Sunday, March 1, 2009

நாடக மேடைஅனுபவங்கள்-5


வெங்கட்சாமிநாதன்

கஜானன் மாதவ் முக்திபோத் என்னும் இந்திக் கவிஞனின் "சாந்த் கா மூ டேடா ஹை'' (சந்திரனின் முகம் கோணியது) என்னும் நெடுங்கவிதைக்கு நாடக வடிவம் கொடுக்க முயற்சித்த என்னுடைய முதல் மேடை நாடகத் தயாரிப்பு அனுபவத்தைப் பற்றி எழுதி வருகிறேன். அந்த மேடை நாடகத் தயாரிப்பின் ஒத்திகைகளைப் பற்றி எழுதத் துவங்கியபோது அதில் ஈடுபட்டிருந்த நண்பர்களைப் பற்றி எழுதிச் செல்ல மனமும் கையும் என்னை இழுத்துச் சென்றது.
ஏற்கனவே ஒரு இதழில் கோடிட்டுக் காட்டியது போல, இந்த நாடகம் மட்டுமன்றி என்னுடைய நாடக செயல்பாடுகளின் பெரும்பகுதி ரவீந்திரன் எனக்குக் காட்டிய பாதையில் அமைத்துக் கொண்ட பயணங்களே எனச் சொல்லலாம்.

எண்பதுகளின் துவக்கத்தில் உடன் பணிபுரிந்த நண்பன் சுரேஷ் சுப்பிரமணியனும் நானும் ஊரிலிருந்து வாங்கி வரும் தமிழ் நூல்களைப் பரிமாறிக் கொள்வோம். நார்த் பிளாக் கட்டிடத்தில் உள்ள காபி போர்டு உணவகத்தில் அமர்ந்து நவீன இலக்கியம் பற்றிய உரையாடலுடன் நாளின் பெரும்பகுதியைக் கரைத்தவர்கள் நாங்கள். கோ.விஜயராகவன் என்கிற நண்பரும் உடன் இருப்பார். (வடக்கு வாசல் முதல் இதழில் விஜயராகவன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்) அப்போது வெங்கட்சாமிநாதனின் ஓர் எதிர்ப்புக் குரல், பாலையும் வாழையும் போன்ற கட்டுரைத் தொகுப்புக்களைப் படித்து நாங்கள் ஒருவகையில் ஞானஸ்நானம் பெற்றிருந்தோம். ஜேஜே சில குறிப்புக்கள் எங்களைப் பைத்தியம் பிடிக்க வைத்திருந்தது. க்ரியா பதிப்பகம் வெளியிட்ட ராம் மொழிபெயர்ப்பில் ஆல்பர் காம்யுவின் அந்நியன் எங்களைத் திக்குமுக்காட வைத்துக் கொண்டிருந்தது. தி.ஜானகிராமனின் மோகமுள், அம்மா வந்தாள், கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானிடம் போன்ற புதினங்களை எத்தனையாவது முறையாகவோ விடுப்புக்கள் எடுத்துப் படித்து வந்தோம். எங்களைப் பெரிதும் திரும்பிப் பார்க்க வைத்த வெங்கட்சாமிநாதன், க.நா.சுப்பிரமணியம் ஆகியோர் தில்லியில்தான் இருக்கிறார்கள் என்று கிடைத்த செய்தி எங்களுக்கு அதீதமான மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவர்களை சந்திக்க வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டோம். நாகவேணுகோபாலன் என்று ஒரு நண்பர். அவர் யாத்ரா, இலக்கியவட்டம் போன்ற இதழ்களில் சில கட்டுரைகள் எழுதியவர். பல முன்னணி (!) எழுத்தாளர்களுக்கு நண்பர். நாகவேணுகோபாலனும் நானும் லோதி காலனியில் இருந்து செயலகம் செல்லும் பேருந்தில் மேலே உள்ள குறுக்குப் பட்டையைப் பிடித்துத் தொங்கிக்கொண்டே பல நாட்கள் இலக்கியம் வளர்த்து வந்தோம். நாகவேணுகோபாலனிடம் ஒரு நாள் சொன்னேன். "வெங்கட்சாமிநாதனை சந்திக்க வேண்டும்'' என்று. அந்த நேரத்தில் எனக்கும் சுரேஷுக்கும் வெங்கட் சாமிநாதனைப் பற்றிக் கிடைத்த தகவல்கள் திகில் மூட்டுவனவாக இருந்தன. ஏறத்தாழ அவர் கையில் ஒரு பெரிய சாட்டை அல்லது கருப்பசாமியின் கையில் இருப்பதைப் போன்ற ஒரு அரிவாளை ஏந்திக் கொண்டு தன்னிடம் இலக்கிய ரீதியாக உடன்படாதவர்களை வதம் செய்து விடுவார் என்கிற ரீதியில் அவரைப் பற்றிய செவிவழிக் கதைகள் தில்லியிலும் தமிழ்நாட்டிலும் உலவி வந்தன. நவீன இலக்கியம் பற்றி அதிகம் தெரியாதவர்களிடம் அவர் பேசமாட்டார் என்றும் குறைந்த ஞானத்துடன் அவரை அணுகினல் நார்நாராகக் கிழித்து எறிந்து விடுவார் என்றும் படுபயங்கரமான வதந்திகள் உலவின. பொதுவாக சுரேஷ், சாப்பிடுவது, குடிப்பது போன்றவிஷயங்களுக்கு மட்டுமே வாயைத் திறக்க வேண்டும் என்ற கொள்கையைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பவன். நான் கொஞ்சம் ஓட்டை வாய். குறைந்த ஞானம் கொண்டதால் பேச்சு அதிகம் இருந்தது என்னிடம். (இருந்தது என்ன?) எனவே இணைந்திருந்தால் ஒன்று மற்றொன்றைசரி செய்து விடலாம் என்று நம்பினோம். வெங்கட்சாமிநாதனை சந்திக்கலாம் என்று தீர்மானித்தோம். நாகவேணுகோபாலனிடம் சொன்னோம் உங்களுக்குத்தான் அவரைத் தெரியுமே. எங்களை அவரிடம் அழைத்துப் போங்களேன் என்று. அவர், "சேஷாத்திரி என்று ஒரு நண்பர். ராமகிருஷ்ணபுரத்தில் வெங்கட்சாமிநாதன் வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருக்கிறார். அவர் உங்களை சாமிநாதனிடம் அழைத்துச் செல்வார்'' என்று சொன்னது மட்டுமின்றி சேஷாத்திரி அவர்களுடன் எங்களைத் தொடர்பு கொள்ள வைத்தார்.

சேஷாத்திரி மிகவும் அற்புதமான மனிதராக இருந்தார். கவிதைகள் எழுதுவார். நிறைய கவிதைகள். அவருடைய கவிதைகள் எப்படியோ இருக்கட்டும். தன்னுடைய வாழ்க்கையை மிகவும் அற்புதமான பொருள் பொதிந்த கவிதையாக மாற்றிக் கொண்டவர் அவர். இறப்புக்குப் பின் சடங்குகளை மறுத்துத் தன் உடலை மருத்துவ ஆய்வுக்குத் தானமாக வழங்கிய பெருமனம் கொண்டவர் சேஷாத்ரி அவர்கள். வாழும் காலத்திலும் வெளியில் தெரியாமல் பலருக்குப் பலவகைகளில் பெருத்த உதவிகளைச் செய்த நல்ல மனம் படைத்தவர். சேஷாத்திரி என்னையும் சுரேஷையும் வெங்கட்சாமிநாதன் வீட்டுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினர்.

வெங்கட்சாமிநாதனின் கையில் சாட்டை இல்லை. கருப்பசாமியின் வெட்டரிவாள் இல்லை. ரொம்பவும் சாதாரணமாகப் பழகினர். மிகவும் எளிமையாகப் பேசிக்கொண்டிருந்தார். சுரேஷுக்கு மட்டும் உள்ளூர உதைத்துக் கொண்டிருந்தது என்னைப் பற்றி. நான் ஏதாவது எக்குத் தப்பாகப் பேசி அல்லது கேள்விகள் கேட்டு சாமிநாதனிடம் வாங்கிக் கட்டிக் கொள்வேனோ என்று. ஒவ்வொரு இரண்டு நிமிடமும் பதட்டத்துடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். நல்ல வேளை அப்படி ஏதும் நடக்க வில்லை. என்றும் இல்லாதவாறு அன்று நான் எல்லாவற்றையும் மூடிக்கொண்டு அடுத்தவர் பேசுவதைக் கேட்கும் மனநிலையில் இருந்தேன்.

வெங்கட்சாமிநாதன், கொஞ்ச நேரம் எங்களைப் பற்றிக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தவர், "ரவீந்திரன் என்று ஒரு நண்பர் இருக்கிறார். அடுத்து வரும் சனிக்கிழமை அன்று கரோல்பாக்கில் அவருடைய வீட்டில் சந்திக்கலாம்'' என்று முகவரி கொடுத்தார்.

செ.ரவீந்திரன்

சனிக்கிழமை ரவீந்திரன் வீட்டுக்குப் போனோம். சிரித்த முகத்துடன் எங்களை வரவேற்றார் ரவீந்திரன். அவருடைய கரோல்பாக் வீட்டில் அன்று துவங்கிய எங்கள் சனிக்கிழமை விஜயம் ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்தது. அவர் தில்லி பல்கலைக்கழக வளாகத்துக்கு வீடு மாற்றிய பின்னரும் எங்கள் சனிக்கிழமை விஜயங்கள் தொடர்ந்தன. அவருடைய வீட்டை நாங்கள் செல்லமாக மடம் என்று அழைத்தோம். வீடெங்கும் புத்தகங்கள் எல்லா இடங்களிலும் இறைந்து கிடக்கும். உலகத் திரைப்பட விழாக்களில் வழங்கப்படும் கையேடுகளும் விவரணப் பட்டியல்களும் இறைந்திருக்கும். சனிக்கிழமைகளில் எப்போதும் நண்பர்கள் கூட்டம். மடத்தில் மது அருந்தாத நவீன இலக்கிய வாதிகளும் நவீன நாடகக் காரர்களும் அநேகமாக யாருமே இருக்க முடியாது. பல நாடக நண்பர்கள் அங்குதான் அறிமுகமானர்கள். உலக நாடகங்கள் பற்றிய நூல்களை, நாடகக் கோட்டுபாடுகள் குறித்த நூல்களை, நாடகங்களின் தொழில் நுணுக்கங்கள் குறித்த நூல்களை, நாடகப் படிகளை, பல நாடக அறிஞர்களின் நாடகங்களை ரவீந்திரன் புண்ணியத்தில் படித்தோம். நாடகங்கள் பற்றி, உலக சினிமா பற்றி வெங்கட்சாமிநாதனும் ரவீந்திரனும் எங்களுக்குத் திறந்து வைத்த சாளரங்கள் ஏராளம்.

ரவீந்திரன் அப்போது சென்னையில் கூத்துப்பட்டறையுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார். தன்னுடைய வாழ்நாளின் பெரும்பாலான பகுதிகளை அந்தக்குழுவின் நாடகங்களுக்கு ஒளியமைப்பதற்காகச் சென்ற ரயில் பயணங்களில் கழித்திருக்கிறார். கூத்துப்பட்டறை மட்டுமல்லாது தமிழகத்தில் நிகழ்ந்த அனைத்து நவீன நாடக விழாக்களிலும் ரவீந்திரன் பல இயக்குநர்களுடன் பணி புரிந்திருக்கிறார். இந்திய நகரங்கள் மட்டுமல்லாது உலகின் பல நாடுகளிலும் சென்று நாடகங்களுக்கு ஒளியமைத்து வருகிறார். அந்நிய நாட்டுத் திரைப்படங்களைத் தேர்வு செய்யும் குழுவில் இருந்திருக்கிறார் ரவீந்திரன். தில்லிப் பல்கலைக் கழகத்தில் இந்திய மொழித்துறையின் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்று இப்போது புதுவை பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா மாணவர்களுக்கு வகுப்புக்கள் எடுத்து வருகிறார். என்னுடைய இப்போதைக்குக் கடைசி நாடகமான சாம்பசிவா வரை ரவீந்திரன் ஒளியைமத்துக் கொடுத்தார். என்னுடைய ஒவ்வொரு நாடகத்திலும் ஏதேனும் பொலிவு இருந்தது என்றால் அது ரவீந்திரன் அமைத்துக் கொடுத்த ஒளியமைப்பில்தான் என்று நேர்மையுடன் நம்புகிறேன்.

நான் வடக்கு வாசல் துவங்கியதும் ரவீந்திரன் புதுவைக்கு இடம் பெயர்ந்ததும் ஏறத்தாழ ஒரே நேரத்தில் நிகழ்ந்தவை என்று சொல்லலாம். ஒருவேளை ரவீந்திரன் தில்லியில் இருந்திருந்தால் என்னை ஏதாவது நாடகம் மேடையேற்றத் தூண்டிக் கொண்டு இருந்திருப்பார். தெருக்கூத்துக் கலைஞர் புரிசை கண்ணப்பத்தம்பிரான் பற்றிய என்னுடைய ஆவணப் படத்திலும் சி.சு.செல்லப்பா பற்றி நான் தயாரித்த முடிவுறாத ஒரு ஆவணப்படத்திலும் அவர் பெரும் பங்காற்றினர். தமிழின் நவீன நாடக மேடைகளில் ஒளியமைப்புக்கு ஒரு சிம்மாசனத்தைப் பெற்றுத் தந்தவர் ரவீந்திரன் என்று சொன்னல் அது மிகையாகாது. யாத்ராவில் "பின்னோக்கிய மறுபார்வையில்'' என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைகள் மிகவும் தரமானவை. தமிழ் சமூகத்தின் முன்பு பல கேள்விகளை மிகவும் அநாயாசமாக எழுப்பி நிற்பவை. தெருக்கூத்து, யட்சகானம் பாகவதமேளா மற்றும் ரிச்சர்ட் ஷெக்னர் பற்றி அவர் எழுதிய கட்டுரை ஆகியவற்றை ஒவ்வொரு நாடகக் காரனும் அவசியம் படிக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து தில்லிக்கு நாடக விழாக்களில் கலந்து கொள்ள வரும் நவீன நாடகங்களுக்கும் ஒளியமைப்பார் ரவீந்திரன்.

ராம் கலாச்சார மையத்தில் நாடகம் குறித்த ஒரு பகுதிநேர பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டு சுய ஆர்வத்தினல் ஒளியமைப்பின் பல பரிமாணங்களைக் கற்று தமிழ் நாடக மேடைகளைப் பரிமளிக்க வைத்துக் கொண்டிருப்பவர் ரவீந்திரன்.
அவரிடம் உள்ள ஒரே ஒரு குறையாக நான் காண்பது எதையும் முன்னே நின்று செய்ய மாட்டார். பின்னணியில் செயல்வடுவதில் ஆர்வம் காட்டுவார். புரிசை கண்ணப்பத் தம்பிரான் பற்றிய படம் துவங்கிய போது ரவீந்திரனை மனதில் வைத்துத்தான் செயல்பட்டேன். கேமரா, நல்ல கேமராமேன், படம் தயாரிக்கும் செலவுக்கான பணம் அத்தனையும் இருக்கிறது. இந்தப் படத்தை நீங்களே செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். வழக்கப்படி சிரித்துக் கொண்டே எல்லோரும் சேர்ந்து செய்யலாம் என்று பதுங்கினர். ஆனல் அந்தப் பணிகளில் தீவிர ஈடுபாட்டுடன் இயங்கினர். அதே போல செல்லப்பா பற்றிய படத்திலும் அதீதமான ஆர்வம் காட்டினர்.

தமிழ்ச் சமூகம் பற்றிய ஆழ்ந்த அக்கறை உள்ளவர் ரவீந்திரன். அவருடைய கட்டுரைகளில் சமூக அவலங்களை மிகவும் கடுமையாக சாடியிருக்கிறார். தமிழ்ப் பேராசிரியராக இருந்தும் தமிழ்ப் பேராசிரியப் பெருமக்களைப் பல இடங்களில் துவைத்து அலசிக் காயப்போட்டவர். அதனல் பொதுவாக பலருக்கு அவ்வளவாகப் பிடிக்காமல் போனவர். என்னுடைய அனைத்து செயல்பாடுகளின் பின்னணியிலும் வெங்கட்சாமிநாதன் மற்றும் ரவீந்திரன் ஆகியோர் அந்நாளில் காட்டிய வெளிச்சங்கள் எப்போதும் வழித்துணைக்கு வந்து கொண்டிருப்பதாக உறுதியுடன் நம்புகிறேன்.

யதார்த்தாவின் அனைத்து நாடகங்களிலும் ரவீந்திரனுக்கு உதவியிருக்கிறான் சுரேஷ் சுப்பிரமணியம். தலைநகரில் கலை இலக்கிய நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டியவன். படிப்பதில் அதீத ஆர்வம் காட்டுபவன். அதிகமாகப் படிப்பவர்களுக்கு இயற்கையில் அமையும் செயல்பாடுகளில் ஆர்வமில்லாமை அவனையும் தாக்கியதால் அதிகமாக வெளியில் வராதவன். யதார்த்தா மற்றும் வடக்கு வாசல் இதழின் துவக்க நாட்களில் பெரும் பணியாற்றியவன் சுரேஷ்.

இனி ஒத்திகைகள் மற்றும் மேடையேற்றத்தைப் பற்றி எழுதி முடித்து விடலாம் என்று இருக்கிறேன்.

2 comments:

  1. Dear KP, sorry, enakku thamizh typing theriyaadhu. yov, nee nanbarhal pathhilaam ezhuthiirukka. Muthuramalingam nu oruthhan unkooda irundhaan, yaadharthaa nnu peyar selectionla unnoda irundhaan enhira visayathha eppadi marantha...Ravindran Sir veettukku naanthaan mudhalla poi ipdi KPnnu oru aal ungalap paakkanumnnu aavala irukkaannu sonnen. Appa Ravindran Sir kooda utkaarndhu pesittirundhavar Shri Venkat Saminathan Sir. Appa naan peria Marxist. Justg unna pathhi sollittu vandhutten. Nee endha amaippukkullum poha virumbhaatha Viduthalai Virumbi. Kaalam paathiyaa...Naan patti adikkavum (netthila thaan) nee Tamil Sangam amaippuhalukkullum.Paavam KP Thathhuvangal.

    ReplyDelete
  2. முத்து

    கோபிக்காதே தலைவா.

    இது சாந்த் கா மூ டேடா ஹை தயாரிப்பு மட்டுமே பற்றிய பதிவு. அப்போ நீ இல்லையே. நம்முடைய முதல் நாடகத்தைப் பத்தி எழுதும்போது உன்னைப் பத்தி எழுத மூட்டை மூட்டையா இருக்கு. உன்னை என்னால் மறக்க முடியுமா? இன்னும் ஒண்ணு. என்னுடைய எழுத்துக்கள் எந்தவித ஒழுங்கும் இல்லாமல் அவ்வப்போது எழுதித் தூக்கிப் போடுவது. அதனால் நேரும் சில விடுபடல்கள். இது வேணும்னே பண்ற விஷயம் கிடையாது. வழக்கமான சொதப்பல்தான்.

    நீ நெத்தியிலே பட்டை அடிச்சிக்கிறது பத்தி ரொம்ப சந்தோசம். நெத்தி உன்னோடது மட்டுமே ஆக இருக்க ஆண்டவன் அருள் புரியணும். தில்லி தமிழ் சங்கத்தில் நான் எந்தப் பொறுப்பும் ஏத்துக்கிட்டது கிடையாது. ஏத்துக்கவும் மாட்டேன்.

    நம்ம ஊர்லே செவத்து மேலே உட்கார்ந்து பஞ்சாயத்து பண்ணுவாங்க பார்த்து இருக்காயா? நான் அந்த வேலையைத் தான் பண்ணிக்கிட்டு இருக்கேன். எந்தக் காலத்தில் நாம் எல்லாம் உருப்பட ஆசைப்பட்டு இருக்கோம்?

    ரொம்ப வருசங்கள் கழிச்சுப்பார்த்த மகிழ்ச்சியில் திளைக்கும்

    உன்
    கேபி

    ReplyDelete