Saturday, November 10, 2007

துக்கிணியூண்டு தீர்த்தமும் பிரவாகமெடுத்த அரசியலும்...

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பாஜக அரசில் மைய நிதியமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறைகளில் அமைச்சராக இருந்தவர் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங். அரசியலில் சேருவதற்கு முன்பு இந்திய ராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றியவர். 2001ல் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. தற்போது மேலவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார்.


கடந்த அக்டோபர் 31ம் தேதியன்று ராஜஸ்தான் மாநிலத்தின் ஜúஸôல் என்ற ஊரிலுள்ள தன் வீட்டில் முக்கிய விருந்தினர்களுக்கு ஒரு விருந்து அளித்தார் ஜஸ்வந்த் சிங்.இந்த விருந்தில் கலந்து கொண்டவர்கள் யார் என்றால், ராஜஸ்தான் மாநிலத்தின் கல்வி அமைச்சர் கன்ஷியாம் திவாரி, நலத்துறை அமைச்சர் மதன் தல்வார், முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் பைரோன் சிங் ஷெகாவத்தின் மருமகன் மற்றும் தொழில்துறை அமைச்சர் நர்பத்சிங் ராஜ்வி, அரசு தலைமைக் கொறடா மகாவீர் பிரசாத் ஜெயின், பாஜக தேசிய துணைத் தலைவர்கள் லலித் கிஷோர் சதுர்வேதி, ரகுபீர் சிங் கௌஷல், சட்டமன்ற உறுப்பினர்கள் சங்கர் சிங், ராஜ்புரோஹித், ஜோகேஷ்வர் கார்க் ஆகியோர் இந்த விருந்தில் கலந்து கொண்ட பெரும்புள்ளிகள்.


அங்கு ஓபியம் கலந்த போதை பானம் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டதாக ஜஸ்வந்த் சிங் மீதும் அவருடைய ஒன்பது சகாக்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அளித்த முறையீட்டின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

5 கிராம் அளவுக்கு மேற்பட்ட ஓபியம் போன்ற போதை வஸ்துக்களைப் பயன்படுத்துவது போதைப் பொருள்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இக்குற்றத்துக்குக் குறைந்தது 10 ஆண்டுக்கால சிறைத்தண்டனை வழங்கப்படும். இதன்படி இந்த விருந்தில் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டது ஓபியம் கலந்த திரவம் என்று நிரூபிக்கப்பட்டால் ஜஸ்வந்த் சிங்குக்கும் அவருடைய சகாக்களுக்கும் குறைந்தது 10 ஆண்டுக்கால சிறைவாசம் கிடைக்கும்.


இந்த விருந்து குறித்து முதலில் காவல் நிலையத்தை அணுகியிருக்கிறார் ஓம் பிரகாஷ் பிஷ்ணோய் என்கிற உள்ளூர் காரர். அவர்கள் நடவடிக்கை ஏதும் எடுக்காததினால் ஜோத்பூர் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கினை உடனே விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி இப்போது உத்தரவிட்டுள்ளார்.


வடக்கில் அரசியல்வாதிகள் அளிக்கும் விருந்துகள் மிகவும் மனோரம்மியமாக இருக்கும். பீகார், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பல அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் கைத்தடிகள் அளிக்கும் விருந்துகளில் பல விருந்தினர்கள்உரிமம் பெறாத துப்பாக்கிகள் மற்றும் பெரிய நாட்டுத் துப்பாக்கிகளை வைத்து மிகவும் அநாயாசமாக வானில் சுட்டுக் கொண்டாடுவார்கள்.
அப்படிப்பட்ட சில விருந்தினர்களில் சில அப்பாவிகள் தவறுதலாகக் குண்டடிபட்டு சிவலோகம் மற்றும் விஷ்ணுலோக பிராப்தி அடைந்த சம்பவங்களும் உண்டு. போதை விஷயங்கள் தவிர, ரிகார்டு நடனமாடும் நர்த்தகிகளின் இடுப்பை அளந்து அளந்து நடனமாடும் அரசியல் தலைவர்களும் இவை போன்ற வட இந்திய விருந்து வைபவங்களில் காணக்கிடைக்கும் அரிய காட்சிகள்.


ஜஸ்வந்த் சிங் அளித்த விருந்தில் அப்படிப்பட்ட விஷயங்கள் இல்லையென்றாலும் வேறு வகையில் மிகவும் பரபரப்பாக வடக்கே பேசிக்கொள்ளப்பட்ட விஷயம் இந்த ஓபியம் வழங்கப்பட்ட விஷயம். இந்த விருந்துக் காட்சியை பல வட இந்திய ஊடகங்களில் சென்ற வாரம் அடிக்கடி காண்பித்தார்கள். தொலைக்காட்சிகளில் நமக்குக் காணக்கிடைத்த காட்சி என்னவென்றால் நம்ம ஊர் பெருமாள் கோவிலில் கொடுப்பது போல ஒரு உத்தரணியில் துக்கிணியூண்டு தீர்த்தம் கொடுக்கிறார்கள். இங்கு ஒரு சிறிய மாற்றம் என்னவென்றால் பெருமாள் கோவிலில் நாம் வாங்கிக் கொள்வோம். அந்த விருந்தில் ஜஸ்வந்த் சிங் அந்தத் துக்கிணியூண்டு தீர்த்தத்தைத் தன் கையில் வாங்கிக் கொள்கிறார். விருந்தினர்கள் அதை அவருடைய கையில் இருந்து பயபக்தியுடன் உறிஞ்சிக் குடிக்கிறார்கள். இது ராஜஸ்தானின் டாகூர் வம்சத்து விருந்தோம்பல் முறையாம். அந்தத் துக்கிணியூண்டு தீர்த்தத்தில்தான் ஓபியம் என்னும் போதை மருந்து கலந்து இருக்கிறார்கள் என்று புகார் கூறப்பட்டது.


ஊடகங்கள் இதுகுறித்துக் கேட்ட போது மிகவும் கடுமையாக அதை மறுத்தார் ஜஸ்வந்த் சிங்.தன்னுடைய மகன் மனவேந்திரா மக்களவை தேர்தலில் வென்றதற்கும் தனக்குப் பேத்தி பிறந்ததைக் கொண்டாடும் விதமாகவும் இந்த விருந்தினைத் தன் முன்னார்கள் வாழ்ந்த வீட்டில் ஏற்பாடு செய்ததாகவும் நிருபர்களிடம் கூறினார் ஜஸ்வந்த் சிங். அந்த விருந்தில் பரிமாறப்பட்டது கங்கை ஜலம், வெல்லம் மற்றும் சிறிது தேனீர் கலந்த பானம்தான் என்றும் அதனை அபின் என்று திரித்துக் கூறுவது அரசியல் விளையாட்டு என்றும் மறுக்கிறார். இதற்காகவே காத்திருந்ததுபோல, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியினர் இவரை மேலவை உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக விலக்கவேண்டும் என்று குடியரசுத் துணைத்தலைவருக்கு மனுக்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.


இதில் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால், இவர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு எதிரான கோஷ்டிகள்.


முதல்வரின் தூண்டுதலிலேயே இப்படி ஒரு வழக்கு தொடரப்பட்டது என்றும் பேசிக்கொள்கிறார்கள்.




ஆனால் ஒரு சந்தேகம். விருந்து முடிந்தது. எல்லோரும் வாயைத் துடைத்துக்கொண்டு வீட்டுக்குப் போயும் நாட்களாகிவிட்டன. போதைத் தடுப்புப் பிரிவுப் போலீசார் விசாரணையை எங்கிருந்து எடுத்துச் செல்வார்கள்?

விருந்தில் பரிமாறப்பட்ட அந்த திரவத்தை யாராவது எங்காவது கைப்பற்றி வைத்து இருக்கிறார்களா? அப்படிக் கைப்பற்றி வைத்திருப்பதாக சொன்னாலும் அது ஒரு சாட்சியமாக ஜஸ்வந்துக்கு எதிராக நிரூபிக்கப்பட வாய்ப்பு உண்டா?


அந்தப் பெருமாள் கோயில் தீர்த்தம் போல் வழங்கப்பட்ட திரவத்தில் கலந்திருந்தது உண்மையிலேயே கங்கா ஜலம், வெல்லம், தேனீர்தானா அல்லது இவர்கள் குற்றம் சாட்டுவது போல அபினும் கலந்திருந்ததா அல்லது அரசியல் மட்டும் கலந்திருக்கிறதா என்பதை எப்படிக் கண்டுபிடிக்கப்போகிறார்கள்?

2 comments:

  1. ஏற்கனவே கண்டு பிடித்ததற்கே ஒன்றும் செய்வதற்கில்லை.
    இனிமேல் கண்டு பிடித்து...... அதை நிரூபித்து.....
    போங்கப்பா!. எந்த பெரிய தலை இதுவரை தண்டணை பெற்றது?

    ReplyDelete
  2. அதைத்தான் நானும் சொல்ல வருகிறேன். வருகைக்கும் பதிவுக்கும் ரொம்ப நன்றி, சுல்தான்.

    ராகவன் தம்பி

    ReplyDelete