதேதோ பேசினேன். பிறகு மெல்ல உறையை எடுத்து அவர் முன் வைத்தேன்.
என்ன இது
"ஒண்ணுமில்லை. இதை உங்களுக்குக் கொடுக்கணும்னு ஆசைப்படுறேன்
அதெல்லாம் ஒண்ணும் வேணாம்-. எடுத்துக்கோ. கையில் இருந்து எதுக்கு நீ செலவு பண்ணணும்?''
இல்லை சார். நாளைக்கு இந்தப் படம் முடிஞ்சா எனக்கு எங்கிருந்தாவது பணம் கிடைக்கும். பரவாயில்லை''.
பணம் கிடைச்சப்புறம் கொண்டு வந்து கொடு. இப்போ வேணாம். எனக்குத் தெரியும். இதெல்லாம் நானும் பட்டதுதானே. என்னைப்போல இருக்காதே'
"நீங்க வாங்கிண்டா எனக்கு சந்தோஷமா இருக்கும்''
பணம் கிடைச்சப்புறம் குடு. நான் இல்லையா, மாமி கிட்டே குடு''
இதைப் பல நேரங்களில் தனியாக இருக்கும்போதும் நினைத்துக்கொள்ளும் போதும் இப்போது மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்து எழுதும் போதும் நெகிழ்ச்சியில் கரைந்து போகிறேன். தன்னிச்சையாகப் பெருகும் கண்ணீரைக் கட்டுப்படுத்த என்னால் முடியவில்லை. கரைந்து அழுகிறேன்.
இப்போது செல்லப்பாவும் இல்லை. மாமியும் இல்லை. படமும் முடியவில்லை. அந்த ஒளிப்பேழைகள் மற்றும் குறுந்தகடு மட்டுமே என் நினைவுகளைப்போல மௌனமாக என் வீட்டுப் பரணில் தூசினைச் சுமந்து தவம் புரிந்து வருகின்றன.
சில விஷயங்களை எழுதாமல் விட்டால் பலருக்கு சௌகர்யமாக இருக்கும். முக்கியமாக எனக்கு சௌகர்யமாக இருக்கும். இருக்கிற விஷயத்தை சொல்லப்போய் ஏற்கனவே கெட்ட பெயர் வாங்கிக் கொண்டிருக்கும் என்னால் இன்னும் சில சில்லறை விரோதங்களையும் பழி வாங்கல்களையும் தாங்கிக் கொள்ள முடியாது.
இந்தப் படத்தை எப்படித் திட்டம் இட்டிருந்தேன் என்றால், வத்தலக்குண்டில் துவங்கி, சின்னமன்னூரில் அவருடைய வீடு மற்றும் தெருக்களைப் படம் பிடித்து, செல்லப்பா பதிவினில் குறிப்பிட்டிருக்கும் சில இடங்கள் (புதுமைப்பித்தன், மௌனி ஆகியோரை சந்தித்த திருவல்லிக்கேணி மேன்ஷன், தினமணி அலுவலகம், அவருடைய வாடிவாசல் புதினத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்கள், அவருடைய நூல்கள், எழுத்து இதழ்கள் போன்றவற்றை இப்படத்தில் சேர்க்கத் திட்டம் இட்டிருந்தேன். செல்லப்பா எங்களுக்காகப் படத்தில் பேசியது எல்லாம் நவீனத் தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை ஒட்டியது. அது குறித்த பல தகவல்களை விரித்துச் செல்கிறது அவருடைய பேச்சு நவீனத் தமிழிலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்குப் பல விஷயங்களை மிகவும் அனாயாசமாகத் தரும் இப்பதிவுகள். அந்தப் பதிவுகளை அங்கங்கு இடைசெருகி மாமியின் நேர்காணலுடன் முடிக்க நினைத்திருந்தேன். இதற்கான பணம் வேண்டும்.
கண்ணப்ப தம்பிரான் படம் முடித்து விட்டு பிறகு செல்லப்பாவைப் பற்றிய இந்தப் படத்தில் ஒரு பகுதியை எடுத்துக் காத்திருந்த எனக்கு ஒரு கிறுக்குப் பிடித்தது. முழுநேரத் திரைப்படத் தயாரிப்பாளன் ஆகவேண்டும் என்கிற கிறுக்கு அது. அந்தப் பைத்தியத்தின் தொடர்ச்சியாக அலுவலகத்தில் விடுப்பு எடுத்தேன். பல மாதங்கள் தொடர்ந்தது அந்த விடுப்பு. அலுவலகத்தில் பணியில் உடனடியாக சேரச்சொல்லி நெருக்கடி வந்தது. அதே நேரத்தில் ஒரு பஞ்சாபிக் கயவன் இந்தியில் தொடர் தயாரிக்கலாம் என்று ஆசை காண்பித்து அலுவலகத்தில் என் சேமிப்பில் இருந்த ஏறத்தாழ இரண்டு லட்சம் ரூபாய்களை செலவழிக்க வைத்து ஒரே மாதத்தில் என்னை ஏமாற்றினான். அதே நேரத்தில் எங்களுடன் தங்கியிருந்த என்னுடைய மைத்துனன், காலையில் ஆரோக்கியமாக அலுவலகம் சென்றவன் மாரடைப்பு ஏற்பட்டு மாலையில் பிணமாக வீடு திரும்பினான். என் மீதும் என் குழந்தைகள் மீதும் அபாரமான அன்பைச்சொரிந்த அவன் எங்களை விட்டுப் பிரிந்தபோது அவனுடைய வயது 32. அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு சற்று நிமிர்ந்தபோது என் அலுவலகத்தில் எனக்குத் தொடர்பே இல்லாத ஒரு பொய் வழக்கில் சில நல்லவர்களால் மாட்டி வைக்கப் பட்டேன். பின்னர் சகல மரியாதைகளுடன் மீண்டு வந்து அலுவலகத்தில் மீண்டும் சில ஆண்டுகள் பணிபுரிந்தேன். பின்னர் வடக்கு வாசலுக்காக பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டேன்.
எதற்கு இத்தனை கதை என்றால், இந்த சோதனைகள் இல்லாது இருந்திருந்தால் ஒருவேளை செல்லப்பா படத்தை முடித்து இருக்கலாமோ என்று தோன்றுகிறது. இடையில் உதவி கேட்டு சிலரிடம் சென்றேன். யாரோ சொல்லி சென்னைத் தொலைக்காட்சி நிலையத்துக்குச் சென்றேன். அங்கு ஒரு அதிகாரி ஆவணப்படங்களைப் பார்த்துக் கொள்பவர் என்றும் அவரை அணுகினால், இந்தப் படத்தை முடிக்க உதவி கிடைக்கலாம் என்றும் சொன்னார்கள். அவர் சொன்னதை அவருடைய வார்த்தைகளிலேயே இங்கு தருகிறேன்.
"யார் சார் செல்லப்பா? எழுத்தாளர்னா எங்களுக்கு நல்ல பாப்புலர் ஆன எழுத்தாளர்களைப் பத்திப் படம் பண்ணணும். (அவர் சொன்ன பெயர்களை இங்கு எழுதினால், உங்களுக்கு உண்மையிலேயே தமிழ் இலக்கியத்தின் மீது ஆர்வமும் அக்கறையும் இருந்தால் நீங்கள் குமட்டிக் குமட்டி வாந்தி எடுப்பீர்கள். உங்கள் மீது எனக்குக் கருணை உண்டு. வேண்டாம்). போன வேகத்தில் திரும்பி விட்டேன். அந்த நேரத்தில் முன்னாள் இயக்குனர் ஏ.நடராஜன் இருந்திருந்தால் ஒருவேளை இந்தப் படம் சாத்தியப் பட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. நான் தயாரித்து இயக்கிய கண்ணப்பத் தம்பிரான் பற்றிய தெருக்கூத்துப் படத்தின் ஒளிப்பேழையுடன் தொலைக்காட்சி நிலையத்தில் நடராஜனை சந்தித்தபோது என்னை யார் என்று அவருக்குத் தெரியாது. எவ்வித சிபாரிசையும் கொண்டு செல்லவில்லை நான். அவரை முதன்முதலாக சந்தித்த அந்த நாள் அவருடைய பணிக்காலத்தின் இறுதிநாள். என்னை யார் என்று அப்போது தெரியாத போதும் கண்ணப்பத் தம்பிரான் பற்றிய தெருக்கூத்துப் படத்தின் ஒளிப்பேழையைக் கொடுத்ததும் தன்னுடைய உதவியாளரை அழைத்து உடனே என்னுடைய கடிதத்தின் மீது அந்தப் படத்தைத் தேர்வு செய்து குறிப்பு எழுத வைத்தார். அந்தப் படம் தொலைக் காட்சியில் ஒளிபரப்பானது. இப்போது செல்லப்பாவின் படத்துக்காக நான் சந்தித்தது வேறுமாதிரியான அதிகாரி ஒருவரை. வேறு என்ன? எல்லாம் என் நேரம்தான்.
பிறகு தலைநகரில் சாகித்ய அகாடமியில் அப்போது செயலராக ஒரு மலையாள இலக்கியவாதி இருந்தார். செல்லப்பாவின் மீது அதீதமான மதிப்பு வைத்திருப்பதாகவும் நான் சிபாரிசுக்காக யாரிடமும் போகக்கூடாது என்றும் தானே செய்து தருகிறேன் என்றும் சொன்னார். நம்பியிருந்தேன். யாரிடமும் போகவில்லை. ஆனால் அந்த ஆண்டு வேறு யாரோ யாரிடமோ போய் பலத்த சிபாரிசு வாங்கிவந்து வேறு ஏதோ படம் எடுக்க சாகித்ய அகாடமி நிதி உதவி அளித்தது. எனவே அந்த முயற்சியும் தோற்றுப்போனது. இணையத்தில் பல நண்பர்களிடம் வேண்டினேன். அப்போது முதல்வராக இருந்த கலைஞருக்குக் கடிதம் அனுப்பினேன். கடிதத்தை வீட்டுக்குத் தொலைநகலில் அனுப்பி வைத்தேன்.
ஒன்றும் நடக்கவில்லை. என் நினைவுகளைப் போல அதுவும் உறங்கிக் கிடக்கலாம். ஒருவேளை படத்தை வெற்றிகரமாக முடித்திருந்தால் இன்னும் பல தமிழ் படைப்பாளிகளை படம் பிடித்திருப்பேன். எனக்குக் கொடுத்து வைக்கவில்லை.
செல்லப்பா படம் எடுக்கத் துவங்கியபோது நண்பர்கள் கேட்டதற்கு இறுமாப்புடன் சொன்னேன். ""யாரும் ஆதரிக்கலைன்னா பரவாயில்லை. பொழுது போகாதப்போ எல்லாம் வீட்டிலே தனியா போட்டுப் பாத்துக்குவேன். செல்லப்பா ஞாபகம் வர்றப்போ எல்லாம் தனியாப் பேட்டுப் பாத்துக்குவேன்''.
அதைத்தான்செய்துகொண்டிருக்கிறேன் இப்போது.
Saturday, November 3, 2007
Thursday, September 13, 2007
சி.சு.செல்லப்பா பற்றிய ஒரு முடிவுறாத ஆவணப்படம் - 3
ராகவன் தம்பி


செல்லப்பாவைப் பற்றிய ஒரு ஆவணப்படம் எடுக்க வேண்டி அவருடைய வீட்டு வாசலில் பேராசியர் சி.ரவீந்திரனும் நானும் நின்ற கோலத்தோடு சென்ற இதழில் நிறுத்தியிருந்தேன்.
செல்லப்பா எங்களைப் பார்த்ததும் மறுபடியும் உற்சாகமாக எழுந்து உட்கார்ந்து கொண்டார். ஏதோ விட்ட இடத்திலிருந்து தொடருவது போல "சுதந்திர தாகம்' புதினம் பற்றி மீண்டும் பேச ஆரம்பித்தார். காந்தியின் முன்னால் சிகரெட் பிடிக்கும் துணிச்சல் கொண்ட ஒரு Rogue என்று நேருவைத் திட்டினார். எழுத்து பத்திரிகையில் இருந்து மீண்டும் சில பகுதிகளை மீண்டும் வாசித்துக் காட்டினார். அன்று இப்படியாகப் பேச்சு போய்க்கொண்டு இருந்தது.
நான் மெல்லக் காரியத்தில் இறங்கினேன். ""உங்களைப் படம் எடுக்கணும்''. சற்று நேரம் அமைதியாக இருந்தார். காதில் விழவில்லையோ என்று மீண்டும், ""சார், உங்களைப் படம் எடுக்கலாம்னு இருக்கோம்''. ""எடுத்துக்கோ. ரவீந்திரன். பக்கத்திலே வாங்கோ. கேமரா கொண்டு வந்திருக்கியா?'' என்றார். சரிதான். இவர் வேறு ஏதோ அர்த்தம் பண்ணிக் கொண்டிருக்கிறார். ""இல்லே சார். உங்களை ஒரு டாகுமெண்டரி படம் எடுக்கணும்''.
"சினிமாவா? நான் என்ன எம்.ஜி.ஆரா? அதெல்லாம் ஒண்ணும் வேணாம்''.
சினிமாவெல்லாம் இல்லை சார். உங்களைப் பேச வச்சு உங்க நேர்காணலைப் படமாக்குறோம். அவ்வளவுதான். நீங்க உங்க அனுபவங்களைப் பத்திப் பேசுங்கோ. பதிவு பண்ணி வச்சிக்கிறோம்.
சினிமாவெல்லாம் இல்லை சார். உங்களைப் பேச வச்சு உங்க நேர்காணலைப் படமாக்குறோம். அவ்வளவுதான். நீங்க உங்க அனுபவங்களைப் பத்திப் பேசுங்கோ. பதிவு பண்ணி வச்சிக்கிறோம்.
"எந்த டிவியிலே போடப்போறேள்? டிவி எல்லாம் வேணாம். ஏற்கனவே என்னோட ஜீவனாம்சம் நாவலைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி வச்சாங்க. டி.வி. எல்லாம் வேணாம்''
ரவீந்திரன் துணைக்கு வந்தார். டி.வி. எல்லாம் இல்லை சார். இவர் கண்ணப்பத்தம்பிரானைக் கூடப் படம் பண்ணியிருக்கார். உங்க நினைவுகளைப் பதிஞ்சு வச்சிக்கிறோம் அவ்வளவுதான்''
செல்லப்பாவுக்குப் புரியவில்லை. ஆனால் கோபித்துக் கொள்ளவில்லை. சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். ஜீவனாம்சம் நாவல் பற்றியும் அது தொடராக வந்தது பற்றியும் ரவீந்திரனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். நான் சிகரெட் பிடிக்க மெல்ல வெளியே நழுவினேன். சிகரெட் முடித்து உள்ளே வந்தபோது மாமி சமையலறையில் காபி தயார் செய்து கொண்டிருந்தார். மாமியிடம் போய் விஷயத்தை சொன்னேன். ""மாமாவைப் படம் எடுக்கணும். சும்மா ஒரு டாகுமெண்டரி மாதிரிதான். கொஞ்சம் சொல்லுங்களேன்'' என்றேன். ""நான் அதுலே எல்லாம் தலையிட மாட்டேன். நீயே பேசிக்கோ. அவரைப் பத்திதான் உனக்குத் தெரியுமே? என்றார்.
மீண்டும் செல்லப்பா இருந்த அறைக்குப் போனேன். மாமி காபி எடுத்துக் கொண்டு பின்னால் வந்தார். ""மீனா இதோ பாரு. பென்னேஸ்வரன் என்னை எம்.ஜி.ஆர். மாதிரி சினிமா பிடிக்கணும்னு சொல்றான்'' என்றார் சிரித்துக் கொண்டே. காதில் கையைக் குவித்துக் கொண்டு மாமி இன்னும் அவருக்குச் சற்று அருகில் போனார். மீண்டும் அதையே சொல்லிக் கத்தினார் செல்லப்பா. ""ஒங்க ரெண்டு பேருக்கும் விவஸ்தை இல்லே'' என்று வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டே உள்ளே போனார் மாமி.
என்னிடம் கேட்டார் செல்லப்பா. ""அதுக்கு செலவாகுமே? என்ன செய்யப்போறே? யார் உனக்குப் பணம் தர்றா?'' என்று கேட்டார்.
"யாரும் பணம்லாம் தரல்லே. நான் கொஞ்சம் ஏற்பாடு பண்ணி வச்சிருக்கேன். அதுலேயே பண்ணிடலாம்'' என்றேன்.
"இந்த வேலை எல்லாம் எதுக்கு? என்னை மாதிரி தப்பெல்லாம் பண்ணாதே'' என்றார்.
"இல்லை சார். இதுக்காகவே கொஞ்சம் ஒதுக்கி இருக்கேன். எனக்குப் பண்ணணும் சார். உங்களைப் பத்திய ஒரு பதிவு எங்களுக்கு வேணும் சார்'' என்றேன்.
"எழுத்து'' தான் இருக்கே?'' என்றார்.
"இல்லே. நீங்க எல்லாத்தைப் பத்தியும் பேசறமாதிரி பதிவு வேணும் சார். நான் நல்லா பண்ணுவேன் சார். என்னைப் பத்தி உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? என்றேன்.
ஒன்றும் பேசவில்லை. அமைதியாக இருந்தார். சிறிய மௌனத்துக்குப் பின் ""கையிலே இருந்து இதுக்கெல்லாம் செலவு பண்ணாதே'' என்றார்.
"இல்லே சார். போட்ட பணத்தை எடுத்துடுவேன்'' என்றேன்.
"அதெல்லாம் ஆகாத காரியம். பார்ப்போம். வந்து எடுத்துக்கோ. எப்போ வர்றே?'' என்றார்.
"இன்னிக்கு ராத்திரி கிருஷ்ணகிரி போறேன். அடுத்த ஞாயித்துக்கிழமை வந்துடுவேன். வந்து ஏற்பாடு பண்ணிக்கலாம்'' என்றேன். "My lugguage is readily packed. I am ready for a journey". நான் உயிரோட இருந்தா வந்து எடுத்துக்கோ'' என்றார் சிரித்துக் கொண்டே.
ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. ஒரு மாதிரி கண்கலங்கிப் போயிருந்தார் ரவீந்திரன். செல்லப்பாவின் கையை இறுகப் பிடித்துக்கொண்டு நடுங்கிய குரலில், ""கண்டிப்பா இருப்பீங்க சார். நாங்க கண்டிப்பா அடுத்த ஞாயித்துக்கிழமை வர்றோம்'' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
அன்று இரவு குடும்பத்துடன் கிருஷ்ணகிரிக்குக் கிளம்பினேன். ஒரு வாரம் கழித்துத் திரும்பி வந்து கண்ணப்பத் தம்பிரான் பற்றிய படம் எடுத்தபோது படப்பிடிப்பு உபகரணங்களை வாடகைக்கு எடுத்த அதே குட்நியூஸ் ஸ்டூடியோவில் காமரா மற்றும் படப்பிடிப்பு விளக்குகளுக்காக சொல்லி வைத்தேன். தயாராக இருக்குமாறு செல்லப்பாவிடம் சொல்லிவிட்டு வருவதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை செல்லப்பா வீட்டுக்குப் போனேன்.
சவரம் எல்லாம் செய்து கொண்டு மாப்பிள்ளை மாதிரி உட்கார்ந்து கொண்டிருந்தார். எனக்குப் பெருத்த ஆச்சரியத்தைக் கொடுத்தது என்னவென்றால், 92ல் அவர் தில்லி வந்திருந்தபோது உள்துறை அமைச்சகத்தில் என்னுடன் பணிபுரிந்த ராமராஜ், பாலசுப்பிரமணியன், மணிகண்டன் ஆகிய நண்பர்கள் நடத்திக் கொண்டு இருந்த ""இளங்குருத்து'' கையெழுத்துப் பத்திரிகை (இளங்குருத்து பற்றி அப்புறம் தனியாக எழுதுகிறேன். இப்போது எங்காவது பாதை மாறினால் உங்களுக்குக் கொலைவெறி வரும் என்று தெரியும்). ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டார் செல்லப்பா. அப்போது நாங்கள் அவருக்கு அணிவித்த சால்வையைப் போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருந்தார். ஏதோ எனக்காகக் காத்துக் கொண்டு இருந்தது போல இருந்தது அவர் உட்கார்ந்திருந்த நிலை.
என்னைப் பார்த்ததும், ""என்ன கேமரா எல்லாம் கொண்டு வரல்லையா? நான் ரெடி'' என்றார் ஒரு சிறு குழந்தையைப் போல.
"இல்லை சார். நாளைக்குக் கேமரா எடுத்துண்டு வர்றேன். ஒரு படையே வரும். உங்களுக்குத் தொந்தரவு இருக்காது இல்லையா? நான் வர்றேன்று சொல்லிப்போகலாம்னு வந்தேன்'' என்றேன்.
"நான் உயிரோடு தான் இருக்கேன். நாளைக்கும் இருப்பேன். நீ வரலாம்'' என்று சொல்லிவிட்டுத் தூங்கப்போனார்.
அன்று மாலையே மீண்டும் ஸ்டூடியோவுக்குச் சென்று அடுத்த நாளைக்காகக் கேமரா, விளக்கு, உதவியாளர்கள் எல்லாம் புக் செய்து விட்டேன். தெரிந்த நண்பர் மூலம் கிடைத்தார் கேமராமேன் ரங்கசாமி. தமிழ்த்திரையுலகில் பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர். குட்நியூஸ் ஸ்டூடியோவின் சுப்பிரமணியனும் சாமிநாதனும் கேமரா உதவியாளர்கள்.
மறுநாள் காலை ரவீந்திரன், நான், ரங்கசாமி கேமராமேன் மற்றும் உதவியாளர்கள் சகிதம் செல்லப்பா வீட்டுக்கு விடியற்காலையில் படையெடுத்தோம்.
மறுநாள் காலை ரவீந்திரன், நான், ரங்கசாமி கேமராமேன் மற்றும் உதவியாளர்கள் சகிதம் செல்லப்பா வீட்டுக்கு விடியற்காலையில் படையெடுத்தோம்.
நேற்றுப் பார்த்ததுக்கு செல்லப்பா சற்று பலவீனமாக இருந்தார். இரவு உடம்பு ரொம்பவும் சுகமில்லாமல் போனதாகவும் இரவு தான் மிகவும் பயந்துவிட்டதாகவும் மாமி சொன்னார். எனக்கும் ரவீந்திரனுக்கும் தோன்றியது. மறுநாளைக்கு வைத்துக் கொள்ளலாம் என்று. ஆனால் செல்லப்பா மிகவும் கடுமையாக வற்புறுத்தினார்.
அவருக்கும் சில விஷயங்கள் தெரிந்திருந்தது. ""எதுக்கு வீணா கேமரா வாடகை, வண்டி வாடகை எல்லாம் வீணாக்குறே? முடிஞ்ச வரைக்கும் எடுத்துக்கிட்டுப் போ'' என்று சொன்னார். ரவீந்திரனும் நானும் ரங்கசாமியும் மனதில்லாமல் படிப்பிடிப்புக்கான வேலைகளைத் துவங்கினோம்.நீங்களே கற்பனை செய்து பாருங்கள். அது சென்னையின் ஜ÷ன் மாதம். ஒரு சரியான மின்விசிறி வசதி கூட இல்லாத ஒரு சிறு அறை. அதில் நாங்கள் அதிகம் வெளிச்சம் பாய்ச்சும் விளக்குகளைப் பொருத்தினால் செல்லப்பாவின் உடல்நிலை கண்டிப்பாகப் பாதிக்கப்படும். எனவே மிகக் குறைந்த ஒளி அளவுள்ள விளக்கை, செல்லப்பாவின் மீது நேரடியாகப் பாயாத வண்ணம் வீட்டின் விட்டத்தின் மீது பாயவிட்டு அதன் எதிர்வினை ஒளியில் படம் பிடிக்கத் தயார் செய்து கொண்டார் ரங்கசாமி.
நிறைய க்ளூகோஸ் பொட்டலங்கள் வாங்கிச் சென்றிருந்தோம். அவற்றைக் கரைத்துத் தயாராக வைத்துக்கொண்டோம். களைத்துப்போனால் அவருக்குக் கொடுப்பதற்கு.அப்போது வெளியாகி வீடெல்லாம் இறைந்து கிடந்த சுதந்திர தாகம் நூல்களை செல்லப்பாவின் பின்னணியில் அடுக்கி வைத்தோம். கட்டிலின் மீது தலையணைகளை சரித்து வைத்து, ஒரு மகாராஜாவின் தோரணையில் அமர்ந்து கொண்டார் செல்லப்பா. (உண்மையிலேயே என் கண்ணுக்கு அந்த நேரத்தில் காம்பீர்யம் மிகுந்த யாருக்கும் தலைவணங்காத ஒரு மன்னனாகத்தான் காட்சியளித்தார் செல்லப்பா).
படப்பிடிப்பு துவங்கியது. கேமராவின் இந்தப்பக்கமிருந்து நானும் ரவீந்திரனும் கேள்விகளைக் கேட்கத் துவங்கினோம். நாங்கள் ஏற்கனவே பேசிக்கொண்டபடி அவருடைய இலக்கிய உலகப் பிரவேசம், மணிக்கொடி நண்பர்களின் தொடர்பு, புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, க.நா.சு. போன்றோர்களுடன் அவருக்கிருந்த நட்பு, அவருடைய தினமணி நாட்கள், எழுத்து அனுபவங்கள் போன்றவற்றை மிகவும் சுவாரசியமாக சொல்ல ஆரம்பித்தார் செல்லப்பா. கேள்விகள் கேட்பதை விட்டு அவர் சொல்வதைக் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம் நானும் ரவீந்திரனும். அவரை இடையில் நிறுத்த மனது வரவில்லை எங்களுக்கு. அவர் சோர்வடையும் நேரத்தில் இடையில் நிறுத்த விரும்பினோம். சோர்வடைந்ததைக் காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து கொண்டிருந்தார் செல்லப்பா. ஓரிரு இடங்களில் அவர் மீது ஈ அமர்ந்தபோது அதை அவர் தட்டி விட எத்தனித்தார். அவர் சால்வையில் சேர்த்துப் பின் செய்யப்பட்டிருந்த லேப்பில் மைக்கையும் தட்டி விட்டார். ஒலிப்பதிவு தடையுற்றதால் நான் கேமராவுக்குக் "கட்' சொல்லவேண்டியதானது. "I am not your actor to say Cut and all " என்று என்னைக் கடிந்து கொண்டார் செல்லப்பா. படப்பிடிப்பு தொடர்ந்து கொண்டிருந்தது. எல்லாவற்றைப் பற்றியும் மீண்டும் பேசினார்.
ஆச்சரியம் என்னவென்றால், ஓரிருமுறை மைக்கைத் தட்டிவிட்டதால் தடைபட்டுப்போன இடங்களை அவர் மீண்டும் விவரிக்கத் துவங்கிய போது முன்னைவிட அதில் சுவாரசியம் இன்னும் சற்றுக் கூடியது.
இப்போதைக்கு சற்று நிறுத்திக்கொள்கிறேன். சுவாரசியத்துக்காகவோ அல்லது மர்மத்தைக் கூட்டவோ நிறுத்தவில்லை. இடமில்லாததால் நிறுத்துகிறேன். பலர் இந்தத் தொடர் பற்றிப் பாராட்டினாலும் சில நண்பர்கள் என்னைக் கடிந்து கொண்டார்கள்.
சனிமூலை ஒரே விஷயம் தாங்கி இப்படித் தொடர்ச்சியாக வரக்கூடாது என்றும் ஒரு மாதம் கழித்துப் படிக்கும்போது அதில் சுவாரசியம் குறைந்து விடுகிறது என்றும் சலித்துக் கொண்டார்கள். அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது. அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். இன்னும் ஒரே இதழில் முடித்து விடுவேன்.
செல்லப்பா பற்றிய ஆவணப் படம்தான் முடியவில்லை. எடுத்த வரை வீட்டில் தூங்குகிறது. அந்த அனுபவங்களையாவது சற்று முழுமையாகப் பகிர்ந்து கொள்ளலாமே என்ற உரிமையில் இந்தத் தொடர்ச்சி. இந்த முறை மன்னித்துவிடுங்கள். அடுத்த இதழுடன் செல்லப்பாவை முடித்து விடுவேன்.
அதன் பிறகு சனிமூலையில் தனித்தனியான விஷயங்கள்தான். நீங்கள் தான் பாவம். எல்லாவற்றையும் சகித்துக் கொள்ள வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)