Thursday, November 13, 2008

குரு நானக் தேவ் ஜி - 15ம் நூற்றாண்டின் புரட்சி சிந்தனையாளர்



இன்று (13 நவம்பர் 2008) குருநானக் தேவ் ஜி ஜெயந்தி சீக்கிய இனத்தவரால் உலகெங்கும் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை சீக்கியர்கள் தீபாவளியாகக் கொண்டாடுகிறர்கள். தலைநகரின் பல பகுதிகளில் ஜன நெரிசல் மிகுந்த ஊர்வலங்கள் ஊரின் பல பகுதிகளை ஸ்தம்பிக்க வைத்துவிடும். சீக்கியர்கள் நகரெங்கும் பழங்கள், ரொட்டி, சப்பாத்தி, மற்றும் பலவகை உணவு வகைகளை அங்கங்கே ஏழைகளுக்கும் மற்றவர்களுக்கும்விநியோகிப்பார்கள். அங்கங்கே நெரிசலாக மக்கள் நின்று இவற்றை வாங்கித் தின்று நின்ற இடத்திலேயே பழத்தோல்கள், இலைகள், தொன்னைகள் போன்றவற்றை அங்கங்கேயே வீசி எறிந்து குறைந்தது நான்கு நாட்களுக்கு தில்லி நகர வீதிகளை நாறடிப்பார்கள். எல்லோருக்கும் இலவசமாக உணவு வழங்கும் தர்மப் பிரபுக்கள் தங்கள் தயாள சிந்தினையை இன்னும் சற்று விரிவுபடுத்தி, அந்தந்த இடங்களை சுத்தம் செய்வதற்கு மிகச்சிறிய தொகையை செலவு செய்தாலே நகரம் சுத்தமாகிவிடும். சரி. அது வேறு விஷயம். குருநானக் தேவ் ஜியை சற்றுப் பார்ப்போம்.


15ம் நூற்றாண்டிலேயே இந்து முஸ்லிம் சகோதரத்துவத்தை வலியுறுத்திய மகான் குரு நானக் தேவ் ஜி. கி.பி.1469ம் ஆண்டில் லாகூர் அருகே உள்ள ஷேக்புரா கிராமத்தில் பிறந்த குரு நானக் தேவ் ஜியின் தந்தையார் கிராம வருவாய்த்துறையில் ஒரு சிறிய பதவி வகித்தவர். பஞ்சாபிய மொழியான குர்முகியைத் தவிர பாரசீகம் மற்றும் அராபிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் குருநானக் தேவ் ஜி.


சுல்தான்பூர் அரசனான தௌலத் கான் லோதி என்னும் குறுநில மன்னனின் அரண்மனையில் பண்டகசாலை மேலாளராக சிறிது காலம் பணிபுரிந்த குரு தேவ் ஜி, அங்கு மர்தானா என்று அழைக்கப்பட்ட இசுலாமியத் துறவியின் தொடர்பு ஏற்பட்டு ஆன்மீக சிந்தனைகளில் ஈடுபடலானார்.


1496ம் ஆண்டினை குரு நானக் தேவ் ஜி ஞானம் பெற்ற ஆண்டாகக் குறிப்பிடுவார்கள். அவருடைய முதல் பிரகடனமே - ஹிந்து என்பவனோ அல்லது முஸல்மான் என்பவனோ யாரும் கிடையாது என்பதே. அனைவரும் ஆண்டவனின் பிள்ளைகள் என்பதே அவருடைய உபதேச மந்திரமாக அமைந்தது. தன்னுடைய ஞானகுரு மர்தானாவுடன் பல புனிதத் தலங்களுக்குப் பயணப்படத் துவங்கினார் குருதேவ் ஜி. சனாதனம் கற்பித்த தீண்டாமையை எதிர்த்து மிகப்பெரிய கலகத்தைத் துவங்கியவர் குருநானக் தேவ் ஜி. பதினைந்தாம் நூற்றாண்டில் பஞ்சாபில் அவருடைய சிந்தனைகளும் செயல்பாடுகளும் அன்றைய காலகட்டத்தில் மிகப் பெரும் புரட்சியாகும். மதங்கள் வலியுறுத்திய மூட நம்பிக்கைகளை முழுமூச்சுடன் எதிர்த்து செயல்பட்டவர் குருதேவ் ஜி. பதினைந்தாம் நூற்றாண்டில் சமத்துவத்தை வலியுறுத்தியவர் குருநானக் தேவ் ஜி.


தன்னுடைய பயணங்களின் போது அவருக்கு தானமாகக் கிடைத்த பரிசுப் பொருட்கள் மற்றும் உணவு தானியங்களை சேகரித்து ஏழை எளியவர்களுக்கான ஒரு பொது சமையல் கூடத்தை உருவாக்கி எவ்வித வேறுபாடுகளும் இல்லாது அனைவரும் இணைந்து ஓரிடத்தில் உணவு உண்ணும் அற்புதமான முறையை முதன்முதலில் உருவாக்கியவர் குருநானக் தேவ் ஜி. அவருக்கு 12 வயதாக இருந்தபோது குரு தேவ் ஜியின் தகப்பனார் அவரிடம் ஒரு சிறு தொகையை அளித்து ஏதேனும் வியாபாரம் செய்து காண்பிக்கச் சொன்னாராம். அந்தத் தொகைக்கு உணவுப்பண்டங்களை விலைக்கு வாங்கி அந்த ஊரின் ஏழை எளியவர்களுக்கு வழங்கி விட்டு அதுவே சிறந்த வணிகம் என்று தந்தையிடம் கூறினாராம் குரு தேவ் ஜி. அவர் முதலில் அப்படி உணவு வழங்கிய ஸ்தலத்தை öஸச்சா ùஸளதாö (உண்மை வணிகம்) என்று அழைக்கப்படுகிறது. அவர் உருவாக்கிய இந்தப் பகிர்ந்துண்ணும் முறையே இன்று உலகில் உள்ள அனைத்து சீக்கிய வழிபாட்டுத் தலங்களிலும் லங்கர் என்கிற பெயரில் அற்புதத் தொண்டாகத் தொடர்ந்து வருகிறது.


சீக்கிய மதத்தின் ஸ்தாபகர் என்று வணங்கப்படுபவர் குருநானக் தேவ் ஜி. உலகத்திலேயே மிகச் சமீபத்தில் தோன்றிய மிகவும் இளைய மதம் சீக்கிய மதம். பல நல்ல விஷயங்களை மனித நேயம் தோய்ந்த விஷயங்களை உள்ளடக்கியது சீக்கிய மதக் கொள்கைகள். அனைத்து மாந்தர்களிடையிலும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் மதம். இன்று பல கிளைகளாக பல நம்பிக்கைகள் கொண்ட பல்வேறு ஸ்தாபனங்களாக மடங்களாகப் பல்கிப்போனது சீக்கிய மதம். எண்பதுகளின் துவக்கத்தில் பஞ்சாப் மாநிலமே பற்றியெறிந்து கொண்டிருந்தது. அதன் உச்சபட்சமாக இந்திரா காந்தி படுகொலை நிகழ்ந்தது. அந்தப் படுகொலையை அடுத்து சீக்கிய இனத்தவர்கள் வடநாட்டில் மிகவும் கொடுமையாக ஒடுக்கப்பட்டுத் தாக்கப்பட்டனர். பல வீடுகளும் வியாபார ஸ்தலங்களும் தரைமட்டமாக்கப்பட்டபோதும் மிகக் குறைந்த நாட்களிலேயே அவை மீண்டும் தன்னம்பிக்கையுடன் எழுந்து நின்று மனிதனின் நம்பிக்கை உணர்வுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தன. பயங்கரவாதம் பஞ்சாப் மாநிலத்தின் பல இடங்களில் பலர் மனங்களில் தீராத வடுவை ஏற்படுத்தி இம்சித்தது. இவை எல்லாவற்றையும் எதிர்த்து மீறி, சீக்கிய சகோதரர்களும் சகோதரிகளும் நம்முடைய நாட்டின் வளமைக்கு வலு சேர்த்து வருகிறார்கள்.


சீக்கியர்களை நகைப்புக்கு இடமானவர்களாக சித்தரித்து பல சர்தார்ஜி ஜோக்குகள் பிரசித்தமானவை. இதில் அற்புதமான விஷயம் என்னவென்றால் இவற்றில் பல சர்தார்ஜி ஜோக்குகளை உருவாக்கியவர்கள் பல சர்தார்ஜிக்களே. ஒரு குஷ்வந்த் சிங்கை விடத் தன்னைத் தானே கேலியும் கிண்டலும் செய்து யாராலும் எழுத முடியாது. சீக்கியர்களில் உலக அளவில் பேசப்படக்கூடிய அறிவு ஜீவிகளும் சிந்தனையாளர்களும் உண்டு.



இப்போதைக்கு உடனடி உதாரணமாக நம்முடைய மன்மோகன் சிங் மற்றும் மாண்டேக் சிங் அலுவாலியா ஆகியோரை பெருமையுடன் சொல்லலாம். ஏதோ சீக்கியர்களிலேயே முட்டாள்தனங்கள் உண்டு என்பது போல பல சமயங்களில் வட இந்தியாவில் பேச்சு புழங்குவது மாபெரும் அநியாயம் என்றே தோன்றுகிறது. முட்டாள்தனம் என்பது நம்முடைய தேசிய குணம். இந்திய நாட்டின் பெரும்பான்மை குணம் அது.


உடனடி உதாரணமாக ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.
ஒரு தமிழ் அமைப்புக்குப் பலர் பலமுறை பலவிதமான கடிதங்கள் அனுப்பியும் எவ்வித பதில்களும் அனுப்பாது இறுமாப்புடன் மௌனம் சாதித்துக் கொண்டிருந்தார்கள். அந்த அமைப்பில் முக்கியமான பொறுப்பில் இருந்த ஒருவரிடம் இதுகுறித்து விவாதம் செய்தபோது, அந்த அமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில் யாருக்கும் அதாவது எந்தக் கடிதத்துக்கும் பதில் அனுப்பக்கூடாது என்று தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் விவாதித்தார். அவர் சொன்னது பொதுவாக உண்மையாக இருக்க அத்தனை வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். எந்தக் கடிதத்துக்கும் பதில் அனுப்பக் கூடாது என்று தீர்மானிக்கும் அளவுக்கு ஜனநாயகப் பண்பு இல்லாத ஒரு செயற்குழுவோ அல்லது இத்தனை முட்டாள்தனமாக விவாதித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும் அளவுக்கு அங்கே சிந்திக்காதவர்களோ இன்னும் இருக்கிறார்களா என்பதும் கேள்விக்குறி.



அடிக்கடி அடுத்தவர்களிடம் சர்தார்ஜி ஜோக் உதிர்க்கும் ஒரு நண்பரிடம் இந்தத் தமிழ் அமைப்பின் தீர்மானம் குறித்து அந்த அமைப்பின் பொறுப்பாளர் கூறியதை நான் சொன்னபோது அந்த சர்தார்ஜி ஜோக் அடிக்கும் நண்பர் சொன்ன விஷயம் -


ööஎன்னய்யா இது? உலகத்தில் இருக்கிற அத்தனை சர்தார்களும் எல்லோரும் ஒண்ணா சேர்ந்து ஒரு தமிழ் அமைப்பை ஏற்படுத்தி நிர்வாகம் பண்ணாக்கூட அவங்களோட செயற்குழு இந்த மாதிரி ஒரு புத்திசாலித்தனமான தீர்மானம் எடுக்காதேய்யா?öö


இதனால் கிடைக்கும் பாடம் -


மூடத்தனங்கள் அல்லது முட்டாள்தனமான காரியங்கள் ஒரு இனத்துக்கு மட்டுமே சொந்தமானது அல்ல.

3 comments:

  1. //மூடத்தனங்கள் அல்லது முட்டாள்தனமான காரியங்கள் ஒரு இனத்துக்கு மட்டுமே சொந்தமானது அல்ல.//

    இதுதான் எனக்கு படிப்பினை! நன்று!!

    ReplyDelete
  2. Hai KP,
    I remember to have read in some of your writings in sanimoolai that "the only countrymen who feel proud to make defaming comments about their own country is India" and you had made apt comments criticising such comments. In fct I was delighted with that saying of yours and that gor registered in my mind and from that day onwards I have also started changin myself and started talking to my friends to have a positive look about our own country and discouraging the comments that spoil the repute of the countyry. While such is the case the below mentioned words in your article abaout Guru Naznak, surprises me.
    முட்டாள்தனம் என்பது நம்முடைய தேசிய குணம். இந்திய நாட்டின் பெரும்பான்மை குணம் அது.

    MOORTHY

    ReplyDelete
  3. Dear Sathish

    Thanx for your visit and comments.

    Kindly take it with a pinch of salt. When Sardar jis are usually pin pointed for such an act, i just very causally said, it is not only somebody's sole property. Had it surprised you, i am sorry.

    My purpose was different. I tried to tell the things in a lighter way.

    K.P.

    ReplyDelete