Monday, November 12, 2007

பேய்கள் ஆட்சியில் பிணம் தின்னும் சாத்திரங்கள் - பாகிஸ்தான் அரசியல் நெருக்கடி



பாகிஸ்தானில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு படு அமர்க்களப்பட்டு வருகிறது. இதற்கு எதிராகப் போராடும் வழக்கறிஞர்களை வாய் மேலேயே நாலு போடு போட்டு இழுத்துப்போகிறார்கள். மிகப்பெரிய வழக்கறிஞர்கள், படைப்பாளிகள், பத்திரிகையாசிரியர்கள், போராளிகளை பிக் பாக்கெட் திருடர்களைப் போல இழுத்துக் கொண்டு போவதை ஊடங்களில் காண்கிறோம்.

புட்டோவின் திருமகள் இந்த அமளியில் தன்னால் ஆன அரசியல் ஆதாயம் தேட முயற்சித்து வருகிறார்.< பல ஆண்டுகளாக இவரும் இவருடைய மணாளனும் பாதி பாகிஸ்தானை அடித்து உலையில் போட்டு சாப்பிட்டவர்கள் என்கிற குற்றச்சாட்டில் பல வழக்குகள் இவர்கள் மீது நிலுவையில் உள்ளது. இவர்களும் இப்போது நீதி கேட்டு நெடும்பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.

சுமார் எட்டு ஆண்டுகளுக்குப்பிறகு கடந்த மாத இடையில் பெனாஸீர் புட்டோ நாடு திரும்பியபோது நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் சுமார் 140 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்திருக்கிறார்கள். இது உலக அளவில் அதிர்ச்சியை படுத்திய சம்பவம். மதவாதமும் சர்வாதிகாரமும் கைகோர்க்கும் தருணத்தில் ஜனநாயகத்துக்கு நேரும் விபத்துக்கள் இவை. கன்னடத்தில் ஒரு பழமொழி உண்டுஹ÷ச்சு முண்டே மதுவேனல்லி உண்டோரு ஜாணே... என்பார்கள்.அதாவது பைத்தியத்தின் கல்யாணத்தில் முதலில் சாப்பிட்டவன் சாமர்த்தியசாலியாம். பிறகு அந்தப் பைத்தியம் கல் கொண்டு எறியலாம். முதலில் சாப்பிட்டு ஓடுபவன் புத்திசாலி. அங்கு பல சாமர்த்தியசாலிகளும் புத்திசாலிகளும் முதல் பந்தியில் உட்காரத் துவங்கிவிட்டார்கள்.

சரி. எதுக்குக் கன்னடப் பழமொழியெல்லாம்? நம்மூரிலேயே சொல்வார்களே! எரிகிற வீட்டில் பிடுங்குவது என்று. வீடு எரியத் தொடங்கி விட்டது. ஆளுக்கொரு பக்கம் பிடுங்கத் தொடங்கி விட்டார்கள். இந்த நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரிக்கத் துவங்கியதால் சத்தம் போடாமல் மீண்டும் அதிபர் பதவிக்கு வருகின்ற நோக்கத்தோடு பெனாஸீர் புட்டோவுடன் ஒரு உட்டாலங்கடி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டார் முஷாரஃப்.





அதாவது பெனாஸீரின் அரசியல் எதிரியான நவாஸ் ஷெரீஃப் காலத்தில் அவர் மீது தொடுக்கப்பட்ட மெகா ஊழல் வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கான ஒரு அவசர சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார் முஷாரஃப். அடுத்து பாகிஸ்தானில் இறையருளால் தேர்தல் நடந்தால் அதில் பெனாஸீர் பங்கு கொண்டு பிரதமர் ஆவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகம் என்று சொல்லத் துவங்கிய நேரத்தில் குண்டு வெடிப்பு ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கிறது.

இந்தக் குண்டு வெடிப்பு பாகிஸ்தானில் பாமரர்கள் இடையே பெனாஸீர் மீது ஒரு அனுதாப அலையை வீச வைத்திருக்கிறது. ஒரு கண்ணகி ரேஞ்சில் இப்போது அவர் நீதிகேட்டு நெடும்பயணம் துவங்கியிருக்கிறார். இறையருளால் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அடுத்த பிரதமர் இந்த அம்மணியாகவும் இருக்கலாம் என்கிறார்கள்.நீண்ட நாட்களாக பாகிஸ்தானில் ஒரு விநோதமான விஷயம் உண்டு. அங்கு அவர்கள் தங்களை சொல்லிக் கொள்வது பாராளுமன்ற ஜனநாயம் என்று. ஆனால் ஜெனரல் அயூப்கான் காலத்திலிருந்து அங்கு சாங்கோபாங்கமோ நடைபெறுவதோ ராணுவ சர்வாதிகாரிகளின் ஆட்சிதான்.

இந்தக் கேவலமான மரபில் முஷாரஃப் ராணுவம் மற்றும் சிவில் அதிகாரங்களைத் தன் கையில் ஏந்தியிருந்தார். சொல்லப்போனால் முஷாரஃப் பாகிஸ்தானில் அதிகாரத்துக்கு வந்தபிறகுதான் அங்கே இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சிகளுக்கு பெரும் ஊக்கம் கிடைத்திருக்கின்றன. ""ஓ ராஜா கா ஸôலா'' என்பார்கள். அதாவது அவர், ராஜாவின் மச்சினர். என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என்பார்கள். அது போல, இந்த ராஜா கா ஸôலாக்கள் பண்ணாத அழிச்சாட்டியமே கிடையாது எனலாம்.

முஷாரஃப் பதவி ஏற்ற கையோடு பெனாஸீரையும் நவாஸ் ஷெரீஃபையும் பாகிஸ்தானை விட்டுத் துரத்தி ஜனநாயக மரபினை நிறுவினார். லஷ்கர்களின் கொட்டம் அங்கு அதிகரித்தன. பாகிஸ்தானின் பழங்குடியினர் மிகுதியாக வசிக்கும் வடக்குப்பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைப்புக்கள் அங்கு நிர்வாகம் மேற்கொள்வதில்லை. முஷாரஃபினால் நியமிக்கப்பட்ட தாதாக்களே அங்கு நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்கிறார்கள். லஷ்கர் என்னும் தீவிரவாத அமைப்பும் ஆப்கானிஸ்தானின் தாலிபான்களும் அங்க கோலோச்சுகின்றனர்.

குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து போடுவதும் தடுப்பூசிகள் போடுவதும் பெண்கள் படிப்பதும் மதவிரோதம் என்று அங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களின் தாடிகளின் நீளமும் பெண்களின் சல்வார் உடைகளும் அங்கு அளந்து பார்த்து அனுமதிக்கப்படுகின்றன.வடமேற்கு எல்லையில் உள்ள பஷ்டூன்கள் இப்போது அரசுக்கட்டுப்பாட்டில் இல்லை. தங்களுக்கென்று தனிநாடு வேண்டுமென்று போராடிக்கொண்டிருக்கிறார்கள் அந்த ஊர்க்காரர்கள். அங்கு அவர்கள் கேட்பது போல தனிநாடு அமைந்தால் பயங்கரவாதிகளுக்கு மிகப்பெரிய புகலிடமாக அது மாறிவிடும் என்று அமெரிக்காவுக்கு ப் பீதி கண்டுள்ளது. இங்கு ஆட்சி நடத்தும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சில தாதாக்களுக்கும் அவர்களின் கட்சிக்கும் அல்கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதே போல, ஸன்னி, ஷியா முஸ்லிம் பிரிவினர்களிடையே நடைபெற்று வரும் மோதல்கள் முஷாஃப்புக்கு மிகப்பெரும் தலைவேதனையைத் தது வருகிறது.முஷாரஃப் பாடுதான் ரொம்பத் திண்டாட்டம் இப்போது. ஒரு புறம் தன்னுடைய எஜமானர்களான அமெரிக்கர்களைத் திருப்திப்படுத்த வேண்டும். அதேவேளை அங்கு தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ள அடிப்படைவாத, தீவிரவாத அமைப்புக்களையும் ஆதரிக்க வேண்டும்.

அமெரிக்க எஜமானர்கள் ஆணைக்கு அடிபணிரûடிந்து, பிப்ரவரியில் தேர்தல் நடத்தப் போவதாக முஷாரஃப் அறிவித்து இருக்கிறார். அரசியலில் மாற்றுக் கருத்து கொண்டவர்களைப் பல இடங்கில் ஆளொழிப்பு வேலைகள் ஏற்கனவே துவங்கி விட்டதாகச் சொல்கிறார்கள். நீதிபதிகள் முதற்கொண்டு வீட்டுக் காவலில் வைக்கப்படுகிறார்கள். அரசியல் எதிரிகள் பந்தாடப்படுகிறார்கள். பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு அமெரிக்காவே முழுக்கக் காரணம் என்று பலர் குற்றம் சாட்டுகிறார்கள். ஆப்கானிஸ்தானத்துக்கு ஆப்பு வைக்க வேண்டும் என்று பாகிஸ்தானில் சில தீவிரவாத அமைப்புக்களை ஊக்குவித்தார்கள். இப்போது அவர்கள் வளர்த்து விட்ட பூதம் அவர்கள் தலைமீது கைவைத்துப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறது. அதனால் இப்போது மிதவாத சக்திகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறது அமெரிக்கா. முஷாரஃப்புக்கும் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற நிலை உண்டாகி விட்டது.

அவர் அறிவித்த நெருக்கடி நிலை அவருக்கு அவரே வைத்துக்கொண்ட ஆப்பாக இந்தியாவிலிருந்து பார்க்கிறார்கள்.இன்னொரு விஷயத்தையும் இங்கு நாம் கொஞ்சம் பார்த்தால் கொஞ்சம் வேடிக்கையாகவும் இருக்கும்.ஏறத்தாழ 32 ஆண்டுகளுக்கு முன்பு சற்றேறக்குறைய இதேபோன்ற ஒரு நிலை இந்தியாவிலும் இருந்தது. தன்னுடைய அதிகாரத்தை நிர்ணயிக்கும் தேர்தலைப்பற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முட்டுக்கட்டை போடவே முஷாரஃப் இந்த நெருக்கடி நிலையை அறிவித்து இருக்கிறார்.



ஏறத்தாழ இதே ரீதியில் 1975ல், இந்திரா காந்தி தன்னுடைய தேர்தலில் மிகப்பெரும் ஊழல் நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்று குற்றம் சாட்டி அவருடைய தேர்தல் வெற்றி செல்லாதது என அறிவித்தது அலகாபாத் உச்சநீதிமன்றம். ஆனால் அவர் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என்றும் தீர்ப்பு அளித்தது. இந்திரா காந்தி அம்மையார் உச்சதிமன்றமாவது வெங்காயமாவது, தானே எல்லாவற்றுக்குமான உச்ச்ச்ச்ச்ச்ச நீதி மன்றம் என்ற நினைப்பில் இதே போல நெருக்கடி நிலையை அறிவித்தார். தேசம் மீண்டும் ஒருமுறை இருளில் சூழ்ந்தது. அரசியலில் மாற்றுக் கருத்து கொண்டவர்கள் ஒடுக்கப்பட்டனர். பல அப்பாவிகள் ஆளொழிப்பு செய்யப்பட்டனர். பேய்கள் ஆட்சியில் சாத்திரங்கள் பிணம் தின்றன.இப்போது பாகிஸ்தானிலும் அதே நிலைதான்.




ஒருவேளை அதனால்தான் இந்தியக் காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானில் நடப்பது குறித்து அதிகமான அளவில் அதிர்வுகள் இல்லாது மிக மிக மெல்லிய குரலில் தன் மேலான கருத்துக்களைக் கூறிவருகிறதோ என்று ஐயப்படுகிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.




3 comments:

  1. Nice and interesting Article.

    Anand

    ReplyDelete
  2. வருகைக்கும் பதிவும் மிக்க நன்றி, ஆனந்த் அவர்களே.

    ராகவன் தம்பி

    ReplyDelete
  3. (அரசியல்) அலசல் அவியல் மட்டுமல்ல நினைவுகள் கிண்டப்பட்ட உப்புமாவும் (உப்பிட்டு!)கூட.
    -ஊர்காரன் தான்.(ரொம்பவும் யோசிக்க வேண்டியதில்லை ஆஷ்னா !!)

    ReplyDelete