Wednesday, April 22, 2009

கலகக் குரலாய் ஒலித்த இசைக்குயில்

இக்பால் பானோ - ஒரு அஞ்சலி
1935 - 2009


தில்லி மாநகரின் கள்ளக் குறுந்தகடுகளின் பிறப்பு மற்றும் சங்கம ஸ்தானங்களான பாலிகா பஜார், நேரு பிளேஸ் போன்ற இடங்களில் எப்போதும் பாகிஸ்தான் நாடகங்கள் மற்றும் பாகிஸ்தான் கஜல் இசைக்கலைஞர்களின் குறுந்தகடுகள் போடுபோடென்று போடும். ஒலிப்பேழைகள் மற்றும் ஒலிநாடாக்களின் காலங்களிலும் பாகிஸ்தான் கலைஞர்களின் நாடகங்கள் மற்றும் பாடல்கள் தில்லி சந்தைகளில் வெகு அமோகமாக விற்பனையாகும். தில்லியின் ஐம்பது மற்றும் அறுபது வயதுகளைத் தாண்டிய பஞ்சாபிகள் கிழவர்கள் இன்றும் என்றும் அதிகம் விரும்பிக் கேட்ட இசைக்கலைஞர்களில் முக்கிய இடத்தை வகித்தவர் நேற்று லாகூரில் காலமான கஜல் அரசி இக்பால் பானோ (இக்பால் பானு என்றும் அழைப்பார்கள்).

இசை அரசி மட்டுமல்லாது பாகிஸ்தான் நாட்டின் கலகக் கவிஞன் ஃபைஸ் முஹமது ஃபைஸ் கவிதைகளை சர்வாதிகார ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாது நாடெங்கும் கொண்டு சென்ற ஒரு கலகக் குயில் இவர்.


தெற்காசியாவின் கஜல் மற்றும் தும்ரி வடிவங்களின் மீது மையல் கொண்ட பல இசை ரசிகர்களின் மனங்களில் புயல் வீச வைத்தவர் இக்பால் பானோ என்று கூறுவார்கள்.

பாகிஸ்தான் வானொலி, திரை இசை, கஜல் மற்றும் தும்ரி மேடைகளில் 2003 வரை இசை ராஜ்ஜியத்தைப் பரிபாலனம் செய்து வந்த இக்பால் பானோ டெல்லியைச் சேர்நத அம்மணி. 1935ல் டெல்லியில் பிறந்தவர். டெல்லி அருகில் உள்ள ஹரியானாவின் ரோதக் நகரில் வளர்ந்தவர். சிறுவயது முதல் இசையில் ஆர்வம் கொண்ட பானோவை அந்தக் காலத்து டெல்லி இசுலாமியத் தகப்பன்களைப் போல அல்லாது அவருடைய இனிய குரல் வளத்தைக் கண்டு பலவகையிலும் ஊக்கப்படுத்தியவர் அவருடைய தந்தையார்.

டெல்லி கரானா எனப்படும் டெல்லி சங்கீதப் பத்ததியில் உஸ்தாத் சாந்த் கான் என்பவரிடம் தந்தையாரின் ஆசியுடன் சாஸ்திரிய சங்கீதத்தில் குருகுலம் மேற்கொண்டார் பானோ. பானோவின் திறனைக் கண்ட உஸ்தாத் சாந்த் கான் அவருக்கு சாஸ்திரிய வடிவங்கள் மட்டுமல்லாது தும்ரி, தாத்ரா போன்ற இசைவடிவங்களையும் சிறப்பாகக் கற்பித்தார். தில்லி வானொலி நிலையத்தில் இவருடைய குருநாதர் இவரை முதன்முதலாகப் பாடவைத்தார்.
1952ல் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜமீன்தார் ஒருவர் பானோவின் இசைத்திறனைக் கண்டு சொக்கிப்போனார். தன்னை மணந்து கொண்டால் பானோவின் இசை ஈடுபாட்டுக்கு எவ்வித இடையூறும் நேராது என்று அவருக்கு உறுதி அளித்தாராம் அந்த ஜமீன்தார்.

இதன் வழியாக நம் டெல்லியின் இசைச் செல்வம் ஒன்று பாகிஸ்தானுக்குக் கவர்ந்து செல்லப்பட்டது. 1980ல் இறந்த பானோவின் கணவர் அவர் தந்த உறுதியை இறக்கும்வரை காப்பாற்றினார். பாகிஸ்தானில் பலரையும் இவருக்கு அறிமுகப்படுத்தி பானோவை பாகிஸ்தானில் மிகவும் பிரபலப்படுத்தினார். 1957ல் லாகூர் ஆர்ட்ஸ் கவுன்சில் அரங்கில் துவங்கிய அவருடைய மற்றொரு பிரவேசம், பாகிஸ்தான் வானொலி, திரைப்பாடல்கள், மேடை நிகழ்ச்சிகள் எனப் புகழின் உச்சியில் அவரைக் கொண்டு சென்றது.

பானோவின் இசை நிகழ்ச்சிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவருடைய பாடல்களுக்காகவே பல பாகிஸ்தானிய திரைப்படங்கள் வசூலைக் குவித்தன. அவருடைய இசைத்தட்டுக்களும் ஒலிப்பேழைகளும் விற்பனையைக் குவித்தன. உருது மட்டுமல்லாது பாரசீக மொழியிலும் கஜல்களைப் பாடினார் பானோ. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் நாடுகளில் ஒரு பெருங்கூட்டம் அவர் மேல் பித்துப் பிடித்து அலைந்தது. இன்னும் அலைகிறது. இவருடைய பாரசீக மொழித்திறமை மற்றும் அந்த மொழியில் இவர் பாடிய கஜல் பாடல்களில் மகிழ்ந்து ஆப்கன் மன்னர் பானோவுக்கு தங்கத்தால் செய்த அழகிய வேலைப்பாடுகள் மிகுந்த பூந்தொட்டி ஒன்றைப் பரிசளித்தாராம். நம்முடைய தில்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் அவருடைய இசைத்தட்டுக்கள் விற்பனையைக் குவித்தன.

டெல்லி வானொலி நிலையத்தில் இப்போதும் எப்போதாவது இரவு நேரத்தில் கஜல் கேட்க உட்கார்ந்தீர்கள் என்றால் இக்பால் பானோவின் இனிய குரலை நீங்களும் கேட்கலாம். இன்றும் அவருக்கென்று வானொலி ரசிகர்கள் கூட்டம் இந்தியாவிலும் இருக்கிறது.

1981ல் வேலைக்குச் சேர்ந்த புதிது. இந்தி தெரியாது. கிருஷ்ணகிரி இஸ்லாமியர்கள் பேசும் உருது கொஞ்சம் பரிச்சயம். மற்றபடி எல்லா இந்தி உருது பாடல்களையும் புரியாவிட்டாலும் அந்தப் பாடகர்களின் குரலினிமைக்காகக் கேட்கும் பழக்கத்தை வலுக்கட்டாயமாக உண்டாக்கிக் கொண்டேன். இந்திரஜித் சானன் என்று ஒரு பஞ்சாபி முதியவர் என்னுடன் வேலை பார்த்தார். அவர் பல கஜல் பாடகர்களை அறிமுகப்படுத்தினார். அப்போது உள்துறை அமைச்சகம் இருந்த நார்த் பிளாக் வளாகத்தில் டிரான்ஸிஸ்டர் எடுத்து வரமுடியாது. ஆனால் அவர் எப்படியோ கடத்திக்கொண்டு வந்து எப்படியோ குடைந்து குடைந்து சில பெயர் தெரியாத வானொலி நிலையங்களைக் கேட்பார். அந்த அறைக்குள்ளே ஏமாந்தவன் போல முகத்தை வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்த என்னை அருகில் அழைத்து அவர் ரசிக்கும் பாடல்களை என்னையும் ரசிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துவார். அவர் கட்டாயப்படுத்திக் கேட்க வைத்த பல பாடகர்களில் பேகம் அக்தர், இக்பால் பானோ போன்றவர்கள் அடங்குவர். அப்போது புகழின் உச்சகட்டத்தில் இருந்தார் பானோ. பாகிஸ்தானிய திரைப்படப் பாடல்களை டெல்லியில் பலரும் விரும்பிக் கேட்பார்கள். இக்பால் பானோவின் திரைப்படப் பாடல்கள் கூட ஒருவித மரபிசை சார்ந்தும் கஜல், தும்ரி போன்ற இசைவடிவங்களில் இருக்கும். இந்த அற்புதப் பாடலுக்காக எப்படி பாகிஸ்தான் நாட்டின் அந்த நடிகனும் நடிகையும் மரத்தைச் சுற்றி ஓடமுடியும் என்று கற்பனை செய்து கொள்வேன்.
பொதுவாக கலைஞர்களை எப்போதும் ஒரு கலகக் குரல் வழிநடத்திக் கொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் பாகிஸ்தானின் கலகக் கவிஞரான ஃபைஸ் அஹமது ஃபைஸ் கவிதை வரிகளை, கஜல் வரிகளை தன்னுடைய மேடையில் அதிகமாகப் பிரபலப் படுத்தத் துவங்கினார் பானோ. பாகிஸ்தானில் ஜியாவின் சர்வாதிகாரப் போக்கினை எதிர்த்துப் பலவகைகளில் குரல் கொடுத்தவர் கவிஞர் ஃபைஸ் அஹமது ஃபைஸ். அவருடைய ஒவ்வொரு கவிதையும் சர்வாதிகாரத்தையும் எதேச்சதிகாரத்தையும் கேள்விகள் கேட்டு நிமிர்ந்து நின்றன. இந்த உண்மையான எழுச்சிக் கவிஞனைப் பலவகைகளிலும் ஒடுக்க பாகிஸ்தான் அரசு முனைந்தது. பலமுறை கடுமையான சிறைவாசங்களை அனுபவித்தார் ஃபைஸ் அஹமது ஃபைஸ். அந்தத் தருணத்திலும் இவருடைய பாடல்களை மேடை தோறும் முழங்கினார் பானோ. ஃபைஸ் இயற்றி அவருக்கே மிகவும் பிடித்தமான "ஹம் தேக்கேங்கே" என்னும் பாடலை ஒவ்வொரு மேடை தோறும் முழங்கினார் பானோ. ஒரு கட்டத்தில் பானோவையும் ஃபைஸ் அகமது ஃபைஸ் ஆகிய இருவரையும் தனித்துப் பார்க்க இயலாத பெயர்களாகக் கருதத் துவங்கினார்கள் பாகிஸ்தான் இசை ரசிகர்கள்.

இந்த இடத்தில் ஒன்று சொன்னால் தவறு இல்லை என்று தோன்றுகிறது. டெல்லித் தமிழ்ச் சங்கத்தில் சென்ற ஆண்டு அதன் முந்தைய தலைவருடனும் செயலாளருடனும் நான் சில காலம் முட்டி மோதிக் கொண்டிருந்தேன். தங்களைக் குறுநில மன்னர்களாகவும் அடுத்தவர்களை இவர்களிடம் பாடிப் பரிசில் பெறும் புலவர்களாகவும் கருதி ஜனநாயக சம்ரட்சணம் பண்ணிக்கொண்டிந்த அந்த இரு செயல்வீரர்களும் பலவகைகளில் என்னை சிறுமைப்படுத்தினார்கள். தனிப்பட்ட வகையில் பலவகைகளில் மனக்காயங்களை ஏற்படுத்தினார்கள். ரத்தக்கொதிப்பு மாத்திரையை நான் தினம் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு என்னை மனவேதனைக்கு ஆளாக்கினார்கள். அவர்கள் கையில் இன்னும் கொஞ்சம் அதிகாரம் இருந்திருந்தால் என்னை குடும்பத்துடன் டெல்லியை விட்டு வெளியே அனுப்பி இருப்பார்கள். அந்த நேரத்தில் எனக்குத் தெரிந்து தங்களைக் கலைஞர்கள் என்று வெட்கமில்லாமல் சொல்லித் திரியும் சில டெல்லி நண்பர்கள் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர், செயலர் அல்லது ஒன்றுக்கும் உதவாத செயற்குழு உறுப்பினர்கள் யாராவது எதிரில் இருந்தால் என்னுடன் பேசுவதைத் தவிர்த்து ஏதோ பேயைக் கண்டது போல மிரண்டு ஓடினார்கள். எனக்கு வணக்கம் தெரிவித்து இருந்தாலோ அல்லது என்னுடைய வணக்கத்தை ஏற்றுக்கொண்டிருந்தாலோ அவர்களுக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த குறுநில மன்னர்கள் மனது உவந்து அளிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லாமல் போயிருக்கும். எனவே அவர்கள் மீதும் தவறு இல்லை. இப்போது அதை எல்லாம் மறந்து விட்டேன்.

எதற்கு இந்தக் கதை என்றால் பாகிஸ்தான் போன்ற ஒரு நாட்டில் ஜியா போன்ற ஒரு சர்வாதிகாரியின் ஆட்சியில் அவனால் தடை செய்யப்பட்ட ஒரு கவிஞனின் கவிதைகளை ஒவ்வொரு மேடையிலும் முழங்கியிருக்கிறார் என்றால் அவருடைய கலகக் குணம் எத்தகைய அளவில் வணங்குதற்கு உரியது ! அதுவும் ஃபஸ் அஹமது ஃபைஸ் சிறையில் அடைக்கப்பட்ட தருணத்தில் அவருடைய பாடல்களை மட்டுமே கொண்டு பானோ நடத்திய இசை நிகழ்ச்சிக்கு சுமார் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்களாம். அதே போல அவருடைய ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அந்தக் கலகக் கவிஞனின் பாடல்களை இறுதி வரை பாடிக்கொண்டுதான் இருந்தார். கடுமையாகக் கோபம் கொண்ட ஜியாவின் அரசு பல ஆண்டுகாலம் பாகிஸ்தான் வானொலி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பானோவுக்குத் தடை விதித்திருந்தது. அந்தத் தடைகள் எல்லாம் பானோவை ஒன்றும் செய்யவில்லை. 2003க்குப் பிறகு உடல் நலிவடைந்தார் பானோ. அதற்குப் பிறகு அவர் பாடுவதை ஏறக்குறைய நிறுத்தியே விட்டார் என்றும் சொல்லலாம். மிகுந்த புகழ், செல்வம் இவற்றுக்கிடையே வாழ்ந்துவந்த பானோ 2003க்குப் பிறகு தன் குடும்பம் மற்றும் பேரக்குழந்தைகளுடன் எவ்வித ஆரவாரமும் இன்றி மிகவும் எளிமையுடன் காலத்தைக் கழித்து வந்தார். கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாக உடல் நலம் குன்றி இருந்தார்.
இந்த இசைப்பேரொளி நேற்று (21 ஏப்ரல் 2009 - செவ்வாய்க்கிழமை) லாகூரில் எல்லாம் வல்லோனுக்குப் பிரியமாகிச் சென்றது.

இணைப்பு


ஃபைஸ் அஹமது ஃபைஸ் கவிதைகள் சிலவற்றை மொழி பெயர்த்து இருக்கிறேன். இவை சூன் 2006 வடக்கு வாசல் இதழில் வெளியிடப்பட்டன. இக்பால் பானோவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அந்தக் கலகக் கவிஞனின் கவிதைகள் இங்கே -

ஃபைஸ் அஹ்மத் ஃபைஸ் (1914-1984)
தமிழில் : ராகவன் தம்பி

பேசு

உன் உதடுகள்

சுதந்திரமானவை

பேசு.



இது

உன் சொந்த நாக்கு

பேசு

இது

உன் சொந்த உடல்

உன் வாழ்வு

இன்னும்

உன்னுடையதே - பேசு.


கொல்லன் பட்டறை உலையின்

சுவாலை உக்கிரத்தில்

கனன்று ஜொலிக்கும் இரும்பு

மூட்டுக்களின் தாடைகள்

பிளக்கும்போது

சிதறும் ஒவ்வொரு

சங்கிலியையும் பார்!


பேசு,

இந்தக் குறுகிய

மணிநேரம்

போதுமான அளவு நீண்டதே.

உடலும் நாவும் மரிக்கும்

முன் பேசு

பேசு -

ஏனெனில்

உண்மை மட்டும்

இன்னும்

மரிக்கவில்லை.

பேசு - பேசு

என்ன பேச வேண்டுமோ

எதுவாக இருந்தாலும்

நீ பேசு.


என்னுடைய நேர்காணல்


கூரையை முட்டிக்

கறுத்து வளர்ந்திருக்கிறது சுவர்

எல்லாப் பயணிகளும் போனபின்

சூனியமாய் வெறிக்கின்றன தெருக்கள்.
என் இரவு

தனிமையுடன்

உரையாடலைத்

துவங்குகிறது.


உணர்கிறேன்.

மீண்டும்

ஒருமுறை

அந்த விருந்தாளியின்

வருகைகயை.


உள்ளங்கை ஒன்றினை

மருதாணியும் மற்றொன்றைற

உதிரமும் ஈரப்படுத்துகின்றன.

ஒரு கண் விஷமேற்றுகிறது
குணப்படுத்துகின்றது மற்றொன்;று.


இதயத்தின் உள்ளிருந்து

யாரும் வெளியேறவோ

உட்புகவோ இல்லை.


வலித்த பூவுக்கு

நீரேதும் ஊற்றாது

வெளியேறுகிறது தனிமை.


யார்

அக் காயங்களின்

பொருக்குகளை

நிறங்களால்

நிறைக்கப் போவது?

உணர்கிறேன்.

மீண்டும்

ஒருமுறை

அந்த விருந்தாளியின்

வருகையை.

பழைய தோழி

மீண்டும் ஒருமுறை

தானாக வந்திருக்கிறாள்

அவள் பெயர் -

மரணம்.

தேவையை

உணர்த்தும் நட்பு

இருந்தும் -

அவள் பகையாளி

கொலைகாரி

ஆனாலும் -

மனதுக்கு மிகவும் இனியவள்.


பத்தி


என் மைக்கூட்டையும்

எழுதுகோலையும் அபகரித்தால்

முறையிடமாட்டேன்-

இதயத்தின் உதிரத்தில்

எனது விரல்களை

நனைத்துக் கொண்டதனால்.


அவர்கள் என் நாவுக்கு

அரக்கு முத்திரையிட்டாலும்

முறையிடக் கூடாது நான் -

என்னைப் பிணைத்த விலங்கின்

ஒவ்வொரு வளையமும்

பேச ஆயத்தம் கொண்ட

நாவாக இருப்பதால்.


ஃபைஸ் அஹமது ஃபைஸ் -





பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் பிறந்தவர். தத்துவமும் ஆங்கில இலக்கியமும் படித்த ஃபைஸ் நிறுவனங்களுக்கு எதிராக செயல்பட்டவர். அதன் விளைவாக ஆங்கிலேய ஆட்சியின் போதும் பின் வந்த சுதந்திர பாகிஸ்தான் அரசினாலும் பலமுறை சிறைக்கு அனுப்பப்பட்டவர். மார்க்சிய சிந்தனைகளால் அதிகமாகத் தாக்கம் பெற்ற இவருடைய படைப்புக்கள் உழைக்கும் வர்க்கத்தின் மீதான ஆழ்ந்த அக்கறையை பிரதிபலிப்பவை. கலைல கலைக்காக என்பதை முற்றாக மறுத்தவர் அவர். அரசியல் கவிதைகளைப் போலவே அவருடைய காதல் கவிதைகளும் மிகுந்த கலை நயத்தோடு இணைந்து செயல்படுபவை. இவர் கவிஞர் மட்டுமல்லாது பத்திரிகையாளர், பாடலாசிரியர் மற்றும் சமூகப் போராளியாக விளங்கியவர். தற்கால உருதுக் கவிதையின் இயைபுடைய சொல்லாட்சிக்கு ஃபைஸ் அளித்த பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது.


1963ல் நோபல் பரிசுக்காக இவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டது. லெனின் சமாதானப் பரிசை பெற்ற முதல் ஆசியக் கவிஞர் இவர்.


ராகவன் தம்பி

No comments:

Post a Comment