Thursday, May 8, 2008

மீண்டும் நான்...


ஒய்ந்தேன் என மகிழாதே

உறக்கம் அல்ல - தியானம்
பின் வாங்கல் அல்ல - பதுங்கல்
நன்றி - பசுவய்யா


ரொம்ப நாளைக்குப் பிறகு இந்தப் பக்கங்களில் நான்.

இடையில் எத்தனையோ வந்து போனது. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல என்னுடைய சோம்பேறித்தனம்.

எழுதுவது என்பது எதையோ வெட்டி முறிக்கிற காரியம் போல ஆகிவிட்டது. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற நல்ல படைப்பாளிகளைப் பார்க்கும் போது இரண்டு காதுகளிலும் மண்டி மண்டியாக, அலை அலையாக, மிகவும் அடர்த்தியாகப் புகை எழும்புகிறது.

அவர்கள் மிகவும் அதிகமாக எழுதுகிறார்கள். மிகவும் நன்றாகவும் எழுதுகிறார்கள். இந்த இரண்டும் என்னால் எப்போதும் முடியாத காரியம்.

சில சமயம் நினைக்கும் போது ரொம்பவும் பயமாக இருக்கிறது. காலம் நழுவிக்கொண்டே இருக்கிறது. ஓடுகிறது.

இந்த ஓட்டத்தில் சோம்பி உட்காருவது மிகவும் குற்ற உணர்ச்சியைத் தருகிறது.

படிக்கிறார்களோ இல்லையோ - யாருக்கும் பிடிக்கிறதோ இல்லையோ. எதையாவது எழுதி வைக்க வேண்டும்.

நாவல் எழுத ஆசையாக இருக்கிறது. மனதில் நிறைய ஆட்கள் தொந்தரவுசெய்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களை எந்த நாவலிலாவது உட்கார வைக்க வேண்டும். அவர்களை நடக்கச் செய்ய வேண்டும். அவர்களைப் பதிந்து வைக்க வேண்டும்.

நாடகம் எழுத ஆசையாக இருக்கிறது. நிறைய கதாபாத்திரங்கள் மனச்சுழலில் அலை பாய்ந்து கொண்டே இருக்கின்றன. அவர்களை எங்காவது பத்திரமாக வைக்கவேண்டும்.

எழுதுகிற ஆசை இருக்கிறவன் இதழ் நடத்தக் கூடாது என்பதை மிகவும் அதிகமாக செலவு செய்து கற்றுக்கொண்டவன் நான்.

ஒவ்வொரு மாதமும் கடன் தருகிறவர்களைத் தேடி ஓட வேண்டும். கடன் வாங்கியவர்களிடம் பயந்து ஓட வேண்டும். விளம்பரங்களுக்குப் பிச்சைப் பாத்திரம் ஏந்த வேண்டும். படைப்புக்களைச் சேர்க்க வேண்டும்.

திரும்பிப் பார்க்கும் வேளையில் அடுத்த இதழின் வேலைகள் துவங்கி விடுகின்றன.

எனவே எழுதுவது என்பது அநியாயத்துக்குத் தள்ளிப் போடும் காரியமாகவே இருக்கிறது. இப்போதெல்லாம் படிப்பதும் அப்படித்தான். வீட்டுக்குப் போய் தலைசாய்த்தாலே அடுத்த நொடி நித்திராதேவி வந்து தழுவிக்கொள்கிறாள். காலையில் எழுந்து எழுத வேண்டும் என்று நினைப்பது. ஆனால் முதல் நாள் இரவே அடுத்த நாள் காலையில் எழுந்ததும் எங்கே ஓடவேண்டும் என்ற நிர்ப்பந்தங்கள் முன்னே நிற்பதால் காலைவேளைகளில் எழுதுவதும் ஆகாத காரியம் ஆகிப்போகிறது.

இனி ஒரு நாளைக்கு ஒரு பக்கமாவது எழுத வேண்டும் என்று உறுதி எடுத்திருக்கிறேன். இதைப்போல எத்தனையோ உறுதிகள் வெறும் காற்றின் பக்கங்களில் எழுதியாகிவிட்டது. இதையாவது காப்பாற்ற வேண்டும்.

இப்போதைக்கு உடனடியாக என்னுடைய முந்தைய சனிமூலை கட்டுரைகள் சிலவற்றை இங்கே பதிக்கிறேன். ஒரு நாளைக்கு ஒன்றாக. நாளையில் இருந்து செய்தி விமர்சனங்களையும் எழுதத் திட்டம்.


பார்ப்போம்.

என்னதான் நடக்கிறது என்று.

நீங்கள்தான் பாவம்.

ராகவன் தம்பி

7 comments:

  1. (மீண்டும்) வருக!

    ReplyDelete
  2. meendum varigai thandhadarkku nandri

    ReplyDelete
  3. your blog is intresting tinged with mild satire.pl continue regularly.40 yrs sleep not only for orators but applicable to some so called intellectuals also.m.a.susila

    ReplyDelete
  4. pennesan meendum sani moolaiil prasannam avathu nalla seithi .erathazha sujathavin "kanayazhiin kadaisipakkangal " pondra oru sirappu kidaikka vazhthukkal'
    babu nanganallur

    ReplyDelete
  5. பாலு ஐயா

    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி.

    ராகவன் தம்பி

    ReplyDelete
  6. ஏன் தொடர்ந்து எழுதவில்லை ?
    உங்கள் எழுத்துக்களை வாசிக்க ஆவலாக இருக்கிறோம். தொடர்ந்து எழுதுங்கள் !
    - பொன்.வாசுதேவன்
    மதுராந்தகம்.

    ReplyDelete