Saturday, December 14, 2013

இதுவும் என் விருப்பே...

பாலியல் தேர்வில் நான் Straight என்பதை இப்போது தயக்கத்துடன் கூறக்கூடிய காலகட்டத்தில் நிற்கிறோமோ என்கிற சந்தேகம் சற்று எழத்துவங்கியிருக்கிறது. இதுவரை ஓரினச்சேர்க்கை குறித்த அனுபவம் ஏதுமில்லை. 55 வயதுக்குப் பிறகு இதற்கு அவசியமும் இருக்காது என்று நினைக்கிறேன். நினைவு தெரிந்து என் சிறுவயதில் - சுமார் 10 அல்லது 12 வயது இருக்கும். வீட்டுக்கு அருகில் ஒருவன் சர்க்கஸ் நோட்டீஸ் கொடுப்பதாக ஒரு பாழடைந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று என்னுடைய டவுசரைக் கழற்ற முயற்சித்த போது அவனுடைய கால் மீது பெரிய கல் ஒன்றைத் தூக்கிப் போட்டு வீட்டுக்குத் தலைதெறிக்க ஓடிய ஞாபகம் எப்போதாவது இதுகுறித்து பேசும்போது வரும். மற்றபடி ஓரினச்சேர்க்கை என்பது என்னுடைய தேர்வும் இல்லை. விருப்பமும் இல்லை. பெண்களுடனான கலவியில்தான் எனக்கு எப்போதும் பெருவிருப்பம். இதுவும் என்னுடைய சுதந்திரம்தான் என்று உறுதியாக நம்புகிறேன்.

ஓரினச் சேர்க்கை அல்லது வேறெதுவும் தனிமனித விருப்பம் அல்லது தேர்வு சார்ந்தது என்று நினைக்கிறேன். இது முற்றிலும் அந்தரங்கம் சார்ந்தது என்றும் நினைக்கிறேன். போனவாரம் உச்சநீதிமன்றம் பிரிவு 377 குறித்த தீர்ப்பை வழங்கியதும் இத்தனை நாட்கள் அடங்கியிருந்த பேச்சு குபீரென்று மீண்டும் கிளம்பியது. சில தொலைக்காட்சிகளில் (நான் இந்தியை சொல்றேனப்பா) ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் சிறுவர் சிறுமிகளுடன் அவர்களுடைய பெற்றோர்களும் கூட உட்கார்ந்து நாளையில் இருந்து என் பையன் என்ன செய்வான் என்பது போன்ற மிக முக்கியமான கவலையில் ஆழ்ந்ததும் சிங்வி சாஹிப்புக்கு கொடுரமான சாபங்கள் கொடுத்ததும் பார்ப்பதற்கு ஒரு மாதிரி இருந்தது.

இதுபற்றி சாங்கோபாங்கமாக ஏதாவது எழுத முயற்சிக்கலாமா என்றிருந்தேன். ஆனால் நான் எழுதி என்ன ஆகப்போகிறது? சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் போன்ற தேசபக்தர்கள் இதுகுறித்து தங்களின் தெளிவான கருத்தைக் கூறியிருக்கும்போது என்னைப் போன்றவர்கள் எல்லாம் சொல்லி என்ன ஆகப்போகிறது என்று எனக்கு நானே ஆறுதல் கூறிக் கொண்டு அமைதியைக் கடைப்பிடிக்க முயற்சிக்கிறேன்.

Tuesday, November 26, 2013

துரியோதனர்களும் துச்சாதனர்களும் சகுனிகளும்...

சில நிறுவனங்களில் அல்லது அமைப்புக்களில் தொடர்ந்து தவறு செய்பவர்கள் அல்லது கேப்மாரித்தனங்கள் செய்பவர்களுடன் சிலர் லஜ்ஜையில்லாமல் ஒட்டிக்கொண்டு திரிவார்கள். அந்த அமைப்புக்களில் பொறுப்பில் இருப்பவர்கள் அல்லது அதிகார மையங்களில் இருப்பவர்கள் என்ன தவறு செய்தாலும் அவர்களைக் கட்டிக் கொண்டு திரிவார்கள். மாலைகள் மாற்றிக் கொள்வார்கள். விருதுகளையும் பட்டங்களையும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டிருப்பார்கள். எந்தக் கேள்வியும் கேட்காமல் ஊழல் செய்பவர்களின் கால்களைக் கழுவி டு அந்தத் தண்ணீரைக் குடிப்பார்கள். தலையில் தெளித்துக் கொள்வார்கள். 

ஏதாவது ஒரு தருணத்தில் யாராவது அப்படி கேப்மாரித்தனங்கள் செய்பவர்களுடன் கோஷ்டி சேர்ந்து இருப்பவர்களை ஏதாவது கேள்விகள் கேட்க நேர்ந்தால் அந்த சொம்பு தூக்கிகள் எப்போதும் தயாராக வைத்திருக்கும் பதில் - “அந்த ஆள் அப்போது, அந்த சந்தர்ப்பத்தில் எனக்கு இந்த உதவி செய்தான். அவன் இல்லை என்றால் நான் நான் ஒன்றுமே இல்லை, அதனால் மட்டுமே அவன் செய்யும் எல்லா அக்கிரமங்களையும் வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டிருக்கிறேன். வேறு விதியில்லாமல் கூட இருந்து தொலைக்கிறேன்” என்று சமாதானம் சொல்வார்கள் அல்லது சொல்லிக் கொள்வார்கள். 

ஆனால் பொதுவாக உண்மையான காரணம் நிச்சயமாக இவர்கள் கூறிக்கொள்ளும் நன்றி உணர்ச்சி கிடையாது. 

இவர்கள் நிச்சயமாக கர்ணர்களாக இருக்க மாட்டார்கள். எந்தக் காலத்திலும் இவர்கள் சொல்லிக் கொள்வதைப் போல கர்ணனாக இருக்கவும் முடியாது.

தூண்டித் துருவித் தடவிப் பார்த்தால் ஒன்றை சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம். அப்படிக் கேப்மாரித்தனம் செய்பவர்களுடன் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள் அந்த நேரத்தில் கிடைக்கும் சில அல்ப லாபங்களுக்காகவும், அவர்களைப் பகைத்துக் கொள்ள இவர்கள் குலைநடுங்குவதால் மட்டுமே அப்படிக் கூட ஒட்டிக் கொண்டிருப்பார்கள். சில சில்லறை லாபங்களுக்காக மட்டுமே நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அவர்களுடன் அலைவார்கள். மற்றபடி இவர்கள் சொல்லும் அல்லது சொல்லிக் கொள்ளும் சமாதானம் வெறும் போலி வேடம்தான்.

துரியோதனர்களுடன் துச்சாதனர்களும் சகுனிகளும்தான் சேர்ந்து இருக்க முடியும். வேறு வழியில்லை.