Thursday, October 15, 2009

ஒரு அறிவிப்பு



அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

கடந்த ஓரிரு மாதங்களாக இந்தப் பக்கத்தில் தொடர்ச்சியாக எதையும் நான் எழுதவில்லை.

(அய்யோ... எத்தனை பிரகாசம் மற்றும் மகிழ்ச்சி உங்கள் முகங்களில்!)

இதற்கான முக்கியமான காரணம் ஒன்று இருந்தது.

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தலைநகரில் ஏழு தமிழ்ப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அந்தப் பள்ளிகளின் மேலாண்மை மற்றும் செயல்பாடுகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை எற்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் ஒரு அறிவிப்பினை வடக்கு வாசல் இதழிலும் இணையதளத்திலும் வெளியிட்டு இருந்தோம்.

இதற்கான முக்கியமான காரணம் - பொது இடங்களுக்கு ஏதாவது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போதெல்லாம் யாராவது இந்தப் பள்ளிகளின் நிலை பற்றிய தன் கவலைகளையும் வருத்தங்களையும் ஆதங்கங்களையும் சொல்லிப் புலம்புவார்கள்.

சில தனிமனிதர்களின் சுயநலக் கூடாரம் போல இந்தப் பள்ளிகள் இயங்கத் துவங்கிவிட்டன என்று முறையிட்டனர் பலர்.

இந்தப் பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் ஏதோ ஒருவகையில் ஒரு சோகக் கதையை சுமந்து கொண்டிருப்பதாகத் தலைநகரில் பரவலாகப் பேசிக் கொண்டார்கள்.

பலவகைகளில் நேர்கொண்ட சிறுமைகள் தாங்காது விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டு இப்பள்ளிகள் இருக்கும் திசை நோக்கிக் கும்பிடு போட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடிப் போன ஆசிரியர்களின் கதைகள் தலைநகரில் உலவி வருகின்றன.

அதே போல பணியில் இருந்தும் பலவகைகளில் பழிவாங்கப்பட்டு சிறுமைகளைத் தாங்கி பணிபுரிந்து வரும் பல ஆசிரியர்களின் சோகக் கதைகளும் இங்கு உண்டு.தங்கள் பிள்ளைகளை நல்ல வசதியான கான்வெண்ட் பள்ளிகளில் சேர்த்து விட்டு இந்தத் தமிழ்ப் பள்ளிகளின் வழியாக தங்களின் அரசியல் சுயலாபங்களைக் கணக்கிட்டு காய் நகர்த்திக் கொண்டு வரும் செயல்வீரர்கள் பற்றிய விமர்சனமும் தலைநகரில் பரவலாக உள்ளன.

ஆனால் இவை எல்லாமே நடப்பு யதார்த்தத்தின் அடிப்படையில் சீற்றம் ஏதும் கொள்ளாது சிறு முணுமுணுப்புகளாக மட்டுமே தலைநகர் தமிழர்களிடையே உலவி வந்தன. இந்தப் பிரச்னையை ஒரு இதழியல் அறத்தின் வெளிப்பாடாக எடுத்துக் கொண்டு வடக்கு வாசல் இதழிலும் வடக்கு வாசல் இணையதளத்திலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டோம். தமிழ்ப் பள்ளிகளின் மேலாண்மை குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் கருத்துக்களைப் பதிவு செய்ய ஒரு வாய்ப்பு அளித்தோம்.

யாருக்காவது தங்களுடைய பெயர்களை ரகசியமாக வைத்துக் கொள்ள விருப்பம் இருந்தால் அதையும் அனுமதித்தோம். பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படையில் அவர்களுடைய பெயர்கள் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தோம்.

ஆனால் எதிர்வினைகள் அனுப்பிய பலரும் தங்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்களுடன் தங்களுடைய கருத்துக்களை எங்களுக்கு அனுப்பினார்கள்.

ஒரு சிலர் அனுப்பி விட்டு முதலில் தங்கள் பெயர் வெளியிட வேண்டாம் என்றார்கள். நாங்கள் காத்திருந்தோம். ஒரிரு நாட்களுக்குப் பிறகு தங்கள் கடிதத்தை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கு மதிப்பளித்து நாங்கள் அவர்கள் கடிதங்களை வெளியிடவில்லை.

ஒரு சிலர் மிகவும் தைரியமாக கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். அவற்றில் பல குற்றச்சாட்டுக்களை மிகவும் தைரியமாக அடுக்கியிருக்கிறார்கள். மிகவும் உணர்ச்சி வசப்பட்டு நிறைய எழுதியிருக்கிறார்கள். வெளியிட்டு இருந்தால் பெரிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கும். ஆனால் இதழியல் அறத்தின் அடிப்படையில் கடிதம் எழுதியவர்களின் எதிர்கால நலனைக் கருதி அந்தக் கடிதங்களை நாங்கள் வெளியிடவில்லை.

தற்போது தமிழ்ப் பள்ளிகளின் செயற்குழுவின் பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்து விட்டது. தேர்தல் நடத்தச் சொல்லி நீதிமன்றம் அறிவுறுத்தியதாக செய்தி கிட்டியிருக்கிறது. தேர்தலுக்குத் தயாராகி வருகின்றது பள்ளி நிர்வாகம் என்று கேள்விப்பட்டோம்.

இந்நிலையில் தேர்தல் முடிவடையும் வரை தமிழ்ப் பள்ளிகளின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் பற்றி வடக்கு வாசல் இதழிலோ இணைய தளத்திலோ வெளியிடுவது சரியான காரியமாக இருக்காது என்று நினைக்கிறேன்.

பள்ளியின் தற்போதையை நிர்வாகக் குழு பற்றிய என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களும் எதிர்வரும் தேர்தலில் என்னுடைய ஆதரவு யாருக்கு என்பதையும் என்னுடைய தனிப்பட்ட சுதந்திரமாக வைத்துக் கொள்கிறேன்.

பெற்றோர்களே ஒரு சரியான முடிவெடுத்து நேர்மையான மற்றும் செயல்திறனுள்ள ஒரு நிர்வாகத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அரசியல் மற்றும் ஜாதி ரீதியான காரணங்கள் தேர்தலை முடிவு செய்யும் களங்களாக அமையால் பெற்றேர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதற்கான ஜனநாயக ரீதியான செயல்முறைகள் மற்றும் தர்மத்தின் அடிப்படையிலான செயல்பாடுகளை தற்போதைய நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.பள்ளிக்கான தேர்தல் பணிகள் துவங்கி விட்டதாகத் தெரிகிறது.

எனவே தலைநகரில் தமிழ்ப் பள்ளிகள் பற்றிய பதிவுகளை இந்தப் பக்கத்தில் வெளியிடுவதை இத்துடன் தற்போதைக்கு நிறுத்தி வைக்கிறோம்.

பல நண்பர்கள் தனிப்பட்ட வகையில் இந்தப் பக்கங்களில் புதிதாக எதையும் எழுதாதது குறித்து தங்களுடைய ஆதங்கத்தை தொலைபேசியிலும் மின்னஞ்சல்கள் வழியாகவும் பகிர்ந்து கொண்டார்கள்.
அவர்களுக்கு என்னுடைய நன்றி.

பல நூல் மதிப்புரைகளும் திரைப்பட விமர்சனங்களும் எழுத வேண்டி இருக்கிறது.

இன்னும் ஓரிரு நாட்களில் வழக்கமான ராகவன் தம்பி பக்கங்கள் பழையபடி தொடரும்.விதி யாரை விட்டது?

ராகவன் தம்பி

உங்கள் எதிர்வினைகளை raghavanthambi@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Tuesday, July 28, 2009

தலைநகரில் தமிழ்ப் பள்ளிகள் - ஒரு கலந்துரையாடல்

அறிவிப்பு

வடக்கு வாசல் இசைவிழா குறித்த கட்டுரை
http://vadakkuvaasal.com/thalaivaasal.php

என்னும் இணைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

http://www.vadakkuvaasal.com/
இணைப்பில் வடக்கு வாசல் ஜூலை மாத இதழ் வாசிக்கக் கிடைக்கும்.

ராகவன் தம்பி பக்கங்கள்...

தலைநகரில் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தில்லித் தமிழ்க் கல்விக் கழகம் ஏழு தமிழ்ப் பள்ளிகளை நடத்தி வருகின்றது. தலைநகர் தமிழர்களின் பெருமையைப் பல்லாண்டுகளாகப் பறைசாற்றி வருபவை இப்பள்ளிகள். இப்பள்ளிகள் பல மேதைளையும் கலைஞர்களையும் இந்த சமூகத்துக்கு அளித்துள்ளன.

இந்தத் தமிழ்ப் பள்ளிகளின் மேலாண்மை, செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்தல் குறித்த உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வரவேற்கிறோம். உங்கள் பாராட்டுக்கள், ஆலோசனைகள், முறையீடுகள் போன்றவற்றை எங்களுக்கு கடிதம், தொலைநகல், மின்னஞ்சல் வழியாக அனுப்பலாம்.

சரியான பெயர், முழுமையான முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்ட கடிதங்கள் மற்றும் கட்டுரைகள் மட்டுமே வடக்கு வாசல் இதழிலும் இணையத்திலும் வெளியிடப்படும்.

நம் குழந்தைகளின் கல்வி மற்றும் பள்ளிகளின் மேம்பாட்டில் அக்கறை கொண்ட அனைவரும் இந்த விவாதத்திலும் ஆலோசனையிலும் கலந்து கொள்ளலாம். தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தில் பயின்ற மாணவ மாணவியர் இப்போது உலகின் பல இடங்களிலும் மிக நல்ல பதவிகளில் இருக்கிறார்கள். அவர்களும் இந்த விவாதம் மற்றும் ஆலோசனையில் இணையம் வழியாகவோ நேரிடையாகவோ கலந்து கொள்ளலாம்.

வடக்கு வாசல் இதழ் மற்றும் வடக்கு வாசல் இணையதளத்தில் கடிதங்கள், கட்டுரைகள் மற்றும் ஆலோசனைகளை வெளியிடுவோம். கடிதம் அல்லது கட்டுரை எழுதியவர்கள் விருப்பப்பட்டால் பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படையில் அவர்களுடைய பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளில் வடக்கு வாசல் இதழின் குறுக்கீடு எதுவும் இருக்காது.

உங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கிறோம்.

ஆசிரியர்
வடக்கு வாசல்
5A/11032, Second பலூர்
Gali No.9, Sat நகர்
Karol Bagh, New Delhi-110 005.
தொலைபேசி/தொலைநகல் - 011/ 25815476


எதிர்வினை
Dr. ரகோத்தமன் யனமல்லி (Ph.D)
Iowa, உச
மின்னஞ்சல் -
ragothaman@gmail.கம

தலைநகரில் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தில்லித் தமிழ்க் கல்விக் கழகம் ஏழு தமிழ்ப் பள்ளிகளை நடத்தி வருகின்றது என்பது ஒரு பெருமைக்குரிய விஷயம். நான் "DTEA" லோதி எஸ்டேட் பள்ளியில் இரண்டு ஆண்டுகள் படித்தேன். படித்தது என்னவோ இரண்டு ஆண்டுகள் தான், என்றாலும் இன்றும் மறக்கமுடியாத நாட்கள். தமிழ் கலச்சாரத்தை மற்றும் மொழியை பேணி காப்பதே தன் முதற்கண் கடமை என்று தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் நோக்கம் என்னவோ சரி தான், ஆனால் அந்த நோக்கம் சற்றே பாதம் தவறி இருகிறது . 1987ல் பள்ளியில் இடம் கிடைப்பது மிகு கடினம், எனது தந்தை இருநூறு ருபாய் நன்கொடை கொடுத்து லோதி எஸ்டேட் பள்ளியில், என்னையும் , எனது அண்ணனையும் சேர்த்தார். பணம் பெரிதல்ல, படிப்பு பெரிது என்ற நோக்கம் என் தந்தைக்கு. எல்லா தில்லித் தமிழ்க் கல்விக் கழக பள்ளிகளில் படிப்பின் தரம் மிக உயர்ந்ததாக இருந்தது. பிற மாநில பெற்றோர்கள் கூட தங்கள் பிள்ளைகளுக்கு இந்த பள்ளியில் இடம் கிடைக்குமா என்று இருந்த காலம் இப்பொழுது உல்டா ஆகி விட்டது. தில்லித் தமிழ்க் கல்விக் கழகம் பள்ளி மாணவன்/மாணவி என்றாலே கிழ்தரம் ஆகி விட்டது, இன்றைய நிலைமை. இதற்கு யார் காரணம் என்று பார்த்தால் பதில் கிடைக்காது. பத்தாம் வகுப்பு மாணவன்/மாணவி DPS போன்ற பள்ளியில் seat கிடைக்கவில்லை என்றால் தில்லித் தமிழ்க் கல்விக் கழகம் நடத்தும் பள்ளிகளில் seat வாங்க அவமானமாக கருதுகிறார்கள். நான் எல்லா மாணவர்களை தவறாக சொல்லவில்லை. பெற்றோரும் தனது பிள்ளை நல்ல மார்க் வாங்கினால் தான் உண்டு என்று இருக்கும் பட்சதில், தமிழ் கலாசாரம் மற்றும் மொழியை பற்றி யார் கவலைபடப் போகிறார்கள்? இது ஒரு இரவில் மாறவில்லை, மெல்ல மெல்ல standard குறைய பல வருடங்களுக்கு பின் இந்த நிலைமையை பார்க்கிறோம். ஆனாலும் இது ஒன்றும் மோசம் இல்லை. இது நிச்சயமாக மாற்றலாம். தமிழ் பேசும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தில்லித் தமிழ்க் கல்விக் கழகம் பள்ளிகளில் சேர்க்க தயங்கக்கூடாது. என் தந்தை ஒன்று கூறுவார், படிக்குற பையன் எங்கு வேன்டுமானாலும் படிப்பான். இது இக்காலத்து மாணவர்களுக்குப் புரிய வேண்டும். பள்ளியின் பெயர் அவசியம் இல்லை, படிப்பு தான் அவசியம். இதற்கு பெற்றோரின் பங்கும் தேவை. நமது கலாச்சாரத்தை பேணிக் காக்கப் போவது வரும் தலைமுறை தான். ஒரு நல்ல counselling session வடக்கு வாசல் தலைமையில் மாணவர் மற்றும் பெற்றோர்களும் சேர்ந்து நடத்தினால் என்ன?
Dr. ரகோத்தமன் யனமல்லி (Ph.D) 1032, Crop Genome Informatics Laboratory,Department of Genetics, Development and Cell Biology,Iowa State University,Ames,Iowa 50011-3260USA.