Friday, February 6, 2015

All are equal and some are More Equal

லாலு பாய் ஒரு வழியாக டெல்லியில் பல ஆண்டுகளாக விடாப்பிடியாக பிடித்து வைத்துக் கொண்டிருந்த அரசு பங்களாவை  சென்ற மாதம் காலி செய்திருக்கிறார் என்று செய்தி வெளியாகி இருக்கிறது.

கடந்த 2004-ம் ஆண்டில்  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ரயில்வே    அமைச்சராகப் பொறுப்பேற்ற போது புது டெல்லியின் 25 துக்ளக் ரோடு என்னும் முகவரியில் உள்ள  இந்த பங்களாவில் அவர்  குடியேறினார்.

கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 
தகுதி இழப்புக்குப் பிறகு விதிமுறைகளின் அடிப்படையில் டெல்லியில் அவர்   அரசு பங்களாவில் தங்க முடியாது     ஆனால் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது இவருடைய வாய்க்கு பயந்து அமைச்சரவைக் கூட்டத்தில் வயிற்றெரிச்சலுடன் தீர்மானம் நிறைவேற்றி  ஒரு ஆண்டு காலத்துக்கு  நீட்டிப்பு வழங்கப்பட்டது.  

இறுதியாக 2014 அக்டோபர் வரை இந்த சலுகை முடிவடைந்ததும் அந்த பங்களாவை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பிக் கொண்டிருந்தது மத்திய அரசு.  தன்னுடைய உடல் நலத்தைக் காரணம் காட்டியும் பேரப்பிள்ளைகளின் படிப்பை காரணம் காட்டியும் மேலும் கால அவகாசம் கோரியிருந்தார் லாலு.

இது தொடர்பாக மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவை நேரில் சந்தித்து லாலு கோரிக்கை விடுத்ததாகவும் அந்த வேண்டுகோளை அமைச்சர் ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

Wednesday, February 26, 2014

கபாலி கான்

எங்கள் வீட்டு வாசலில் எனக்காக எப்போதும் காத்திருக்கும் கபாலி கான் டெல்லி முனிசிபாலிடி ஆட்களால் நேற்று மாலை பிடித்துச் செல்லப்பட்டது என்ற தகவலை கார் துடைக்கும் பையன் காலையில் சொன்ன போது மனதுக்குக் கொஞ்சம் கனமாக இருந்தது.

பொதுவாக நாய்களுக்கு ஆங்கிலப் பெயர்களை வைப்பதை எப்போதும் எதிர்ப்பவன் நான். சில ஆண்டுகளுக்கு முன்பு என் வீட்டுக்கு தெருவில் இருந்து என் மகள் எடுத்து வந்து இப்போது எங்கள் வீட்டில் கம்பீரமாக வளர்ந்து வரும் ரஸ்டிக்கு அப்படி ஒரு பெயரை வைக்கும் சுதந்திரம் இல்லை எனக்கு. அந்த சுதந்திரத்தை மகள்கள் எடுத்துக் கொண்டார்கள். 

என் வீட்டு ரஸ்டி சில நாள் குட்டியாக இருந்தபோது அதற்கு முனியாண்டி என்று பெயர் வைத்தேன். என் அம்மாவின் அப்பா குப்புராவ் பெயர் வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் கிருஷ்ணகிரியில் என்னுடன் பிறந்தவர்கள் என்னைத் தொலைத்து விடுவார்கள். அதனால் பொதுவாக எங்கள் வீட்டுக் காவல் தெய்வமாக முனியாண்டி என்று இருக்கட்டுமே என்று யோசித்தேன். சில நாட்கள் கழித்து அது காலைத்தூக்காமல் அகட்டி சிறுநீர் கழித்ததும் தான் தெரிந்தது. அதற்கு முனியாண்டி என்று பெயர் வைக்க முடியாது என்று. முனியம்மா என்ற பெயர் நன்றாக இருக்காது. காமாட்சி, விசாலட்சி என்று நல்ல அம்மன் பெயர் சூட்டலாம் என்று நினைத்தேன். ஆனால் அதுபோன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையில் முடிவெடுக்கும் சுதந்திரம் எங்கள் வீட்டில் பொதுவாக எனக்குத் தருவதில்லை. அதனால் என் மகள் ரஸ்டி என்று அதற்கு பெயர் வைத்தபோது நான் ஆட்சேபிக்கவில்லை. ஆட்சேபித்து இருந்தாலும் அது ரஸ்டியாகத்தான் இருந்திருக்கும். இப்போதும் இருக்கிறது.

சரி. புதிதாக வந்து சேர்ந்திருக்கும் இதனை எப்படிப் பெயர் இல்லாமல் கூட வைத்துக் கொள்வது? வீட்டுக்கு வெளியில் இருந்தாலும் ஒரு பெயர் வேண்டுமே. எந்த வகையிலும் அதற்கோ என் மகள்களுக்கோ மனைவிக்கோ இந்தப் பெயரில் ஆட்சேபம் இருக்காது என்ற தைரியத்தில் வீட்டுக்கு வெளியில் இருந்த இதற்கு கபாலி கான் என்று பெயர் வைத்தேன். எங்கள் வீட்டின் பெங்காலி வேலைக்காரி உட்பட அனைவரும் அதனை கபாலி கான் என்றே அழைக்கத் துவங்கினார்கள். அதுகூட நாங்கள் கபாலி கான் என்று கூப்பிட்டால் திரும்பிப் பார்க்கத் துவங்கியது.