Tuesday, November 26, 2013

துரியோதனர்களும் துச்சாதனர்களும் சகுனிகளும்...

சில நிறுவனங்களில் அல்லது அமைப்புக்களில் தொடர்ந்து தவறு செய்பவர்கள் அல்லது கேப்மாரித்தனங்கள் செய்பவர்களுடன் சிலர் லஜ்ஜையில்லாமல் ஒட்டிக்கொண்டு திரிவார்கள். அந்த அமைப்புக்களில் பொறுப்பில் இருப்பவர்கள் அல்லது அதிகார மையங்களில் இருப்பவர்கள் என்ன தவறு செய்தாலும் அவர்களைக் கட்டிக் கொண்டு திரிவார்கள். மாலைகள் மாற்றிக் கொள்வார்கள். விருதுகளையும் பட்டங்களையும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டிருப்பார்கள். எந்தக் கேள்வியும் கேட்காமல் ஊழல் செய்பவர்களின் கால்களைக் கழுவி டு அந்தத் தண்ணீரைக் குடிப்பார்கள். தலையில் தெளித்துக் கொள்வார்கள். 

ஏதாவது ஒரு தருணத்தில் யாராவது அப்படி கேப்மாரித்தனங்கள் செய்பவர்களுடன் கோஷ்டி சேர்ந்து இருப்பவர்களை ஏதாவது கேள்விகள் கேட்க நேர்ந்தால் அந்த சொம்பு தூக்கிகள் எப்போதும் தயாராக வைத்திருக்கும் பதில் - “அந்த ஆள் அப்போது, அந்த சந்தர்ப்பத்தில் எனக்கு இந்த உதவி செய்தான். அவன் இல்லை என்றால் நான் நான் ஒன்றுமே இல்லை, அதனால் மட்டுமே அவன் செய்யும் எல்லா அக்கிரமங்களையும் வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டிருக்கிறேன். வேறு விதியில்லாமல் கூட இருந்து தொலைக்கிறேன்” என்று சமாதானம் சொல்வார்கள் அல்லது சொல்லிக் கொள்வார்கள். 

ஆனால் பொதுவாக உண்மையான காரணம் நிச்சயமாக இவர்கள் கூறிக்கொள்ளும் நன்றி உணர்ச்சி கிடையாது. 

இவர்கள் நிச்சயமாக கர்ணர்களாக இருக்க மாட்டார்கள். எந்தக் காலத்திலும் இவர்கள் சொல்லிக் கொள்வதைப் போல கர்ணனாக இருக்கவும் முடியாது.

தூண்டித் துருவித் தடவிப் பார்த்தால் ஒன்றை சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம். அப்படிக் கேப்மாரித்தனம் செய்பவர்களுடன் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள் அந்த நேரத்தில் கிடைக்கும் சில அல்ப லாபங்களுக்காகவும், அவர்களைப் பகைத்துக் கொள்ள இவர்கள் குலைநடுங்குவதால் மட்டுமே அப்படிக் கூட ஒட்டிக் கொண்டிருப்பார்கள். சில சில்லறை லாபங்களுக்காக மட்டுமே நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அவர்களுடன் அலைவார்கள். மற்றபடி இவர்கள் சொல்லும் அல்லது சொல்லிக் கொள்ளும் சமாதானம் வெறும் போலி வேடம்தான்.

துரியோதனர்களுடன் துச்சாதனர்களும் சகுனிகளும்தான் சேர்ந்து இருக்க முடியும். வேறு வழியில்லை.

Saturday, October 12, 2013

நான் மட்டும் இல்லையப்பா... அவனும்தான்...

எனக்கு ஒரு குட்டிக் கதை ஞாபகத்துக்கு வருகிறது.

தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்கு சென்றிருந்தான் மாப்பிள்ளை. இருவரும் வெளியில் கடைக்குக் கிளம்பினார்கள். வழியில் மாமனாருக்குக் கடன் கொடுத்திருந்த ஒருவன் எதிர்பாராமல் எதிர்ப்பட்டு மாமனாரின் சட்டையைப் பிடித்துக் கொண்டான். மாமனாருக்கு தர்மசங்கடமாகி விட்டது. சமாளிக்கும் வகையில் சொன்னான்.

“உனக்கு எப்படா கடன் கொடுக்கணும்? குடுக்கலைன்னா என்னடா பண்ணுவே?”

“இப்படி எல்லாம் பேசினா உன்னை செருப்பாலேயே அடிப்பேன்”

“தைரியம் இருந்தால் அடிடா பார்ப்போம்”

கடன் கொடுத்தவன் சடாரென்று செருப்பை உருவி பளீரென்று ஒன்று கொடுத்தான்.

மாமனார் அரண்டுவிட்டாலும் சமாளித்தான்.

என்னை அடிச்சிட்டே... தைரியம் இருந்தா என் மாப்பிள்ளை மேலே கை வைடா பார்ப்போம்...

“உன் மாப்பிள்ளை என்னடா புடுங்கி. இப்ப பாரு” என்று மாப்பிள்ளையையும் இரண்டு வெளுவெளுத்தான்.

சரி வாங்க மாப்பிள்ளை போகலாம் என்று மாப்பிள்ளையை அழைத்துச சென்றான் மாமனார்.

மாப்பிள்ளை வீட்டுக்குப் போய் மாமனார் செருப்படி பட்டான் என்று சொல்ல முடியாது பாருங்கள். அவனும் பட்டிருக்கிறானே.

ஏறத்தாழ இதுபோன்ற வேலைதான் டெல்லி தமிழ்ச் சங்கத்தில் தற்போது நடைபெற்று வருகிறது என்று தோன்றுகிறது. தமிழ்ச் சங்கத்தின் செயலாளரின் செட்டப் பட்டம் மற்றும் விருது வாங்கும் சுயமோகம் நாளுக்கு நாள் அதிகரித்து ஏறத்தாழ மனோவியாதி போல மாறிவிட்டது.

யாராவது இரண்டு பேர் சேர்ந்து கிடைத்தாலும் உடனடியாக அந்த இருவருக்கும் கற்பனையான அமைப்பு ஒன்றை உருவாக்கி அவர்கள் வழியாக தனக்கு செட்டப் விருதுகள் மற்றும் பாராட்டுக்களை உடனடியாக ஏற்பாடு செய்து கொள்ளும் அவருடைய சுயமோகம் குறித்து மூலைக்கு மூலை (சிலருக்கு தைரியம் இல்லைவிட்டாலும் மறைமுகமாவது) கிண்டல் செய்து வருகிறார்கள்.

பலரும் மிகவும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் என்பது அவருக்கும் தெரியும்.

என்னைப் போன்றவர்கள் இதைப் பார்த்து சத்தம் போட்டு சிரித்தாலும் பொறாமையில் சிரிக்கிறான் என்று தன்னுடைய ஜால்ராக்களை விட்டுக் கூறவைக்கிறார். அவர்களும் தங்கள் முன்பு எறியப்படும் சில பிஸ்கட்டுக்களுக்காக நேரம் கிடைக்கும் போது என்னைக் கடித்து குதற சந்தர்ப்பம் பார்த்து கொண்டிருக்கிறார்கள். சிலர் ஏற்கனவே பலமாக் கடித்தும் விட்டார்கள்.

சரி. விஷயத்துக்கு வருகிறேன்.

இந்த செட்டப் விருதுகளை வைத்து தன்மேல் எழும் கடுமையான விமர்சனங்களை சமாளிக்க ஒரு வழியைக் கண்டுவிடித்து விட்டார் தமிழ்ச் சங்கதிதின் செயலாளர் என்று தோன்றுகிறது. இப்போது தன்னுடன் கூட இருக்கும் தொண்டரடிப் பொடியாழ்வார்களுக்கும் அதே போல செட்டப் விருதுகள் ஏற்பாடுசெய்யத் தொடங்கிவிட்டார்.

தங்கள் கழுத்துக்களில் ஜவ்வந்தி மாலையும் தலையில் மஞ்சள் தண்ணீரும் தெளிக்கப்படுவதை உணர்ந்து கொள்ளாமல் இப்போது தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சில செயற்குழு ஜம்பவான்கள் தங்கள் செயலாளரைப் போலவே
செட்டப் விருதுகளை வாங்கி பெரிதாக ஃப்ளெக்ஸ் பேனர்களும் வைத்துக் கொள்ளத் துவங்கி விட்டார்கள்.

நாளை செயலரை மட்டும் தனியாக யாரும் விமர்சிக்க முடியாது இல்லையா? ஏம்பா. நான் மட்டும் தான் விருதுகள் வாங்கினேனா? ஒண்ணுக்கும் லாயக்கில்லாத இவன்களும் வாங்கலையா? என்று கேட்கலாமே.

டெல்லி தமிழ்ச் சங்கத்தில் இனி இப்படி நிறைய கேளிக்கை அம்சங்கள் கிடைக்கும்.

ஹை.. ஜாலிதான்.