Thursday, January 10, 2008

சனிமூலை

இலக்கியத்திலும் தமிழர் பண்பாட்டு வரலாற்றிலும் ஆர்வம் உடைய உயர் அதிகாரி ஒருவர் எங்களிடம் ஒருநாள் மிகவும் சலிப்பான குரலில் குறைப்பட்டுக் கொண்டார்.

"என்னோட மாணவப் பருவத்திலே பல பட்டிமன்றங்களைக் கேட்டிருக்கேன். நானே பல பட்டிமன்றங்கள்லே கலந்துகிட்டிருக்கேன். அப்போ எல்லாம் நாங்க ஒரு பட்டிமன்றத்துலே பேசணும்னா ரொம்ப கனமான விஷயங்களா கொடுப்பாங்க. நிறைய படிக்கணும். கனமான விஷயங்களா பேசறப்போ சுவாரசியமா இருக்கறதுக்காக பல சுவாரசியமான சங்கதிகளை அங்கங்கே சேர்க்கணும். . ஆனா இப்போ நடக்கிற பட்டிமன்றங்களைப் பாருங்க. ரொம்ப மோசமா இருக்கு இல்லே?'' என்று ஆதங்கத்துடன் கேட்டார்.


அவர் கேட்பது கிடக்கட்டும். அவர் அப்படிப் பேசிக்கொண்டு போனபோது எனக்கு இரண்டு காதுகளிலும் லேசாகக் கொஞ்சம் புகை கசிந்தது. பெரிய இடத்தில் இருக்கிறார். இவர் பாட்டுக்கு எதை வேண்டுமானால் யாரிடம் வேண்டுமானால் பேசலாம். அவர்களும் இவர் இருக்கிற இடத்தைப் பார்த்துக் கொஞ்சம் பயப்படுவார்கள். இவருடைய படிப்பைப் பார்த்துக் கொஞ்சம் மிரளுவார்கள்.


எனக்கு இரண்டும் இல்லை. என்னதான் மிக உயரமான படிகளால் அமைக்கப்பட்டு இரண்டாவது தளத்தில் அமைந்திருந்தாலும் வடக்கு வாசல் ஒரு உயர்ந்த இடத்தில் இருக்கிறது என்பதை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நண்பர் அளவுக்கு எனக்குப் படிப்பும் இல்லை. ஆனாலும் இதே கருத்தை நான் ஒரு அசட்டுத் தைரியத்துடன் அடிக்கடி சொல்லிக் கொண்டு இருக்கும்போது முகத்துக்கு நேராக சிரித்தாலும் மனத்தளவில் என்மீது எறிவதற்குக் கல்லின் அளவையும் இடத்தையும் குறித்து வைத்துக் கொண்டிருப்பார்கள் சில நண்பர்கள்.


ஆனாலும் சில விஷயங்களை வெட்கத்தை விட்டு ஒரு குருட்டுத் தைரியத்தோடு சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. அதுவும் என்னைப்போல, நட்புக்காகவும் இன்னும் பல காரணங்களுக்காகவும் தொடர்ச்சியாகப் பட்டிமன்றங்களைக் கேட்டு ஏறத்தாழ தற்கொலை முடிவின் விளிம்புக்கு வந்திருக்கும் பாவாத்மாக்கள் கொஞ்சம் தைரியத்தோடு முன்வந்துதான் ஆகவேண்டும். இன்றைய பட்டிமன்றங்களில் பட்டிமன்றப் பாவலர்கள் அடிக்கும் குத்தாலங்கடி கூத்துக்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது.


நண்பர் சொன்னது போல என்னுடைய சிறிய வயதில் எங்கள் ஊரில் பல பட்டிமன்றங்களைக் கேட்டிருக்கிறேன். எங்கள் பள்ளித் தமிழாசிரியர்கள் பட்டிமன்றங்களை நடத்துவார்கள். அவை கம்பராமாயணப் பாத்திரங்களைப் பற்றி இருக்கும். சிலப்பதிகாரம் பற்றி இருக்கும். மணிமேகலை பற்றி இருக்கும். சீவகசிந்தாமணி பற்றி இருக்கும். எங்கள் பெருமாள் ராசு வாத்தியார், சுந்தரராமன் வாத்தியார், செல்வமணி டீச்சர், அறிவுக்கரசு வாத்தியார், திருஞானசம்பந்தம் வாத்தியார் ராமானுஜம் வாத்தியார் போன்ற அறிவுக்கடல்கள் எல்லாம் பட்டிமன்றங்களில் கலந்து கொள்வார்கள். தாங்கள் தேர்ந்தெடுத்த தலைப்புக்களைப் பற்றிக் கரைத்துக் குடித்து இருப்பார்கள். அவர்களுடைய வாதங்களில் கடலின் ஆழம் இருக்கும். புயலின் சீற்றம் இருக்கும். வாய்மையின் வர்ணங்கள் ஜாலங்கள் புரியும்.


இவர்கள் வாதங்களின் போது தங்கள் அணிக்கான காட்சிகளை விவரித்துச் செல்லும்போது இராம லட்சுமணர்களோடு எங்களையும் ஆற்றின் அக்கறைக்கு அழைத்துச் சென்று விட்டு வருவான் குகன். கண்ணகி மதுரையை எரிக்கும் சுவாலைகள் எங்கள் மனத்திரைகளில் கங்குகளாய்க் கனன்று எட்டுத் திக்கும் விரியும். பாஞ்சாலியின் அவிழ்த்த கூந்தலும், துரியோதனனின் தொடை தெறித்துச் சிதறும் ரத்தமும் எங்கள் முகங்களில் தெறிக்கும்.


இத்தனையும் நடக்க வேண்டுமென்றால் அவர்களுடைய உழைப்பு எந்த அளவுக்கு இருந்திருக்க வேண்டும்? ஏதோ ஒரு நாள் பட்டிமன்றத்துக்காகப் படித்த படிப்பாக இருந்திருந்தால் இது சாத்தியப்பட்டிருக்குமா? வாதுக்குத் துணையாக அழைத்து உலா வரச் செய்யும் கதைமாந்தர்களை எல்லாம் தங்களின் மனங்களில் சுமந்து திரிந்திருக்க வேண்டும் இவர்கள். அந்தக் கதைமாந்தர்கள் வாழ்ந்து திரிந்த வெளிகளிலும் அலைந்திருக்க வேண்டும். அவர்களுடன் கதையாடியிருக்க வேண்டும். சல்லாபமும், சரசமும், மல்யுத்தமும் நிகழ்த்தியிருக்க வேண்டும்.


அதன் தொடர்விளைவாக இந்தத் தமிழறிஞர்களின் வாதங்கள் மேடைகளில் உயிர் கொண்டு சண்டமாருதமாகத் திகழ்ந்திருக்க வேண்டும். நான் சொல்வது எங்கள் ஊர்ப்பெருமைக்காக மட்டுமல்ல. அநேகமாக உங்கள் ஊர்களிலும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். அங்கும் ஏதாவது உங்களது ஊரின் பெருமாள் ராசு வாத்தியார்களும் சுந்தர ராமன் வாத்தியார்களும் உங்களின் மனவெளிகளில் ஞானச்சுடர்களை ஏற்றியிருப்பார்கள். உங்கள் ஊரில் அப்போது நடந்த பட்டி மன்றங்களிலும் இவைதான் நடந்திருக்கும்.


சரி. இப்போதைய பட்டிமன்றங்களைப் பற்றி வருவோம். என்னைப் போல, விதி துரத்தி வீடு விட்டு ஓடி வந்த பாவாத்மாக்களின் வசதிக்காக பட்டிமன்றங்களை இரண்டு படுபயங்கரமான பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பரந்து பட்ட நகரங்களில் கதிகலக்கிக் கொண்டிருக்கும் பட்டிமன்றங்கள். இன்னொன்று தில்லி போன்ற இடங்களில் உள்ளூர் அறிஞர்கள் அப்பாவித் தமிழர்களை வதைக்க ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்ளும் லோக்கல் பட்டிமன்றங்கள்.


முன்னது காடு, மலை, ஆறு, குளம், கடல்தாண்டி திக்கெட்டும் தமிழ்மணம் பரப்பி, தொலைக்காட்சி ஊடகங்கள் வழியாக உங்கள் வீட்டு வரவேற்பறையிலேயே பார்வையாளர்களைக் குற்றுயிராக்கும் பட்டிமன்றங்கள்.


பின்னது உள்ளூர் வஸ்தாதுக்கள் எதிர் அணியினருடன் சமர் புரிந்து வெற்றிக்கொடி நாட்டி பார்வையாளர்களைக் குதூகலிக்க வைக்கும் அதே நேரத்தில் மேடையில் பேசும் பேச்சாளனின் மூடத்தனத்தை விரித்து வைத்த புகையிலையாக நம்முடைய கைகளில் திணித்து வைக்கும் பட்டிமன்றங்கள்.


முன் சொன்னதில், அதாவது சென்னை, மதுரை போன்ற இடங்களில் நடக்கும் அகிலஉலகப் புகழ் பெற்ற பட்டிமன்றங்களின் தலைப்புக்கள் அநேகமாக மிகவும் பொதுத்தன்மை கொண்டதாக இருக்கும். அத்தலைப்புக்களை ஒட்டி வாதாடுபவர்கள் எந்த நூலையும் படித்திருக்கத் தேவையில்லை. எந்தவிதமான முன்தயாரிப்பும் தேவைப்படாமல், தூங்கி எழுந்த பின்னரோ அல்லது படுக்கையில் எல்லாக் காரியத்தையும் முடித்துவிட்டோ அல்லது சாப்பிட்ட பின்னரோ அல்லது ஒரு இருட்டறையில் தன்னைத் தானே பூட்டிக்கொண்ட நிலையில் பல ஆண்டுகளைக் கழித்துப் பின்னர் என்றாவது ஒருநாள் விடுதலை ஆகிவிட்டுக்கூட நேராக வந்து இந்தப் பட்டிமன்றங்களில் கலந்து கொள்ளலாம். கொடுக்கப்பட்ட தலைப்புக்கும் பேச்சுக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்கிற அவசியம் ஏதும் கிடையாது.


பட்டிமன்றங்களில் நடக்க வேண்டிய வாதங்களை அவர்களே ஒத்திகை பார்த்துக் கொள்வார்கள். ""நான் உன்னை இப்படி மட்டம் தட்டுகிறேன். நீ என்னை இப்படிக் கேவலமாகப் பேசு'' என்று எல்லா ஒத்திகைகளும் திரை மறைவிலேயே தீர்மானிக்கப்படும்.


இந்தப் பட்டிமன்றங்களில் விவாதிக்கப்படும் விஷயங்கள் எல்லாம் மிகவும் பொருள் பொதிந்ததாக மேலோட்டமாகத் தோன்றும். மிகச் சாதாரணமாக, அதிகம் சிரமம் எடுத்துக்கொள்ளாமல் ஒரு சிறிய அளவிலான தர்க்க நியாயத்துடன் அதன் பொருளை உடைத்து உள்ளே சென்றால் அந்தப் பட்டிமன்றத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பு மிகவும் கேனத்தனமாகத் தோன்றும்.


அந்தப் பட்டிமன்றங்களின் நடுவர்களும் பேச்சாளர்களும் அணித்தலைவர்களும் ஒன்றும் இல்லாத ஒரு விஷயத்தை மூக்கை விடைத்துக் கொண்டு உரக்கக் கூப்பாடுபோட்டு, உடம்பில் இருக்கும் நரம்புகளை எல்லாம் ஓரிடத்துக்குக் கொண்டு வந்து முறுக்கி கசரத்து வேலைகள் எல்லாம் செய்து கேட்பவர்களை புல்லரிக்கச் செய்வதில் வித்தகர்கள். அதுவும் தொலைக்காட்சிக்குப் படமாகிறது என்றால் அவர்கள் காட்டும் தில்லாலங்கடி வேலைகளுக்கு எவ்விதப் பஞ்சமும் இருக்காது. இந்தத் தொலைக்காட்சிப் படப்பிடிப்புக்கு என்றே ஆண்டவன் அனுப்பி வைத்தது போல மிக அழகான பல்வரிசையுடன் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க மிக அழகான பெண்களும், மூக்கைச் சிந்தி அழுவதற்காகவே பட்டுப்புடவை கட்டிக்கொண்டு வந்த மாமிகளும் பார்வையாளர்களில் பிரசன்னமாகி இருப்பார்கள். தொலைக்காட்சி ஒளிபரப்பில் இவர்களுடைய பிரசன்னமான சிரிப்புக்களும் கண்ணீர் மல்கிய மூக்கு சிந்தல்களும் அடிக்கடி காண்பிக்கப்பட்டு அந்த நிகழ்ச்சிக்கு வராத பார்வையாளர்களின் ஜென்மங்கள் சாபல்யம் அடைய வைக்கப்படும்.


இந்தப் பொங்கல், தீபாவளி, சுதந்திரநாள், மாடுவிரட்டு, காதலர் நாள், கிழவர்கள் நாள், குமரிகள் நாள், அரைக்கிறுக்குகள் நாள் போன்ற விசேஷமான நாட்களில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றங்களின் ஜொலிப்பே தனியாக இருக்கும். அநேகமாகப் பல இடங்களில் பேசிப்பேசித் தேய்த்த தலைப்புக்களே இருக்கும். ஒரே நடுவர் அல்லது ஒரே பேச்சாளரின் பேச்சைக் கேட்கக் குறைந்தது ஐந்து பட்டிமன்றங்களுக்கு அவர்கள் பின்னாலேயே சென்று பாருங்கள். அவர்கள் என்ன மாதிரியான உட்டாலங்கடி வேலைகள் செய்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியவரும்.



சரி. இப்போது உள்ளூர் பட்டிமன்றப் பாவலர்களைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். இவர்கள் செய்யும் அட்டூழியம் சொல்லி மாளாது. இவற்றில் யார் வேண்டுமானாலும் நடுவர் பதவியை ஏற்கலாம். யார் வேண்டுமானாலும் அணித்தலைவர் இடத்தைப் பிடிக்கலாம். யார் வேண்டுமானாலும் பேச்சாளர் ஆகலாம். யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எதையும் படிக்கத் தேவையில்லை. எவ்விதத் தயாரிப்பும் தேவையில்லை. ஆழமான விஷயங்கள் எவை குறித்தும் கவலை இல்லை.


இந்த உள்ளூர்ப் பட்டிமன்றங்களில் பேச்சாளராவதற்கு மிக முக்கியமான தகுதி என்னவென்றால் மேடையில் எதையும் பேசுவதற்கான சுதந்திரத்தை எடுத்துக் கொள்வதற்காகக் கூச்சத்தை விடவேண்டும். வெட்கத்தை முற்றிலும் துறக்க வேண்டும்.


எதிர் அணியில் இருப்பவர்களை மிகவும் மட்டமாக விமர்சிக்க வேண்டும். நடுவரின் நிறம், உடலமைப்பு, தொந்தி, வழுக்கை ஈறான சகல அங்கலாவண்யங்களையும் விடம்பனம் செய்து கைதட்டல்கள் வாங்கவேண்டும். மேடையில் இருக்கும் யாருடைய மனைவியாவது பார்வையாளர்களில் இருந்து விட்டால் ""அக்காவைக் கேட்டேன். அவர் எதுக்கும் லாயக்கு இல்லே என்று சொன்னாங்க'' போன்ற திடுக்கிடும் தகவல்களையும் மேடையில் சொல்லலாம். எதிர் அணித்தலைவரையும் மற்ற அணிச்சிங்கங்களையும் ஏறுமாறாகப் பேசலாம். அவர்களும் பதிலுக்கு தங்கச்சி, தம்பி, மாமா, மச்சான் என்று உறவாடிக்கொண்டு இவர்களைப் பற்றி தர்மசங்கடமான தகவல்கள் எதையாவது அவிழ்த்து விடலாம்.


இந்த உள்ளூர்ப் பட்டிமன்றங்களில் பேச எவ்விதமான விவஸ்தையும் தேவையில்லை. எவ்விதமான பயிற்சியும் தேவையில்லை. எவ்விதமான படிப்பும் தேவையில்லை. நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு வேண்டியவர்களாக மட்டும் இருந்துவிட்டால் போதும்.


இந்தப் பட்டிமன்றப் பாவங்கள் குழந்தைகளையும் விட்டுவைப்பதில்லை. அவர்களை வயதுக்கு மீறிப்பேச வைத்து, அவர்கள் சிந்திக்கும் திறனை மீறிய விஷயங்களை, தமிழ்சினிமாவில் அசட்டுத்தனமாக சித்தரிக்கப்படும் குழந்தைகளைப்போல ஒரு போலியான பாவனையில், போலியான குரலில் அவர்களைப் பேசவைத்து அவர்களையும் இவர்களுடைய வழியிலேயே தொலைக்காட்சி விவாதங்களில் பேசுவதைப்போன்ற ஒரு பொய்யான பாவனைகளில் பேசவைத்துக் கைத்தட்டல்கள் வாங்கும் கொடுமைகளும் நடக்கின்றன.


இன்னும் சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இந்தப் பட்டிமன்றங்களின் அடுத்த ஆபத்தான விளைபொருளான அரட்டை அரங்கங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றியும் கொஞ்சம் சீண்டலாம் என்று ஆசை. சொல்லி என்ன ஆகப்போகிறது? இவையெல்லாம் மண்ணுள்ளவரை, விண்ணுள்ளவரை, நீருள்ளவரை நிலமுள்ள வரை, காற்றுள்ள வரை நடந்து கொண்டுதான் இருக்கும். எப்போதாவது இப்படியும் இருக்கே என்று சொல்லிப்பார்க்கத்தான் இந்தக் கஷ்டம். ஆனால் மிகச்சில நல்ல பட்டிமன்றங்களும் இன்னும் இருக்கத்தான் இருக்கின்றன. நமக்குத்தான் பார்க்கவோ கேட்கவோ பாக்கியம் இதுவரை லபிக்கவில்லை. எல்லாம் சரி. அடுத்த பட்டிமன்றத்தில் எத்தனை பேர் என் முதுகில் டின் கட்டப்போகின்றார்கள் என்பதைப் பொ-றுத்து இருந்து பார்த்து, கேட்டு ஆனந்தம் அடையுங்கள்.


வடக்கு வாசல் டிசம்பர் 2008 இதழில் வெளியான கட்டுரை.

Friday, November 16, 2007

குப்த்ஹொத்யா (ரகசியப்படுகொலை) - அசாம் மாநிலத்தை அதிரவைக்கும் விசாரணை அறிக்கை

அசாம் மாநில அரசியலில் இப்போது ஒரு புதிய அமர்க்களம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு என்னுடைய வயதிருந்தால் அல்லது எனக்கு மூத்தவராக இருந்தால் எண்பதுகளின் துவங்கங்களில் அப்பாவியாக ஒரு முகம் அடிக்கடி ஊடகங்களில் தென்பட்டது நினைவுக்கு வரலாம். அஸ்ஸôம் மாநிலத்தில் ஒரு கல்லூரி மாணவனின் அரசியல் பிரவேசம் அகில இந்திய அரசியலில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. எங்கள் வயது இளைஞர்களுக்கு அப்போது அது மிகப்பெரிய விஷயமாகப் பட்டது.

உள்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது அந்த மாணவர் தலைவர் எங்கள் அமைச்சரைப் பார்க்க வருகிறார் என்று செய்தி கிடைக்கும்போதெல்லாம் ஒரு சினிமா நடிகனைப் பார்க்கின்ற பரவசத்துடன் தூரத்தில் நின்று பார்த்து விட்டு அன்று இரவே பரபரப்புடன் நண்பனுக்குக் கடிதம் எழுதிய நினைவு இன்னும் பசுமையாக இருக்கிறது. அந்த மாணவத் தலைவன் - பிரஃபுல்ல குமார் மஹந்தா இப்போது என்னைப் போலவே சற்று வயதாகி முன் மண்டையில் வழுக்கை விழுந்து கண்களை இடுக்கிக் கொண்டு சிரிக்கிறார்.

உங்களுக்கு என்னுடைய வயதிருந்தால் அல்லது எனக்கு மூத்தவராக இருந்தால் அஸ்ஸôம் தொடர்பான இன்னொரு நிகழ்வும் வேதனையுடன் உங்கள் நினைவில் இருக்கலாம்.

1983ல் அசாமின் நவ்கோன் மாவட்டத்தில் நெல்லி என்னும் இடத்தில் வெளிநாட்டவர்களுக்கு குறிப்பாக பங்களாதேஷ் முஸ்லிம்களுக்கு எதிராகக் கையில் எடுத்த படுபாதகமான கலவரத்தில் சுமார் 1800 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்தப் படுகொலைகளை அரங்கேற்றிய பாதகர்கள் பெண்கள், சிறுவர்களைக் கூட விட்டு வைக்கவில்லை. அப்போது தினசரிகளில் இந்தப் படுகொலைகள் தொடர்பாக வந்த புகைப்படங்கள் பார்ப்பவர்களை கதிகலங்க வைத்தது. நல்ல வேளை. இப்போது போல அப்போது ஊடகங்கள் பரவலாக இல்லை. பல கோரக்காட்சிளைக் காண்பதில் இருந்து நாங்கள் அப்போது தப்பித்தோம். மிகக் கோரமான கொலைகள் அங்கு நிகழ்த்தப்பட்டன. மிகச்சரியாக ஞாபகம் இல்லை. இந்தியா டுடே என்று நினைக்கிறேன். மற்றும் உள்துறை அமைச்சகத்தின் நூலகத்தில் கிடைத்த சில வெளிநாட்டு சஞ்சிகைகளிலும் நெல்லி படுகொலைகள் குறித்த மிகக் கோரமான புகைப்படங்கள் காணக்கிடைத்தன.

என்னைப் போன்ற பயந்தாங்கொள்ளிகள் மற்றும் பலவீனமானவர்களைப் பதறவைத்த புகைப்படங்கள் அவை.


இவற்றைத்தவிர வன்முறைக்குப் பலியாகிப் பிழைத்தவர்கள் மற்றும் கொலையுண்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் தப்பிப் பிழைத்தவர்களை சந்தித்து மனித உரிமைக் கழகங்களும் ஆங்கில சஞ்சிகைகளுக்கும் பேட்டிகளைப் பிரசுரித்தார்கள். ஒவ்வொரு பேட்டியும் மனதைப் பதறவைத்தன.
இப்போதைய குஜராத் வன்முறைக்கு எந்தவகையிலும் குறையாத ஏன் சொல்லப்போனால் இன்னும் படுபாதகமான படுகொலைகள் - வன்முறைச் சம்பவங்களை உலகம் கண்டது அப்போது. அந்த நேரத்தில் அஸ்ஸôம் கணசங்ராம் பரிஷத் என்னும் அமைப்பும் ஆல் அஸ்ஸôம் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் என்னும் அமைப்புக்கள் அஸ்ஸôமில் மிகவும் பிரபலம் அடைந்து வந்தன. ஆல் அஸ்ஸôம் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் அமைப்புக்கு பிரஃபுல்ல குமார் மஹந்தா தலைவராக இருந்தார்.

இந்த இரண்டு அமைப்புக்களின் ஏற்பாட்டின் பேரில் அப்போது அசாமில் குடியேறியிருந்த அந்நிய நாட்டவர்களை (பங்களாதேஷிகள்) வெளியேற்ற மாபெரும் போராட்டம் ஒன்று வெடித்தது. அந்தப்போராட்டத்தின் ஒரு பகுதிதான் நெல்லியில் மேலே குறிப்பிட்டுள்ள படுகொலைகள் நிகழ்ந்தன. அப்போது ஹிதேஸ்வர் சைக்கியா அஸ்ஸôம் மாநிலத்தின் முதல்வராக இருந்தார். அவர் தலைமையில் இருந்த மாநில அரசு திவாரி கமிஷன் என்ற பெயரில் விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைத்தார். திவாரி கமிஷன் 1984ல் நெல்லி படுகொலைகள் தொடர்பாக ஒரு அறிக்கையை சுமார் 600 பக்கத்துக்கு சமர்ப்பித்தது.

ஆனால் இதுவரை அந்த அறிக்கை அஸ்ஸôம் மாநில அரசு மற்றும் மைய அரசினால் இன்று வரை மிகப்பெரும் ராஜரகசியமாகப் போஷிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடந்த பதினெட்டு ஆண்டுகளாக அரசின் தூசு படிந்து கிடக்கும் எத்தனையோ கோப்புக்களின் குவியலில் இந்த அறிக்கையும் தூங்கிக்கொண்டு இருக்கலாம் என்கிறார்கள்.

ஆனால் நெல்லி கொடுமைகள் இன்றும் அசாம் மாநிலத்தின் சிறுபான்மையினரால் மிகவேதனையுடன் நினைவு கூரப்படுகிறது. (சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு பழைய ஆவணப்படத்தில் கூட அந்தக் கலவரத்தில் காயப்பட்டு உயிர்பிழைத்த ஒருவர் கண்களில் பீதிபொங்க அந்த சம்பவத்தை விவரித்து வந்தது முதுகுத் தண்டில் குளிரெடுக்க வைத்தது).

அந்த நெல்லி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்போது கிடைத்த ஈட்டுத்தொகை வெறும் ஐந்தாயிரம் ரூபாய்கள். ஆனால் அந்தக் கலவரத்தை நிகழ்த்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அஸ்ஸôம் கணசங்ராம் பரிஷத் 1985ல் நடைபெற்ற தேர்தலில் வென்று பிரஃபுல்ல குமார் மஹந்தாவின் தலைமையில் ஆட்சியமைத்தது. இந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்டதாக (!) தன் கட்சியைச் சேர்ந்த பலருக்கு பெருத்த ஈட்டுத்தொகையை ஏற்பாடு செய்ததாக அஸ்ஸôமின் பத்திரிகைகள் மஹந்தா மீது குற்றச்சாட்டுக்களை வைத்தன.

மஹந்தா தொடர்பான இன்னொரு சர்ச்சை சமீபத்தில் அசாம் மாநில அரசியலை வெகு பரபரப்பாக்கி இருக்கிறது.

பல ஆண்டுகளாக அந்த மாநிலத்தில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட கே.என்.சைக்கியா கமிஷன் அறிக்கை தற்போது மாநிலத்தின் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கமிஷனின் பின்னணி பற்றிச்சொல்லியாக வேண்டும்.

1996ல் அஸ்ஸôம் கணசங்ராம் பரிஷத் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி ஆட்சி ஏற்பட்டது. இந்தக் கூட்டணி அமைத்த அமைச்சரவையில் மஹந்தா உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது இந்திய ராணுவத்தின் தலைமையில் யூனிஃபைடு கமாண்ட் ஸ்ட்ரக்சர் என்னும் படையை மஹந்தாவின் கீழ் இருந்த மாநில உள்துறை நிர்வாகம் அமைத்தது. இந்தப் படை அப்போது அஸ்ஸôம் அரசுக்கு மிகப்பெரும் தலைவலியாக இருந்த உல்ஃபா தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமைக்கப்பட்ட படை. இந்தப் படை, குப்த்ஹொத்யா (ரகசியக் கொலை) என்ற பெயரில் விசாரணை, கைதுகள் எதுவுமின்றி உல்ஃபா போராளிகளை பரலோகத்துக்கு அனுப்பிவைத்த பரமகைங்கர்யத்தை செய்தன என்று குற்றம் சாட்டப்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்ட உல்ஃபா போரளிகள் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் இந்த விஷயத்தைப் படுகெட்டியாகப் பிடித்துக்கொண்டு அப்போதைய அரசுக்கு எதிராகப் போராட்டங்களைத் துவக்கின. மே, 2001ல் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த ரகசியப்படுகொலைகளை விசாரிக்க ஜஸ்டிஸ் மீரா சர்மா என்னும் நீதியரசர் தலைமையில் ஒரு கமிஷனை அமைத்தது.
நவம்பர் 2002ல் ஜஸ்டிஸ் மீரா சர்மா, அப்போது முதல்வராக இருந்த தருண் கோகோய் தலைமையில் இருந்த அரசு போதிய ஒத்துழைப்பு தரவில்லை என்று குற்றம் சாட்டி விசாரணையில் இருந்து விலகினார்.

ஜஸ்டிஸ் ஜே.என்.சர்மாவின் தலைமையில் மீண்டும் விசாரணைக் கமிஷன் தொடர்ந்தது. ஒரு பதினொரு வழக்குகளைக் கணக்கில் கொண்டு விசாரணையைத் தொடர்ந்தார் சர்மா. ஆகஸ்டு 2005ல் அவர் சமர்ப்பித்த விசாரணை அறிக்கையில் மஹந்தாவின் மீது எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படவில்லை என்று தெரிவித்தார் சர்மா. கோகோய் இந்த விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்தார். சர்மா மேற்கொண்ட விசாரணையில் பல குளறுபடிகள் இருந்தன என்று அந்த அறிக்கையைத் தூக்கிக் குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு மீண்டும் இன்னொரு விசாரணைக் கமிஷனை அமைத்தார். செப்படம்பர் 2005ல் அமைக்கப்பட்ட இந்த விசாரணைக் கமிஷன் இப்போது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் ஜஸ்டிஸ் கே.என்.சைக்கியா தலைமையில் அமைக்கப்பட்டு சுமார் 35 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

தற்போது சமர்ப்பிக்கப்பட்டு இருக்கும் இந்த கே.என்.சைக்கியா விசாரணைக் கமிஷன் அறிக்கையின் படி அப்போதைய உள்துறை அமைச்சர் மஹந்தா அந்த ரகசியப் படுகொலைகளில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார் என்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முகமூடி அணிந்த மனிதர்கள் சந்தேகப்படும் நபர்களின் இல்லங்களுக்கு நடுநிசியில் சென்று கதவைத்தட்டுவார்களாம். கதவைத் திறந்ததுமே யார் என்ன என்று கேட்காமல் அவர்களைக் குடும்பத்தோடு வெளியே தரதரவென்று இழுத்து வந்து நடுத்தெருவில் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள். அல்லது குடும்பத்தோடு சுட்டுக்கொன்று பிணங்களை கண்காணாத இடங்களில் வீசி எறிந்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளது இந்த அறிக்கை. உல்ஃபா இயக்கத்தின் ஆள்காட்டிகளின் துணையுடன் மஹந்தாவின் ஆணையின் பேரில் போலீஸ்துறை இந்தப் படுகொலைகளில் ஈடுபட்டன என்றும் நேரடியாகக் குற்றம் சாட்டுகிறது சைக்கியா அறிக்கை.


தற்போது கௌஹாத்தி உயர்நீதிமன்றம், சைக்கியா அறிக்கையுடன் முன்னர் கோகோய் அரசினால் நிராகரிக்கப்பட்ட, மஹந்தாவுக்கு ஆதரவாக சமர்ப்பிக்கப்பட்ட ஜஸ்டிஸ் ஜே.என்.சர்மா கமிஷன் அறிக்கையினையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.
மாநிலத்தில் பஞ்சாயத்துத் தேர்தல்கள் மும்முரமாக இருக்கும் நேரத்தில் இப்படிப்பட்ட ஒரு அறிக்கையை சட்டசபையில் வெளியிட்டிருப்பது காங்கிரஸ் கட்சியின் உள்நோக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறது என்று கர்ஜிக்கிறார் மஹந்தா. இந்த அறிக்கையின் குற்றச் சாட்டுக்களை மீறி காங்கிரஸ் கட்சியை பஞ்சாயத்துத் தேர்தலில் மண்கவ்விட வைப்பேன் என்று சூளுரைக்கிறார்.

காங்கிரஸ் கட்சி இந்த அறிக்கையை மிகப்பெரும் ஆயுதமாக மஹந்தாவுக்கு எதிராகக் கையில் எடுத்திருக்கிறது.

அசாம் மாநிலத்தில் மாணவர் தலைவனாக ஒரு இயக்கத்தைத் துவக்கி அந்த இயக்கத்தை ஆட்சி பீடத்தைக் கைப்பற்றும் அளவுக்குக் கொண்டு சென்ற மஹந்தாவுக்கான எதிராக அவருடைய கட்சியிலேயே ஒரு சமயம் மிகப்பெரும் எதிர்ப்புக்கள் வலுத்தன. ஒரு பெண்ணுடன் அவருக்கிருந்த தொடர்பைக் காரணமாகக் காட்டி அவரைக் கட்சியில் எந்தப் பதவியை வகிப்பதில் இருந்தும் விலக்கி வைத்தார் அவருடைய கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர் கோஸ்வாமி. இவை போன்ற உள்ளடி அரசியல்களை எதிர்கொண்டு அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அரசிலையும் கவனித்து வந்தார் மஹந்தா.

இப்போது இந்தக் கமிஷன் அறிக்கை மஹந்தாவுக்கு மாநிலத்தில் இன்னும் ஒரு பெரிய நெருக்கடியை முன்வைத்திருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

எது எப்படியோ, குற்றம் சாட்டப்பட்டவர்களும் குற்றம் சாட்டும் காங்கிரஸ் கட்சியும் அரசியல் விளையாட்டுக்களை மாநிலத்தில் ஒருவிதமான குதூகலமான மனநிலையில் விளையாடிக்கொண்டு இருக்கின்றன.
இந்த விளையாட்டில் மைய அரசும் தென்கிழக்கு மாநிலங்களில் அமைதியை நிலைநாட்டுகிறோம் என்று சொல்லி பல கோடிக்கணக்கில் செலவழித்து உட்டாலங்கடி விளையாட்டைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நெல்லியில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் அவர்களை இழந்து வாடிய குடும்பங்களும் இந்த குப்த்ஹொத்யாவில் நடுத்தெருவில் இழுத்துக்கொல்லப்பட்ட போராளிகள் மற்றும் போராளிகள் எனச் சித்தரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னும் நீதிக்காகவும் ஈட்டுக்காகவும் ஒரு சாதாரண மனிதன் வாழவேண்டிய மிகச்சாதாரணமான வாழ்வுக்கும் ஏங்கித்தன் நாட்களைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள்.