Saturday, February 28, 2009

முதல் மேடை நாடக அனுபவம்-4

கஜானன் மாதவ் முக்திபோத் என்னும் இந்திக் கவிஞனின் "சாந்த் கா மூ டேடா ஹை'' (சந்திரனின் முகம் கோணியது) என்கிற கவிதையை என்னுடைய முதல் மேடை நாடகமாகத் தயாரித்த அனுபவத்தைக் கடந்த மூன்று இதழ்களாக எழுதி வருகிறேன். ஓரிரு இதழ்களில் எழுதி முடித்துவிட வேண்டும் எனத் திட்டமிட்டு, மாடு பற்றிய கட்டுரை எழுதிய மாணவன் போல, எங்கெங்கோ அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன்.

ஒத்திகைகளைப் பற்றி எழுதத் துவங்கி, எங்கெங்கோ சுற்றியலைந்து அந்த நாடகத்தில் என்னுடன் பணிபுரிந்த நண்பர்களைப் பற்றிய சிறு குறிப்புக்கள் எழுதினேன். அது இன்னும் முடியவில்லை. கொஞ்சம் மீதமிருக்கிறது.

வெளியில் எதை எதையோ எழுதினலும் உள்ளுக்குள் மனது நெகிழ்ந்து கரைந்து கொண்டிருப்பது ஒரு நல்ல கவிதையை வரைவதற்கான களம். ஆனல் அந்தப் பாழாய்ப் போன கவிதை மட்டும் எனக்குக் கைகூடாமல் தமிழினத்தை நலமாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

சரி. இன்னும் வெகு சிலரைப் பற்றி மட்டும் சொல்லி விட்டு மீதியைத் தொடர்கிறேன்.

நச்சு என்று எங்களால் அழைக்கப் படும் நரசிம்மனுடைய சொந்த ஊர் திருவையாறு. நான் குப்பை கொட்டிய அதே அலுவலகத்தில் இன்னும் அழகாகக் குப்பை கொட்ட வந்தவன். அந்த அலுவலகத்தில் குப்பை கொட்டி முடித்து இப்போது கனரா வங்கியில் மேலாளராக இருக்கிறான். தற்போது புதிதாக பெங்களூர் வாசம். சங்கீதத்தில் அபாரமான ரசனை. மேல் ஸ்தாயியில் அநாயாசமாகப் பாடுவான். நாகூர் அனீபாவின் பாடல்களை அதே குரலில் பாடுவான். மசூதியில் பாங்கு ஓதுவதை மிக அநாயாசமாகச் செய்து காட்டுவான். திடீரென்று மூடைக் கெடுத்துக் கொண்டு மிகவும் நிஷ்டூர்யமான குரலுடன் சண்டை போடுவான். சந்திரசேகர கம்பார் எழுதிய கன்னட நாடகமான "ஜோ குமாரசாமி'' நாடகத்தை நேரடியாகக் கன்னடத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தான். இதை நானும் என்னுடைய நண்பன் சுரேஷூம் அலுவலகத்தில் கடன் வாங்கி அந்த நூலைப் பதிப்பித்தோம். தில்லான மோகனம்பாள் படத்தில் நாகேஷ் பார்ப்பவர்களிடம் எல்லாம் ஒரு எலுமிச்சம் பழத்தைக் கொடுப்பார். அது போல நாங்கள் பலருக்கும் இந்த நூலைப் பல காலம் கொடுத்து வந்தோம். இப்போது என்னிடமோ சுரேஷிடமோ ஜோ குமாரசாமியின் ஒரு பிரதி கூட இல்லை. என்னுடைய இயக்கத்தில் ந.முத்துசாமியின் நாற்காலிக்காரர் நாடகத்தில் நச்சுவின் நடிப்பு இப்போதும் என் கண்களிலும் மனத்திரையிலும். ஒரு கைத்துண்டைக் கூட வைத்து பாவனை மாற்றங்கள் செய்ய முடியும் என்று அந்த நாடகத்தில் நிரூபித்தவன் நச்சு.

ராம்ஸ் என்று நாங்கள் அழைக்கும் ராமச்சந்திரன் இந்திய வான்படையில் பணிபுரிந்து வந்தான். பயங்கர கட்டுமஸ்தான தேகம். வான்படை வீரர்கள் வளாகத்தில் அடிக்கடி எங்களுக்கு மது அருந்த ஏற்பாடு செய்த புண்ணியவான். எல்லாவற்றையும் முடித்து உணவு அருந்தச் செல்லும்போது எதிரில் வரும் எல்லா ஆஜானுபாவர்களையும் வம்புக்கு இழுத்து அடித்து விட்டுச் செல்வான். செய்யாறு பக்கம் ஊர் என்பதால் தெருக்-கூத்து போன்ற கலைகளில் மிகவும் ஆர்வம் உடையவன். நாடகத்தில் நான் அமைத்த மேடைச் சலனங்களை, கூத்து அடவுகளை மிகவும் அற்புதமாகச் செய்து காட்டியவன். வான்படை வீரர்களுக்காக பாதல் சர்க்கார் எழுதிய வங்க நாடகம் பிறகொரு இந்திரஜித் ("ஏபங் இந்திரஜித்'' மொழியாக்கம் கோ.ராஜாராம்). அந்த நாடகத்தில் மிகவும் அமைதியான கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தான். ராம்ஸ் இப்போது புனேவில் இருக்கிறான் என்று இளஞ்சேரன் சொன்னன்.

இப்போது நாடகத்தின் பின்புலத்தில் பணிசெய்தவர்கள் பற்றிக் கொஞ்சம் சொல்லலாம் என்று இருக்கிறேன்.

முகவீணை வாசித்த சிவாஜி, உறுமி வாசித்த முத்துசாமி, பலகை வாசித்த கந்தசாமி பற்றி ஏற்கனவே நிறைய எழுதி விட்டேன். இவர்களை அடுத்த நாடகங்களிலும் ஏற்பாடு செய்ய நேராதது நான் செய்த துரதிருஷ்டம்.
அப்போது என்னுடைய நண்பர் பாலரமணி தில்லி அகில இந்திய வானொலியில் பணிபுரிந்தார். இப்போதும் எனக்கு மிக நல்ல நண்பர். அவருடைய காலத்தில் அவர் கொடுத்த வானொலி வாய்ப்புக்களால். விளம்பரங்களுக்குக் கண்றாவியான மொழிபெயர்ப்பில், போலியான பாவனைகள் மிகுந்த குரலில் பேசித் தமிழ்த் தொண்டு புரியும் தொழில்முறை விற்பன்னர்கள் பலரை உருவாக்கினர் பாலரமணி. அபாரமான நகைச்சுவை உணர்வு கொண்டவர். யாரிடமாவது யாரைப் பற்றியாவது பேசும்போது பேசப்படும் நபரைப் போன்ற அதே தொனியில் சடாரென்று அதே பாவனைக்கு மாற்றிப் பேசும் திறன் கொண்டவர்.

அகில இந்திய வானொலியின் சில விசித்திரமான நிபந்தனைகளால் அந்தப் பக்கம் பொதுவாகவே எட்டிப் பார்க்காமல் இருந்தேன். இன்னொன்று, என்னைப்போல, அடர்த்தியாக தாடிவிட்டுக் கொண்டு நிமிடத்துக்கு ஒரு சிகரெட் பிடித்துக் கொண்டு, ஜோல்னப் புயடன் அலைந்து கொண்டிருந்த அறிவுஜீவிகளுக்கு அகில இந்திய வானொலி ஒத்துவராது என்கிற ஒரு உள்ளார்ந்த கர்வமும் அப்போது எனக்கு இருந்தது. அதனல் பாலரமணி நட்புடன் விடுத்த பல அழைப்புக்களையும் தட்டிக் கழித்திருக்கிறேன்.

இந்த நாடகம் முடிந்ததும் நானே பாலரமணியை சந்திக்க அவருடைய அறைக்குச் சென்று நாட்டுப்புற வாத்தியங்களை வாசிக்கும் கலைஞர்களுக்கு அகில இந்திய வானொலியில் வாய்ப்புத் தருமாறு கேட்டுக் கொண்டேன். பாலரமணி அடுத்த நாள் காலை என்னுடைய வீட்டுக்குக் கான்ட்ராக்ட் அனுப்பி விட்டார். அந்தக் காண்ட்ராக்ட் என்னுடைய பெயருக்குப் போடப்பட்டு இருந்தது. அவரிடம் சென்று அது என் பெயரில் வேண்டாம் என்றும் வாத்தியம் வாசிக்கும் அந்தக் கலைஞர்கள் பெயரில் அனுப்புங்கள் என்றும் கேட்டேன். அவர்களுடைய நிபந்தனைகளின் படி அப்படித்தான் அனுப்ப முடியும் என்றும்,

ஒருங்கிணைப்பாளராக என்னுடைய பெயரில்தான் அந்தக் கான்டிராக்ட் இருக்க முடியும் என்றும் சொன்னர். வாய்ப்புக் கிடைத்து அவர்கள் வானொலியில் வாசித்தால் போதும் என்று நினைத்தேன். முகவீணையும், உறுமியும் பறையும் தில்லி வானொலி நிலையத்தில் வாசிக்கப்போகிறார்கள் என்கிற நினைப்பே எனக்கு அளவில்லாத பெருமையை அளித்தது.

அப்போதெல்லாம் இதுபோன்ற தொலைபேசி சாதனங்கள் இல்லாத நேரம். சக்கூர்பூருக்கு என்னுடைய ஓட்டை ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு முத்துசாமிக்கும் கந்தசாமிக்கும் நேரில் அந்த செய்தியைச் சொல்ல ஓடினேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

தொலைபேசி வசதி இல்லாது போனலும் கெடுதி நினைப்பவர்களுக்கு எங்கிருந்து எப்படி எந்தத் தொடர்பு சாதனம் கிடைத்தது என்று தெரியாது. யாரோ ஒரு புண்ணியவான், கந்தசாமியிடம், "நாடகம் போடுகிறேன் என்று சொல்லி இவன் உங்களை வைத்து ஏற்கனவே லட்சக்கணக்கில் சம்பாதித்து விட்டான். இப்போது ரேடியோவில் யாரோ ஒரு ஆபீசருடன் சேர்ந்து உங்களை வைத்து நிகழ்ச்சி செய்து இன்னும் பல லட்சக்கணக்கில் அடிக்கப் போகிறான்'' என்ற நற்செய்தியை அவர்களுக்குப் புகட்டியிருந்தார்கள். சாந்த் கா மூ டேடா ஹை நாடக மேடையேற்றத்துக்கு சாகித்ய கலா பரிஷத் அமைப்பு கொடுத்த உதவித்தொகை அப்போது ஐந்தாயிரம் ரூபாய். அந்த நாடகம் மேடையேற்றியதனல் நான் நண்பர்களிடமும் அலுவலகத்திலும் வாங்கித் திரும்பக்கட்டிய கடன் -ஏறத்தாழ முப்பதாயிரம் ரூபாய். அப்போது நானும் என் மனைவியும் வாங்கிய மிகக் குறைந்த சம்பளத்தில் பல மாதங்கள் நண்பர்களை இழுத்தடித்து கடனை அடைத்தேன். அதே போல, அகில இந்திய வானொலி காண்டிராக்டில் குறிப்பிட்டிருந்த தொகை ரூ.300/-_ இதில் எங்கிருந்து இவர் லட்சக்கணக்கில் சம்பாதித்து இருக்க முடியும் என்று அவர்களிடம் நச்சு வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்துக் கேட்டான். அவர்கள் எதையும் கேட்கிற மனநிலையில் இல்லை. வானொலி நிலையத்துக்கு வந்து வாசிக்க மறுத்து விட்டார்கள்.

மிகவும் வருத்தத்துடன் வீடு திரும்பி வந்தேன். கொஞ்சம் சுரணையிருந்து அன்றிலிருந்து நாடகம் போடுவது போன்ற துர்க்காரியங்களை விட்டு என்னுடைய பிழைப்பை மட்டும் கவனித்து இருந்தால் பெருத்த தொகையை என்னல் வாழ்க்கையில் சேமித்து இருக்க முடியும். அதற்குப் பிறகும் தொடர்ந்து பல செருப்படிகளை வாங்கினேன். இன்னும் வாங்கிக் கொண்டிருக்கிறேன்.

அந்த சம்பவத்துக்குப் பிறகு அவர்களுடன் தொடர்பு முற்றாக அற்றுப்போனது. அவர்களை எங்கும் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டவில்லை. அது குறித்த பெருத்த வருத்தம் எப்போதுமே எனக்கு உண்டு.

இந்த நாடகத்துக்கு இசைவடிவம் கொடுத்தவர்கள் ஏஞ்செல்ஸ் மற்றும் சங்கர். ஏஞ்ஜெல்ஸ் இப்போது பல ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் கித்தார் வாசிக்கும் ஐந்து நட்சத்திர வாத்தியக்காரன். தில்லியில் தமிழர்கள் அனைவருக்கும் பரிச்சயமான மிகவும் பிரபலமான இசைக் கலைஞன். அவன் தில்லி வந்த புதிதில் நான் கல்யாணத்துக்கு முன்பு குடியிருந்த வீட்டுக்குக் கீழே ஒரு அறையில் தங்க வந்தவன். அந்த அறை நண்பர்கள் வழியாக அறிமுகமாகி என்னுடைய அறைக்கு வந்து என்னுடன் பேசிக்கொண்டு இருப்பான். பேசிக்கொண்டே அங்கேயே தங்கிவிடுவான். என்னுடனே சாப்பிட வருவான். எங்கள் அறையிலேயே தூங்குவான். எங்கள் அறையிலேயே குளித்துவிட்டு அங்கிருந்தே அலுவலகம் செல்வான். என் மீது அளப்பரிய பாசத்தைப் பொழிந்தவன். அங்கே தனியாக எதுக்கு வாடகை கொடுத்து இங்கே தங்கியிருக்கே - இங்கேயே வந்துடேன் என்று ஒருநாள் சொன்னேன். அதற்காகவே காத்திருந்தவன் போல மூட்டை முடிச்சு கட்டிக்கொண்டு என்னுடைய அறைக்கே வந்து விட்டான். அப்போது நானும் குணசேகரனும் முத்துராமலிங்கமும் ஒரு அறையில் இருந்தோம். நான் ஒருவன் மட்டுமே தங்க வேண்டும் என்று நான் ஒரு வீடு எடுத்து சாமியார் பூனை வளர்த்த கதையாக நாங்கள் நால்வர் ஆகிப்போனோம்.

என்னுடைய திருமணத்துக்குப் பிறகும் எங்கள் வீட்டிலேயே எங்களுடன் தங்கியிருந்து அவனுக்குத் திருமணம் ஆனதும்தான் எங்களை விட்டுப் பிரிந்தான். என் வீட்டில் தங்கியிருந்தபோது என்னுடைய மகள் பாரதியை எப்போதும் தோளில் சுமந்து அலைந்து இரவுகளில் அவளைத் தூங்க வைத்தவன் அவன். கல்யாணத்துக்குப் பிறகு எதற்கும் எட்டிக்கூடப் பார்ப்பது இல்லை என்றாலும் இப்போதும் எங்கள் வீட்டுப் பையன் அவன் என்றுதான் என் மனைவி அவனை எப்போதும் சொல்வாள். அவன் அந்த நாடகத்துக்கு சங்கருடன் சேர்ந்து இசை வடிவம் கொடுத்தான்.

சங்கர் தலைநகரில் இப்போது தமிழர்களிடையே மிகவும் பிரபலமான இசையமைப்பாளர். இசைக்கலைஞர். அந்த நாடகத்தில் முத்துசாமி, கந்தசாமி, சிவாஜி போன்ற வாத்தியக் கலைஞர்களுக்கான இசை வடிவங்களை அமைத்து, மிகவும் அற்புதமாக இசையமைத்து இருந்தார். நாடகத்தின் இரவுக் காட்சிகளில் அவர் அமைத்துக் கொடுத்த ஒலி வடிவங்கள் நாடகத்துக்கு மிகப் பெரிய பொலிவு அளித்தன. நான் இயக்கிய ந.முத்துசாமியின் "இங்கிலாந்து'' என்னும் நாடகத்துக்கு சங்கர் மிகவும் அற்புதமாக இசையமைத்து இருந்தார். அவருடைய இசையில் அந்த நாடகக் காட்சிகளுக்குத் தனி அர்த்தம் கிடைத்தன என்று சொல்ல வேண்டும்.

அடுத்த இதழில் அந்த நாடகத்துக்கு ஒளி வடிவமைத்த நண்பர் செ.ரவீந்திரன் பற்றி எழுதி முடித்துவிட்டு ஒத்திகைகளைப் பற்றித் தொடருகிறேன். இந்தக் கட்டுரை இழுத்துக்கொண்டே போகிறது. எதையோ பிடிக்கப்போய் எதிலோ முடிந்த கதையாகப் போய்க்கொண்டிருக்கிறது. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.

அந்த நாடகம் பற்றிய பதிவுகள் முழுமையாக இருக்க வேண்டும் என்கிற முனைப்பில் கட்டுரை சற்று நீண்டு விட்டது.

No comments:

Post a Comment