Friday, November 9, 2007

தலித் எழுச்சியின் முதல் தடம் - அயோத்திதாச பண்டிதர்

தொண்டை மண்டல வல்ல காளத்தி தெய்வப்புலமை. வைத்திய சிம்ஹம். சங்கை கவிராஜ பண்டிட் க.அயோத்தி தாஸ தம்ம நாயகர் - ஸ்ரீலஸ்ரீ அயோத்தி தாச பண்டிதர் வாழ்ந்த காலம் 1845 லிருந்து 1914 வரை.

நீலகிரியை சோந்த அயோத்தி தாசர் பிறப்பால் ஆதி திராவிட வகுப்பை சேர்ந்தவர். தமிழகத்தின் அரசியல் அரசியல் சரித்திரத்தில் மிக நீண்ட காலம், அதாவது சுமார் எண்பது ஆண்டுகளுக்கு மேலாக இருட்டடிப்பு செய்யப்பட்ட ஒரு மாபெரும் மனிதர் அயோத்திதாசர் என்று சொன்னால் அது மிகையான வார்த்தையாக இருக்காது.

தமிழ்ச் சூழலில் இவை போன்ற காரியஙகள் துரதிருஷ்டவசமாக அதிர்ச்சி தரும் காரியமாக அமைவதில்லை. சமத்துவம். பகுத்தறிவு. நவீனத்துவம் முதலான கொள்கைப் போக்குகளில் தமிழக அளவில் பெரியாருக்கும் தேசிய அளவில் அம்பேத்கருக்கும் முன்னோடியாக விளங்கியவர் அயோத்தி தாசர். இலக்கிய சமூக சமய வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் புதிய சமுதாயம் படைக்கும் பணியில் தம்மை முழுதுமாக அர்ப்பணித்துச் செயல்பட்டவர். ஆதி திராவிடர்களை அரசியல் பேசவைத்தவர்.

ஏற்கனவே சொன்னதுபோல, சுமார் ஒரு எண்பது ண்டு காலம் பகுத்தறிவுச் செம்மல்கள், சமூகநீதிப் போராளிகளான திராவிட இயக்க மாமன்னர்களின் பார்வையில் கூட அவர்கள் தங்களுடையதாக எடுத்தாளும் பல கருத்தாக்கங்களின் முன்னோடியான அயோத்தி தாசர் அகப்படும் பாக்கியம் செய்திருக்கவில்லை என்பது மிகவும் துரதிருஷ்டவசமான விஷயம். இதற்கான காரணங்களை வரலாறு என்றாவது ஒரு நாள் இவர்களுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் முன் எடுத்து வைக்கும்.

சமூக நீரோட்டத்தில் கவிதை, கதை, கட்டுரைகள், நாடகங்கள் போன்றவற்றில் ஆதி திராவிடர்கள் அக்காலத்தில் மிக அருமையானதொரு பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். ஆனால் மிகவும் துரதிருஷ்டவசமாக 1860லிருந்து 1910 வரை சுமார் 50 ண்டுகள் ஆதி திராவிடர்களால் படைக்கப்பட்ட இந்த கவிதை, கதை, கட்டுரைகள், நாடகங்கள் எங்கும் கிடைக்காமல் போனதால் அவர்களது வரலாற்றையும் அயோத்தி தாசர் போன்ற ஆகிருதிகளின் வரலாற்றையும் விரிவாகத் தெரிந்து கொள்ள அரிதாகிப்போனது. அயோத்தி தாசர் பரவலாக தலித்துகள் இடையிலும் பேசப்படாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

ஆதி திராவிடன். மகாவிகடதூதன். பூலோக வியாசன். பறையன். ஆதி திராவிட மித்திரன் போன்ற பத்திரிகைகள் அக்காலகட்டத்திய தலித்துகளால் கொண்டுவரப்பட்டவை. இந்தப் பத்திரிகைகள் எதுவும் பின்னாளில் ஆய்வாளர்களுக்குக் கிடைக்கவில்லை. இவை கிடைத்திருந்தால் அக்காலத்திய ஆதி திராவிடர்களின் போராட்டங்கள் மற்றும் அயோத்தி தாசரைப் பற்றிய முழு விபரங்கள் கிடைத்திருக்கும்.

இந்நிலையில் அயோத்திதாசரை இருபதாம் நு஡ற்றாண்டின் இறுதியில் கண்டெடுத்த பெருமை - இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தின் தலித்துக்கள் இடையே அயோத்தி தாசரை மறுபிறப்பு எடுக்க வைத்த பெருமை ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ய்வு மாணவராக இருந்த தோழர் ஞான.அலாய்சியஸை சேரவேண்டும். அயோத்திதாசரின் எழுத்துப் பணிகளுக்கு சாகாவரம் அளித்து இருக்கிறார் அலாய்சியஸ் என்று சொன்னால் மிகையாகாது.

அயோத்தி தாசரைப் பற்றி நமக்கு மிக அதிக அளவில் கிடைக்கும் பதிவுகள் என்பவை அவர் 1907 லிருந்து 1914 அதாவது அவருடைய இறப்பு வரை சிரியராக இருந்து வெளியிட்ட ஓரணாத் தமிழன் என்னும் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளின் வாயிலாகத்தான். அயோத்தி தாசரின் இறப்புக்குப் பிறகு அவருடைய மகன் க.அ.பட்டாபிராமன் 1922 வரை தமிழன் இதழ்களை நடத்தியிருக்கிறார்.

மிகுந்த சிரமத்தின் பேரில் இக்கட்டுரைகளை ஓரிடத்தில் தொகுத்து அயோத்தி தாசர் சிந்தனைகள் என்னும் தலைப்பில் இரு தொகுதிகளாக வெளியிட்ட அரும்பணியை செய்தவர் ஞான அலாய்சியஸ். இவருடைய இந்த அற்புதப் பணிக்கு ஊக்கமளித்து பெரும் செலவில் அயோத்தி தாசர் சிந்தனையின் இரு தொகுதிகளையும் வெளியிட்டவர்கள் நாட்டார் வழக்காற்றியல் மையம், தூய சவேரியார் கல்லு஡ரி, பாளையங்கோட்டை. பின்னர் தலித் சாகித்ய அகாடமியால் அயோத்தி தாசர் சிந்தனைகள் மூன்றாம் பகுதி வெளியிடப்பட்டது.
ஞான அலாய்சியசுக்கும் பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் மையத்துக்கும் தமிழ்ச் சமூகம் மிகப்பெரிய அளவில் கடமைப்பட்டுள்ளது.
ஞான அலாய்சியசுக்கு தமிழன் இதழ்களை தந்து உதவியவர் தோழர் அன்பு பொன்னோவியம். அவர் தன்னுடைய முன்னுரையில் குறிப்பிடுகிறார் -
தமிழகத்தின் புதைக்கப்பட்ட களஞ்சியமாகக் கிடந்த இது, நான் எண்ணிப் பார்க்க முடியாத அளவில் பல நு஡று பக்கங்களைக் கொண்ட இரு தொகுதிகளாக வெளியாவதை தமிழன் பத்திரிகையின் மறு பிறப்பாக எண்ணி மகிழ்கிறேன். இது தமிழினத்திற்கே கூட அதிர்ச்சியுடன் வியப்பூட்டும் நிகழ்வாகத் தெரியக்கூடும் என்று கருதுகிறேன்...

என்று கூறுகிறார். இருந்தும் இந்த இரு தொகுதிகளிலும் கூட எங்கும் அயோத்தி தாசரின் இளமைப் பருவம். கல்வி குறித்த பதிவுகள் எங்கும் கிடைக்கவில்லை. சமூகம். தாழ்த்தப்பட்டோருக்கான உரிமைகள் குறித்த சிந்தனைப் பதிவுகள். பெளத்த மதப் பிரச்சாரம் போன்றவற்றுக்கே வாழ்க்கையை அதிகமாக அர்ப்பணித்த அயோத்தி தாசர் தன்னைப் பற்றிய குறிப்பைக்கூட எங்கும் பதிவு செய்யவில்லை. ஓரிடத்தில் அவருடைய முன்னோர்களைப் பற்றி வருகிறது. இதுவும் நம் தமிழ் இலக்கிய சரித்திரம் குறித்த ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக இருக்கிறது.

பிரான்சிஸ் வைட் எல்லிஸ் என்னும் துரை 1796ல் சென்னை வருகிறார். இவர் திருக்குறள் மீது ஆங்கிலத்தில் உரையும் விமர்சனக் கட்டுரையும் எழுதியிருக்கிறார். தமிழ் இலக்கியச் சுவடிகளை சேகரிப்பதில் தன் வாழ்நாளை அதிகம் செலவழித்தவர் இந்த எல்லிஸ் துரை. இவரைப்பற்றி மீனாட்சி சுந்தரம்பிள்ளை தன்னுடைய கட்டுரை ஒன்றில் மிகவும் சிலாக்கியமாக சொல்லியிருப்பார். இந்த எல்லிஸ் துரையின் நண்பர் ரிங்டன் துரையிடம் பட்லராக வேலை பார்த்தவர் கந்தப்பன். இவர் அயோத்தி தாசரின் பாட்டனார். இந்தக் கந்தப்பன், திருக்குறள், நாலடி நானு஡று போன்ற சில ஓலைச் சுவடிகளை எல்லிஸ் துரை வசம் ஒப்படைத்திருக்கிறார். அப்போது சில பிராமணர்கள் துரையிடம் சென்று கந்தப்பன் தீண்டத்தகாத வகுப்பில் பிறந்தவன் என்றும் அவன் கூறுவதையும் அவன் கொடுப்பதைப் பற்றி அதிகம் பொருட்படுத்தத் தேவையில்லை என்றும் அறிவுரை கூறியிருக்கின்றனர். அவற்றைப் பொருட்படுத்தாத எல்லிஸ் துரை திருக்குறளையும் நாலடி நானு஡றையும் நு஡லாக அச்சிட்டு வெளியிட்டார்.
இத்தகவலை அயோத்திதாசர் தன்னுடைய தமிழன் இதழில்.
''எனது பாட்டனார் ஜார்ஜ் ரிங்டியன் துரை பட்லர் கந்தப்பன் என்பவர் ஓலைப்பிரிதியாயிருந்த திருக்குறளையும். நாலடி நானு஡றையும் ஈஸ்ட் இன்டியா கம்பெனியார் காலத்தில் தமிழ்ச் சங்கம் கூட்டி வைத்த கனம் எல்லீஸ் துரை அவர்களிடம் கொடுத்து அச்சுக்கு வந்திருக்கிறது"...
இதுவழியாக அந்தக் காலத்தில் ஆதி திராவிடர்கள் தமிழின் மிக அரிய நு஡ல்களைப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள் என்பது இங்கு தெளிவாகப் பதிவாகிற விஷயம்.


மேலே குறிப்பிட்டது போல அயோத்தி தாசரின் காலகட்டம் 1845லிருந்து 1914 வரை. அரசியல், சமயம், இலக்கியம் போன்றவற்றில் அவர் தீவிர ஈடுபாட்டுடன் செயலாற்றிய காலகட்டம் சுமார் 1865ல் துவங்குகிறது. அந்தக் காலகட்டத்திய தலித் வாழ்வு நிலை மற்றும் தீண்டாமைக் கொடுமைகள் பற்றி இங்கு எதுவும் சொல்லித் தெரிய வேண்டிய காரியமில்லை. இனி இங்கு சொல்லப்போகும் தாசரின் சிந்தனைகளும் இலட்சியங்களும் சாதி மதமற்ற அற வாழ்க்கையும், கருணையும் அன்பும் மிக்க மேம்பட்ட மனித உறவுகளைப் பற்றியிருப்பதால் அவை அனைத்தும் மானிட இனத்துக்கே சொந்தமானவை என்று உறுதி பட எடுத்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. ஏனெனில் தாசரின் சிந்தனைகளும் லட்சியங்களும் உலகுக்கு ஒளியாக உதித்த கெளதம புத்தனின் அகிம்சையில் இருந்து உருவானவை. சனாதனம், இன-நிறவாதம், ஆணாதிக்கம், மதவாதம், பயங்கரவாதம் ஆகிய சகலவிதமான வன்முறைகளுக்கும் எதிரானவை.

சாதி இழிவை அகற்றுவதை மட்டுமே தன்னுடைய முழுக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கி இருக்கிறார் தாசர். தீண்டாமை வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் திணிக்கப்பட்டதே ஒழிய அது ஆதிகாலம் தொட்டே இருந்தது கிடையாது என்பது அயோத்தி தாச பண்டிதரின் கருத்து. இதன் அடிப்படையிலேயே அவர் சாதி எதிர்ப்புக் கருத்துக்களையும் செயல்பாடுகளையும் அமைத்துக் கொண்டார். இது போன்ற கருத்தாங்கங்களையே பின்னாளில் பாபா சாகிப் அம்பேத்கர் போன்ற ஆய்வாளர்கள் கையாண்டார்கள் என்பது மிகவும் குறிப்பிடத் தகுந்தது. தீண்டப்படாத மக்களின் அன்றைய இழிவான வாழ்வுக்கு அவர்களையே குறை சொல்லும் கருத்துக்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்ததோடு தீண்டாமை நிலவுவதால் பலன் பெறும் சக்திகளாலேயே இக்கருத்து திணிக்கப் பட்டது என்னும் முடிவை தாசர் எட்டுகிறார்.

அக்காலத்திய தீண்டாமைக் கொடுமை மற்றும் சாதிய இழிவுகளுக்கு சரியான சவுக்கடி ஆதி திராவிடர்கள் ஒவ்வொரும் கல்வி மற்றும் தொழில் துறைகளில் மேன்மையான இடங்களைப் பெறுவது என்ற முடிவுக்கு வருகிறார் தாசர். அக்காலத்தில் பிரபலமாக விளங்கிய சித்த வைத்தியத் துறையைத் தனதாக்கிக் கொள்கிறார் அவர். உள்ளுக்குள் உறைந்து கிடந்த அரசியல் விழிப்புணர்வு அவரை தீவிரமாக செயல்பட வைத்திருக்கிறது.

நல்லவை. பயனுள்ளவை. சுகாதாரமானவை. பொருளாதார தாயமும் ஆதிக்கமும் தரக்கூடியவை ஆகியற்றிலிருந்து மிகவும் திட்டமிட்டுத் தலித்துக்கள் சாதி அடிப்படையில் இந்து சாஸ்திரங்களின் சார அடிப்படையில் விலக்கி வைக்கப்பட்டதை எடுத்துக் காட்டினார். உதாரணமாக, பிரிட்டிஷ் ராணுவத்திலும். மருத்துவத்துறையிலும், கிறிஸ்துவ மிஷனரிகளின் பள்ளிக்கூடங்களிலும், கிறிஸ்துவ மதத்திலும் ரம்பகாலத்தில் உயர்சாதியார்கள் சாதி, மத சாரம் பார்த்து சேர மறுத்து வந்தார்கள். இப்படி தலித்துக்கள் சாதி, மத சாரம் பார்க்க அவசியமில்லாததாலும் சாரக் கேடான விஷயங்கள் அவர்களுக்கு உரியவை என்று பிறர் கருதியதாலும், தலித்துக்கள் அந்தத் துறைகளில் சேர்ந்து நவீன வாழ்க்கையில் முன்னேற்றமடைந்து வந்தார்கள். ஆனால் தலித்துக்களின் புதிய வாழ்க்கை முன்னேற்றத்தைக் கண்ட மேல் சாதி இந்துக்கள் சாரக்கேடெல்லாம் பார்க்காமல் அந்த நவீனத் துறைகளிலும், கிறித்துவ மதத்திலும் சேர்ந்து தலித்துகளைப் பழைய சாதி சாரம் காட்டி வெளியே துரத்திய சம்பவத்தை தாசர் வேதனையோடு குறிப்பிட்டார். (1908)

"இத்தனைக்கும் சாதி மத சாரம் பார்த்த அந்தப் பெரிய சாதியோர் என்போர். காலங்காலமாக 'மதவித்தைகளையும் விருத்தி செய்கிறார்களேயன்றி, பூமியை உழும் நவீனக் கலப்பையையோ, விரைவாக நீர் பாய்ச்சும் ஏற்றத்தையோ, நெல்லையும் அரிசியையும் பிரிக்கின்ற எந்திரத்தையோ, போட்டோ கிராப், டெலிகிராப், போனோ கிராப், மோனோ கிராப், ஸ்டீம் ரயில்வே, டிராட்மவே போன்ற நவீன அறிவியல் சாதனங்களையோ கண்டுபிடிக்கவில்லை. னால் அவர்கள் பராமரித்து வரும் பழைய சாதி மத திக்க நிலையால் மட்டுமே இப்புதிய வசதி வாய்ப்புக்களை அபகரிக்க முடிகிறது" என்று வேதனைப்படுகிறார்.

இந்து சமுதாயத்தில் நல்ல இந்து கெட்ட இந்து என்பதை விட உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஏறுவரிசைதான் முக்கியம் என்று அம்பேத்கார் குறிப்பிடுவார். இது போன்ற வரிசைகள் இல்லாத காரணத்தால் அன்று கிறிஸ்துவ மதத்துக்கு ஏராளமான தலித்துக்கள் மாறினார்கள். ஆனால் கிறிஸ்துவத்தின் ஆர்.சி.பிரிவும், புராடஸ்டென்டு பிரிவும் இந்து மதம் போலவே சாதி பேதங்களை ஏற்றுக்கொண்டதால் அதற்கு இந்தியக் கிறிஸ்துவ மிஷனரிகளே காரணமாகிப் போனதால் அயோத்தி தாசர் அதையும் நிராகரித்தார். கிறிஸ்துவ மதம் மாறிய ஆதி திராவிடர்கள் சாதி அடையாளத்தோடு வாழ நேர்ந்ததோடு, பாதிரியார்கள், ஞானஸ்நானம், வாரக்காணிக்கை, அர்ச்சிஷ்டவர்களின் உற்சவம், புதுநன்மை, விசுவாசம், புதைக்கக்குழி தோண்டுதல், மணியடித்தல், து஡ம்பா, குருசு, தேன், மெழுகுவர்த்தி ஆகியவற்றுக்கு விதித்த தொகைகளைக் கொடுத்து ஓட்டாண்டிகள் ஆகிறார்கள் இந்த ஆதி திராவிடர்கள் என்று தாசர் எழுதினார். புராட்டஸ்டண்டு மார்க்கத்தில் சேர்ந்து படித்துப் பதவிகள் வகித்த தலித்துக்களை சாதி இந்துக்கள் அடித்துத் துரத்தித் தாங்களே கிறிஸ்தவம் மாறினார்கள். பழைய கிறிஸ்துர்களைப் பறைக்கிறிஸ்துவர்களாக்கினார்கள். பாதிரிமார்களும் இதற்கு இடம் கொடுத்தார்கள் என்று தாசர் குறிப்பிட்டார்.

இந்தியச் சூழலில் நடைமுறையில் சாதியில் இந்துவாகவும் மதத்தில் கிறிஸ்தவனாகவும் ஏககாலத்தில் பார்ப்பனனையும், கிறிஸ்துநாதரையும் ஏற்றுக்கொள்பவன் அரைக்கிறிஸ்துவன், அரை இந்து என்றார் தாசர்.
தலித்துகளிடம் இருந்து வந்த பாரம்பரியமாக இருந்து வந்த குலதெய்வ மற்றும் கிராம தேவதை வழிபாட்டையும் கூட தாசர் ஏற்கவில்லை. தலித்துகளுக்கு மாற்று மதமாக அவர் முன்மொழிந்தது பெளத்த தன்மமே. புத்த தன்மத்தை தலித்துக்களின் தன்மமாக உலகுக்கு முன்மொழிந்த முதல் தலித் அறிஞர் அயோத்தி தாசரே.

இந்த வகையில் அவர் டாக்டர் அம்பேத்கருக்கு முன்னோடியாகத் திகழ்கிறார். தாசருக்குப்பின் சுமார் அறுபது ண்டுகள் கழித்தே அம்பேத்கர் தலித்துகளுக்கான மதமாக நவயான பெளத்த இயக்கத்தை முன் மொழிந்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

போதி சத்துவத்தின் புதிய நவீன வளர்ச்சியை, இந்தியத் துணைக்கண்டத்தின் சரித்திரத்தை புத்தமத தத்துவத்தின் அடிப்படையில் விளக்கம் தந்தார் தாசர்.

1896-98 ம் ண்டுகளில் சென்னையில் ல்காட் துரையுடன் தாசருக்குத் தொடர்பு ஏற்பட்டது. தாசரும் கிருஷ்ண சாமியார் என்னும் அவருடைய நண்பரும் ல்காட்டுடன் இலங்கை சென்று மலிகண்ட விகாரையில் சுமங்கல மஹாநாயக என்னும் பெளத்தத் துறவியிடம் பஞ்சசீலம் பெற்று பெளத்தர்கள் ஆனார்கள்.

பிறகு ல்காட் துரையின் ஒத்துழைப்புடன் சென்னை ராயப்பேட்டையில் பெளத்த விகாரையையும் பெளத்த சங்கத்தையும் நிறுவினார். சமூக வரலாற்றினை மறுவாசிப்பு செய்தல், சமய அடையாளங்களைக் கட்டி எழுப்பல் என இந்த பெளத்த சங்கங்கள் செயல்பட்டன.

1899ல் புத்தர் என்னும் இரவு பகலற்ற ஒளி என்னும் நு஡லை எழுதினார்.
1907லிருந்து 1914 வரை தாம் சிரியராக செயல்பட்டு நடத்திய ஓரணாத் தமிழன் வார இதழில் தொடர்ச்சியாக புத்த சமயம், அரசியல், சமூகம், இலக்கியம் குறித்த கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதி வந்தார். தமிழனில் சி.எம்.இ.குருமூர்த்தி, சுவப்னேஸ்வரி அம்மாள் (இவர் Tamil Woman, தமிழ்ப் பெண் போன்ற இதழ்களை வெளியிட்டவர்), டி.சி.நாராயணபிள்ளை, ஏ.பி.பெரியசாமி புலவர் போன்றோர் தொடர்ச்சியாக எழுதி வந்தனர். அந்தக் காலத்திலேயே தமிழன் இதழ்களில் வெளியான கேள்வி பதில் பகுதி வழியாக அதற்கான வாசகர்கள் பரவலாக இருந்தமையை அறியமுடிகிறது.

தாசர் மற்றும் அவருடைய நண்பர்களின் முயற்சியால் பெளத்த மத செயல்பாடுகளை சென்னை, செங்கற்பட்டு, வட ற்காடு போன்ற தமிழகத்தின் வடபகுதிகளிலம் கர்நாடகத்தில் ஆதி திராவிடர்கள் பரவியிருந்த கோலார் தங்கவயல், பெங்களூர், ஹூப்ளி மற்றம் பர்மா தென்னாப்பிரிக்கா போன்ற இடங்களில் வசித்த தமிழர்கள் இடையேயும் பரவியது.

ஆங்கிலேயர் காலத்தில் கோலார் தங்கவயல் பணிகளுக்கு வட ஆற்காடு மாவட்டத்தை சேர்ந்த தலித் மக்களே அதிகம் பணியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு சுயமரியாதை மிக்க வாழ்வு அங்கு கிடைத்தது. அவர்கள் பெளத்த செயல்பாடுகளை அங்கு சாத்தியமாக்கினர். தங்கள் நம்பிக்கையை இவர்கள் வட ற்காடு மாவட்டத்தின் கிராமங்களில் பரப்பினார்கள்.

அயோத்தி தாசரோடு இணைந்து செயல்பட்ட க.அப்பாதுரையார், நகுலப்பிள்ளை, சின்னப்புட்டு சாமியார், கே.சி.கிருஷ்ணசாமி, டி.எஸ்.சுந்தரம், முத்து மேஸ்திரி கியோர் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பெளத்த மதப் பணிகளை மேற்கொண்டனர். தாசருக்குப் பின்னாலும் இவர்கள் சாக்கைய பெளத்த சங்க செயல்பாடுகளை உயிரோட்டத்தோடு எடுத்துச் சென்றவர்கள்.

சென்னை ராயப்பேட்டை பெளத்த சங்கத்தில் அயோத்தி தாசர் பேசும் போது துவக்க காலத்தில் தமிழ்ப் பெரியார் திரு.வி.கல்யாண சுந்தரனார் தன் இளமைப் பருவத்தில் கற்கள் கொண்டு எறிந்து எதிர்ப்பினைத் தெரிவித்தார். பின்னாளில் அவர் காலில் ஏற்பட்ட கட்டி ஒன்றினை சித்த வைத்திய முறையில் அயோத்தி தாசர் குணமாக்கி இருக்கிறார். அயோத்தி தாசர் மறைவுக்கு மிக அற்புதமான இரங்கற்பாவினை எழுதியிருக்கிறார் திரு.வி.க. 1906ம் ண்டு வட ற்காடு மாவட்டம் திருப்பத்தூர் பெரிய பறைச்சேரி எனப்பட்ட தலித்துக்கள் வாழ்ந்த பகுதியின் பெயர் கெளதம புத்தர் வழி வந்தோர் வாழும் ஊர் என்னும் பொருளில் கெளதமாப்பேட்டை என்று மாற்றப்பட்டது. திருப்பத்தூரை சேர்ந்த ஏ.பி.பெரியசாமிப் புலவர், அனுமந்த உபாசகர் கியோர் பெளத்த சங்க செயல்பாடுகளை முடுக்கி விட்டார்கள். கெளதமாப்பேட்டையில் 1904ம் ண்டில் திட்டமிடப்பட்டு 1906 சாக்கைய பெளத்த லயம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த ண்டு அந்த லயத்துக்கு நூறு ண்டுகள் முடிவடைகின்றன. பர்மாவில் கொண்டுவரப்பட்ட ஐம்பொன்னால் ஆன புத்தர் சிலை அங்கு நிறுவப்பட்டது. அயோத்தி தாசரின் வழிகாட்டுதலுடன் அந்தப்பேட்டையில் 87 ஆதி திராவிடர்கள், முடிவெட்டுபவர்கள், சலவைத் தொழிலாளிகளின் குடும்பங்கள் பெளத்த மதத்துக்கு மாறினார்கள்.

இந்து மதத்தின் பல கூறுகளை பெளத்த மதத்தில் இருந்து தோன்றியவை என்பதைத் தீவிரமாக பிரசாரம் செய்து வந்தார் தாசர். புத்தர் இறந்த நாளை புத்தர் பலி விழாவாக போதிப்பண்டிகை என்று பூர்வ பெளத்தர்கள் கொண்டாடி வந்தார்கள். பிராமணர்கள் இதனை போகிப்பண்டிகை என்று திரித்து விட்டார்கள் என்றார் தாசர். அதேபோல திருக்குறளை திரிக்குறள் என்றும் தமிழின் பல பண்டை நூல்களை பெளத்த மத நூல்கள் என்றும் விவாதித்து வந்தார்.

வள்ளுவரை பெளத்தர் என்றும் வள்ளுவர் சொன்ன ஆதி பகவன் ஆதி பகலவன் என்றும் அது கெளதம புத்தர்தான் என்றும் இதேபோல பல குறள்களையும் பெளத்த வழியில் மறுவாசிப்பு செய்து பொருள்கூறினார்.
அயோத்தி தாசரின் முனைப்பால் உயிர்க்கொலை மறுப்புக்காக மாடு அறுக்கும் பழக்கம் பல ஊர்களின் சேரிகளை விட்டு வெளியேற்றப்பட்டது. சேரிக்கு வெளியே மாடு அறுக்கும் தொட்டி என அவை மாறின. ஊரிலும் சேரியிலும் இல்லாத பல தொட்டிகளை சேலம் மாவட்டத்திலும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வட ஆற்காடு மாவட்டங்களிலும் பார்க்க முடியும்.

பெரியாரால் நடத்தப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் தொடக்க காலக் கருத்தியல் மற்றும் பிரச்சார நடவடிக்கைகள் பின் வந்த பெளத்த செயல்பாட்டாளர்களோடுதான் அமைந்திருந்தன என்பதை இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.

இந்தி மொழி, இந்துச் சாதி மதத்தோடு தொடர்பு உடையது கையால் அதற்கு இந்தியாவின் பொதுமொழியாகும் தகுதி கிடையாது. ஆங்கிலமே அதற்குத் தகுதி கொண்டது என்று தாசர் பெரியாருக்கு முன்பே எழுதினார். (1911) ( ஆங்கில மொழியைத் தாய்மொழியாக்க வேண்டும் என்று கூடச் சொன்னார். அதன் தாத்பர்யத்தை இன்றைய சூழலை வைத்துப் பார்க்கக்கூடாது).

அயோத்தி தாசரின் முனைப்பினாலும் முயற்சியாலும் சென்னையில் பல பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. ஏழைகளுக்கு இலவசக் கல்வி வழங்குவதில் முன்னோடியாக இருந்தார் தாசர். இப்போது நான் சொல்லும் விஷயம் உண்மையிலேயே உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். மதிய உணவுத் திட்டத்தினை 1894ம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தியவர் தாசர். சென்னை மற்றும் வட ற்காடு மாவட்டங்களில் நடந்த பள்ளிகளில் பகல் உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் அயோத்தி தாசர். இதை நான் சொல்லும்போது இந்த முன்னோட்டமான காரியம் நடந்த ஆண்டினையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் அயோத்தியா தாசரின் வாழ்வும் செயல்பாடுகளும் தமிழக வரலாற்றில் ஒரு முக்கியமான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இருந்திருந்திருக்கிறது.

தலித்துக்களுக்கு பிராம்மணரல்லாத திராவிட அடையாளத்தை நிலை நிறுத்தியதில் முதன்மையானவர் தாசர்.

ஏற்கனவே சொன்ன ஆச்சரியத்தைப் போல இன்னும் சில ஆச்சரியங்களும் உண்டு தாசர் சரித்திரத்தில். 1895 முதல் 1907 வரை தலித்துகளுக்காக இந்திய சரித்திரத்தில் முதன்முறையாக அரசு வேலை வாய்ப்புக்களில் இட ஒதுக்கீட்டினை வற்புறுத்தினார் தாசர். இதற்காக பல ஆங்கில துரைமார்களை சந்தித்து மனுக்களை அளித்து, பல இடங்களில் பேசியும், அதிகாரிகளையும் கவர்னர்களையும் சந்தித்து தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்கினார். இந்திய அளவில் இந்த விஷயத்தில் முன்னோடி நம் தமிழகத்தின் அயோத்தி தாச பண்டிதர்தான் என்று நாம் பெருமையுடன் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் யாரும் சொல்லவில்லை. அது வேறு விஷயம்.

அயோத்தி தாசரின் இந்த இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை அவருக்குப் பிறகு பல மாநிலங்களில் தொடர்ந்தது. மராட்டிய சிங்கம் சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றலான சத்ரபதி சாஹூ மஹராஜ் 1902 தன்னுடைய அரசாங்கத்தில் தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார்.

அவர் வாழ்ந்த காலத்தைப் பார்க்கும் போது அயோத்தியா தாசர் சிந்தனைத் தொகுப்பில் உள்ள பல விஷயங்கள் பல நிலைகளில் முன்னோடியானவை. இக்கால தாத்பரியத்துடன் பார்க்கும்போது சில விஷயங்கள் விவாதத்துக்கு உரியன. உதாரணத்துக்கு பண்டைய தமிழ்நூல்கள் பற்றிய அவருடைய கணிப்பு, மொழி பற்றிய கருத்துக்கள், விஞ்ஞான அடிப்படையில் அமையாத மதங்கள் பற்றிய அவருடைய கருத்துக்கள், பிரிட்டிஷ் அரசு மீது அவர் கொண்டிருந்த தேவதா விசுவாசம் போன்றவை பெரிதும் விவாதத்துக்கு உரியவை. னால் பல விஷயங்களில் அவர் வாழ்ந்த காலத்தைத் தாண்டிய பெரும்பாய்ச்சலைத் தன் சிந்தனைத் தளங்களில் நிகழ்த்தியிருக்கிறார்.

1914ம் ண்டு மே மாதம் 5ம் நாள் பண்டிதர் மறைந்தார்.

பண்டிதரின் இறுதி நாட்களைப் பற்றிய குறிப்பினை அவருடைய குமாரர் பட்டாபிராமன் அவர்களுடைய வார்த்தைகளிலேயே முடிக்கிறேன்.

அவர் வியாதியைப் பற்றிக் கொஞ்சமேனும் கவலைப்படவில்லை. தாமே கைதேர்ந்த வைத்திய பண்டித சிகாமணியாயிருந்ததினாலும் தமக்கே தம்மாயுளைக் குறித்து உணர்ச்சி இருந்ததினாலும் வைத்தியரொருவருடைய உதவியையும் அவர் கோரவில்லை. மே மாதம் 3ம் தேதி திவாரம் காலை 5 மணிக்கு பண்டிதரவர்கள் எல்லோரையும் பார்த்து இந்த தேகம் விழப்போகிறது என்றனர். அவருக்கு நெருங்கின பந்துக்களும் நண்பர்களும் அவர்களுடைய கதியைப் பற்றி அவரிடம் வினாவிய போது அவர், தருமமும் கருமமுமே உங்களைக் காக்கும் என்று திருவாய் மலர்ந்தருளினர். அடியேன் பத்திரிகையைக் குறித்து விண்ணப்பித்தபோது, அவர், திரிக்குறள் உரை இதுவரையிலும் நாம் எழுதியதோடு மாத்திரம் நிற்கவேண்டியிருக்கிறதே என்பதுதான் குறை. இந்தப் பொய்ச் சடலம் கூடியிருந்தவரையில் அவ்வளவுதான் செய்யமுடிந்தது. தமிழன் ஆகிய குழந்தையை உன் கையில் ஒப்பித்து விடுகிறேன். உன்னால் வளர்க்க முடியுமல்லவா என்றனர்.
................
பஞ்சஸ்கந்த பிரிவினை அடைந்த பிறகு அவரது திருமுக விலாசத்தை யாவரே வருணிக்கத்தக்கவர். அன்று பகலெல்லாம் அவரது உறவினரும் நண்பர்களும் சீடர்களும் நூற்றுக்கணக்காக வந்து பார்த்துவிட்டுப் போய்க்கொண்டிருந்தனர். பகல் 3 மணிக்கு அவருக்குப் பரிசளித்திருந்த 3 மெடல்களையும் அணிந்து அலங்கரித்து அவரைத் தரிசித்தோம். மாலை 5.30 மணிக்கு புஷ்பமாரி பெய்தாப்போல தூறி நிலத்தைக் குளிரச் செய்தது மனோகரமாயிருந்தது.
..........
மாலை 6 மணிக்கு சர்வாலங்கதிருதங்களோடு அவரை வெள்ளைப் பெட்டியில் வைத்து புஷ்பங்களால் அலங்கரித்திருந்த விமானத்தில் இருக்கச் செய்து பெளத்தன்ம சின்னங்களுடன் முன்னால் புத்தருடைய திவேதத்திலிருந்து உருக்கமான பாடல்களைப் பாடிக் கொண்டு வர கோலம் புறப்பட்டது. அநேக பர்மிய பெளத்த பிட்சுக்களும், இந்திய பெளத்தர்களும், பர்மிய பெளத்தர்களும் ஆயிரங்கணக்கான ஜனங்களும் கோலத்துடன் வந்தனர். பண்டித பெருமான் அவர்களே காருண்யம் பொருந்திய பிரிட்டிஷ் கவர்ன்மெண்டிலிருந்து பெளத்தர்களுக்காக வாங்கிய மயானத்திற்கு தேவ விமானம் கொண்டுபோகப் பட்டது. விமானத்தை இறக்கினதும் சென்ற 1500 வருடங்களாக நடந்திராத பெளத்த சடங்குகள் வெகு சிரத்தையுடன் நடத்தப்பட்டன....

ஏறத்தாழ எண்பது ண்டுகளுக்கும் மேலாக சரித்திரத்தில் முழுதும் மறக்கப்பட்ட ஒரு மாமனிதரை இந்த உலகுக்கு மீண்டும் உயிர்ப்பித்துக்கொடுத்த ஞான அலாய்சியஸ் அவர்களையும் பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் மையத்தையும் மீண்டும் ஒருமுறை நன்றியுடன் நினைத்துக்கொண்டு என் உரையை முடிக்கிறேன். அயோத்தி தாசரை தில்லித் தமிழ்ச் சங்கத்தில் அறிமுகப்படுத்தும் வாய்ப்பினை எனக்கு சாத்தியப்படுத்தியவர்கள் இவர்களே.

நன்றி. வணக்கம்.


18 நவம்பர் 2006 அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் தடம் பதித்த தமிழர்கள் தொடர் சொற்பொழிவுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம்.


அயோத்தி தாசரின் எழுத்துப்பணிகள் :


1. புத்தரது திவேதம் (1912)

2. Buddhist Doctrines - Questions and Answers (1912)

3. இந்திரர் தேச சரித்திரம் (1931)

4. விவாக விளக்கம் (1926)

5. ஹரிச்சந்திரனின் பொய்கள் (1931)

தமிழன் பத்திரிகை சென்னையில் 14 வருடங்களாக வெளிவந்தது. 1907 முதல் 1914 வரை அவரது ஆசிரியத்துவத்திலும், அவருக்குப்பின் அவரது புதல்வர் பட்டாபிராமன் அவர்களை சிரியராகக் கொண்டு 1919 வரையிலும் பின்னர் 1919லிருந்து 1922 வரை யார் நடத்தினார்கள் என்று தெரியவில்லை. பின்னர் 1922ல் அப்பாதுரையை ஆசிரியராகக் கொண்டு 1926லிருந்து 1935 வரை வெளிவந்ததாகவும் குறிப்புக்கள் உள்ளன.


இந்தக் கட்டுரையை எழுத எனக்குக் கிடைத்த ஆதாரங்கள்:


1. அயோத்தி தாசர் சிந்தனைகள் - தொகுப்பு 1 மற்றும் இரண்டு - ஞான அலாய்சியஸ், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம். (2003ல் ஞான அலாய்சியஸ் தொகுத்த 3வது தொகுப்பும் வெளிவந்துள்ளது. இது தில்லியில் எனக்குப் படிக்கக் கிடைக்கவில்லை)

2. தலித்திய விமர்சனக் கட்டுரைகள் - ராஜ் கெளதமன் (காலச்சுவடு வெளியீடு)

3. க.அயோத்திதாசர் ஆய்வுகள் (ராஜ் கெளதமன் - காலச்சுவடு வெளியீடு)

4. அயோத்திதாச பண்டிதர் வழியில் வாழும் தமிழ்ப் பெளத்தம் - ஸ்டாலின் ராஜாங்கம் - காலச்சுவடு மாத இதழ்

17 comments:

  1. எனது துறை சார்ந்த கட்டுரையாக இருந்தாலும், செம நீட்டாக இருக்கிறது பதிவு. தற்போதைக்கு எனது கூகள் குறிப்பில் வைத்திருக்கிறேன். பிறகு படித்து கருத்து சொல்ல முயற்சிக்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி - மாசிலாமணி அவர்களே. உங்கள் கருத்துக்களுக்குக் காத்திருக்கிறேன்.

    ராகவன் தம்பி

    ReplyDelete
  3. மிக்க நன்றி - சதுக்க பூதம் அவர்களே.

    ராகவன் தம்பி

    ReplyDelete
  4. Good One. You have neatly put it to fit the time for speech and still covering as much as possible. - PK Sivakumar

    ReplyDelete
  5. Can you please write articles about K.T.Panneerselvam,M.C.Raja and others also. lots of good dalit leaders are ignored by history.

    ReplyDelete
  6. மிக அருமையானதொரு கட்டுரை ராகவன் தம்பி.

    இலவச கல்வி, மதிய உணவுத்திட்டம், இட ஒதுக்கீடு அப்போதே அறிமுகமாகிவிட்டதா?

    ஞான. அலாய்சியஸ் நினைவு கூர்தல் அவசியம்.

    //அயோத்தி தாசரை தில்லித் தமிழ்ச் சங்கத்தில் அறிமுகப்படுத்தும் வாய்ப்பினை எனக்கு...//

    இப்படி என்றால், ராகவன் தம்பி இது உங்களையா குறிக்கிறது?

    சற்று விளக்கவும்!

    நல்லவர்கள் வாழ்ந்த பூமி. என்றாவது ஒருநாள் அவர்களது புகழை வெளிக்கொண்டே வந்து தீரும்.

    நன்றி திரு.ராகவன் தம்பி.

    ReplyDelete
  7. மாசிலாமணி அவர்களே...

    உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

    தில்லித் தமிழர்கள் இடையில் அயோத்தி தாசருக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லாத ஒரு துரதிருஷ்டமான சூழல். எனவேதான் அப்படிப் பேசினேன்.

    அயோத்தி தாசரைப் பல காலம் இருட்டடிப்பு செய்தார்கள். அல்லது புறக்கணித்தார்கள். அவரை வெளி உலகத்துக்குக் காட்டிய அலாய்சியஸ் அவர்களுக்கு ஒவ்வொரு தமிழனும் நன்றிக்கடன் பட்டவர்கள் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

    தலைநகரில் இருந்தும் அலாய்சியஸ் அவர்களை இதுவரை சந்திக்க இயலவில்லை.

    ராகவன் தம்பி

    ReplyDelete
  8. வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி, சிவகுமார்.

    ராகவன் தம்பி

    ReplyDelete
  9. அன்பு சதுக்கபூதம்

    இந்த மாமனிதர்களைப் பற்றிப் பேசவும் எழுதவும் வேண்டும் என்று எனக்கு ஆவல் உண்டு. தில்லித் தமிழ்ச் சங்கத்தில் இப்போதைக்கு என்னுடைய தடம் பதித்த தமிழர்கள் சொற்பொழிவை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். என்றாவது ஒருநாள் தொடரும்போது அங்கு பேசுவேன். அல்லது என் வலைப்பதிவில் பதிவேன்.

    நீங்கள் தரும் உற்சாகத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  10. ராகவன் தம்பி,

    மனம் மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள்.

    இஃது போல் மேலும் பல கட்டுரைகள் வரையுங்கள்.

    அயோத்தி தாசரின் புதல்வர் பட்டாபிராமனும் பாராட்டுக்குரியவர்.

    ReplyDelete
  11. உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி, ஐயன் காளி அவர்களே.

    ராகவன் தம்பி

    ReplyDelete
  12. ONE OF THE WONDERFULL ARTICLE BY RAGAVAN THAMBI. READ SEVERAL ARTICLES OF YOU. This one really stands alone. Hope our tamil dalit friends will recognise his contribution.

    ReplyDelete
  13. உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் பாராட்டுக்கும் நம்பிக்கைக்கும் மிக்க நன்றி, யக்ஞேஸ்வர் அவர்களே.

    ராகவன் தம்பி

    ReplyDelete
  14. கிடைத்தற்கறிய கட்டுரை. சொல்லொண்ணா தகவல்கள். வாழ்த்துக்களுடன்.

    ReplyDelete
  15. Wasteful effort.

    He does not deserve recongition.

    He could not understand anything. Why are you making him out to be a great hero?

    ReplyDelete