Sunday, May 11, 2008

பத்ம விருதுகளும் பாராட்டு விழாவும்...

நேற்று (10 மே 2008) குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

கடந்த வாரம் 05 மே 2008 அன்று சில பேருக்குக் கொடுக்கப்பட்டது. மற்றவர்களுக்கு நேற்று வழங்கப்பட்டது.

இந்த விழாவுக்கு அழைப்பிதழ்கள் வழங்கும் பணியை உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவு கவனித்து கொள்கிறது. அவர்கள் விருது பெற்றவர்கள் பரிந்து உரைப்பவர்கள் (ஒவ்வொரு விருது பெற்றவருக்கும் தலா இரண்டு அழைப்பிதழ்கள் மட்டும்). மேலும் வாங்க வேண்டுமென்றால் அவரவர்கள் பெற்றுள்ள பரிச்சயங்கள், பரிந்துரைகளின் அடிப்படையில் ஓரிரண்டு அழைப்பிதழ்கள் கிடைக்கும். இந்தப் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகளும் அலுவலர்களும் இந்தப் பத்து நாட்களில் அடிக்கும் பந்தா தாங்காது. பணிச்சுமை ஒருபுறம் இருந்தாலும் இந்தப் பத்து நாட்களும் அவர்கள் யாருடைய வணக்கங்களுக்கும் பதில் சொல்ல மாட்டார்கள். இந்த உலகமே தங்களைத் தொந்தரவு செய்வதற்காக மட்டுமே இயங்குகிறது என்கிற பாவனையில் கொஞ்ச நாட்களுக்குச் சுற்றிக் கொண்டிருப்பார்கள். இருபத்தைந்து ஆண்டுகள் உள்துறை அமைச்சகத்தில் வேலை செய்தும் என்னுடைய மனைவி இப்போதும் அங்கே பணியாற்றிக் கொண்டிருக்கும்போதும், சென்னையில் இருந்து வந்த சில நண்பர்கள் அழைப்பிதழ்கள் கேட்டார்கள் என்று அணுகிய போது புன்சிரிப்புடன் தங்கள் இயலாமையைத் தெரிவித்தார்கள்.

ஆனால் அவர்களிடமிருந்து அழைப்பிதழ்கள் பெற்றுச் செல்கிறவர்களைக் கண்டால் எந்த அடிப்படையில் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் என்ற கேள்வி நம்மைக் குடைந்து கொண்டே இருக்கும். இதற்கெல்லாம் விடை கிடைப்பது மிகவும் அரிதான காரியம்.

என்னைக் கேட்டால் இதுபோன்ற விழாக்களுக்குச் செல்லாமல் தவிர்ப்பது பல அசௌகர்யங்களில் இருந்து நம்மை விலக்கி வைக்கும். பாதுகாப்பு ஏற்பாடுகள் இறுக இறுக இது போன்ற விழாக்களுக்கு செல்லாமல் தவிர்ப்பது மிகவும் நலம். நம்முடைய அத்திம்பேர் அல்லது மச்சினன் யாராவது விருது வாங்கும்போது மட்டும் சென்றால் போதும்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் செயலர் முகுந்தன் மிகவும் பலவந்தமாக வற்புறுத்தவே, எதற்கும் இருக்கட்டுமே என்று வடக்கு வாசல் லெட்டர் பேடில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைப்பிதழுக்கான ஒரு வேண்டுகோளை தொலைநகலில் அனுப்பி வைத்தேன். மறுநாளே, நானே எதிர்பாராத வண்ணம் அங்கிருந்து தொலைபேசி வந்தது. ஆசிரியர் ஒருவருக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்ப முடியும் என்று யாரோ பேசினார்கள். சிறிது நேரம் கழித்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்து வாங்கிச் செல்லுங்கள் என்று இன்னொரு தொலைபேசி வந்தது.

அன்று விருது வாங்கியவர்களில் சீர்காழி சிவசிதம்பரம் மட்டுமே எனக்கு நன்கு அறிந்தவர். மற்றபடி, பி.சுசீலா, விசுவநாதன் ஆனந்த், மனோஜ் நைட் ஷ்யாமளன் ஆகியோரை எனக்கு மட்டுமே நன்கு தெரியும். அவர்களுக்கு என்னைத் தெரியாது. போக வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் சிவசிதம்பரத்தை வாழ்த்தி விட்டு வருவோமே என்று போனேன். தில்லி வந்த இருபத்து ஏழு ஆண்டுகளில் இன்றுதான் முதன்முதலாக இந்த விழாவுக்குப் போகிறேன். இதற்கு முன்பு யார் யாரோ வாங்கியபோதெல்லாம் போனதில்லை.

காரை வெகுதொலைவில் நிறுத்தி விட்டு எக்கச்சக்க தூரம் நடக்க வேண்டும். பயந்து பயந்து நடந்து உள்ளே சென்றால் மிரள வைக்கும் தூய்மை. ராணுவத்தின் ஒழுங்கு. கட்டுப்பாடு. கைப்பேசிகளை வாசலிலேயே பிடுங்கிக்கொண்டு பெயர் எழுதிய ஒரு சீட்டை அதில் ஒட்டி நம்மிடம் ஒரு சிறு அட்டையைக் கொடுத்து விடுகிறார்கள். குழந்தையைப் பிரிந்து நடக்கும் தாயைப்போலத் தயங்கிக் கொண்டே பலர் கைப்பேசியைக் கொடுத்து விட்டுத் தயங்கி நடந்து கொண்டிருந்தனர்.

விழா நடக்கும் அசோகா ஹாலில் ஒரு பக்கம் விருது வாங்குபவர்களை வரிசையாக நாற்காலிகளில் உட்கார வைத்து இருந்தார்கள். எதிரில் புகைப்படக்காரர்கள். ஊடகங்களின் கேமராக்கள். பிளாஷ் ஒளி வெள்ளம். குடியரசத் தலைவர் உள்ளே வரும் போது எழுந்து நிற்க வேண்டும். தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நிற்க வேண்டும். விருதுகள் வழங்கும்போது உட்காரலாம். மீண்டும் தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நிற்க வேண்டும் போன்ற வழிகாட்டுதல்கள் அடங்கிய சிறு கையேட்டை எல்லா நாற்காலிகளிலும் வைத்து இருந்தார்கள். பிரதமர், சோனியா காந்தி, எதிர்க் கட்சித் தலைவர்கள் ஆகியோர் முதன் வரிசைகளில் அமர வைக்கப்பட்டிருந்தார்கள்.

குடியரசுத் தலைவர் வந்ததும் எல்லோரும் எழுந்து நின்றோம். தேசிய கீதம் இசைத்தார்கள். எழுந்து நின்றோம். ஆங்கில ஆட்சியின் சில மிச்சங்களை இன்னும் அப்படியே வைத்திருக்கிறோம். சில துவக்கச் சடங்குகளைப் பார்த்தபோது அந்த மரபு இன்னும் அப்படியே தொடர்வதைப் பார்க்க முடிந்தது.
உள்துறை செயலர் ஒவ்வொரு பெயராகப் படித்து அவர்களுடைய துறைûயுயம் அறிவிக்க உரியவர் முதல் நாள் ஒத்திகை பார்த்தபடி, நேராக நடந்து நின்று, முன்னோக்கிச் சென்று குடியரசுத் தலைவரிடம் விருதுகளை வாங்கி, பீறிட்டுக் கிளம்பும் பிளாஷ் ஒளி வெள்ளத்தை நோக்கிப் புன்னகைத்து, மீண்டும் ஒருமுறை வணங்கி சட்டையில் குத்தப்பட்ட விருதுடனும், ஒரு நீண்ட டப்பாவில் அழகாக வைத்துத் தரப்பட்ட பட்டயத்துடன் பெருமிதத்துடன் நடந்து அவர்களுடைய ஆசனங்களில் மீண்டும் அமர்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியவர்கள், அவர்களுடைய ஊர்க்காரர்கள் கூரையே இடிந்து விழும் வண்ணம் கைதட்டுகிறார்கள். எல்லாப் பெயர்களும் வரிசையாகப் படித்து முடித்ததும் மீண்டும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழாவை முடிக்கிறார்கள்.

பிறகு பக்கத்தில் உள்ள பெரிய கூடத்தில் விருந்து பரிமாறப்படுகிறது. அந்த விருந்தின் நேரத்தில் தங்களுக்கு வேண்டியவர்களைக் கட்டிப்பிடித்தும் கரங்களைக் குலுக்கியும் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். விருது வாங்கியவர்களும் சற்றுப் பரபரப்புடன் இருப்பதால் அவர்களுடன் நம்மால் சரியாகப் பேசமுடியாமல் போகிறது. சமோசாவையும் தேநீரையும் குடித்து இடத்தை விட்டு நகர்ந்தால் போதும் என்று ஆகிவிடுகிறது.

மீண்டும் காரை எடுக்க நடந்து செல்ல வேண்டிய தூரத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. இதற்கு வீட்டிலேயே தொலைக்காட்சியில் நிம்மதியாக இரண்டு கால்களை மேலே தூக்கி வைத்துப் பார்க்கலாம் என்று தோன்றியது.

மறுநாள் (11 மே 2008) அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பத்ம விருது பெற்றவர்களுக்குப் பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் ஆனந்த் விசுவநாதன், மனோஜ் நைட் ஷியாமளன் ஆகியோர் 10ம் தேதியே ஊருக்குச் செல்வதால் தங்களால் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்து விட்டார்கள். பி.சுசீலா, சீர்காழி ஜி.சிவசிதம்பரம் மற்றும் மிருதங்க வித்வான் யெல்லா வெங்கடேஷ்வர ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் சுப்பிராம ரெட்டியை விமான நிலையத்தில் சந்தித்து இருக்கிறார் செயலர் முகுந்தன். இந்த விழா குறித்து சொன்னதும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்தார் சுப்பிராம ரெட்டி. அதே போல, நாடாளுமன்றத் தொடர் முடிந்து ஊருக்குப்போய்க் கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, தன்னுடைய பயணத்தைத் தள்ளிப்போட்டு இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் எம்.என்.கிருஷ்ணமணி தலைமை தாங்கினார். பொதுச் செயலர் இரா.முகுந்தன் வரவேற்புரை வழங்கினார். இணைச் செயலர் ரமாமணி சுந்தர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். சுப்புராமி ரெட்டி தன்னுடைய பேச்சின் போது சசீலாவுக்கு மிகவும் தாமதமாக வழங்கப்படும் இந்த விருது அறிவிக்கும் வரை வியாதி ஒன்றுமே இல்லாத தனக்கே ரத்தக்கொதிப்பு ஏகமாக எகிறிவிட்டது என்றார். தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு ஒரு லட்ச ரூபாய் நன்கொடையாகத் தருவதாக அறிவித்தார். பிறகு கூடியிருக்கும் பார்வையாளர்களுக்கு எல்லாம் சிவனின் அருளை வழங்குகிறேன் என்று சொல்லி தெலுங்கு மாயாஜாலப் படங்களில் வருவது போன்ற மந்திரவாதி குரலில் உரக்க தேவி மந்திரங்களை உச்சாடனம் செய்தார். தான் உச்சாடனம் செய்யும் போது எல்லோரையும் கண்களை மூடிக்கொள்ளச்சொன்னார். 99 சதவிகிதம் பேர் பயபக்தியுடன் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.

பிறகு பத்ம விருது பெற்றவர்களைப் பூங்கொத்து, பொன்னாடை, வெள்ளிக்குத்து விளக்கு ஆகியவற்றைக் கொடுத்து சிறப்பு செய்தார்கள். நான் வாழ்த்துரை வழங்கினேன். வழக்கம் போல எழுதி வைத்துத்தான் படித்தேன்.

பி.சுசீலா ஏற்புரை வழங்கினார். ஏனோ தெரியவில்லை. ஒன்றுக்கொன்று ஏதும் தொடர்பே இல்லாமல் பேசினார். கொஞ்சம் பாடிக்காண்பித்தார். கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளிலும் கொஞ்சம் பாடினார். அவரால் மேல் ஸ்தாயிக்கு சுலபமாகப் போகமுடியவில்லை. மிகவும் சிரமப் பட்டார். பாவமாக இருந்தது. தமிழுக்கு மூன்றெழுத்து, தெலுங்குக்கு மூன்றெழுத்து, மலையாளத்துக்கு மூன்றெழுத்து, கன்னடத்துக்கு மூன்றெழுத்து, மிருதங்கத்துக்கு மூன்றெழுத்து என்று விசித்திரமான கணக்குகளைப் போட்டுப் பேசிக்கொண்டிருந்தார். ஒன்றும் புரியவில்லை.

சீர்காழி சிவசிதம்பரம் மிகவும் நெகிழ்ச்சியுடன் தன் தந்தையாரையும் குருநாதரையும் நினைத்துக் கொண்டார்.

யெல்லா வெங்கடேஸ்வரராவ் பேசினார். தெலுங்கு வாடையுடன் தமிழில் பேசினார். நீண்ட நேரம் பேசினார். அவர் பேசியது நிறைய பேருக்கு ஒன்றும் விளங்கவில்லை. மேடையின் பின்னால் இருந்தவர்கள் ஹைதராபாத் சிவாவின் கச்சேரிக்கு நேரமாகிறது என்று பதட்டப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். உள்ளே இருந்து சீட்டு அனுப்பலாம் என்று தீர்மானித்த நேரத்தில் பேச்சை நிறுத்தினார். பொதுவாக இப்படி பாராட்டு விழா நடத்தும்போது யாராவது ஒருவரைத்தான் ஏற்புரை வழங்க அழைப்பது மரபு. அந்த மரபை உடைத்ததனால் இன்று சற்றுப் படவேண்டியிருந்தது என்று தோன்றியது.

இறுதியாக திருச்சி சிவா பேசினார். அற்புதமான பேச்சு. மிகவும் தெளிவாகப் பேசினார். விருது பெறும் கலைஞர்களைப் பாராட்டுவதன் மகத்துவைத்தைப் பற்றிப்பேசினார். நவம்பர் 13ம் தேதி அன்று பி.சுசீலாவின் பிறந்த நாள். அன்று அவரைத் திருச்சிக்கு அழைத்து மாபெரும் பாராட்டு விழா நடத்தப் போவதாகச் சொன்னார். இந்த நாளை நினைவு கொள்ளும் வண்ணம் பி.சுசீலாவுக்கு மெல்லிசைப் பேரரசி என்னும் பட்டத்தை வழங்கினார். வந்திருந்த அனைவரும் எழுந்து நின்ற கரகோஷம் எழுப்பினார்கள்.

பாராட்டு விழா முடிந்ததும் ஹைதராபாத் சிவாவின் கச்சேரி மிகவும் தாமதமாகத் துவங்கியது. தாமதமாகத் துவங்கினாலும் மனச்சுணக்கம் கொள்ளாது வெளுத்து வாங்கிவிட்டார் சிவா. அருணகிரி நாதர் பாடல்கள், நந்தனார் பாடல்கள், காயாத கானகத்தே போன்ற நாடகப் பாடல்கள், காவடிச் சிந்து போன்றவற்றை சிறிது நேரமே ஆனாலும் சிங்காரமாகப் பாடினார். உடன் வயலினில் வி.எஸ்.கே.சக்ரபாணி, மிருதங்கத்தில் தில்லைஸ்தானம் சூரியநாராயணன், மோர்சிங்கில் கரூர் சம்பத், கடத்தில் மன்னை கண்ணன் என அற்புதமான பக்கவாத்தியங்கள். இன்னும் கொஞ்ச நேரம் வாசித்து இருக்கலாமே என்று நினைக்க வைத்த ஒரு நிகழ்வு இது. ஆனால் அன்று இரவே ரயில் பிடிக்கப் போக வேண்டியிருந்ததால் அவசர அவசரமாகக் கச்சேரியை முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

இசைக்கலைஞர்களுக்கு அளித்த ஒரு பாராட்டு விழாவில் தமிழிசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம். அதே போல, எங்கோ விமான நிலையத்தில் சந்தித்த சுப்புராமிரெட்டியை இந்த விழாவுக்கு அழைத்து அவரிடம் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையும் வாங்கிய முகுந்தனுக்கும் நம்முடைய பாராட்டுக்கள்.
ஆனாலும் ஒரு சில பாடங்கள் இதில் கிடைத்து இருக்கின்றன.
ஒன்று - நன்றாகப் பாடுபவர்கள் எல்லாம் நன்றாகப் பேசவேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது.
இரண்டு - திருச்சி சிவா போன்ற நல்ல பேச்சாளர்களைத் தனியாக அழைத்து அவருடைய சொற்பொழிவை ஏற்பாடு செய்ய வேண்டும்.
மூன்று - பாராட்டு விழாவையும் ஒரு நல்ல இசைக்கச்சேரிûயுயம் சேர்த்து வைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் இரண்டையும் ரசிக்க முடியாமல் போகிறது.
கீழே இருந்தவர்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.

1 comment:

  1. எல்லா ராவ் பேசிக்கொண்டிருக்கும்போது தான் நாங்கள் நுழைந்தோம்.. சுசீலா அவர்களை பார்க்கமுடியாமல் போகிறதே என்ற மனக்கவலையுடன் தாமதமாக ஹைதரபாத் சிவாவிற்காக வந்த எங்களுக்கு தாமதமான விழா நல்லதாகப் போயிற்று.. திருச்சி சிவாவின் பேச்சும் அற்புதம்.

    ReplyDelete