Friday, May 16, 2008

ஒரு பாராட்டு விழா - ஒரு கச்சேரி - ஒரு கவிதை




தி சண்டே இந்தியன் பதிப்பு ஆசிரியர் அசோகன் மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார். தில்லித் தமிழ்ச் சங்கத்தை விட்டு எப்போது வெளியே வரப்போகிறீர்கள் என்று.

நான் என்ன செய்யட்டும்? கழுதை கெட்டால் குட்டிச் சுவர். அதிகம் தமிழ் மற்றும் தமிழர்கள் தொடர்பான நிகழ்வுகள் தலைநகரில் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் தான் நடக்கின்றன. தமிழர்களின் பொழுதுபோக்கு அல்லது கலை இலக்கியம் தொடர்பான நிகழ்விடம் இப்போதைக்கு தில்லியில் தமிழ்ச் சங்கம் மட்டும்தான். இனி மண்டி ஹவுசில் நடக்கும் மற்ற நிகழ்வுகளையும் எழுதலாம் என்று இருக்கிறேன். ஆனால் வார இறுதிகளில், தில்லித் தமிழ்ச் சங்கத்தில் யாராவது ஒருத்தர் தெரிந்தவர் அல்லது வேண்டியவர் அல்லது தெரிந்தவருக்குத் தெரிந்தவர் அல்லது வேண்டியவருக்கு வேண்டியவர் ஏதாவது நிகழ்ச்சியைத் தருகிறார். கண்டிப்பாகப் போயாக வேண்டியிருக்கிறது.

பட்டிமன்றங்கள் அல்லது கவியரங்கங்களுக்கு மட்டும் பொய் சொல்லித் தப்பித்து விடுகிறேன்.


சரி. அசோகனுக்காக தலைநகர் கடந்து ஒரு நிகழ்வு மீதான பதிவு.

பி.சுசீலா, சீர்காழி சிவசிதம்பரம் மற்றும் பத்ம விருது பெற்ற சிலருக்கு கடந்த 12 மே 2008 அன்று நல்லி குப்புசாமி செட்டியார் ஒரு மாலை விருந்தும் பாராட்டு விழாவும் உட்லாண்ட்ஸ் ஹோட்டல் வளாகத்தில் மிகவும் விமர்சையாக ஏற்பாடு செய்திருந்தார். நானும் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் (பாருங்கள். நான் என்ன செய்வது?) பொதுச் செயலர் முகுந்தனும் கலந்து கொண்டோம்.



நிகழ்ச்சிக்கு நல்ல கூட்டம். லேனா தமிழ்வாணன், வலையப்பட்டி சுப்பிரமணியம், ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். விழா தொடக்கத்தில் நித்யஸ்ரீ பாடிக் கொண்டிருந்தார். ஏதோ கல்யாண ரிசப்ஷன் போன்று இருந்தது. நித்யஸ்ரீ வழக்கப்படி அற்புதமாகப் பாடிக்கொண்டிருந்தார். ஆனால் கேட்பதற்கு யாருக்கும் நேரம் இல்லை. ரொம்ப நாட்கள் கழித்து சந்திப்பவர்களிடம் நாற்காலியை இழுத்துப்போட்டு சத்தம் போட்டுப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

தில்லியில் நிசப்தமான சூழலில் கச்சேரிகள் கேட்டு இது சற்றுப் புதுமையாக இருந்தது.
பாராட்டு விழா ரத்ன சுருக்கமாக முடிந்தது. விருது பெற்றவர்களைச் சிறப்பித் கையோடு நல்லி செட்டியார் கலைஞர்களைப் பாராட்டி சில வார்த்தைகள் பேசினார். அவருடைய உரையுடன் விழா முடிவடைந்தது. சிவசிதம்பரம் அன்று இரவே தில்லிக்கு விமானத்தைப் பிடிக்க வேண்டியிருந்ததால் அவசர அவசரமாகக் கிளம்பினார். இரவு நல்ல விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் செட்டியார்.




ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருது பெற்ற கலைஞர்களை அழைத்து சிறப்பிக்கிறார் செட்டியார். தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் விருதுகள் வழங்கும் விழாவில் ஒரு கையேட்டினைத் தருகிறார்கள். அந்தக் கையேட்டில் விருது பெற்றவர்களின் புகைப்படமும் அவர்களைப் பற்றிய குறிப்புக்களும் இடம் பெறுகின்றன. அந்தக் கையேட்டினை சென்னைக்கு எடுத்து வந்து அதில் இருந்து வேண்டிய பக்கங்களை நகல் எடுத்து அழகான சிறிய கையேடாக அனைவருக்கும் வழங்கினார்கள் நல்லி நிறுவனத்தினர். இது மிகவும் அற்புதமான விஷயம்.

சரி. மீண்டும் நித்யஸ்ரீயின் கச்சேரிக்கு வருவோம்.



கீழே யாருக்கும் பொறுமையோ நேரமோ இல்லாது இரைச்சல் போட்டுக் கொண்டிருந்தார்கள் என்றால் மேடையில் மிகவும் அழகான ஒரு கவிதை அரங்கேறிக்கொண்டிருந்தது.

நித்யஸ்ரீயின் இரு பெண் குழந்தைகள். நித்யஸ்ரீ பாடும்போது இரண்டும் மேடையிலேயே இருந்தன. ஒரு குழந்தை அம்மா பாடுவதையே கண்கொட்டாமல் மிருதங்கம் வாசித்த ஸ்கந்தன் சுப்பிரமணியன் பின்னால் உட்கார்ந்தபடி மிகவும் சிரத்தையாகக் கேட்டுக் கொண்டிருந்தது. இன்னொன்று விளையாட்டுச் சாமான்களை வைத்துக் கொண்டு நித்யஸ்ரீயின் இன்னொரு பக்கம் உட்கார்ந்து கொண்டு சிரத்தையாக விளையாடிக் கொண்டிருந்தது. அம்மாவையோ அல்லது வாசிப்பவர்களையோ எந்தத் தொந்தரவும் செய்யவில்லை. தனக்கான ஒரு உலகத்தை சிருஷ்டித்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தது. உண்மையிலேயே இது பார்ப்பதற்கு ஒரு கவிதையை வாசிப்பது போல இருந்தது.

நித்யஸ்ரீயும் எவ்வகையிலும் கவனம் சிதறாது பாடிக்கொண்டிருந்தார்.

பார்ப்பதற்கே மிகவும் நன்றாக இருந்தது.

சில புகைப்படங்களை இங்கே பதிந்திருக்கிறேன். உண்மையிலேயே ஒரு கவிதை போல இருக்கிறது இல்லையா?




2 comments: