Thursday, November 8, 2007

வாளெ மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் - கரு "நாடக அரசியல்'

ராகவன் தம்பி

வாளெ மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்


''நாட்டாமே... தீர்ப்பை மாத்தி எளுது"...


எக்காரணம் கொண்டும் தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்று நம்முடன் மல்லுக்கட்டி நின்று தங்கள் மாநிலத்தில் அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த கருநாடக அரசியல்வாதிகள் தங்களுக்குள் மல்லுக்கட்டி நின்று இப்போது சற்று ஓய்ந்திருக்கிறார்கள்.

கர்நாடக மாநிலத்தில் அமலாக்கப்பட்டிருந்த குடியரசுத்தலைவர் ஆட்சி இன்றுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. பாஜக அங்கு ஆட்சி அமைப்பதற்கு வழிவகுத்திருக்கிறது தில்லியின் ஆணை.தேவே கௌடாவின் தலைமையிலான மதசார்பற்ற(?) ஜனதா தளத்துடன் பாஜக ஆட்சியைப் பகிர்ந்து கொள்ளும். பாஜகவும் ஜனதா தளக்கட்சியும் தனித் தனியாகத் தங்கள் (இவர்களை என்ன சொல்வது), சரி. "அவர்களை" தில்லியில் குடியரசுத் தலைவரின் முன்னிலையில் அணிவகுப்பு நடத்தியிருக்கிறது.

குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்துவதற்கு பயந்து குடுமிப்பிடி சண்டை போட்டுக்கொண்டிருந்த பாஜகவும் தேவேகௌடா கட்சியும் மீண்டும் கட்டிப்பிடித்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்து இந்த ஒப்பந்தத்துக்கு வந்திருக்கிறார்கள்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாஜகவை சேர்ந்த (இந்தக் கூத்துக்கு) முன்னாள் துணை முதலமைச்சர் பி.எஸ்.எட்டியூரப்பாவை முதல்வராக அறிவித்து இருக்கிறார்கள்.



ஏறத்தாழ குரங்குகள் ரொட்டியைப் பகிர்ந்து கொள்ள ஏற்பாடு செய்யும் கதைக்கு சற்று அருகில் நெருங்கி வரும் அரசியல் கதை இது என்று தலைநகரில் அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.


நவம்பர் 1ம் தேதியன்று தேவே கௌடா செய்திருக்கும் ஒப்பந்தம் (மெமோரண்டம் ஆஃப் அண்டர்ஸ்டேன்டிங்) இது வரை எந்த மாநிலத்திலும் அரசியல் சரித்திரத்தில் கேள்விப்படாத விசித்திரம் என்கிறார்கள். இது ஒரு மோசமான முன் உதாரணத்தைத் தோற்றுவித்து இருக்கும் அரசியல் உட்டாலங்கடி வேலை. இந்த அரசியல் நாடகத்தில் சில திடீர் திருப்பங்கள், மர்மம், நகைச்சுவை, சோகம் போன்ற காட்சிகளை சற்று பின்னோக்கிப் பார்ப்போம்.

கர்நாடகாவில் மே 28, 2004ல் நடந்த பொதுத்தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (அடிக்கடி எதற்கு "மதச்சார்பற்ற' என்று தேவையில்லாமல் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும்? மதச்சார்பில்லாமல் இருக்கலாம். ஆனால் ஜாதிச் சார்பு இல்லாத அரசியல் கர்நாடகாவில் ஏது? எனவே ஒரு அடையாளத்துக்காக ஜனதா தளம் என்றே இப்போதைக்கு சொல்லலாம்) கட்சிகள் ஆட்சியமைக்கக் கூட்டணி அமைத்து தரம் சிங் முதல்வராகப் பதவி ஏற்றார்.

ஜனவரி 16, 2006ல் ஜனதா தளம் தன்னுடைய பங்காளியைத் தூக்கி எறிந்து தன்னுடைய மதச்சார்பற்ற கொள்கையை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் வண்ணம் பாரதிய ஜனதா கட்சியைத் தனது கூட்டாளியாக மாற்றிக் கொண்டது. இதில் கூத்து என்னவென்றால் ஜனதா தளத்தின் தலைவர், தேவே கௌடாவின் தவப்புதல்வர் ஹெச்.டி.குமாரசாமி ஒரு குஜாலான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கையில் நவரசங்களும் தெறித்தன.
ஆட்சியில், அதாவது அமைச்சரவையில் பதவிகளைப் பங்கு பிரித்துக் கொள்வது மட்டும் அல்லாது, அரசு வாரியங்களையும் பொதுத்துறை நிறுவனங்களின் தலைமைப் பதவிகளையும் பிரித்துக் கொள்வது என்று உடன்பாடு செய்து கொண்டிருக்கிறோம். 70 பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வாரியங்களில் பாஜகவுக்கு 40 ஜனதா தளத்துக்கு 30 என்று பிரித்துக் கொள்வோம். முதல் 20 மாதங்கள் ஜனதா தளத் தலைவர் குமாரசாமி முதல்வராக இருப்பார். மீதி 20 மாதங்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் அவைத்தலைவர் எடியூரப்பா முதல்வராக இருப்பார் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யாத குறையாக ஒரு உடன்படிக்கையை வெளியிட்டார்கள்.

அதன்படி, 03 பிப்ரவரி 2006 அன்று குமாரசாமியை முதல்வராக ஏற்று அமைச்சரவை அமைக்கப்பட்டது. 03 அக்டோபர் 2007ல் அந்த இருபது மாதங்கள் முடிவடைந்தன. கர்நாடகாவின் பாரம்பரியக் கூத்தான யட்சகானத்தின் இரண்யவதம் கூத்தில் ஒரு பிரபலமான பாடல் ஒன்று உண்டு.

"ஏனு அந்தரு மகனு

ஹரியம்பனு பிடனு''

அதாவது என்ன செய்தாலும் உங்கள் மகன் ஹரி என்று சொல்வதை விட மாட்டேன் என்கிறான்''.

அதேபோல, தேவேகௌடா புத்திரன் என்ன தலைகீழாக நின்றாலும் பதவி என்கிற விஷயத்தை விடமாட்டேன் என்று அடம் பிடித்தார். ஒப்பந்தப்படி பாஜகவுக்கு முதல்வர் பதவியை விட்டுத்தரமாட்டேன் என்று குரங்குப் பிடியாக அடம் பிடித்தார்.

07 அக்டோபர் 2007 அன்று பாஜக தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொண்டது. அடுத்தநாளே குமாரசாமி தன்னுடைய முதல்வர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்தார்.


09 அக்டோபர் 2007 அன்று கர்நாடகாவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அறிவிக்கப்பட்டது. சட்டசபை கலைக்கப்படவில்லை.24 அக்டோபர் 2007 அன்று தேவே கௌடா, பாஜக தேசியத்தலைவர் ராஜ்நாத் சிங்குக்கும் பிரதமருக்கும் மாநிலத்தின் சட்டசபையைக் கலைக்குமாறு அறிவுறுத்தி ஒரு கடிதம் எழுதினார்.
ஜனதா தளம் சற்று நேரத்துக்கு வெட்கத்தைத் துறந்து மீண்டும் ஆதரவு தேடி பாஜகவின் பாசறைக்கு ஓடிச்சென்றது.

01 நவம்பர் 2007 அன்று தேவேகௌடா மீண்டும் ஒரு ஒப்பந்த அறிக்கையை பாஜக தலைமைக்கு அனுப்பி வைத்தார். அந்த அறிக்கையைப் போன்ற ஒரு அரைவேக்காட்டுத் தனமான, ஆபத்தான ஒப்பந்த அறிக்கையை இது வரை இந்திய அரசியல் சரித்திரத்தில் கேள்விப்பட்டது இல்லை என்று ஊடகங்களில் கைகொட்டிச் சிரித்தார்கள் அரசியல் விமர்சகர்கள். தேவே கௌடாவின் 12 அம்சங்கள் நிறைந்த அந்த ஒப்பந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் வேடிக்கையான நிபந்தனைகளில் ஒன்று -

"மிகவும் முக்கியமான நிர்வாகப் பதவிக்கான நபர்கள் மற்றும் அந்த இடங்களுக்கான பதவி உயர்வுகளை கூட்டாளியான ஜனதா தளக் கட்சியின் தலைவரின் ஆலோசனையுடன் முதல்வர் தீர்மானிப்பார். நீதிமன்றப் பொறுப்புக்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் போன்ற விஷயங்களிலும் இந்த உடன்படிக்கை தொடரும். இதில் இருந்து எந்தக் கூட்டாளி பின்வாங்குகிறாரோ அவர் கூட்டணியில் இருந்து வெளியில் வரலாம்'' என்று தெரிவித்துள்ளது.

இந்த வேடிக்கையான, விநோதமான நிபந்தனையை பாரதிய ஜனதா ஏற்றுக்கொண்டு ஆட்சியில் பங்கேற்கிறது. எங்கே போய் அடித்துக் கொள்வது? இது போன்ற சுயநலம் நோக்கிய, சுயலாபம் நோக்கிய உடன்படிக்கைகளின் படி அமையும் அரசு மாநிலத்துக்கு என்ன செய்ய முடியும்? அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் முதல்வரால் எந்த வகையில் நிம்மதியாக மக்கள் நலனைக் கவனிக்க முடியும்?முழுக்க முழுக்க சுயநலத்தின் அடிப்படையில் மன்னராட்சிக்கு சற்றும் குறையாத வகையில் அமைந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் இப்படி வரும் ஆட்சியால் மக்களுக்கு என்ன சேவையை செய்ய முடியும்?

நமக்குத் தண்ணீர் தருவதற்கு அவர்கள் அப்புறம் அடித்துக் கொள்ளட்டும்.

முதலில் அந்த மாநிலத்தையும் மக்களையும் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.

புகைப்படங்கள் - நன்றி- தி ஹிந்து நாளிதழ்


6 comments:

  1. வாழ்க ஜனநாயகம்! :))

    தேவகவுடா யாகம், ஜோசியம் எல்லாம் பார்த்தும் நிலமை இப்படி வந்தது. பாவம் மக்கள். அரசியல் சட்டத்தையும், மக்களாட்சி தத்துவத்தையும் கேலிக்குள்ளாக்கும் நல்ல நாடகம். ம்ம்ம் பதவியில் நாட்கள் நீளுமா? இன்னும் நிபந்தனைகளின் எண்ணிக்கை கூடுமா? வரும் நாட்களில் தெரியும்.

    கர்நாடக அரசியலை அலசும் நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி, திரு.

    ReplyDelete
  3. அறிஞ்ச அரசியல் கூத்துத் தான். வேடிக்கையாவும் இருக்கு, வேதனையாவும் இருக்கு.

    ReplyDelete
  4. உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி, பெனடிக்ட்.

    ராகவன் தம்பி

    ReplyDelete
  5. karnataka arasiyal patriya thelivana parvai ! valai meenu vilangu meenu varisaiyil thalaivaru thimingalm ( Deve Gouda thanungo !) nalla muyarchi

    Nesaraj Selvam chennai

    ReplyDelete
  6. வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி -செல்வம்.

    ராகவன் தம்பி

    ReplyDelete