Tuesday, February 24, 2009

முதல் மேடை நாடக அனுபவம்...


நாடகத் தயாரிப்புக்களில் ஈடுபாடு ஏற்பட்டு, விதியின் வினையால் இயக்குநர் ஆனது எல்லாம் விளையாட்டுப் போல இப்போது தோன்றுகிறது. ரொம்பவும் அவசரமாக இருபத்து மூன்று ஆண்டுகள் பின்னோக்கி நழுவி ஓடிவிட்டன. கடந்த மூன்றாண்டுகளாக வடக்கு வாசல் என்னும் புலிவாலைப் பிடித்த பின் என்னுடைய நாடக ஈடுபாடு மற்றும் தயாரிப்புக்கள் ஒரு மந்த நிலைக்கு வந்து நின்ற மாதிரியான ஒரு தோற்றம் மனதுக்கு வேதனையளிக்கிறது. ஒரு காலத்தில் விளையாட்டுக்குச் சொல்வேன். நாடகம் போடறதை திடீர்னு நிறுத்தினாலும் ஏண்டா நாயே நாடகம் போடலைன்னு யாரும் கேட்கப் போறதில்லை… என்று. ஆனால் இன்று எதிர்ப்படும் யாரும் என்னிடம் கேட்கும் முதல் கேள்வி - ஏன் நாடகங்களை நிறுத்தி விட்டீர்கள் என்பது தான். சுந்தர ராமசாமி கவிதையில் வருவது போல, என்னுடைய நாடக ஈடுபாட்டில் ஏற்பட்டு இருக்கும் தற்போதைய சுணக்கம் என்பது நான் மேற்கொண்ட உறக்கம் அல்ல - தியானம். பின் வாங்கல் அல்ல பதுங்கல்.

மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு, வடக்கு வாசல் சற்றுத் நிற்கத் துவங்கியிருக்கிறது. இந்த நிலைக்கு வடக்கு வாசலைக் கொண்டு வர நான் மேற்கொண்ட எத்தனங்களும் இழப்புக்களும் பட்ட அவமானங்களும் ஏழு ஜென்மங்களுக்குப் போதும். எப்படியோ இனி வடக்கு வாசல் பிழைத்துக் கொள்ளும் என்னும் நம்பிக்கை துளிர்விட துவங்கி இருக்கிறது. அதற்கு நல்ல மனம் கொண்ட பல நண்பர்கள் அங்கங்கு தோள் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். இனி வடக்கு வாசலுக்கு ஒரு திறமையான ஒருங்கிணைப்பாளர் அல்லது வடக்கு வாசலைப் பார்த்துக் கொள்ள எனக்கான ஒரு நல்ல உதவியாளர் கிடைத்தால் மீண்டும் நாடகத்தின் பக்கம் செல்லும் ஆசை உண்டு. விளையாட்டுக்கோ அல்லது பந்தாவுக்காகவோ சொல்ல வில்லை. என்னுடைய இறுதி மூச்சு நாடக மேடையிலோ அல்லது ஒத்திகையிலோ நின்றுபோக வேண்டும் என்று நேர்மையாக ஆசைப்படுகிறேன். என்னுடைய ஆன்மாவின் இறுதி இயக்கம் வரை நான் நாடகத்துடன் தொடர்பு வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என்னை நானே பார்த்துக் கொள்ளவும் என்னைப் பலர் பார்க்கவும் வைத்தது நாடகங்கள் தான். எனவே, என்னுடைய ரத்தத்தில், என்னுடைய நினைவில், கனவில் என என்னுள் எல்லாமாக வியாபித்து நிற்பது நாடகமே. இப்போதும் நாடகம் தயாரிக்க இயலாத நிலையில் பல நாடகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். நாடகக் கோட்பாடுகள் குறித்த கட்டுரைகளைத் தொடர்ச்சியாகப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

இந்த நேரத்தில் பல நேரங்களில், யதார்த்தாவில் நாங்கள் மேடையேற்றிய ஒரே இந்தி நாடகம், அதன் ஒத்திகைகள், மேடையேற்றம் என அத்தனையும் எப்போதாவது மனம் சோர்வு அடைகின்ற போது நினைத்துப் பார்த்து இதழ்க் கடையோரம் கீற்றாய்த் தோன்றி மறையும் ஒரு சிறு முறுவலும் சில நேரங்களில் விழியோரம் துளிர்க்கும் கண்ணீர்த் துளிகளுடன் நெஞ்சம் விம்மல் கொள்ளும் சில அற்புதமான அனுபவங்கள் இன்னும் என்னுடன் நனவோடையில் நிழலாகத் தொடர்கின்றன.

வெங்கட் நரசிம்மன், மகேந்திரன், குணசேகரன், நரசிம்மன், ராமசாமி, மணிகண்டன், சந்திரசேகரன், வீரராகவன் இன்னும் பலர். இந்த நாடகத்தின் வழியாக என்னுடைய மேடை நாடகப் பயணைத்தைத் துவக்கி வைத்த அற்புதமான நண்பர்கள். தமிழ் நாடகத்துக்காகத் தன்னைக் கரைத்துக் கொள்ள முன்வந்த கலைஞர்கள். பல நாடகங்களில் என்னுடன் உழைத்து என்னை ஒரு நாடககக்காரனாக உருமாற்றியவர்கள். இப்போது எல்லோரும் அவரவர் வழிப் பயணத்தில் தங்கள் வாழ்க்கையைத் துரத்தி அவரவர் வழியில். அவரவர்களின் கூடுகளில். தொடர்பு அதிகமாக இல்லையே ஒழிய எப்போது இவர்களின் நினைவுகள் நெஞ்சில் நிழலாடினாலும் அந்த நாளின் நினைவுகள் தரும் ஏக்கம் இந்த வயதிலும் விழியோரம் துளிநீரை நிறுத்தி வைக்கும்.

நான் ஈடுபட்டு இருந்ததெல்லாம் வெளிமுற்ற நாடகங்கள்தான். அவற்றை வீதி நாடகங்கள் என்றும் சொல்ல முடியாது. ஆனால் ஒரு அர்த்த வசதிக்காக வீதி நாடகம் என்று எங்களுக்கு நாங்களே குறிப்பிட்டு வந்தோம். நாங்கள் ஈடுபட்டிருந்த வெளிமுற்ற நாடகங்களில் வீதி நாடகங்களுக்கான கூறுகள் எவற்றையும் கண்டுபிடிக்க முடியாது. வெளிமுற்றம் அது இது என்று சொன்னால் குழம்பிப்போவர்கள் என்பதால் சுலபமான வார்த்தையாக இருந்த வீதி நாடகம் என்ற வார்த்தையை உபயோகித்தோம். தொடர்ந்து எங்களுடைய நாடகங்களை வீதி நாடகங்கள் என்று அறியாமல் சொல்லி சந்தோஷப் பட்டுக்கொண்டிருந்தோம். கரோல்பாக்கில் உள்ள ஒரு பூங்காவில், தமிழ்ப்பள்ளிகளின் விளையாட்டு மைதானங்களில், ஏதாவது ஒரு சதுரக்கூடத்தில், சில நண்பர்களின் வீட்டு மொட்டை மாடிகளில், லோதி மற்றும் தால்கத்தோரா பூங்காக்களின் புல்வெளிகளில் என யதார்த்தாவின் வெளிமுற்ற நாடகங்கள் தொடர்ந்து வந்தன. எல்லா நாடக மேடையேற்றங்களும் ஒரு திட்டமிடலுடன் வெளிமுற்றங்களில் தொடர்ந்து வந்தன. திட்டமிடல் என்றால், முன்கூட்டியே நோட்டீசுகள், அல்லது கையால் எழுதப்பட்ட சுவரொட்டிகள் என விளம்பர சௌகர்யத்துடன் இந்த நாடகங்கள் நடந்தேறின.

இந்த நேரத்தில் ஏதாவது ஒரு மேடை நாடகத்தை உடனடியாகத் தயாரிக்கலாமே என்னும் யோசனையை ஒரு சனிக்கிழமையின் பின் மதியத்தில் ரவீந்திரன் ஒரு நாள் அறிவித்தார். அந்த அவரச ஓட்டத்தில் ரவீந்திரன் சொன்னது முழுக்க மண்டையில் ஏறவில்லை. ஆனால் வீடு போய் சேர்ந்ததும் ரவீந்திரன் சொன்ன அந்த மேடை நாடக விஷயம் மீண்டும் மீண்டும் கனவில் நிழலாடுவது போல இருந்தது.

காலையில் தூங்கி எழுந்ததும் மீண்டும் ரவீந்திரன் வீட்டுக்குப் போனேன். ராத்திரி இருந்த அதே தெளிவுடன் உட்கார்ந்து கொண்டிருந்தார் ரவீந்திரன். ராத்திரி ஏதோ சொல்லிக்கிட்டு இருந்தீங்க? என்று தயக்கத்துடன் கேட்டேன். ஆமாம். நாம ஒரு மேடை நாடகத்தைத் தயாரிக்கலாம் என்றார். ஸ்கிரிப்ட் ஏதாவது யோசித்து வைத்திருக்கீங்களா என்று கேட்டேன். யோசிக்கிறது என்ன? இந்தியிலே ஒரு நாடகம் போடலாம் என்றார். போங்க சார். விளையாடறீங்க என்று சிரித்துக் கொண்டே எழுந்து கொண்டேன். இல்லைங்க. தாராளமா போடலாம். சாகித்ய கலா பரிஷத்லே ஒரு விளம்பரம் வெளியிட்டு இருக்காங்க பாருங்க. 35 வயசுக்குள்ளே இருக்கிற இளைஞர்களுக்கு இளைய இயக்குநர்கள் திட்டம்னு போட்டு வாய்ப்புக் குடுக்கறாங்க. இந்தி அல்லது உருதுவிலே நாடகம் தயாரிக்கப் பண உதவியும் தராங்க. செலக்ட் ஆனா, இளைய இயக்குநர் விருதும் தராங்க. நீங்க விண்ணப்பம் அனுப்புங்க என்றார்.

எனக்கு உண்மையாகவே போதை சுத்தமாக இறங்கிவிட்டது. இந்த மனிதர் ஏதோ நம்மைக் கிண்டல் செய்கிறார் என்று தோன்றியது. மேடை நாடகம் எனக்கு சுத்தமாகத் தெரியாதது. அதிலும் இந்தியில் ஒரு மேடை நாடகம் என்றால்? என்னுடைய இந்தி ஞானம் பற்றியும் எனக்கு நன்றாகத் தெரியும். தமிழின் சாயலில், தமிழின் வாடையுடன், தமிழில் நினைத்து, உடனடியாக உள்ளுக்குள்ளே அபத்தமான நேரடி மொழிபெயர்ப்பு செய்து நான் இந்தி பேசினால், அந்த மொழியை உண்மையாக நேசிப்பவர்கள் என்னைத் துரத்தித் துரத்தி அடிப்பது நிச்சயம். இந்த லட்சணத்தில் ஒரு இந்தி நாடகத்தை எப்படி இயக்குவது? அதுவும் என்னைப் போலவே இந்திப் புலமையுள்ள ஒரு கூட்டத்தை வைத்து எப்படி அது சாத்தியமாகும்?

அதற்கும் விடை வைத்திருந்தார் ரவீந்திரன். கஜானன் மாதவ் முக்திபோத் என்று ஒரு இந்திக் கவிஞன். அவன் பெரிய பொதுவுடமைவாதி. அவனுடைய கவிதைகள் எல்லாம் சிகப்புச் சிந்தனையை ஏந்தியிருக்கும். அவனுடைய ஏதாவது ஒரு கவிதையை எடுத்து நாம் நாடகமாக்கலாம் என்றார். எனக்கு இன்னும் கிழிய ஆரம்பித்து விட்டது. நாடகப் படி என்றாலும் ஏதாவது பேச்சு வழக்கில் உள்ள இந்தியில் இருக்கும். யாரையாவது படிக்க வைத்து, பேசவைத்து சமாளிக்கலாம். ஆனால் இந்த மனிதர் கவிதையை இழுத்து விடுகிறாரே என்று உதறலாக இருந்தது. என்னுடைய தயக்கம் விட்டபாடில்லை. நல்லா பண்ணுவீங்க. முக்திபோத் கவிதைலே சாந்த் கா மூஹ் டேடா ஹை (சந்திரனின் கோணிய முகம்) என்ற ஒரு கவிதை நல்லா இருக்கும். அதிலே நிறைய படிமங்கள் இருக்கு. அதை முயற்சி பண்ணுங்க என்றார். அந்தக் கவிதையிலே இருக்கிற படிமங்களைக் காட்சிகளாக மாற்றி நாடகம் பண்ணலாம். பண்ணுங்க என்றார்.

ஆனாலும் என்னுடைய தயக்கம் என்னைத் தொடர்ந்து கொண்டே இருந்தது. சாகித்ய அகாதமி நூலகத்துக்குப் போய் கஜானன் மாதவ் முக்தி போத் கவிதைத் தொகுப்பை எடுத்து எழுத்துக் கூட்டிப் படித்துப் பார்த்தேன். ஒன்றும் மண்டையில் ஏறவில்லை. உடன் பணிபுரியும் ஒருவரிடம் கொடுத்து படிக்கச் சொன்னேன். மிகவும் சரளமான உரையாடல் நடையில் அமைந்திருந்தது கவிதை. அடுத்தவர் படித்துக் காட்டும்போது கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது. பர்கத் கா பேட் (அரசமரம்) போன்ற விஷயங்களைக் கேட்டுத் தெளிவு படுத்திக் கொண்டேன்.
மறுநாள் ரவீந்திரன் வீட்டுக்குப் போனேன். சாகித்ய அகாடமி வெளியிடும் இதழான இந்தியன் லிட்டரேச்சரில், சாந்த் கா மூஹ் டேடா ஹை கவிதையின் ஆங்கில மொழியாக்கத்தை வெளியிட்டிருக்கிறார்கள் என்று சொல்லி ஒரு பழைய இதழை எனக்குக் கொடுத்தார். ரவீந்திரன் மீது எப்போதும் எனக்கு ஒரு ஆச்சரியம் உண்டு. இப்படி ஏதாவது ஒரு பெரிய விஷயத்தை சர்வ சாதராணமாக தூக்கி வந்து கையில் கொடுப்பார். ரவீந்திரன் கொடுத்த ஆங்கில மொழி பெயர்ப்புப் பக்கங்களை உடனே நகல் எடுத்து வந்தேன். ஆங்கில மொழி பெயர்ப்பு சற்று புரிகிறது மாதிரி இருந்தது. ஆனால் அந்தக் கவிதையின் முழுமையான வீச்சைப் புரிந்து கொண்டேனா என்பது இன்று வரை சந்தேகமான விஷயம்தான் என்று சொல்லவேண்டும்.

ஆங்கில மொழி பெயர்ப்பைப் படித்துக் கொஞ்சம் தைரியம் வந்தமாதிரி இருந்தது. உடனே நண்பர்களுடன் கலந்து ஆலோசித்தேன். முதலில் தயங்கினாலும் நரசிம்மன் (நச்சு) வீரராகவன் (வீரு) மகே (மகேந்திரன்) மணிகண்டன் போன்ற நண்பர்கள் அதி தைரியம் அளித்தார்கள். உடனே சாகித்ய கலா பரிஷத்துக்கு ஒரு விண்ணப்பம் தயார் செய்தேன். இயக்குநரின் நாடக அனுபவங்களைப் பற்றிய கேள்விக்கு வெளிமுற்ற நாடகங்களை மட்டுமே இயக்கியிருப்பதாகவும் இது மேடையில் என்னுடைய முதல் முயற்சி என்றும் குறிப்பிட்டேன். இந்த ஒரு விஷயத்துக்கே என்னைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்ற ஆறுதல் எனக்கு இருந்தது. நாடகம் இந்தியில் இருந்தாலும் அதனைத் தமிழ்ப் பின்னணியில், அதாவது தமிழ் நாட்டின் சாயலுள்ள அரங்கப் பொருட்கள், தமிழர்களின் உடை, ஒப்பனைகள் போன்றவற்றைக் கையாளுவேன் என்று எழுதியிருந்தேன். தெருக்கூத்தில் எனக்கு இருக்கும் ஆர்வத்தையும் எழுதினேன். அனுபவம் என்று பார்க்கும் போது சொல்லிக் கொள்ள ஒன்றும் கிடைக்காத விண்ணப்பம் என்னுடையது. அந்த விழாவுக்கு தேசிய நாடகப் பள்ளியில் நாடகத்துறையில் பட்டம் பெற்றவர்கள், பல இந்தி முன்னணி நாடக இயக்குநர்களுடன் பணி புரிந்தவர்கள் எனப் பலரும் சாகித்ய கலா பரிஷத் அலுவலகத்தில் இருந்து நாடகங்கள் மேடையேற்ற விண்ணப்பங்கள் வாங்கிச் சென்று கொண்டிருந்தார்கள். சரி. இவர்கள் முன்னால் நம்மை யாரும் சீந்தப் போவதில்லை என்ற தயக்கம் எனக்குள் இருந்தது. அந்தத் தயக்கம் ஒருவகையில் மறைமுகமான ஒரு மகிழ்ச்சிûயுயம் அளித்துக் கொண்டிருந்தது. தேர்வு பெறாவிட்டால் ஒரு மிக நல்ல இந்திக் கவிதையைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி ஒரு மோசமான நாடகமாக மஹாமோசமாகத் தயாரிக்கும் சண்டாளத் தனத்தில் இருந்து தப்பிக்கலாம் என்ற சந்தோஷமும் எனக்குள் ஒளிந்து கொண்டிருந்தது.

சரி. தேர்வுக்கு அனுப்பி இருந்த என் விண்ணப்பம் என்ன ஆனது என்ற தகவல் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு காலையில் கடிதம் ஒன்று வந்தது. அனுப்பிய விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்டதா என்று ஏதும் குறிப்பிடாமல் சாகித்ய கலா பரிஷத் அமைப்பின் செயலரை அவருடைய அலுவலகத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் வந்து சந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. கொஞ்சம் உதறலாக இருந்தது. ஆனால் தேர்ந்தெடுக்கப்படா விட்டால் அது எனக்கு நடக்கும் நல்லதாக இருக்கட்டுமே என்று நினைத்து செயலரை சந்திக்கப் போனேன்.

முக்திபோத் கவிதைகள் மிகவும் கடினமானவை. எங்களுக்கே பல இடங்கள் புரியாது. நீ என்ன செய்யப்போகிறாய்? அதுவும் இந்திக் கவிதையை வைத்து நீ என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டார்.

கவிதையில் உள்ள படிமங்களை எடுத்துக் காட்டிப் படிமங்களாக மாற்ற முயற்சி செய்வேன் என்று சொன்னபோது நானே ஏதோ சுமாராகப் பேசுவது போல எனக்குத் தோன்றியது. ஆனால் எனக்கு நானே சொல்லிக் கொண்ட தைரியம் அது என்று பல நாட்கள் கழித்து எனக்குப் புரிந்தது.
அடுத்த இதழில்…

2 comments:

  1. நன்றாக இருக்கு உங்கள் அனுபவங்கள்.

    ReplyDelete
  2. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

    ReplyDelete