Friday, May 9, 2008

நீயும் நானுமா.... ஒரு நீண்ட மோதலின் முடிவு...


இந்தியாவின் முதல் இருதய மாற்றுச் சிகிக்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்தவர் டாக்டர் வேணுகோபால். அவருடைய வெற்றிகரமான முதல் இருதய மாற்றுச் சிகிச்சை வெற்றியடைந்த நாள் 3 ஆகஸ்டு 1994, இதனை சிறப்பிக்கும் வகையில் அன்றைய பிரதமர் வாஜ்பாய் 3 ஆகஸ்டு 2003 அன்று ஆகஸ்டு 3ம் தேதியை இருதய மாற்றுச் சிகிச்சை நாளாக அறிவித்தார். அதன் பிறகு அவர் வெற்றிகரமாக முடித்த இருதய மாற்றுச் சிகிச்சைகளின் எண்ணிக்கை 26 என்று சொல்கிறார்கள்.


ஜøலை 2003 அன்று தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் நிர்வாக இயக்குநராகப் பதவியேற்றார் வேணுகோபால். இருதய மாற்றுச் சிகிச்சையில் இமாலய அளவில் பெயர் குவித்த வேணுகோபால் ஒரு நிர்வாகியாகப் பெயர் எடுக்க முடியாமல் போனது மிகப்பெரிய துரதிருஷ்டம் என்கிறார்கள் அந்த நிறுவனத்தில் சில மருத்துவர்கள். அவர் நிர்வாக இயக்குநராகத் தன்னுடைய அலுவலக அறையில் அமர்ந்ததை விட ஆபரேஷன் தியேட்டர்களில் கழித்த நேரங்களே மிகவும் அதிகம் என்றார்கள். இவரை நிர்வாகக் காரியங்களுக்காக சந்திக்க வேண்டி பல மூத்த மருத்துவர்களும் நாட்கணக்கில் மாதக்கணக்கில் காத்திருக்க நேர்ந்தது என்றும் இவருடைய மிகவும் கரடுமுரடான அணுகுமுறை அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் பல மறைமுகமான மற்றும் நேரடி எதிரிகளை உருவாக்கியது என்றும் சொல்கிறார்கள்.

2006ல் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் மாணவர்கள் மேற்கொண்ட இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது இவர் போலீசை அழைத்து அவர்களைக் கைது செய்ய வைக்கவில்லை என்ற பெரும் குற்றச்சாட்டு இவர் மேல் எழுந்தது. இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் இவரையும் இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள் மைய மருத்துவத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாசையும் ஆதரிக்கத் தொடங்கினார்கள். இதனால் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் இரு கோஷ்டிகள் உருவாகின. இப்படி ஒரு மருத்துவம் மற்றும் விஞ்ஞானக் கழகத்தில் இரு பிரிவாக மாணவர்கள் பிரிந்து போகக் காரணமாக ஆனார் என்று வேணுகோபால் மேல் குற்றம் சுமத்தத் துவங்கினார்கள். மருத்துவமனை வளாகத்தில் இவருக்கு எதிரான சுவரொட்டிகளை ஒட்டினார்கள்.

இவருக்கும் அன்புமணி ராமதாசுக்குமான மோதல் முற்றாக எப்போது வெடித்தது என்றால் மைய அரசினால் தில்லியில் அமைச்சருக்கான இல்லம் ஒன்று அன்புமணி ராமதாசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டபோதும் அவர் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அறையினைக் காலி செய்யாமல் வைத்து இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தார் வேணுகோபால். இதுவே இவர்களுக்கு இடையிலான முதல் உரசல் என்று தலைநகரில் சொல்கிறார்கள். அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் செயல்பாடுகள் பற்றி மிகவும் கடுமையான வகையில் கண்டனங்களைப் பதிவு செய்யத் துவங்கினார் அன்புமணி. மருத்துவக் கழகம் மற்றும் மருத்துவமனையின் செயல்பாடுகளில் வெகுவாகத் தலையிடுகிறார் அன்புமணி என்று ஊடகங்களில் குற்றம் சாட்டினார் வேணுகோபால். நிர்வாகத்தை சீரழித்து விட்டார் வேணுகோபால் என்று அன்புமணி குற்றம் சாட்டினார். வேணுகோபால் சார்ந்திருக்கும் இனத்தை மனத்தில் வைத்தே அன்புமணி அப்படி நடந்து கொள்கிறார் என்று வேணுகோபால் ஆதரவாளர்கள் விமர்சித்தார்கள். ஒரு வகையில் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் மருத்துவர்களும் மாணவர்களும் இரண்டு கோஷ்டிகளாகப் பிரிந்து எரிந்த கட்சி எரியாத கட்சி வாதங்களைப்போலத் தொடர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.இருவருக்கிடையிலான மோதல் உச்ச கட்டம் அடைந்தது.

5 ஜøலை 2006 அன்று பதவி நீக்கம் செய்யப்பட்டார் வேணுகோபால். இந்தப் பதவி நீக்கத்தை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் அவர். பாஜகவின் மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அருண் ஜேட்லி இவருடைய சார்பில் வாதாடினார். உயர்நீதிமன்றம் வேணுகோபாலுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. இதை எதிர்த்து மைய அரசு மேல்முறையீடு செய்தது. மீண்டும் அந்தத் தீர்ப்பை உறுதி செய்தது உயர்நீதிமன்றம். மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் முன்பாகவே அவசர அவசரமாக வேணுகோபாலை பதவி இறக்கம் செய்யும் வகையில் பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்தார்கள். நவம்பர் 2007ல் All India Institute of Medical Sciences and Post Graduate Institute of Medical Education and Research Bill 2007 என்னும் மசோதாவுக்குப் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றார். இந்த மசோதா அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் இயக்குநரின் பணிக்கால வரம்பு 5 ஆண்டுகள் அல்லது அவருடைய வயது 65 என்று வரம்பு விதிக்கப்பட்டது. இந்த சட்டதிருத்தத்தின் அடிப்படையில் வேணுகோபால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இது வேணுகோபாலைக் குறி வைத்தே செய்யப்பட்டது என்று விமர்சிக்கப்பட்டது. விமர்சனம் எப்படி இருந்தாலும் இதுதான் உண்மை என்று வெட்ட வெளிச்சமாகப் பலருக்கும் தெரிந்திருந்தது.

அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் நிர்வாகத்தில் அன்புமணியின் தலையீட்டினைக் கடுமையாக எதிர்த்ததற்கு வேணுகோபால் பெற்ற பரிசு என்று அனைவரும் பேசிக்கொண்டார்கள். எழுதினார்கள். ஊடகங்களின் நேர்முகத்தில் பேசினார்கள். வேணுகோபாலுக்கு ஆதரவாக மாணவர்கள் போரட்டத்தில் இறங்கினார்கள்.

அன்புமணியின் ஆதரவாளர்கள் சொல்வது என்னவென்றால், வேணுகோபால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகவும் வேண்டியவர் என்பதால் 65 வயது வரைக்குமே வரம்பு விதிக்கப்பட்ட ஒரு பதவியில் அவர் 67 வயது வரை நீடிக்கிறார் என்றும் அன்புமணி ஆதரித்த சட்டதிருத்தம் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் நிர்வாக ரீதியில் சீர்திருத்தம் கொண்டுவருவதை மட்டுமே மனதில் கொண்டு செய்யப்பட்டது என்று வாதிட்டார்கள்.


அந்தப் பதவி நீக்கத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வேணுகோபால் செய்த முறையீட்டின் அடிப்படையில் நேற்று வேணுகோபாலுக்கு சாதகமான தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவந்த ஒரு மணிநேரத்துக்குள் டாக்டர் வேணுகோபால் அலுவகலம் சென்று கோப்புக்களில் கையெழுத்திடத் தொடங்கிவிட்டார். அந்தப் புகைப்படம் தில்லியின் தினசரிகளில் பெரிதாக வெளியிட்டு இருக்கிறார்கள். டாக்டர் வேணுகோபாலின் ஆதரவாளர்கள் இனிப்புக்கள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள். மலர் அலங்காரம் செய்யப்பட்ட காரில் வேணுகோபாலை அலுவலகத்துக்கு அழைத்து வந்தார்கள் அவருடைய ஆதரவாளர்கள். இனி ஜøலை 2008 வரை வேணுகோபால் பதவியில் தொடரலாம்.


இந்தத் தீர்ப்பு வெளிவந்ததுமே பாஜகவினர் அன்புமணி பதவி விலகவேண்டும் என்று கூச்சல் போட ஆரம்பித்தார்கள். இது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டதிருத்தம் என்றும் அதனால் தான் பதவி விலகத் தேவையில்லை என்றும் பேட்டியளித்தார் அன்புமணி. காங்கிரஸ் தலைவர்களும் கொஞ்சம் அதிகம் சத்தம் இல்லாமல் அன்புமணிக்கு எதிரான ஆதரவுக்குரலில் அறிக்கைகளை வெளியிட்டார்கள்.


இந்த நீண்ட நாள் மோதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது உச்சநீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பு. ஆனால் இது முற்றுப்புள்ளியாக இருக்குமா என்பது தெரியவில்லை. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மைய அரசு உச்சநீதிமன்றத்தை அணுகும் என்று சொல்கிறார்கள். வேணுகோபாலின் பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு மாதங்கள்தான் இருக்கின்றன. அதற்குள் வேணுகோபாலை மீண்டும் ஒருமுறை போட்டுத்தள்ளி விடவேண்டும் என்று முயற்சிக்கிறார் அன்புமணி. முற்றிலும் ஆரோக்கியமற்ற இந்த மோதல் ஜøலை 2008ல் முற்றிலுமாக ஒரு முடிவுக்கு வந்து விடும்.

ஜøலை மாதத்துடன் வேணுகோபாலின் பதவிக்காலம் தானாகவே முடிவுக்கு வந்து விடும்.

No comments:

Post a Comment